புதன், 9 டிசம்பர், 2009

M S V மூன்றெழுத்தில் என்றும் இசை இருக்கும் !


முன்னுரை

meenakshi said...on Nov 18th......,(in a comment)

90% சதவிகித விடையை நீங்களே கூறி விட்டீர்கள். அதனால் எனக்கு credit கொடுப்பது நியாயமே இல்லை. இருந்தாலும் மிக்க நன்றி. என்னை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. நான் முழுக்க முழுக்க சென்னை வாசி. திருமணத்திற்கு பின் சில வருடங்கள் பெங்களூரிலும், கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவிலும் இருக்கிறேன். கணவர் Software துறையில் இருக்கிறார். இரண்டு ஆண் குழந்தைகள்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள். எனக்கு இசை என்றால் உயிர். கர்நாடக சங்கீதம், திரையிசை பாடல்கள் இரண்டையும் கேட்பேன். இருப்பினும், மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடல்களில் தான் நான் வாழ்வதே. ஒரு நாள் கூட நான் அவர் பாடல்களை கேட்காமல் இருந்ததில்லை. என்னை பொறுத்தவரை என் இசை கடவுள் அவர்தான். அதனால் நீங்கள் உங்கள் பதிவில், என் வேண்டுகோளை ஏற்று, திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களை பற்றி, அவர் புகைப்படத்துடன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். மிக்க நன்றி.


இனி எங்கள் உரை:




இந்தப் பின்னூட்டத்தைப் படித்தவுடனேயே - தினமும் பல வலைகளை, குறைந்தது ஐந்து நிமிடங்கள் - அதிக பட்சம் அரைமணி நேரம் என்று எங்கள் வலையாபதி எம் எஸ் வி பற்றி தேடி - அவற்றை எல்லாம் அப்பப்போ ஒரு ஃபோல்டரில் போட்டு, எங்கள் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி இருந்தார். நாங்க படிச்சோம், படிச்சுக்கிட்டிருக்கோம், படிச்சுக்கிட்டு இருப்போம் - ஒரே மலைப்பா இருக்கு.


இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டிலும், அதற்குப் பிறகு சில மாதங்களிலும், மன்னர்களை எல்லாம் கண்டுபிடித்து, அவர்களை எல்லாம் ஒன்றுமில்லாதவர்கள் ஆக்கி, ச(ர்)தார்,  ச(ர்)தார் என்று அடித்து, படேல் என்று வெற்றி கண்ட ஓர் இரும்பு மனிதர் - அப்போ தலை எடுத்திருந்த இந்த மெல்லிசை மன்னரை மட்டும் (நல்ல வேளையாக) நெருங்கவில்லை! அப்படி நெருங்கி வந்திருந்தாலும், இவருடைய இசை கேட்டிருந்தால் உருகிப் போயிருப்பார். இயற்றுதல் ஒரு படைப்பாற்றல்; அப்படி இயற்றியவைகளுக்கு - இசை அமைப்பது என்பது, கலை நயம் மிகுந்த படைப்பாற்றல். இயற்றப்பட்டது  குழந்தை என்றால் - இசை அமைப்பது - அந்த குழந்தையை எல்லோரும் கொஞ்சும் வண்ணம் செய்வித்தல்.

திரு எம் எஸ் வி அவர்களுக்கும் - எங்கள் பிளாகுக்கும் இருக்கும் ஒரு தொடர்பு என்ன என்றால், நாங்கள் 'எங்கள்' என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தது திரு எம் எஸ் வி அவர்களின் எண்பத்து ஓராம் வயது பூர்த்தியான நாளில்! அவர் பிறந்தது June 24, 1928. எங்கள் எண்ணத்தில் 'எங்கள்' பிறந்தது June 24 2009.


M S V = Manayangath Subramania Viswanathan - Mother's name: Narayanikkutty / Naanikkutty.


By strange coincidence - we thought of naming our blog "Manavaadu" initially and our anchor ancestor's name is Subramanian! Only thing is that there is no Viswanathan - connected with Engal.


திரு எம் எஸ் வி அவர்கள் இசையமைத்த ஆயிரக்கணக்கான - படங்களின் இசையிலிருந்து - எதை எடுப்பது, எதை தொடுப்பது, எதை விடுப்பது?


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டில் பிறந்த மெல்லிசை மன்னரைப் பற்றி - அதற்கு ரொம்ப வருடங்கள் கழித்துப் பிறந்த  சாதாரண இசை சேவகன் என்ன எழுத முடியும்? ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் உறங்கும் மாயக் கண்ணன் குழலோசையும், கலைமகள் கைப்பொருளும் கூட ஒன்றாகச் சேர்ந்தாலும் - நாளாம் நாளாம் மணநாளாம் போன்ற பாடல்களின் இனிமையை, நேர்த்தியை முழுவதும் சொல்லிவிட முடியுமா?


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதிலிருந்து, இன்று வரையிலும் - நான்  குளியலறையிலோ / கொள்ளிடக் கரையிலோ பாடும் (இசைக்கும்?) இரண்டு மூன்று வரிகள் - பெரும்பாலும் எம் எஸ் வி / விஸ்வநாதன் ராமமூர்த்தி - இசையமைப்பு என்பதை - திரு விஸ்வநாதன் இசையமைத்த ஐநூற்றுக்கு மேற்பட்ட - தமிழ்ப் படங்களின் பாடல்கள் பட்டியல் பார்த்து, நான் நேற்றுத்தான் தெரிந்துகொண்டேன். 'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ற தேஷ் (?) ராகப் பாடல் ஓர் உதாரணம்.


மீனாக்ஷி - எங்களை மன்னியுங்கள். அகண்ட ஆழமான சமுத்திரத்திலிருந்து அஞ்சு மில்லி அளவு கூட எங்களால் எழுதமுடியவில்லை.


இதோ நீங்க கேட்ட சில படங்கள்.





நமது அறுபது ரசிகர் மன்ற உறுப்பினர்களும், மற்றும் எங்கள் பதிவுகளை தினமும் படிப்பவர்களும், அவர்களுக்குப் பிடித்த எம் எஸ் வி இசைப் பாடல்களை இங்கே பின்னூட்டத்தில் வந்து பதியும்படி அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.


எங்கள் வாசகர்களுக்கு, வழக்கம்போல் ஒரு கேள்வி : தமிழ்ப் படப் பெயர், ஆங்கிலத்தில் எழுதினால், F, Q, W, X, Z என்ற எழுத்துக்களில் தொடங்குகின்ற தமிழ்ப்படப் பெயர்கள் சொல்வோருக்கு - பாயிண்டுகள் கொடுக்க நாங்க ரெடி; பாயிண்டுகள் பெற நீங்க ரெடியா?

57 கருத்துகள்:

  1. எம் எஸ் வி என்ற மூன்றெழுத்தில் கண்ணதாசன் என்ற மூச்சு இருந்தவரை, இசையும் இருந்தது!
    கூட்டாளி கே.ராமமூர்த்தியின் துணை, அசைக்கமுடியாத இடத்தைத் தமிழ்த்திரைப்பட உலகத்தில் வைத்திருந்தது.

    அது கடந்துபோன காலம்!

    இப்போது எம் எஸ் வி மட்டுமே இருக்கிறார். அவ்வப்போது கொஞ்சம் பழைய ஞாபகங்கள் வந்துபோகிற மாதிரி!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா! கிளம்பிட்டாரையா, கிளம்பிட்டாரு!
    கிருஷ்ணமூர்த்தி ஐயா! பக்கத்திலேயே ஒக்கார்ந்து - தோள்பட்டை வழியா - நம்ம பதிவு எழுதும்போதே படிச்சுடுவாரோ? அது சரி கிருஷ் சார் - அந்த வி ரா இசை அமைப்பில்தான் - உங்களுக்குப் பிடிச்ச பாடல்களைச் சொல்லுங்களேன்!

    பதிலளிநீக்கு
  3. நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. நினைவுகளுடன் -நிகே!
    வாங்க, வாங்க! - தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  5. நினைவுகளுடன் - நிகே --- ஏன் அக்ஷதா இணையத்தில் ஜூன் 2009 மாதம் மட்டும் எட்டும் + ஐந்தும் ஆக பதிவுகள், அதற்குப் பின்பு மௌனம்?
    ஒரு வலை மட்டும் 'உள்ளே வராதே - இது எங்க ஏரியா!' அப்பிடீன்னு சொல்லுது!

    பதிலளிநீக்கு
  6. பிடித்த பாடல்கள் பட்டியல் மிகப் பெரியது! ஏன் பிடித்தது என்று காரணங்களைத் தேடப் போனால் அதை விடப் பெரியதாகப் போய்விடும்!

    சின்னப்பா, தியாகராஜா பாகவதர் இப்படி ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தின் அடையாளம்! நேற்றைய நாட்களின் அடையாளம், எம் எஸ் வி! அவ்வளவுதான்!

    கடந்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது!

    பதிலளிநீக்கு
  7. // கடந்து போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான் நாம் செய்ய வேண்டியது!//
    கடவுளே! கடவுளே!!

    பதிலளிநீக்கு
  8. குய்க் கன் முருகன் - Quick Gun Murugan
    வால்டர் வெற்றிவேல்-Waltair Vetrivel
    பிப்ரவரி 14 - February 14
    4 Students - Four Students
    வின்னர் - Winner
    பைவ் ஸ்டார் - Five Star
    பிரெண்ட்ஸ் - Friends

    பதிலளிநீக்கு
  9. விஸ்வநாதன் பற்றி சிங்கிள் பதிவாக எழுதாமல் விஸ்வநாதனின் காதல் பாட்டுக்கள், விஸ்வநாதனின் தத்துவப் பாட்டுக்கள் என்றெல்லாம் தனித் தனியாக எழுதலாம்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  10. பெயர் சொல்ல விருப்பமில்லை - உங்களுக்கு எங்கள் எழுநூறு பாயிண்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. // Jawahar said...
    விஸ்வநாதன் பற்றி சிங்கிள் பதிவாக எழுதாமல் விஸ்வநாதனின் காதல் பாட்டுக்கள், விஸ்வநாதனின் தத்துவப் பாட்டுக்கள் என்றெல்லாம் தனித் தனியாக எழுதலாம்.//

    ஜவஹர் - அது எல்லாத்துக்குமே எங்கள் 'வால் பையன்' கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஏதாவது கவுண்டர் பாயிண்ட் வெச்சிருப்பார்னு நினைக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  12. எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்...

    படம் பேரு "வால்ட்டர் வெற்றிவேல் (W)" ஓ.கே வா?

    பதிலளிநீக்கு
  13. புலவன் புலிகேசி - வால்ட்டர் வெற்றிவேல் ஓ கே தான் - ஆனா பாருங்க அதை பெயர் சொல்ல விருப்பமில்லாதவர் ஏற்கெனவே கூறி பாயிண்ட் பெற்றுவிட்டார்!

    பதிலளிநீக்கு
  14. நன்றி, நன்றி, மிக்க நன்றி. வலையாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    என் வேண்டுகோளை ஏற்று, உங்கள் பதிவில் நீங்கள் மெல்லிசை மன்னரை பற்றி எழுதியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் சிறு வயதிலிருந்தே நான், தானாகவே இவர் பாடல்களால் ஈர்க்கப்பட்டேன். அந்த வயதில் எனக்கு மெல்லிசை மன்னரை பற்றி ஒன்றுமே தெரியாது. இன்னும் சொல்லப்போனால் இவர் பாடல்களால்தான் எனக்கு இசை மேல் ஒரு தனி ஆர்வமே வந்தது. அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் டிரான்சிஸ்டர் கிடையாது. அக்கம் பக்கத்து வீட்டாரின் புண்ணியத்தில், இவர் பாடல்களை நானும் என் அண்ணாவும் நிறைய கேட்டு ரசித்திருக்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரை நான் இவர் பாடல்களை கேட்காத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
    எனக்கு மிகவும் பிடித்த எம்.எஸ்.வீ. பாடல்கள் என்று வரிசை படுத்த தொடங்கினால், அது போய் கொண்டே இருக்கும். ஏனென்றால் அனேகமாக அவர் இசை அமைத்த எல்லா பாடல்களுமே எனக்கு பிடிக்கும். எனினும் ஒன்றிரண்டு இங்கே,
    நான் பேச நினைப்பதெல்லாம்.......
    பாலிருக்கும் பழமிருக்கும்........
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்.........
    எங்கிருந்தோ ஆசைகள்.........
    முத்துக்களோ கண்கள்..............
    மதன மாளிகையில்..............
    குயிலாக நானிருந்தென்ன.......
    நான் உன்னை சேர்ந்த செல்வம்....
    பால் வண்ணம் பருவம் கண்டு......
    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.......
    மன்னிக்க வேண்டுகிறேன்.............இது தொடர்ந்து போய் கொண்டே இருக்கும். என்னால் நிறுத்தவே முடியாது.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. http://tamizhkirukkan.blogspot.com/2009_01_01_archive.html


    //அறுபதுகளில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று பல முறை சொல்லுவேன் என் நண்பர்களிடம். அது எவ்வளவு உண்மை

    - சிவாஜி என்ற மாபெரும் நடிகன்,
    - எம்-ஜி-யார் என்ற மக்களை கவர்ந்த நாயகன்,
    - டி.எம்.எஸ் என்ற காந்த குரலோன்,
    - "எம்.எஸ்.வி என்ற இசை மேதை",
    - கண்ணதாசன் என்ற கவிச்சக்ரவர்த்தி,
    - பி.சுஷீலா என்ற குயில்,
    - ஸ்ரீதர், பாலச்சந்தர் மற்றும் பல பல இயக்குனர் ஜாம்பவான்கள்
    - மனோரமா என்ற திறமை பெட்டகம்
    - எம். ஆர். ராதா, பாலையா போன்ற நடிக மேதைகள்
    -எஸ்.வி. ரங்கா ராவ் போன்ற குணச்சித்திர நடிகர்கள்

    இதில் நாகேஷின் தனித்துவம் மறக்கவோ மறுக்கவோ முடியாத ஒன்று //

    நாகேஷ் சார் இறந்தவுடன் இதை நான் எழுதினேன்.

    நிஜமாகவே அறுபதுகளில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நாற்பதை / ஐம்பதை கடந்தவர்கள் என்று ஒதுக்கிவைத்தாலும் / வயசு பார்டி என்று இப்போது ஒதுக்கிவைத்தாலும் பரவாயில்லை !!

    - Sairam Gopalan

    பதிலளிநீக்கு
  17. //பாயிண்டுகள் கொடுக்க நாங்க ரெடி; பாயிண்டுகள் பெற நீங்க ரெடியா?//

    ஜுஜிபி அதை வைத்து என்னத்த பண்ண ?

    பதிலளிநீக்கு
  18. இது அகண்ட ஆழமான சமுத்திரமாக இருந்தாலும், அதில் நீங்கள் எழுதிய ஐந்து மில்லியும் அருமைதான். தலைப்பே மனதை கவர்ந்து விட்டது.
    //இயற்றப்பட்டது குழந்தை என்றால் - இசை அமைப்பது - அந்த குழந்தையை எல்லோரும் கொஞ்சும் வண்ணம் செய்வித்தல்.// அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு
  19. மீனாக்ஷி அவர்களுக்கும், சாய்ராம் அவர்களுக்கும், எங்கள் நன்றி.
    எம் எஸ் வி பற்றி ஒரு பதிவு போடுவதற்கு காரணமாக அமைந்ததற்கும், மற்றும் அந்தப் பதிவை சிலாகித்து பின்னூட்டங்கள் அளித்ததற்கும்!

    பதிலளிநீக்கு
  20. // சாய்ராம் கோபாலன் said...
    //பாயிண்டுகள் கொடுக்க நாங்க ரெடி; பாயிண்டுகள் பெற நீங்க ரெடியா?//

    ஜுஜிபி அதை வைத்து என்னத்த பண்ண ?//
    சாய்ராம், எங்கள் பிளாகில், அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு, சரியான பதில்களைப் பின்னூட்டமாக அளித்து, அதிக பாயிண்டுகள் பெற்றவர்களின் விவரங்கள், படம், போன்றவை, அதற்கடுத்த மாதம் வெளியாகும் படைப்பாற்றல் பகுதியில் - வெளியிடலாம் என்று எங்கள் ஐடியா. அதில், இந்தப் பதிவுதான் - முதல் பதிவு. நவம்பர் மாத படைப்பாற்றல் பதிவு ஒன்றில் அதிக பாயிண்டுகள் பெற்ற மீனாக்ஷி அவர்கள் கேட்ட நேயர் விருப்பம்!

    பதிலளிநீக்கு
  21. சாய்ராம் கோபாலன்,

    கடந்துபோவதோ, தேங்கிவிடுவதோ உங்களுடைய சொந்த முடிவு! தேங்கிவிடுவது, கழிவுகளாகவும், சாக்கடையாகவும் தான் மிஞ்சும் என்பது காலம் தரும் பயிற்சி!

    அதற்கு முந்தய காலங்களை, சின்னப்பா, கிட்டப்பா, எம்கேடி அப்புறம், கே ஆர் ராமசாமி, டிஆர் மகாலிங்கம் என்று கொஞ்சம் நிரவல்களைக் கடந்து டிஎம்எஸ், அதையும் கடந்து எஸ்பிபி..இப்படி வரிசையாக வந்து கொண்டே இருக்கும்! அது தான் வளர்ச்சி!

    எம் எஸ் வி திறமையான இசையமைப்பாளராக இருந்தது கடந்த காலம்! இன்றைக்கு, ஒரு நல்ல பாட்டைக் கூட அவரால் கம்போஸ் பண்ண முடியாது என்பது தான் யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  22. meenakshi,
    well done 100 points.
    Whistle ? some web sites like thenisai are showing the name as "visil"
    so 75 points for this!!
    However, since this original post is based on your request, we give full 200 points to you.

    பதிலளிநீக்கு
  23. மீனாக்ஷி - எங்களை மன்னியுங்கள். அகண்ட ஆழமான சமுத்திரத்திலிருந்து அஞ்சு மில்லி அளவு கூட எங்களால் எழுதமுடியவில்லை.

    msv பத்தி எழுதும்படியா ஒன்றும் இல்லைனு பூடகமா சொல்லியிருக்கீங்க.

    சாய்ராம் ஒரு இணையபக்க தொடர்பை அனுப்பியிருந்தாரே - அருமையான msv பழைய புகைப்படங்கள் இருந்தன.

    'கால கட்டத்தின் அடையாளம்' என்று க்ருஷ்ணமூர்த்தி சொல்வதில் உண்மையிருக்கிறது - பாடலாசிரியர்கள் (கண்ணதாசன் உள்பட) எம்.எஸ்.வி பாடலுக்கு உயிர் கொடுத்தார்கள். ஹ்ம்ம்ம். பாடலுக்கு உயிர் பொருள் நயமா, இசை நயமா? கூட்டாளி ராமமூர்த்தியுடன் அருமையாக இசையமைத்திருந்தாலும், தனியாகவும் எம்எஸ்வி கொடி கட்டியது உண்மை தானே? 'கூட்டாளியாள் தான் பெருமை' என்றால் ராமமூர்த்தியின் பங்கை கிமூஅதிகமாக எடை போடுவது போல் தோன்றுகிறது. should ராமமூர்த்தி be that talented, அவர் ஏன் msv அளவுக்குத் தனித்துப் பிரபலமாகவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது.

    (கிமூ வரிசைப்படுத்தியது போல்) அவருக்கு முந்தைய இசையமைப்பாளர்கள்ஒவ்வொரு காலகட்டத்தை சிறப்பித்தாலும், மெல்லிசை என்கிற காலகட்டத்தைக் கொண்டு வந்தது விசுவனாதன் தான். That is MSV's unique contribution(ராமமூர்த்தி gets equal credit).


    அடடா, குழாயடியை miss பண்ணி விட்டேன் போலிருக்கே?

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. கிருஷ்ணமூர்த்தி said...

    //கடந்துபோவதோ, தேங்கிவிடுவதோ உங்களுடைய சொந்த முடிவு! தேங்கிவிடுவது, கழிவுகளாகவும், சாக்கடையாகவும் தான் மிஞ்சும் என்பது காலம் தரும் பயிற்சி!//

    கடந்து போய் கர்மத்தை ரசிப்பதை விட, கழிவாக இருந்து எம்.எஸ்.வியின் பாடலை ரசிப்பேன்


    இது எப்படி இருக்கு !!!


    துரை, நீங்கள் எதையும் மிஸ் செய்யவேண்டாம்

    பதிலளிநீக்கு
  26. அட கச்சேரி இப்பதான் களைகட்டுது!
    நடக்கட்டும் நடக்கட்டும் --
    நாராயண! நாராயண!

    பதிலளிநீக்கு
  27. //சாய்ராம், எங்கள் பிளாகில், அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு....வெளியிடலாம் என்று எங்கள் ஐடியா. //

    நீங்க வேற, ஏற்கனவே Mr கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் வம்படித்து கொண்டு இருக்கின்றேன் !! வேண்டாம் சாமி

    பதிலளிநீக்கு
  28. க்ருஷ்ணமூர்த்தி, என்ன இப்படி சொல்றீங்க?

    மலை மரம் கடல் கூடத் தேக்கம் தானே? சாக்கடையும் பூக்கடையும் கண்ணோட்டத்தின் பாதிப்பில்லையா?
    பழைய இசையை ரசிப்பது சாக்கடையையை சகிப்பதும் ஒன்றாகுமா?

    அவருக்கு இருக்கும் திறமைக்கு இன்னும் என்னென்னவோ செய்திருக்கலாம்; புதுமைகளைப் புகுத்தியிருக்கலாம். தொழில் நுட்பத்தில் அச்சமா அல்லது காசு செலவழிப்பதில் கஞ்சத்தனமா தெரியவில்லை - சாதாரண ஸ்டீரியோ ரெகார்டிங்குக்குக் கூட இளையராஜா வரவரைக்கும் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    எல்லா இசையமைப்பாளர்களுமே அரைத்த மாவை அரைப்பதில் வல்லவர்கள். ஒரு எம்எஸ்வி மெட்டைக் கொடுத்தால் அதே மெட்டில் அவர் இசையமைத்த இன்னும் ஐந்து பாடல்களை என்னால் சொல்ல முடியும் (எங்கள் ப்ளாக் போட்டி அமைப்பாளர்கள் கவனிக்க; எல்லா பாயிண்டையும் அபேஸ் பண்ணிக்குவேன் இந்த விசயத்தில்). Most of them have templates. அந்த வகையில் எம்எஸ் had more templates. அதுவும் எம்எஸ்வியின் தனித்துவம்.

    மேல் நாட்டு மெட்டுகளை ஓசைப்படாமல் இறக்குமதி செய்தவர்களில் எம்எஸ்வி பல சமகால இந்தி இசையமைப்பாளர்களுக்கு இணை. இறக்குமதி செய்தாலும் இளையராசா மற்றவர்கள் போல அச்சடிக்காமல் நைசாகத் திருடியவர் எம்எஸ்வி.(இளையராசாவுக்குப் பிறகு வந்திருப்பவர்களின் கணக்கு கூட வைக்க முடியாது போலிருக்கு; ஆஸ்கார் வாங்கலைன்னா ரகுமான் பேர் கூட தெரிஞ்சிருக்காது, விடுங்க போவுது, எனக்குத் தெரிஞ்ச அறிவு அவ்வளவு தான்). Another MSV specialty.

    எம்எஸ்வி என்றைக்குமே தனி மனிதர் தானே, க்ருஷ்ணமூர்த்தி? இன்றைய நிலையில் அவர் சிறப்பாக இசையமைக்காவிட்டாலும், அவரிடம் சிறப்பில்லை என்றாகி விடுமா? அவர் இருக்கும் வரை (இறந்த பிறகும்) எம்எஸ்வி என்று பெயரைச் சொன்னால் தனி மனிதரையா நினைப்போம். எம்எஸ்வி நார் - அவருடைய இசை பூ.

    பதிலளிநீக்கு
  29. எனக்குப் பழைய பாடல்கள் நிறையப் பிடிக்கும்.கூடுதலாக நான் M.S.V அவர்களுடையது என்றே நினைத்துக்கொள்வேன்.இன்றும் வானொலியில் ரசித்த பாடல் இவைகள்.நீங்களே சொல்லிவிடுங்கள் யார் இசையமைப்பென்று.

    நாதஸ்வர ஓசையிலே...
    காதோடுதான் நான் பாடுவேன்...
    எண்ணப்பறவை சிறகடித்து...
    பேசுவது கிளியா இல்லை...
    தங்கரதம் வந்தது வீதியிலே...
    எனக்காகவா நான் உனக்காகவா...
    அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...
    நாளை இந்த வேளை பார்த்து...

    இன்று மட்டும் ரசித்தவை இவைகள்.இன்னும் இருக்கு.வேணாம்.போதும்.

    Q - Quick gun murugesan
    (இணையத்தில் கண்டேன் இப்படியொரு படம்.techsatish.net)

    W - Whistle,winner

    F _ Fire

    பதிலளிநீக்கு
  30. "சாய்ராம் ஒரு இணையபக்க தொடர்பை அனுப்பியிருந்தாரே - அருமையான msv பழைய புகைப்படங்கள் இருந்தன."

    அதில் இரண்டு "சிவாஜி கணேசன்" (இப்போல்லாம் சிவாஜி என்றால் மக்கள் இப்போதைய சிவாஜி படத்தை பற்றி பேச ஆரம்பித்து விடுகின்றார்கள்) படங்கள் இருந்தன. அதை கவனித்தீர்களா ? ஒன்று "அவன் தான் மனிதன்" மேக்கப்; இன்னொன்று பி.பி.எஸ். பாடவேண்டிய பாட்டை சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு ஸ்டைல் போஸுடன் பாடுவதை போலே !

    - Sai

    பதிலளிநீக்கு
  31. Quick Gun Murugesan?
    இதென்ன பலான படம் டைட்டில் போல இருக்கே?

    பதிலளிநீக்கு
  32. அப்பா சத்தியமா நான் பாக்கலப்பா இந்தப் படத்தை.பேர் பாத்தேன்.
    அதான் எங்கேயிருக்குன்னு இணைச்சிட்டேனே.

    இப்போ கேட்கும் பழைய பாட்டு
    பறக்கும் பந்து பறக்கும்...அது
    பறந்துந்தோடி வரும் தூது...

    பதிலளிநீக்கு
  33. ஸ்கூல் படிக்கும்போது இப்படி எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டா 'டேய், ரேவதியப்பா சத்தியமா சொல்றேன்' சொல்றேண்டா என்று சைடு வாங்குவது வழக்கம். உடன் படித்த ரேவதிக்கு தினம் எரிச்சல் வரும்.

    பதிலளிநீக்கு
  34. எல்லோரும் MSV இசை பற்றி மட்டும் பேசுமிடத்தில் அவர் குரலையும் பேச நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் சின்னி ஜெயந்த் கூட அவர் குரலை மிமிக்ரி செய்து பாடிக் காட்டினார். அவர் குரலில் பாடல்கள் சற்று ஒரு மாதிரியாக இருந்தாலும், சில பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அவை,
    1) இக்கரைக்கு அக்கரைப் பச்சை
    2) எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..
    3) கண்டதைச் சொல்லுகிறேன்..உங்கள் கதையைச் சொல்லுகிறேன்..
    4) சொல்லத்தான் நினைக்கிறேன்..
    5) அமர ஜீவிதம்...

    பதிலளிநீக்கு
  35. அப்பாதுரை சார்,

    நான் சொன்னதைச் சரியாப் புரிஞ்சுக்கலே போலே இருக்கே! எம்எஸ்வி என்ற தனி நபரைப் பற்றி மட்டும் அல்ல நான் சொல்ல வந்தது. அவர் பெயருக்குப் பதிலாக, ராஜா, ரஹ்மான் என்று எவர்பெயரை வைத்துப் பார்த்தாலும், நான் சொன்னது பொருந்தும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

    அடுத்து, நகல் எடுப்பது...?

    இளைய ராஜா ஒரு தரம் சொன்னார், இருப்பது ஏழே சுரங்கள் தான், அதை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் போட்டு வருகிற சங்கீதம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றின் சாயல் இன்னொன்றின் மீது படிந்து விடுவது, அப்பட்டமான காப்பியாகவும் இருக்கலாம், தற்செயலாகவும் இருக்கலாம், சாமான்யமாகக் கண்டுபிடிக்க முடியாமல் திறமையாக ஒளிந்து கொண்டு கூட இருக்கலாம்!

    ராமமூர்த்தியின் திறமையைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே?

    நீங்கள் ஆரம்பித்து வைத்ததால் அதையும் பார்த்து விடலாம்! இளையராஜா கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தபோது, அவருடைய கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் கடுப்போடு, மறுபடியும் மெல்லிசை மன்னர்களைச் சேர்த்து வைக்கத் தலைகீழாக நின்று பார்த்தார்களே! சுட்ட மண் மாதிரிப் பிளவு, உடைந்தது உடைந்ததுதான் என்றாகி அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்ற ஒன்றே ராமமூர்த்தியின் திறமையைப் பற்றி, திரையுலகம் தெரிந்துவைத்திருந்த விஷயம் புலப்படுமே!

    இருவரையும் equal credit கொடுத்துக் குழாயடியை ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான் என்பதுகூட மறந்துபோய் விட்டதா என்ன!

    சாய்ராம் கோபாலன் சொன்னார்,
    /கடந்து போய் கர்மத்தை ரசிப்பதை விட, கழிவாக இருந்து எம்.எஸ்.வியின் பாடலை ரசிப்பேன்/

    அவருக்கு இன்னொரு கூட்டாளி கிடைத்துவிட்டார்! ஜமாயுங்கள்!

    பதிலளிநீக்கு
  36. டி கே ஆர் - இசை பற்றி யோசனை செய்யும்போது எங்களுக்கு தங்கச் சுரங்கம் ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  37. காலம் கடக்கிறது. மேதைகள் மறக்கப் படுகிறார்கள். அது இயற்கை. கிருஷ் சொல்வதில் உள்ள அடிப்படை உண்மையை ஒப்புக் கொள்வோம். வேறு வழி இல்லை? ஆனாலும் எம் எஸ் வி இன்னும் மறக்கப் படவேண்டிய கால கட்டத்துக்கு வந்து விடவில்லை என்பதும் உண்மையே. அவரது சிறந்த படைப்புகள் பலப் பல. அதை இன்றும் ஆயிரக் கணக்கானோர் அல்ல லட்சக் கணக்கானோர் விரும்பிக் கேட்டு ரசிப்பது கூட உண்மைதான். எனக்குப் பிடித்த விசுவநாதன் பாடல் களின் பட்டியலை நான் ஏன் சொல்லவில்லை என்றால் அதில் என்னையும் அறியாமல் மகாதேவன் பாடல்களும் கலந்துவிடும். பின் இதற்காகவே ஜன்மம் எடுத்துள்ள நண்பர்கள் பிழை சுட்டத் தொடங்கி விடுவார்கள். மேலும் நான் சொல்லி விளம்பரம் பெற வேண்டிய பாடல் ஒன்று கூட பாக்கி இல்லை என்றே தோன்றுகிறது. அவரிடம் நான் ரசித்த மற்றொரு அம்சம் அவரது நல்ல நடிப்பு. கண்ண தாசன் பால் அவர் வைத்துள்ள நடிப்பு கலவாத நல்ல நட்பு.

    பதிலளிநீக்கு
  38. //should ராமமூர்த்தி be that talented, அவர் ஏன் msv அளவுக்குத் தனித்துப் பிரபலமாகவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது.//

    ராமமூர்த்தி இல்லாத மன்னர் உப்பில்லாத சாம்பார் ஆகிவிட்டது போலிருக்கிறது அவர் வாதம் - உப்பே சாம்பார் என்பது போலுள்ளது உங்கள் வாதம். ரசிகப் பெருமக்களே திரண்டு வாருங்கள் உங்கள் கட்சி அல்லது கதாநாயகனை முன்னிறுத்த.

    பதிலளிநீக்கு
  39. எம் எஸ் வி நடிப்பில் எனக்குப் பிடித்த படம் 'காதலா காதலா'

    பதிலளிநீக்கு
  40. சங்கீதம் முழுவதும் ஏழு சுவரங்களுக்குள் அடக்கம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை "ஆகாயத்தில் இருக்கும் விண்மீன்கள் எல்லாம் ஒன்று முதல் ஒன்பது வரை இருக்கும் எங்களுடன் பூஜ்யத்தையும் சேர்த்தவுடன் அடக்கம் என்பது போலவோ, ஆங்கில இலக்கியம் அனைத்தும் இருபத்தாறு எழுத்துகளில் அடக்கம் என்பது போன்றது தான். சங்கீதம் என்பது சுவரங்களின் கோவை - நம் போன்ற உதிரி மனிதர்களின் கூட்டம் அல்ல. அதே ராகமும் சந்தமும் இருந்தும் வேறு பொருள் பற்றிப் பாடப்பட்ட பட்டை நாம் ஏற்றுக் கொள்வதில்லையா ?

    பதிலளிநீக்கு
  41. அனானி! சங்கீதம் என்பது வெறும் ஏழு ஸ்வரங்கள் என்று சொல்லும் போது ஏழு என்ற சிறிய எண்ணை எடுத்துக் கொண்டு வாதம் செய்ய வந்திருக்கிறீர்கள். பெர்முடதியன் அண்ட் கம்பினதியன் என்று இந்த ஏழு ஒன்றோடு ஒன்று கூடி, மாறி வரும்போது அது கொஞ்சம் பெரிய விஸ்தாரமாக ஆகும்!

    அதே மாதிரி, நாம் என்ற உதிரி மனிதர்கள்! என்ன ஒரு பதப் பிரயோகம்!?

    நான் அல்லது நாம் என்பதுமே கூட உதிரியோ, ஒதுக்கிவிடக்கூடியதோ அல்ல! இந்த நான் அல்லது நாம் நாம் என்பது எத்தனை எத்தனை எண்ணக் கலவைகளால் ஆனது என்பதைக் கொஞ்சம் யோசிக்க முடிந்தால், இப்படி அலட்சியமாகச் சொல்ல மாட்டீர்கள்!

    இங்கே எம்எஸ்வி என்ற இசையமைப்பாளரைப் பற்றி என்னுடைய கருத்து மிகவும் சிம்பிள்!

    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொண்டாடப்பட்டவர்! திறமை கால மாற்றத்திற்கேற்ப வளரவில்லை என்பதால், எதிலும்,எதற்கும் முன்னோடியாக இருந்ததில்லை! அதனாலேயே, இளையராஜா வளர ஆரம்பித்தபோது, அவரால் ஈடுகொடுக்கமுடியவில்லை! தலைஎடுக்கவும் முடியவில்லை!

    மெல்லத் திறந்தது கதவு படத்தில் இளையராஜாவோடு சேர்ந்து இசையமைத்ததாக, டைட்டில் கார்ட் மட்டும் வரும்! ஆனால், எம்எஸ்வியின் முத்திரை என்று ஒரு சின்ன பிட்டைக் காட்ட முடியுமா?

    பதிலளிநீக்கு
  42. முதல் பத்தியில் Permutations and Combinations என்றுஇருந்திருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  43. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  44. கலைஞர்கள் வளர்கிறார்களா, அல்லது ரசிகர்கள் வளர்கிறார்களா?

    இருபது வருடங்களுக்கு முன்னால் படித்த சுஜாதா இப்போது போரடிக்கிறது. விழுந்து விழுந்துச் சிரித்துப் படித்த வோடவுஸ் புத்தகங்கள் பல இப்போது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது - முறுவல் கூட வரவில்லை.

    கிருஷ்ணமூர்த்தி சொன்னது போல் மைல்கற்கள் கடக்கத்தானே ஒழிய சுமக்க அல்ல, ஒப்புக்கொள்கிறேன். அடுத்த மைலின் அனுபவங்களை எண்ணி கடந்த மைலை மறப்பது இயற்கை தான்.

    என்னுடைய கருத்து: தேக்கம், சாக்கடை பற்றிய மறுமொழி.

    கிருஷ்ணமூர்த்தி சொன்னதை ஒருவேளை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ (வயசு இருபது தானே ஆகுது - மூளை இன்னும் சரியா வளரலை பாருங்க:). தேங்கிக்கிடப்பவையெல்லாம் சாக்கடையாகாது என்பதுதான் என் கருத்து.

    நினைவுகளைக் கொண்டாடுவதில்லையா? எம்எஸ்வியின் இசையும் கொண்டாட வேண்டிய நினைவுதான்.

    பதிலளிநீக்கு
  45. சரி, அதையெல்லாம் விடுங்க. பாயிண்டு மேலே பாயிண்டா வாங்கி 'ஐயா எங்கள்பிளாகய்யா, எம்எஸ்வி பத்தி எழுதுங்கய்யா'னு கேட்டவங்களுக்கு, 'ஐயம்சாரி சிஸ்டர் மேரி, பெரிய சமுத்திரத்துல ஒரு சின்ன டெஸ்ட்யூப் எடுத்தாந்து கொடுக்குறோம் இந்தா'னு சின்ன பிள்ளைக்கு சாக்லேட் காட்டின ப்ளாகாதிபதிகளுக்கு இந்தம்மா என்னவோ நன்றி நன்றி சொய் சொய்ன்றாங்களே?

    பதிலளிநீக்கு
  46. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,
    //எம் எஸ் வி என்ற மூன்றெழுத்தில் கண்ணதாசன் என்ற மூச்சு இருந்தவரை, இசையும் இருந்தது//
    அப்ப வாலி எழுதின பாட்டுக்கு MSV மெட்டமைத்தது இசை கிடையாதா?

    //தேங்கிக்கிடப்பவையெல்லாம் சாக்கடையாகாது என்பதுதான் என் கருத்து.// மிகவும் சரி அப்பாதுரை. அம்மா அன்று பாடிய தாலாட்டு இன்று சாக்கடையாகி விடுமா?
    மெல்லிசை மன்னரால், இன்று ஒரு நல்ல மெட்டமைக்க முடியாது என்ற கருத்து யதார்த்தமானது என்றாலும், அவர் அன்று மெட்டமைத்த அருமையான பாடல்கள், ஒரு தாயின் தாலாட்டு போல் இன்றும் இனிமைதான்.

    பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கைதான் என்றாலும், பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே பல பழமையானதை நாம் அருமை என்று கொண்டாடுவதால்தான்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசை அமைப்பாளர்களும் அவரவர் பாணியில் இசைஅமைத்து வெற்றிகண்டார்கள். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது போல் இல்லாமல், இளையராஜா வளர ஆரம்பித்த தருணத்திலும் மெல்லிசை மன்னர் பல நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. பில்லா, அந்த ஏழு நாட்கள், பொல்லாதவன், வறுமையின் நிறம் சிவப்பு, 47 நாட்கள், தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் (1979) அக்னி சாட்சி, நூல்வேலி, திரிசூலம், என்னை போல் ஒருவன் (அற்புதமான பாடல்கள்) அந்தமான் காதலி........இன்னும் சொல்லலாம். இந்த காலகட்டத்தில் திரை இசையில் இளையராஜாவின் ஆக்கிரமிப்பு அதிகமாய் இருந்த போதிலும், மெல்லிசை மன்னரும் தாக்கு பிடித்தார் என்பதுதான் உண்மை.
    மெல்ல திறந்தது படத்தில் 'வா வெண்ணிலா உன்னைத்தானே', 'தேடும் கண் பார்வை தவிக்க' இந்த பாடல்களுக்கு மெட்டமைத்ததே மெல்லிசை மன்னர்தான் என்பதை இளையராஜாவே சொல்லி இருக்கிறார். இதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், இந்த இரண்டு பாடல்களும் ஒரு முறை கேட்டு பாருங்கள், உங்களுக்கே புரியும்.

    கிருஷ்ணமூர்த்தி இதெல்லாம் என்னுடைய தாழ்மையான கருத்துக்கள், உங்களுடன் விவாதம் செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எழுதவில்லை. உங்கள் கருத்தை நீங்கள் முன் வைத்தது போல், என் கருத்தை நான் கூறி இருக்கிறேன், அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  47. ரவிச்சந்திரன், எனக்கும் MSVஅவர்கள் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
    எனக்கொரு காதலி இருக்கின்றாள்
    குடும்பம் ஒரு கதம்பம்
    அல்லா, அல்லா, மேலும் நீங்கள் எழுதி இருக்கும் பாடல்கள்.
    ரஜினிகாந்த் அவர்களுக்கு இவர் பாடிய 'சம்போ சிவ சம்போ' பாடலை மறக்க முடியாது. அதேபோல் சிவாஜி அவர்களுக்கு நடிகர் சந்திரபாபு அவர்கள் பாடிய பாடலும் மறக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
  48. தொலைக்காட்சி இராத காலம், இலங்கை வானொலியில் தமிழ்த் திரைப்பாடல்கள் இடைவிடாது ஒலித்த காலம், எம் ஜி ஆர் சிவாஜி தவிர மற்றெவரும் தலை காட்ட முடியாத காலம், டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன் பி பி ஸ்ரீநிவாஸ் இவர்கள் தவிர மற்றவர் மங்கிப்போன அல்லது உதயமாகாத காலம், சுசீலா லீலா தவிர அவ்வப்போது ஈஸ்வரி ஜமுனா ஜானகி குரல்கள் மட்டுமே கேட்ட காலம் - இவற்றை எல்லாம் தாண்டி, எம் எஸ் வி யின் இசை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, வாழும். இசையில் இன்று என்ன புதிதாய்க் கிடைக்கிறது என்று தேடுவோர் ஒரு புறம், எல்லாமே அந்தக் காலத்தில் பாகவதர் பாடியதுதானாம் என்று திருவாரூர்க் காரருக்கும் திரைப்பட நடிகருக்கும் வேற்றுமை காணமுடியாத ரசிகர்கள் மறு புறம் - எல்லாம் சேர்ந்தது தான் உலகம்

    பதிலளிநீக்கு
  49. அப்பாதுரை சொன்னது
    //இந்தா'னு சின்ன பிள்ளைக்கு சாக்லேட் காட்டின ப்ளாகாதிபதிகளுக்கு இந்தம்மா என்னவோ நன்றி நன்றி சொய் சொய்ன்றாங்களே?//
    ஏமாத்தாம கண்லயாவது காட்டினாங்களே சாக்லேட்டை, அதுக்கே நான் நன்றி சொல்லணும்!

    பதிலளிநீக்கு
  50. //இவற்றை எல்லாம் தாண்டி, எம் எஸ் வி யின் இசை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, வாழும்//

    சூப்பர் -



    ஐயோ சண்டை சப்புன்னு போச்சே !!

    பதிலளிநீக்கு
  51. சாயின்னா சத்யம் சிவம் சுந்தரம்னு தானே நெனச்சுகிட்டிருந்தேன்!

    /ஐயோ சண்டை சப்புன்னு போச்சே !!/

    சாய் நாரதா ?!

    அம்மா மீனாக்ஷி!

    விதண்டாவாதம் செய்யவோ, அல்லது விவாதம் பண்ணியே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலோ, இங்கே எதையும் எழுதவில்லை!

    எம்எஸ்விக்கு, அவருடைய திறமைக்கு மேலேயே வெளிச்சம் கிடைத்தது என்பது சுருக்கமாக ஒரே வரியில் முடித்துவிடக்கூடிய விஷயம் தான் இது!

    அவருடைய சமகாலத்திலேயே, நிறைய இசையமைப்பாளர்கள், அவரைவிடத் திறமைசாலிகளாக இருந்தார்கள் என்பதும், ஒருவருக்குக் கிடைக்கிற புகழ் வெளிச்சம் இவைகளுக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை என்பதைச் சொல்ல வேண்டுமானால்,இசையமைப்பாளர் வேதாவைச் சொல்ல முடியும், வி.குமாரைச் சொல்ல முடியும்.
    கே.வி.மகாதேவன் இரட்டையரைவிட மிக நுணுக்கமான ஞானம் நிறைந்தவர். இப்படி ஒப்பிடும்போது தான் எம் எஸ் வி என்கிற இசையமைப்பாளரிடம் எது இல்லை ஏன் இல்லை என்ற விடை கிடைக்கும்!

    உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, சந்தோஷமாக அனுபவியுங்கள்!

    எனக்கு அந்த இரட்டையர்கள் இசையமைப்பில் பல பாடல்கள் பிடிக்கும்! அதற்காக, அதுவே கடைசி அளவுகோல் என்று மட்டுமே முடிவு செய்துவிட வேண்டாமே என்பதற்காகத் தான் இவ்வளவும்!

    பதிலளிநீக்கு
  52. //கிருஷ்ணமூர்த்தி said...
    சாயின்னா சத்யம் சிவம் சுந்தரம்னு தானே நெனச்சுகிட்டிருந்தேன்!//

    எனக்கு ஜீனத் அம்மணம் தான் இந்த படத்தை பற்றிய ஒரே நினைவு !

    ஐயோ சுவாமியே சரணம் ஐயப்பா !

    பதிலளிநீக்கு
  53. அறிந்தும் அறியாமலும் (கற்பனை) செய்த பிழைகளை மன்னித்தருள்வாய் - அய்யனே,
    சா(மியே) ........ய் ........ய் .......ய்...... !!

    பதிலளிநீக்கு
  54. //எங்கள் said...
    "அறிந்தும் அறியாமலும் (கற்பனை) செய்த பிழைகளை மன்னித்தருள்வாய் - அய்யனே,
    சா(மியே)..ய்...ய்..ய்...!!//

    Exactly

    - Sai

    பதிலளிநீக்கு
  55. ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கிறீர்கள். MSV யின்
    பாடல்களை பற்றி அலசி ரசித்தோமானால் நல்லது. மீனாஷி யை தவிர
    உண்மையிலேயே யாராவது இருப்பதாக தெரியவில்லை. தயவு செய்து யாராவது
    முயற்சி செய்யுஙக‌ளேன்

    பதிலளிநீக்கு
  56. பாலாஜி, நீங்களே எதையாவது அலசிக் காயப்போட்டிருக்கவேண்டியதுதானே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!