செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

நாய் மனம் 1

  
ஆட்டோவில் வைத்து அழைத்துச் சென்ற போது வழக்கம் போலவே இப்போதும் ப்ரௌனி லேசான பயத்துடன் அவன் முகத்தை நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்த படி, அவ்வப்போது லேசாக நக்கியபடி வந்தது.

அவனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது.
        
'தெரிந்திருக்குமோ...? இதெல்லாம் இவைகளுக்கு உள்ளுணர்விலேயே தெரிந்து விடும் என்பார்களே...'   

இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை ப்ரௌனி ஆட்டோவில் பயணித்திருக்கிறது. இரண்டு முறை ப்ளூ க்ராசுக்கு - தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள. ஒரு முறை மாமா வீட்டுக்கு. மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது அது குட்டி. ஆட்டோவில் ஏறவே ஏறாது. இறங்கி ஓடி விடும். ஏற்றி, இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஆட்டோ கிளம்பி விடடால் ஜாக்கிரதை உணர்வுடன் லேசான உடல் நடுக்கத்துடன் மடியில் இருக்கும்.

அழகிய கண்கள் ப்ரௌனிக்கு. கன் திறக்காமல் இருக்கும்போது ரகு கொண்டு வந்து காண்பித்தான். காண்பித்தான் என்பதை விட ஆசை காட்டினான். சின்னவளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

"அப்பா...அப்பா...வீட்டுலையே வச்சிக்கலாம்பா..."

"வேணாம்பா...பல வகைல தொந்தரவு..." முன் அனுபவங்கள் இருந்தன அவனுக்கு.

இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாமல் எங்கேயும் போக முடியாது. அது மட்டும் அல்லாமல் அதன் காலம் முடியும்போது மனதுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.

பெண் கேட்பதாக இல்லை. அம்மாவின் சிபாரிசு பிடித்தாள் . அவளுக்கும் உள்ளூர ஆசை இருந்திருக்க வேண்டும்.

"ஏண்டி...அவதான் கேட்கிறாள்ன்னா....உனக்கு பழைய அனுபவம் ஞாபகமில்லையா.."

அவள் அப்பா செத்ததுக்குப் போகும் போது வீட்டில் அப்போது இருந்த செல்லத்தை என்ன செய்வது யாரிடம் விட்டுப் போவது என்று நின்றது ஒரு அனுபவம்.

ஆனாலும் மெஜாரிட்டி வென்றது. அவனுக்கு நாய்கள் எப்போதுமே இஷ்டம். முன் ஜென்மத்தில் அவன் நாயாக இருந்திருப்பானோ என்னமோ என்று நினைத்துக் கொள்வான்.

அழகிய கண்களுடன் அழகாக வளர்ந்தது. ஒரு கயிறு கட்டி பழக்கினான் பையன். நாயைக் கட்டி வளர்ப்பது சரியா என்று சில சமயம் தோன்றும். சுதந்திரமாய் திரிய வேண்டியவற்றை கட்டி வைத்து கொடுமை செய்கிறோம் என்று தோன்றும்.

நல்ல சாப்பாடு வேளா வேளைக்கு போடறோமே... என்பாள் மனைவி...என்பான் பையன்... என்பாள் பெண்!

ஏதோ சமாதானங்கள்.

குட்டி நாய் செய்யும் சேட்டைகள் கண்கொள்ளாக் காட்சி. முன் கையை தூக்கி ஆட்டி ஆட்டி அது விளையாட வரும் அழகு...

குதித்து உருண்டு புரண்டு செய்யும் அட்டகாசங்கள்....பெரிதாய் வளர்ந்தும் கூட அது மடியில் வந்து அமர்ந்து கொண்டாடும் சொந்தம்...அப்பப்பா...மனிதர்களை எப்படி அன்பினால் கட்டிப் போடுவது என்று நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன இவைகள்.

அவர்கள் இதை நாய் என்று என்றும் சொன்னதில்லை. ப்ரௌனிதான்... பெண் நாய் வேறு எனவே அவள் இவள்தான்..!

"ஏங்க நாட்டு நாய் மாதிரியிருக்கு..."

"அட...டர்னா வெரைட்டிங்க..." என்பான் ..அது ஒரு வகை என்று நினைத்து விட்டு விடுவார்கள். தெரு நாய் என்பதைத்தான் 'டர்னா' என்று சொல்லப் பழக்கியிருந்தான்..
----------------------

நினைவிலிருந்து மீண்டான்.

தெரிந்த ஆட்டோக்காரர். ப்ளூ கிராசில் விடலாம் என்ற போது நண்பர்கள் சிலர் உடம்பு சரியில்லாத நாயைத்தான் அவர்கள் எடுப்பார்கள் என்றார்கள்.

டிராஃபிக் இல்லாத இடமாகத் தேடினார்கள்.

ப்ரௌனி சுற்றுமுற்றும் இரைக்க இரைக்க பார்த்த படியே வந்தது. அவனையும் அடிக்கடி திரும்பி திரும்பிப் பார்த்தது.

"எவ்வளவு நம்பினேன் உன்னை.." என்று கேட்கிறா மாதிரி இருந்தது. 'நிச்சயம் தெரிந்திருக்கும் நான் செய்யப் போகும் துரோகம்' என்று நினைத்துக் கொண்டான். அதை பார்ப்பதைத் தவிர்த்தான். கண் கலங்கினா மாதிரி இருந்ததாகத் தோன்றியது... அது இவன் கையை வேக வேகமாக இருமுறை நக்கியது!

"நீ சமர்த்தா இருந்திருக்கணும்....பக்கத்து வீட்டு கோழியைக் கடிச்சே..பையன்களோட ஃ பிரெண்ட்ஸ் ரெண்டு பேர் மேல பல்லு வச்சே... ஆம்பளை நாய் சிநேகம் வேற..."

மனைவி அதனிடம் சொல்வது போல தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

முன்னர் ஒருமுறை வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக இதை நண்பர் ஒருவரிடம் விட்ட போது கண் கலங்கி அழுதவள் இவள்..."பொண் குழந்தை...! வெள்ளிக் கிழமையும் அதுவுமா எனக்குத் தெரியாம யார் கிட்டயோ கொடுத்துட்டீங்க...நான் ஏதோ சும்மா சொன்னேன்.." என்றவள்...

அந்த நண்பர் இதை வைத்துக் கொள்ள முடியாமல் மறுநாளே கொண்டுவந்து விட்ட போது நிம்மதியாகத்தான் இருந்தது.

இப்போது அந்தச் சமாதானங்கள் எல்லாம் இல்லை. விட்டு விடலாம் என்று ஒரு மனதாய்த் தீர்மானம். பையனும் பெண்ணும் அவ்வளவு கஷ்டப் பட்டா மாதிரி தெரியவில்லை.

ஒரு மாதிரி அலைந்து வண்டி நடமாட்டம் இல்லாத இடமாக நிறுத்தினார்கள்.

அவனுடைய சகோதரி ஃபோன் செய்தாள். அவளுக்கும் அவனைப் போலவே நாய்களிடமும் கூடுதலாகப் பூனைகளிடமும் கொள்ளைப் பிரியம்.

வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தவள் வேறு வழி இல்லை என்ற போது கோப சோகத்துடன் சமாதானமானாள். இப்போது பேசியவள்,

"தனி இடம் தனி இடம்னு ஆள் இல்லாத இடத்துல அவளை விட்டுட்டு வராதடா...சாப்பாட்டுக்கு என்ன செய்வாள்..." என்றாள்.

கஷ்டமாகத்தான் இருந்தது. தண்ணீரே பார்க்காத நாய்களைக் கூட திடீரென தண்ணீரில் தூக்கிப் போட்டால் அவை நீச்சலடித்து வந்து விடுவதைப் பார்த்திருக்கிறான். அவை எங்கே போனாலும் பிழைத்துக் கொண்டு விடும் என்று தேற்றிக் கொண்டான்.

முதலில் இறங்க மறுத்தாள் ப்ரௌனி. ஆட்டோவிலேயே அமர்ந்து சுற்றுப் புறம் ஆராய்ந்தாள்.

'இங்கதான் என்னை விடப் போறியா' என்பது போல அவனை ஒரு பார்வை, 'இதுதான் இனி நான் வாழ வேண்டிய இடமா' என்பது போல அந்த இடத்தை ஒரு பார்வை....

அவன் இறங்கி சற்று தூரத்தில் நின்று கொண்டான்.

மெல்ல இறங்கினாள். இங்கும் அங்கும் நடந்தாள். அவன் அருகில் வந்தாள். ஏதாவது ஆச்சர்யகரமான சமிஞையை எதிர்பார்த்தான் போலும். அவள் அவனைக் கடந்து போனதும் கொஞ்சம் ஏமாந்தான். இன்னும் கொஞ்ச தூரம் போய் அவனை திரும்பிப் பார்த்தாள். இன்னும் மெல்லோட்டமாக ஓடினாள்.

இவன் 'சட்'டெனத் திரும்பி ஆட்டோவில் ஏறினான்.

"திரும்பிப் பார்க்காம வாங்க சார்" - ஆட்டோக் காரர்.

திரும்பிப் பார்த்தபடிதான் வந்தான். ப்ரௌனி திரும்ப ஓடி வந்தது போலத் தோன்றியது.

ஆட்டோ திரும்பி வேகமெடுத்தது. திரும்பிப் பார்க்கையில் ஒரு பைக் காரன் சடன் ப்ரேக்கிட்டு ப்ரௌனியைத் தவிர்த்துப் பறந்தான்.

மறுபடி அவன் சகோதரி ஃபோன் செய்து நடந்ததைக் கேட்டு தெரிந்து கொண்டாள். ஆறுதலும் சொன்னாள். "அவை எந்த சூழலுக்கும் பழகி விடும்...இது கடவுளின் முடிவு...விடு..."  
    
"நாளைக் காலைல பாருங்க...நம்ம வூட்டு வாசல்ல நிக்கும்..: ஆட்டோக்காரர்.
              
அவனுக்கும் அது நிச்சயம் நடக்கும் என்று தோன்றியது.

ஆனால் .....  
(தொடரும்) 
                      

17 கருத்துகள்:

  1. என்ன தொடரும் போட்டுட்டீங்க:-(

    பதிலளிநீக்கு
  2. \\இவைகள்\\ இது சரியான வார்த்தையா? இவை என்றாலே பன்மைதானே? இவற்றுக்கு என்று சொல்லலாமா?

    தமிழ் தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கஷ்டம் இருப்பதாலேயே செல்லப் பிராணிகள் வீட்டில் வளர்ப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  4. ஆனால்..... ???? முக்கியமான இடத்தில் தொடரும் போட்டு விட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  5. மனசுக்குக் கஸ்டமாயிருக்கு. போன தடவை ஊருக்குப் போனப்போ எங்க வீட்லயும் இதுமாதிரி ஒரு நிகழ்வு நடந்திச்சு !

    பதிலளிநீக்கு
  6. நாயின் மீது இருக்கும் பாசத்தை அருமையாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். முக்கிய கட்டத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே!!

    பதிலளிநீக்கு
  7. //Gopi Ramamoorthy said...

    இந்தக் கஷ்டம் இருப்பதாலேயே செல்லப் பிராணிகள் வீட்டில் வளர்ப்பதில்லை. //

    Same Blood..

    // Chitra said...

    ஆனால்..... ???? முக்கியமான இடத்தில் தொடரும் போட்டு விட்டீங்களே!//

    அதனாலத்தான்.. தொடரும்..
    டி.வி.ல சீரியல் பாக்க மாட்டீங்களா ?

    பதிலளிநீக்கு
  8. தலைப்பே ரொம்ப அருமை. கதையும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருந்தது.. ஏன்னா ஆகும்ன்னு நினைக்கும்போது தொடரும் கார்டு போட்டுட்டீங்க..
    பின்னாடியே ஓடி வந்து குரைக்கிறா மாதிரியே இருக்கு..

    பதிலளிநீக்கு
  10. தெரிந்து விட்டது.
    அடுத்த பகுதி வரட்டும்; சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பனின் நாய்.9 பிப்ரவரி, 2011 அன்று PM 8:13

    லொள் லொள், லொள், லொள் .. கிர்ர்ர் கர்ர்ர்ர்ர் புர்ர்ர்
    (சட்டுன்னு அடுத்த பகுதி வெளியிடுங்க - இல்லாவிட்டி வந்து கடிச்சுடுவேன் ..)

    பதிலளிநீக்கு
  12. கண்டிப்பாக வந்து சேர்ந்திருக்கும். நீங்கள் கொண்டுவிடும் தூரம் அதுக்கு ஒரு மேட்டரே இல்லை. மனிதனை மாதிரி நன்றி மறப்பதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. கே ஆர் விஜயன் இரண்டாம் பகுதி கதை வெளியிட்டிருக்கின்றோமே - படிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!