சனி, 10 நவம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 4/11/2012 முதல் 10/11/2012 வரை

எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

 =================================================================

- தமிழகத்தில் முதல்வர், கவர்னர் அலுவலகங்கள், 60,000 பசுமை வீடுகள் முதலானவற்றில் முதல் கட்டமாக மிக விரைவில் சூரிய ஒளி மின்சாரம் பயன் படுத்தும் திட்டம். இதற்கான டெண்டர்கள் கோரப்பட்டு வேலைகள் தொடங்கி விட்டதாம்.

- காஷ்மீர் முதல்வர் தன்னிடம் தன் பெயரிலேயே அதிகப் படியாக வைத்திருந்த 2 காஸ் இணைப்புகளை (அப்படி இருந்ததே  தனக்குத் தெரியாது என்று சொல்லி) சரண்டர் செய்தார்.

- அரியலூர் மாவட்டம் கீழப்பாவூர் வரதராஜன். பொதுப்பணித்துறையில் கிணறு முதலான நீர்நிலைகளின் தரம் பார்த்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்புவதுடன் தன் துறை சார்ந்த பணிகள் நின்று போவதில் வருத்தப் பட்டு மேலதிகாரிகளின் அதிருப்தியையும் மீறி கிராமத் தலைவர்களிடம் பேசி அவர்கள் கெட்டுப்போன அந்த நீரை உபயோகப் படுத்த வேண்டாம் என்று அறிவுரை கூறி, பின்னர் தனது வேலையை உதறி, விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார். மழை நீர் சேகரிப்பின் பயன்களை மிக விளக்கமாகச் சொல்லி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வரும் இவரைப் பற்றிப் படித்தது தினமலரில்.

- புதுச்சேரி காந்தி நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் சீனிவாசன் தங்கள் ஆட்டோக்கள் நிறுத்தியிருந்த ஆட்டோக்களுக்கு அருகில் இருந்த காலியிடத்தில் மக்கள் அசுத்தம் செய்வதில் மனம் வருந்தி அந்த இடத்தை சுத்தப்படுத்தி முதலில் நாளிதழ்கள் போட்டு வைத்து பின்னர் படிப்படியாக அந்த ஏரியா மக்கள் கொடுத்துதவிய புத்தகங்கள் மற்றும், இந்த சங்க மெம்பர்கள் ஆங்காங்கே நடக்கும் புத்தகத் திருவிழாக்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கிப் போட்டு, தற்சமயம் சிறு  நூலகமாக மாற்றியுள்ள சாதனையைச் சொல்கிறது தினமலர்.

- சிறு பிரச்னைகளுக்கும் தற்கொலையைத் தெரிவு செய்யும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு பாடம், சென்னை பூக்கடை ஏரியாவிலேயே  பிறந்து, வளர்ந்து வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் 52 வயது அஞ்சலையின் வாழ்க்கை. குடிகார அப்பா, 7 வயது முதலே சுய சம்பாத்தியம், 13 வயதில் திருமணம், 14 வயதில் குழந்தை பிறக்கும் நேரத்தில் ஓடிப்போன குடிகாரக் கணவன், உழைத்து  திருமணம் செய்வித்த பெண்ணுக்கு  குடிகாரக் கணவன் பெண்ணைக் கொலை செய்து விட,  மகளின் 
4 குழந்தைகளை இவர்தான் மீன்பாடி   வண்டி ஓட்டி, பூ கட்டி, விற்று வளர்க்கிறாராம். ஆறுதல்..... அவர் பேத்தி திவ்யா 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 427 மார்க் எடுத்துள்ளது. நல்ல உள்ளங்கள் சில உதவி வருகின்றதாம். போதாதற்கு அனாதையான இன்னொரு உறவுக்காரப் பையனையும் தத்தெடுத்து வளர்க்கிறாராம். குழந்தைகள் 'நாளை நன்கு படித்து, டாக்டராகி உன்னைக் காப்பாற்றுவேன்' என்று சொல்லும்போது கஷ்டப்பட்டதின் பலன் கிடைப்பதாகச் சொல்கிறார் அஞ்சலை - தினமலர்.

- பெங்களூரு, அல்சூர் பகுதி, இந்திராநகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் மனோகரன். இவரது மனைவி மேரி பிரசன்டா. இவர்களது குழந்தை ஆரோன் ஜோயல்(2) உலகநாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகர், தேசிய கொடிகளையும் மனப்பாடமாக சொல்கிறான். காந்தி,நேரு என தேசிய தலைவர்களின் படங்களை காண்பித்தாலும் பெயர்கள், அவர்களது பிறந்தநாளில் நடத்தப்படும் விழாக்களை கடகடவென ஒப்பிக்கிறான். உலக வரைபடத்தில் எந்த நாட்டின் பெயரை சொன்னாலும் அவனது பிஞ்சுவிரல்கள் அந்த தேசங்களை சுட்டி காண்பிக்கிறான். சிறுவனின் முயற்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவனது பெற்றோர் வீட்டில் அனைத்து நாடுகளின் தேசியகொடிகளையும் வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


- சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 
உள்ள தலைவாசல், ஆனத்தூர் கிராமங்களில் உள்ள சுப்பிரமணியன், மணியம்மன் கோவில்களில் தங்கியுள்ள 20,000 த்துக்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்கள் நலன் கருதி 30 வருடங்களுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி  வருகிறார்கள் அவ்வூர் மக்கள். இவற்றை  கொண்டாடும் மக்கள், வேட்டைக்காரர்களிடமிருந்து இவைகளுக்கு ஆபத்து ஏற்படாமலும் காத்து வருகின்றனராம்.          தினமலர்.

-   நூலகரின் மகனாகப் பிறந்து, மருத்துவம் படிக்க விரும்பி, வசதியில்லாததால் மருத்துவம் சார்ந்த 'ஃபார்மசி அன்ட் பயோமெடிக்கல்' படித்த வேலு இது சம்பந்தமான பயிற்சிக்காக சென்னை புற்று நோய் மருத்துவமனையில் பயிற்சி எடுத்த போதுதான் நவீன மருத்துவக் கருவிகளின் தேவை பயன்பாடு, முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதாகச் சொல்கிறார். இந்த வசதிகளுக்காக மக்கள் சென்னைக்கே வரவேண்டியிருப்பதையும் கவனித்ததாகச் சொல்கிறார். எனவே நவீன மருத்துவக் கருவிகள் இறக்குமதி செய்வதைத் தொழிலாகவும், சேவையாகவும் செய்ய முடிவெடுத்து இதற்கான ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 7 ஆண்டுகள்
அங்கு ஆண்டுகள் பணியாற்றி, நுணுக்கங்கள் கற்று,  தானே ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இரண்டாம் நிலை நகரங்களுக்கானத் தேவையை உணர்த்திய நேரத்தில், ஒப்பந்தம்  செய்துகொண்ட சில நிறுவனங்கள் விலக,  கருவிகளையும் தானே தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார். நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு  கிராமங்களையும் எட்ட வேண்டும் என்பதே இவரது ஆசை என்கிறது தினமலர்.

 

"கிராமங்களுக்கும் வேண்டும்நவீன மருத்துவக் கருவி!'

மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வேலு: என் அப்பா, நூலகராகப் பணி யாற்றினார். எனக்கு, மருத்துவராக வேண் டும் என்று ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மருத்துவத் துறை சார்ந்த படிப்பையாவது, படிக்க வேண்டும் என, நினைத்து, "பார்மசி அண்ட் பயோமெடிக்கல்' படிப்பை டில்லியில் படித்தேன். பயிற்சிக்காக, சென்னை புற்று நோய் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போது தான், மருத்துவத் துறையில் நவீன கருவிகளின் தேவை, பயன்பாடு குறித்து, நுட்பமாகப் புரிந்து கொண்டேன்.

நவீன மருத்துவ வசதிகளுக்காக, அதிகளவில் மக்கள், சென்னைக்கு வருவதை கண்டேன். எனவே, நவீன மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்வதை தொழிலாகவும், சேவை யாகவும் செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். இதற்கான அனுபவத்தைப் பெற, மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்து, வினியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக் குச் சேர்ந்தேன்.அதற்குப் பின், மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், ஏழு ஆண்டுகள் பணியாற்றி, இத்தொழில் குறித்த விவரங்களை, தெளிவாக அறிந்து கொண்டேன். அதன் பிறகே, தனியாக நிறுவனத்தைத் துவங்கினேன்.

என் இலக்கு, மாநகரங்களைத் தாண்டி, இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளாகத் தான் இருந்தன. அவர்களுக்கு நவீன மருத்துவக் கருவிகள் குறித்த தேவையை உணர்த்தினேன்.அடுத்த சில ஆண்டுகளில், நான் ஒப்பந்தம் செய்து வைத்திருந்த சில நிறுவனங்கள் விலகியதால், திடீர் நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், அதை உந்து சக்தியாகக் கொண்டு, சொந்தமாக கருவிகளைத் தயாரிக்கத் துவங்கினேன். 

படிப்படியான வளர்ச்சியால், இப்போது, மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில், இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறோம். நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு, கிராமப்புறங்களுக்கும் செல்ல வேண்டும் என்பது தான் என் ஆசை.


- பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வேப்பங்குளம்.சுமார் 360 வீடுகள் 1600 பேர் மக்கள் தொகை.இங்கு கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக மதுவிலக்குச் சேவகராக தொண்டாற்றி வரும் வே.ப. சிங்கதுரை. இந்த ஊரில் குடிப்பவர்களை அன்பாலேயே திருத்துகிறார் இவர். குடியை விட்டவர்கள் வாரிசுகள் பெயரில் 5,000 ரூபாய்க்கு சேமிப்புப் பத்திரம்  வாங்கித் தருகிறார். குடிப்பவர்களை அவர்கள் குலதெய்வம் பெயரில் சத்தியம் செய்யச் சொல்லி வாக்குறுதி வாங்குகிறார்.                கல்கியிலிருந்து.


- பொள்ளாச்சிக்கு அருகே உள்ள சின்னபொம்மன் சாலையைச் சேர்ந்தவ
ர் எம் அருள்மணி. தந்தை மேகராஜ் தென்னை மரமேறும் தொழில் செய்பவர். ஐ ஏ எஸ் படிக்க ஆசைப்பட்டு எழுதி, அதில் வெற்றி பெறாததால் ஆஸ்திரேலியா சென்று அங்கு ஏ எஸ் ஓ தேர்வு எழுதி வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெராவில் உள்ள முதல்வர் மற்றும் கேபினட் மினிஸ்டிரியில் கடந்த 10 ஆம் தேதி கொள்கைகளை உருவாக்குவதும், மறுபரிசீலனை செய்வதும், அதை அமுல்படுத்துவதுமான பொறுப்பில் பதவி ஏற்றிருக்கிறார் இவர். தினமணியில் இவரது முயற்சிகள், வெற்றிகள்  பற்றி விரிவாகவே போட்டிருக்கிறார்கள்.

- பஹ்ரைனில் உள்ள ஒரு இன்சியூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செல்வகுமார், இளமையில் தான் தன்  படிப்புக்குப் பட்டக் கஷ்டங்களை நினைவில் வைத்து படிக்க முடியாத மாணவ மாணவியருக்கு உதவ நினைத்து, தன் வருமானத்திலேயே  உதவியும் வருவதைச் சொல்கிறது தினமணிக் கதிர்.  இவர் சிறுவனாக தேனாம்பேட்டைக் குடிசைப் பகுதியில் இருந்தபோது இவர் தாய் பத்மா சேஷாத்ரிப் பள்ளியில் ஆயா வேலை பார்த்ததையும், அந்தக் காரணத்தினாலேயே இவருக்கு  அதே பள்ளியில் இலவசமாகப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்ததையும், இவரின் ஏழ்மை நிலை கண்டு இவருக்கு 
புதிய  ட்ரெஸ்  எடுத்துக் கொடுத்த ஆசிரியை ஒருவரையும் நன்றியோடு நினைவு கூர்கிறார். செங்கல்பட்டுக்கு அருகே உள்ள பிலாபூர் கிராமத்தில் இவரது கல்வியாலயம் அறக்கட்டளை தொடங்கப் பட்டுள்ளது. இவருக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுத்த பழைய ஆசிரியை பிரேமா வீரராகவனைச் சந்தித்து குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கிவைக்கச் சொல்லி இருக்கிறார். திருமதி வொய் ஜி பி யும்  நோட்டுப் புத்தகங்கள் கொடுத்து உதவுகிறாராம் 2010 இல் 22  தொடங்கப் பெற்ற இந்த கல்வியாலயம் பள்ளிக்கு சென்னையிலிருந்து ஹோலி ஏஞ்சல்ஸ் மற்றும் பத்மா சேஷாத்ரி பள்ளியிலிருந்து சிறப்பு ஆசிரியர்கள் வாரத்துக்கு ஒருமுறை வந்து பாடமெடுக்கிறார்களாம்.

- சமீபத்திய நீலம் புயலில், சென்னையில் கரைதட்டிய பிரதீபா காவேரி கப்பலிலிருந்து தப்பிக்க நினைத்துக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்டவர்களை நடைமுறைச் சிக்கல் அது இதுவென்று அதிகாரிகள் வாளாவிருந்தபோது அவர்களிடம் அனுமதி வாங்கி ஃபைபர் படகுகளில் சென்று அவர்கள் உயிரைக் காப்பாற்றிய ரவி, வடிவேல் உள்ளிட்ட மீனவர்களுக்கு (இதுவே ஒரு பாசிட்டிவ் செய்தி) ஐ ஓ பி வங்கி பாராட்டி கவுரவித்தது. 'பரிசுகளை எதிர்பார்த்தா காப்பாற்றத் தோன்றியது? மனித உணர்வுகளால் உந்தப் பட்டுத்தான் படகுகளை எடுத்துக் கொண்டு ஓடினோம்' என்ற அவர்களது பேச்சு கவர்ந்தது.
            
10.11.2012:          
“இந்த நாள் 14 வயது மலாலா மற்றும் அவரைப்போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக கடைபிடிக்கப்படும்” 
   
தன்னைப் போன்ற சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடியதற்காக தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பாக்., சிறுமி மலாலாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 10ம் தேதியை (இன்று) மலாலா நாளாக கொண்டாடுகிறது ஐ.நா.,  
                   

13 கருத்துகள்:

  1. பாசிடிவ் செய்திகள் நிறைந்த வாரமாயிருப்பது குறித்து மகிழ்ச்சி,பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனம் படைத்தவர்களின் செய்தியே மிகுந்து இருப்பது இன்னும் சந்தோசம்

    பதிலளிநீக்கு
  2. வெடி வெடிக்காத கிராமங்களான தலைவாசல், ஆனத்தூர் பற்றி ஒவ்வொரு வருடமும் யாரேனும் நினைவு கூர்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  3. பல நல்ல செய்திகள்... நன்றி...

    வெடி வெடிக்கா விட்டால் பலருக்கு தலை வெடித்து விடும் போலிருக்கு...!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நல்ல செய்திகள்! தொகுத்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. பரபரப்புக்காகவோ அல்லது விரக்தியினாலோ, எதிர்மறையான விஷயங்களுக்கே பெரும்பாலான ஊடகங்களே முக்கியத்துவம் கொடுக்கிறபோது, நல்ல நிகழ்வுகளை அனைவரும் அறியத்தரும் உங்களது நல்லெண்ணம் பாராட்டுதற்குரியது. அதிலும், அந்த அஞ்சலையின் கதை ஒரு நல்ல முன்மாதிரி - நம்பிக்கைப் பற்றாக்குறை இருப்பவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  6. செய்திகளைத் தேடித் தந்திருப்பதற்கு நன்றி.

    மீனவர்கள் சொல்லியிருப்பது சரியே. பரிசுகள் அங்கீகாரமென்றாலும் அந்த எளிய உள்ளங்களில் காணப்பட்ட மனிதாபிமானமும் துணிச்சலும் அன்று அனைவராலும் பாராட்டப்பட்டது.



    பதிலளிநீக்கு
  7. நல்ல செய்திகள்(, ஒன்றைத் தவிர).

    //கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 க்கும் மேற்பட்டவர்களை நடைமுறைச் சிக்கல் அது இதுவென்று அதிகாரிகள் வாளாவிருந்தபோது// (அந்த ஒன்று இதல்ல)

    கண்ணெதிரே கடலில் தவிப்பவர்க்ளைக் காப்பாற்ற என்ன பாழாப்போன நடைமுறைச் சிக்கலோ!! அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்க்ளைவிட, சாமான்யர்களே மனிதாபிமானம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

    அப்புறம், அந்த ஒன்று: 2 வயது குழந்தை, நாடுகள், தலைநகர், தேசியக்கொடி... இதிலென்ன பாஸிடிவ் விஷயம் இருக்கீறது?

    பதிலளிநீக்கு
  8. // (அப்படி இருந்ததே தனக்குத் தெரியாது என்று சொல்லி) //

    A person who's not aware of his-home affairs.. runs a govt. I wonder how ?

    பதிலளிநீக்கு
  9. இன்னிக்குத் தான் இது அப்டேட் ஆகி இருக்கு. :)))

    முதல் செய்தியைப் படித்ததும் கோபம் தான் வருது. இங்கே மின்வெட்டில் மக்கள் தவிக்கின்றனர். பண்டிகை தினம் என்ற சலுகை கூட இல்லை. திருப்பூர், ஈரோடு, சேலத்து நெசவாளிகளை நினைத்தாலே வயிறு கலங்குகிறது. போர்க்கால நடவடிக்கையாகச் செய்ய வேண்டியதை செய்தே ஆகணும். :((((((

    பதிலளிநீக்கு
  10. அஞ்சலையை நினைத்தும், கல்வி ஆலயம் திறந்திருக்கும் இளைஞரை நினைத்தும் பெருமிதம் ஏற்படுகிறது. பொதுவாக எல்லாமே நல்ல செய்திகளே. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அஞ்சலையை நினைத்தும், கல்வி ஆலயம் திறந்திருக்கும் இளைஞரை நினைத்தும் பெருமிதம் ஏற்படுகிறது. பொதுவாக எல்லாமே நல்ல செய்திகளே. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக்12 நவம்பர், 2012 அன்று PM 8:21


    நன்றி சீனு.

    நன்றி மோகன் குமார்.

    நன்றி DD

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி சேட்டை சார்.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி ஹுஸைனம்மா. எளிய மக்களிடம் இருக்கும் மனிதாபிமானம் அதிகார வர்க்கத்திடம் இருப்பதில்லைதான்.

    நன்றி மாதவன். உண்மைதான். அங்கு இரண்டு மூன்று ஆச்சரியக்குறிகள் இட்டிருக்க வேண்டும். ஆனாலும் சரண்டர் செய்தாரே...அதுவே ஆச்சர்யம்தான்.

    நன்றி கீதா மேடம்...

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான செய்திகள்... தொடரட்டும்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!