புதன், 30 ஜூன், 2010

மீண்டும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி

இதற்கு முன்பு, பயன்படக் கூடிய ஜெம கிளிப் கொடுத்து, வேறு பயன்கள் எழுத சொல்லியிருந்தோம். வாசகர்கள் கலக்கிவிட்டீர்கள். அதிலிருந்து வெவ்வேறு சிந்தனைகள் எப்படி விஸ்தரித்துக்கொண்டு போகலாம் என்றும் பார்த்தோம். ஒன்றை ஆதாரமாக வைத்து, வேறுபட்ட சிந்தனைகளை அதிலிருந்து எப்படி கொண்டு வரலாம் என்று தெரிந்துகொண்டோம். 

இப்போ நாங்க கொடுக்கப் போகும் பயிற்சி, கொஞ்சம் வித்தியாசமானது. பயன்படாது என்று ஒதுக்கப்பட்ட ஒரு பொருளை எவ்வளவு சாதுரியமாக வேறு வகைகளில் பயன் படுத்தலாம் என்பதற்கான பயிற்சி இது. 

இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்:

இந்த சி டி யை, எந்த கம்பியூட்டராலும் / சி டி ப்ளேயர் / டி வி டி ப்ளேயராலும் திறக்க முடியாது. இதை எந்த கம்பார்ட்மெண்டில் போட்டாலும், உடனே "இந்தக் கோப்பைத் திறக்க இயலாது" என்றோ அல்லது "வேறு ஏதாவது நல்ல சி டி போடுங்க!" என்றோ மானிட்டரில் எழுத்துக்கள் வரும். அதாவது, இது, ஓடி ஓடி, உழைத்துத் தேய்ந்த சி டி. பத்து ரூபாய்க்கு வாங்கியது, இப்போ பத்து பைசாவிற்கு கூட யாரும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

இப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ரொம்ப சுலபமான விஷயம்தான். நேர் உபயோகம் இல்லாத இந்த சி டி யை, என்னென்ன வகைகளில் பயன் படுத்தலாம். இதன் மதிப்பை உயர்த்த என்னவாக இதைப் பயன் படுத்தலாம்? இதனுடைய மதிப்பை எவ்வளவு அதிகபட்சம் உயர்த்தமுடியும்? பயன்படாத சி டி க்கு அதிக பட்ச மதிப்பைக் கொண்டு வர சுலபமான வழிகள் என்ன என்று சொல்பவருக்கு அ ப தி (அபாரப் படைப்பாற்றல் திறன்) பட்டம் வழங்கப்படும். 

இந்தப் பயிற்சியிலிருந்து மதிப்பீடு பொறியியல் / மதிப்பீட்டியல்? (Value Engineering) என்னும் மிகவும் பயன்படும் ஒரு சமாச்சாரத்தை நாம் பார்க்கப் போகிறோம். இது வாழ்க்கையில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். ஆகையால், படிப்பவர்கள் எல்லோரும் இந்தப் பயிற்சியில் பங்குபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

செவ்வாய், 29 ஜூன், 2010

கொஞ்சம் இழுக்கலாம்னுதான்....

செல்ஃபோன் கேம்சிலிருந்து நிமிர்ந்து தொ(ல்)லைக்காட்சியைப் பார்த்தார் வாசு. சிறையில் ஓமகுச்சி நரசிம்மன், 'அத்தை செத்துப் போய்ட்டார்' என்று அழுது கொண்டிருந்த காட்சி. 'எப்படிச் செத்தார்?' என்றால், 'கொலை ஆயிட்டார்'. 'கொலையாளியைப் பிடிச்சாச்சா?', 'பிடிச்சாச்சு', 'எங்க இருக்கார்?', 'இங்கதான்', 'யாரு?', 'நாந்தாங்க அது'...'ஏண்டா விளையாடறியா?' என்றால், 'சும்மா இழுக்கலாம்னுதான் !' எனும் காட்சி.

நகைச்சுவையாம்.

சுசி சீரியலுக்கு நடுவே யதேச்சையாக வைத்த சானல்.

அலுப்புடன் எழுந்தார். ஒரு 'தம்' அடிக்கலாம் போலத் தோன்றியது. சட்டையை மாட்டிக் கொண்டு செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்பினார். ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. சில சமயங்களில் பொழுதைத் தள்ளுவது மிகச் சிரமமாக உள்ளது.

கடையில் ரேவதிதான் இருந்தாள். கடைக் காரரின் பெண். சூட்டிகையான பெண். ஏதாவது தொண தொண வென்று கேள்வி கேட்டு பேசிக் கொண்டிருப்பாள். இவரைப் பார்த்ததும் ஒரு அறிமுகப் புன்னகையுடன் வழக்கமான சிகரெட்டை எடுத்து நீட்டினாள். வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டார். புகையை உள்ளே இழுத்து வெளியில் விட்டார். 'அப்பாடா...'

ரேவதியின் மேல் கவனம் சென்றது. ஏதோ பரீட்சை எழுதி இருந்தாளே....

"எக்ஸாம் முடிஞ்சிடுச்சு இல்லே...?"

"எக்ஸாமா... அங்கிள் ரிசல்டே வந்துடிச்சு...."

"ஓ....என்ன எழுதினே..?"

"+2 தான் அங்கிள்..." கடையில் வியாபாரம் கவனித்துக் கொண்டே பதில் சொன்னாள் ரேவதி. மதிய நேரம் என்பதால் அவ்வளவு கூட்டமில்லை.

"என்ன ஆச்சு ரிசல்ட்?"

"எதிர்பார்த்ததுதான் அங்கிள்..."

எதிர்பார்த்ததுதான் என்றால்.... அடுத்த கேள்வி பார்வையிலேயே இருக்க நிமிர்ந்து பார்த்த ரேவதி புன்னகைத்தாள்.

"ஃபெயில் அங்கிள்.."

"அடடா....என்ன ஆச்சு?...எதுல போச்சு?.." பரவாயில்லை புன்னகையுடன் சொல்கிறாளே என்று நினைத்துக் கொண்டார் வாசு.

"மேத்ஸ்லதான் அங்கிள்.." யாரும் இல்லாததால் அவளும் ஸ்டூலில் அமர்ந்தபடி பேசினாள்.

"ஓ...எவ்வளவு... ரீ வேல்யுவேஷனுக்குத் தரலாமே... எவ்வளவு வந்தது.." சிகரெட் தீர்ந்து விட்டதால் இன்னொன்று வாங்கி பற்ற வைத்துக் கொண்டார்.

"பதினேழு மார்க் அங்கிள்..."

"ஓ..." லேசான தயக்கத்துடன் மேற்கொண்டு என்ன பேசுவது என்று யோசித்தபடி புகையை இழுத்தார்.
(ரெண்டு சிகரெட் வாங்கிட்டார் இந்த இடத்துல இந்த கேப்ஷன் வரணுங்க.....)

"புகைப் பிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது - எங்கள் ப்ளாக்"

"அப்போ மற்ற சப்ஜெக்ட்ல எல்லாம் எவ்வளவு..."

"அதெல்லாம் பரவாயில்லை அங்கிள்... இதை விட மற்ற எல்லா சப்ஜெக்ட்ல எல்லாம் ரெண்டு மூணு மார்க் கூட..."

வாசுவின் சிகரெட் நழுவியது. கேட்டிருக்கவே வேண்டாம் என்று தோன்றியது.

"அப்போ ஏன் மேத்ஸ் மட்டும் சொன்னே..." எரிச்சலைக் காட்டாமல் கேட்டார்.

"அதுலதான அங்கிள் ரொம்பக் கம்மி.... டோட்டல் நூத்தி எண்பத்தாறு அங்கிள்..." வந்த கஸ்டமரை கவனிக்க எழுந்தாள்.

'இதுக்கு ஓமகுச்சி ஜோக்கே தேவலாம்...' சிகரெட்டைக் கீழே போட்டு தேய்த்து விட்டு கிளம்பினார் வாசு. 

(ஓமகுச்சி கொஞ்சம் 'இழுப்பதைப்' பொறுக்காமல், வாசு கொஞ்சம் சிகரெட் 'இழுக்கலாம்' என்று கடைக்குப் போனால், ரேவதி அவரை இப்படி 'இழுத்து' விட்டாளே! அதை வைத்து நாங்களும் ஒரு பதிவு 'இழுத்து' விட்டோமே! எங்களை 'இழுக்க' நினைப்பவர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் - பின்னூட்டங்கள் மூலமாக.)  

முக்கியமான, பதிவுபூர்வமான எச்சரிக்கை: "புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உடல் நலத்திற்கு!" 

திங்கள், 28 ஜூன், 2010

ஓர் ஆண்டு நிறைவு.

எங்கள் ப்ளாக் வலைப் பூவிற்கு இன்று பிறந்த நாள்.


எங்கள் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் இந்த ஓராண்டில் எங்கள் ப்ளாக் மூலமாக கற்றுக் கொண்ட விஷயங்களும், பெற்ற அனுபவங்களும் ஏராளமானவை.

இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு துவக்கத்தில், எங்கள் யாருக்குமே ப்ளாக் எழுதுவது (அதுவும் தமிழில் ப்ளாக் எழுதுவது) எப்படி என்றோ, குறைந்த பட்சம் படிக்கின்ற ப்ளாகுகளுக்கு கமெண்ட் எழுதுவது எப்படி என்றோ ஒருவரைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாது. தெரிந்த அந்த ஒருவர் கூட 'ஆலை இல்லாத ஊருக்கு ...' கதைதான்! 


வலை நண்பர் ஒருவர், கமெண்ட் கிங் என்று அழைக்கப்பட ஏற்றவர் ஆரம்ப காலங்களில் மிகவும் உதவினார், கையைப் பிடித்து அழைத்துப் போகாத குறையாக பல விஷயங்களில் உதவினார். நன்றி என்று சொன்னால் அவருக்குப் பிடிக்காது. எப்பொழுதாவது சந்தித்தால் அவருக்கு முருகன் இட்லி கடையில் இட்லி வடை விருந்து வைக்கிறோம். 

நாங்கள் கற்றதையும், பெற்றதையும் அவ்வப்போது அந்தந்த ஆசிரியரின் பார்வையில், நடையில் எழுதுகின்றோம்.

தொலைக் காட்சியில், ஒரு விளம்பரத்தில், ஒரு ஹோட்டல் மானேஜர் சொல்லுவார், 'எங்களுக்கு கஸ்டமர் தாங்க கிங்' என்று. (ஆனாலும், அந்தக் கஸ்டமரை, கிங்கை, பாத்திரம் நன்றாகத் துலக்கப் பட்டிருக்கிறதா என்பதைப்  பார்த்து சொல்ல அழைக்கலாமா என்று கேட்பது கொஞ்சம் ஓவர்தான். ஹோட்டல் கஸ்டமர் கேசரி செய்ய உபயோகப்படுத்தப்பட்ட பாத்திரம் சுத்தமாக துலக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து சொல்வதில் அவருக்கு (கஸ்டமருக்கு) என்ன பயன்?) 


எங்கள் கஸ்டமர்கள், எங்கள் வாசகர்கள்தான். நாங்கள் சப்ளையர். எங்கள் வாசகர்கள், சொல்லுகின்ற கருத்துகள், பதிவுகளுக்குப் போடும் வோட்டுகள், ரியாக்ஷன் பெட்டியில் (வெரி குட் / குட்/ நோ குட் ) செய்கின்ற டிக்குகள் இவை எல்லாமே, எங்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற முக்கியமான தகவல்கள். எங்கள் பதிவுகளின் உரைகல். தயங்காமல் உங்கள் கருத்துகளை, யோசனைகளைக் கூறுங்கள். 


'எங்கள் ப்ளாக் ஆரம்பித்ததின் நோக்கம் என்ன?' என்று ஒரு நண்பர் நேற்று கேட்டார். எங்கள் ஆசிரியர் குழுவில் உள்ளவர்களில் இரண்டு மூன்று பேர்கள் சிறு வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்கள். அது மட்டும் அல்ல பட்டாணி கட்டி வந்த காகிதங்கள், சுண்டல் காகிதங்கள், மளிகை பொருட்கள் கட்டி வருகின்ற காகிதங்கள் முதல், தமிழ் வார, மாதாந்திரப் பத்திரிகைகள் என்று ஏராளமாக படித்து (கண்டது கற்பவன் பண்டிதன் ஆவான் என்று எங்கள் தமிழ் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார்.) பண்டிதர்  ஆகிக் கொண்டு இருப்பவர்கள், நாங்கள். ஒரு வலைப் பத்திரிகை ஆரம்பிக்க முடியும் என்று தெரிந்தவுடன் எங்களுக்கு ஒரே சந்தோஷம். அதிலும், எங்கள் எழுத்துக்களை படிப்பவர்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள் என்பது இன்னும் சந்தோஷம். 


எங்கள் இலட்சியங்களும் கொள்கைகளும் என்று பார்த்தால், இவைகளைக் கூறலாம்: 


# எங்கள் பதிவுகளால், படிப்பவர்களுக்கு, பத்து பைசாவிற்காவது பயன் இருக்கவேண்டும். 


# வாசகர்களின் சிந்திக்கும் திறனையும், படைப்பாற்றல் போன்ற திறமைகளையும் ஊக்குவிப்போம் .


# வாசகர்கள் விரும்புகின்ற நல்ல விஷயங்களை, நல்ல வகையில், சுவாரஸ்யமாக அவர்களுக்கு அளிப்போம். 


# ப்ளாக் என்பதின் புதுப் பரிமாணங்களை, எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம். 


# மனிதர்கள் அனைவரும் சமம்; யாரும் உயர்வும் இல்லை, தாழ்வும் இல்லை. ஆகவே தனி மனிதரையோ, ஒரு பிரிவினரையோ, ஒரு இனத்தினரையோ அல்லது மதத்தினரையோ, நாட்டினரையோ வசை பாட மாட்டோம். துதிக்கவும் மாட்டோம்.  


# நகைச் சுவைக்காக சில இடங்களில் சில கிண்டல்கள் இடம் பெறும். ஆனால் அவை தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ அல்லது  தரம் தாழ்ந்தோ நிச்சயம் இருக்காது. 


மீண்டும் சொல்கிறோம் எங்கள் வாசகர்கள்தான் எங்கள் கிங். எங்கள் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துகளை தயக்கம் இன்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 
நன்றி. 

சனி, 26 ஜூன், 2010

"சார்...நீங்க அவசியம் வரணும்..."

அவரை அலுவலக நண்பர் என்று சொல்லலாம். கேஷ் கலக்ஷனுக்காக வருவதில் பழக்கம். நல்ல நண்பர். இனிமையாகப் பேசுவார். நெருக்கமாகப் பழகுவார். சமீபத்தில் கலெக்ஷனுக்காக வந்தவர் வேலை முடிந்ததும் வண்டியிலிருந்து ஒரு தோல் பை எடுத்தார். பிரித்தார். ஒரு கல்யாணப் பத்திரிகையை எடுத்தார்.

"சார்! தப்பா நினைச்சுக்காதீங்க..." என்று தொடங்கினார்.

கல்யாணப் பத்திரிக்கை கொடுப்பதில் அல்லது வாங்குவதில் தப்பாய் நினைக்க என்ன இருக்கும்...ஏதாவது வில்லங்கக் கல்யாணமா...அல்லது கடன் கிடன் கேட்கப் போகிறாரோ..? ஜாக்கிரதையாக பதிலேதும் சொல்லாமல் ஒரு மத்தியப் புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம்.."

என்னது... மனதுக்குள் பெரிய எழுத்துகளில் அதிர்ந்தேன்.

குனிந்து கல்யாணப் பத்திரிகையை எடுத்து சிரத்தையாய் என் பெயரை எழுதிக் கொண்டிருந்தார். குழப்பத்துடன் ஒரு வேளை இரண்டு பத்திரிக்கை எடுக்கிறாரா என்று பார்த்தேன். ஊஹூம்...ஒன்றுதான்...

"யாருக்கு கல்யாணம்.." இப்போ சரியாய்ச் சொல்வார் பார் என்று நினைத்துக் கொண்டேன்.

"என் பையனுக்கும், என் பொண்ணுக்கும் மதுரைல கல்யாணம்.."

குழப்பறாரே....சரி அவரே சொல்லட்டும்...

"ரெண்டு பேருக்கும் அலையன்ஸ் பார்த்து முடிவு பண்ணினோம். முதல் நாள் என் பையனுக்கும், அடுத்த நாள் அதே மேடையில் என் பெண்ணுக்கும் கல்யாணம்...உங்களால அங்க வர முடியாது என்று தெரியும்...இங்க, இந்த ஊர்ல அடுத்த மாதம் ரிசெப்ஷன் வச்சிருக்கேன்.. அவசியம் வரணும்."

"அடேடே..சந்தோஷம் சார்...கண்டிப்பா வர்றேன்..."

"வர்றேன் இல்லை சார்..வர்றோம்னு சொல்லுங்க... வீட்டுலயும் அழைச்சிகிட்டு வரணும்.."

"கண்டிப்பா....அவசியம் வர்றேன்...ச்சே..வர்றோம்..."

"அப்புறம் ஒரு விஷயம் ... இந்த ஏரியாவுல உங்களைத் தவிர வேறு யாருக்கும் பத்திரிக்கை வைக்கலை... நான் உங்க கூட அப்படிப் பழகி இருக்கேன்..." அப்படியில் அபபடி ஒரு அழுத்தம்...!

உஷாராவதற்குப் பதில் நெகிழ்ந்தேன்... உடனே செல்லை எடுத்து ரிமைன்டர் எல்லாம் போட்டுக் கொண்டு அவருக்கும் காண்பித்தேன்.

"பார்த்தீங்களா....அவசியம் வருவேன்...சீ... வருவோம்..."

சந்தோஷமாக விடை பெற்றார்.

அப்புறம் அது மறந்தே போனது. வேலைப் பளுவில் சுத்தமாக நினைவில்லை. அந்த நாளும் வந்தது. காலையும் மதியமும் செல் இசைத்து இசைத்து நினைவூட்டியது. போகலாமா வேண்டாமா என்று குழப்பம். மனைவி, குழந்தைகள் வேறு இடத்துக்கு செல்லும் வேலை இருந்ததால் அவர்கள் கவலைப் படவில்லை. மெல்ல மெல்ல தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நாலு மணி போல அவரிடமிருந்து ஃபோன் வந்தது.

"சார்...மறந்துடாதீங்க.... மழை வர்றா மாதிரி இருக்கு... அதைக் காரணமா காட்டி வராம இருந்துடப் போறீங்களேன்னுதான் ஃபோன் பண்றேன்.... அவசியம் வந்துடுங்க..."

அட...என்ன அன்பு...ச்சே, போக வேண்டாம்னு நினைச்சோமே...

"இல்லை சார்! ஞாபகம் இருக்கு.... "

"ஓகே சார்...வந்துடுங்க...எட்டு மணிக்கு முடிஞ்சிடும்... ஒன்பதரை மணிக்கு அவர்களுக்கு டிரெய்ன்... கிளம்பிடுவாங்க...என்னடா இதை எல்லாம் சொல்றேனேன்னு பார்க்காதீங்க... உங்க கிட்ட உரிமையாச் சொல்றேன்..."

மறுபடியும் குற்ற உணர்வில் தவித்துப் போனேன். ச்சே..போக வேண்டாம்னு நினைச்சோமே...

ஆறரை மணிக்குக் கிளம்பினேன்...

பையன் மதியானமே ஒரு மொய்க கவர் வாங்கி வந்திருந்தான்...

எட்டு மணிக்குள் முடிந்து விடும் என்று சொல்லியிருந்தாரே...நாம் லேட் ஆக இருப்போம் கூட்டமாக இருக்கப் போகிறது என்று பார்த்தால் பத்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை. யாரும் வா என்றும் கூப்பிடவில்லை. அவர்களும் அதே ஃபீலிங்கில் இருந்திருக்கலாம்..! தயக்கத்துடன் மெல்ல சுற்றுமுற்றும் பார்த்தவாறு சென்று கா...லியாய் கிடந்த பல சேர்களில் ஒன்றில் அமர்ந்தேன்.

நிமிடங்கள் கரைந்தன. இன்னும் கொஞ்சம் பேர் வந்தார்கள். நண்பரைக் கண்ணில் காணோம்.

எவ்வளவு நேரம் காத்திருபப்து.... முக்கால் மணி நேரம் கடந்தும் நண்பரைக் காணோம்....யாரையாவது கேட்கலாம் என்றால் யாரும் லட்சியம் செய்வதாகவும் தெரியவில்லை. எல்லோருக்கும் இதே பிரச்னை இருக்குமோ... ஸ்பீக்கரில் பாட்டு வேறு காதைக் கிழித்தது...

மாப்பிள்ளைகளையும், மணப் பெண்களையும் மாறி மாற்றி வித வித போஸ்களில் கிளிக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஃபோட்டோக்ராபர்.

எல்லோருமே பரிசை எப்போது கொடுக்கலாம் என்று பின்னால் சாப்பாட்டு மேசையை கவனித்த வண்ணமிருந்தார்கள்.

ஒன்று ஜோடிகள் மேடையில் அமர வேண்டும். அல்லது மணப் பையன், பெண்களின் பெற்றோர் கண்ணில் பட வேண்டும். நண்பரின் பையன், பெண் யார் என்று தெரிய வேண்டுமே...!

இன்னொரு பிரச்னை வேறு... இருந்தது இரண்டு ஜோடிகள்....என்னிடம் ஒரே ஒரு மொய்க கவர்...! அது ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.

பொறுக்க முடியாமல் ஃபோன் செய்து பார்த்தேன்...

"சார்..! வந்துட்டீங்களா...கீழ ஹோட்டல் வாசல்ல நின்னு வழி சொல்லிக்கிட்டு இருக்கேன்... நிறையப் பேருக்குத் தெரியாதே..."

அரை மணி கழித்து மேலே வந்தவர் முகத்தில் ஒன்றும் உற்சாகமில்லை. எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை போலும். எனக்குதான் அவரைப் பார்த்ததும் 'அப்பாடா... தெரிந்த ஒரே முகம் வந்து விட்டது' என்று இருந்தது.

"என்ன சார்..இவ்வளவு சொன்னேன்...வீட்டுல அழைச்சுகிட்டு வரலையா..? இருநூறு சாப்பாடு சொல்லி இருந்தேன்....நூறு கூடத் தேறாது போல இருக்கு..." அவர் பார்வை சாப்பாடு மேசை பக்கம் சென்று வந்தது.

இங்குமங்கும் ஓடி அலுவலக நண்பர்களை கவனித்தார். என் பக்கம் பார்வையைத் தவிர்த்தார். எனக்கும் ஒரு மொய்க கவரை வைத்திருப்பதன் சங்கடம் இருந்தது!

கொஞ்ச நேரம் கழித்து கீழே இறங்கி பக்கம் வந்தவரை மடக்கி கவரை எடுத்து அவரிடம் நீட்டினேன். வாங்கி சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு நகர்ந்தார். கொஞ்சம் யோசித்து விட்டு சாப்பிடப் போனேன்.

நீதி....

உறவினர் இல்லத் திருமணம் போகலாம்....

நண்பர்கள் இல்லத் திருமணம் போகலாம்.... அவர்கள் மனைவி, பெற்றோர் ஆகியோரைத் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் இன்னும் நாலைந்து நண்பர்களாவது கூட வந்திருப்பார்கள். உங்களை மட்டும்தான் கூப்பிடறேன் என்று சொல்லும்போதே முடிவு செய்து விட வேண்டும். மணப் பெண்ணோ மண மகனோ மட்டும்தான் தெரியும் என்றாலும் சங்கடம்தான். ஆனால் வந்திருப்பவர்களிலாவது ஓரிரு தெரிந்த முகங்களாவது இருக்க வேண்டும்...!

சாப்பிட்டு விட்டு வந்து "அப்போ.... சந்தோஷம் சார்...! கிளம்பறேன்..." என்றேன். சொல்லாமல் வரக் கூடாதே.... தாம்பூலம் வாங்கிக் கொண்டு வந்தால்தான் அவர்களுக்கும் நல்லது...

கை கூப்பினார்... பக்கத்தில்தான் தாம்பூலப் பைகள் இருந்தன. "சரி சார்...போயிட்டு வாங்க..." விரைந்து வேறு பக்கம் நகர்ந்து சென்றார்.

கிளம்பி கீழே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

வெள்ளி, 25 ஜூன், 2010

கேன்சர் சில செய்திகள், தடுக்கும் வழிகள்

கட்டுப்பாடில்லாத செல் வளர்ச்சி கேன்சர். பிரிந்து வளர்ந்து கட்டுப்பாடேயில்லாமல் பெருகி உடலின் நார்மல் இயக்கத்தை பாதிக்கிறது. 



லுகேமியா என்பது இரத்தத்தில் செல் பிரிந்து வளருவதால் இரத்த ஓட்டத்தின் இயல்பு இயக்கத்தை பாதிக்கிறது. 
சாதா செல்லின் வேலை உருவாவது வளர்வது பிரிவது, சாவது. ஆனால் கேன்சர் செல்கள் சாவதில்லை. கட்டுப்பாடில்லாமல் பெருகி உடலின் இயக்கத்தை தாறுமாறாக்கி முடிவை வரவழைக்கும்.

ஒவ்வொருவர் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளன. நமது இயல்பான இம்ம்யூன் சிஸ்டம் அதை தடுக்க வழியற்றுப் போகும்போது அவை கட்டுப்பாட்டை இழந்து வளரத் தொடங்குகின்றன. டாக்டர் டெஸ்ட் செய்து விட்டு உங்கள் உடலில் கேன்சர் செல் இல்லை என்று சொல்லும்போது அவை இல்லை என்று அர்த்தமில்லை. கண்டுபிடிக்கத் தேவையான அளவை அவை இன்னும் அடையவில்லை என்றே பொருள்.

சுற்றுச் சூழல் காரணமாக, பரம்பரையாக, தவறான உணவுப் பழக்கங்களால் என்று பல காரணங்களால் கேன்சர் வருகிறது.

கீமோதெரபி ஆகட்டும், ரேடியேஷன் ஆகட்டும், பாதிக்கப் பட்ட செல்களை அழிக்கிறேன் என்று நல்ல செல்களையும் சேர்த்தே காலி செய்கின்றன. இந்தவகை சிகிச்சைகளில் முதலில் கட்டுப் படுவது போலத் தோன்றினாலும் இதன் பக்க விளைவுகளாலும், அதன் வளரும் வேகத்தாலும் நீண்ட காலப் பயனை அளிப்பதில்லை.மேலும் இந்த சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்களை உடைத்து அவை மேலும் மேலும் அதிகமாக வளரவும் மேலும் பல இடங்களிலும் பரவவும் வழி செய்கின்றன.


இவற்றைத் தடுக்க ஒரு வழி கேன்சர் செல்லுக்கு உணவூட்டும் சில உணவுகளைத் தவிர்ப்பதுதான்.

1) சர்க்கரை. : இதை நிறுத்துவதன் மூலம் கேன்சரின் ஒரு முக்கிய உணவை நிறுத்தலாம். இதற்கு பதிலாக என்று எந்த வடிவிலும் எதையும் சேர்க்காமல் இருப்பது நலம்.

2) பால் GI ட்ரேக்டில் mucus உருவாக்குகிறது. இது கேன்சர் செல்லின் முக்கிய உணவு. (இதுவுமா?) எனவே பாலை தவிர்பப்தன் மூலம் mucus உருவாவதைத் தடுத்து கேன்சர் செல்லின் இன்னொரு முக்கிய உணவையும் தடை செய்யலாம். இனிப்பில்லாத சோயா பால் உபயோகிக்கலாம்.

3) அசைவத்தில் பீஃபும், போர்க்கும் சாப்பிடுவதைத் தவிர்த்து, மீனும் சிறிதளவு சிக்கனும் சாப்பிடலாம். இறைச்சி ஆபத்தான பாரசைட்டுகளையும், ஆண்டி பயோடிக்குகளையும் கொண்டிருப்பதால் கேன்சர் பேஷண்டுகள் இவற்றை தவிர்ப்பது நலம்.

4) 80% காய்கறிகளும் அதன் சாறும் கலந்த உணவு, விதைகள் நார்ச்சத்து கலந்த உணவு நலம். இவை நல்ல என்சைம்களைக் கொண்டுள்ளதால் சுலப ஜீரணத்துக்கும், (ஒன்றரை நிமிஷத்தில் ஜீரணமாகும்) நல்ல செல்களுக்குச் சிறந்த உணவாகவும் உதவுகின்றன. 20% வேண்டுமானால் சமைத்த உணவு உட்கொள்ளலாம்.

5) இந்த மாதிரி நல்ல செல்கள் வளர வெஜிடேபிள் சூப் சாப்பிடலாம். மேலும் பச்சைக் காய்கறிகள் தினம் இரண்டு மூன்று முறை சாப்பிடலாம். ஏனெனில் என்சைம்கள் நாற்பது டிகிரி செண்டி கிரேடில் அழிக்கப் பட்டு விடுகின்றன.

6) இறைச்சியில் உள்ள ப்ரோட்டீன் ஜீரணமாவது கடினம் என்பதால் தங்கி விடும் ப்ரோட்டீன் விஷத் தன்மையை உருவாக்குகின்றன. கேன்சர் செல் சுவர்கள் ப்ரோட்டீன்களால் உருவானது. இறைச்சியைக் குறைத்து ப்ரோட்டீனைத் தவிர்ப்பதால் என்சைம்களுக்கு போராட அதிக வாய்ப்பு கிடைக்கிறது. ப்ரோட்டீன் செல் சுவர்களைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாகிறது.

7) ஆண்டி ஆக்சிடன்ட்ஸ், மினரல்கள், சில விட்டமின்கள் போன்றவை உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை தூண்டி, கேன்சரை அழிக்கும் செல்களுக்கு உதவி செய்கின்றன. விட்டமின் E உடலின் இயல்பான செல் வளர்ந்து பிரிந்து அழியும் தன்மையை வளர்க்கின்றன.

8) சற்று வித்யாசமான கோணம்: கோபம், மன அழுத்தம், மன்னிக்க மறுப்பது போன்ற குணங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தி ஒரு வித அமிலத் தன்மையை உடலில் உருவாக்குகின்றன. இவை கேன்சர் செல்களுக்கு அல்வா போன்ற பின்னணி. சந்தோஷம், அன்பும் காதலும் இணைந்த வாழ்வு, எதிர்மறை சிந்தனைகள் இன்றி வாழ்தல், ஆகியவை உடலின் ஆரோக்யத்தைக் கூட்டி இந்த செல்களை வளர விடாமல் செய்கின்றனவாம்.

9) சீரான உடற்பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள் உடலின் செல்கள் வரை ஆக்சிஜனை ஊட்ட வல்லது. இந்த ஆக்சிஜன் பின்னணியில் கேன்சர் செல்கள் வளர சிரமப் படும் என்பதால் இவையும் நல்லது. 

வியாழன், 24 ஜூன், 2010

கவியரசரும் மெல்லிசை மன்னரும்

ஜூன்  24 ..கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள்.  ஏன், மெல்லிசை மன்னருக்கும் இன்றுதான் பிறந்த நாள்...  இருவருமே மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள்.  ஒருவர் படைத்தார். ஒருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். மனதில் நின்ற பாடல்களைச் சொல்லும்போது இருவரையுமே நினைத்துக் கொள்ளுங்கள்...!

கண்ணதாசன்...மயங்க வைத்த, கலங்க வைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர். வனவாசம், மனவாசம், சேரமான் காதலி (சாகித்ய அகாதெமி பரிசு பெற்றது) அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற புத்தகங்கள்...

கறுப்புப் பணம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் எடுத்த தயாரிப்பாளர்...

கறுப்புப் பணம் படத்தில் கதா நாயகனாகவே, சூர்யகாந்தி, இரத்தத்திலகம், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில்...

செம்மொழி மாநாடு தொடங்கியிருக்கிறது...அவரைப் பற்றி யாராவது பேசுவார்களா?

காவியத் தாயின் இளைய மகன். "பாமர ஜாதியில் தனி மனிதன்..  படைப்பதனால் என் பேர் இறைவன்.."  அவர் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு...!

"மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.."

அவர் மறைந்த பிறகு வந்த பாடல் ஒன்று..கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு..  என் காதல் கவிதைக்கு வரிகளைக் கொஞ்சம் தந்து விடு... என்ன ஏக்கம்..?

பக்தி வேண்டுமா?  கிருஷ்ணகானம்...ஆயர்பாடி மாளிகையிலா, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களா...எது வேண்டும்? இல்லை கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணாவா, அல்லது கங்கையிலே ஒடமில்லையோ பாடலா, கண்ணன் வருவான் பாடலா அல்லது ராமன் என்பது பொன்னி நதி பாடலா...

நாத்திகம்....?  உண்டு..."தெய்வம் என்றால் அது தெய்வம்...  வெறும் சிலை என்றால் அது சிலைதான்...உண்டு என்றால் உண்டு..இல்லை என்றல் அது இல்லை..."

காதல்...  கணக்கிலடங்காதது...எவ்வளவு ஒரு பதிவில் சொல்ல முடியும்..!

"(அவள்) காலையில் மலரும் தாமரைப்பூ.. அந்திக் கருக்கினில் மலரும் மல்லிகைப்  பூ..  இரவில் மலரும் அல்லிப் பூ..  அவள் என்றும் மணக்கும் முல்லைப் பூ.."

ஒரு மே மாதத்தில் கெடு வைத்து முடிய வேண்டும் என்று சொல்லப் பட்ட பாடலுக்கு மே.மே என்று முடியும் வண்ணமே பாடல் எழுதினார் கவிஞர்...(இந்தப் பாடலின் இசைக்கு மெல்லிசை மன்னரை நினைத்துக் கொள்ளுங்கள்..)

"அன்பு நடமாடும் கலைக் கூடமே...ஆசை மழை மேகமே..  கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே..கன்னித் தமிழ் மன்றமே"

இது போல இன்னொரு பாடல் லா,லா என்று முடியும் படி...
"வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா...  தேன் நிலா அல்ல என் தேவியின் நிலா... "
"கம்பனைக் கூப்பிடுங்கள்..சீதையைக் காண்பான்...  கவி காளிதாசன் அவள் சகுந்தலை என்பான்.."

முதல் காதல் தோற்றுப் போனதனால் சிறந்த கவிதைகள் படைத்தாராம்...எல்லோருக்கும் முடிகிறதா என்ன...  காதலில் தோற்றுப் போவது இல்லை..கவிதை எழுதுவது...

"காலங்களில் அவள் வசந்தம்...  கலைகளிலே அவள் ஓவியம்...  மாதங்களில் அவள் மார்கழி...மலர்களிலே அவள் மல்லிகை...  கண் போல் வளர்ப்பதில் அன்னை...  அவள் கவிஞனாக்கினாள் என்னை..."

அவரது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் வாழ்வில் ஒரு பின்னணி உண்டு என்பார்கள்....எந்த அளவு உண்மையோ...நமக்கு நல்ல பல பாடல்கள் கிடைத்தன....

மனைவி பற்றி...

"ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்ததுண்டு...  என் வேரென நீயிருந்தாய்..  அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்..."

கணவன் பற்றி மனைவி...?

"சொல்லென்றும் மொழியென்றும் பொருள் என்றும் இல்லை...   சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை (ஆ...ஹா...)...ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உலகங்கள் நமையின்றி வேறேதும் இல்லை....நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..."

காதல்...
"பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்..  பாடித் திரியும் காற்றையும் கேட்டேன்...அலையும் நெஞ்சை அவனிடம் சொன்னேன்..அழைத்து வந்தார் என்னிடம் உன்னை...  இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே..."

"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...  பேச மறந்து சிலையாய் நின்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி...அதுதான் காதல் சன்னதி...
காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா.."

காதல் தோல்வி....

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..  பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா..?"

காதல் தோல்விக்கு காதலியைக் கூடக் காரணமாக்க மனம் வராத காதலன்..

"மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க நேரமில்லை..இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி...ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க வைத்தான்..துவக்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை...உனக்கெனவா நான் பிறந்தேன்..எனக்கெனவா நீ பிறந்தாய்...  கணக்கினிலே தவறு செய்து கடவுள் செய்த குற்றமடி.."

பெற்ற பிள்ளை மறந்து விட்டால்...

"சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமுமில்லை....
...நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா...தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா.."

தன் பிள்ளை தான் ஏழ்மை நிலையில் இருக்கும்போது பிறந்து விட்டால்...

"ஏன் பிறந்தாய் மகனே..ஏன் பிறந்தாயோ ...  இல்லை ஒரு பிள்ளை என ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து என் பிறந்தாய் செல்வ மகனே.."

அல்லது ஆறுதலாக,

"பல்லக்கில் பட்டுக் கட்டி பரிசுகள் எடுத்து,  பச்சைப் பவளம் முத்து மாணிக்கம் தொடுத்து, செல்லக்கிளிக்கு வரும் மாமனின் விருது..  அய்யா சிந்தை கலங்காதே நாளைக்கு வருது.. சொர்க்கத்தில் கட்டப் பட்ட தொட்டில்...ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இன்றி...மாளிகை மஞ்சம் கண்ட மன்னன் இன்று மாமர ஊஞ்சல் தந்தான் இங்கு.."

தத்துவம்...

"மனிதரில் நாய்கள் உண்டு...  மனதினில் நரிகள் உண்டு..பார்வையில் புலிகள் உண்டு...  பழக்கத்தில் பாம்பு உண்டு...  நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே மானம் பண்பு நியாயம் கொண்ட மனிதனைக் காணவில்லை..."

"பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே...  ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே...கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்..  அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்...  உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.."

"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று.."

ஊக்கத்துக்கு...?

"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...  ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்..."

"பாதை எல்லாம் மாறி விடும் பயணம் முடிந்து விடும்..  மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் கலைந்து விடும்..."

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..  வாசல் தோறும் வேதனை இருக்கும்..."

சற்று இல்லை நிறையவே நீளமாகி விட்டது ...  என்ன செய்ய இவர் கவிதைகளையும், மெல்லிசை மன்னரின் இசையையும் கேட்டால்  படித்தால் 

"நெஞ்சம் மறப்பதில்லை...  அது நினைவை இழப்பதில்லை..."

புதன், 23 ஜூன், 2010

" நான் எப்போ கிளம்பணும் ? "







குஜுலு தன் அக்கா உமா பள்ளிக்குக் கிளம்புவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"பப்லு....எல்லா புக்கும் இன்னிக்கி கொண்டு போகாதே...முதல் நாள்...ஒரு நோட்டு போதும்..." அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து வந்தது. 

"சரிம்மா...தெரியும்மா...." உமா சத்தமில்லாமல் உள்ளே வைத்த புத்தகங்களை வெளியே எடுத்து வைத்தாள். 

"சாப்பிட வா...டைம் ஆகுது பார்...மத்தியானத்துக்கு இதோ எடுத்து வச்சிருக்கேன் பார்..." 

குஜுலு என்கிற ஷோபா ஏக்கத்துடன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியே வந்த அம்மா ஷோபாவைப் பார்த்தாள்... 

இது யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்...

"குஜுலு... உனக்கும் பசிக்கிறதா செல்லம்...நீயும் வா..சாப்பிடலாம்" என்றாள் மென்மையாக. 

"என்னை அப்படிக் கூப்பிடாதே...எனக்கு ஒண்ணும் இப்போ வேண்டாம்..." என்றாள் குஜுலு லேசான விரோதத்துடன். 

"நீதானம்மா அப்படி உன்னைக் கூப்பிடச் சொல்லி சொன்னதே..." அம்மா அவள் தலையை கோதி விட்டாள். 


உமாவை பப்லு என்று கூப்பிடுவதைப் பார்த்து தன்னையும் அதே போல செல்லமாக ஏதாவது பெயர் சொல்லி அழைக்க வேண்டும் என்று அடம் பிடித்து, தானே குஜுலு என்று கூப்பிடுங்கள் என்றும் சொன்னவள் இவள்தான். 



"இப்போ வேண்டாங்கறேன் இல்லே...உமா குரங்குக்கு மட்டும் ஃபீஸ் கட்டி புத்தகமும் வாங்கிட்டீங்க...எனக்கு ஏன் கட்டலைன்னு கேக்கறேன்...நான் எப்போ போறது?" மேற்கொண்டு பேசமுடியாமல் குஜுலு குரல் விசும்பியது. 



உடலின் செல்கள் வளர்ந்து பிரிந்து அழிய வேண்டும்....இதற்கு அபோப்டொசிஸ் என்று பெயர்.... 



போன வாரமே அப்பாவிடம் ஞாபகப் படுத்தியிருந்தாள். 
"அப்பா...ஸ்கூல் திறக்கப் போகுது...போன வருஷ ஆனுவல் பரீட்சையே மூணு பரீட்சை எழுதலை...டாக்டர் கிட்ட சீட்டு வாங்கிக் காட்டிக்கலாம்னு சொன்னீங்க...வாங்கினீங்களாப்பா..."

"இன்னும் இல்லைடா செல்லம்..."
"டீச்சர் கேப்பாங்கப்பா...திட்டுவாங்க...இந்த வருஷ ஃபீஸ் வேற நாளைக்குள்ள கட்டணுமாம்...அபி சொன்னா...அவங்க அம்மா கட்டிட்டாங்களாம்.."
"கட்டுவோம்டா .."

சில செல்கள் வளர்ந்து பிரிகின்றன..ஆனால் அழிவதில்லை..

மூன்றாவது படிக்கும் ஷோபா முழுவருஷப் பரீட்சையில் மூன்று பரீட்சை எழுத முடியாமல் போன காரணம் அந்த வயிற்று வலி.... 

தாங்க முடியாமல் துடித்தவளை இரண்டு மூன்று ஆஸ்பத்திரி அழைத்துப் போனார்கள் அப்பாவும் அம்மாவும். 

மற்ற இரண்டு இடங்களில் சொன்ன மாதிரி அடையாறில் உள்ள ஆஸ்பத்திரிக்கும் அழைத்துப் போனார்கள். அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். ஷோபிக் குட்டிக்கு அவர்கள் பேசியது புரியவில்லை.  ஸ்கூலுக்குதான் லேட்டாகப் போகக் கூடாது. ஆஸ்பத்திரிக்குமா..?

அழிவதில்லை என்பதோடு கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பிக்கிறது. உடலெங்கும் பரவுகிறது... 

அதற்கப்புறம் அப்பாவோ அம்மாவோ இவளைத் திட்டுவதில்லை. உமா சண்டை போட்டால் கூட உமாவை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
அதெல்லாம் சரிதான்...ஆனால் எப்போது புத்தகம் வாங்கி, எப்போ அட்டை போட்டு... 
அப்பப்போ வயிற்று வலி தாங்க முடியலைன்னு அழறேனே அதனால ஸ்கூல்ல போயும் அழுவேன்னு பயப்படறாங்களோ... ? 
திரும்பவும் வயிற்று வலி தொடங்குவது போல இருந்தது...மறைத்துக் கொள்ளப் பார்த்தாள்...ரெண்டு நாள் முன்னால் ராத்திரி இப்படி வலி வந்து விடாமல் அழுதபோது சித்தப்பா உட்பட எல்லோரும் அருகில் நின்று கண் கலங்கியது ஞாபகம் வந்தது...

இப்படி உடலெங்கும் பரவும் இந்த செல்கள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதித்து உயிருக்கே எமனாகிறது..

"நான் போயிட்டு வரேம்மா...போயிட்டு வரேன் சித்தப்பா...அப்பா... வரேன்...ஏய் குஜுலு...வரேண்டி..." பையை மாட்டிக் கொண்டு கிளம்பிய உமா இவள் முகம் போன போக்கைப் பார்த்து, மெதுவே பையைக் கீழே வைத்தாள்.
"என்ன ஷோபி...வலியா?.."
"ஆமாண்டி..." முனகலாகச் சொன்னாள் ஷோபா.
"அம்மா...அப்பா..." கத்தினாள் உமா.
எல்லோரும் கூடி விட்டார்கள்.
சித்தப்பா மெல்ல சாய்ந்து படுத்திருந்த ஷோபாவை மடியில் தாங்கி "என்னம்மா.." என்றார்.
லேசாகத் தலையைத் தூக்கி, "வலிக்குது.." என்றாள். தலை மெல்லச் சாய்ந்தது.
"ஷோபா..."
"குஜுலு..."
"ஷோபிக் குட்டி..."
எழவில்லை.

இவற்றைக் **கேன்சர் செல்கள் என்கிறார்கள்.

சித்தப்பா உடைந்து கதறி அழுதார்....
"கடவுளே....கஷ்டப் படுத்தாம எடுத்துக்கோன்னு வேண்டினேன் ..அதையாவது நிறைவேத்தி வச்சியே..."   
(உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை) 
** கான்சர் மேலும் சில விவரங்களும், மற்றும் முன்னேச்சரிகைத் தடுப்பு நடவடிக்கைகளும் - எங்கள் அடுத்த பதிவில். 

செவ்வாய், 22 ஜூன், 2010

எலும்பு, சதை, இரத்தம், இதயம்!

சமீபத்தில் ஆஸ்பத்திரியில் அடிக்கடி சென்று காத்திருக்கவும்சில இரவுகள் அங்கு தூங்கவும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.  நகரின் மிகச்சிறந்த மருத்துவமனை எனப் பெயர் பெற்ற இடம்.  ஒரு சில இடங்களைத் தவிரமற்றபடி ஓரளவு சுத்தமாகவும்சிறப்பாகவும் பராமரிக்கப் பட்டுவரும் நிறுவனம்ஆனால் இப்போது சொல்லப் போவது நிறுவன நிர்வாகம் குறித்த விமரிசனம் அல்ல.  அங்கு ஏற்பட்ட மாறுபட்ட உணர்வுகள்.


*****
யாருக்கு உடம்பு சரியில்ல?”
என் வீட்டுக்காரருக்கு அம்மா!” 
என்ன ஆச்சு?”
ரோடு ஆக்ஸிடண்ட்தலைலே அடி..”
கவலைப் படாதீங்க.. கடவுளை வேண்டிக்குங்க.. சரியாயிடும்..”
கடவுளை வேண்டி என்ன பிரயோசனம்?  காலைலே உயிர் போயிட்டுது.  அப்பா பணம் கட்டி பாடியை எடுக்க ஏற்பாடு செய்ய வெளியே போயிருக்காரு...”

*****
மூன்று பேர் கூடி சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்தனர்..
“ நான் சொல்றதைக் கேளு.. அவனுடைய காசு எவ்வளவு இருக்கோ அதில் பாதி வரை செலவு செய்வோம்அதற்குள் சரியாகலைன்னா வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிடலாம்..”  வயதானவர் சொல்கிறார்


பாதி என்ன கணக்கு?  மீதியை உங்களுக்கு வச்சுக்கப் போறீயளா?:” ஆங்காரமாகக் கேட்பவர் நோயாளியின் மனைவி.  வயதானவர் நோயாளியின் அப்பாவாக இருந்திருக்க வேண்டும்

அப்படியில்லம்மா.  கட்டின சம்சாரம் நீ இருக்கேஉனக்கு ஒரு குழந்த வேறே இருக்கு.  நாளக்கே நாங்க இல்லைன்னு ஆயிட்டா நீ பொழைக்க வேண்டாமா! “

*****

சத்தமாக மூசு மூசு என்று அழுதுகொண்டிருந்தாள் அந்த இளம்பெண்.  அக்கம் பக்கத்தில் இருந்த இரண்டொரு குடும்ப உறுப்பினர்களும் கலக்கமாகக் காணப்பட்டனர்.  நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்முடியவில்லை.

இதோ பாருங்கம்மா.. இங்கே இருக்கிறவங்க எல்லாரும் ஐ.சி.யுவிலே சீரியஸ் கண்டிஷன்லே படுத்துக்கிட்டுருக்காங்க.  நீங்க இப்பிடி அழுதீங்கன்னா எல்லாருக்கும் அதைரியமாப் போயிடும்.  மனசைத் தேத்திக்குங்க... யாருக்கு உடம்பு சரியில்ல?"

தன் வீட்டுக் காரர்அல்லது தன் குழந்தை என்று சொல்லப் போகிறாள் அவள் என்று எதிர் பார்த்திருந்த என்னை வியப்புக்குள்ளாக்கிற்று அவள் சொன்ன பதில்.

“ என் மாமியார் திடீர்னு பேச்சு மூச்சில்லாம படுத்துக்கிட்டு இருக்காங்கய்யா...”

*****
நோயாளிக்கு வயது 81.  அதுவரை ஆரோக்கிய சிகரமாக விளங்கிய அவர் திடீரென்று கொலாப்ஸ் ஆகி விழுந்து விட்டாராம்.  மூளையில் ரத்தக் கசிவு என்று சொன்னார்கள்.  பேச்சு மூச்சில்லாமல் ஐந்து நாளாகப் படுத்திருக்கிறார்.

இரண்டே இரண்டு நபர் மட்டும்தான் பார்த்துவர முடியும் என்ற விதியினால் மன்றாடி அவரைத் தான் போய் முதலில் பார்த்துவிட்டு வந்தாள் அந்த நாற்பது வயதுப் பெண்மணி  பயங்கரமாக அழுகை.  நெஞ்சில் அடித்துக் கொள்ளாத குறைஒரே கண்ணீர் வெள்ளம்  கலக்கம் அசாத்தியமாகத் தெரிந்தது.

தா.. ரொம்பத்தான் கலங்கிப் போறயே... கட்டின பொண்டாட்டி நான் சாதாரணமா இருக்கேன்உனக்கு என்ன “ என்று நோயாளியின் மனைவி சொல்லக் கேட்டதும் அந்தப் பெண்ணை இரண்டாவது முறையாக கவனித்துப் பார்த்தேன்.  என் மனதில் ஒரு குறு குறுப்பு.  அப்படியானால்..  அப்படியானால் இவள் யார்?  அவரது ஆசை நாயகி?  மனதில் விபரீதமாகக் கற்பனை வெள்ளம் கரை புரண்டது.

ஐயோஎனக்கு இவர் மாதிரி யார் செஞ்சிருக்காங்க.. இவரில்லன்னா நான் எங்கேயோ குப்ப மேட்டிலே..”

என் ஆவல் அதிகமானது.  ரொம்ப சாமர்த்தியமாக அருகில் விசாரித்தேன்.

அதுங்களா, இவங்க சீக்காக் கிடக்கிறவரு செஞ்ச உதவியில பெரிய படிப்பு படிச்சு, பெரிய அந்தஸ்துல இருக்குற அம்மா.  பாவம் அவங்களால தாங்க முடியல!”

*****
டாக்டரின் பேச்சில் ஒரு தீர்மானம்ஒரு இறுதித் தன்மை தெரிந்தது.

“ நான் சொல்றதைக் கேளுங்க.. வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போயிடுங்க.. ஆச்சு அஞ்சு ஆறு நாளாச்சுஇன்னும் கட்ட மாதிரி கிடக்காரு.  செலவும் ஏகப் பட்டதா செய்யணும்.  வயசும் ரொம்ப ஆயிடுச்சு..”

நோயாளியின் உறவினர்கள் கேட்பதாக இல்லை

மூன்றே நாட்களில் நோயாளி கம்பீரமாக தானே நடக்காத குறையாக வீல் சேரில் மகாராஜா மாதிரி டிஸ்சார்ஜுக்குப் பின் வெளியேறினார்.
***** 

மோட்டார் சைக்கிள் விபத்தில் அடிபட்ட சின்ன வயசுக்காரர்கள்,  எண்பதுக்குப் பின் திடீரென்று நினைவிழந்து விழுந்த முதியதுகள்நடு வயசில் குடி காரணமாக சிசிச்சை விளங்காமல் போகும் மிடில் கிளாஸ் ஆண்கள் இப்படியாக இந்த உலகம் தனியான குடிமக்களைக் கொண்டு விளங்குகிறது.  சவம் போல காட்சியளித்தவாறு தள்ளு வண்டியில் தீவிர சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகள்ஏதோ விமரிசனப் பார்வை பார்த்தவாறு மூக்கிலும் தொண்டையிலும் குழாய்களுடன் ஒரு வார்டிலிருந்து ஒரு சோதனைச் சாலைக்கு வேறு வார்டுக்கோ செல்லும் கேஸ்கள்நிஜமாகவே உயிர் போனபின் கொல்லைப் புறவழியாகக் காணாமல் போகும் கேஸ்கள்ஒரு நபர் சிவலோகம் சென்றதும் அந்தப் படுக்கைக்குக் காத்திருந்த அதை ஆக்கிரமிக்கும் ஐ.சி.யு நோயாளிகள் என்று விசித்திரமான கலவையுடன் உயிர்ப்புடன் இயங்குகிறது மருத்துவமனை.  அந்தக் காலத்தில் ஒரு சினிமாப் படமே பிடித்து விடலாம் என்ற அளவுக்கு செலவு பிடிக்கும் இந்த இடத்தில் கார்பரேட் சீக்காளிகள்இன்ஷ்யூரன்ஸ் கவர் இருக்கும் அதிர்ஷ்ட சாலிகள்அலட்சியமாக சிகிச்சை பெறுகின்றனர்.  அப்படி அல்லாத துர்ப்பாக்கியசாலிகள்பையையும் பாங்க் பாலன்ஸையும் சரிபார்த்தவாறு கணக்குப் போட்டு செலவு செய்கின்றனர்.  வீடு மனை போன்றவற்றை விற்றாலும் கட்டு படியாகாத சிகிச்சை செலவுக்கு சரிக்கட்ட கஷ்டப்பட வேண்டும் என்ற அளவில் இருக்கும் மருத்துவச் செலவுகள் என்னைத் திகைக்க வைக்கின்றன.

அரசு ஓரிரண்டு மருத்துவமனைகளையாவது நல்ல நிலையில் பராமரித்து அதன் புகழை நிலை நாட்டினால்நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டு.