செவ்வாய், 15 மே, 2012

எட்டெட்டு பகுதி 18:: இவரா அவர்?

     
    
கே வி சொல்கிறார்: கோவிந்தராஜன் என்ற பெயரைக் கேட்டதும், எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது! மாயா(வின் ஆவி) தன்னுடைய தந்தையின் பெயரை, கோவிந்தராஜன் என்றுதானே கூறியது? இவரா அவர்? "சார் - நீங்க மா ...." நாக்கு நுனிவரை வந்துவிட்ட கேள்வியை, 'சட்'டென்று நாக்கைக் கடித்து நிறுத்தினேன். வாயை இறுக மூடிக்கொண்டேன். 'எனக்கு எப்படித் தெரியும்'  என்று அவர் கேட்டால், நான் என்ன சொல்வது? அப்படியே சொன்னாலும், மாயா தற்கொலை செய்துகொண்டாள் என்று நினைத்திருக்கும் அவருக்கு, 'மாயா கொலை செய்யப்பட்டாள்' என்று எனக்குத் தெரிந்த உண்மையைக் கூறினால், அவர் மனம் என்ன பாடுபடும் என்று நினைத்து, கேட்க வந்த கேள்வியை அப்படியே மாற்றி, "சார் நீங்க மார்னிங் இங்கே எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டேன். 
             
கோ: "வரதராஜன் - அது ஒரு பெரிய கதை. வீட்டுக்கு உள்ளே வாங்க, சொல்றேன்."
                
வீட்டுக்குள் நுழைந்தோம். 
                      
சுவரில் ஒரு படம். அந்தப் படத்திற்கு பெரிய மாலை. அந்தப் படத்தில் ஒரு பெண். நேற்றிரவு நான் பார்த்த மாயா உருவத்திற்கு, சற்றும் பொருத்தமில்லாத முகம். (மாயா உருவம் சொல்லியது, எனக்கு ஞாபகம் வந்தது. 'நான் எந்த உருவமும் எடுத்துக் கொள்ளலாம்; நீங்க பயணத்தின் போது பார்த்த விக்ரமாற்குடு கதாநாயகி ரூபம் எடுத்து வந்திருக்கின்றேன்'...) ஆனால், இந்தப் படத்தில் இருந்தது அழகான, களையான முகம். அந்தப் படத்தில் இருந்த பெண்ணுக்கு படம் எடுக்கப் பட்டபோது இருபது வயதுதான் இருந்திருக்கும். அந்தப பெண்ணின் கண்களே ஏதோ ஒரு சோகக் கதை சொல்வது போல இருந்தது. 
                 
கோ: "இவள்தான் என்னுடைய பெண் மாயா. இவள், இந்த வீட்டில், இந்த இடத்தில் சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட்டாள். அவளுடைய நினைவாக, இங்கே ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் எட்டாம் தேதி இங்கு வந்து, அவளுடைய படத்திற்கு மாலை அணிவித்து, இங்கேயே இரவு முழுவதும், என் மகளை நினைத்தபடி தியானம் செய்வேன். அவளுடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றாகப் போய்விட்டது. தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று, என்னுடைய குழந்தை தற்கொலை செய்து கொண்டுவிட்டாள்."
            
கே வி: "ஓ? அப்படியா? உங்க மாப்பிள்ளை யாரு? எங்கே இருக்கின்றார்?"
                       
கோ: "என்னுடைய சொந்த ஊர் வல்லம். என்னுடைய பெண், நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், ஒருவருடன், இந்த ஊருக்கு ஓடி வந்து, அவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். நான் அது பிடிக்காமல், வல்லத்திலேயே ரொம்ப வருடங்கள் தனியாளாக இருந்தேன். குழந்தை இல்லாத ஏக்கத்தில், இவள் தற்கொலை செய்து கொண்டவுடன், என்னுடைய மாப்பிள்ளை, என்னை இங்கே வரவழைத்தார். எனக்கு, இன்றளவில், என் மாப்பிள்ளையைத் தவிர வேறு எந்த உறவும் கிடையாது. அவர் என்னை இந்த ஊரிலேயே இருக்கச் சொல்லி, எனக்கு இந்த ஹோட்டலில் தங்குவதற்கு, சாப்பாட்டுக்கு வசதிகளை, தன செலவிலேயே செய்து கொண்டு உள்ளார். ஆனால், அவர் யார், அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்பதை, அவருடைய அனுமதி இல்லாமல் யாரிடமும் சொல்லக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்."
               
கே வி: "அப்படியானால், நான் அவரைப் பற்றி எதுவும் கேட்டு, உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை" 
                    
அப்பொழுது என்னுடைய அலைபேசியில், எனக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியவர், என்னுடைய மாமனார். "மாப்பிள்ளை ரொம்ப நேரமா உங்களைத் தொடர்புகொள்ள முயன்று, இப்போதான் கனெக்சன் கிடைத்தது. உங்களுக்கு ஒரு பெண் பிறந்திருக்கின்றாள். ஆமாம், நம்ம அரவிந்துக்கு தங்கச்சி பொறந்திருக்கா. உங்க ஆபீஸ் வேலை எல்லாம் முடிஞ்சுடுத்து என்றால், உடனே கிளம்பி ஊருக்கு வாங்க, மாப்பிள்ளை" 
                          
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கோவிந்தராஜனிடம், "சார் எனக்கு ஒரு பெண் பிறந்திருக்கின்றாள். என்னுடைய மாமனார் ஃபோன் செய்து சொன்னார். நான் உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் இந்தூருக்கு வந்தால், உங்களை சந்திக்கின்றேன்" என்று கூறி, விடை பெற்றேன். 
               
****************************************
ஊர் வந்து சேர்ந்ததும், ஓய்வு எடுத்துக் கொண்டு, என்னுடைய மனைவியையும், பெண்ணையும் பார்ப்பதற்கு, ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அக்காவுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கின்றது என்று கேள்விப் பட்டவுடன், என்னுடைய (உதவாக்கரை) மைத்துனன், அந்தக் குழந்தைக்கு, ஒரு பிங்க் நிற கவுன் வாங்கி வந்து கொடுத்திருந்தான். என்னுடைய மனைவி, அந்த கவுனை, என் பெண்ணுக்கு அணிவித்திருந்தாள். என்னைப் பார்த்ததும், என் மனைவி ரொம்ப சந்தோஷமாக, "வந்துட்டீங்களா? நம்ப பெண்ணைப் பாருங்க! எவ்வளவு அழகா, க்யூட்டா இருக்கா!"

"ஆமாம். ரொம்ப அழகா, தலை நிறைய கரு கரு, சுருள் முடியோடு, தீர்க்கமான கண்களோடு, க்யூட்டா இருக்கா!"
   
மனைவி: "இந்த அழகுக் குட்டிக்கு, இந்த 'பிங்கி'க்கு, 'மாயா' என்று பெயர் வைப்போமா?"
   
(தொடரும்) 
                       

8 கருத்துகள்:

  1. நல்ல வேளை சமாளிச்சாரு. நானா இருந்தா "சார் நீங்க மாம்பழம் சாப்பிடுவீங்களா?"னு எக்கச்சக்கமா ஏதாவது கேட்டு வச்சிருப்பேன்..

    பதிலளிநீக்கு
  2. //நானா இருந்தா "சார் நீங்க மாம்பழம் சாப்பிடுவீங்களா?"னு எக்கச்சக்கமா ஏதாவது கேட்டு வச்சிருப்பேன்..//

    அப்பாஜி! சிரிச்சு சிரிச்சு.. :))

    பதிலளிநீக்கு
  3. சரிதான், பிங்கியும், மாயாவும் சேர்ந்து அவதாரமா? விட மாட்டீங்க போல! நானா இருந்தா அவசரக் குடுக்கையா எனக்கு உங்க பொண்ணு கொலை செய்யப்பட்டதை உங்க பொண்ணே வந்து சொன்னாளாக்கும்னு பேத்தி இருப்பேன். அப்புறமா சமாளிக்கத் தெரியாமல் மாட்டிண்டு முழிச்சிருப்பேன். :)))))

    பதிலளிநீக்கு
  4. குரோம்பேட்டை குறும்பன்16 மே, 2012 அன்று AM 8:21

    மாயா அடுத்த அவதாரமா? - அடக் கடவுளே!! பதிவாசிரியரே நீங்க டி வி யில் மெகா சீரியல் எழுத போகலாம்!

    பதிலளிநீக்கு
  5. கு.கு. அவரே இவர்! இவரே அவர்! :P

    பதிலளிநீக்கு
  6. இப்ப பிங்கி ஆவி எப்படி மாயவை இல்ல மாயா ஆவிய பழி வாங்கும் ?

    பதிலளிநீக்கு
  7. இந்த அழகுக் குட்டிக்கு, இந்த 'பிங்கி'க்கு, 'மாயா' என்று பெயர் வைப்போமா?"

    மா....யா.... !!!???

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!