புதன், 29 ஜூன், 2011

"செல்வப் பெருமாளும், கணேஷும்" (கே 09)


      
அத்தியாயம் 09: "செல்வப் பெருமாளும், கணேஷும்"

முன்பு வெளியான  பதிவுகளை, மக்கள் அநேகமாக மறந்திருப்பார்கள். பதிவாசிரியர், இந்தத் தாமதத்தை, ஏதோ ஒரு திட்டம் போட்டுத் தான் செய்திருக்கிறார் என்று விஷயம் அறியாத வட்டாரங்கள் கிசு கிசுப்பதில் உண்மை இருக்கிறது என்று மற்ற ஆசிரியர்கள் நினைப்பதில், நியாயம் இருக்கிறது என்று ....  

-----------------

முதல் எட்டு + இரண்டு பதிவுகளில் என்ன நடந்தது என்று விலாவாரியாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், இங்கே இடது பக்கத்தில் உள்ள சுட்டிகள் மூலம் அங்கே போய்ப் படிக்கவும். மற்றவர்களுக்கு, முன்பு நடந்தது என்ன என்று ஒவ்வொரு பதிவையும் ஒரு வரியில் சொல்லிவிடுகிறோம். 

'தீ' என்பவன் ஒரு தீவிரவாதி. கா என்பவரின் விற்பனைக்கு வந்த பழைய காரை, செல்வப் பெருமாள் என்பவரும், கணேஷ் என்பவரும், கா எதிர்பார்த்ததை விட அதிக விலை கொடுத்து காரை ஓட்டிச் செல்கிறார்கள். அந்தக் கார் அடையாளங்கள் மாற்றப் பட்டு, ஊருக்கு வெளியே நிறுத்தப் படுகிறது. தீ க்கு காரின் கீ, குரியர் மூலம் அனுப்பப் படுகிறது. தீ அந்தக் காரில் குண்டு வைக்கிறார். ஆனால், துரதிருஷ்ட வசமாக குண்டு வெடிப்பில், அவரே இறந்துவிடுகிறார். துப்பறியும் காசு சோபனா மற்றும் எலெக்ட்ரானிக் சாமியார் இருவரின் உதவியை நாடுகிறார் இன்ஸ்பெக்டர் ரங்கன். கா சோ, எ சா இருவரும் திட்டம் தீட்டி, காரின் சொந்தக்காரர் 'கா'வைக் கண்டு பிடித்து விட்டனர். இனி காரை ஓட்டிச் சென்ற இருவரைக் கண்டுபிடிக்க அடுத்த திட்டம் தீட்டுகின்றனர்.  

================   
   
கா சோ: "கார்த்திக் சார்! நீங்க அப்புறம் உங்க காரை ஓட்டிச் சென்றவர்களுடன் எவ்வளவு தடவைகள் பேசினீர்கள்?"

கார்: "ரொம்ப தடவை பேசிட்டேங்க. முதல் ஒன்று இரண்டு தடவைகள் சாதாரணமாக மறுத்துப் பேசியவர்கள், பிறகு நான் ஃபோன் பண்ணினாலே கன்னா பின்னா என்று திட்டுகிறார்கள்,"

எ சா: "சரி அவங்களுடைய அலை பேசி எண்களைக் கொடுங்க. உங்க கார் விற்பனை விளம்பரம் வந்த அந்த இ வி (இலவச விளம்பரங்கள் = free ads) பேப்பரையும் கொடுங்க. நான் உங்களுக்கு இன்று மாலைக்குள் "call now" என்று குறுஞ்செய்தி ஒன்று அனுப்புவேன், அப்போ நீங்க உடனே செல்வப் பெருமாள் அலைபேசி எண்ணுக்கு ஃபோன் செய்யுங்கள். ஓ கே?"

கார்: "ஓ கே பை."  

++++++++++++++++++++++++   
   
கார்த்திக் வீட்டிலிருந்து வெளியே வந்த சோபனா,  அருகில்  இருந்த  எஸ் டி டி  பூத்திலிருந்து, செல்வப் பெருமாளின் எண்ணை அழைத்தார். எ சா அருகில் நின்று, சோபனா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

கா சோ : "ஹலோ - பெருமாளா? அண்ணன் இருக்காரா?"

மறு முனை குரல் : "ஹலோ? யாரு? ...நீங்க? நீனாவா?"

கா சோ: "அட! குரலை வெச்சி கரீக்டா கண்டு பிடிச்சுட்டியே பெருமாளு. ஆமாம் நீனா தான் பேசுறேன். அண்ணன் எங்கே?"

ம மு கு: "என்னங்க நீனா ... நேத்திக்கி அண்ணன் உங்க கூடத்தானே ப்ரொடியூசர பாக்க கெளம்பி வந்தாரு?"

கா சோ: "அட என்ன பெருமாளு நீயி! அது நேத்திக்கி. இன்னைக்கு அவரு அந்தப் பக்கம் வந்தாரா என்று தெரிஞ்சிக்கத்தான். .."

ம மு கு : இல்லைங்க. இன்னிக்கு இதுவரை அண்ணன் இந்தப் பக்கம் வரலை. கொஞ்சம் இருங்க .. கணேஷு பய என்ன சொல்றான்னா , அண்ணன் ஊட்டி போயிருக்கார் ரெண்டு நாள்ல வந்திடுவாருன்னு ... ஒங்க கிட்ட சொல்லலியா?

கா சோ: "ஓ ஆமாம் இப்ப ஞாபகம் வருது. அடுத்த வாரம்தான் ஊட்டி போறாருன்னு நெனச்சேன். சரி, நான் கால் பண்ணினது, ஒன்கிட்ட பேசறத்துக்குத்தான் பெருமாளு. அண்ணன் மேட்டர் ஒண்ணு போலீசு கையில மாட்டிடுச்சு. இதை எல்லாம் ஃபோன்ல சொல்ல முடியாது. நேர்ல தான் சொல்லமுடியும். எனக்குத் தெரிஞ்ச பெரிய எடத்துப் பொண்ணு ஒண்ணு - சோபனான்னு பேரு. அதுதான் எனக்கு டீடெயிலு சொல்லிச்சு. அது ஒன்ன வந்து பார்த்து என்ன விவரம்னு சொல்லும். அதை நீ அண்ணனை பார்க்கும்பொழுது, அண்ணன் கையில பக்குவமா சொல்லி, பிரச்னையிலிருந்து காப்பாத்திக்க அவரு என்ன செய்யணுமோ அதை செய்து கொள்ளச் சொல்லு. நீ இப்போ எங்கே இருக்குற? விலாசம் சொல்லு."

ம மு கு விலாசம் சொல்ல,  அதை எழுதிக் கொள்கிறார் சோபனா.

அரை மணி நேரத்திற்குள், அந்த விலாசத்திற்கு காரை ஓட்டிச் சென்றார், எலெக்ட்ரானிக் சாமியார்.   

################################   
       
அந்த வீடு = பழைய வீடு என்றோ புதிய வீடு என்றோ சொல்லமுடியாதபடி இருந்தது, வெளித் தோற்றம். காலிங் பெல் பொத்தானை அமுக்கிவிட்டு, காத்திருந்தனர் எ சா & கா சோ.

லுங்கி, பனியன் அணிந்த, ஒல்லியான உருவம் ஒன்று வந்து கதவைத் திறந்தது. "யார் நீங்க? என்ன வேணும்?"

கா சோ: "இங்கே செல்வப் பெருமாள், கணேசுன்னு ... ரெண்டு பேரைப் பார்க்க வேண்டும். நீனா அனுப்பினாங்க."
    

      
ஒல்லி உருவம் உள்ளே ரம்மி ஆடிக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து, "டேய் பெருமாளு, கணேஷு - ஒங்களைப் பார்க்க வந்திருக்காங்கடா! நீனா அனுப்பினாங்ககலாம் ..."

பெருமாளும் கணேஷும் ஆடிக் கொண்டிருந்த ஆட்டத்தை ஸ்கூட் விட்டுவிட்டு வந்தார்கள். எ சா - கார்த்திக்குக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். 'call now'

     
ஆடிக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவன், 'டேய் பாப்பா ஷோக்கா கீதுடா. படத்துல எதுனாச்சும் நடிக்கிற ஐடியா கீதான்னு வெசாரிடா ... ' என்றான். அவனுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொருவன் அவனைத் தலையில் தட்டி, 'பொத்திக்க' என்றான்.

அந்த நேரத்தில் பெருமாளின் அலை பேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்து யாரென்று பார்த்த பெருமாள் "டேய் கஸ்மாலம் - இன்னொரு தபா கால் பண்ணினேனா - நேர்ல வந்து ஓன் கையக் கால ஒடச்சுடுவேன்." என்று சொல்லி, சோபனாவைப் பார்த்து "மன்னிச்சுக்குங்க" என்றான்.

"நீங்க யாருடைய கையைக் காலையோ ஒடிக்கிறதுக்கு, நான் ஏன் உங்களை மன்னிக்கணும்?அது யாரு? கடன் கொடுத்தவரா?"

"ஐயோ இல்லீங்க - கடன் கொடுத்தவரு திருப்பி கேட்கறது தப்பு இல்லீங்க. இவன் யாரோ பேமானி. நாங்க அவன் கிட்ட காரும் வாங்கலே - சோறும் வாங்கலே - எப்போ பார்த்தாலும் ஃபோன் பண்ணி - காரு மொதலாளிக்கிப் பிடிச்சிருந்ததா? வாங்கிக்கிறீங்களா இல்லையா? முடிவு சொல்லுங்க - அப்பிடீன்னு கேட்டு பேஜாரு பண்ணுறான். எனக்கும், கணேசுக்கும் மாறி மாறி ஃபோன் போட்டு டார்ச்சர் பண்ணுறான்."

பெருமாள், கணேசு - இருவருமே ஒல்லியான உருவம் கொண்டவர்களாக இருந்தனர். கார்த்திக், காரை ஓட்டிச் சென்ற இருவருமே பருமனான உடல் வாகு கொண்டவர்கள் என்று சொன்னது ஞாபகம் வந்தது.

"எப்போதிலிருந்து அவர் இந்த மாதிரி தொந்தரவு தருகிறார்?"

"ரெண்டு வாரங்களுக்கு முன்பு ஃப்ரீ ஆட்ஸ் பேப்பரில், 'ஆதி மனிதன்' படப் பிடிப்பிற்காக, அந்தக் கால ஓவியங்கள், செட்டிநாட்டு மர வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடுகள் - இதெல்லாம் இருந்தால் விலை கொடுத்தோ அல்லது வாடகைக்கோ வாங்கிக் கொள்வோம் என்று விளம்பரம் கொடுத்திருந்தோம். எங்கள் இரண்டு பேர் பெயர்களையும், செல் நம்பர்களையும் கொடுத்திருந்தோம். அந்த விளம்பரம் வந்த இரண்டு நாளிலிருந்து இந்த டார்ச்சர் ஆரம்பிச்சிடிச்சு."

எ சா, தான் கார்த்திக்கிடம் வாங்கி வந்திருந்த இ வி பேப்பரைக் காட்டி, "இதுதானா அந்தப் பேப்பர்? இதுல எங்கே இருக்கு உங்க விளம்பரம்?"

"ஆங் - இதுதானுங்க அந்த பேப்பர். நாலாம் பக்கத்தில் இதோ இங்கே வந்திருக்கு பாருங்க."

எ சாமியார், கா சோ விடம், போகலாம் என்று சைகை காட்டினார்.

கா சோ - ஒரு ஓட்டப் பட்ட கவரை - பெருமாளிடம் கொடுத்து, "இதுல நீனா சொன்ன விஷயம் எல்லாம் இருக்கு. அண்ணன் வந்தா இதை அவரிடம் கொடுத்து, படிச்சுப் பாத்து, என்ன செய்யணுமோ அதை செஞ்சி காப்பாத்திக்கணும்னு சொல்லிடுங்க. நாங்க வர்றோம்."

பெருமாள்: "மேடம் நீங்க சினிமா ஃபீல்டுல நுழையறதா இருக்கீங்களா? சினிமாவுக்கு வந்தீங்கன்னா ஒரே படத்துல உச்சாணிக்குப் போயிடுவீங்க. இஷ்டம்னா சொல்லுங்க."

கா சோ: "நான் சினிமாவில் நடித்தால் எங்க அப்பாவுக்குப் பிடிக்காது."

பெரு: "அப்படியா? யாரு அவரு?"

கா சோ: "கவர்னர்"

உள்ளே விளையாடிக் கொண்டிருந்தவர்கள், பீடி புகைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள்.

"யாருங்க - பர்னாலா? ..."

"பர்னாலும் இல்லை, சைபாலும் இல்லை - இவரு ஒரிசா கவர்னர்."

"உங்க அப்பா தமிழரா?"

"ஆமாம்"

"ஒரிசா கவர்னருக்கு தமிழ் தெரியுமா?"

"அது அவரைத்தான் கேட்கணும்" என்று சொன்னவாறு நடந்த சோபனாவை வியப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தது அந்த ரம்மிக் கூட்டம்.

(தொடரும்)
         

செவ்வாய், 28 ஜூன், 2011

வாசகர்களுக்கு எங்கள் வணக்கங்கள்!

        

இன்று ஜூன் இருபத்தெட்டு.

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
   
எங்கள் ப்ளாக் பிறந்தது, இதே நேரத்தில் (காலை மணி ஏழு இருபத்திரண்டு) இதே தேதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2009 ஆம் ஆண்டு). இட்லி வடை வலைப்பூவைப் பார்த்து, படித்து, பெரிதும் கவரப்பட்டு,  தொடங்கப் பட்டது, இந்த 'எங்கள் ப்ளாக்' என்று முன்பே எங்கேயோ தெரிவித்திருக்கிறோம் என்று ஞாபகம். ஆனால், நாங்கள் (தீவிர) அரசியல் எழுதுவதில்லை என்று முடிவு எடுத்து, அதன்படி இருந்து வருகிறோம்.
     
இது எங்களுடைய எழுநூற்று எழுபத்து ஒன்பதாவது பதிவு. 'ஒரு நாளைக்கு ஒரு பதிவு' என்பதை இயன்றவரையிலும் கடைப்பிடித்து வருகிறோம். சற்றேறக் குறைய, மூன்று நாட்களுக்கு ஒரு உறுப்பினர், எங்கள் ரசிகர் மன்றத்தில் ரசிகராக (follower) சேர்ந்து வருகிறார்.
    
எங்கள் ப்ளாக் பதிவுகளை, இ-மெயில் மூலமாகப் பெற்று படிப்பவர்கள் முன்னூற்றைம்பது பேர். Google buzz மூலமாகப் படிப்பவர்கள் (அல்லது படிக்க வாய்ப்பு இருப்பவர்கள்) எழுநூறுக்கு மேல். Engal Blog facebook நண்பர்கள் இன்றைய நிலையில் எழுநூற்று ஐந்து பேர்.
     

ஆக மொத்தம் ஆயிரக் கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கும் வலைப்பூ எங்கள் ப்ளாக் என்றும், உங்கள் அமோக ஆதரவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்று இன்னும் தொடர்ந்து பல பதிவுகள் இட்டு, வலை உலகை  மேன்மேலும் கலக்குவோம் என்றும், உறுதி கூறுகிறோம்.
     
உங்கள் ஆதரவை, தொடர்ந்து இன்ட்லி வோட்டு, கருத்துரைத்தல், ரியாக்ஷன் பெட்டியில் டிக் அடித்தல் போன்று பல வழிகளிலும், எங்களுக்குத் தெரிவியுங்கள்.
   
எங்கள் முகநூல் (facebook) நண்பர்கள், ஒவ்வொரு பதிவிற்கும் கீழே, காணப்படும் like பட்டனை அமுக்குவதின் மூலம் தங்களுடைய முக நூல் நண்பர்களுக்கு, எங்கள் ப்ளாக் பதிவுகளைப் பரிந்துரைக்க இயலும். உங்கள் முகநூல் பக்கத்தில் நீங்கள் எங்கள் ப்ளாக் பதிவை விரும்புகின்ற விவரம் வெளியாவதால், உங்கள் மற்ற நண்பர்களின் கவனத்திற்கும், எங்கள் ப்ளாக் வலை பற்றி தெரிய வரும்.
  
இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமாக, எங்கள் ப்ளாக் வலையில், உங்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன, இன்னும் என்ன வகைப் பதிவுகளை எதிர்பார்க்கின்றீர்கள், என்பது போன்ற விவரங்களை, தயங்காமல் பதிவு செய்யுங்கள். வாசகர்களின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்!

என்றும் உங்கள் ஆதரவை நாடும்,

எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள்.
       

திங்கள், 27 ஜூன், 2011

இந்தி(ய) இசைப் புயல் ஆர் டி பர்மன்





இந்தி(ய) இசையுலகின் இசைப் புயல் மெலடி கிங், பல்லாயிரக் கணக்கான இசை ரசிகர்களின் இதய தெய்வம் ஆர் டி பர்மன் பிறந்த நாள் இன்று.

ராகுல் தேவ் பர்மன். பெயர் சொல்லும் போதே அதிர்கிறது. பலப்பல பாடல்கள் மனதில் ஆக்கிரமிக்கின்றன. இதைச் சொல்லலாம், அதைச் சொல்லலாம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.


Pancham போன பிறகு இனிய பாடல்களுக்கு பஞ்சம் இந்தித் திரையுலகினரால் செல்லமாக பன்ச்சம்தா என்று செல்லமாக அழைக்கப் படும் ஆர் டி பி தனது ஒன்பதாவது வயதில் Funtoosh படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து சாதனை செய்தார் என்பது ஆச்சர்யப் பட வைத்த செய்தி.

தனது கடைசிக் காலத்தில் உடல் நலம் ஒத்துழைக்க மறுத்ததால் தந்தை எஸ் டி பர்மன் ஒப்புக் கொண்ட பல படங்களுக்கு ஆர் டி பர்மன் முடித்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆராதனா, கைட் போன்ற படங்களைச் சொல்லலாம்.

பூத் பங்களா என்ற படத்தில் மெஹம்மூத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். அதே மெஹ்மூத்துக்கு லாக்கொமே ஏக் படத்தில் கிஷோர் குரலில் 'சந்தா ஓ சந்தா' என்ற அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்.


கிஷோர் குமார் குரல் ஆர் டி பர்மனுக்காகவே படைக்கப் பட்டது போலும் என்பது போல இருவரின் காம்பினேஷனில் பற்பல இணையற்ற பாடல்கள்.அஜ்நபி, ஆந்தி, கேல் கேல் மெய்ன், ஆப் கி கசம், அமர் பிரேம், ஜவானி திவானி, ஆ கலே லக் ஜா, வாரன்ட், எத்தனை படங்களில் எத்தனை பாடல்கள்...

ஷோலே படத்தில் ஆர் டி பரமனே பாடிய 'மெஹ்பூபா...மெஹ்பூபா 'பாடலை முதலில் கிஷோரை பாடச் சொல்லி அவர் மறுத்த பின் இவரே பாடியதாகக் கேள்வி.

கேரவான் இன்னொரு அற்புதமான பாடல்களைக் கொண்ட படம்.


டிஸ்கோ பைத்தியம் தொடங்கிய எண்பதுகளின் பிற்பகுதியில் ஆர் டி பி மறக்கப் பட்டதும், ஒதுக்கப் பட்டதும் சோகங்கள். அவர் ஒரு பெரிய ஹிட்டுடன் மீண்ட 1942 a love story அவர் கடைசிப் படமானதும் சோகம்.

பரிச்சை படத்தில் குல்சார் எழுதிய பாடல் கிஷோர் குரலில்.



கேல் கேல் மெய்ன் படத்தில் ஆஷா வுடன் ஆர் டி பர்மன் இணைந்து பாடிய பாடல். தமிழில் இது பின்னர் பிரதிஎடுக்கப் பட்டது!



நிறையச் சொல்ல ஆசை... நேரம் கம்மி... இசைக்கு மொழி தேவை இல்லை. பாடல்களை முழுவதும் கேளுங்கள்...



சனி, 25 ஜூன், 2011

அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ...

      
நம்ம பதிவு நல்ல பதிவு இப்பக் கொஞ்சம் ..... ?

சில நாட்களாக எங்கள் வாலை சுருட்டி வைத்துக் கொண்டிருந்தோம். நண்பர் ஒருவர் அனுப்பிய இணைய சுட்டி ஒன்றைப் பார்த்ததும், எங்கள் குறும்பு ஆசிரியர், தன் வேலையைக் காட்டிவிட்டார். 

நண்பர் நல்ல மனதுடன் அனுப்பிய சுட்டி,  கூகிளின்  மொழி  பெயர்ப்பு  தளம்.


அதிலே, ஆங்கிலத்திலிருந்து அல்லது வேறு எந்த அறுபது மொழிகளிலிருந்தும், மற்ற மொழிகளுக்கு சுலபமாக மொழி பெயர்ப்பு செய்யலாம் என்றும், மொழி தட்டச்சு செய்ததை அது படித்துக் காட்டும் என்றும், அதையே என்ன உச்சரிப்பு என்று ஆங்கிலத்தில் அழகாக எழுதிக் காட்டுகிறது என்றும் கூறியிருந்தார்.

கு ஆ - நல்லதாக நாலு வரிகள் கொடுத்தார். அதை அந்தத் தளம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை, இங்கே கொடுத்துள்ளோம். இதைப் படித்துப் பார்த்து, நாங்கள் கொடுத்த தமிழ் வரிகள் என்ன என்று கண்டு பிடியுங்கள்.

Hello, I know who is speaking? If what you say my name correctly, our Black teachers are ready to give you a hundred points. Get the answer points. Hail to the source!
  

சரி, இதையே தெலுங்கில் மொழி பெயர்க்கச் சொன்னால், என்ன செய்கிறது என்று பார்க்கலாம். அதை அப்படியே சிரஞ்சீவி சாருக்கு அனுப்பி, சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வோம் என்று நினைத்து தெலுங்கு என்று மொழி பெயர்க்கத் தேர்ந்தெடுத்தோம்.
 
உடனே நாங்கள் கேட்ட தெலுங்கு மொழி பெயர்ப்பு வந்தது.
 
హలో, నేను మాట్లాడే ఎవరు తెలుసా? మీరు సరిగ్గా నా పేరు ఏమి ఉంటే, మా బ్లాక్ ఉపాధ్యాయులు మీరు వంద పాయింట్లు ఇవ్వటానికి సిద్ధంగా ఉన్నారు. సమాధానం పాయింట్లు పొందండి. ఆధారం వడగళ్ళు!
 
இந்த ஜிலேபிகளை எப்படிப் படிப்பது என்று கேட்டதும், அந்தத் தளம் கூறியது இது:
 
Halō, nēnu māṭlāḍē evaru telusā? Mīru sariggā nā pēru ēmi uṇṭē, mā blāk upādhyāyulu mīru vanda pāyiṇṭlu ivvaṭāniki sid'dhaṅgā unnāru. Samādhānaṁ pāyiṇṭlu pondaṇḍi. Ādhāraṁ vaḍagaḷḷu!
 
நாங்கள் கொடுத்த நான்கு வாக்கியங்கள் என்ன என்று யாராவது கண்டுபிடித்து, கமெண்ட்டுங்கள். வாசகர்கள் கமெண்ட் எல்லாம் எழுதி முடித்தவுடன், கடைசி கமெண்ட் ஆக, நாங்கள் தமிழில் கொடுத்த வாக்கியங்களை எழுதுகிறோம்.
       
 
கு .ஆ மேலும் சும்மா இருக்காமல், மெட்ராஸ் பாஷையில் சில வாக்கியங்களைக் கொடுத்து, அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அவைகள் இங்கே:
 
 
இன்னா நைனா சொகமா கீறியா?  
Nina cokama kiriya inna?   

இந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர்களின் ரவுஸ் ரொம்ப ஜாஸ்தியா கீதுப்பா! படா பேஜாரு பண்ணுறாங்கோ!
Black teachers have a lot of these ravus kituppa jastiya! Bada pejaru pannuranko!

மெய்யாலுமே சொல்லுறேன், இவங்க கிட்ட ஒண்ணும் வெச்சுக்காதீங்க - அஞ்சு பேரும் எம்டணுங்க!
Meyyalume tell me anything about these veccukkatinka - Anju emtanunka together!

அப்போ சரி வாத்யாரே! நான் வர்ட்டா? ஒடம்பப் பாத்துக்கோ! நான் வந்து கண்டுகினு போனேன்னு யார் கைலயும் சொல்லிக்காத!
Then right vatyare! I vartta? See otampa! Who I ponennu kantukinu collikkata kailayum!

போடா கய்தே! கிட்டே வந்தா கீசிடுவேன்! ஆமாம் சொல்லிபுட்டேன்.
No kayte! Kicituven come again and again! Yes colliputten.

இப்போ இன்னாத்துக்கு இந்த பம்மாத்து காட்டுற?
Pammattu innat now takes this to?

நம்ம கையுல ராங் காட்டாத ஹக்காங் - ஆமாம் சொல்லிபுட்டேன்
Wrong show our kaiyula hakkan - Yes colliputten.


ஐஸா கில்லாடிப்பா நீயி! நம்ம பொழப்புதான் நாறி கெடக்கு!
Aisa killatippa you! To harm our polapputan nari!
               

வெள்ளி, 24 ஜூன், 2011

கண்ணதாசன் பிறந்த நாளில் ...

                           
கவியரசரின் எண்பத்து ஐந்தாவது பிறந்த தினமாகிய இன்று, அவர் எழுதிய ஐயாயிரம் திரைப்பாடல்களில் எங்களுக்குப் பிடித்த முப்பதை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.  (அவர் அமரராகி முப்பது வருடங்கள் ஆகி விட்டன.) இவற்றிலிருந்து, வாசகர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த ஐந்து பாடல்களை வரிசையாக தேர்ந்தெடுத்து,  அந்தப் பாடல்கள் தங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதையும் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

1) காலங்களில் அவள் வசந்தம் .. பாவ மன்னிப்பு.

2) நினைக்கத்  தெரிந்த மனமே...ஆனந்த ஜோதி

3) யார் அந்த நிலவு....சாந்தி

4) காதல் சிறகை.....பாலும் பழமும்..

5) உன்னை ஒன்று கேட்பேன்  ... புதிய பறவை.

6) கண்கள் எங்கே ... கர்ணன்

7) கொடியில் இரண்டு மலருண்டு......உயிரா மானமா

8) நான் மலரோடு தனியாக .........இரு வல்லவர்கள்

9) ஆட்டுவித்தால் யாரொருவர்.... அவன்தான் மனிதன்

10) நான் பேச நினைப்பதெல்லாம்...பாலும் பழமும்

11) சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்...மன்னவன் வந்தானடி

12) அமைதியான நதியிலே.. ஆண்டவன் கட்டளை.

13) வெள்ளி நிலா முற்றத்திலே ... வேட்டைக்காரன்

14) ஒரே ஒரு ஊரிலே.. படிக்காத மேதை.

15) யாரடா மனிதன் அங்கே ... லக்ஷ்மி கல்யாணம் (?)

16) போயும் போயும் மனிதனுக்கிந்த...தாய் சொல்லைத் தட்டாதே  

17) மாலைப் பொழுதின் மயக்கத்திலே ... பாக்யலக்ஷ்மி

18) பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்... சாந்தி நிலையம்.

19)  கண்ணே கலைமானே -- மூன்றாம்பிறை

20) ஏதோ மனிதன் பிறந்து விட்டான்.. பனித்திரை

21) உன்னைத்தான் நானறிவேன்... வாழ்க்கைப் படகு

22) என்னை யாரென்று எண்ணி எண்ணி ... பாலும் பழமும்

23) இதய வீணை தூங்கும்போது... இருவர் உள்ளம்

24) யாரைத்தான் நம்புவதோ... பறக்கும் பாவை

25) புத்தியுள்ள மனிதரெல்லாம்... அன்னை

26) கண்ணிலே அன்பிருந்தால்... ஆனந்தி
 
27) சொன்னது நீ தானா ? - நெஞ்சம் மறப்பதில்லை.
 
28) நெஞ்சம் மறப்பதில்லை - பாடலும், படமும் அதே
 
29) அண்ணன் என்னடா தம்பி என்னடா --- பழனி
 
30) என்னுயிர்த் தோழி, கேளொரு சேதி - கர்ணன்.

(இவை தவிர உங்களுக்குப் பிடித்த வேறு பாடல்கள் இருந்தாலும், உங்கள் கருத்துரையில் தெரிவிக்கலாம்)
                            

வியாழன், 23 ஜூன், 2011

பிற்பகல்


முக்கியமான மீட்டிங் என்று எம் டி அறைக்கும் என் அறைக்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தேன். நடுவில் என் அறை வாசலில் ஒரு பெரியவரும் ஓர் இளைஞனும் காத்திருப்பதைப் பார்த்தேன். என்ன என்று கேள்வி கேட்கக் கூட நேரம் இல்லை. பி ஏ வை அழைத்து அவ்வப்போது விவரங்கள் சொல்வதும் விவரங்கள் கேட்பதுமாக இருந்த போது அவரே காத்திருப்பவர்களைப் பற்றி சொன்னார். அந்த இளைஞனுக்கு என்னால் ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருந்தது. என் கையெழுத்துக்காக காத்திருக்கிறான் என்று தெரிந்தது.
எம் டி ரூம் அல்லாடல், டென்ஷன் குறைந்ததும், அவர்களை உள்ளே வரச் சொன்னேன். என்ன உதவி வேண்டும் என்று கேட்டேன். சொன்னான்.

இந்த மாதிரி உதவிகள் என்னால் தினசரி செய்யப் படுபவை. என் அலுவலக விவகாரம் என்றில்லை. என்னுடைய பல்வேறு அறிமுகங்களைக் கொண்டு என்னால் முடிந்த உதவிகளை யார் எப்போது கேட்டாலும் செய்து வருவது வழக்கம்.
உடன் வந்த பெரியவரை எங்கோ பார்த்த ஞாபகம் லேசாக வந்தது. அவர் என்னைப் பாராட்டி புகழ்ந்து பேசத் தொடங்கினார். உங்களைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது... உண்மையான மனிதர்.... இப்படி அலங்கார வார்த்தைகள்... அவர் பேசுவதை சைகை காட்டி நிறுத்தி விட்டு அவரைப் பற்றி விசாரித்தேன். அரசு அலுவலகம் ஒன்றிலிருந்து ஓய்வு பெற்றதாகச் சொன்னார். எங்கு என்று கேட்டபோது அவ்வாறு சொன்ன ஊர் மற்றும் அலுவலகம் பெயர் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் தந்தை வேலை பார்த்து ஓய்வு பெற்ற அதே இடம். அவர் பெயரைக் கேட்டதும் நினைவு அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டது.
ஆச்சர்யம்! இதே போன்ற ஒரு சூழ் நிலையில் இவரை நான் இவர் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன். என் தந்தை மீது நல்ல அபிப்ராயம் இல்லாதவர். என் தந்தை மீது இவருக்கு லேசான பகையுணர்ச்சி கூட அப்போது இருந்தது என்று அப்பா சொல்லியிருந்தார். அந்த அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் சிலரது பெயர்களில் எல் ஐ சி பாலிசி எடுக்கப் பட்டு அதற்கு சம்பளச் சான்றிதழ் போன்ற விவரங்களுக்கு இவரது கையொப்பம் தேவையாய் இருந்தது.
அப்பா என்னுடன் வந்திருந்தும், இவர்தான் பொறுப்பு என்று அறிந்ததும் அவர் வேறு ஓர் அறையில் அமர்ந்து கொண்டு என்னை மட்டும் கையொப்பம் பெற அனுப்பியிருந்தார். அப்போதைய அவரின் ஸ்டெனோதான் அப்பாவுக்கும் அவர் ஓய்வு பெறும் முன்பு ஸ்டெனோ. அவர் என்னை இன்னார் என்று அறிமுகப் படுத்தி கையொப்பம் இடச் சொல்லி வேண்டுகோள் விடுத்த போது இவர் அந்த பேப்பர்களை கொத்தாகத் தூக்கி பக்கத்து இருக்கையில் போட்டார், பிறகு என்னைப் பார்த்தார்.
"உங்கப்பாவால எவ்வளவு கஷ்டம் தெரியுமா எனக்கு... எனக்கு வேலை தெரியாது என்று என் மேலதிகாரி உங்கப்பாவை வைத்துக் கொண்டே என்னை எவ்வளவு திட்டுவார் தெரியுமா...? என்று தொடங்கி நிதானமாக பேசத் தொடங்கி, கடைசியில், கையொப்பம் போட மாட்டேன் என்று மறுத்தார். ஸ்டெனோ என்னை பரிதாபமாகப் பார்த்தார். நான் கிளம்பவும் விடவில்லை அவர். நெடு நேரம் பேசிய பிறகே விட்டார். ஆனால், கையொப்பமும் இடவில்லை. 'அப்பா செய்ததற்கு நான் என்ன செய்ய, இது என் வருமானம் சம்பந்தப் பட்ட விஷயம்... இதில் வரும் வருமானம் என் வேலையை நிரந்தரமாக்க உதவும்' என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் நிர்த்தாட்சண்யமாக மறுத்த அந்த நாள் இப்போது என் மனதில் நிழலாடியது.
டேபிளில் இருந்த பொருட்களை சீர் செய்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்து விட்ட என்னை, பெரியவரின் குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.

"சார்....என்ன சார் அமைதி ஆயிட்டீங்க.... எதாவது தப்பா பேசிட்டேனா..."

"இந்த மாதிரி புகழ்ந்து பேசறது நான் விரும்பாத ஒண்ணு... வேலை ஆக வேண்டிய இடத்துல புகழ்ந்து பேசறதுக்கு என்ன காரணம்னு உங்களுக்கும் தெரியும்.."

அது தம்பி,,,, ஸாரி சார்... தம்பின்னு கூப்பிட்டதுக்கு மன்னிச்சுடுங்க..."

"பரவாயில்லை...உங்கள் ஆபீசிலிருந்துதான் என் அப்பாவும் ஓய்வு பெற்றார். என்னை அடையாளம் தெரியுதா... நாம கூட சந்திச்சிருக்கோம்..."

'தெரியும் சார்... தெரியும் தம்பி... ஞாபகம் இருக்கு.. தியாகராஜன் சொன்னார்..."

"தியாகராஜன்?"

"ஸ்டெனோவா இருந்தாரே... என்னுடைய இந்த நிலைமையைப் பார்த்துட்டு அவர்தான் உங்களைப் பற்றிச் சொல்லி அனுப்பினார்"

"ஓ..."

இப்போது என் மனதில் கையொப்பமிடும் ஆர்வமோ உதவி செய்யும் எண்ணமோ இல்லை. டேபிள் வெயிட்டை உருட்டிய படி யோசித்துக் கொண்டிருந்தேன்.
"தம்பி...நீங்க எல்லோருக்கும் உதவி செய்யறவர்னு இங்க எல்லோருமே சொன்னாங்க... நான் தான் இவனை இங்கே அழைத்து வந்தேன். நான் செய்தது தப்புன்னு இப்போ புரியுது... அதை மனசுல வச்சிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..."

"எப்படிச் சொல்றீங்க.."

"இத்தனை வருஷம் ஆச்சு...உங்களுக்கும் உங்க அப்பாவைப் போலவே மனசு.... எதையும் மனசுல வச்சிக்க மாட்டீங்க..."

"அதனால..."

"உங்கள் நிலைமைல அப்போ எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி இப்போ இதுவும் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும்... மறுக்க மாட்டீங்கன்னு நம்பிக்கைதான்... நான்தான் என் தப்பை ஒத்துகிட்டேனே..."

இப்போது தேவை என்றதும் தப்பு என்று படுகிறதோ... என்று தோன்றியது. கேட்கவில்லை.

எம் டி இன்டர்காமில் அழைத்தார். மனப் போராட்டங்களை அலச நேரம் கிடைத்ததால் விடுதலை பெற்றது போல உணர்ந்தேன். எழுந்தேன். அவரை நாளை வரச் சொல்லி விடை கொடுத்து விட்டு எம் டி அறை நோக்கிச் சென்றேன்.

(நாளை அவர் வருவாரா? வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க சொல்லுங்க!)

செவ்வாய், 21 ஜூன், 2011

உள் பெட்டியிலிருந்து... 2011 06


சந்திப்பு

நான் நடந்த தூரம் அதிகம்
நடக்க வேண்டியது இன்னும்
அதிகம் இருக்கலாம்...
கவலை இல்லை.
ஏனென்றால்
பயணம் முடியும் முன்னேயே
உன்னைச்
சந்தித்து விட்டேன்..

                                    
    
இனி
தூரமும் பொருட்டல்ல
துயரமும் பொருட்டல்ல...

திருமண வியாபாரம்.

பார்ட்டியில் சந்திக்கும் அழகிய பெண்ணிடம் நேராகச் சென்று
"என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு மனமிருந்தால்
மணமுடிக்கலாம் என்றால் அது நேரடி வியாபாரம்.
    
                                                   

அதுவே உடனிருக்கும் நண்பர்களை அனுப்பி, 'அதோ பார் என்
நண்பன். நல்ல வசதி மிக்கவன். உன் தேவைகளை நிறைவேற்றுவான்.
மணம் செய்ய சம்மதமா' என்று கேட்க வைத்தால் அது விளம்பர
வியாபாரம்.
                                                    
   
அந்தப் பெண் நேராக வந்து, 'நீ பணக்காரன் என்று அறிவேன், என்னை
மணம் புரிவாயா?' என்று கேட்டால் அது பிராண்ட் ரெகக்னிஷன்.
      
                                                            
                               
அந்தப் பெண்ணிடம் சென்று நேரடியாக மணம் புரியும் விருப்பத்தைச்
சொல்லும் வேளையில், கன்னத்தில் அறை வாங்கினால் அது கஸ்டமர் ஃபீட் பேக்!
                                         
                                          
வாழ்க்கை

போராடி
வாழ்வின் நம்பிக்கையை
நான் பெற்றபோது
வாய்ப்பு கடந்து
போயிருந்தது...

போராடி
இழந்து விடுவோம்
என்று
நினைத்த போது
ஜெயிக்கும் வாய்ப்பு
வந்தது.

மனிதர்கள் தேவை
என்று
நினைத்த போது
அவர்கள்
என்னை விட்டுச்
சென்றனர்.

வெற்றிகரமாய்
வெறுக்கக் கற்றுக் கொண்டபோது
யாரோ
என்னை விரும்பத்
தொடங்கியிருந்தனர்.

கண்ணீரைக் காய
வைக்கப்
பழகிய தருணத்தில்
சாய்ந்து அழ
ஒரு தோள்
கிடைத்தது.

விரும்பாத நேரத்தில்
விரும்பியது
கிடைத்ததும்
விலக நினைத்த
நேரத்தில்
ஒட்டும்
உறவும்...

                                 

ம்.....வாழ்க்கை!

வியாதி...

என்
முடிவுரைக்கான
முன்னுரை.
                

திங்கள், 20 ஜூன், 2011

வெட்டி அரட்டை...


கூகிள் போடுகின்ற கூக்ளி!
நாமொன்று நினைத்து அடிக்க தானொன்று தோன்ற வைக்கிறது கூகிள். பையா என்று அடித்தால் பாயா என்கிறது என்றால் /என்றாள், அழைத்தாள்/ அழைத்ததால், ஏன்/என், வேலை/வேளை எல்லாம் தவறாமல் மாற்றி அடிக்கிறது. காட்டிக் கொடுத்து என்றால் கட்டிக் கொடுத்து என்று தமாஷ் செய்கிறது. கவனிக்காமல் விட்டு விட்டால் விபரீத அர்த்தங்கள் வந்து விடுகிறது!

எல்லாவற்றையும்விட கேலிக் கூத்து, ஆங்கிலத்தில் vaal என்று அடித்தால், 'வாழ்' என்று தமிழில் வருவதுதான். பலர் உச்சரிப்பில் ழகரம் ளகரம் ஆகிவிடுகிறது என்றாலும் எழுதுபவர்கள் ழகரம் வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் zha என்று அடித்தால் போதுமே. தமிளன் என்று தவறாக உச்சரிப்பவர்கள் கூட, எழுதும்பொழுது தமிழன் என்று சரியாகத் தானே எழுதுகிறார்கள்? அப்படி இருக்கையில், எழுதும் பொழுது, ஆங்கில எழுத்தாகிய L என்பதை ழ் என்று கூகிள் மொழிமாற்றம் செய்வது தேவை இல்லை என்று தோன்றுகிறது.


*******************************************************

கேட்கிறார்கள் ...
'கலைஞர் ஆட்சிக்கு வரும்போது எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்று எந்த ஊடகங்களும், எந்த பத்திரிகைகளும் வகுப்புகள் எடுப்பதில்லை. ஆனால் ஜெ வரும்போது மட்டும் எல்லோரும் வகுப்பெடுக்கிறார்கள்... ஏனோ?' என்று கேள்வி கேட்கிறார் சோ.

முதல்வரைப் பார்க்கும் நேரம் காலை பதினோரு மணி என்று முடிவான பின் முதல் நாள் இரவே வந்து ரெஸ்ட் எடுத்து நிதானமாக முதல்வரைப் பார்க்கக் கிளம்பாமல் காலை ஏன் திருச்சியிலிருந்து கிளம்பி அளவுக்கதிகமான வேகத்தில் அமைச்சர் கார்ப் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் சாரு நிவேதிதா.

*******************************************************

கண்டதும் நொந்ததும் ...
சமீபத்தில் ஒரு மருத்துவ செக் அப்பிற்கு மருத்துவமனை சென்ற போது கண்ட காட்சி.
ஒரு முதியவர் மனைவியுடன் வந்து மேசைக்கருகே எதிர் திசையில் பார்த்து விழித்துக் கொண்டிருக்க, மேசையின் பின்னே வீற்றிருந்த பெண்மணி 'அப்பா..இங்க வாங்க...' என்று அன்புடன் அழைத்தாள். 'இதோ இருக்கு என்கொயரி' என்று அந்த முதியவர் மனைவியுடன் அருகே சென்றார். நேரம் காலை எட்டரை மணி.

"என்னப்பா...யாருக்கு டெஸ்ட் எடுக்கணும்"

"என் வொய்ஃபுக்குதாமா..."

"Fasting ல இருக்காங்களா..."

"ஆம்மாம்மா... ஆமாம்மா... பாவம்மா... காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடலை..."

இந்த அன்பையும் கரிசனத்தையும் அந்த மேசைப் பெண்மணி பாராட்டியதாகத் தெரியவில்லை. அவள் கடமையில் கண்ணாக இருந்தாள்! டெஸ்ட்டுக்கு உள்ளே அழைக்கப் பட்ட போது கூடவே உள்ளே செல்ல எழுந்த அந்தப் பெரியவரை அந்த அம்மாள் முறைத்த முறை...!! ஒன்றும் பேசாமல் அவர் இருக்கையிலேயே அமர்ந்து விட்டார்.

***********************************************************

வரிசை வரிசையாய்

கிண்டியிலும், மாம்பலத்திலும் ஏன் இன்னும் நிறைய ஸ்டேஷன்களில் 'நான் பீக் அவர்ஸி'ல் கூட மெய்ன் ரோட் வரை டிக்கெட் வாங்க நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது இதற்கு விடிவே இல்லையா என்று தோன்றுகிறது. தானியங்கி டிக்கெட் மெஷின்கள் பாதி வேலை செய்வதில்லை. எல்லா ஸ்டேஷன்களிலும் அது இல்லை. குறையாத கூட்டம் கவுண்டர்களிலும் ட்ரெயின்களிலும்...போதாக் குறைக்கு வழி நெடுக பிச்சைக் காரர்கள் தொந்தரவு வேறு...

************************************************************

பாட்டுக்குப் பாட்டெடுத்து..

மறந்திருந்த ரூனா லைலாவின் சுபரினா (சுபர்னோ'வோ?) ஆல்பம் பற்றி நினைவூட்டியது விகடன் சுகா கட்டுரை. நெட்டில் தேட வேண்டும். நீண்ட நாள் கிடைக்காதிருந்த பி வி ராமன், பி வி லக்ஷ்மணனின் 'மன்னு புகழ் கோசலை தன்' பாடல் சமீபத்தில் கிடைத்தது என்றாலும் தரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பாலமுரளியின் 'ஸ்ரீ நீலோத்பல நாயகி'யும் கிடைத்து விட்டால் சந்தோஷம். சிவானந்த விஜயலக்ஷ்மியின் 'அம்ப லலிதே...' வேண்டுமென்று கேட்ட ஒரு மாமிக்கு இன்னமும்தான் அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

***********************************************************

அட ராமச்சந்திரா !

ராமச்சந்த்ரா மருத்துவ மனையில் யாராவது அட்மிட் ஆனால் ஓடிச் சென்று பார்த்து விடுவேன்! பார்த்து விட்டு கேண்டீனில் ஏதாவது சாப்பிடலாமே...அங்கு கேண்டீன் அவ்வளவு ஈர்க்கிறது! தரமும் பிரமாதம். விலையும் பெரிதாக ஒன்றுமில்லை. அங்கு கிடைக்கும் பரோட்டா (புரோட்டா?) போல ஸாஃப்ட் வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. காபி குறிப்பிட்ட வேளைகளில் மிக நன்றாகவும் பெரும்பாலும் நன்றாகவும் இருக்கின்றது.

**********************************************************

காற்று வந்ததும் ... கரண்ட் போனதா?
நேற்று சென்னையில் மழை பெய்தது என்பது விசேஷமில்லை. நான் ஊரிலேயே இருந்தும் கூட எங்கள் ஏரியாவிலும் பெய்தது மாமழை. சும்மா சொட்டி விட்டு நில்லாமல் மணிக் கணக்கில் கொட்டியது. கொட்டிய தண்ணீர் நீண்ட நேரம் மண்ணில் நின்றது. அட, அதை விட விசேஷம், 'இதுதான் சாக்கு' என்று போய் விடும் கரண்ட் போகவில்லை. அது ரொம்பவே சந்தோஷம். ஆனாலும் சென்னையில் இன்னும் வெய்யில் பாக்கி இருக்கிறது.

**********************************************************

1/4 டாக்ஸி = முழு ஆட்டோ?
முகூர்த்த நாள் என்றால் சென்னையில் கால் டாக்ஸி ஒன்று கூடக் கிடைப்பதில்லை. எப்போது கேட்டாலும் இரண்டு மணிநேரம் கழித்து நேரம் கொடுக்கிறார்கள். அப்புறமும் ஸாரி கேட்டு விடுகிறார்கள் சில சமயம். ஆட்டோவை யாரும் நம்புவதில்லை போலும். இப்போதெல்லாம் ஆட்டோ சார்ஜும் கால் டாக்ஸி சார்ஜும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கின்றது. அப்புறம் ஏன் அவ்வளவு காசு கொடுத்து கஷ்டத்துடன் ஆட்டோவில் போக வேண்டும் என்று மக்கள் கால் டாக்ஸி மற்றும் ட்ராவல்ஸ் வண்டி வைத்து விடுகிறார்கள் போலும்!

*************************************************

எழுத்தாளர்கள் பிழைத்துப் போகட்டும்!

இரண்டு சிறுகதைப் போட்டிகள் நாட்கெடு முடிந்து விட்டது. (கல்கி மற்றும் தினமணி) தினமலர் இன்னும் பதினைந்து நாள் இருக்கிறது. மற்ற இரண்டில் எப்படி கலந்து கொள்ளவில்லையோ (கலந்து 'கொல்லவில்லையோ'...!) அதே போல அடுத்ததிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எல்லோரும் பிழைத்துப் போகட்டும்! நம்மால் அனாவசியப் போட்டி வேண்டாம்...!

**********************************************************************

மறப்போம் மன்னிப்போம்.

கல்கி என்றதும் நினைவுக்கு வருகிறது... பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்று மாய்ந்து மாய்ந்து இரண்டு முறை எழுதியிருக்கிறோமே....அந்த ப்ராஜெக்ட் டிராப் ஆகி விட்டது என்பதைச் சொல்லா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காதே....!

**********************************************************************

அஞ்சலி
கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரனின் துணைவியார் விஜயாம்மா காலமான வருத்தத்திற்குரிய செய்தியை வெள்ளிக் கிழமை பேப்பரில் பார்த்தேன். சனிக் கிழமை வெளியான கல்கி கடைசிப் பக்கத்தில் அவரைப் பற்றி கே.பாரதி அஞ்சலிக் கட்டுரை எழுதியிருந்தார். கல்கி சதாசிவத்தின் மகளான விஜயாம்மாவின் எளிமை பற்றி அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. எம் எஸ்ஸின் வளர்ப்புப் பெண். T K C, ராஜாஜி போன்றோரின் அன்பைப் பெற்றவர் விஜயாம்மா.

******************************************************

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி...  

சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் இன்று முதல் பத்து நாட்களுக்கு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மின் வெட்டு அமல், பொறுத்தருள்க... என்கிறது செய்தி. ஏற்கெனவே இருக்கும் வழக்கமான ஒரு மணி நேர மின் வெட்டும் உண்டாம். கேட்கும் போதே மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது. அப்பாடா....இந்த முறை எனக்கு மின் கட்டணம் குறைவாகத்தான் இருக்கும்...!!   
*******************************************  
                                   

வெள்ளி, 17 ஜூன், 2011

பிளேடு

                              
எலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறியதிலிருந்தே வழக்கம் போல கச கச என்று நெரிந்த கூட்டம் லேசான கடுப்பையும் எச்சரிக்கை உணர்வையும் தந்தது. சாதாரணமாக பத்தரை மணிக்கு மேல் கூட்டம் இருக்காது என்று பெயர். பதினொன்றரை மணிக்கு இந்தக் கூட்டம் அதிருப்தியைத் தந்தது.
                 
 
என்ன செய்ய எங்களைப் போலவே எல்லோருக்கும் ஏதோ வேலை...!

மனைவி உள்ளே சென்று உட்கார்ந்திருந்தவர்கள் பக்கத்தில் ஓரமாக நின்று கொள்ள, பிக் ஷாப்பரை காலிடுக்கில் வைத்துக் கொண்டேன். பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்று செக் செய்து, இடுப்பில் செல் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டேன். கூட்டம் இருந்தாலே தானாக அவ்வப்போது நிகழும் அனிச்சைச் செயல்கள்.

"திருட்டு முழி முழிச்சிகிட்டு பைய பைய தொட்டு பார்த்துக்காதீங்கோ...அப்போதான் பிளேடு போடறவனுக்கு உங்க மேல சந்தேகமே வரும்...." மனைவியின் குரல் மனதில் ஒலித்தது.
     
"ஆமாம்...என் பையில் ஆயிர ஆயிரமா பணம் வச்சிருக்கேன்...என்னைத்தான் தேடுவான் பாரு..."

"அதைத்தான் நானும் சொல்றேன்...ஒண்ணும் இல்லாத பைன்னு தெரிஞ்சு பிளேடால பையை இன்னும் ரெண்டு கீறு கீறிட்டுப் போவான்...மார்புல விழுப்புண்ணோட வரலாம்...!

நான் செக் செய்வதை யாராவது கவனிக்கிறார்களா என்று என்னை அறியாமல் பார்த்துக் கொண்டேன்!
 
இருவர் என்னை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பட்டது. ஓரக் கண்ணால் சட்டைப் பையைப் பார்த்துக் கொண்டேன். பணம் உள்ளே கொத்தாக இருந்தது. இப்போதெல்லாம் தவறாமல் எடுத்துச் செல்லும் கைக்கு அடக்கமான கோடக் கேமிரா இருந்தது. பேனா சற்றே வெளியில் தெரியும் படி எனக்கும் என் மனைவிக்குமான   டிக்கெட் உள்ளே தளளி விட்டுக் கொண்டேன்.

சாதாரணமாக டிக்கெட்டைக் கையிலேயே வைத்திருப்பது வழக்கம். பைக்குள் வைத்து விட்டால் செக்கிங் வந்தால் அவசரத்தில் எடுக்கும்போது பணமோ வேறு ஏதாவது முக்கிய பேப்பரோ வெளியில் வந்து விழுந்து விடும் என்ற பயம். பஸ்ஸில் போனாலும் பத்திரமாக டிக்கெட்டைக் கையில் வைத்திருந்து விட்டு பஸ்ஸை விட்டு இறங்கி வெகு தூரம் வந்த பிறகு கவனமாக தூக்கிப் போடுவேன். ஒரு முறை பழைய பிட் பேப்பரை தூக்கிப் போடுவதை நினைத்து டிக்கெட்டைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு பட்ட அவஸ்தை ஞாபகத்துக்கு வரும்.

அடுத்த ஸ்டேஷனில் இன்னும் கூட்டம் ஏறியது, நெருக்கியது. இறங்குபவர்களுக்கு வழி விட்டு, பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் வழியை மறைக்காமல் இருக்கையின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்று இடத்தை பாதுகாத்துக் கொண்டேன். காலுடனேயே பிக் ஷாப்பரை அழுத்தி இடுக்கிக் கொண்டேன். அருகில் இருந்தவர் முறைத்தார்.

"அதை எடுத்து மேலே வைப்பா....நிற்கவே இடமில்லை..!"

நான் லட்சியம் செய்யவில்லை. தூரத்தில் அமர்ந்திருந்த (ஓரத்தில் ஒட்டி உட்கார இருக்கை கிடைத்துவிட்ட) மனைவியைப் பார்த்தேன். அவளிடம் இரண்டு காய்கறிப் பைகள் இருந்தன. அவசரமாக 'அந்த' இருவரைத் தேடினேன். இறங்கியிருப்பார்களோ...? எதிரில் ஒருவனும் அருகில் ஒருவனும் நின்றிருந்தார்கள்.

மறுபடி என்னை அறியாமல் செல் பெளச்சையும் பாண்ட் பாக்கெட்டையும் தொட்டுக் கொண்டு 'பிக் ஷாப்ப'ரை நோட்டமிட்டுக் கொண்டேன். உள்ளுணர்வு இன்று பிளேடு நிச்சயம் என்றது.
   
பிக் ஷாப்பரில் அசைவு தெரிந்தது. சட்டென பார்த்தேன். கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பிக் ஷாப்பரின் வாயை சரியாக மூடி நிமிர்த்தி வைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். சந்தேகத்துடன் பார்த்தேன்.

"ஒரு கயிறு இருந்தா கட்டிடு நைனா..  விழாது... "

கயிறுக்கு எங்கே போக...லேசாய்ப் புன்னகைத்து விட்டு திரும்பிக் கொண்டேன். கூட்டம் நெரிய,

'ம்ஹூம்..ஆட்டோவில் போயிருக்கலாம்...'

அடுத்தடுத்த ஸ்டேஷன்களிலும் கூட்டம் ஏறியது. இறங்கியதோ கொஞ்சம்தான். இன்னும் மூன்று ஸ்டேஷன்கள் இருக்கின்றன, நாங்கள் இறங்க...
  
ஒரு வழியாய் அடுத்த ஸ்டேஷனும் தாண்ட இவர்கள் இருவரும் என்னை நெருங்கி நின்ற படி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னை இடித்துக் கொண்டு தாண்டிச் சென்று ஒருவன் இறங்கினான். செல் பௌச்சை இறுகப் பற்றியபடி பிக் ஷாப்பரையும் கையால் பற்றிக் கொண்டேன். கவனம் சட்டைப் பையில் இருந்தது. ட்ரெயின் கிளம்பியது. இருவரும் சேர்ந்து டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கொடுப்பது தெரிந்தது. ஒருவன் டிரைன் கடக்கும் போது, என்னைப் புன்னகையுடன் பார்த்து, சலாம் வைத்தான். சந்தேகத்துடன் சட்டைப் பையைப் பார்த்தேன். பணம் இருந்தது. கேமிரா இருந்தது... பேனா இருந்தது.... ஆனால் ...

டிக்கெட்டைக் காணோம்...

பெட்டியில் டிடிஇ வருகிறாரா என்று நோட்டமிட ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டேஷனில் இறங்கும்போது படிக் கட்டுக்கருகில் அல்லது நடைமேடையில் டிக்கெட் பரிசோதகரை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தேன்.