திங்கள், 12 மார்ச், 2012

எட்டெட்டு பகுதி 10:: ஓ ஏ, பிங்கி துரோகத் திட்டம்!

       
பகுதி 9 சுட்டி   
    
வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாக, மூன்று மாத்திரைகள் கொண்ட நீல நிற பாட்டில், கைப் பையில் பத்திரமாக இருக்கின்றதா என உறுதிப் படுத்திக் கொண்டேன். அதில் உள்ள முதல் மாத்திரையே என் கணவரை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பித்துவிடும் என்று உறுதியாக நம்பினேன். மீதி உள்ள மாத்திரைகளை, அந்த டாக்சியரிடம் (டாக்டர் + ஜோசியர் = டாக்சியர்) நானும் என் கணவரும் சேர்ந்தே கொடுத்துவிட்டு வருவோம் என்றும் உறுதியாக நம்பினேன். 
                     
தினமும் மாலையில், காலு சிங்கிடம், 'இன்று ஏதாவது தகவல் உண்டா?' என்று கேட்டவண்ணம் இருந்தேன். காலு சிங் - பரிதாபமாக 'இல்லையே மேடம். அவர்கள் இருவரில் யாரும் எதுவும் உங்களைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. நான் அவர்கள் இருக்கின்ற அறைக்குச் செல்லும் பொழுதெல்லாம், அவர்கள் மும்பை ஹோட்டல் திட்டம் பற்றிதான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்' என்றான். 
                        
இது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும், என் பிறந்த நாள் அன்று, அந்த காவி கலர் மாத்திரையை, என் கணவர் சாப்பிடும் கோக கோலா பானத்தில், அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ போட்டு விட வேண்டும் என்று மனதுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டேன். 
             
ஆகஸ்ட் ஏழாம் தேதி காலையில், வீட்டுக்கு வந்த காலு சிங் என்னிடம் கூறிய செய்தி, எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. 'அவர்கள் இருவரும், ஆகஸ்ட் எட்டாம் தேதி (மறுநாள்) காலை பத்து மணி அளவில் இங்கு வந்து, எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிவிட்டு, மதிய உணவுக்குப் பிறகு மும்பை செல்ல இருப்பதாகவும், மும்பையில் பதிவு திருமணம் செய்துகொண்டு இந்தூருக்குத் திரும்புவார்கள்' என்பதும்தான் அந்தச் செய்தி.     
'மேடம் இந்த விவரங்கள் எதுவும் என் மூலமாக உங்களுக்குத் தெரிய வந்தது என்பது, எஜமானருக்குத் தெரியக் கூடாது. நானே ஒளிந்திருந்துதான் இதைக் கேட்டேன். காலை எட்டு மணிக்கு வழக்கம் போல எஜமானருக்கு கோக்க கோலாவும், பிங்கி அம்மாவுக்கு ஆரஞ்சு ஜூசும் கொடுத்து விட்டு கிளம்பும் பொழுது, எஜமான், ஆஸ்பிரின் மாத்திரை தேடினார். அவருடைய அறையில் இருந்த மாத்திரைகள் எல்லாம் தீர்ந்து போயிருந்தது. ஸ்டோர் ரூமுக்குப் போய், தேடிக் கொண்டு வரச் சொன்னார். அங்கும் கிடைக்கவில்லை. அதைச் சொல்ல, ரூமிற்குச் சென்ற் போதுதான், அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை, நான் கேட்டேன். என்னை வீட்டிலிருந்து ஆஸ்பிரின் மாத்திரைகள் கொண்டு வரச் சொன்னார்' என்று சொல்லி, மாத்திரைகளை வாங்கிச் சென்றான் காலு சிங். 
       
மறுநாள் காலை சென்று, அவர்கள் இருவரையும், ஹோட்டல் ரூமிலேயே மடக்கி, ஓ ஏ சாப்பிடுகின்ற கோக்க கோலா பானத்தில், தன்னிலை அறியும் மாத்திரையை கலந்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 
              
(தொடரும்) 
   

5 கருத்துகள்:

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!