வியாழன், 31 மார்ச், 2011

எலெக்ட்ரானிக் சாமியார்!

                
ஆசிரியர் குழுவில் ஒருவருடைய நண்பராகிய கே டி ஆர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தொலைபேசியில் கூறிய விவரம் எங்களுக்குப் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

'என்ன சார்! நம்ம இருப்பது இருபத்தோராம் நூற்றாண்டில். நீங்க சொல்வது எதுவும் நடைமுறை சாத்தியம் இல்லை.' என்று சொன்னோம். 

அப்படியும் அவர் எங்களை விடுவதாக இல்லை. 'நீங்க ஒருமுறை வந்து இவரைப் பார்த்து பேட்டி கண்டு - எங்கள் ப்ளாக் ல எழுதுங்க.' என்றார்.

அவர் கூறியதின் சாராம்சம் இதுதான்: எலெக்ட்ரானிக் சாமியார் என்று ஒருவர், இந்தப் பகுதியில் ரொம்பப் பிரபலம். யார் வந்து கேட்டாலும் ஓராண்டுக்குள் என்ன நடக்கப் போகின்றது என்பதைத் துல்லியமாக சொல்லிவிடுகிறார். நம் வாழ்க்கை, நண்பர்கள் பற்றி, நாட்டு நடப்பு, விளையாட்டு, விஞ்ஞானம் எதுவாக இருந்தாலும் சொல்லுகிறார். ஆனால் எதற்கும் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை!

சக ஆசிரியர்கள், 'நமக்கு வேண்டாம் - இந்த வம்பு எல்லாம். எங்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நீ வேணா போய் அந்த சாமியாரைப் பார்த்து, பேட்டி கண்டு வந்து எங்கள் ப்ளாக் ல எழுது.' என்றார்கள்.

நண்பர் கே டி ஆரிடம், அந்த சாமியாரின் இருப்பிடம் பற்றிய தகவல்களை கேட்டு, என்னுடைய நாட் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டேன். இது எல்லாம் நடந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு.

மார்ச் இருபதாம் தேதி, ஞாயிற்றுக் கிழமை அன்று, அந்த சாமியாரின் இருப்பிடத்திற்கு ஒரு ஆட்டோ பிடித்துப் போய் சேர்ந்தேன். இதுவா அந்த அற்புத, ஆச்சரிய, இலவச, எலெக்ட்ரானிக் சாமியாரின் இருப்பிடம்! எனக்கு மிகுந்த ஆச்சரியம்.

வாசலில் பாலாஜி கேட்டரர்ஸ் என்று ஒரு போர்டு. நீண்ட தூரத்திற்கு வெற்று இடம். உள்ள்ள்ளே பின் பக்க காம்பவுண்ட் சுவரை ஒட்டி கூரை வேய்ந்து மண் சுவர்களுடன் ஒரு மிகப் பெரிய குடிசை. அந்தக் குடிசைப் பகுதியின் முகப்பில் யாரையும் காணோம்.

சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, "சார்..." என்றேன். ஒரு நடுத்தர வயது உடையவர் இடது பக்க அறையிலிருந்து வாய் நிறைய வெற்றிலை மென்றவாறு எட்டிப் பார்த்து, 'என்ன வேண்டும்?' என்று சைகையில் கேட்டார்.

கேட்பதற்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. என்றாலும், 'இங்கே எலெக்ட்ரானிக் சாமியார் .... என்று .......' என்று இழுத்தேன்.

அவர் சைகையிலேயே எதிர்ப் பக்கத்தில் (குடிசைப் பகுதியின் வலது பக்க மூலை) உள்ள கதவைக் காட்டி, உள்ளே போகும்படி சைகைக் காட்டினார்.

அந்தக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவுடன் பேராச்சரியம்! வெளி உலகத்திற்கு சற்றும் தொடர்பு இல்லாத பல உபகரணங்கள் அங்கே இருந்தன. அந்த அறையின் ஒரு மூலையில் வடக்கு, தெற்காக ஒரு ஃபெர்ரைட் கட்டில். அந்தக் கட்டில், ஒரு நீண்ட உருளைக்குள் இருந்தது. அந்த உருளைக்கு மேலே, தடித்த காப்பர் கம்பி நெருக்கமாகச் சுற்றப் பட்டிருந்தது.  அந்தக் காப்பர் கம்பியின் ஒரு முனை (வடக்குப் பக்க முனை) குடிசைப் பகுதியின் மேல் பக்கம் சென்றது. மற்ற முனை (தெற்குப் பக்க முனை) மண்ணுக்குள் செலுத்தப் பட்டிருந்தது.   

கட்டிலுக்கு வெகு அருகே ஒரு லாப் டாப் இயக்கிக் கொண்டிருந்த ஒரு தாடிக்காரர், 'வாங்க -------- (என் பெயரைச் சொல்லி). உட்காருங்க. கே டி ஆர் உங்களைப் பற்றி சொல்லியிருந்தார். திரும்பிப் போகும்பொழுது மறக்காமல் உங்கள் மனைவி சொன்ன குக்கர் காஸ்கட் - கடையிலிருந்து வாங்கிகிட்டுப் போயிடுங்க' என்றார்.
          
(இது அவர் இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரிதான் இருந்தார்.)

எனக்கு என் செவிகளையே நம்ப முடியவில்லை. என் மனைவி இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்ன காஸ்கட் - எனக்கே ஞாபகம் இல்லை இவருக்கு எப்படி இது தெரிந்தது!

அது மட்டுமா? ஆஸ்திரேலியா இந்தியா மாட்ச் என்ன ஆகும், செமி ஃபைனலில் என்னென்ன அணிகள் ஆடும், எது ஜெயிக்கும்? எல்லாமே சொன்னார். உலகக் கோப்பை வெல்லப் போவது யாரு' என்பதைக் கூட ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். சட்ட மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிப் பெரும்பான்மை பெற்று யார் முதலமைச்சர் ஆவார் என்பதையும் எழுதிக் கொடுத்தார்.

சாமீ - இதை எல்லாம் எங்கள் ப்ளாக் ல வெளியிடலாமா?  உங்கள் பற்றி, உங்கள் இருப்பிடம் பற்றி, தொடர்பு விவரங்கள் எல்லாவற்றையும் வெளியிட ஆவலாக இருக்கிறோம். நீங்கள் உத்தரவு கொடுத்தால் - என்றோம்.

'கொஞ்சம் பொறுங்கள். உலகக் கோப்பை கிரிக்கட் இறுதிப் போட்டி சனிக்கிழமை, இரண்டாம் தேதி நடக்கின்றது அல்லவா? அதில் நான் எழுதிக் கொடுத்த இரண்டு அணிகள் ஆடுகின்றனவா, நான் எழுதிக் கொடுத்துள்ள அணி வெற்றி பெறுகிறதா - என்பதைப் பார்த்து, அது போலவே நடந்தால், அப்பொழுது நீங்கள் முழு விவரம் வெளியிடுங்கள். அதுவரையிலும், நான் எழுதி இருக்கின்ற குறிப்புகளை இந்தக் கவரை உடைத்து நீங்கள் கூடப் பார்க்கக் கூடாது.'

நேற்று இந்தியா செமி ஃபைனலில் ஜெயித்ததும், அவர் கொடுத்த அரை இறுதி கிரிக்கட் - இரண்டாம் போட்டி - கவரை உடைத்து, அவர் எழுதியிருந்தது அப்படியே நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததைப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் பேராச்சரியம்!

இப்போ இறுதிப் போட்டி நாளுக்காக நாங்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றோம். அதுவும் சரியாக இருந்துவிட்டால், சாமியாரின் படம், இருப்பிடம், முழு விவரங்கள் உடனே வெளியிடுவதாக உள்ளோம்.
                                    

புதன், 30 மார்ச், 2011

உள் பெட்டியிலிருந்து. 2011 03




சுவையான குழப்பங்கள்..
(அ) தண்ணீருக்கு அடியில அழ முடியுமா?
(ஆ) மீனுக்கு தாகம் வருமா?
   
(இ) பறவைகள் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லையே...
   
(ஈ) முழுசா கட்டி முடிச்சிட்ட கட்டிடத்தைக் கூட ஏன் building னு சொல்றாங்க...? (Built என்று சொல்லலாமே! )

(உ) புதுசு, சுவை கூட்டப்பட்டதுன்னுல்லாம் சொல்ற நாய் உணவை யார் டேஸ்ட் செய்து செக் செய்வார்கள்?
       
(ஊ) குரங்குலேருந்து வந்தவன் மனிதன்னா, இன்னும் குரங்கு இருக்கே...

(எ) குடிச்சிட்டு வண்டி ஓட்டறது தப்புன்னா 'பார்' லல்லாம் பார்க்கிங் எதுக்கு...

--------------------------------------------------------------------------

அட...!

அடுத்தவங்க கிட்டேருந்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட, நம்ம கிட்டேயிருந்து நாமே எதிர்பார்த்தா உற்சாகமா முன்னேறலாமே..

-------------------------------------------------------------------------

அடடா...!

மீறப் படாத சத்தியங்கள்..
எழுதப் படாத நினைவுகள்...
உண்மை உறவுகளில்
பல சமயம்
வார்த்தைகள்
பகிரத்
தேவையே இல்லை.

உடைந்த பென்சில்கள்
முடிக்கப் படாத வீட்டுப் பாடங்கள்...
முடித்த வீட்டுப் பாடம்
அழியாமலிருக்க
கையில் ஸ்லேட்டு...
பையில் புத்தகங்கள்....

அந்த சந்தோஷத்தை
இப்போது லேப் டாப்பில் தேடினேன்..
கிடைக்கவில்லை!
நஷ்ட ஈடாக
இதை லேப் டாப்பில்
சேமிக்கிறேன்.
----------------------------------------------------------------------

வானின் கருமேகங்கள் மழையாகப் பொழிவது போல்,
வாழ்வின் கறுப்பு தினங்கள் பிறிதொரு நாளில் இனிய தினங்களாக சந்தோஷத்தைப் பொழியும்.. நம்பிக்கை இழக்காமல், வாழும் வரைப் போராடு..!

------------------------------------------------------------------------

அன்பு மனித நேயத்தைக் காட்டும். சமய சந்தர்ப்பங்கள் உண்மையை வெளிப் படுத்தும்.

----------------------------------------------------------------------------
              

செவ்வாய், 29 மார்ச், 2011

ஜே கே 15

புத்தர் என்ன சொல்லியிருக்கிறார் எனும் திசையில் விவாதம் திரும்புகிறது. அப்போது ஜே கே சொல்கிறார்:
     
ஐயா நான் புத்தரை உதாசீனப் படுத்துவதாகவோ விமர்சிப்பதாகவோ நீங்கள் நினைக்க வேண்டாம். உண்மையில் நான் புத்தர் என்ன சொன்னார் என்று படித்ததில்லை. இந்த பிரச்னைகள் குறித்து எதையும் படிக்கவும் நான் விரும்பவில்லை. அப்படிப் படிக்க முனைந்தால், அங்கு காணப்படுவது உண்மையாக இருக்கலாம். பிரமை ஆகவும் இருக்கலாம். அவை புத்தர் சொன்னதாக அவருடைய சீடர்கள் எழுதி வைத்ததாக இருக்கலாம். (சீடர்கள் குருவை என்ன பாடு படுத்துகிறார்கள் எப்படி ஒருவரது வார்த்தைகள் சின்னா பின்னம் ஆகின்றன என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.) எனவே நான் இப்படிச் சொல்கிறேன். எதைப் பற்றியும் எவர் என்ன சொன்னார் என்பது குறித்து எனக்கு அக்கறை இல்லை. வேதனையில் ஆழ்ந்திருக்கும் ஒருவரை நான் பார்க்கிறேன். கஷ்டங்கள், பால் உணர்வுத் தூண்டுதல்கள் பிறர் இழைக்கும் அக்கிரமங்கள், பயமுறுத்தல்கள் இப்படியான பல பிரச்னைகளால் மனிதன் துவண்டு போவதைப் பார்க்கிறேன். இதற்கு மூல காரணம் "எண்ணங்களே" என்பதைப் பார்க்கிறேன். இதைக கண்டு கொள்ள உலக இலக்கியங்களை நான் படித்து வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அப்படிப் படிக்க முற்பட்டால். எண்ணக குழப்பங்கள் இன்னும் தீவிரம் ஆவது தவிர வேறு விளைவு ஏதுமில்லை.
             

எனவே நான் இப்படிச் சொல்வதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். அவர் சொன்னது, இவர் சொன்னது எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு நாம் கவனிக்கத் தொடங்கலாம். நான் பல தரப்பட்ட மத குருமார்களையும் பண்டிதர்களையும் சந்தித்திருக்கிறேன். அவர் சொன்னது, இவர் சொன்னது, இந்த நூலில் காணப படுவது அந்த சாஸ்திரத்தில் சொல்லி இருப்பது இப்படியாக சொல்லிக் கொண்டு போவது தவிர நேரடி தொடர்பு கொண்டு யாரும் விவாதிப்பது இல்லை. விடாமல் மேற்கோள் காட்டுவது மட்டுமே நடை பெறுகிறது. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நான் அலட்சியம் அல்லது அவமரியதையுடன் நடந்து கொள்வதாக நினைக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.
                    

திங்கள், 28 மார்ச், 2011

குறுஞ்செய்திக் குறும்புகள்!


தேர்தல் களம்:

ஹூம் - நாம இலவசமா இதைத் தருகிறோம், அதைத் தருகிறோம் என்று கரடியாகக் கத்திக் கொண்டு இருக்கோம். ஆனால் - ஒரு பயலாவது வாயத் தொறந்து நான் இலவசமா வோட்டுப் போடுகிறேன் என்று சொல்றானா பாரு! இவங்களைத் திருத்தவே முடியாது! 

கிரிக்கட் களம்:

இதோ பாரு - இவன் பேரு ஓரம். ஆனால் பந்து போட்டா ஸ்டம்புக்கு நேரா போடுவான். இந்தியாவுல ஒருத்தன் இருக்கான் பாரு - அவன் பேரு நேரா. ஆனால் பந்து போட்டா ஓரமாப் போட்டு ஒய்ட் பால் ஆக்குவான்!
(நன்றி விசு. இந்த நன்றியை, உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியவருக்கு ஃபார்வர்ட் செய்துவிடுங்கள்!)

சினிமா களம்:

ஜெயலலிதா தலைமையிலான அ தி மு க அணிக்கு ஆதரவாக விஜயின் மக்கள் இயக்கம் பிரச்சாரம்.

ஜெய விஜயீ பவ(ர்)!

பதிவர் களம்:

'இட்லிவடை' இல் 'முக்கிய அறிவிப்பு' தொடர் பதிவில் "......இந்த வருடம் முட்டாள் தினம் ஏப்ரல் 13 அன்று தான் வருகிறது, நாங்கள் செய்த அறிவிப்பு சும்மா முன்னோட்டம் அவ்வளவு தான்........"

வாசகர் களம்:

(என்ன பார்க்கறீங்க? நீங்கதான் பின்னூட்டத்தில் ஏதாவது குறுஞ்செய்தி குறும்பு சொந்தமாகவோ சுட்டோ எழுதவேண்டும்!)
                           

சனி, 26 மார்ச், 2011

பத்மபூஷன் எஸ் பி பாலசுப்ரமணியம் ஹை





எஸ் பி பி பத்மபூஷன் விருது வாங்கும் படத்தை நேற்று செய்தித் தாளில் பார்த்தேன். யார் இவர் என்று வட நாட்டு ஆட்கள் கேட்க முடியாது ஹிந்தியிலும் கொடி நாட்டியிருக்கிறார் எஸ் பி பி. நான் ரசித்த அவர் பாடல்களில் கொஞ்சம் இங்கே...(முதல் தவணை?)

பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிமை தெரிவதில்லை. மிக, மிக மிகச் சில பாடல்களே காட்சியுடன் இணைந்து ரசிக்க பொருத்தமானவை. இருப்பினும் ஒரு சுவாரஸ்யத்துக்காகவும்,டெக்னாலஜியை உபயோகப் படுத்திக் கொள்ளவும் (!) காட்சியுடன் பாடல்கள் தந்திருக்கிறோம். ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை கேளுங்கள். அது பாடகருக்குக் கொடுக்கும் மரியாதை! இனிமையும் கூட...

இந்தப் பாடல் ஒரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்தும். என்ன பாடல் என்று சொல்ல வேண்டாம்..தமிழில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்தான். (ஆக்கேன் தேரே பாஹோன்மே..)




மாதிரி தீட்சித் ஹிந்தித் திரையுலகின் மூன்றாம் அழகி. Dancing Queen என்று பெயர் வாங்கியவர். இந்தப் பாடலில் எஸ் பி பியின் குரலை ரசிக்கும் அதே நேரம் மாதுரியின் நடனத்தையும் சல்மானின் இளமையையும் கூட ரசிக்கலாம்.தேகா ஹை பெஹலி பார்...


டைட்டில் சாங்'ஆக வரும் பாடல். எஸ் பி பியின் குரலில் இருக்கும் கவர்ச்சியை கவனியுங்கள். (எனக்குப் பிடித்ததை உங்களையும் கேட்க வைக்க என்னென்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு...முழுசா கேட்பீங்க இல்லே...?)


அந்தாஸ் அப்னா அப்னா என்ற நகைச்சுவைப் படத்தில் வரும் ஒரு பாடல். இரண்டு 'கான்'களும் ரவீனா டாண்டனுடன் இடம்பெறும் காட்சி. பாடல் நகைச்சுவை இல்லை. ரசிக்கக் கூடிய வகையில் மீண்டும் அவர் குரல்.


மீண்டும் பழைய சல்மான், இந்த முறை நம்ம தமிழ் ரேவதி சேச்சியுடன் இணைந்த படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் இளையராஜா இசை. தமிழில் மனோ சித்ரா பாடியது. ஹிந்தியில் எஸ் பி பி சித்ரா.



ஒரு கமல் படப் பாடல். தமிழில் சட்டம் என் கையில் என்ற பெயரில் வந்த படம். ஆரம்ப இசையும் எஸ் பி பி குரலும் ரசிக்கக் கூடியவை.


பாடல்களை முழுமையாகக் கேளுங்கள்.

மறுபடி,

பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிமை தெரிவதில்லை. மிக, மிக மிகச் சில பாடல்களே காட்சியுடன் இணைந்து ரசிக்க பொருத்தமானவை. இருப்பினும் ஒரு சுவாரஸ்யத்துக்காகவும்,டெக்னாலஜியை உபயோகப் படுத்திக் கொள்ளவும் (!) காட்சியுடன் பாடல்கள் தந்திருக்கிறோம். ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை கேளுங்கள். அது பாடகருக்குக் கொடுக்கும் மரியாதை! இனிமையும் கூட

ஆனால் மாதுரியையும் அவர் நடனத்தையும் முழுதாக ரசித்திடுங்கள்...!!

படங்கள் நன்றி....கூகிள், நாட் ஃபோட்டோசிட்டி.காம்

வெள்ளி, 25 மார்ச், 2011

அ. ஆ. இலவச யோசனைகள்

                        
வந்து விட்டது தேர்தல் அறிக்கைகள்...அள்ளித் தெளிக்கப் படும் இலவச அறிவிப்புகள்...அள்ளி எடுப்பதில் கிள்ளி கொடுக்கிறார்கள் என்று தெரிந்தும் அதற்கு கை தட்டி ஆர்ப்பரிக்கும் தொண்டர் கூட்டம்... இலவசம் கொடுக்க மாட்டேன், வரி ஒழுங்காக விதிப்பேன் என்றெல்லாம் எந்த கட்சியும் சொல்லப் போவதுமில்லை.     
           
 இலவசம் தந்தால் வாங்க மாட்டோம் என்று தமிழர்கள் சொல்லப் போவதுமில்லை. டிவி, அரிசி சைக்கிள் தந்தது போய் இதோ மிக்சி, கிரைண்டர், லேப் டாப் என்று வந்து விட்டார்கள்.

இன்னும் என்னென்ன சொல்லலாம் என்று இவர்களுக்கு திகைப்பு வரலாம். இவர்களுக்கு உதவ எங்கள் யோசனைகளை சில....                     

# எங்கள் ஆட்சியில் வெளியாகும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் படங்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டிரண்டு இலவச டிக்கெட்டுகள் தருவோம்.

* நாங்கள் எல்லாப் படங்களுக்கும் தருவோம் (இது அடுத்த கட்சி)

# மிக்சி, கிரைண்டர் ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று இதில் எது உங்களிடம் இல்லை என்று தெரிந்து அதை வாங்கித் தருவோம். குறிப்பாக பத்து வோட்டுகளுக்கு மேல் இருக்கும் வீடுகளுக்கு முன்னுரிமை.
 
#  எங்கள் கட்சிக்கு சட்டசபையில் எவ்வளவு இடங்கள் கிடைக்கின்றதோ அவ்வளவு 
GB கெப்பாசிடி  கொண்ட பென் டிரைவ் எல்லோருக்கும் இலவசம்!

# சென்னையில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச் எல்லாவற்றுக்கும் இலவச அனுமதி. அரசே மொத்த டிக்கெட் பணத்தையும் கொடுத்து விடும்.

# அரசு ஊழியர்கள் (அதிகாரபூர்வமாக) மாதத்தில் பத்து நாட்கள் வேலைக்குப் போகாமலே சம்பளம் வாங்கலாம்.

# பஸ்ஸில் முதல் மூன்று ஸ்டேஜுக்கு டிக்கெட் கிடையாது. (ஆனால் மூன்றாவது ஸ்டேஜிலிருந்து மினிமம் பத்து ரூபாய்...இது ஆட்சிக்கு வந்ததும்!)

# ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் ஒரு DTH டிஷ் ஆண்டெனா இலவசம். கம்பெனி உங்கள் சாய்ஸ்!

# ரேஷனில் அரிசி கிலோ ஐம்பது பைசாவுக்கும், பருப்பு வகைகள் கிலோ இரண்டு ரூபாய்க்கும் தருவோம்.

# பள்ளிகளில் முதல் பத்து வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு கிடையாது. கட்டாய பாஸ். ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மட்டும் பெயருக்கு தேர்வு எழுத வேண்டும்.

# வாரத்துக்கு ஒரு முறை உங்கள் வீடுகளுக்கு எங்கள் தொண்டர்கள் வந்து தேங்கிக் கிடக்கும் உங்கள் துணிகளைத் துவைத்துத் தருவார்கள்.

# மாதத்திற்கு ஒரு தொகுதி என்று தேர்ந்தெடுத்து அந்தத் தொகுதியில் உங்கள் பிள்ளைகளை எங்கள் தொண்டர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அதே போல மாதம் ஒருமுறை ஒரு இலவசச் சுற்றுலா ஏற்பாடு செய்து தரப் படும்.

# தினமும் காய்கறிகளை நறுக்கி வைத்திருக்கும் எங்கள் உழவர் சந்தைக் கடைகள். உங்களுக்கு தேவையான காய்கறிகளைச் சொன்னால் நறுக்கி பைகளில் போட்டுக் கொடுத்து விடுவார்கள் எங்கள் உழவர் சந்தைத் தொண்டர்கள்!

# வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பது இனி நான்கரை நாட்கள் என்று குறைக்கப் படும்.

# கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவும், மாத்திரைகளும் வாராவாரம் வீடு தேடி வந்து தருவோம்.

# மின் சாதனப் பொருட்கள் பழுதானால் அதைச் சரி செய்யும் பொறுப்பை அரசே ஏற்கும். (மின்சாரம் இருந்தால்தானே உபயோகப் படுத்தி சரியாய் இருக்கா என்று பார்க்க முடியும் என்ற நம்பிக்கைதான்)
             
# மாவு மில் வைத்திருப்பவர்களுக்கும், திரை அரங்கங்களுக்கும் இலவச மின்சாரம்.
          
# திரைக் கலைஞர்கள் நலிவுற்றவர்களாக திரைப் படத்தில் நடித்தாலே போதும். அவர்களுக்கான எல்லா செலவையும் அரசாங்கமே ஏற்கும்.
            
# நீங்கள் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கக் கஷ்டப் படுவதைக் காண மனம் பொறுக்கவில்லை. எனவே நீங்கள் இனி பத்து வருடத்துக்கு ஒரு முறை மட்டும் அந்தக் கஷ்டத்தைப் படும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப் படும்!
                  
இவ்வளவும் எதற்காக? உங்களுக்கு உழைக்க! எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்!
                            

புதன், 23 மார்ச், 2011

நாழிகை வட்டில்

                         
பல நாட்களுக்கு முன், 'ஆவிகளுடன் பேசுதல்' குறித்து ஒரு பதிவு போட்டிருந்த நினைவு. அண்மையில், அதில் தொடர்புடைய நண்பர் என்னைக் காண வந்தார். அப்போது பொறுக்க முடியாமல் நான் கேட்ட கேள்வி: "பல ஆண்டுகளுக்கு முன்பு ப்லாஞ்செட் பலகை மூலமாக ஆவிகளிடம் பேசிய பிரமிப்பூட்டும் தகவல்கள் பல சொன்னீர்களே! அவை அப்பட்டமான உண்மையா அல்லது கற்பனை கலந்த அரைகுறை உண்மையா?" என்று கேட்டேன். அவர், முன்பே 'அவை யாவும் முழு உண்மையே' என்று உறுதி செய்திருந்தும் கூட, என்னை அப்படிக் கேட்க வைத்தது அந்த தகவல்கள் பலவும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவையாக எனக்குத் தோன்றியதுதான்.
  
மீண்டும அவற்றை உறுதி செய்த நண்பர் "எனக்கே இதில் அதிக நம்பிக்கை கிடையாது. லேசான க்யூரியாசிட்டி மட்டும் தான் இருந்தது. என்னை திடுக்கிட வைத்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேளுங்கள் " என்று சொல்லித் தொடர்ந்தார்.
        
"நான் அப்போது சேலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கை. என் ரூம் மேட்டுடன் இருந்துவந்தேன். ஒரு நாள் கதவு திறந்திருந்த நிலையில் நான் வெளியில் இருந்த குளியலறைக்குச் சென்று திரும்பிய போது என் ரிஸ்ட் வாச்சும் நண்பருடைய செருப்பும் ஒரு சேர திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். என்ன செய்வது?
             
அந்த வாரம் நான் சொந்த ஊருக்குத் திரும்பியபோது என் வீட்டில் என் அப்பாவும் நண்பர்களும் ப்லாஞ்செட் பலகை முன் உட்கார்ந்திருந்தார்கள். நானும் சென்று உட்கார்ந்துகொண்டு, 'இப்போது என் மனதில் என்ன நினைத்திருக்கிறேன் என்று சொல்ல முடியுமா?' என்று கேள்வி கேட்டுவிட்டு, பதிலுக்கு  எதிர்பார்ப்பும் அவநம்பிக்கையுமாக காத்திருந்தேன்.
    
"நாழிகை வட்டிலைப் பற்றி கேட்கிறாயா" என்று பதில் வந்தது. நாழிகை வட்டில் என்றால் என்ன என்றே தெரியாத எனக்கு அது ரிஸ்ட் வாச்சுக்கு செந்தமிழ்ப் பெயர் என்று தமிழறிந்த நண்பர்கள் சொன்னார்கள்.

ஆச்சரியம் அடைந்த நான் தொடர்ந்து " ஆம். அது கிடைக்குமா?" என்று என் அடுத்த கேள்வியை முன் வைத்தேன்.

" பதினைந்து நாளில் கிடைக்கும் " என்று பதில் வந்தது.

அவநம்பிக்கையுடன் ஊர் திரும்பிய எனக்கு மேலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. "உங்கள் கடிகாரம் கிடைத்து விட்டது. போலீஸ் ஸ்டேஷன் சென்று அடையாளம் காட்டி பெற்றுக் கொள்ளுங்கள்" என்று மின்சார வாரியத்தில் பணி புரிந்து வந்த ஒரு பொறியாளர் கடிதம் எழுதியிருந்தார். சென்று என் வாட்சை மீட்டு வந்தது தனிக்கதை. நண்பரின் செருப்பு கிடைக்க வில்லை!
                           
இதைக் கேட்ட எனக்கும் வியப்பு தாங்கவில்லை.
               
அவர் மேலும் சொன்னது.
   
நாம் யாரை அழைக்கிறோமோ அவர் பாணியிலேயே பதில் வரும். சில சமயம் "நீங்கள் அழைத்த நபர் இந்த (ஆவி) உலகத்தில் இல்லை" என்றும் பதில் கிடைக்கும். சில சமயம் போக்கிரித் தனமான பதில்களும் வருவதுண்டு. (இடையில் புகுந்து குறும்பு செய்யும் ஆவிகளின் சேட்டைகள் போலும்.)
         
நண்பர்களே உங்கள் நம்பிக்கை எப்படி? அனுபவம் எப்படி? சொல்லுங்கள் கேட்கிறோம்.
                            

செவ்வாய், 22 மார்ச், 2011

பக்குவம் என்ன சொல்லுவாய்?

 
                 
டிர்ரிங் டிர்ர்ரிங் ....

"ஹலோ 'எங்கள்' தொலைக்காட்சி நிலையம்."

"சார் நேற்று  'ஆரோக்கிய உணவு' பற்றி ஒரு பன்.... சாரி ஒரு அரை..... சாரி ஒருத்தர் பேசினாரே - அவருடைய பெயர் என்ன?"

"கொஞ்சம் இருங்க. ஃபைலைப் பார்த்துச் சொல்கிறேன்."

"... அந்தர்தியானம் ம்ம்ம்ம் ... அலசல் புராணம்.... ஆளை மயக்கும் எழில் ல்ல் ... ஆரோக்கிய உணவு .... இதுவா? --- ஆமாம். ஆரோக்கிய உணவு குறிப்புகள் வழங்குபவர் வைத்தி."

"சார் அவருடைய விலாசம் இருக்கா?"

"எதுக்குக் கேக்குறீங்க?"

"அவருடைய உணவுக் குறிப்புகள் என்றால் என் மனைவிக்கு ஒரே பைத்தியம். (நற, நற!) அவர் சொல்வதைக் கேட்டு அதன் படியே வீட்டில் சமைப்பாள். (நற, நற!) அவரை வீட்டில் போய்ப் பார்த்து, பாராட்டி நாலு வார்த்தை பேசிவிட்டு வரலாம் என்று இருக்கின்றேன்."

"ஓ! அப்படியா? விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். வைத்தி, நம்பர் ஆறு, பானைத் தெரு, சோத்துப்பாக்கம், PIN 603319." அலை பேசி எண் : ----------

"நன்றி சார்."
(அடேய் வைத்தீ -- வக்கிரேண்டா தீ!)

*******    ********

அலை பேசியில் உடனே வைத்தியைக் கூப்பிட்டான் பட்டாபி.

"ஹலோ ஆரோக்கிய உணவு வைத்தி ஹியர்"

"சார் என் பெயர் பட்டினி பட்டாபி."

"ஹி ஹி என்ன பட்டினியா அல்லது பத்தினியா?"

"பட்டினி பட்டாபிதான் சார்! நானும் என் மனைவியும், 'எங்கள் டி வி' இல உங்க ப்ரோக்ராம் ரொம்ப விரும்பி (நான் மட்டும் வெதும்பி) பார்ப்போம்."

"ஓ! மிக்க நன்றி."

"அதனால, உங்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்க ஆசை."

"என்னுடைய விலாசம் தெரியுமா? நீங்க எங்கே இருக்கீங்க?"

"தெரியும் சார். உங்க விலாசம், செல் நம்பர் எல்லாம் எங்கள் டி வி க்கு ஃபோன் செய்து தெரிந்துகொண்டேன். நான் இருப்பது, ஆமைப்பாக்கத்தில்"

"அட, அப்படியா? எப்போ வரீங்க? நாளை லஞ்சுக்கு வருவீங்களா?"

"வர்றோம் சார்!"

"உங்களுக்கு என்ன பிடிக்கும்? சைவமா அல்லது அசைவமா? என்ன காய்கறி, என்ன ரசம், என்ன கூட்டு? என் மனைவி ரொம்பப் பிரமாதமா சமைப்பாங்க."

"நாங்க வேற ஒரு பிளான் வெச்சிருக்கோம் சார். உங்க மனைவியை ரைஸ் மட்டும் சூடாக, தயார் செய்துவிட சொல்லுங்கள். மீதி எல்லா அயிட்டங்களும் நாங்க செய்து, எடுத்து வருகிறோம். உங்க வீட்டில் மொத்தம் எத்தனை பேருங்க?"

"மகன் மகள் எல்லோரும் வெளியூரில் இருக்கிறார்கள். நானும் என் மனைவியும் மட்டும்தான்."

"அப்போ நாலு பேருங்களுக்கு ரைஸ் ரெடி பண்ணச் சொல்லுங்க. நாங்க மேல்மருவத்தூர் கோவிலுக்குப் போயிட்டு, நேரே உங்க வீட்டுக்கு வந்திடறோம். நாளை மத்தியானம் ரெடியா இருங்க."

"சார் எனக்குப் பிடிச்ச சமையல் என்ன என்று நீங்க கேட்கவே இல்லையே!"

"அது என்ன சார், இவ்வளவு நாளா நீங்க ஆரோக்கிய உணவு பற்றி சொல்வது எல்லாவற்றையும் கேட்டு, என்னை விட என் மனைவிக்கு ரொம்ப நன்றாக, எதை, எப்படி சமைக்க வேண்டும் என்று அத்துபடியாகிவிட்டது. சத்தான காய்கறிகளை, முத்தாக சமைத்து எடுத்து வருகிறோம்."

****** ******

"மீனாக்ஷி, மீனாக்ஷி!"

"என்னங்க?"

"நீ அடிக்கடி எங்கள் டி வி யில் விரும்பிப் பார்க்கும் ஆரோக்கிய உணவு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கா?"

""நல்லா ஞாபகம் இருக்குதே? ஆமாம், உங்களுக்குத் தான் அந்த நிகழ்ச்சி பிடிக்காதே? அந்த ஆளைக் கன்னா பின்னா என்று திட்டுவீர்களே! அதுக்கு என்ன இப்போ?"

"நான் மனசு மாறிவிட்டேன் என்று வெச்சிக்கோயேன். நாம அவருடைய வீட்டுக்கு விருந்து சாப்பிட நாளை போகப் போகிறோம். அது மட்டும் இல்லை, நாமதான் ரைஸ் தவிர மீதி எல்லாம் செய்து எடுத்துப் போகப் போகிறோம். நாலு பேருங்களுக்கு வேண்டிய கறி, கூட்டு, அவியல், சாம்பார், ரசம், எல்லாம் செஞ்சி எடுத்துப் போகிறோம்!"

"இது நல்ல ஐடியாவா இருக்கே! நாளைக்குக் காலையில மார்க்கெட்டுக்குப் போயி, நல்ல காய்கறிகளாகப் பார்த்து வாங்கி வந்துடுங்க."

"சரி"

***** *****

மறுநாள். மார்க்கெட் சென்று, நல்ல காய்கறிகள் வாங்கி வந்தான் பட்டாபி. வரும் வழியிலேயே, ஹோட்டல் ஒன்றில் புகுந்து, இட்லி வடை சாம்பார், பொங்கல் பூரி என்று வேட்டையாடி, வயிற்றை நிரப்பிக் கொண்டு சாவகாசமாக வீடு வந்தான். கோவிலுக்குப் போகின்ற நாட்களில், காலையில் ஒன்றும் சாப்பிடமாட்டாள் மீனாக்ஷி.

சமயலறையில் வேலையாக இருந்த மனைவியிடம் காய்கறிகளைக் கொடுத்தான். அப்படியே சமயலறையில் இருந்த உப்பு பாட்டிலை சத்தமில்லாமல் எடுத்து, நேரே கொண்டுபோய் மாடியில் இருந்த புத்தக அலமாரியில் புத்தகங்களுக்குப் பின்னால் ஒளித்து வைத்தான்.

பிறகு, கீழே இறங்கி வந்து, மனைவிக்கு உதவியாக, காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தான். கீரையை ஆய்ந்து கொடுத்தான்.

சற்று நேரம் கழித்து, "என்ன மீனாக்ஷி, எல்லா அயிட்டங்களும் ரெடியா?"

"எல்லாம் ரெடியாகிட்டு இருக்கு. இந்த உப்பு பாட்டிலை எங்கேயோ வெச்சிட்டேன். அதைத்தான் தேடிகிட்டு இருக்கேன்."

(பட்டாபி மனதுக்குள் - உப்பு பாட்டிலை நீ எங்கேயும் வெக்கலை, நாந்தான் மறச்சி வெச்சேன்.) வெளியே, சத்தமாக, " லூசா நீ? என்ன சொல்றே?"

"ஏன்? என்ன தப்பா சொல்லிட்டேன்?"

"அவரு யாரு, என்ன சொல்லுவார் எல்லாம் மறந்துட்டியா?"

மீனாக்ஷி - சற்று யோசித்துவிட்டு, "அட ஆமாம். கீரை, காய்கறிகளில் இயற்கையாகவே நிறைய உப்புச் சத்து இருக்கும். நாம் அன்றாடச் சமையலில், உப்பே சேர்க்க வேண்டாம். உப்பு இல்லாமல் உணவு அருந்துவதுதான் எப்பவும் சிறந்தது. இதைத் தானே அடிக்கடி சொல்லுவார். நான் அவர் நிகழ்ச்சிகளைக் கேட்க ஆரம்பித்த பின்தான் சமையலில் போடுகின்ற உப்பின் அளவை பாதியாகக் குறைத்துவிட்டேன். நீங்க சொல்வது சரிதான். உப்புப் போடாமலேயே எல்லாம் செய்து முடித்து விடுகிறேன்.

*****  *****

அப்புறம் என்ன? வைத்தி வீட்டில் டைனிங் டேபிளில் பட்டாபி & கோ கொண்டு சென்ற பதார்த்தங்களை சுடச் சுட சாதம் போட்டுக் கொண்டு, அழகாகப் பிசைந்து, ஆவலுடன் வாயில் போட்டுக் கொண்ட வைத்தியின் முகம் போன போக்கைப் பார்த்து, புளகாங்கிதம் அடைந்தான் பட்டாபி.

"சாம்பாரில் உப்புப் போட மறந்துவிட்டீர்கள் போலிருக்கு?"

"என்னங்க சார் இப்படி சொல்லுறீங்க? சாம்பாரில் மட்டும் அல்ல - எதிலுமே ஞாபகமா உப்புப் போடாம சமைத்து எடுத்து வந்திருக்கிறோம்!"

"எதிலேயுமே உப்புப் போடலையா?" அதிர்ந்து போனார் வைத்தி.

"ஆமாம் சார். நீங்கதானே ஆரோக்கிய உணவு நிகழ்ச்சியில எப்பவுமே சொல்லுவீங்க. காய்கறிகளிலும் கீரைகளிலும் இயற்கையாக இருக்கின்ற உப்பு போதும். நாம் தனியாக உப்பு போட வேண்டாம். உப்பு சர்க்கரை இரண்டுமே வெள்ளை எமன்கள். இவைகளை அறவே ஒதுக்கவேண்டும் என்று."

வைத்தி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் என்ன செய்வது என்று திகைத்ததைப் பார்த்து, பட்டாபிக்கு ஒரே சந்தோஷம். அவர் திணறித் திணறி ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தார்.

***** *****
அடுத்த வாரம் ஆரோக்கிய உணவு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் பட்டாபியும் மீனாக்ஷியும்.

வைத்தி சொன்னார். "உப்பு, சர்க்கரை இவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல், குறைவாக, அரை உப்பு / அரை சர்க்கரை என்று சேர்த்துக் கொள்வது நல்லது......."

பட்டாபி உரக்கக் கூவினான் "அது ........."
                         

திங்கள், 21 மார்ச், 2011

ஜே கே 14 மகிழ்ச்சி

    
எந்த ஒன்றின்  வாயிலாகவும் மகிழ்ச்சியைப் பெற முடியுமா?

நாம் மகிழ்ச்சியை பலவாறாகவும் தேடுகிறோம்.  உறவுகளின் மூலமாக, எண்ணங்களால், கருத்துக்களால் இப்படி எவ்வளவோ.  இப்படிச் செய்வதால், பொருள்கள், கருத்துக்கள், உறவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விடுகின்றன -- மகிழ்ச்சி அல்ல.  நாம் எதோ ஒன்றை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைய முனைந்தால், அந்தப் பொருள் மகிழ்ச்சியைக் காட்டிலும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.  இப்படிச் சொல்லும் போது, பிரச்னை ரொம்பவும் எளிதாகி விட்டது போல் தோன்றுகிறது.
     
உண்மையும் அதுதான்.  நாம் சொத்துக்கள், குடும்பம், புகழ் இவற்றில் மகிழ்ச்சியை சம்பாதித்துக் கொள்ள முற்படுகிறோம்.  பிற்பாடு சொத்து, குடும்பம், பெயர், கருத்துக்கள்  இவை யாவும்  மகிழ்ச்சியைக் காட்டிலும் முக்கியமானதாகி விடுகின்றன.  மகிழ்ச்சியை  ஒரு சாதனத்தின் வாயிலாக கொண்டுவர முனைகிறோம்.  பின் அந்த சாதனம் அந்த லட்சியத்தையே அழித்து விடுகிறது.  மனம் அல்லது கரங்கள் சிருஷ்டித்த எதனாலும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியுமா?  பொருள்களும், உறவுகளும், சித்தாந்தங்களும் சாதாரணமாகவே முக்கியத்துவம் இல்லாதவை. நீடித்து இருப்பவை அல்ல. அவை எப்போதும் (இறுதியில்) மகிழ்ச்சியை நாசம் செய்து விடும்.  பொருள்கள் நிரந்தரமானவை அல்ல - தேய்ந்து அழிந்து போகக் கூடியவை.

உறவுகளோ பூசல்களுக்கும் சச்சரவுகளுக்கும் உட்பட்டவை; மரணம் வேறு  குறுக்கிடக் காத்திருக்கும்.  கருத்துக்களும் சித்தாந்தங்களும் மாறிக்கொண்டே இருப்பவை.  நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல.  நாம் இவற்றை பயன்படுத்தி மகிழ்ச்சியை அடைய முயல்கிறோமே   தவிர அவை அநித்தியமானவை என்று உணர்வதில்லை.  எனவே துயரம் நமது நிரந்தரத்துணையாகி விடுகிறது. அதை தவிர்த்தல் பெரிய பிரச்னை ஆகி விடுகிறது.
      
மகிழ்ச்சி, அதாவது ஆனந்தத்தின் உண்மையான பொருளை கைக்கொள்ள வேண்டுமானால், தன்னைப் பற்றிய சுய அறிவு (self knowledge) எனும் நதிப் பிரவாகத்தை கவனிக்க வேண்டும்,    ஆராய  வேண்டும்.  சுயம் அல்லது அகம் பற்றிய அறிவு என்பது ஒரு இறுதி லட்சியம் அல்ல.  ஒரு நதியின் பிரவாகத்துக்கு அடிப்படை மூலம்  என்று ஒன்று இருக்கிறதா?  ஆரம்பம் முதல் முடிவு வரை நீரின்  ஒவ்வொரு துளியும் நதிதான்.  ஏதோ  ஒன்றின் மூலத்தைக் கண்டுகொண்டால் மகிழ்சசியைப் பெறுவோம்  என்று எண்ணுவது  தவறான கற்பனை.  சுய அறிவு எனும் நதியில் நீங்கள் திளைக்கும்போது மகிழ்ச்சி அங்கே தானே பிரசன்னமாக  இருக்கும்.  
                            
                            

ஞாயிறு, 20 மார்ச், 2011

WALK OUT?



சட்ட சபையிலும் ராஜ்ய சபாவிலும் வாக் அவுட் பார்த்திருக்கிறோம். கிரிக்கெட்டில்?

இதோ...டெண்டுல்கரின் புதிய சாதனை...! அதிலும் முதல். சாதனைப் பட்டியலில் மற்றுமொரு இறகு? (ஷார்ஜா மேட்ச் வேறு மாதிரி!)

அவர் வெளிநடப்பு செய்ததற்கு ஊகிக்கப் பட்ட காரணங்கள்...!!!

1) நான் செஞ்சரி அடித்தால் மேட்ச் தோற்று விடும் என்பவர்களுக்கு...இதோ அவுட் ஆகி விட்டேன்...ஜெயித்துக் காண்பியுங்கள்...!

2) அம்பயர் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல. இதோ அவர் நாட் அவுட் என்று தலையாட்டினாலும் நான் வெளி நடப்பு செய்கிறேன்... நாளையே அம்பயர் சொல்வது தவறு
என்று நாங்கள் சொல்லும்போது இந்தக் காரணம் உதவும்...!

3) அம்பயர் அவுட் கொடுத்து உள்ளேயே நின்றால் நடவடிக்கை எடுப்பார்கள்.... நாட் அவுட் என்று சொல்லியும் வெளி நடப்பு செய்ததால் நடவடிக்கை உண்டா... என்று கண்டு பிடிக்கத்தான்...

4) எத்தனையோ வகைகளில் அவுட் ஆகியிருக்கிறார்...ரன் அவுட், ஸ்டம்ப்ட் அவுட், கேட்ச் அவுட், வாக் அவுட் வகையில் முதல் முறையாக....

4) இந்தியப் பெயர் கொண்ட பவுலர் போடுகிறார். பெருமை அவருக்குத்தான் போகட்டுமே.... இந்தியா ஜெயித்தால் என்ன (மேற்கு) இந்தியா தோற்றால்
என்ன...!!!

ஞாயிறு - 89

வியாழன், 17 மார்ச், 2011

ஆனந்த அதிர்ச்சி 03

                            
ஆனந்த அதிர்ச்சி அடுத்த பகுதியை உடனே வெளியிடாவிட்டால், இரசிகர் மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று சில வாசகர்கள் பயமுறுத்தல் மெயில் அனுப்பியதாகக் கனவு கண்டேன். உடனே உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து இதை அவசரம் அவசரமாக எழுதுகின்றேன்.

அவசரத்தில் இதில் விவரங்கள் கோர்வையாக இல்லாமல் போகலாம். அப்படி ஏதாவது இடைவெளி இருந்தால், வாசகர்கள், அந்த இடைவெளிகளை, அவரவர்களின் கற்பனைக் களிமண் இட்டு நிரப்பிக் கொள்ளவேண்டும்!



ஆகியவைகளைப் படித்த வாசகர்கள் சிலர், தங்கள் அனுமானங்களை சரியான பதிலின் பக்கம் வருகின்றாற்போல் எழுதியிருந்தனர்.  

1) geetha santhanam said...
என்ன ஆச்சு? அதை வைத்து ட்ரைவேலி யூனிவர்சிட்டி மாதிரி அவர் நடமாட்டங்களை track பண்ணினாங்களா?

 
2) meenakshi said...
நிச்சயமாக அது ஒரு உளவு பார்க்கும் சிறு கருவியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அதை இடுப்பில் கட்டி கொள்ளாமல், கையிலோ, கழுத்திலோ கட்டிக் கொண்டிருந்தால் சூரிய வெளிச்சத்தில் அது தானாகவே ரீ சார்ஜ் ஆகி இருக்கும். சரியா?
      
============
  
வலையாபதியின் முடிச்சு, அந்தத் தாயத்தின் உள்ளே ஒரு நீலப்பல் விசிலடிச்சான் இருந்தது என்பதுதான்! (bluetooth whistler என்பதை நீலப்பல் விசிலடிச்சான் என்று மொழி பெயர்த்த ஆசிரியரை, வலையாபதி ஃபோனில் என்ன சொல்லி திட்டுவார் அல்லது வாழ்த்துவார்? Any guess?)

அந்த நீ ப வி - அனந்தராமனின் தனித்தன்மை அடையாள எண்ணை (UID No) 'பன்னிரண்டு டிஜிட் நம்பர் ஒன்று சொல்வேன், உன் பவிஷை எல்லாம் டிரான்ஸ்மிட் செய்வேன்' என்று (பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு ... ராகத்தில்) பாடியபடி டிரான்ஸ்மிட் செய்துகொண்டு இருந்தது.

அது சரி - அது டிரான்ஸ்மிட் செய்தால், அதை யாரால், எப்படிக் கேட்க முடியும்? அதை எவ்வளவோ ரிசீவர்கள், சென்சர் கொண்டு கேட்டு, பிக் செய்து, கூகிள் போன்ற தேடு பொறிகளுக்கு தகவல் அனுப்ப முடியுமே!
     
தனித்தன்மை அடையாள எண்ணைக் கொடுத்தவுடன், அனந்த ராமனின் அனைத்துத் தகவல்களையும், கம்பியூட்டரில் உள்ள தேடு பொறிகளின் உதவியால் சில வினாடிகளில் தெரிந்துகொண்டு விடலாம். வியாபாரிகள், ஏஜெண்டுகள், ஷேர் ப்ரோக்கர்கள், வங்கிகள்  போன்று  வர்த்தகம் புரிவோர் / விழைவோர்  எல்லோருக்கும், கூகிள் போன்ற தேடுபொறி மக்கள் இந்த வசதியை, ஆண்டுக் கட்டணம் ஏதேனும் பெற்றுக்கொண்டு செய்ய விரைவில் முன்வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

அடுத்த பத்தாண்டுகளுக்குள், இந்த அனந்தராமன் கதை உண்மையிலேயே நடக்க சாத்தியக் கூறுகள் அதிகம்.

அப்போ கூட நம்முடைய எலக்ட்ரிசிட்டி ஆபீசில், 'எல்லோரும் கியூவுல நில்லுங்க, இப்போ பணம் கட்ட முடியாது - இந்தக் கவுண்டர் ஆள் சாப்பிடப் போயிருக்காரு, என்ன பியூஸ் போயிடுச்சா? நாளைக்கு ஒரு ஆளை அனுப்புகிறோம் சார், என்ற நிலையில்தானே இருக்கும்? அங்கே அற்புதங்கள் நடந்ததாக எழுதி இருக்கின்றீர்களே என்று சிலர் கேட்கக் கூடும். இப்போ எல்லோரும் ஆன்-லைன் எலெக்ட்ரிக் சார்ஜ் கட்டமுடிகின்றது. செப்டம்பர் 2007 முதல், இந்தத் தேதி வரையிலும், நாம் கட்டிய மின் கட்டணங்கள் இன்டர்நெட்டில் கிடைக்கின்றது. இந்த விவரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, ஸ்டாடிஸ்டிகல் அனாலிசிஸ் செய்ய அதிகம் சிரமப்படாமல் இயலும். அப்படி அனலைஸ் செய்கின்ற புத்திசாலி, மின்கட்டண அலுவலகத்தில் ஒருவர் இருந்தால் கூட, அது போதும், மின்சார உபயோகிப்பாளர் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதற்கு.

எனவே, மக்களே, உங்க ஏரியாவில், எப்பொழுது, தனித்தன்மை அடையாள எண்ணுக்காக (Unique Identification Number) நந்தன் நிலேகணி பரிந்துரைத்த குழு வருகின்றதோ, அப்பொழுது, பத்துவிரல் ரேகைகள், கண் படம் எல்லாம் கொடுத்து, அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அந்த எண் மூலமாக பல நன்மைகள் ஏற்படப் போகின்றது.
                        

திங்கள், 14 மார்ச், 2011

ஜே கே 13 அன்பு என்பது ...


எங்கு காயம் / புண் படல்  சாத்தியமோ அங்கு அன்பு இராது.

தான் செய்யப் போகும் செயல் தனக்கு நேசமானவர்களைப் புண் படுத்தும் என்று தெரிந்து இருக்கும் போது, தன் மனம் எப்படி சுதந்திரமாக, தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளாமல் செயல் பட முடியும் என்று கேள்வி கேட்பவர் வினவுகிறார்.
         
அன்பு மயமானவராக இருப்பது என்பது, அன்பு செய்பவர் அன்பு செலுத்தப் படுபவர் இருவரும் கட்டுண்டு அல்லாமல் இருப்பதாகும். வலி ஏற்பட்டாலும், அல்லது வலி ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பினும், அது அன்பு அல்ல. ஒருவரைத் தன் உடமையாக வைத்துக் கொள்வதும், ஒருவரை தனக்கு வேண்டிய ஆளாகச் சேர்த்துக் கொள்வதும் மட்டுமே அங்கு இருக்கும். நீங்கள் சரியான ஒன்றை செய்யும்போது, நீங்கள் உண்மையாகவே அன்பு செலுத்தும் எவரையும் புண்படுத்த இயலாது. புண்படல், புண்படுத்துதல் எங்கே நடக்கும் என்றால், நீங்கள் மற்றவர் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருந்தாலோ, அல்லது மற்றவர் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்புகளை வைத்திருந்தால் மட்டுமே புண்படுதல் உண்டாகிறது.
                        
அதாவது, நீங்கள் இன்னொருவர் உங்களை தன் உடைமையாக வைத்திருப்பதை விரும்புகிறீர்கள். அது பாதுகாப்பாக இருக்கிறது. சௌக்கியமாக இருக்கிறது. அது சாஸ்வதம் இல்லை என்று தெரிந்தாலும், அந்த சுகம், நிரந்தரம் இல்லையானாலும் திருப்தி அளிக்கிறது. இப்படி சுகம், பாதுகாப்பு, ஊக்குவிப்பு இவற்றை நாடி செய்யப் படும் ஒவ்வொரு செயலும் மனதின் வெறுமையைக் காட்டுகிறது. அதனால்தான், இயல்பாக மற்றவர் செய்யும் சரியான செயல் கூட மனதை சஞ்சலப் படுத்துகிறது, துன்பம், வலி உண்டாகிறது. இதே காரணமாக, ஒரு நபர் அடுத்தவரை சரி செய்து கொண்டு போக வேண்டிய நிர்பந்தம் காரணமாக தன் இயல்பில் செயல் புரிய முடியவில்லை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்த அன்பு என்று நம்பப் படும் உணர்வு காரணமாக, சதா தன்னை அடக்கிக் கொண்டு செயல் படுவதன் மூலம், இரு தரப்பினருமே அழிந்து போகிறார்கள். இந்த 'அன்பி'ல் சுதந்திரம் இல்லை. கண்ணுக்குத் தெரியாத நுட்பமான விலங்குகள் தான் கட்டிப் போடுகின்றன