வியாழன், 7 ஜூன், 2012

நடக்கும் நினைவுகள் (07)- சைக்கிள் அனுபவங்கள்

                   

காலை நடைப் பயிற்சி கிளம்ப சற்றே நேரமாகி விட்டது. வாசலில் செக்கியூரிட்டி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்! சப்தமில்லாமல் தாண்டிப் போனேன். தூங்குபவர்களைத் தொந்திரவு செய்வது எனக்குப் பிடிக்காது! வழக்கமாக கடையைத் திறந்து சாம்பிராணி போட்டுக் கொண்டிருக்கும் கடையில் பத்து பேர் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். 

                

தெரிந்த முகம் ஒன்று கைகளைத் தூக்கி சலாம் வைத்ததற்கு கை தூக்கி விட்டு நடந்தேன். 

              

பின்னால் 'சலசல' வென்று பேச்சுக் குரலோடு சைக்கிள் மணியோசை கேட்டது..."டேய் பெல் அடிக்காதடா....அமைதியான நேரத்துல தொந்தரவா இருக்கு" என்றான் ஒருவன்...

                

"அதுக்குதான் மச்சி அடிக்கறது.." என்று பெரிதாகச் சிரித்தபடி நான்கைந்து சைக்கிள்கள் கடந்து சென்றன. இரண்டு சைக்கிள்களில் முன்புற 'பாரி'ல் இருவர் உட்கார்ந்து கதையடித்தவண்ணம் சென்றனர். 'பைக்கில்தானே இப்போதெல்லாம் செல்வார்கள்... சைக்கிளில் செல்வது வித்தியாசமாக இருக்கே' என்று எண்ணியபடி நடந்தேன்...
                         
அந்த பாரில் உட்கார்ந்து செல்லும் அனுபவம் எனக்கும் பல வருடங்கள் முன்பு உண்டு.... 
                         
என் நண்பர்கள் நிறைய பேர் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருந்தபோது எனக்கு மட்டும் சைக்கிள் ஓட்டத் தெரியாதது கஷ்டமாக இருந்த நேரம். அவர்களுக்கு முன்னால் கற்றுக் கொள்ளவும் 'கெளரவம்' தடுத்தது! என்னுடன் சைக்கிள் ஓட்டத் தெரியாமல் 'கம்பெனி' கொடுத்துக் கொண்டிருந்த கணபதி எப்போது கற்றுக் கொண்டான் என்று தெரியாமலேயே திடீரென பெரிய சைக்கிள் ஓட்டி வெறுப்பேற்றினான். "திருக்காட்டுப்பள்ளி போயிருந்தேன் இல்லே.... அங்க கத்துகிட்டேண்டா..."
     
சாதாரணமாக கோடை விடுமுறைகளில் என் நண்பர்கள் பெரும்பாலும் வெளியூர் சென்று விடுவார்கள்... அந்த நேரத்துக்காகக் காத்திருந்தேன். அந்த ஹவுசிங் யூனிட்டில் இரண்டு கடைகள் உண்டு. இரண்டில் சாதுவாகத் தெரிந்த கடையில் ஆறு மாதமாகவே 'பழக'த் தொடங்கியிருந்தேன். நிறையப் புத்தகங்கள் படிக்கும் சசிகுமார் என்ற அந்த இளைஞன் லைப்ரரி வந்தபோதும் நட்பு அதிகமாக, அவன் கடையில் அமர்வது, அரட்டை அடிப்பது வாடிக்கையானது. 
               
அவன் கடையில் கருநீலப் பெயின்ட் அடித்து என் முழங்கால் சைசில் ஒரு சைக்கிள் இருந்தது. அதுதான் என் கவனத்தைக் கவர்ந்தது. தக்க நேரத்துக்காகக் காத்திருந்தேன். கோடை விடுமுறை வந்து நண்பர்கள் பட்டாளம் குறைந்ததும் 'அவர்' கணக்கிலும் 'நைட்' வாடகையிலும் எடுத்துப் பழகத் தொடங்கினேன். முழங்கால் முழங்கைக் காயங்கள் தோன்றின. அந்தச் சின்ன சைக்கிளில் ஏறி அமர்ந்து ஓட்டத் தொடங்கினால் நேராக வராமல் 45 டிகிரி சாய்மானத்தில் ஓடத் தொடங்கி, விரைந்து, பக்கப் பிளாட்ஃபார்ம்களைப் பதம் பார்த்து விழுவது வாடிக்கையானது. 
    
என் 'அவர்' கணக்கு முடியும் நேரத்துக்காக 'நாலாப்பு' 'அஞ்சாப்பு'ப் படிக்கும் சிறு பெண்கள் சைக்கிளுக்காகக் காத்திருப்பார்கள். என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். என் நேரம் முடிந்து சசிகுமார் கட்டளைப் படி அப்படியே அவர்கள் கையில் சைக்கிளைத் தந்ததும் அவர்கள் அதில் அனாயாசமாய் ஏறி ஓட்டத் தொடங்குவது எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தும்! என்னை வேறு ஒரு ஓரப்பார்வைப் பார்த்து ஓட்டுவார்கள். கிண்டலோ, பெருமையோ... என் இயலாமையில் எனக்குக் கோபம்தான் வரும்!
           
அப்புறம் மெல்ல, மெல்ல சைக்கிள் கைவசம், கால்வசம் ஆனவுடன் அதை விட்டு இறங்கவே மனம் வராது. இரவு தூக்கத்தில் கூட சைக்கிளில் செல்வது போலவே இருக்கும்! ஆனால் பெரிய சைக்கிளில் ஏற மனம் துணியாமல் ரொம்ப காலம் கடந்தது. 
   
குரங்குப் பெடல் போட்டு சிலர் ஓட்டுவார்கள். அது இன்றளவும் எனக்குக் 'கால்' வந்ததில்லை! கொஞ்ச நாள் கால் வைத்து ஏற மேடான ஒரு இடம் வரை சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடப்பேன். ஏறி உட்கார்ந்து ரோடை நோட்டமிடுவேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனமோ, நடைவாசிகளோ இல்லைஎன்றான பின் வலது பக்கம் பெடலை முக்கால் தூக்கித் தயாராய் வைத்திருந்து,  முழு பலத்தில் அழுத்திக் கிளம்ப வேண்டும். முதல் கொஞ்ச நாள் அந்த வேக ஸ்டார்ட்டிங் சரி வராமல் பாதி சாய்ந்தபடி சென்று கீழே விழுந்து, அல்லது விழுமுன் காலை ஊன்றி மறுபடி தள்ளிக் கொண்டு பழைய மேட்டுக்கு வந்து 'ஸ்டார்ட்' செய்வேன்! இறங்கும் நேரம் வரும்வரைக் கவலை இல்லை. இறங்கும் நேரம் சைக்கிளை ஸ்லோ செய்து நாணல் நாகேஷ் மாதிரி ஒரு மேட்டுக்கு, அல்லது தந்தி கம்பத்துக்குச் சுற்றி வரவேண்டும்!

சசிகுமார் கடையில் நண்பர்கள் கூடுவதும் வாடிக்கையாக, சில நாட்களில் மதியங்களில் கடை வசூல் தயவில் அவன் கடையில் இருக்கும் இரண்டு மூன்று சைக்கிள்களில் நண்பர்களுடன் சினிமா கிளம்புவது தொடங்கியது. அப்போதுதான் இந்த 'பார்'ப் பயணங்களும் தொடக்கம்! போகும் வழியில் எங்காவது மணல் பகுதி வந்தால் நான் உஷாராகி விடுவேன். முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னை அப்படியே உட்கார வைத்து விட்டு சசிகுமார் "புடி..புடி" என்று கத்திக் கொண்டே இறங்கி விடுவான். நான் பேலன்ஸ் பண்ண வேண்டுமாம். முதல் கொஞ்ச நாள் 'பப்பரப்பா' என்று விழுந்தாலும் நாளடைவில் பழகி விட்டேன்! 

அப்போதும், பின்னால் கல்லூரிக் காலங்களிலும் இந்த பாரில் அமர்ந்து போகும் ஸ்டைல் எங்களால் மிகவும் விரும்பப் பட்ட ஒன்று. பின்னால் கேரியரில் அமர்ந்து போவது 'வயசாளிங்க' செய்யும் செயலாகத் தோன்றிய காலம்! 

'கர்ள்ஸ்'க்கு முன்னால் ஸ்டைல் காட்டுவதில்லை. முயற்சிக்கும் முன்னரே பாடம் படித்து விட்டதால் அடக்கி வாசிப்பது வழக்கமாயிற்று. ஒருமுறை புதுக்கோட்டை ரோடில் வளைந்து வளைந்து 'கட்' அடிக்கிறேன் என்று வந்த போது ஐந்தாவது 'கட்'டில் சைக்கிள் ஹேண்டில் பார் நிலைகுத்தி ஸ்ட்ரைக் செய்து திரும்ப, அப்படியே நெஞ்சில் முட்டி,  பின் சக்கரம் தூக்கிக் கொண்டு கீழே விழுந்து தேய்த்துக் கொண்டே சென்ற போது எதிரே ஸ்போர்ட்ஸ் சைக்கிள்களில் இரண்டு 'கர்ள்ஸ்'....! 
  
பள்ளி செல்லும்போதும் வரும்போதும் சைக்கிளில் தாண்டிச் செல்வோரைக் காணும்போது "தனியாகத்தானே போறான்... நடந்து போறானே...டபிள்ஸ் ஏத்திட்டுப் போகணும்னு தோணாதோ... நாம் சைக்கிள் ஓட்டும் போது நடந்து செல்வோரை ஏற்றிச் செல்ல வேண்டும்' என்றெல்லாம் புரட்சிகர எண்ணங்கள் தோன்றும். எனக்கே சைக்கிள் கிடைத்தவுடன் இந்த எண்ணங்கள் நினைவிலேயே இல்லை!
   
மழையில் நனைந்து கொண்டே குமரன் தியேட்டர், யாகப்பா, ராஜா கலையரங்கம், ஞானம், அருள், ஜூபிடர் என்று தியேட்டர் தியேட்டராக அலைந்த நாட்கள் இனிமையானவை. சசிகுமார் நண்பனாகிப் போனதால் அப்புறம் என்னிடம் காசு வாங்குவதில்லை. அப்புறம் வந்த வருடங்களில் சினிமா பார்க்கும் அலைச்சல், நண்பர்களுடன் சைக்கிளில் கும்பலாகச் செல்லும் அனுபவங்கள்... இந்த ஜோரில் அப்போது நான் அவ்வப்போது செய்து கொண்டிருந்த லைப்ரரியன் வேலையைச் செய்ய விடாமல் வந்து அழைத்து அழைத்து அனத்துவான், அனத்துவார்கள். அதே போல், அவன் கடையில் நாங்கள் உட்கார்ந்து அவன் தொழிலைக் கெடுத்து அரட்டை அடிக்கும் நேரம் நோட்டில் பதிவு செய்வது, காற்றடிப்பது போன்ற வேலைகள் செய்வோம். மாலைகளில் மீனாட்சி கல்லூரி மைதானப் பொருட்காட்சி, மதியங்களில் திரைப் படங்கள்... 
  
சைக்கிள் கற்றுக் கொள்ள ஆரம்பித்த புதிதில் ஒரு சிறு வில்லனும் இருந்தார். வசந்தமாளிகை சிவாஜி கணேசன் மாதிரி நெற்றியில் புரளும் முடியுடன் இருப்பார். லேசான விபூதிக் கீற்றின் கீழ் சற்றே பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். ஸ்போர்ட்ஸ் சைக்கிளில் சுற்றி வருவார். வேஷ்டி அணிந்து க்ரீம் கலரில் காலர் வைத்த ஒரு மலேஷியா டீ ஷர்ட் அணிந்திருப்பார். எப்போதும் ஆங்காங்கே தெருக்களில் நின்று அந்தத் தெரு பெண்களிடம் கும்பலாகப் பேசிக் கொண்டிருப்பார். நான் அந்தக் குட்டி சைக்கிளில் கற்றுக் கொள்ளும் நாளிலிருந்து என்னை அந்தப் பெண்கள் மத்தியில் நின்று கொண்டு சைக்கிள் சைசோடு சம்பந்தப் படுத்திக் கிண்டல் செய்வார், அதிகாரம் செய்வார்! குங்குமப் பொட்டா, லேடீஸ் சைக்கிள் என்று நாங்கள் அழைக்கும், அவர் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் என்று சொல்லும் அவரின் அந்த சைக்கிளா, பெண்களுடனேயே பேசும் பழக்கமா ஏதோ ஒன்று அவரை எனக்குப் பிடித்ததில்லை. அவர் இருக்கும் தெருவை அவாய்ட் செய்து விடுவேன். கவனிக்காமல் அந்தத் தெருவுக்குள் சென்று விட்டால் அருகிலிருக்கும் தந்தி கம்பமா, சுவரா ஏது பக்கமோ அங்கு மோதி விடுவேன்! அப்புறம் வந்த வருடங்களில் அவரை லட்சியம் செய்ததில்லை. 
  
கொஞ்ச நாள் ஸ்கூலுக்கு அண்ணனின் நண்பர் சைக்கிளில் சென்று வந்ததும், அப்புறம் மதுரை வந்து சொந்தமாக முதலில் செகண்ட் ஹேன்டிலும், அப்புறம் புதுசாகவேயும் சைக்கிள் வாங்கிய நினைவுகளும் சுகமானவை. ஹேண்டில் பார்களில் குஞ்சம் வைத்து, இரண்டு பெல் வைத்து, டைனமோ வைத்து.... அப்புறம் குஞ்சங்களை நீக்கி விட்டு ஒரு பெல்லை நீக்கி.. (நண்பர்கள் 'பாரி'ல் உட்கார தடையாக இருக்கிறதென்று) வாரத்துக்கு இரண்டு தரம் சைக்கிளைத் துடைத்து, அவசரத்துக்குக் கடைக்குப் போக, அங்கிங்கு போக என்று கேட்பவர்களுக்கு "மன்னிச்சுக்குங்க" என்று பொஸஸிவ் பாசம் காட்டி, அண்ணனுக்கு, அப்பாவுக்கு டிரைவராய் கிட்டத்தட்ட மதுரை முழுதும் ஒரு சமயம் கோச்சடை வரை, ஒரு சமயம் கப்பலூர் வரை என்று அவரை சைக்கிளில் டபுள்ஸ் அடித்து, வாரச்சந்தைக்கு வாராவாரம் சென்று காய்கறி வாங்கி வந்து, மாதாந்திர மளிகைப் பொறுப்பைத் தலையில் (சைக்கிளில்!) சுமந்து, தங்கையை பள்ளியில் விட்டு, அழைத்துவந்து...(அப்போது அவளிடம் ஈவ் டீசிங் செய்த சிலரை டீல் செய்த வீர வரலாறு தனிக்கதை!)... அப்புறம் அவந்தி கரேலி வருகைக்கப் பிறகும் சைக்கிள் பாசம் விடவில்லை! 
      
ரொம்ப காலம் சைக்கிள் அலுக்கவே இல்லை!   

பிற்ச்சேர்க்கை!

இதைத் தொடர்பதிவாக எழுத அழைக்கலாமே என்ற மோகன் குமார் யோசனைக்கு நன்றி. தொடர்ந்ததுண்டே தவிர முதன் முதலாக ஆரம்பித்ததில்லை! எனவே இந்த யோசனையைச் சொன்ன திரு மோகன் குமார் அவர்களையும்,

ரொம்ப நாளாக பதிவே போடாமல் தப்பித்து வரும், இந்தப் பதிவில் குரங்குப்பெடல் பற்றி ரசனையாகச் சொல்லியிருக்கும் பதிவர் ரசிகமணி திரு பத்துஜி அவர்களையும்

இதைத் தொடர அழைக்கிறோம்.... நீங்கள் உங்களுக்கு விருப்பமான எத்தனை பேரை வேண்டுமானாலும் தொடர அழைக்கலாம்.
               

22 கருத்துகள்:

  1. இனிய சைக்கிள் நினைவுகள்....

    குரங்குப் பெடல் போடாமலேயே நேரே சைக்கிள் சீட்டில் உட்கார்ந்து தான் நானும் கற்றுக் கொண்டேன்.

    நெய்வேலி முழுக்க எங்கள் சைக்கிள் தடம் பதிக்காத தெருக்களே இருக்காது..... :)) எனது நினைவுகளையும் மீட்டெடுத்தது தங்கள் பதிவு...

    பதிலளிநீக்கு
  2. சைக்கிள் போலவே சைக்கிள் அனுபவங்களும் அலுக்காதவிஷயம்...அப்பொழுதெல்லாம் அரை, முக்கால், லேடிஸ் சைக்கிளெல்லாம் கிடைக்காது.. கால் பார் தாண்டும் வரை குரங்கு பெடல் தான்... குரங்கு பெடலில் பாரை சீட்டோடு அணைத்து பிடித்து, முதல் கால் தட்டி தட்டி இரண்டாம் கால் பெடலில் வைக்கும் சுகமே சுகம். அப்புறம் பாரை தாண்டி கால் போகும் வெற்றி களிப்பே தனி.......

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருவருக்கும் தாம் சைக்கிள் கற்றதும் பிறருக்கு கற்று கொடுத்தும் மறக்கவே மறக்காது. தொடர் பதிவாக கூட சிலரை எழுத சொல்லிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. சைக்கிள் அனுபவப்பகிர்வு சுவாரஸ்யம்.இததகைய பழைய நினைவுகள் உண்மையில் மனதிற்கு மகிழ்வைத்தரும் விடயம்.

    பதிலளிநீக்கு
  5. //என் நேரம் முடிந்து சசிகுமார் கட்டளைப் படி அப்படியே அவர்கள் கையில் சைக்கிளைத் தந்ததும் அவர்கள் அதில் அனாயாசமாய் ஏறி ஓட்டத் தொடங்குவது எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தும்! என்னை வேறு ஒரு ஓரப்பார்வைப் பார்த்து ஓட்டுவார்கள். கிண்டலோ, பெருமையோ... என் இயலாமையில் எனக்குக் கோபம்தான் வரும்!//

    ஹிஹிஹி, ஜாலியா இருக்கு. அதே சமயம் நான் இல்லாமல் போனேனேனு வருத்தமாவும் இருக்கு. ஒரு கை பார்த்திருக்கலாம், சிநேகிதிகளோடு சேர்ந்து. சான்ஸ் போச்சு! :))))))


    //இறங்கும் நேரம் சைக்கிளை ஸ்லோ செய்து நாணல் நாகேஷ் மாதிரி ஒரு மேட்டுக்கு, அல்லது தந்தி கம்பத்துக்குச் சுற்றி வரவேண்டும்!//

    அப்பாவுக்குத் தெரியாமல் அந்தக் காலத்திலேயே பார்ட் டைம் வேலை செய்து என் தம்பி இப்படித் தான் சைகிள் கற்றுக் கொண்டான். ஒரு நாள் திடீரென வெளியே போன அப்பா வந்துவிட, சைகிளில் மேலாவணி மூல வீதியை ஜாலியாகச் சுற்றி வந்த தம்பிக்கு ப்ரேக் பிடிக்கத் தோன்றாமல், சைகிளை விட்டு இறங்கவும் தோன்றாமல் இடைவிடாமல் சைகிளில் சுற்றி வந்தது, 24 மணி நேர சைகிள் ஓட்டுவது போல இருந்ததுனு நானும், அண்ணாவும் கேலி பண்ணிச் சிரிச்சோம். அப்புறம் பெரியப்பா பிள்ளை சைகிளைத் தன் கைகளால் பிடித்து நிறுத்தித் தம்பியைக் கீழே இறக்கி விட்டார். அண்ணாவுக்கு இப்போவும் சைகிள் ஓட்டத் தெரியாது.


    // நாம் சைக்கிள் ஓட்டும் போது நடந்து செல்வோரை ஏற்றிச் செல்ல வேண்டும்' என்றெல்லாம் புரட்சிகர எண்ணங்கள் தோன்றும். எனக்கே சைக்கிள் கிடைத்தவுடன் இந்த எண்ணங்கள் நினைவிலேயே இல்லை!//

    யதார்த்தம், மனித மன இயல்பு. அதை வெகு சரளமாகச் சொல்லி விட்டீர்கள்.

    நானும் எப்படியானும் சைகிள் கத்துக்கணும்னு ஆசைப்பட்டுக் கொண்டு, எங்க பள்ளிக்குச் சைகிளில் வரும் மாணவியிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். முதல்நாளிலேயே அப்பாவின் சிநேகிதர் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொல்ல, அவ்வளவு தான், ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டேன்னு அப்பாவோட கண்டிப்பு. என் சைகிள் ஆசையும் முற்றுப் பெற்றது. :(((((

    பதிலளிநீக்கு
  6. முயற்சிக்கும் முன்னரே பாடம் படித்து விட்டதால் அடக்கி வாசிப்பது வழக்கமாயிற்று/

    சைக்கிள் அலுக்கவே இல்லை

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக்7 ஜூன், 2012 அன்று AM 8:38

    அப்பாதுரைக்கு ஆயிரம் பாயிண்டுகள்!

    பதிலளிநீக்கு
  8. பையன்களுக்கு மட்டும் எத்தனை சுதந்திரம்.
    சுவையான அனுபவங்களைக் கோர்த்துக் கொடுப்பதில் வல்லவராகிவிட்டீர்கள் ஸ்ரீராம்.

    இரண்டு தடவை ரோடில் விழுந்ததில் அப்பா வேண்டாம் என்று சைக்கிளை வாங்கிப் பூட்டிவைத்துவிட்ட்டார்;)
    அடுத்து பைக் அனுபவத்தை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. என்னுடைய சைக்கிள் பழ்கிய நாட்களை
    நினைவுறுத்திப் போனது பதிவு
    முன்பெல்லாம் ஆண் பிள்ளையென்றால் நிச்சய்ம்
    சைக்கிள் ஓட்டவும் நீச்சல் அடிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என
    உசுப்பேத்தியே இரண்டும் பழகவைத்துவிடுவார்கள்
    இப்போது அது அவசியத் தேவையாகவே மாறிவிட்டது
    மனம் கவர்ந்த அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எங்கள் பிளாக்7 ஜூன், 2012 அன்று PM 12:20

    மோகன் குமார் said, //தொடர் பதிவாக கூட சிலரை எழுத சொல்லிருக்கலாம்//

    நல்ல ஐடியாதான். சொன்ன உங்களையே கூப்பிட்டு விடுகிறோம்.... உங்களையும் 'ஆனந்த வாசிப்பு' திரு பத்மநாபன் அவர்களையும் இந்தப் பதிவைத் தொடர அழைக்கிறோம். யோசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. எங்கள் பிளாக்7 ஜூன், 2012 அன்று PM 12:21

    தொடரும் அழைப்பை பதிவில் இணைத்து விட்டோம்!

    பதிலளிநீக்கு
  12. படங்களே மனத்தைக் கவர்ந்தன . மலரும் நினைவுகள் சுகம் .

    பதிலளிநீக்கு
  13. /இரவு தூக்கத்தில் கூட சைக்கிளில் செல்வது போலவே இருக்கும்! /

    சரிதான்:)!

    அருமையான நினைவலைகள்.

    நான் மூன்றுகால் சைக்கிளோடு நிறுத்தி விட்டேன்:)!

    மற்றவர்கள் தொடரக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. அழைப்பிற்கு மிக்க நன்றி ..( சும்மா இருந்த சைக்கிளை சுத்தி கெடுத்திட்டேன் ) மிக வி..ரை...வி.....ல் ஓட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  16. //அப்பாதுரை said...

    எண்ணுவது ஆயிரம்?//

    ஆ... ஆயிரமா...!!!! வாழ்த்துகள் ஆயிரம்!!

    அப்பாதுரை எண்ணுறதிலேயே கண்ணாயிருந்து, என்னவாயிருக்கும்னு எண்ணி எண்ணி ஒருவழியா எண்ணத்தைப் புடிச்சுட்டார்!!

    //ராமலக்ஷ்மி said...
    நான் மூன்றுகால் சைக்கிளோடு நிறுத்தி விட்டேன்:)! //

    மீ டூ!! :-((( :-))))

    பதிலளிநீக்கு
  17. எனக்கு சைக்கிள் ஓட்ட வராது.விழுந்து எழும்பினதோடசரி.இப்பல்லாம் 4 வீல்ல ஓடுற பலன்ஸ் பண்ற கார் மட்டும்தான் ஓட்டுறேன் !

    பதிலளிநீக்கு
  18. //இரவு தூக்கத்தில் கூட சைக்கிளில் செல்வது போலவே இருக்கும்!//

    அதேதான்..

    ஆக்டிவா ஓட்டுவதற்கு முதல் படியாக சைக்கிள் ஓட்டக் கத்துக்கணுமாமே. அதனால் சமீபத்தில் கணவர் சைக்கிள் ஓட்டக் கத்துக்கொடுத்தார். ஓரளவு கத்துக்கிட்டப்புறம் வாங்கிய விழுப்புண்களே போதும், இந்த ரெண்டுகால் நமக்குச் சரிப்படாது, நாலுகால்லயே ஓடிக்கலாம்ன்னு விட்டுட்டேன் :-))

    பதிலளிநீக்கு
  19. //எங்கள் ப்ளாக் said...
    அப்பாதுரைக்கு ஆயிரம் பாயிண்டுகள்!//

    ஒரு சின்ன திருத்தம்.
    ஆயிரத்தில் ஒருவருக்கு என்று இருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!