வெள்ளி, 2 ஜூலை, 2010

மாறு திசை.

திசைகளுக்கும், எங்களுக்கும், நெருங்கிய தொடர்பு ஒன்று உண்டு. எங்கள் ஆசிரியர் குழுவில் முதன் முதலில் வலைப்பூக்களை வட்டமிட ஆரம்பித்த ஓர் ஆசிரியர் ஒரு பிரபல வலைத் தளத்தில் எழுதிய முதல் பதிவு, ஆரம்பப் பாடங்கள்   என்பது. இது திக்குத் திசைகளைக் குறித்த அந்த ஆசிரியரின் மயக்கத்தை தெளிவாகக் கூறியது. ஒருவகையில், இது பிரசுரமான ஒரு வாரத்திற்குள், எங்கள் ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்கிற உந்துதல் தோன்றி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கினோம்.

பிரியமுடன் வசந்த் அவர்கள் அவருடைய பதிவில், 'மாறுதிசை' என்ற தலைப்பில் எங்களை எழுத அழைப்பு விடுத்திருப்பதைப் பார்த்தவுடன் எங்களுக்கு, இந்தப் பொருத்தம்தான் உடனே நினைவு வந்தது.

பிரியமுடன் வசந்த் அவர்களின் படைப்பாற்றலும், அவருடைய வித்தியாசமான சிந்திக்கும் திறனும் நம் வாசகர்களில் பெரும்பாலோருக்கு நன்கு தெரிந்திருக்கும். இதுவரை அனுபவித்திராதவர்கள், அவருடைய கற்பனை  ஆழத்தை படியுங்கள். இந்தப் பதிவில், அவர் இட்டிருந்த ஆறாவது தலைப்பு + விளக்கம் இது :


"ஆறாவது தலைப்பு " 


இந்த உலகம் சுற்றும் திசையில இருந்து ஆப்போசிட் திசையில சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் இது பற்றி எழுதப்போறவங்க எங்கள் பிளாக்...

தலைப்பு மாறுதிசை.."


இப்போ நம் வாசகர்களை மாறுதிசையில் அழைத்துச் செல்கிறோம்.


இந்த உலகம் சுற்றும் திசையிலிருந்து, ஆப்போசிட் திசையில் சுற்றும்போது ....
இதில் சூரியன் மேற்கே உதித்து,  கிழக்கே மறையும். இதில் ஒரு குழப்பமும் இல்லை.

சரித்திர, புராண, சமூகப் படங்களில் எப்பவுமே ஒரு வசனம் வரும். தமிழில் சூளுரைக்கும் நாயகன் அல்லது நாயகி, "கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதித்தாலும் .......நான் நிலை மாறமாட்டேன் .... / உன்னைக் கை விடேன் / இதிலிருந்து பின் வாங்கமாட்டேன் / " என்று வீர வசனம் உதிர்த்து கைதட்டல், விசில் ஆகியவற்றைப் பெற்றுவந்தவர்கள், நிலை மாறுவார்கள், கை விடுவார்கள்,  பின் வாங்குவார்கள். கொஞ்சம் குழப்பம் ஆரம்பம்.

காலையில் கிழக்கு வெளுத்தவுடன், ஊருக்கு கொக்கரக்கோ என்று கூவி விடியலை அறிவிக்கும் சேவல் கிழக்கே சூரியனை காலையில் காணாததால், மௌனவிரதம் காக்க நேரிடலாம். அல்லது மாலையில் கொக்கரக்கோ என்று கூவி, அதுவும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பக்கூடும். முன் காலத்தில் கோழி கூவியவுடன் படுக்கை விட்டு எழுந்தவர்கள் இந்தக் காலங்களில் கோழி கூவியவுடன் படுக்கப் போகலாம்.  

சூரியன் இருக்கும் பக்கம் எல்லாம் (சூர்யாவைப் பார்க்கும் ஜோதிகா போல), 'சூ மந்த்ரக்காளி போட்டு சுத்த வைக்கிறே....' என்று பாடிக்கொண்டு சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியகாந்திப்பூ - குறிப்பிட்ட நாளிலிருந்து தலையை ஆப்போசிட் திசையில் சுற்ற ஆரம்பித்து கழுத்து சுளுக்கிகொண்டு, அயோடெக்ஸ் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

'கிழக்கே போகும் ரயில்' என்னும் படத்தை இயக்குனர் ராஜபாரதி ரீ-மேக் செய்து, 'மேற்கே போகும் மெயில்' என்று புதுப்பெயர் இடலாம். 'கிழக்கு வெளுத்ததடி, கீழ் வானம் சிவந்ததடி' என்பது போன்ற பாடல்களை, 'மேற்கு வெளுத்ததடா மேல் வானம் சிவந்ததடா' என்று மாற்றிப் பாட வேண்டியது இருக்கும்.

ஆரம்பப் பள்ளி நாட்களில் நமக்குக் கிடைத்த பாடம், காலையில் நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு. இதன் படி பார்த்தால், இதுநாள் வரை வடக்காக அறியப்பட்ட திசை தெற்கு ஆகிவிடும். தெற்கு என்று இவ்வளவு நாள் அறியப்பட்ட திசை வடக்கு ஆகிவிடும்.

'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று சொல்லி வோட்டு கேட்ட அரசியல் வாதிகள், 'வடக்கு வாடுகிறது, தெற்கு செழிக்கிறது' என்று சொல்லி வோட்டு கேட்பார்கள்.  தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஹிந்தியில் பேசி, பாடி, சிரித்துக் கொண்டு இருப்பார்கள். வட மாநிலத்தவர் ஹிந்தி எதிப்புப் போராட்டங்கள் நடத்துவார்கள் !!

பூமி இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் சுற்ற ஆரம்பிக்கும் பொழுது முன்பு இருந்த வேகம் இருக்காது. வேகம் கொஞ்சம் குறையும். அப்போ வாரத்திற்கு ஏழு நாள் என்ற கணக்கு குறைந்து, ஆறுநாள் என்று வந்துவிடும். எங்கள் ப்ளாக் பதிவில், வார நாட்களில் எதை கட் பண்ணலாம் என்று படைப்பாற்றல் போட்டி வைக்கலாம். அந்த கால நிலை மாற்றங்களை சாதகமாக எடுத்துக் கொண்டு, மணி, நாள், மாதம் வருடம் ஆகியவற்றிற்கு மெட்ரிக் அளவு முறை கொண்டு வர சொல்லி, எங்கள் சார்பில் வற்புறுத்துவோம்.

10 வினாடி = 1 நிமிடம்.
10 நிமிடம் = 1 மணி.
10 மணி = 1 நாள்
10 நாள் = 1 மாதம்
10 மாதம் = 1 வருடம்.


(இப்பவும் எல்லோரும் தெளிவாகத்தானே இருக்குறீங்க? குழப்பம் ஒன்றும் இல்லைதானே?!)


'மாறுதிசை' தலைப்பில் தொடர் பதிவு எழுத, நாங்கள் அழைக்க நினைக்கின்ற இரு பதிவர்கள் 'ஸ்ரீ மாதவன், விஜய்' இருவரும் அழைப்பை ஏற்றுக் கொள்வதை, இதில் பின்னூட்டம் பதிந்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும். 

25 கருத்துகள்:

  1. குழப்பம் இலையே என்று தெளிவா குழப்பிடிங்க...

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் உங்கள் கற்பனா சக்தி வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. //'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று சொல்லி வோட்டு கேட்ட அரசியல் வாதிகள், 'வடக்கு வாடுகிறது, தெற்கு செழிக்கிறது' என்று சொல்லி வோட்டு கேட்பார்கள். தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஹிந்தியில் பேசி, பாடி, சிரித்துக் கொண்டு இருப்பார்கள். வட மாநிலத்தவர் ஹிந்தி எதிப்புப் போராட்டங்கள் நடத்துவார்கள் !!//

    இதுமட்டும்தான் குழப்பம் தெளிவுபடுத்த எழுதிய ஆசிரியர் அன்புடன் அழைக்கப்ப்டுகிறார்...

    மற்றபடி மீதியிருப்பவைகளில் கொக்கரக்கோவும் கிழக்கேபோகும் ரயில், சூரியகாந்தி எல்லாம் ரசிச்சு படிச்சேன் சார்

    நல்ல அனுபவிச்சு எழுதியிருக்க மாதிரியிருக்கு...

    எழுதுனதுக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  4. அப்போ வாழ்நாளின் காலமும் கூடும்தானே !

    பதிலளிநீக்கு
  5. கிழக்கே உதிக்கற சூரியன் மேற்கே உதிச்சா வேணா நீ சொல்றது நடக்கலாம்னு எகத்தாளமா வீர வசனம் பேசறவங்க எல்லாம் இனிமே வாய மூடிக்க வேண்டியதுதான்னு சொல்லுங்க.

    வாஸ்து சாஸ்த்திரம் இனிமே எப்படி எல்லாம் மாறும்???? நாட்டுல, வாஸ்து பிரகாரம் வீட்டை இடிச்சு மாத்தி கட்டினவங்க எல்லாம்....... நெனச்சா இப்பவே கண்ணை கட்டுதே!

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே நல்லா இருக்கு.. நல்லா கற்பனை. ஆனாலும், பூமி சுற்றிவரும் வேகம் ஆறில் ஒரு பங்காக குறையும் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி.. முயற்சிசெய்கிறேன்.
    மெட்ரிக்முறை -- ஹா.. ஹா. ஹா..

    //வாஸ்து சாஸ்த்திரம் இனிமே எப்படி எல்லாம் மாறும்???? நாட்டுல, வாஸ்து பிரகாரம் வீட்டை இடிச்சு மாத்தி கட்டினவங்க எல்லாம்....... நெனச்சா இப்பவே கண்ணை கட்டுதே!//
    சூப்பர், மீனாக்ஷி.

    பதிலளிநீக்கு
  7. என்எஸ்கே பாட்டும் மாறும்: கீழ் நாட்டு நாகரீக கொமரியப் பாரு.

    பதிலளிநீக்கு
  8. கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பர்களே

    அழைத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  9. ப்ரியமுடன் வசந்த் கேட்ட கேள்விக்கு, பதிவில் இருந்து பதில்.
    // ஆரம்பப் பள்ளி நாட்களில் நமக்குக் கிடைத்த பாடம், காலையில் நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு. இதன் படி பார்த்தால், இதுநாள் வரை வடக்காக அறியப்பட்ட திசை தெற்கு ஆகிவிடும். தெற்கு என்று இவ்வளவு நாள் அறியப்பட்ட திசை வடக்கு ஆகிவிடும்.//
    சூரியன் மேற்கில் உதிக்கின்ற நாளில், நாம் சூரியனைப் பார்த்து நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு. (முன்பு சூரியன் கிழக்கில் உதித்த பொழுது இருந்த தெற்கு)
    விளக்கம் : இந்தியாவின் தென் மாநிலம் என வழங்கிவருகின்ற தமிழ்நாடு, தெற்குதிசை வடக்கு திசையாக மாறிவிடுவதால், வடமாநிலம் என்று ஆகிவிடும். வடமாநிலங்கள் = தென் மாநிலங்கள் என்று பெயர் பெற்றுவிடும். எங்கள் பதிவின் முக்கிய இலட்சியம், வாசகர்களைத் தெளிவாகக் குழப்பவேண்டும் என்பதுதான். வசந்த் உட்பட எல்லோரும் குழம்பிவிட்டார்கள் என்பதை அறியும்போழுது பிறவிப் பயன் அடைந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. முக்கியமா, இப்ப நேரத்தில மட்டும் நம்ம பின்னாடி வர அமெரிக்கா, அதிலேயும் முன்னாடி போய்க் கொண்டிருக்கும் என்ற விஷயத்தை விட்டுட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  11. இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால தொலைபேசிக் கோளாரு சரியாப் போச்சு. இணையத்துக்கு வந்து எங்கள் ப்ளாகைப் பார்த்தால்,''மாறிய திசைகள் '' திகைக்க வைக்கிறது.சாதாரணமாகவே சமுத்திர அலைகள் பவுர்ணமிக்கும் ,அமாவாசைக்கும் ஆட்டம் போட்டு நம்மைக் குழப்பும். இந்தப் பதிவைப் படிச்சதும் ,ஷஷ்டி திதி அன்னிக்கே அந்த நிலமை வந்துடது;)

    பதிலளிநீக்கு
  12. கருணாநிதி காலத்துக்கு பின் பண்ணுங்க இல்லேன்னா அவர் விட மாட்டார். உதயசூரியன் அப்புறம் என்ன ஆகறது ?

    பதிலளிநீக்கு
  13. அனானி, கிழக்குத் தொடர்ச்சி (?) மலைகளை விட மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்நீளமானவை, உயரமானவை என்று பூகோள ஆசிரியர் அந்தக் காலத்தில் சொல்லிக்கொடுத்தார் எனவே, மேற்கில் சூரியன் உதிக்கும் காலத்தில், நாம் காண்பது உண்மையான உதயசூரியன் (மலைகளுக்கு நடுவில்) என்றுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. //# meenakshi (101)
    # அப்பாதுரை (98)
    # சாய்ராம் கோபாலன் (90) //

    அட பாவிங்களா, எங்கள் குடும்பம்தான் வேறவேலை இல்லாம இதை செய்கின்றது என்பது போலே இருக்கே ? எடுங்க சார் !! அப்பாலிக்க நான எஸ்கேப் ஆகிடுவேன் !

    பதிலளிநீக்கு
  15. //கருணாநிதி காலத்துக்கு பின் பண்ணுங்க இல்லேன்னா அவர் விட மாட்டார். உதயசூரியன் அப்புறம் என்ன ஆகறது ?//

    உதய சூரியன், அப்பவும் உண்டு.. என்ன வித்தியாசம்ன, அது மேற்கில் தோன்றும் உதயம்.

    பதிலளிநீக்கு
  16. http://madhavan73.blogspot.com/2010/07/blog-post.html
    தொடந்துள்ளேன்.. மென்மேலும் தொடர 'எங்கள்'(உங்கள்) ந வாழ்த்தும் ஆதரவும் வேண்டுகிறேன். மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. மாதவன் - சுருக்கமாக, சுவையாக எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  18. ஒரு பகலுக்குப் பத்து மணி, இரவுக்குப் பத்து மணி என்று கொண்டால் கூட ஒரு அளவுக்கு தற்போதைய நாளும் நீங்கள் சொல்லும் தசம திட்டமும் ஒத்துப் போகலாம். ஆனால் ௧௦ நாளில் ஒரு மாதமும், ௧௦ மதங்களில் ஒரு வருடம் என்பதும் நடவாத காரியம். அப்பொழுதும் சூரியனை சுற்ற இதே தற்போதைய ௮௦௦௦ மணி நேரம் தான் என்பதால் வேறு அலகுகள் அறிமுகப் படுத்தி அதனால் உலகையே படுத்த வேண்டி வரும்.

    பதிலளிநீக்கு
  19. "எங்கள் said...
    மாதவன் - சுருக்கமாக, சுவையாக எழுதி உள்ளீர்கள். நன்றாக உள்ளது."

    ----- thanks 'engal' for your appreciation.

    பதிலளிநீக்கு
  20. >>எல்லோரும் குழம்பிவிட்டார்கள் என்பதை அறியும்போழுது பிறவிப் பயன் அடைந்த மகிழ்ச்சி

    நம்ம கட்சி!

    பதிலளிநீக்கு
  21. "அந்திச் சூரியன்" என்பது கட்சிச் சின்னமாகலம்.

    டி ராஜேந்தர் அவரது புது படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு யோசிக்கமால் "இது கிழக்கில் தோன்றும் உதயம்" என்று remix பாட்டு எழுதலாம்.



    நான் வாழும் தலம் வடபழனியாக இல்லாமல் தென்பழனியாகி விடும்.



    திசை மாறிய பிறகு இது எல்லாம் பழகிப் போகலாம்.



    ஆனால் திசை மாறுகின்ற தருணம் / காலம் இருக்கிறதல்லவா அதை யோசித்தால் தான் கொஞ்சம் பயமாயிருக்கிறது. தடாலென்று ஆகாமல் நாம் சுதாரிக்கிற அளவில் ஆனால் நன்று..



    மாறுகின்ற தருணம்/ காலத்தை வைத்து மேலும் கற்பனைகள் செய்யலாம்....



    பூமி திசை திரும்பும் நேரத்தில் சோனியா ஜி இத்தாலி செல்ல ஏறிய விமானம் ஒன்பது மணி நேரம் கழித்து எங்கே லேன்ட் ஆகும் சொல்லுங்கள்?



    இஸ்லாமாபாத்.....? அது வேண்டாம்



    ஆப்கானிஸ்தான்......? அதுவும் வேண்டாம்.



    ஈராக்? இஸ்ரேல்? .......... என்ன கொடுமை சார்.....



    பேசாமல் டில்லியிலேயே இறக்கி விட்டுடலாம். இங்கு தான் UPpmA அரசு நடத்த முடியும் !!

    பதிலளிநீக்கு
  22. ச்சே இவ்வளவு இழுவையான ஒரு comment-ஆ போயிடுச்சே..

    பதிலளிநீக்கு
  23. மோ சி பாலன் வாங்க வாங்க. இழுவையான கமெண்ட் இல்லை; இன்சுவையான கமெண்ட். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!