திங்கள், 31 டிசம்பர், 2012

அதிர்ச்சி தரும் வெட்கக்கேடு?

                     
இதற்கு முன் எவ்வளவோ அக்கிரமமான, அருவருக்கத் தக்க "அழிப்பு" குற்றங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் விழித்துக் கொண்டு ஆட்சேபம் தெரிவிக்காத இந்திய சமூகம், தலைநகரில் நடந்த இந்த அதி அக்கிரம, ஆபாசக் குற்றம் பற்றி அறிந்தவுடன்,துயிலெழுந்து முழங்கிப் புறப்பட்டு ஆர்ப்பரிக்கிறது. பயனுள்ள ஒரு நடவடிக்கை வரும் வரை ஓயாது என்று நினைக்கத் தோன்றுகிறது. அதுவரை ஒரு முன்னேற்றம் தான். 
     
ஆனால் இதில் பாராளுமன்றம், அமைச்சர், உறுப்பினர் மற்றும் கட்சிப் பிரமுகர் அல்லது சமுதாய முன்னணி பிரமுகர்கள் செய்யக் கூடியது எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அருண் ஜெட்லி சொன்னது போல, கடும் தண்டனை தரக் கூடிய குற்றமாக அறிவித்தல் மிக எளிதான தீர்வு. அது விரும்பிய மாறுதலை உண்டாக்குமா என்பது மிகவும் சந்தேகப் படவேண்டிய விஷயம். ஒவ்வொரு அயோக்கியனுக்கும் பின்னால் ஒரு போலீஸ்காரர் சுற்ற முடியாது. வாய்ச் சொற்களோ என்ன பயனும் இல. பின் உண்மையான பயன் தரக் கூடியதாக யார் என்ன செய்ய முடியும்? 
            
தனியாக பெண் ஒருத்தி செல்லக் கூடாது என்று எண்ணி வந்தோம். இப்போது உடன் ஒரு ஆண் துணை இருந்தும் பயனின்றிப் போய்விட்டது. காரணம் அக்கிரமம் செய்வோர் ஐந்து ஆறு பேராக கூட்டணி அமைத்துக் கொண்டு வந்தது தான். ஐந்து ஆறு பேர் செய்யத் துணிந்த அக்கிரமத்துக்கு அவர்களில் ஓரிருவர் கூட மறுப்பு சொல்லவில்லை, அதைத் தடுக்க முயலவில்லை என்பது சோகத்தில் எல்லாம் பெரிய சோகம். 
            
இது பலமுனைத் தாக்குதல் செய்து சமாளிக்கப் பட வேண்டிய ராட்சச பிரச்னை. 
            
கண்முன் ஒரு அதி அக்கிரமம் நடக்கிறது என்று தெரிந்த பொழுது அதைத் தடுக்க வழிப்போக்கர்களும் கூட முன் வர வேண்டும். பெரிய இடத்து விரோதம் வந்து விடும் என்ற அச்சம் இதற்கு தடுப்பாக இருக்கிறது. போலிசுக்கு ஒரு வழக்கு எடுத்துச் செல்லப் படும் பொழுது "பெரிய மனிதர்" வீட்டுக்கு போன் செய்து வழக்கைப் பதிவு செய்யலாமா என்று கேட்கும் அளவுக்கு காவல் துறை இருப்பதாக ஒரு அபிப்பிராயம் நிலவி வருகிறது. இது உண்மையானால், அது உடனே நிறுத்தப் பட வேண்டும். எந்த சிபாரிசுக்கும் துணை போகாத உணர்வு காவல் துறைக்கு இருக்க வேண்டும். 
                
அமைச்சர்களும் மற்றைய செல்வாக்குள்ள பெரிய புள்ளிகளும் தவறுக்கு துணை போகக் கூடாது. அப்படி போகிறவர் அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறாமல் செய்யப் பட வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
           
குடும்பத்தில் கட்டுக் கோப்பு இருக்க வேண்டும். ஒரு பையன் இந்த மாதிரி கேட்பார் இன்றித் தான்தோன்றியாகத் திரிகிறான் என்றால் அக்கம்பக்கத்தவராவது புகார் செய்து அவனிடம் ஓர் அச்ச உணர்வு தோன்றுமாறு செய்யவேண்டும். அந்த மாதிரி புகார் வரும்பொழுது அதனை நாணயமாக விசாரித்து ஆவன செய்ய வேண்டும். புகார் கொடுப்பவரை பிளாக் மெயில் செய்கிற மாதிரி நடந்து கொள்ளக் கூடாது. 
       
இள வயதிலேயே நியாய நேர்மை உணர்வு மிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். தரமான கல்வி நல்ல ஆசிரியர்களைக் கொண்டு எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். 
           
சொல்வது யார்க்கும் எளிது அவ்வண்ணம் செய்தல் அஃதொப்பதில்லை. ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பதை மட்டுமாவது செய்யலாம் இல்லையா? 
            
நம் வட்டத்தில் வேறு யாருக்கும் என்ன தோன்றுகிறதோ சொல்லுங்கள். இந்த அவல நிலை மீண்டும் இவ்வளவு பயங்கரமாக தலை எடுக்காமல் செய்ய முடியுமா பார்க்கலாமே.      
                       
பின் குறிப்பு: இது இந்த வருடத்தின் இறுதிப் பதிவு. இந்த நிகழ்வு உலகில் எங்கும் இனி நிகழக் கூடாது என்பது எங்கள் பிரார்த்தனை. 
                   

13 கருத்துகள்:

  1. ரொம்ப, ரொம்ப நல்ல கருத்துக்கள். படிக்க சந்தோஷமாக இருக்கிறது. இதுதான் ஆதர்ச எதிர்பார்ப்புகள்.
    நடக்குமா?

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. இள வயதிலேயே நியாய நேர்மை உணர்வு மிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். தரமான கல்வி நல்ல ஆசிரியர்களைக் கொண்டு எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.//

    உண்மைதான் .
    வீட்டில் குழந்தைகளிடம் அன்பும் கருணையுமாக பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் அன்பாய் பேச முதலில் நேரம் ஒதுக்க வேண்டும் பெற்றோர்.குழந்தைகளுக்கு கஷ்ட, நஷ்டங்களை சொல்லி வளர்க்க வேண்டும்.

    பள்ளியில் ஆசிரியர், மாண்வர் உறவு நல் உறவாய் இருக்க வேண்டும்,
    மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கும் போது மனம் புண்படாமல் சொல்லி அவர்களை நல்வழி படுத்த ஆசிரியர்கள் முன் வர வேண்டும். பள்ளியில் முன்பு இருந்த நீதி போதனை வகுப்புகள் மறுபடியும் நடக்க வேண்டும்.நண்பர்கள் நல்ல நண்பர்களாய் இருக்க வேண்டும். குடும்பம், சமுதாய்ம், நட்பு மூன்றும் சரியாக இருந்தால் எல்லா குழந்தையும் நல்ல குழந்தை தான்.


    //இந்த நிகழ்வு உலகில் எங்கும் இனி நிகழக் கூடாது என்பது எங்கள் பிரார்த்தனை. //

    அது தான் அனைவரின் பிராத்தனையும்.
    புது வருட வாழ்த்துக்கள்.
    நல்ல சிறப்பான் பகிர்வு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //இள வயதிலேயே நியாய நேர்மை உணர்வு மிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். தரமான கல்வி நல்ல ஆசிரியர்களைக் கொண்டு எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். //

    இது தான் மிக முக்கியம். ஏனெனில் ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள். இப்போதெல்லாம் தவறு செய்யும் குழந்தையைக் கண்டிக்கவோ, தவறு என்பதைச் சுட்டிக்காட்டினாலோ சொல்பவர்கள் தான் குற்றவாளி. இது என் சொந்த அனுபவம். வரேன் ஒரு தொலைபேசி அழைப்பு.

    பதிலளிநீக்கு
  6. சொல்வது யார்க்கும் எளிது அவ்வண்ணம் செய்தல் அஃதொப்பதில்லை

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  7. பலரின் ஆதங்கத்தைப் பிரதிபலித்திருக்கிறீர்கள். உங்கள் பிரார்த்தனையில் இணைகிறோம்.

    பதிலளிநீக்கு
  8. //இள வயதிலேயே நியாய நேர்மை உணர்வு மிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும். தரமான கல்வி நல்ல ஆசிரியர்களைக் கொண்டு எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.//

    மிகவும் சரி. இது சாத்தியமாக்கப்பட வேண்டும். பிரார்த்தனையில் நாங்களும் இணைகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதே நடக்கும்.....நம்பிக்கையோடு பிறக்கட்டும் புதிய ஆண்டு.வாழ்த்துகள் எங்கள் புளொக் எல்லாருக்கும்.மீனும்மாவுக்கும் கூட வாழ்த்துச் சொல்லி வைக்கிறேன் இங்க !

    பதிலளிநீக்கு
  10. விழிப்புணர்வு பகிர்வு இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி நடக்காதிருக்க வேண்டுகிறேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அக்கிரமத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க எல்லோரும் முன் வர வேண்டும்.
    வரும் புத்தாண்டு நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்புவோம். உங்கள் பிரார்த்தனையில் நாங்களும் இணைகிறோம்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. உங்கள் பிரார்த்தனையில் நாங்களும்.

    @கீதா மேடம், இன்னுமா ஃபோன் பேசி முடிக்கலை??!! :-)))

    பதிலளிநீக்கு
  13. இந்த ஆறு பேரும் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடும் முடிவுடனேயே இந்தக் கேட்டைச் செய்திருக்கிறார்கள். மூன்றாம் தேதிதான் சார்ஜ் பதியப் படுமாம.
    அதற்குள் அரசியல் பிரமுகர்கள் உதிர்க்கும் முத்துக்கள் வேறு.
    உங்கள் பதிவுபடி எல்லாம் நடக்கவேண்டும்.

    நம் பிரார்த்தனைகள் இறைவன் அருளால் பலிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!