திங்கள், 21 பிப்ரவரி, 2011

ஆனந்த அதிர்ச்சி 01

               
அனந்தராமனுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்!    
                        
கொஞ்ச நாட்களுக்கு முன் பொழுது போகாமல் தொலைக்காட்சியில் சானல்களை மாற்றிக் கொண்டிருந்தார்.  அப்பொழுது தொலைபேசியில் யாரோ அழைக்கவும் தொலைக்காட்சியை மௌனம் காக்க வைத்து விட்டு, தொலைபேசியில் பேசியவர் சொன்ன விவரங்களைக் கையில் இருந்த பேப்பரில் குறித்துக் கொண்டார். பிறகு தொலை பேசியில் தொடர்பு கொண்டவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பின நினைவு. பிறகு அதைப் பற்றி அறவே மறந்தும் போனார். சென்ற வாரம் நண்பருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு பார்சல் வந்து சேர்ந்தது. கொண்டு வந்தவர், பணம் மூவாயிரத்து நூறு வங்கிக் கொண்டு பார்சலைக் கொடுத்து விட்டுப் போனார். ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்றறிந்த அனந்தராமன்,  அதை நண்பர் முன் வெளிப்படுத்த வேண்டாம் என்று தாம் ஏதோ அந்தப் பார்சலை எதிர் பார்த்திருந்த மாதிரி ஒரு பாவனையுடன் அதைக் கொண்டு போய் உள்ளே வைத்து விட்டு வந்தார்.  நண்பருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். நண்பர்  கிளம்பிப் போன பின், மனைவியைக் கூப்பிட்டு விசாரித்தார். முன்னொரு சமயம் தொலைக்காட்சியில் தங்க வேட்டை நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் முப்பத்தியாறு குறுஞ்செய்தி அனுப்பின மாதிரி முட்டாள்தனமான காரியம் எதுவும் செய்திருக்கவில்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டார். பின் பார்சலில் என்ன தான் இருக்கும் என்ற குறு குறுப்பில் அதைப் பிரிக்கவும் செய்தார்.    
                          
உள்ளே இருந்த பொருள்கள் பார்த்து ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மறு புறம் இது யாருடைய வேலையாக இருக்கக்கூடும் என்ற கேள்வியுடன் தொடர்ந்தவர் உள்ளே இருந்த கடிதத்தில் அவரது பெயர், தொலை பேசி எண் இவற்றைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டார். பின் ஒரு மாதிரியாகத் தாம் ஒரு பேப்பரில் குறித்த எண்ணுக்குத் தம் பெயர் விலாசம் இவற்றை குறுஞ்செய்தியாக அனுப்பியதும் நினைவுக்கு வந்தது.              
                       
உள்ளே இருந்தது ஒரு தாயத்து. சனிக்கிழமை ஒன்பது முதல் பத்தரை தவிர எந்த நேரத்திலும் ஒரு சின்ன பூஜை செய்து விட்டு பின்னர் அணிந்து கொள்ளலாம். அணிந்த சிறிது நேரத்திலேயே நல்ல செய்தி உங்களைத் தேடி வருவது கண்டு ஆனந்தமடைவீர்கள் என்ற குறிப்பு வேறு! ஒரு தட்டில் வைத்து சாமி படத்துக்கு ஒரு பூ போட்ட பின் ஒரு கல்பூர வில்லையையும் ஏற்றி ஆரத்தி காட்டினார். அதற்குப் பின் தாயத்தை எங்கே கட்டிக்கொள்ளலாம் (கழுத்தில்? கையில்? இடுப்பில்?)  என்று சற்று யோசனை செய்த பின், இடுப்பு நல்லது. நிறையப் பேருக்குப் பதில் சொல்வதைத் தவிர்க்கலாம் என்று இடுப்பில் கட்டிக்கொண்டார்.    
           
அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கொடுத்த அதிர்ச்சிகளிலிருந்து மீண்டு, பழைய அனந்த ராமனாக மாற அவருக்கு சற்று  காலம் பிடித்தது. அப்படி என்னதான் நடந்தது என்கிறீர்களா - ஆனந்த அதிர்ச்சி இரண்டாம் பதிவில் சொல்கிறேனே.
 
(அப்படி என்ன நடந்திருக்கும், எதனால்  என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.  சரியான யூகம் செய்பவர்களுக்கு பாயிண்டுகள் அளிக்க பதிவாசிரியர் தயாராக உள்ளார்.)
        

10 கருத்துகள்:

  1. தெரியல. நாம ஏதாவது ஒரு காரணம் சொல்லி அது நகைப்புக்குரியதாய் ஆயிடுச்சுன்னா என்ன பண்றது.

    பதிலளிநீக்கு
  2. இதை எல்லாம் இன்னுமா நம்புறாங்க மக்கள்..:))

    பதிலளிநீக்கு
  3. என்ன ஆச்சு? அதை வைத்து ட்ரைவேலி யூனிவர்சிட்டி மாதிரி அவர் நடமாட்டங்களை track பண்ணினாங்களா?

    பதிலளிநீக்கு
  4. ரெண்டு நாளு டயம் வேணும்.. அப்புறமா சொல்லுறேன் (சொல்ல டிரை பண்ணுறேன்..)

    பதிலளிநீக்கு
  5. மாதவன்,அப்போ ஆனந்த அதிர்ச்சி அடுத்த பகுதியை, உங்க கருத்துரை வந்தவுடன் பெப்ரவரி இருபத்துநான்கு அன்று வெளியிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. இதுவரைக்கும் ஊகிக்க முடியலை..
    டிரை பண்ணுறேன்.. நீங்க உங்க வசதிப் படி பதிவோட தொடர்ச்சியா போட்டுங்க..

    பதிலளிநீக்கு
  7. யூகிக்க முடியவில்லை. ஒரு வேளை கீதா சொல்வது போல் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  8. நிச்சயமாக அது ஒரு உளவு பார்க்கும் சிறு கருவியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அதை இடுப்பில் கட்டி கொள்ளாமல், கையிலோ, கழுத்திலோ கட்டிக் கொண்டிருந்தால் சூரிய வெளிச்சத்தில் அது தானாகவே ரீ சார்ஜ் ஆகி இருக்கும். சரியா?

    பதிலளிநீக்கு
  9. மன்னிக்கவும், நான் இரண்டாவதாக எழுதி இருக்கும் கமெண்ட் ஆனந்த அதிர்ச்சி இரண்டாம் பதிவிற்கானது. மாற்றி போஸ்ட் செய்து விட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!