புதன், 18 ஜூலை, 2012

பேச்சுக் கலை!

                    
"சார்.... பஸ்ஸை எப்போ எடுப்பீங்க..." 
            
கண்டக்டர்: (எரிச்சலுடன்) "ம்.... சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியனுப்பியிருக்கு... எல்லோரும் வந்துடட்டும், எடுத்துடலாம்"
            
தினமணி கதிரில், இந்த ந. துணுக்குப் படித்த போது சிரிப்பும் வந்தது; என் அனுபவங்களும் ஞாபகம் வந்தன. 
    
இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்த ஒரு குறுந்தகவல் இதே துணுக்கை ஞாபகப் படுத்தியது. குறுந்தகவல்: 'பிறந்த பிறகு பேச்சு வர மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் 'எப்படிப் பேச வேண்டும்' என்பது வாழ்நாள் முழுக்க சிலருக்கு வருவதேயில்லை'
      
கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் - கொஞ்ச வருடங்கள் என்றால் திருவள்ளுவர் காலம்! அதாவது, விரைவு போக்குவரத்துக் கழகம் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் வழங்கி வந்த காலம் - மனைவியையும் மாமியாரையும் குழந்தையோடு பஸ் ஏற்றி விடச் சென்ற நேரம். முன்பதிவு செய்யப் பட்டிருந்த பேருந்து கிளம்பும் நேரம் இரவு பத்தே முக்கால். இவர்கள் செல்ல வேண்டிய ஊருக்கு அது அதிகாலை மூன்றரை நாலு மணிக்குச் சென்று விடும். இவர்களை அழைத்துச் செல்ல மைத்துனரை பேருந்து நிலையத்துக்கு எத்தனை மணிக்கு வரச் சொல்வது என்று சொல்ல வேண்டுமே...
           
நடத்துனரிடம் கேட்டேன். "இந்த பஸ் நாளைக் காலை எத்தனை மணிக்கு ஊர் சென்று சேரும்?"
            
வந்ததே கோபம் நடத்துனருக்கு! கிளம்பத் தயாராய் இருந்த பேருந்தின் என்ஜினை அணைத்துவிட்டு, ஓட்டுனரும் இறங்கி விட்டார். இரண்டு பேரும் வசைமாரிப் பொழிந்தனர். அபசகுனமாம். கிளம்பும் நேரத்தில் இப்படிக் கேட்டால், பேருந்து விபத்துக்குள்ளாகி விடுமாம்.  பக்கத்து டீக்கடையில் வெந்நீர் வாங்கிக் குடித்து, சகுனப் ப்ரீத்தி செய்து வந்தனர்.
          
இதில் இன்னொரு கஷ்டம். இது மாதிரி சமயங்களில் பேருந்து எங்கள் ஏரியா வழியாகத்தான் செல்லும் என்பதால், மின்வண்டி, அலைச்சல், அங்கிருந்து இன்னொரு பேருந்து அல்லது ஆட்டோ செலவுகளைச் சிக்கனப் படுத்தி, அந்தப் பேருந்திலேயே ஏறி வந்து விடுவேன். நடத்துனருக்கு இருபது அல்லது முப்பது ரூபாய்க் கொடுத்து விடுவேன். 'நீங்கள் பாட்டுக்கு உட்காருங்க' என்று சொல்லி எங்கு நிறுத்தினால் எனக்கு வசதியாக இருக்கும் என்று கேட்டு நிறுத்தி இறக்கி விடுவது வழக்கம்.
   
இந்த முறை அதுமாதிரிக் கேட்கவே தயக்கமாகிப் போக, நான் மின்வண்டி, ஆட்டோ என்று, கிடைத்தவைகளைப் பிடித்துச் சென்று கொள்கிறேன் என்று சொல்லியும் மனம் கேட்காமல் மாமியார் நடத்துனரிடம் கேட்டு சம்மதமும் வாங்கி விட்டார்! பேருந்து தேனாம்பேட்டையைத் தாண்டியதும், நடத்துனர் எத்தனை மணிக்கு பேருந்து ஊரை அடையும் வாய்ப்பு இருக்கிறது என்று அவராகவே சொல்லி விட்டு, கிளம்பும் சமயம் எந்தப் பேருந்திலும்,  இந்தக் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன்னார். அதே அன்போடு, இறங்க வேண்டிய இடத்திலும் இறக்கி விட்டார். நான் கொடுத்த ஐம்பது ரூபாயை மறுத்து விட்டார். வற்புறுத்தவும் முப்பது ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.
 ++++++++++++++++++++ 
   
வேலைக்குப் போக ஆரம்பித்த காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம். அதிகாலை ஐந்து மணிக்கு, மதுரைப் புறநகர்ப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறும் வழக்கம். பெரியார் பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிலையம். நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது, அரசியல் பற்றியும் பேச்சு வந்தது. ஓர் அரசியல் தலைவரைப் பற்றிப் பேசும்போது, அவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கியபோதே பின்னால் தலையில் ஓர் அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். இரண்டு பேர்."உன் வயசென்ன, அவர் வயசென்ன? பேரைச் சொல்றே.... (பட்டத்தைச் சொல்லி) ........னு சொல்லு" என்றனர். நான் மதிக்காமல் இந்தப் பக்கம் திரும்பி நண்பனுடன் பேசியபோது மறுபடி அவர் பெயர் வர, மறுபடி தலையில் அடி, மறுபடி அறிவுரை!
          
"ஏன்? இதுக்கென்ன, அதானே அவர் பெயர்?" என்றேன்.
      
கோபமடைந்த இருவரும் என்னை ஆளுக்கொரு பக்கமாக நெருங்கி கையைப் பற்றி முறுக்கி, அவர்கள் நினைத்த பெயரைச் சொல்லச் சொல்லி துன்புறுத்தி, என்னை வலி தாங்காமல் சொல்லச் செய்த பிறகே விட்டனர்! 
+++++++++++++++++++++++++++++
   
பேருந்திலும், மின் வண்டியிலும் இன்னும் இன்னும் பொது இடங்களிலும் மக்கள் அலைபேசியில் பேசும் குரலும், பாஷையும் இருக்கிறதே.... அடடா.... பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களுக்கு கர்ணகடூரமாக இருக்காதா என்றெல்லாம் யோசிப்பதேயில்லை. சாலைகளில் பெரும்பாலும் எல்லோரும் அலைபேசியும் கையுமாகத்தான் அலைகிறார்கள். ஒருவர் சத்தமாக, "வீட்டுக்கு வாயேண்டா...." என்பார். சற்றுத் தளளி பேசும் இன்னொருவர் அதே நேரம் "வந்தா காலை உடைப்பேன்.... காசா கேக்குறே" என்று அவர் அலைபேசியில் அலறுவார். 
           
ஆனால் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்ப நாசூக்கு. அலைபேசியில் பேச மாட்டார்களா என்று கேட்காதீர்கள். ஒரே ஒரு மிஸ்ஸுடு கால் கொடுத்தால் போதும்! அவர்களுக்காகவே படைக்கப் பட்டதுதான் அலைபேசி. (பேசுகிற பெண்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன். நம் பெண் வாசகர்கள் சண்டைக்கு வர வேண்டாம்!) பீச் முதல் தாம்பரம் வரை காதில் வைத்த அலைபேசியை எடுக்கவே மாட்டார்கள். ஆனால் அதே சமயம் என்ன பேசுகிறார்கள் என்று மிக அருகிலேயே இருக்கும் நபரால் கூடக் கேட்க முடியாத அளவில் பேசுவார்கள். அவர்களிடமிருந்து இந்த அலறும் ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
          
அலைபேசியில் அழைப்பு வரும். புதிய எண்ணாக இருக்கும். 'யாராக இருக்கும்' என்று எடுப்போம். எதிர்முனையிலிருந்து நமக்கு முதல் கேள்வி வரும், "ஹலோ.... யார் பேசறது?" 
          
வாகனங்கள் வாங்கும்போது போக்குவரத்து விதிகள் பற்றிக் குறிப்பேடுகள் தருவது போல (இப்பொழுதெல்லாம் தருகிறார்களோ? முன் காலத்தில் தந்தார்கள்!) அலைபேசிகள் வாங்கும்போது, இந்த நாகரீகங்கள் பற்றியும் குறிப்புக் கையேடுகள் கொடுத்தால் நலம்! 
   
நிற்க! 
            
இந்தக் காலத்தில் பொது இடங்களில், ஆரோக்கியமான விவாதங்களைக் கூடக் காண முடிவதில்லை. நம்முடன் பேசுபவர்களை மறுத்து எதாவது சொன்னாலே அவர்களுக்குக் கோபம் வந்து விடுகிறது!
          
முன்பு எங்கள் ப்ளாக்கில் வந்த பேச்சு பற்றிய பதிவு!
                 

10 கருத்துகள்:

  1. அலைபேசியில பெண்கள் பேசுவதை எவ்வளவு அருகில் நின்றாலும் கேட்க முடிவதில்லை... என்னங்காணும்... பஸ்ல போறப்பல்லாம் இதே பழக்கமா? (என்னைப் போல... ஹி... ஹி...) நானும் வியக்கும விஷயம் இது. பேச்சின் நாகரீகம் என்பது தமிழகத்தில் வேறுதான். அரசியல்வாதிகள் என்றால் கேட்கவே வேண்டாம்... ஸப்போஸ் மோகன் என்று அவர் பெயர் இருந்தால்கூட மோகர் என்று மரியாதையாக கூறச் சொல்வார்கள்... அனுபவங்களும் பகிர்ந்து கொண்ட விதமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    /நினைத்த பெயரைச் சொல்லச் சொல்லி துன்புறுத்தி/

    அடாவடியாக இருக்கிறதே:(!

    /என்ன பேசுகிறார்கள் என்று மிக அருகிலேயே இருக்கும் நபரால் கூடக் கேட்க முடியாத அளவில்/

    நானும் வியந்து போயிருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு
  3. குறிப்பிட்ட சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருந்தன...
    பெண்கள் என்ன பேசுகிறார்கள் என்று யாராலும் அறிந்து கொள்ள முடியாது...
    (அவர்கள் மனதைப் போல)

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    பதிலளிநீக்கு
  4. //ஒருவர் சத்தமாக, "வீட்டுக்கு வாயேண்டா...." என்பார். சற்றுத் தளளி பேசும் இன்னொருவர் அதே நேரம் "வந்தா காலை உடைப்பேன்.... காசா கேக்குறே" என்று அவர் அலைபேசியில் அலறுவார். //

    ஏற்கெனவே சிவாஜி படம் பார்த்த குஷியே இன்னமும் அடங்கலை; நினைச்சு நினைச்சுச் சிரிச்சுட்டு இருந்தேன். இதைப் படிச்சதும் வி.வி.சி. தான் போங்க.

    பெண்கள் அதுவும் இளம்பெண்கள் அலைபேசியில் பேசுவது எதிர்முனையில் இருக்கிறவங்களுக்குக் காதிலே விழுமானு பெண்ணான எனக்கும் சந்தேகம் இருக்கு. அதோட அப்படி என்னதான் பேசுவாங்கனும் ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. //கோபமடைந்த இருவரும் என்னை ஆளுக்கொரு பக்கமாக நெருங்கி கையைப் பற்றி முறுக்கி, அவர்கள் நினைத்த பெயரைச் சொல்லச் சொல்லி துன்புறுத்தி, என்னை வலி தாங்காமல் சொல்லச் செய்த பிறகே விட்டனர்! //

    :(((((( வருத்தமும், கோபமும், கையாலாகாத்தனமும் வந்தாலும் பொது இடங்களில் அரசியல் பேசக் கூடாது என்ற பாடமும் படிக்க முடிகிறதே.

    பதிலளிநீக்கு
  6. // கிளம்பத் தயாராய் இருந்த பேருந்தின் என்ஜினை அணைத்துவிட்டு, ஓட்டுனரும் இறங்கி விட்டார்.// ஆம் எங்கள் வாழ்க்கையிலும் இப்படி நடந்ததுண்டு...அதே தி . கழகம் பேருந்து தான்

    சுவையான பதிவு

    பதிலளிநீக்கு
  7. சாமியார் பொறுக்க தம் வைத்துக்கொண்டு அலைபேசியில் என்ன கெத்து !! நான் பிடிப்பதை நிறுத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது.

    சின்ன பையனும் பதிமூன்று வயதை தொட்ட டீன் ஏஜ் என்பதால் அவனின் பிறந்தநாள் முதல் விட்டு இருக்கின்றேன்.

    போகும் பாதை இன்னும் நிறைய இருப்பதால் மறுபடியும் ஆரம்பித்து தொலைக்காமல் இருக்கவேண்டும் !! இது மாதிரி பலமுறை விட்டு ஆரம்பித்து இருப்பதால் பார்ப்போம். எழுத்தாளர் சுஜாதா சொல்லியது போல் ஐந்து வருடங்கள் விட்டால்தான் அது தொடராமல் இருக்குமாம் !!!

    பதிலளிநீக்கு
  8. சுவையான பகிர்வு. பேருந்து அனுபவங்களைச் சொல்லிச் சென்றது சுவாரசியம்.....

    பதிலளிநீக்கு
  9. /என்ன பேசுகிறார்கள் என்று //

    இது டீனேஜ் பையன்களுக்கும் பொருந்தும்!! :-((

    //"உன் வயசென்ன, அவர் வயசென்ன? பேரைச் சொல்றே.... //

    சொல்லிய விஷயம் சரி; ஆனால், சொல்லிய விதம்தான் தவறு!! :-((

    //எப்படிப் பேச வேண்டும்' என்பது வாழ்நாள் முழுக்க சிலருக்கு வருவதேயில்லை//
    உண்மை - எனக்கு(ம்)!! :-((

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!