புதன், 25 ஆகஸ்ட், 2010

எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும்..


முன்பு பேச்சு என்ற தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது. படிக்காதவர்களுக்கு சுட்டி இங்கே

பேச்சு என்பது ஒரு கலைதான். பேச்சில் வளர்ப்பது நட்பையா, பகையையா... பேச்சைப் பொறுத்தது. 

வாதம் விதண்டாவாதம் ஆவதும் உண்டு. அது பற்றி எழுதியது இதோ

அடுத்தது அடுத்தவர்களைப் புரிந்து கொள்வது. 

பேசும்போது சொல்வார்கள். "நீ என்னைப்பத்தி யோசிச்சி பாரு...என் பக்கத்துல நின்னு யோசிச்சிப் பாத்தா தெரியும் உனக்கு..."  

நம்மில் எத்தனை பேர் நம்முடன் விவாதிக்கும் எதிராளியின் பார்வையில் பிரச்னையைக் காண்கிறோம்? நிறையப் பேர் எதிராளி என்ன சொல்கிறார் என்பதையே காதில் வாங்குவது இல்லை. ஒரு சின்ன இடைவெளி எப்போது கிடைக்கும், தான் சொல்லக் காத்திருக்கும் புள்ளி விவரங்களை அடுக்கலாம் என்று காத்திருப்போம்... சுலபமாக மறந்து விடுவது எதிராளியும் அதே நிலையில்தான் இருப்பார் எனபதையும், நாம் சொல்லும் விஷயங்களில் முழு மனத்தைக் கொடுக்காமல் அவர் தனது குறிப்புகளையும், வாதங்களையும் சொல்லக் காத்திருக்கிறார் என்பதையும்.

ஒரு அம்மா தன் மகனிடம் சொன்னாளாம், "டேய் கண்ணா.... இந்த மாதிரிப் பசங்களோட சேராதடா... நல்ல பசங்களாப் பார்த்து சேர்ந்து விளையாடுடா..."

பையன் சொன்னானாம், "அது சரிதான் அம்மா... ஆனால் அவர்கள் (நல்ல பசங்களுடைய) அம்மாக்கள் அந்தப் பசங்களை என்னோட சேர விட மாட்டேங்கறாங்களே...!"

எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரிதான் யோசிக்கிறார்கள்.

உபயோகமற்ற வாதங்களால் இருவர் சொலவதையும் இருவரும் கேட்காமல் தன் பக்கம்தான் நியாயம் என்று மனதினுள் நினைத்து நிம்மதி இல்லாமல் நிற்பதுதான் மிச்சம்.

ஒரு சிறுவன் ஒரு ஐஸ் க்ரீம் கடைக்கு சென்று பெரிய கப் ஐஸ் க்ரீம் விலையைக் கேட்டானாம். இருபது ரூபாய் என்றாராம் கடைக்காரர். தன்னிடமுள்ள காசை எண்ணிப் பார்த்த சிறுவன் சற்று சிறிய கப்பின் விலையைக் கேட்டானாம். கடைக் காரர் சற்றே எரிச்சலுடன் பதினெட்டு ரூபாய் என்றாராம். சரி என்று அதைக் கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டு விட்டு பில் பணம் வைத்து விட்டு சிறுவன் சென்ற பிறகு தட்டைப் பார்த்த கடைக் காரர் நெகிழ்ந்து போனாராம். மூன்று ரூபாய் டிப்ஸ் வைக்கப் பட்டிருந்ததாம்.

கடைக் காரர் நினைத்தது என்ன, சிறுவன் மனதில் ஓடிய எண்ணம் என்ன?

நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்றும் கட்டாயமில்லை...!

விலை உயர்ந்த, அழகிய தன் காரை ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்ற சிறுமியிடம் 'வா ஒரு சுற்று சுற்றி வரலாம்' என்று சொல்லி, காரில் ஏற்றி, சுற்றி வந்து நிறுத்தினாள் அந்தப் பெண்.

"எப்படி இருந்தது..."

"ஆஹா.... ஓடுவதே தெரியவில்லை...உள்ளே பாடலுடன் சுகமாக இருந்தது...என்ன விலை ஆண்ட்டி?"

"எனக்குத் தெரியாது... என் அண்ணன் எனக்குப் பரிசாகக் கொடுத்தது...ஏய்... என்ன அப்படிப் பார்க்கிறாய்? உனக்கும் அபபடி ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறாய்..?"

"இல்லை ஆண்ட்டி... உங்கள் அண்ணனைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்..."

எதிர்பார்ப்புகளுக்கும் எண்ணங்களுக்கும் என்னவொரு வித்யாசம்? 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.    
     

13 கருத்துகள்:

  1. aduthavanga pesaratha purinjikitu enna solla varanganu terinjikitu pesina mukkavasi sandai varathu

    பதிலளிநீக்கு
  2. எல்லா சம்பவங்களிலும், சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குது... தொகுத்து தந்த விதம், அருமை. Good post!

    பதிலளிநீக்கு
  3. அணைத்து விஷயங்களும் சிந்திக்க வைத்தது...அந்த சிறுமியின் பதில் நான் சற்றும் எதிர்பார்க்காதது

    பதிலளிநீக்கு
  4. //நம்மில் எத்தனை பேர் நம்முடன் விவாதிக்கும் எதிராளியின் பார்வையில் பிரச்னையைக் காண்கிறோம்? //

    சிந்திக்க வைக்கும் கேள்வி.

    // உங்கள் அண்ணனைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்...//

    சிறுமியின் பதில் அற்புதம்.

    மிக நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. நம் எண்ணங்களைப் புரிய வைக்க நமக்குப் பொறுமையும், கேட்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் நிறையவே பொறுமையும் வேணும்.
    நமக்காகத் திறக்காத மனத்திடம் என்ன சொல்லியும் பிரயோஜனமில்லை. நல்ல பதிவு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. "இல்லை ஆண்ட்டி... உங்கள் அண்ணனைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்..."

    இந்த வார்த்தை மனசுல நிக்குது..

    பதிலளிநீக்கு
  8. குட்டி கதைகளும் கருத்துக்களும் ரெம்ப நல்லா இருக்குங்க... இந்த மாதிரி கேட்டு ரெம்ப நாள் ஆச்சு.. சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. டிப்ஸ் எங்களுக்கும் தந்திருக்கிறீர்கள்.
    எல்லாமே புத்தி சொல்லுது !

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு.
    //நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்றும் கட்டாயமில்லை...!//
    உண்மை!

    நம்மை ஒருத்தர் புரிஞ்சுக்கணும்னா மனம் விட்டு பேசினாதான் முடியும். அப்படி நம்மை புரிஞ்சுண்டவங்க கிட்டதான் நாம மேலும் மேலும் பேசவும் முடியும், பழகவும் முடியும். இது இல்லாது போனால் பேசாம கம்முன்னு இருக்கறதே மிக மிக நல்லது.

    பதிலளிநீக்கு
  11. உண்மை LK, நன்றி.
    பாராட்டுக்கு நன்றி Chitra, Gayathri,
    ரசனைக்கு, பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி,
    செய்வோம் Tamilulagam, நன்றி,
    கருத்துக்கு நன்றி துரை,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிசிம்ஹன்,
    வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி பதிவுலகில் பாபு,
    அடிக்கடி வாங்க அப்பாவி, பிடிக்காதுன்னு ஒதுங்கிடாதீங்க,
    நன்றி ஹேமா, ரொம்ப நாளாய் பதிவு ஒன்றும் போடாம இருக்கீங்க..சுகயீனம் சரியாகி விட்டதா?
    சரியாச் சொன்னீங்க meenaakshi, உண்மை.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பதிவு.
    ஐஸ் க்ரீம் சிறுவன் சரியான சாட்டையடி.

    பை தி வே..... நான் கூட எதிர்பார்த்தேன் - இந்தக் கார் ஓட்டும் பெண்ணின் படத்தை திரு ஜெ வரைந்திருக்கலாம் என்று. ஹி ஹி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!