வியாழன், 29 மார்ச், 2012

பணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அரட்டை.

                    
நங்கநல்லூரிலிருந்து விசு அலைபேசியபோது மிக முக்கியமான வேலையில் இருந்தேன். (ஹி....ஹி.. தூக்கம்தான்!) 

"என்னடா... வேலையா இருக்கியா..."

"நானா... எனக்கு என்ன வேலை...? சொல்லுங்க... "
கே டிவி பாருடா... பணக்காரக் குடும்பம்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ஸீன்..."

"கண் போன போக்கிலே வா?"

"அடச்சீ... அது வேற படம்... இது எம் ஜி ஆர் சரோஜா தேவி நடிச்ச படம்... 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை..' பாட்டு"

"ம்.... பார்க்கறேன்" சொல்லி விட்டு முக்கிய வேலையைத் தொடர்ந்தேன்.

ஐந்து நிமிடத்தில் மறுபடி அலைபேசி "இது குழந்தை பாடும் தாலாட்டு.." என்று பாடியது! என்ன முரண் என்று யோசித்தபடி மறுபடி முக்கிய வேலையிலிருந்து கலைந்து கையிலெடுத்தேன்.

"என்ன பார்த்தியா..."

"ஓ... ஊம்...  பார்த்தேன்.. சூப்பர்!"

"என்ன ஒரு பாட்டு இல்லே... இது ஹிந்தியில என்ன பாட்டு சொல்லு..."

"என்கிட்டயேவா.... இதோ யோசிச்சுச் சொல்றேன்..."

"ஹம்ஜோலிடா... இதுலே இன்னொரு பாட்டு வரும்... 'பறக்கும் பந்து பறக்கும்..." பாடிக் காட்டுகிறார்.
   
"ஆமாம்... ஆமாம்...  தெரியும்... அது கூட ஹம்ஜோலியில் இருக்கு" என்றேன்.

"என்ன பாட்டுடா இதெல்லாம்... இல்லை? அந்தக் காலத்துல..." என்று இடைவெளி விட்டார்.

"டென்னிஸ் ஆடியபடியே இன்னொரு பாட்டு இருக்கு... என்ன பாட்டு சொல்லுங்க பார்ப்போம்..." என்றேன். (நாமும் ஒரு கேள்வி கேட்டு, அவர் யோசனை செய்யும் நேரத்தில், நமது முக்கியமான வேலையைத் தொடரலாமே என்கிற நப்பாசையோடு!) 
          
"அடச்சீ.... ஹம்ஜோலி பாட்டு சொல்றே... அதான் சொல்லியாச்சே.."
                
"ச்சே.... இல்லை! தமிழ்லயே..."
                 
"நீயே சொல்லு" 
(ஆஹா தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டாரே!) 
     
"இதயமலர் படத்துல ஜேசுதாஸ் பாடற பாட்டு 'செண்டுமல்லி பூப்போல் அழகிய' என்று வரும் ஜெமினி சுஜாதா நடிச்சது "

"இருந்துட்டுப் போகட்டும் போ.. கல்யாணமாலை பார்ப்பியோ...?"

"ஊஹூம்"

"நேத்து ஒரு ஆள் வந்தார். மோகன், 'என்ன படிக்கிறான் பையன்' என்று கேட்கிறார்.... அதற்கு அவர் 'ஐ ஏ எஸ் படிச்சிட்டு இருக்கான்' என்றார்" இன்னொரு ஆள் 'பையன் சொந்த பிசினெஸ் பண்றான்' என்று சொல்லிவிட்டு 'அடக்கவொடுக்கமா, பாந்தமா, அழகா குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா வேண்டும்' என்றார். வருமானம்? என்றார் மோகன். 'அது போதிய அளவு வருது' என்ற அவர், 'பொண்ணு பத்தாவது படிச்சிருக்கணும்' என்றார். என்னடா மணல் கயிறு மாதிரி கண்டிஷனா இருக்கே என்று கவனிச்சேன். பையன் என்ன படிச்சிருக்கான் என்று மோகன் கேட்டார்... அவருக்கும் ஒரு கியூரியாசிட்டி வந்திருக்கணும்... பையனோட அப்பா சொன்னார்.. 'எட்டாவது படிச்சிருக்கான்'... 


காதலிக்க நேரமில்லை பாலையா சொல்லும் 'ஓஹோ...பையனுக்கு படிப்பு வேற இல்லையோ... அப்போ ஒண்ணு செய்யுமே...' வசனம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வந்திட்டுது"
  
இதுதான் விசு. நாமும் ஒருவேளை நிகழ்ச்சி பார்த்திருந்தாலும், இது மாதிரி யோசித்திருப்போமா தெரியாது. இவர் பார்வையே தனி. அதை விட அவர் அதை விவரித்துச் சொல்லும்போது கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்துக் கொள்வார். 
     
"இந்தப் படத்துல நாகேஷ் ஜோக் நல்லா இருக்கும்... ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் பண்ணித் தருவார் ..." என்று ஆரம்பித்தார்.
             
எங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.
     
"ஓ... அந்த ஞாபகமறதிக்காரராய் வருவாரே... அதுவா... மனோரமா, இவர் ஞாபகமறதி சரியாக டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா... இவர், மனோரமா கர்ப்பமா இருக்கறதா கூத்தடிப்பாரே..."
                   
"சீ..  அது தெய்வத்தாய்... இது வேற..."

பேச்சு அங்கே இங்கே என்று அல்லாடி, ஊட்டி அசெம்ப்ளி ஹால் தியேட்டரைப் பற்றி வந்தது. 
   
"என்ன தியேட்டர்டா அது? குவாலிட்டி படங்கள்தான் போடுவான்... படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால செய்திச் சுருள் போடுவாங்களே, அது மாதிரி இந்தத் தியேட்டர்ல சின்னச் சின்னக் குறும்படம் போடுவான் பாரு... ஒரு படத்துல..."

"தியேட்டர் பத்தித் தெரியுமே... நான் கூட அங்குதான் ஷாலிமார் பார்த்தேன்"

"அது கிடக்கட்டும்...இது ஒரு இங்க்லீஷ் படம். ஒரு வெள்ளைக்காரன் தண்ணியடிச்சிட்டு முதலாளி மேல வெறுப்புல ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கறப்ப அங்க இருக்கற, அவங்க தேசியக் கொடியை பிச்சு எரிஞ்சு துவம்சம் பண்ணுகிரான். அதை, அந்த வழியா வர்ற அவர் முதலாளி பார்த்துடறார்... இவன் பயந்த மாதிரியே 'நாளை ஆபீசில் என்னை வந்து பார்' என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் ட்ரிம்மாக ஷேவ் செய்துகொண்டு, நீட்டாக டிரஸ் செய்துகொண்டு, ஆபீஸ் சென்று முதாலாளிக்குக் காத்திருக்கிறான். வந்தவர் அவனைப் பார்க்காதது போலச் சென்று விடுகிறார். ரொம்ப நேரம் காத்திருந்தவன் சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்கிறார். உணவு இடைவெளியும் வர, இன்னும் காத்திருக்கிறான்..."

"நான் பார்த்ததில்லை... ஆனால் முடிவு தெரிந்து விட்டது. இது மாதிரி வேற கேள்விப் பட்டிருக்கேன்"

"முழுக்கக் கேளு... மத்தியானம் வந்தும் கூப்பிடலை என்றதும் மறுபடி சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்லி தகவல் வருகிறது. என்ன ஆகுமோ என்ன சொல்வாரோ என்ற பதைபதைப்புத் தொடர்கிறது. கிளம்பும் நேரமும் வந்து விட, இன்னும் அழைக்கப்படாததால் கோபம் கொள்ளும் அவன், முதலாளி அறைக் கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைந்து, 'என்ன செய்வே..வேலையை விட்டு எடுப்பியா..எதுத்துக்கோ...என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கே..' என்ற ரீதியில் ஐந்து நிமிடம் படபடவெனப் பொரிய, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் முதலாளி, 'உன் தண்டனை முடிந்து விட்டது.. வீட்டுக்குப் போய்விட்டு, நாளை ஆபீஸ் வந்து சேர்' என்பார். நான் ரசித்த படம் அது"

"சரி உன் வேலையைக் கவனி... அப்புறம் இன்னொரு கதை சொல்றேன்... ஒரு வெள்ளைக்காரப் பெண் நீக்ரோவைக் காதலித்த கதை..."

"இப்பவே சொல்லுங்களேன்...."

"போடா... தூங்கப் போறேன்... இப்பவே பேச ஆரம்பிச்சு 1111  செகண்ட்ஸ் ஆகி விட்டதாக என் செல் சொல்கிறது... இன்றைய லிமிட் அவ்வளவுதான்.. பை.."
                
வைத்து விட்டார்.           
             

16 கருத்துகள்:

  1. ஹம்ஜோலிலே லீனா சந்தவர்கர் தானே ஹீரோயின்?? நல்ல அழகான ஹீரோயின்; பாவம் சொந்த வாழ்க்கையில் கடுமையான துன்பம்; துக்கம். பண்டரிபாய்க்கு ரிலேஷன்னு கேள்விப் பட்ட நினைவு.

    காதலிக்க நேரமில்லை இப்போத் தான் ஹூஸ்டனிலே கூடப் பார்த்தோம். லக்ஷத்து இருபதாவது தடவையா. என்ன இருந்தாலும் நாகேஷ் நாகேஷ் தான். இப்போவும் காமெடினு கழுத்தை அறுக்கறாங்களே.

    எனக்கு செந்தில், கவுண்டமணி காமெடி சுத்தமாப் பிடிக்காது; வாழைப்பழம் தவிர. அது ஒண்ணுதான் கொஞ்சமானும் சிரிப்பை/புன்னகையை வரவழைக்கும்.

    சோப்பு, சீப்பு, கண்ணாடி பார்த்திருக்கீங்களா? நல்ல காமெடிப் படம். அதேபோல் உத்தரவின்றி உள்ளே வா. நாகேஷ் அதிலும் பிரமாதமாய் நடிச்சிருப்பார். ஏதோ படத்தில் பிணமாய் நடிப்பாரே??? அந்தப் படம் கூட????ம்ம்ம்ம்ம்ம் என்ன பேரு?

    பஞ்சதந்திரத்திலேயும் நாகேஷ் வர இடங்களில் காமெடி நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ஹிஹி, அதிசயமா நானும் இன்னிக்கு மத்தியானம் சாப்பிட்டதும் அவசர ஜோலியா இருந்தேன். தினம் கணினிக்கு வருவேன்; இன்னிக்கு முக்கியமான வேலை தூக்கம்! மாசத்துக்கு ஒரு தரமாவது இப்படித் தூக்கம் வரும் மத்தியானத்திலே. இதைச் சரிக்கட்ட இன்னிக்கு ராத்திரி பதினொண்ணோ, பனிரண்டோ தூக்கம் வராமல் முழிச்சுட்டுக் கொட்டுக் கொட்டுனு உட்கார்ந்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  3. காமெடியை பொருத்தவரை - அப்பப்ப பீல்ட்ல யாரு காமெடி டாப்ல இருக்கோ, அவர்கள் காமெடி எனக்கு பிடிக்குது. குறிப்பா ஒருத்தர் காமெடி தான் சிறப்புன்னு சொல்ல முடியல.

    பதிலளிநீக்கு
  4. ஏதோ படத்தில் பிணமாய் நடிப்பாரே??? அந்தப் படம் கூட????ம்ம்ம்ம்ம்ம் என்ன பேரு?

    மகளிர் மட்டும் ???

    பதிலளிநீக்கு
  5. //எங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.//

    "நாகேஷ் என்கிற அந்த மகா கலைஞன்..

    -- கமலஹாசன்

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியமான பதிவு.
    ஹம்ஜோலி லீனா நல்ல அழகு. இவங்க கிஷோர் குமார் (என்னோட favorite singer) மனைவி. இந்த படத்துல 'ஹாய் ரே ஹாய்' பாட்டு நல்லா இருந்தாலும் ஜிதேந்திரா முகத்தை யாரு பாக்கறது. எனக்கு ஜிதேந்திரா சுத்தமா பிடிக்காது. இதே தமிழ் பாட்டு மெட்டு வேறயா இருந்தாலும் 'இதுவரை நீங்கள்' பாட்டை தொடர்ந்து கேட்டுண்டே இருக்கலாம். பாடல் காட்சியையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாக்கலாம்.
    'பறக்கும் பந்து பறக்கும்', 'செண்டு மல்லி பூ போல்' இந்த இரண்டு பாடலுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடல்களை பற்றி ஒரு முறை தன் 'மெல்லிசை நினைவுகள்' பகுதியில் அப்பாதுரை அவர்கள் எழுதி இருந்தார். சுவாரசியமான பதிவு. சுட்டியும் கீழே. http://moonramsuzhi.blogspot.com/2010/05/blog-post_27.html

    மிக சிறந்த காமெடி என்றால் என்றுமே நாகேஷ்தான். கீதா மேடம் நாகேஷ் பிணம் மாதிரி நடித்த படம் மகளிர் மட்டும்.

    பதிலளிநீக்கு
  7. வெட்டி அரட்டை சுவை. நாகேஷ் நகைச்சுவை மன்னர்தான். ஆனாலும் கீதா சாம்பசிவம், நீங்க கவுண்டமணியின் நிறைய நல்ல காமெடிகளை மிஸ் பண்ணியிருக்கீங்க. வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  8. நீங்க கவுண்டமணியின் நிறைய நல்ல காமெடிகளை மிஸ் பண்ணியிருக்கீங்க. வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கவும். //

    வேண்டாம், வேண்டாம், எரிச்சல் தாங்காது எனக்கு. உருவத்தைக் கேலி செய்வதும், நிறத்தைக் குறித்துக் கிண்டல் செய்வதும், காலால் எட்டி உதைப்பதும் தான் நகைச்சுவை என்றால் அந்த நகைச்சுவை எனக்கு வேண்டவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  9. நகைச்சுவையில் நாகேஷ் அவர்களைத் தள்ளிட்டு முன்னுக்கு நிற்க யாருமே இன்னும் இல்லை.அவர் தனி !

    நாகேஷ் அவர்களின் ஏதாவது நகைச்சுவைக் காணொளி தந்திருக்கலாம் !

    செண்டுமல்லிப்பூப்போல் அழகிய பந்து....பாட்டுக் கேட்டேன் இதில்.அழகான பாட்டு.அதைத் தொட்டு நிறையவே பாடல்கள் இருக்கு !

    http://www.youtube.com/watch?v=Qa03u29MRkY

    பதிலளிநீக்கு
  10. அது சரி, நேத்தே மறந்துட்டேன்; இந்த விசு தான் அந்த விசுவா????????? :))))))))

    பதிலளிநீக்கு
  11. சரியாச் சொன்னீங்க...அதே விசுதான்!

    பதிலளிநீக்கு
  12. இவங்க கிஷோர் குமார் (என்னோட favorite singer) மனைவி. //

    ரெண்டு பேருக்கும் இரண்டாவது திருமணம். கிஷோருக்கு மூன்றாவது?? யோகிதா பாலியைத் திருமணம் செய்திருந்தாரோ? தெரியலை. ஆனால் லீனா பாவம். முதல் கணவர் சித்தார்த்??? அரசியல்வாதிகளால் கொல்லப்பட்டார். லீனாவின் கண்ணெதிரேயே கோவாவில்.

    பதிலளிநீக்கு
  13. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயரோடு எல்லா தினசரிப் பத்திரிகைகளில் வந்ததால் இது தெரியும். :)))))))

    பதிலளிநீக்கு
  14. நன்றி அனைவருக்கும்....

    நாகேஷின் சூப்பர் ஹிட்டுகளைக் கனேக்கேடுத்தால் தொடர்பதிவே போடலாம்...!
    ஜித்தேந்திரா பிடிக்கா விட்டாலும் நிறைய நல்ல பாடல்கள் அவர் நடிப்பில் வந்துள்ளதே மீனாக்ஷி...என்ன செய்ய? உதாரணமாக முசாஃபிர் ஹூன், ஓ..மாஜீரே, போன்றவை...! :))

    பாடல் சுட்டி கொடுத்த ஹேமாவுக்கு நன்றி.

    லீனா சந்தாவர்க்கர் சஞ்சீவ் குமாருடன் நடித்த படம் ஒன்றில் இரண்டு கிஷோர் பாடல்கள் நன்றாக இருக்கும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!