வெள்ளி, 20 ஏப்ரல், 2012

சினி லாஜிக்ஸ்

                          

ஹிந்தித் திரைப்படத்தில் தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சில பாத்திரங்கள் வரும்..'படோசன்' மெஹ்மூத் மாதிரி!   மறக்காமல் விபூதிப் பட்டை, தோளில் துண்டு என்று வரும் அந்த கேரக்டரின் பெயர் பெரும்பாலும் ராமமூர்த்தியாக இருக்கும்! அவர் ஹிந்தியை ஒரு மாதிரித் தொங்கலில் இழுத்து இழுத்துப் பேசுவார்... நடுநடுவே 'ஐயோ, ஆமாம், சரி' போன்ற தமிழ் வார்த்தைகள் முக்கியம். 
                 
அதுவே தமிழில் வடநாட்டுக் கேரக்டரைக் குறிக்க பொதுவாக 'சேட்டு' பாத்திரம்! தலையில் குல்லாய், சட்டையின் மேல் ஒரு அரை ஜிப்பா...'வந்துருக்குது, போயிருக்குது, அரே, அச்சா, நம்பள்கி' போன்ற வசனங்கள் இடையிடையே முக்கியம்!
                    
ஒரு குடும்பம் மிக சந்தோஷமாய் ஆடிப் பாடுகிறது என்றால் பாட்டு முடிவில் சோகம் நிச்சயம்! 
                          
இரண்டு மூன்று அண்ணன் தம்பிகள் என்றால் கட்டாயம் பிரியப் போகிறார்கள்.. திரும்ப ஒன்று சேர ஒரு பாட்டு ரெடி செய்து வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்! ('ஆனந்தம், வானத்தைப் போல போன்ற படங்கள் விதிவிலக்கு!) இதற்கு யாதோன் கி பாராத் சின்ட்ரோம் என்று கூடப் பெயர் சொல்லலாம்!
                            
அப்பாவோ அண்ணனோ கண்டிப்பான போலீஸ் ஆபீசர் என்றால் மகனோ, தம்பியோ திருட்டு வேலை செய்பவனாக இருப்பான் என்று அறிக! அதே போலீஸ் ஊழல் பேர்வழியாக இருந்தால் திருட்டு கேரக்டர் நல்லவனாக இருக்கும்! 
               
கண்டிப்பான போலீஸ் ஆபீசருக்கு இளமையான, அழகான மனைவியைக் காட்டினால் அவள் இடைவேளைக்குள் கற்பழிக்கப்பட்டோ,  கற்பழிக்கப்படாமலோ கொடூரமாகக் கொலை செய்யப் படுவாள் என்றும் தெரிந்து கொள்ளலாம்!
                       
கதாநாயகனின் நண்பர்களில் ஒருவன் அசட்டுத்தனம் அப்பாவித்தனம் கலந்து குணச்சித்திரம் காட்டினால் அவன் கிளைமேக்சுக்கு முன்னால் சாகப் போகிறான் என்று அர்த்தம்.
                             
இரண்டு கதாநாயகிகள் இருந்தால் ஒருத்தி கதாநாயகனைக் காப்பாற்றும் வகையில் உயிர்த் தியாகம் செய்யும் வாய்ப்பு நிறைய. அப்போதுதான் இன்னொரு காதலியுடன் நாயகன் சேர முடியும். 'ஒருவனுக்கு ஒருத்தி' பண்பாடு!
                          
(ஆனால் இதை மீறிய படங்கள் ஒன்றிரண்டு உண்டு.. வீரா போல.. அதே சமயம் இரண்டு பேரை[க் காதலித்து] மணந்த பெண் கேரக்டர்கள் படங்களில் கிடையாது. திரௌபதி புராணப் பாத்திரம் சேர்க்காமல்! )

கதாநாயகன் திருடனாக இருந்தாலும் நல்லவராக இருப்பார். வில்லன் போலீசாக இருந்தாலும் கெட்டவராக இருப்பார்.

திருமணம் நிச்சயமாகி விட்ட நிலையிலும் கதாநாயகியை நாயகன் காதலிக்கிறாரா.... நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாப்பிள்ளை கெட்ட குணங்கள் நிறைந்துதான் காணப் படுவான். உண்மை உணர்ந்து நாயகி கிளைமேக்ஸில்  நாயகனுடன் இணைந்து விடுவாள்.
   
அருவியிலிருந்து விழுந்தாலும், லாரி, ரோட் ரோலர் என்று மேலே ஏறினாலும் படு சீரியசாக ஆகும் ஹீரோ கூட அடுத்த இரண்டு காட்சிகளில் அல்லது கிளைமேக்சில் உயிருடன் வந்து விட வேண்டும். அவருக்கு சாவு கிடையாது! ஆனால் அவர் விடும் இரண்டு குத்தில் ஐநூறு மைல் தூரம் பறந்து விழும் வில்லன் கோஷ்டி ஆட்கள் தலை டக் டக்கென தொங்கி விட வேண்டும்!
             
ஒரு பாடலில் பணக்காரனாகி விட வேண்டும். பியானோ முதல் அனைத்து இசைக்கருவிகளையும் வாசிப்பதிலிருந்து, குதிரையில் பறப்பது வரை அனைத்து கலைகளும் கற்றவராக இருக்க வேண்டியவர் ஹீரோ!   
                    
சில அபத்தங்கள்....
                       
வில்லன் AK 47 வைத்துக் கொண்டு இடைவிடாது சுட்டாலும் ஒரு குண்டு கூட ஹீரோ மேல் படக் கூடாது. . ஆனால் அதே சமயம் ஹீரோ கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட்டே வில்லன் கோஷ்டியை வீழ்த்தி விடுவார்.
                      
பாடல்களே அபத்தம். (நாம் பாடல்களை ரசிக்கிறோம் என்பது வேறு...) எந்தச் சூழலில் பாடல் வைப்பது என்ற விவஸ்தையே இல்லாத ஒரு பாடல் காட்சி பற்றிச் சொல்ல வேண்டும்! படம் எனக்குப் பிடித்த 'புன்னகை'.     திரையுலக மேதை பாலச்சந்தர் படம். கதாநாயகியைக் கற்பழிக்க வில்லன் வருகிறான்... முயற்சி செய்கிறான்... அந்த நிலையில் ஒரு பெண் கெடுக்க வருபவனைத் தாக்கி விட்டு ஓடித் தப்பிக்க முயற்சி செய்வாளா, பாடுவாளா...! அங்கு ஒரு பாடல் வைக்க பாலச்சந்தருக்கு எப்படித் தோன்றியதோ....."ஆணையிட்டேன் நெருங்காதே... அன்னையினம் பொறுக்காது..." என்று!
                        

26 கருத்துகள்:

  1. //கண்டிப்பான போலீஸ் ஆபீசருக்கு இளமையான, அழகான மனைவியைக் காட்டினால்...//

    அதே மாதிரி இவர்கள் இருவரும் தங்கள் அழகுக் குழந்தையை முதுகில் சுமந்து அம்புலி காட்டி உயிராய் நேசித்து கொஞ்சிக் குலவுகிறார்கள் என்பது போன்ற ஆரம்பக்காட்சிகள் இருந்தால், பின்னால் அந்தக் குழந்தையை வில்லக் கூட்டம் கடத்தி பிணையாய்க் கொண்டு பேரம் பேசப்போகிறதென்றும்...

    பதிலளிநீக்கு
  2. பழைய படங்களைவிட இப்போதைய படங்கள் பரவாயில்லை.தமிழ்ப்படங்களைவிட மலையாளப்படங்கள் இயல்பாய் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை said...
    பாலச்சந்தரு படா ஞானி.

    'படா ஞானி' என்பதற்குப் பதில் "பட ஞானி" என்றிருந்தால் நன்றாக இருக்கும் !

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டை குறும்பன்21 ஏப்ரல், 2012 அன்று AM 7:51

    பாலச்சந்தரு படா பட ஞானி!

    பதிலளிநீக்கு
  5. ஒரு பட இயக்குனர் மகா சிந்தனை வாதியாக,சமூக பொறுப்புணர்வு மிக்கவராக,சமூகத்தை மாற்றும் எண்ணம் கொண்டவராக இருந்தாராம்.
    ஆனால் அவர் எடுத்த படங்களெல்லாம் தோல்வி அடிந்து கொண்டே இருந்ததாம்
    .அவரது நண்பரது ஆலோசனைப்படி ஒரு மனோ தத்துவ மருத்துவரிடம் ஆலோசனை கேட்க போனார்.நன்கு பரிசோதித்த மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை வழங்கினார்.இயக்குனரும் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டு ,அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.
    அதன் பின்னர் இயக்குனரும் ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.அத்தனை படங்களும் வெற்றி மேல் வெற்றியை குவித்தன......
    ஒரு நாள் முன்பு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பதட்டத்தோடு ஓடி வந்து இயக்குனரை சந்தித்தார். இயக்குனரும் மருத்துவரை ஆசுவாசப்படுத்தி பதட்டத்துககான காரணத்தை வினவினார்.
    மருத்துவர் மென்று விழுங்கியவாறு காரணத்தை கூறினார்.இயக்குனருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மூளையை வெளியில் எடுத்தது தலைக்குள்ளே வைக்க மறந்து விட்டதாக கூறினார்.
    சிறிது நேரம் யோசித்த இயக்குனர் பதட்டப்படாமல் கூறினார்"பரவாயில்லை...உள்ளே மூளை இருந்தபோது எடுத்த படங்கள் ஏதும் ஓடவில்லை....
    மூளை இல்லாத போது எடுத்த படங்களெல்லாம் நன்றாக ஓடுகின்றன......அப்படியே இருக்கட்டும்"என்றார். இந்த கதை இந்திய படங்களுக்கு மட்டுமல்ல,ஹாலிவூட்டுக்கும் பொருந்தும்.....

    பதிலளிநீக்கு
  6. பட ஞானியா இருந்தா அப்படி எடுத்திருப்பாரா?

    பதிலளிநீக்கு
  7. பட இயக்குனர் ரஜனிகாந்த் படங்கள் நிறைய எடுத்திருப்பார் போல pudukai selva :)

    பதிலளிநீக்கு
  8. Film Institue-ல் படித்த எங்கள் ப்ளாக் உறுப்பினர் யார்? துணை இயக்குனர் வாய்ப்பு உள்ளது. அணுகவும்!

    பதிலளிநீக்கு
  9. தமிழ் சினிமாப் படங்களின் அத்தனை கதை அம்சங்களையும் ஒரே பதவில் அடக்கிட்டீங்க..!! ம்ஹூம் இப்படியெல்லாம் கூடவா...!!! கலக்குங்க..!!!

    பதிலளிநீக்கு
  10. இதே மாதிரி ஒரு பதிவு என்கிட்டேயும் draft-ல் இருக்கு. நான் எழுதியிருப்பவை அநேகமாய் வேறு !

    பதிலளிநீக்கு
  11. இதே மாதிரி வழக்கமான டயலாக்ஸ் எல்லாம் எழுதவும். அம்மாக்கள், அப்பாக்கள், தியாக சகோதரிகள்.
    ''குடும்ப மானமே டெஹ்ருவுக்கு வந்துட்டதே!!
    அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க.

    மெஹ்பூப் தமிழை அறுத்த மாதிரி யாரும் அறுக்கப் போவதில்லை.

    அதே போல இந்த நம்பள்கி ஆரம்பித்தது தூக்குத்தூக்கியிலிருந்துதான் என்று நினைக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  12. கெடுக்க வந்த வில்லனைத் திகைக்க வைத்துத் தப்பிக்கப் பாடினாரோ? கேட்க சகிக்காமல் பாடினால் வில்லன் மிரண்டு ஓடிவிடுவாரே, இதுகூட நல்ல டெக்னிக்தான்.

    பதிலளிநீக்கு
  13. அப்பாதுரை சார்...என் மேலே உங்களுக்கு ஏனிந்த கொலை வெறி .....
    நான் பொதுவா தான கத சொன்னேன்.
    என் ரஜனி படத்த சொல்லி எனக்கெதிரா கெளப்பிவிடுறீங்க

    பதிலளிநீக்கு
  14. .. அதே போலீஸ் ஊழல் பேர்வழியாக இருந்தால் திருட்டு கேரக்டர் நல்லவனாக இருக்கும்! ..

    ஊழல் பேர்வழி போலீஸ் புரியுது,
    திருட்டு கேரக்டர் நல்லவனா? ரஜினி டயலாக் போல இருக்கே? புரியும் ஆனா புரியாதா?

    பதிலளிநீக்கு
  15. யாதோன் கி பாராத் சின்ட்ரோம்

    நிறைய சின்ட்ரோம்களின் தோரணம் சினிமா!

    பதிலளிநீக்கு
  16. சூப்பரான லாஜிக் தோரணங்கள்... இதையெல்லாம் சினிமா இயக்குநர்களே கவனித்திருப்பார்களோ என்னவோ...!

    பதிலளிநீக்கு
  17. எங்கள் பிளாக்22 ஏப்ரல், 2012 அன்று PM 9:09

    ஜீவி, ஹேமா, middleclassmadhavi, அப்பாதுரை k_rangan, குரோம்பேட்டைக் குறும்பன், மறுபடி மறுபடி அப்பாதுரை, மறுபடி புதுகை செல்வா, மோ. சி. பாலன், பழனிவேல், மோகன் குமார், வல்லிசிம்ஹன், கீதா சந்தானம், ராஜராஜேஸ்வரி, Hotlinksin....
    ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ரசிக்க வைத்த புதுகை செல்வாவுக்கும், இன்னொரு ஐடியா கொடுத்துள்ள வல்லிம்மாவுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.....!

    பதிலளிநீக்கு
  18. கதாநாயகனோ, நாயகியோ ஏதாவதொரு போட்டியில் கலந்து கொள்கிறார்களென்றால் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் இருக்கும். ஆனாலும் கடைசி நிமிடத்தில் நுழைவாயிலின் அருகே வந்து பங்கேற்று ஜெயித்து விடுவார்கள்.

    இந்திப் படங்களைப் பொறுத்தவரை பிறந்த நாள் கொண்டாட்டமென்றால் நாயகனுக்கோ, நாயகிக்கோ விருப்பமில்லாத திருமணம் நிச்சயிக்கப்படும்.

    இனிப்பென்றால் ஒரு காலத்தில் கீர், இடைக்காலத்தில் லட்டு, இப்ப வரைக்கும் காரட் அல்வா செய்து வைத்துக் கொண்டு அம்மாக்கள் காத்திருக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  19. எங்கள் ப்ளாக்23 ஏப்ரல், 2012 அன்று PM 7:58

    அமைதிச்சாரலின் ஆப்சர்வேசன்ஸ் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  20. "திரைப்படங்களுக்குக் கதை - காட்சி அமைப்பது எப்படி?”ன்னு புக் போடலாம். (பதிவர் சிண்ட்ரோம்!!) :-))))

    பதிலளிநீக்கு
  21. செம்ம நக்கலான பதிவுங்க சார், தமிழ் சினிமால கால காலமாய் தவிக்கும் மசாலாப்பொடிகளை தூவி விட்டுட்டீங்க.அருமை..மிக்க நன்றி.

    @@ இதற்கு யாதோன் கி பாராத் சின்ட்ரோம் என்று கூடப் பெயர் சொல்லலாம்! @@
    உண்மையை சொல்லனுமுனா இதற்கு The Man Who Knew Too Much (1956) சிண்ட்ரம் அப்படினுதான் பேரு வைக்கனும்.ஹிட்ச்காக் படம்..அவருதான் இந்த குடும்ப பாட்டை சினிமாவுக்கு தந்த டைரக்டர்.

    கதாநாயகன் திருடனாக இருந்தாலும் நல்லவராக இருப்பார். வில்லன் போலீசாக இருந்தாலும் கெட்டவராக இருப்பார் @@
    என்னமா யோசிக்கிறாங்க நம்ம சினிமாக்காரவங்க..இது ஒன்னு போதும் நம்ம சினிமாவ உயர்த்த.

    பதிலளிநீக்கு
  22. இப்போதைய நிலவரப் படி கதாநாயகன் அடிஆளாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும் பணக்கார வீட்டில் இஞ்சினியர் அல்லது மருத்துவப் படிப்புப் படிக்கும் கதாநாயகியைக் காதலிக்க வேண்டும். அதுவும் துரத்தித் துரத்தி! நீ என்னைத் தான் காதலிப்பே பாரு! இருடி, நீயே என் கிட்டே வந்து உன் காதலைச் சொல்லுவே பாரு! என்னை உன்னால் மறக்க முடியாதுனு எல்லாம் சொல்லிக் கதாநாயகிக்கு மன உளைச்சல் கொடுத்து திரும்பத் திரும்ப இதையே பேசி அவளை ஒரு வழி பண்ணிடணும். :)))))

    பதிலளிநீக்கு
  23. ஹஹஹா.. எல்லா காலத்துக்கும் பொருந்தும் லாஜிக்ஸ் !!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!