வியாழன், 17 ஜனவரி, 2013

நிதானமாய் நின்று பார்த்தால்...

                 
அப்பாடா ஒரு மாதிரியாக டில்லி "கேஸ்" சந்தடி அடங்கி இருக்கிறது.  இப்போது கொஞ்சம் நிதானமாக யோசிக்க முடியும்.
                 
"இம்மாதிரி குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுத்தால்தான் சரி. இல்லா விட்டால் இது நடந்து கொண்டு தான் இருக்கும்"  என்று பலமாக குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானோர் மறு ஆலோசனை செய்கிற மாதிரி, இடைப்பட்ட நாட்களில் மேலும் இரண்டொரு குற்றங்கள் நடந்திருக்கின்றன. 'இவ்வளவு களேபரம் நடக்கும்போது, மீண்டும் இதைச் செய்தால் மரண தண்டனை நிச்சயம்' என்ற பயம் இல்லாமல் போனது ஏன் என்று யோசிப்பதில் பயனில்லை.  கடும் தண்டனை காரணமாக குற்றம் குறையாது என்ற ஞானோதயம் வரவேண்டும். 
     
சமுகம் என்பது பலதரப்பட்டோர் அடங்கியது.  அதில் எல்லா விதமான நல்லவரும் பொல்லாதவரும்  இருப்பர். குற்றங்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். அடிப்படை மனமாற்றம் என்பது கோடிக் கணக்கான பேருக்கு ஏககாலத்தில் வந்து விடாது.  ஓரிருவருக்குக் கூட வருவது அபூர்வம் என்பதே உண்மை.
     
"இப்படி அநியாயம் நடக்கிறதா?  அதோ அதை சரி செய், இதோ இதை சரி செய்" என்று புறத்தே கையைக் காட்டிக்கொண்டிராமல் அகத்தே சற்று ஆராய்ந்து பார்த்து மனம் திருந்த வேண்டும், ஆர்வம் காட்டுவோர்.  கொடும் குற்றம் தான் நடந்தது. சற்றும் மறுப்பதற்கில்லை.  ஆனால் கொடும் குற்றம் என்றால் இது மட்டும் தானா? அடுத்த வேளை  சோற்றுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் ஏழை எளியவரிடம் ஏமாற்றி காசு பிடுங்குவது அதைப் போன்ற கொடுமை அல்லவா?  கொடு அதற்கும் மரண தண்டனை என்று ஆரம்பித்தால் சரி ஆகுமா?
      
அநியாயம் நடந்தால் ஆயிரம் பேர் கூடி நீதி வேண்டி போராடுவார்கள் என்பது நல்ல விஷயம் தான்.  ஆனால், அண்ணா ஹசாரே, கேஜ்ரிவால், பரபரப்பு செய்தி என்று மட்டும் கொண்டாடிக் கொண்டிராமல் தட்டிக் கேட்பது மக்கள் உரிமை என்று இருக்க வேண்டும். அதுவே நல்லது.  "சிறுமை கண்டு பொங்குவாய்"  என்றார் கவி.
                
சிறுமை கண்டு பொங்கியாயிற்று , நம் மக்கள். மீண்டும் பொங்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படாமல், சிறு மதியாளர்கள் மனம் திருந்தச் செய்யவேண்டும். சிறுமை, கயமை செய்கைகள் அடியோடு வேரறுக்கப் படவேண்டும். இதற்கு என்ன வழி என்று அரசாங்கங்களும், சட்டமியற்றுவோரும், பொது மக்களும் சேர்ந்து வழி காணவேண்டும். 
                      

11 கருத்துகள்:

  1. கடுமையான சட்டங்கள் மக்களைத் திருத்தும் என்றால் நிச்சயம் தேவை தான். மரண தண்டனை என்பதற்கு பதிலாக வேறு விதமான தண்டனைகள் கொடுத்து அவர்களை பார்த்து மக்கள் திருந்தும் வண்ணம் வேறு ஏதேனும் தண்டனை கொடுக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. தண்டனைகள் தீர்வாகாது என்றாலும் தண்டனைகள் கொஞ்சமாவது குற்றங்களைக் குறைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது... என்றார் கவிஞர்.

    ஓட்டையாய் இருக்கும் சட்டத்தால்
    ஒரு பயனும் இல்லைதான்...

    பதிலளிநீக்கு
  4. இதுவும் கடந்து போகும் என்ற நிலையே அரசாங்கங்கள் இப்போது கடைபிடிக்கிறது.

    ஊடகங்களும் பரபரப்பான வேறொரு விஷயம் வந்ததும் பழைய விஷயத்தினை விட்டுவிடுகிறார்கள்.

    ஓட்டை இல்லாத சட்டங்களும், சட்டத்தினை மதிக்கும் மக்களும் இல்லாத வரையில் இந்தப் பிரச்சனைகள் தொடரும் என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. இப்பதான் இன்னோரு ஊடகத்துல பார்த்தேன். லண்டன்ல நடக்கிற பலாத்காரங்கள் 80% வெளியே வருவதில்லையாம். எல்லாம் மேலிடத்துச் செயல்களாம்.பெண்கள் கம்ப்ளெயிண்ட் கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொறுத்துப் போய்விடுகிறார்களாம்.

    சட்டங்கள் மாறணும். மக்கள் மாறணும்.ஊடகம்,சினிமா,சீரியல் வன்முறைகள் குறையணும்.
    தூக்குடா அவனை'' வசனத்தைக் கேட்டாலே கசக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. முரளிதரன் கூறியபடி தண்டனைகள் இல்லாமலே திருத்த முடியாது... தேவை உடனடி தண்டனை...

    பதிலளிநீக்கு
  7. உயிரை எடுப்பது தண்டனையே அல்ல. தவறை உணர வைத்து வருந்த வைப்பதாக அவை அமைய வேண்டும். அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். யாவற்றையும் விட படிக்கும் வயதிலிருந்தே ஒழுக்கத்தையும் நற்சிந்தனைகளையும் கண்டிப்பாக கடுமையாக போதிக்க வேண்டும். ஆசிரியர் மாணவன் மீது கை வைத்தால் ஜெயில் என்றால். வீட்டிலும் கண்டு கொள்ள பொழுதில்லை என்றால் எப்படி வளருமாம் பிள்ளைகள்...? நிறைய யோசிக்க வைக்கிறது இந்த விஷயம்.

    பதிலளிநீக்கு
  8. சிந்தனையை தூண்டும் பதிவு. சட்டங்கள் மாற வேண்டும். அதுபோல மக்களும் மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நின்று நிதானமாக யோசித்தால் யாரைக் குற்றம் சொல்வது இந்த மாதிரி விஷயங்களுக்கு?

    திரைப்படங்களையா? கட்டுப் பாடற்ற இணைய சுதந்திரத்தையா?


    சுயக்கட்டுப்பாடு ஒன்றுதான் சமூகததில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

    இளைஞர்களின் அபரிமிதமான சக்தியை ஆக்க பூர்வமான வழிகளில் ஈடுபடுத்த ஆவன செய்ய வேண்டும்.


    பதிலளிநீக்கு
  10. கொடுமையான நிகழ்வுகளின் போது கண்டனத்தையும் ஆதங்கத்தையும் பதிவு செய்வதோடு நகர்ந்தபடி இருந்தால் இவற்றுக்குத் தீர்வே இல்லை. இறுதியாகச் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. மனிதத்தை மனிதன் தின்றுகொண்டிருக்கிறான்.

    http://kalaivili.blogspot.ch/2013/01/blog-post_16.html

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!