ஞாயிறு, 31 மார்ச், 2013

ஞாயிறு 195 - முதிய இல்லம்





வாழ்ந்து களைத்த வீடு                                     உடைந்த ஓடுகள்
வயதான வீடு                                                      மேலும் கீழும் ...
                                                                                  நடுவே
                                                                                  நொடித்த வீடு


ஓடு போலத்                                                          வாழ்ந்த வீட்டின் 
தேயலாம்                                                              வீழ்ந்த ஓடுகள்
ஓடே தேயுமோ...


முன்பு...                                                                    நீளும் நிழல்
புதிய இல்லம்                                                        மூட வருகிறது
இப்போது                                                                 மிச்சமிருக்கும்
முதிய இல்லம்                                                     வெளிச்சத்தையும்..

சனி, 30 மார்ச், 2013

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 24, 2013 முதல் மார்ச் 30, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி

அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்
கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.
                                                     

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
 

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.

2) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மரங்களைத் இலாபநோக்கின்றி தன்னார்வத்துடன் நட்டு வளர்த்த சூழல் ஆர்வலர், ஏழூர் அய்யாசாமி - கோடியில் ஒருவர்.
                                                  

எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார்.

முதிய வயதிலும் மரங்களைப் பேணி வந்த அய்யாசாமி மார்ச் 7, 2011 அன்று காலமானார்.

 
இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவாக, இதைப் பதிவு செய்திருக்கிறார்கள் 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' முகநூல் தளத்தில்.


3) போராட்டங்கள் மூலம், 25 ஆயிரம் பழங்குடியினருக்கு, அவர்களின் நிலங்களை மீட்டு தந்துள்ள, சி.கே. ஜானு: 


"நான், கேரள மாநிலம், முத்தங்கா காட்டுப் பகுதியின், பழங்குடி இனத்தை சேர்ந்தவள். வறுமையால் பள்ளிக்கு செல்லாமல், ஏழு வயதிலேயே விறகு பொறுக்கும் வேலைக்கு சென்றேன். பல வேலைகள் செய்தாலும், மூணு வேளை கஞ்சிக்கு உத்திரவாதம் இல்லை.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சட்டப் பாதுகாப்புடன், மரங்களை கடத்த உருவாக்கப்பட்டது தான் வனத் துறை. வனத்தை பாதுகாக்க போகிறேன் என, காலம் காலமாய் குடியிருந்த பழங்குடிகளை நிர்கதியாக விரட்டியடித்து, வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, வனத் துறை மூலம் கடத்துவது, இன்னும் தொடர்கிறது.கேரளாவில், ஏழைகளின் தோழன் எனும் இடதுசாரி கட்சிக்கும், முதலாளிகளின் கைப்பாவையான காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கை வேறுபட்டானாலும், பழங்குடி மக்களை ஏமாற்றுவதில் வேறுபடவில்லை. 1992ம் ஆண்டு பழங்குடிகளை ஒன்றிணைத்து, நாங்கள் இழந்த எங்கள் மண்ணின் மீதான உரிமையை மீட்டெடுக்க, "கோத்ரா மகா சபை'யை உருவாக்கி, பல போராட்டங்கள் செய்தேன்.எங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, அனைத்து கட்சிகளும் பழங்குடியினர் பிரிவை ஆரம்பித்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், அரசியல் கட்சிகள் எங்களை ஏமாற்றி, பிழைப்பு நடத்துவதை புரிந்து கொண்டேன்.

                                                                                
கடந்த, 2003ம் ஆண்டு, எங்களின் முத்தங்கா காட்டுப் பகுதியில், "இனிமேல் இதுதான் எங்கள் நிலம்' என்ற முழக்கத்தோடு போராடினேன். போலீசின் தாக்குதலால், ரத்தக் கறைகள் மட்டுமே கிடைத்தன. இறுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள அரசின் தலைமை செயலகத்தை சுற்றி, 1,000 குடிசைகள் அமைத்து முற்றுகையிட்டோம்.போலீசின் கொடூர தாக்குதலை சமாளித்து, 48 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தால், இனி வேறு வழியில்லை என, கேரள அரசு பணிந்தது. 25 ஆயிரம் பழங்குடியினரின் இடங்களை மீட்டேன். நாங்கள் வாழும் வரையில், எங்கள் மண்ணின் மீதான உரிமையை, நிலை நாட்டினோம்.

4) வித்தியாசமாக புகைப்படங்கள் எடுக்கும் 23 வயது ஜெஸ்வின் ரெபெல்லோ பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். கீழே அவர் எடுத்த அந்த வித்தியாசமான புகைப்பட
ங்களைப் பார்க்க வசதியும் செய்திருக்கிறது.

அவரைப் பேட்டி காணச் சென்ற நிருபர் சொல்வது : ஒரு பையில் கேமிரா சாதனங்களும், இன்னோரு பையில் விதவிதமான விளக்குகள், நிறைய மின் வயர்கள் என்று ஒரு நவீன "எலக்ட்ரீசியன்' போல உற்சாகமாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தந்த நேர்முக விளக்கங்கள் பிரமாண்டமாக இருந்தது.

நல்ல திறந்தவெளி இருட்டில் இவர் கற்பனை செய்து வைத்திருக்கும் விஷயத்தை வித்தியாசமான விளக்குகளை சுழலவைத்து, ஆடவைத்து, உருவங்களின் மீது ஓடவைத்து படம் எடுக்கிறார். ஒரு படம் எடுக்க மூன்று மணி நேரமுமாகலாம், மூன்று நாட்களும் ஆகலாம்.

ஒளி ஒவியம் (லைட் பெயின்டிங்) என்றழைக்கப்படும் இது போன்ற 80 புகைப்படங்களை இவர் எடுத்து வைத்துள்ளார். உலகம் முழுவதிலும் இந்த ஒளி ஓவியத்தை மட்டுமே எடுக்கும் புகைப்படக்கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் சிறந்தவர்கள் என்று 73 பேரை பட்டியலிட்டு அவர்களது புகைப்படங்களை மும்பையில் கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே இந்திய ஒளி ஓவிய படம் ஜெஸ்வினுடையது மட்டுமே.

இவரது புகைப்படங்களை பார்த்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், நேரில் வந்து, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பார்வையாளர்களுக்கு "டெமோ' கொடுக்கும்படி அழைத்திருந்தனர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவரால் போகமுடியாமல் போய்விட்டது.

                                              
 
நான் இந்த ஒளி ஓவியம் என்று சொல்லக்கூடிய புகைப்படங்களை பற்றி தற்செயலாக இணையதளத்தில் படித்ததும் பிடித்துப்போனது. இது போன்ற புகைப்படங்களை எடுப்பதில் மனது சந்தோஷப்படுகிறது. யாராலும் செய்யமுடியாததை செய்கிறேன் எனும்போது மனசு பெருமிதமும் படுகிறது. இது முழுக்க,முழுக்க எனது மனத்திருப்திக்காக மட்டுமே எடுக்கிறேன் என்கிறார் ஜெஸ்வின்.

உங்களது தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இந்த வித்தியாசமாக புகைப்படங்களை கண்காட்சியாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி வாழ்த்தினேன். வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944252470.

வெள்ளி, 29 மார்ச், 2013

எஸ்கலேட்டர் அனுபவம்


திருக்கடையூர் செல்ல புவனேஸ்வர்- ராமேஸ்வரம் ரயிலில் ஏற எக்மோர் சென்றோம். எந்த நடைமேடையில் ரயில் வரும் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். சகோதரி, சகோதரி கணவர் உடன் இருந்தனர்.
                                       
 
சகோதரி கொஞ்சம் அப்பாவி. பந்தியில் சாப்பிட உட்கார்ந்திருப்பார். அவருக்கு சாம்பார் அல்லது சட்னி வேண்டும் என்று தேவை இருக்கும். பரிமாறுபவர் சற்று தூரத்தில் வரும்போதே அவரையே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்குவார். ஏற்கெனவே கையைக் குறி பார்த்து சாம்பார் வேண்டுமோ, சட்னியோ அல்லது ஸ்வீட் வேண்டுமோ, அந்த இடத்தில் ஆள் காட்டி விரலை அடையாளம் வைத்திருப்பார். பரிமாறுபவர் தாண்டிச் செல்லும்போது அவரைக் கூப்பிட எல்லாம் மாட்டார். அவரையே பார்ப்பார். அவர் திரும்பி இவரைப் பார்க்கும்போது இலையில் அடையாளம் வைத்துள்ள விரலைத் தட்டுவார். அவருக்கு எப்படி இவர் கேட்பது புரியும்? அவர் பேசாமல் சென்று விட, சகோதரி ஏமாற்றத்தில் திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்.

                                        
 
அருகிலேயே இருந்த படிக்கட்டுகளைக் காண்பித்த என் சகோதரி "நான் எஸ்கலேட்டரில் ஏறியதே இல்லை" என்று கூறி அது எப்படி இருக்கும் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். அதில் ஏறும்போது எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சகோதரி கணவர் கூறிக் கொண்டிருந்தார்.

அறிவிப்புப் பலகையில் 4வது நடைமேடை
க்கு வண்டி வந்து சேரும் என்று அறிவிப்பு வரவே, நாங்கள் எப்படி அங்கு செல்வது என்று பார்த்து விட்டு, சகோதரி கணவரிடம் 'படி ஏறி அந்தப் பக்கம் சென்று விடலாம்' என்று சொன்னேன். வைகை, பல்லவன் வரும் நடைமேடையில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அக்காவை எஸ்கலேட்டரில் இந்த வயதான காலத்தில் ஏற்றி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.

                                     
 
"அவள் எஸ்கலேட்டரில் ஏறியதில்லை என்கிறாள். அதிலேயே போவோம்" என்று கூறியவர் மனைவி கையிலிருந்த பையையும் தானே வாங்கிக் கொண்டு நடக்கலானார்.

"சும்மா சாதாரணமா கால் வைச்சு ஏறிடணும். குதிக்கக் கூடாது. அது பாட்டுக்க ஓடிக் கொண்டேயிருக்கும். நாம எப்பவும் சாதாரணமா நடக்கறா மாதிரி அதில் ஏறி விட வேண்டும்" என்று வழிமுறைகளை மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டே நடக்க, சகோதரி முகத்தில் பயத்துடன் கூடிய ஆர்வம் தெரிந்தது.

நான், 'ஆரம்பத்தில் இங்குதான் இறங்கத் தெரியாமல் இறங்கி அதிலேயே கால் மாட்டிக் கொண்டு' என்று
விபத்து நேர்ந்த சிறுமி பற்றி சொன்னேன். மாமா என்னை முறைத்தார். 

                                            
                                              
அந்த இடமும் வந்தது. எல்லோரும் கூட்டம் கூட்டமாக அதில் சென்று ஏறிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு சொல்லியும். அல்லது நிறைய எச்சரிக்கைகள் சொல்லிக் குழப்பியதாலேயே அக்கா அந்த இடம் வந்ததும் தண்ணீருக்குள் இறங்குபவர் போல ஆழம் பார்க்கத் தொடங்க, கணவர் "அதான் சொன்னேன்ல" என்று அதட்டிய அதட்டலில் 'டொம்' மென்று 'உள்ளே' குதித்தார். "இப்ப நடக்கணுமா, வேண்டாமா" என்றார் பின்குறிப்பாக.

"நாங்கள் லேட் ஆச்சுன்னா அப்படியே இதிலேயே ஏறி ஓடுவோம். நீ அப்படியே நில்லு! அதுவே மேலே போகும்"


"முதல் வரி தேவையா இப்போ?" என்றேன்.

"நீ சொன்னதுக்கு இது பெரிய விஷயம் இல்லை" என்றார்.

"இறங்கும்போதும் குதிக்காமல் கேஷுவலா நடந்து தாண்டு" என்றார் மனைவியிடம்.


மறுபடியும் சகோதரி முகத்தில் தீவிரம். இறங்குமிடம் நெருங்கியது. காத்திருந்து மறுபடி குதித்து பேலன்ஸ் செய்து நின்றார். இரண்டொருவர் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றனர்.

வலது பக்கம் திரும்பி 4 வது நடைமேடையை
த் தேடினோம். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஒருவர் திரும்பி, "அப்படியே கீழே இறங்குங்கள்" என்றார்! (ஒரு மாதிரியாகப் பார்த்ததாகத்தான் நினைவு!!)

                                       

எனக்குப் புரிந்தது. இறங்கினோம். மாமாவுக்குச் சந்தேகம். "ஸ்ரீ... இது அதே பிளாட்பாரம் மாதிரி இல்லை? நாம் அங்கேயே இறங்கி விட்டோமோ?"

"அட ஆமாம்! வாங்க"


அவர் அப்படியும் படிக்கட்டின் ஓரம் வழியாக நடந்துசென்று ஆராய்ந்து விட்டு வந்து சிரிக்கத் தொடங்கினார்.

ஆக, எழும்பூர் முதல், 4 வது நடைமேடை
க் குழப்பத்தில் எங்கள் சகோதரியின் எஸ்கலேட்டர் ஆசை தீர்ந்தது. ரொம்ப நேரம் கண்ணில் நீர் வர, சிரித்துக் கொண்டிருந்தோம்.

புதன், 27 மார்ச், 2013

இலக்கியம்...

  
இலக்கியம் பற்றி இரு பிரபலங்களின் எழுத்துகள் இங்கே.


1)
                                                     

"ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின் ஒரு வளர்ச்சியின்,  ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்.

ஓர் எழுத்தாளன் ஆத்மசுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல.  அது ஒரு தவம்!  நீங்கள் கதை என்று எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே...  அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாஸனம்.

                                                    
அதை உங்கள் திருப்திக்காகவோ, எனது திருப்திக்காகவோ கூட நான் எழுதிக் கொள்ள முடியாது. உங்களை ஏமாற்றவோ, என்னை நான் ஏமாற்றிக்கொள்ளவோ கூட
தை நான் எழுதக் கூடாது. இலக்கியத்தில் வெற்றி என்பது உங்களது புகழ்ச்சி அல்ல; எனது அகம்பாவமும் அல்ல. உங்களை வெல்வது வெற்றியே அல்ல... சில சமயங்களில் அதுவே ஒரு வீழ்ச்சி.  இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது. உங்களைக் கடந்து செல்வது என் வெற்றி.  நீங்களே உங்களைக் கடந்து செல்வதற்கு உதவி செய்வது இலக்கியத்தின் வெற்றி. அதற்கு இன்னொரு பெயர் வளர்ச்சி.

........................................................................................................................................................................

......................................................................................
............................................................................................................
....................................................................................................................

இலக்கியத்தில் ஈடுபாடில்லாதவர்கள், இலக்கிய ஆசிரியர்களின் பெருமையை உணராதிருப்பது பொருட்படுத்தத் தகுந்த விஷயமல்ல. ஆனால் இல்லக்கியத்தின்மீது மாளாத காதல் கொண்டு விட்டதாக மடலூர்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த மொழிக்காக, இந்தக் கலாச்சாரத்துக்காக சர்வபரித்தியாகம் செய்யத் தயாராயிருப்பவர்க
ள் போல் காட்டிக் கொள்பவர்கள் கூட இலக்கியத்தின் தலைவிதியை எழுதுபவனை ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
                                       

 
இதையெல்லாம் வெளியில் சொல்வது அவமானம் என்று நான் கருதவில்லை. அவமானமெனினும் அதை மறைத்துப் பயனில்லை. எனவேதான் என்னோடு, எனது கருத்துகளோடு, எனது வாழ்வியல் நெறிகளோடு ஒத்துப் போகக் கூடிய, உடன்பாடு காணக்கூடிய, முகம் தெரியாத வாசகர்கள்,முகம் தெரிந்த நண்பர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் என்னைப் பாராட்டியபோதிலும் - நமது சமூகத்தின் பொது நிலையைப் பிரதிபலிக்கும் இதற்கு மாறான கருத்துகளையும் கடிதங்களையும் முதன்மைப் படுத்தி கவலையோடும் பொறுப்போடும் சிந்திப்பது எனது கடமை என்று நான் நினைக்கிறேன்."


==================================================
 
2)
                                                          

"இலக்கியம் என்பது சமூகத்தின் கண்ணாடி. அவ்வளவுதான் மாற்றி அமைக்க அது பயன்படாது.சமூகம் இலக்கியத்திவிட மிக மிகச் சிக்கல் வாய்ந்தது. மக்களுடைய பிரச்னைகள் பற்றி இலக்கியம் பேசலாம். ஒரு பிரஞ்சுப் புரட்சிக்கு இலக்கியம் தூண்டுகோலாக இருந்தது மாதிரியான நிலைமை எல்லாம் இப்ப இல்லை. இலக்கியத்துனால ஒரு மெலிதான விழிப்புணர்வைக் கொண்டு வரலாம் இலக்கியத்துனால சமூகத்தை மாற்ற முடியும் என்பது உண்மையாயிருந்தா தமிழ்நாட்டைப் போல மாறி இருக்கக் கூடிய சமூகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

                                                        
 
இலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் அடையாளக்குறி. கேரளம், மகாராஷ்டிரம், வங்காளம் இங்கேயிருந்து வர்ற இலக்கியங்களைப் பாருங்க. அந்தப் பிரதேசங்களுடைய வாழ்க்கை முறை தெரியுது.

                                                    

நம்ம சமூகத்தில் உள்ள அடக்குமுறை மாதிரி உண்டா? ஏன் அந்த மாதிரி இலக்கியங்கள் வரலே? நமக்கு ஒரு தட்டுல இலக்கியம் இருக்குது. அதுக்கு மேல் அடுக்குல அரசியல் இருக்கு. அதுக்கு மேல சினிமா இருக்குது. எல்லாத்தையும் போட்டு இங்க குழப்பிட்டாங்க.

                                               
 
சிவராம காரந்த் போன்றவர்கள் 400 பக்கம் நாவல் எழுதினா உட்கார்ந்து படிக்கிறாங்க சார்.. நம்ப ஊர்ல எங்க படிக்கிறான்?

இலக்கியத்தைப் பற்றி சரியான உணர்வு தமிழில் ஏற்படாததற்கு நம்பகிட்ட உள்ள அரசியலும் வெகுஜனப் பத்திரிகைகளும்தான் காரணம்"

திங்கள், 25 மார்ச், 2013

என்ன அது?

                  
அடுத்த திங்கட்கிழமை, எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வரப் போகின்றது. ஒருவேளை அதற்கு முன்பே கூட அந்த அறிவிப்பு வரலாம். 
                  
ஒவ்வொரு நாளும் எங்கள் ப்ளாக் படிப்பவர்கள் எதற்கும் தயாராக இருங்க. 
                     
க்ளூ: 5 - 1 = 4. / or 1 + 5 = 6. or simply 1 & 6.
                  
ஒரு வாரத்திற்கு ஒருமுறைதான் படிப்பவர் என்றால், அநேகமாக அந்த அறிவிப்பை தாமதமாகத்தான் பார்ப்பீர்கள். அதற்குமேல் நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. 
                 
நாங்கள் முன்பே எச்சரிக்கை செய்யவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். 
                  
இதுதான் முன் அறிவிப்பு. 
    
கருத்துரையில் யாராவது சரியாக யூகிக்கிறார்களா என்று பார்ப்போம். 
              

சனி, 23 மார்ச், 2013

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 17, 2013 முதல் மார்ச் 23, 2013 வரை.



எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 


===============================================================  
1) "சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல; உறுதியான மனம் இருந்தால் போதும்' என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார், பார்வை குன்றிய, கால்கள் செயலிழந்த இளைஞர் ஒருவர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நடத்திய பி.ஏ., தேர்வில் முதல் ரேங்க் பெற்று, தங்கப்பதக்கம் வென்றுள்ளார், இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

 
                                          
பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி - மல்லிகா தம்பதியர். இவர்களின் ஒரே மகன் சங்கர் சுப்ரமணியம், 26. பிறவியிலேயே 90 சதவீத பார்வை குறைபாடு உடையவர்; இரண்டு கால்களுக்கும் வளர்ச்சியில்லாமல், நடக்க முடியாது. 

பெற்றோர் உதவியின்றி நடமாட முடியாது. பார்வை குறைபாடு காரணமாக, உருவங்கள் நிழல்களாக தான் தெரியும்; வண்ண வேறுபாடுகளை முழுமையாக அறிய முடியாது. கண்ணொளி இல்லாவிட்டாலும், காதொலியை ஆழமாக மனதில் பதிய வைக்கும் அபார திறன் ஒன்று மட்டுமே, தெய்வம் தந்த வரம்; எந்த விஷயத்தையும் எளிதில் மறந்துவிடாத, நுட்பமான ஞாபக சக்தி உண்டு. அதைவிட மேலாக, சாதிக்க வேண்டும் என்ற திடமான உறுதி மனதில் உண்டு. இதுவே, சங்கர் சுப்ரமணியத்தை சாதனையாளராக மாற்றி வருகிறது. 

முழுமையாக பார்வை குறைபாடு இருப்போர், "பிரெய்லி' முறையில் படிக்க முடியும்; ஆனால், சங்கர் சுப்ரமணியத்துக்கு 10 சதவீத பார்வை இருக்கிறது; எனினும், பாட புத்தகங்களை படிக்க முடியாது; பிறரை வாசிக்கச் சொல்லி தான், இவரால் படிக்க முடியும். பாடங்களை மனம் பாடம் செய்து, "ஸ்கிரைப்' ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதி வருகிறார்.கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து, 10ம் வகுப்பு தேர்வில் 62 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். பாட புத்தகத்தை புரட்டாமல், பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித் தந்த பாடங்களை மனதில் பதிய வைத்தே, இவர் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார். 

தற்போது, சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில், முதல் ரேங்க் வாங்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்கலையில் நடந்த விழாவில், கவர்னர் ரோசைய்யா தங்கப்பதக்கம் வழங்கி, சாதனை மாணவர் சங்கர் சுப்ரமணியத்தை கவுரவித்துள்ளார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் அருகேயுள்ள காற்றாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். தாய், தந்தையின் தளராத ஊக்கமும், அரவணைப்பும், சிறப்பாசிரியர்களின் பயிற்சியும் சங்கர்சுப்ரமணியத்தை, படிப்பின் சாதனை படிகளில் ஏற வைத்துள்ளது.

"பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெறுவதே, எனது அடுத்த லட்சியம்,'' என்கிறார், சங்கர் சுப்ரமணியம்.அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மல்லிகா கூறியதாவது: பிறவியிலேயே கால்கள் ஊனம், கண் பார்வை குறைவுடன் பிறந்ததால், குழந்தையை வளர்ப்பதும், படிக்க வைப்பதும் சிரமம் என கருதினோம். எனினும், அர்ப்பணிப்புடன் வளர்த்து வந்தோம். இன்று, அந்த குழந்தை சாதனை இளைஞனாக மாறி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளான். முதலில், பள்ளியில் சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம்; பல பள்ளிகளிலும் அட்மிஷன் கிடைக்கவில்லை. கணுவாய் ஹோலிகிராஸ் பள்ளியில், சேர்த்துக் கொண்டனர். அங்குள்ள ஆசிரியர்களின் ஊக்குவிப்பு, சிறப்பு ஆசிரியர்கள் ரகுபதி ஐயர், பத்மநாபன் ஆகியோரின் பயிற்சி ஆகியவை, எங்கள் மகனின் திறமையை வெளியே கொண்டு வர மிகவும் உதவியது.
 

சங்கர் சுப்ரமணியத்துக்கு இசையிலும் ஆர்வம் உண்டு. கோவை அரசு இசைக்கல்லூரியில் குரலிசை பிரிவில் படிக்க "அட்மிஷன்' கிடைத்தது. பார்வை குறைபாடு மற்றும் கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, வாரம் இரு முறை மட்டும் வகுப்புக்கு வர தனிப்பட்ட சலுகை அளிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்பேட்டையில் இருந்து கோவைக்கு காரில் வர வேண்டும் என்றால், தினமும் 1,000 ரூபாய் செலவாகும் என்பதால், பயிற்சியில் பங்கேற்க முடியவில்லை. எங்கள் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு வேலை அளித்து உதவ வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.



2) தனது கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த திரு பி. டேவிட் ராஜா பியூலா. இவர் நெல்லை மாவட்டம் கடையத்தில் தோட்டக்கலை உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். 

                                                     .
நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம்தான். அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பகுதியான கடையம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மல்லிகை, கத்தரிக்காய் போன்ற பயிர்களை பயிரிடுவது வழக்கம்..

ஆனால் அவர்களின் பிரச்சினை பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்..குறிப்பாக மல்லிகையை பாதிக்கும் வெள்ளை ஈக்கள் மற்றும் கத்தரியைத் தாக்கும் கத்தரி தாய் அந்து பூச்சி.. இந்த இரண்டையும் ஒழிக்கும் கருவி உண்மையில் அப்பகுதி விவசாயிகளுக்கு ஒரு வரம்தான். இதைத்தாண்டி இந்தக் கருவி ஒளி தரும் விளக்காகவும் பயன்படுகிறது. 

மேலும், கொசுக்களையும் ஒழிக்கிறது. இந்தப் புதிய கருவியினால் கடையம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் பூச்சிக்கொல்லிக்காக பயன்படுத்திய செலவும் கணிசமாக குறைந்துள்ளதோடு பணி நேரமும் மிச்சமாகியுள்ளது. பொதுவாக இந்தப் பகுதி விவசாயிகள் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அந்தச் சமயத்தில் தான் டேவிட் தனது கண்டு பிடிப்பான ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். 

முதலில் 1 ஏக்கர் நிலத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 விவசாயிகளுக்கு இந்தக் கருவி கொடுக்கப்பட்டது. இந்தக் கருவி தொடக்கத்தில் 3 தாய் அந்துப் பூச்சிகளை பிடித்த நிலையில் படிப்படியாக 500 அந்துப் பூச்சிகளைப் பிடிக்கத் தொடங்கியது. இதனால் 7 நாட்களுக்கு ஒரு முறை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த விவசாயிகள் அதை 15 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றினர். 

இதனால் விவசாயிகளின் செலவும் பாதியாகக் குறைந்தது. ஒரு ஏக்கர் மல்லிகை தோட்டத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்து செலவு ரூபாய் 24,000 த்தில் இருந்து ரூ. 12,000 ஆகவும், ஒரு ஏக்கர் கத்தரித் தோட்டத்திற்கான செலவு ரூபாய் 10,000 ல் இருந்து ரூபாய் 5000 ம் ஆகவும் குறைந்துள்ளது. இந்த கருவியின் விலை ரூபாய் 8000 மட்டுமே. இரண்டு ‘டேவிட்டின் சூரிய ஒளி விளக்குப் பொறி’யை வாங்கும் கத்தரி விவசாயிகளுக்கு 3 மாதத்தில் ரூபாய் 5000 மிச்சமாகும். 

இதே போல் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 12,000 மிச்சமாகும். பொருளாதார லாபங்கள் மட்டுமின்றி இந்த கருவியைப் பயன்படுத்துவதால் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்த முடியும். இது நமது சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். 

இதைத்தாண்டி இந்த கருவியை நாம் வீடுகளிலும் பயன்படுத்த முடியும் என்பது மற்றொமொரு சிறப்பு. வீடுகளில் இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை நாம் கட்டுப்படுத்த முடியும். 

இதனால் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்பதும் கூடுதல் மகிழ்ச்சிதான். இப்படி பல்வேறு வகைகளிலும் பயனளிக்கக் கூடிய இந்த கருவியை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

திரு பி டேவிட் ராஜா பியூலா உதவி இயக்குனர், தோட்டக்கலைத் துறை,
கடையம்,
திருநெல்வேலி மாவட்டம்,,
தமிழ்நாடு.
மின்னஞ்சல் microeconomicsdavid@yahoo.co.in
அலைபேசி - 9486285704


3) கர்ப்பப்பை புற்றுநோய் தீர்க்கும் ஆன்டிவைரஸ் சித்தா மருந்து


                           
பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ்’ மருந்து கண்டறிந்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மைய அனுமதி பெற்றுள்ளார் சூரியா பாரத் மருத்துவமனையின் சித்த, அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன். இதுபற்றி அவர் மேலும் கூறுவதாவது:
நாட்டில் நடக்கும் பல குற்றங்களுக்கு காரணம் மது. போதை வெறியில் இருப்பவர்களால்தான் பல கொடூர செயல்கள் நடக்கின்றன. கஞ்சா, அபின், பிரவுன்சுகர், புகையிலை பழக்கங்களும் இதுபோன்றதே. இவை சமூகத்தை மட்டுமின்றி உடல்நலத்தையும் பாதிக்கின்றன. பான்பராக், புகையிலை பழக்கத்தால் வாய் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் பற்றாக்குறை, மயக்கம், ஆக்சிஜனை சுவாசிக்க முடியாமல் போவது போன்ற பல பாதிப்புகளும் அடுத்தடுத்து ஏற்படக்கூடும்.

மதுவில் இருக்கும் எத்தனால் என்ற வேதிப்பொருள்தான் இத்தனை பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. மதுபோதையில் இருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே இத்தகைய பாதிப்புகளை போக்க முடியும்.

போதை பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து மீட்பதற்காக, நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து ஆரோக்கியம் தரும் புகையிலையை உருவாக்கியுள்ளேன். இதில் நிக்கோடின் இருக்காது. இந்த புகையிலை ஆரோக்கியம் தரக்கூடியது.

இதுபோல, பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ் மருந்து’ கண்டுபிடித்து அதற்கு தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மையத்தின் அனுமதி பெற்றுள்ளேன். ரத்த கட்டிகள், டெர்மாய்டு சிஸ்ட், பெல்விக் இன்பிளமேஷன் நோய்கள் ஆகியவற்றை ஆபரேஷன் இல்லாமலே இந்த மருந்து மூலம் குணமாக்கலாம்.
 
4) ஏதோ ஒரு விஷயம் அவரவர் உள்ளத்தினுள் ஒடிக்கொண்டே இருக்கும், அந்த விஷயத்தை யாராவது தூண்டிவிட்டால் போதும், பிறகு அவர் சுடர்விட்டு பிரகாசிப்பார்.

அப்படி பிரகாசித்துக்கொண்டு இருப்பவர்தான் ரேகா விஜயசங்கர்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்திரா கலைக்கூடத்தின் நூலராகவும், உதவியாளராகவும் உள்ளே சென்ற ரேகாவிற்கு புகைப்படக்கலையின் மீது ஒரு கண்.
இதைப்புரிந்து கொண்ட கலைக்கூட நிர்வாகத்தினர் கொடுத்த ஒத்துழைப்பு, செய்திட்ட உதவிகள் காரணமாக மள,மளவென வளர்ந்த ரேகா இப்போது கலைக்கூடத்தின் ஆஸ்தான புகைப்படக்கலைஞராவார்.

கலைக்கூடத்தின் சார்பில் வெளிவரும் அனைத்து புத்தகங்கள்,மற்றும் வழிகாட்டிகளில் இவரது புகைப்படங்களே அலங்கரிக்கின்றன.


இது போக மழை, அய்யனார், ஆடிப்பெருக்கு, கூடை, முகங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் இவரது தனி நபர் புகைப்படக் கண்காட்சிகள் நடந்துள்ளது.


மேலும் சென்னையில் "ஆர்ட் சென்னை' நிறுவனம் நடத்திய புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு ஆயிரம் பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இவரது பரிசு பெற்ற அந்த புகைப்படம் இப்போதும் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தின் முகப்பில் பிரம்மாண்டமாய் அலங்கரித்துக் கொண்டு இருப்பதை அந்த பக்கம் போனால் பார்க்கலாம்.


இதோ இப்போது "வேஷம்' என்ற தலைப்பில் தட்சிணசித்ராவில் புகைப்பட கண்காட்சியினை நடத்தி வருகிறார், கடந்த வாரம் துவங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தட்சிணசித்ராவில் நடன நிகழ்ச்சி நடத்த வந்த கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில கலைஞர்கள் தங்களது நடனத்தின் பொருட்டு முகத்தில் போட்டுக்கொண்ட வேஷங்களை மட்டும் தொகுத்து புகைப்படக் கண்காட்சியாக வைத்துள்ளார்.


இந்த கண்காட்சியினை நாட்டின் தொன்மை மற்றும் சரித்திரம் தொடர்பான விஷயங்களை அழகாக ஆங்கிலத்தில் புத்தகமாக்கி வரும் எழுத்தாளர் சித்ராமாதவன் துவக்கிவைத்தார், ஓ
வியர் கீதா ஒருங்கிணைத்துள்ளார்.

அரங்கத்தில் ஐந்து பேர் இருந்தாலும் சரி, ஐயாயிரம் பேர் இருந்தாலும் சரி, சமரசமே செய்துகொள்ளாமல் ஆடும் கலைஞர்களின் அர்ப்பணிப்பை அருகே இருந்து பார்த்து வியந்திருக்கிறேன். அவர்கள் முகங்களில் மட்டும்தான் வேஷம் அகங்களில் கொஞ்சமும் கிடையாது, மிகவும் வெள்ளந்தியான மனிதர்கள், மக்களை மகிழ்விக்கும் கலைக்காக தங்களை அவர்கள் அதிகப்படியாக வருத்திக் கொள்கிறார்கள், அதனை என் பார்வையில் வெளிப்படுத்தும் சின்ன முயற்சியே இந்த புகைப்படக் கண்காட்சி என்று கூறி முடித்தார் ரேகா விஜயசசங்கர்.
(இந்தச் செய்தி படிக்கும்போது யார் நினைவுக்கு வருகிறார்கள்?) 

வெள்ளி, 22 மார்ச், 2013

இப்படி எல்லாம் நடக்குமா? ஏகாம்பரம் ஜாக்கிரதை!

             
              
அமவுண்ட் என்ன? எங்கே, யார் கொண்டுபோய் கொடுக்கணும்? போலீசுக்குப் போகலாமா? எலெக்டிரானிக் சாமியாரிடம் சொல்லலாமா? என்று மனம் அவசரம் அவசரமாக, சாய்ஸ் இல்லாத வினாத்தாள் தயாரிக்கத் தொடங்கியது.  பரீட்சை எழுத வேண்டிய ஆளும் நாந்தான். 
             


கூகிள் ஏகாம்பரம் என்னிடம் ஸ்ரீராமின் நம்பர் கேட்டபொழுது நான் கொடுத்திருக்கக் கூடாது. லேட் திங்கிங். இப்போ என்ன செய்யலாம்? அப்படியே விட்டுவிடலாமா? (பல்லாவரம் பாழடைந்த பங்களா, இப்போ ஸ்ரீராம் இருக்கின்ற வீட்டைவிட நன்றாகத்தானே இருக்கிறது?) 
                 
இரு இரு - இப்போ தேவை கிளியர் திங்கிங். தியானம் பண்ணலாமா? ஐயோ ஏதோ தீப்பற்றி எரிந்தபோது யாரோ ஒருவன் வீணை வாசித்தானாமே? சீச்சீ அது வீணை இல்லேடா. ஆமாம் ரொம்ப முக்கியம். அவன் வீணை வாசிக்கட்டும் அல்லது முகர்சிங் வாசிக்கட்டும். இப்போ நீ என்ன செய்யப் போறே?  
               

அந்த சமயத்தில் அலைபேசியில், அறிமுகமில்லாத ஒரு எண்ணிலிருந்து  அழைப்பு. 
                  
"ஹலோ, குப்புசாமி ஹியர். "
               
"மாமா நான் ஸ்ரீராம் பேசறேன். "
                   
"ஹலோ ஸ்ரீராம்! எங்கே இருக்கே? எப்பிடி இருக்கே? உன்னுடைய மொபைல் எங்கே? பல்லாவரம் பங்களா சௌகரியமா இருக்கா? ஏதேனும் சாப்பிட்டியா?"  
               
"மாமா! என்ன ஆச்சு உங்களுக்கு?"  
                   
"எனக்கு ஒன்றும் ஆகலை! உன்னைக் கடத்திய ஏகாம்பரம் எவ்வளவு பணம் கேட்கிறார்? எங்கே கொண்டு வந்து கொடுக்கணுமாம்? பழைய நோட்டா, அல்லது புது நோட்டா? "
                    
"மாமா - ஒரேடியா குழம்பிப் போயிருக்கீங்க / குழப்புறீங்க ! என்னை யாரும் கடத்தவில்லை. "
                
"அப்போ பணம் வேண்டாமா?" 
               
"பணம் நீங்க கொடுத்தா வாங்கிக்கறேன். உங்களைப் போன்ற (கஞ்சக் கருமி?) ஆட்களிடம் பணம் வாங்கினால், நிறைய பெருகும் என்று சொல்வார்கள்! "
                 
"ஸ்ரீராம் மேலும் குழப்பாம, இன்று காலையிலிருந்து நடந்தவைகளைக் கூறு. "   
*********   ************** 
               
இன்று ஆடிட் என்பதால், வீட்டை விட்டு, சீக்கிரமாகவே கிளம்பி அலுவலகம் சென்றேன். இன்றைய ஆடிட்டுக்காக நேற்று வரை தினமும் அலுவலகத்தில் நானும், எனது நண்பன் ஸ்ரீகாந்தும் இரவு பகல் பாராமல் எல்லா கோப்புகளையும் தயார் செய்தோம்.அப்பொழுதெல்லாம் மானேஜரும் எங்க கூடவே இருந்தார்.  இன்று அலுவலகம் வந்ததும், தலைமை அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. ஆடிட்  அடுத்த வாரத்திற்கு ஒத்திப் போடப்பட்டது. இதைக் கேள்விப்பட்டவுடன், எங்கள் மூவருக்கும் ஒரே சந்தோஷம். மானேஜரிடம், நானும் ஸ்ரீகாந்தும் இன்று ஒருநாள் லீவு கேட்டோம். அலுவலகத்திற்காக ஆடிட்டிற்காக நாங்கள் நிறைய நேரம் ஏற்கெனவே செலவழித்திருந்ததால் அவர், 'ஒ கே என்ஜாய்' என்று சொல்லி அனுப்பிவிட்டார். 
          
அப்போதான் ஏர்பெல் ஏகாம்பரம் என்று ஒருவர் அலைபேசியில் அழைத்தார். அவர், உங்களிடம் ஏற்கெனவே பேசி, உங்களுடைய அலைபேசியை டூ ஜி யிலிருந்து த்ரீ ஜி யாக மாற்றிவிட்டதாகவும், இப்போ உங்க அலைபேசியில் எல்லாம் மும்மடங்கு வேகமாகவும், கிளியராகவும் வருவதாக நீங்க மகிழ்ச்சியாகத் தெரிவித்ததாகவும் கூறினார். நீங்கதான், அவருக்கு என்னுடைய அலைபேசி என்னைக் கொடுத்ததாகவும் கூறினார். 'அதே போல என்னுடைய அலைபேசியையும் டூ ஜி யிலிருந்து த்ரீ ஜியாக மாற்றலாமா?' என்று கேட்டார். 
             

நான் சந்தோஷ மூடில் இருந்ததாலும், நீங்க ரெகமண்ட் பண்ணின ஆள் என்பதாலும், சரி என்று ஒப்புக் கொண்டேன். அவர் உடனே, உங்க செல் ஃபோனை குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிடுங்கள். செல்ஃபோனுக்கு / செல்ஃ போனிலிருந்து அழைப்பு எதுவும் இரண்டு மணி நேரங்களுக்கு இல்லாமல் இருப்பது நல்லது என்றார். 

செல் ஃபோனை சுவிட்ச் ஆப் செய்ய விரல் வைத்த போது உங்களிடமிருந்து கால் வந்தது. நீங்க 'ஏகாம்பரம் போன் செய்தாரா, என்ன செய்யலாம்'என்று கேட்டவுடனேயே 'அவர் சொல்வதுபோலவே செய்துவிடப் போகின்றேன்' என்று சொல்லி, செல்ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். அதுமட்டும் இல்லை. சுவிட்ச் ஆப் செய்த செல்ஃபோனை அலுவலக மேஜை டிராயரிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். 
               

நானும் ஸ்ரீகாந்தும் சினிமா பார்க்க வந்தோம். இப்போ இண்டர்வல். வெளியே வந்ததும், இங்கே உள்ள கடையிலிருந்து, வீட்டுக்கு ஃபோன் செய்து, ஆடிட் ஒத்திப் போடப்பட்டது முதல், சினிமா பார்க்க வந்த விவரங்கள் வரையிலும் சொன்னேன். 
                

அப்போதான், கூகிள் ஏகாம்பரம் பற்றி உங்களிடம் பேசவேண்டும் என்று நீங்கள் கேட்டுக் கொண்டது தெரிந்தது. யாரு கூகிள் ஏகாம்பரம்? 
               
"அடக் கடவுளே! நடந்து கொண்டிருக்கும் அமளி துமளி எதுவுமே உனக்குத் தெரியாதா! சரி, எல்லா விவரமும் திருக்கடையூர் வரும்பொழுது சொல்கின்றேன். இப்போ நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உடனே மதுரைக்கு போன் செய்து, "ஏற்காடு ஏகாம்பரம் கேட்கின்ற பணம் எதுவும் கொடுக்காதீர்கள்; நான் பத்திரமாக இருக்கின்றேன்.' என்று சொல்லிவிடு"
          
(இனிமேல் இதில் தொடர ஏதாவது இருக்கின்றதா? ஏகாம்பரம் பற்றி துப்பறிய எ சா & கா சோ துப்பறியும் நிறுவனத்திடம் சொல்வோமா,  வேண்டாமா?) 
                          

புதன், 20 மார்ச், 2013

அலேக் அனுபவங்கள் 18:: பேருந்து நாட்கள்.

              
அசோக் லேலண்டில் பயிற்சி பெற்ற ஆரம்ப நாட்களில், நான் ஒரு பேருந்துப் பயணியாகத்தான் இருந்தேன். 
                
பாக்டரி வேலை நேரம், காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரையில். 
                 
காலையில் நாலே முக்கால் மணிக்கு எழுந்து, ஐந்தரை மணிக்குள் வீட்டை விட்டுக் கிளம்பி, ஐந்து நாற்பதுக்கு புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் டாங்க் பேருந்து நிறுத்தத்தில், மதார் ஷா கடை வாயிலில், வந்து நின்று கொள்வேன். 
                 
தங்கசாலை செல்லுகின்ற பேருந்துக்காக காத்திருப்பேன். தடம் எண் பதினான்கு, முப்பத்தேழு ஆகியவை தங்கசாலை செல்லுகின்ற வண்டிகள் என்று ஞாபகம். அந்தக் காலத்தில், புரசைவாக்கத்திலிருந்து, தங்கசாலை வரையிலும் பதினைந்து பைசா டிக்கெட் கட்டணம்.. காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருக்காது. நிச்சயம் உட்கார இடம் இருக்கும். 
                 
ஆறு மணிக்குள், தங்கசாலை பேருந்து நிலையம். அங்கேயிருந்து 56A பேருந்தைப் பிடித்து, ஆறு நாற்பது சுமாருக்கு எண்ணூர் அசோக் லேலண்டு வாசலில் இறங்கிவிடுவேன். தங்கசாலையிலிருந்து, அசோக் லேலண்டு வாசல் வரை அம்பத்தஞ்சு பைசா டிக்கெட். இந்த வழித் தடத்தில், சில மாதங்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் கூட எடுத்து, பயணம் செய்தேன். பேருந்து எதிலும் காலை நேரத்தில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்வேன்.ஏன் பேருந்துகளில் உட்காருவதைப் பற்றி பிரஸ்தாபித்து எழுதுகிறேன் என்பதைக் கூறுகின்றேன். 
             
பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகின்ற பையன், 'ஐ ஃபர்ஸ்ட்' என்று எல்லோரிடமும் பீற்றிக் கொள்வது போல, பல நாட்கள், பாக்டரி கான்டீனுக்குள், முதல் ஆளாக நுழைந்த பெருமை என்னையே  சேரும்.   
               
காண்டீனுக்கு, கவுண்ட்டர்களுக்கு சுடச் சுட வருகின்ற அன்றைய தின சிற்றுண்டியை, கூப்பன் கொடுத்து வாங்கி, தட்டில் ஏந்தி, காண்டீன் பெஞ்சுல அமர்ந்து, மேஜை மீது வைத்து, மின் விசிறிக்குக் கீழே அமர்ந்திருந்தாலும், 'உப் ... உப்ப்ப் ' என்று வாயால் ஊதி, சூடாற்றி, சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. 
               
சிற்றுண்டி மணமும், தேநீர் மணமும் கலந்து, காண்டீன் மணம் அலாதியாக இருக்கும். காலை சிற்றுண்டி நேரம், மதிய நேரத்தில், உணவு உண்ணும் பொழுதும் மட்டும்தான் எங்களுக்கு உட்கார இடம் கிடைக்கும். அப்ரெண்டிஸ் நாட்களில், பாக்டரி உள்ளே, எங்களுக்கு உட்கார இடம் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் பயிற்சி. எல்லா இடத்திலும் நிற்க மட்டும்தான் அனுமதி. உட்காருவதற்கு இடம் கிடையாது என்பதும் உண்மை. நேரடி உற்பத்தி இல்லாத பகுதிகளுக்கு பயிற்சிக்கு சென்றால், உட்காருவதற்கு ஒரு ஸ்டூல் கிடைக்கும். (அதற்கு அந்தப் பகுதி நண்பர் யாரும் உரிமை கோராத வரை!)  
                
பயிற்சி பெறுகின்ற கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் அவர்களுக்கு ஒரு ரகசிய இடம் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். மதிய நேர உணவுக்குப் பின் யார் கண்ணிலும் படாமல் அரட்டை அடிக்க! மேலும் கிராஜுவேட் அப்ரெண்டிஸ்களை யாரும் அதிகமாக நெருங்கமாட்டார்கள். நாளைக்கு அதிலிருந்து ஒருவர் தமக்கு பாஸ் ஆக வருவதற்கு, சாத்தியக் கூறுகள் அதிகம் என்பதால். அதுமட்டும் அல்ல, கிராஜுவேட் அப்ரெண்டிஸ்கள் பயிற்சி முடிந்ததுமே எக்சிகியூடிவ் ஆகிவிடுவார்கள். நாங்கள் கன்ஃபர்ம் ஆகும் பொழுது, யூனியன் கேடர் ஆட்களாக ஆவோம். பாதிக்கப்பட்ட இனமாக இருந்தவர்கள், எங்களைப் போன்ற எஞ்சினீரிங் அப்ரெண்டிஸ்கள்தான்!  
           
 நாங்களும் எங்களுக்கு உட்கார்ந்து ஓய்வு எடுக்க, ஒரு ரகசிய அரட்டை மூலை ஏற்பாடு செய்துகொண்டோம். ஆனால், ஒருநாள் மாட்டிக் கொண்டோம். எப்படி? பிறகு பார்ப்போம். 
                  

திங்கள், 18 மார்ச், 2013

இப்படி எல்லாம் நடக்குமா - இரண்டாம் பகுதி.


                            
               
தொலைபேசியை எடுத்து, "ஹலோ" என்றேன். 
மறுமுனையில் பேசிய குரல், தொலைபேசி யார் பெயரில் பதிவாகி இருக்கிறதோ, அவர் பெயரைச் சொல்லி, 'அவர் இருக்கிறாரா' என்று கேட்டது. 
'இல்லை.'
'அவருடைய அலைபேசி எண் கொடுப்பீர்களா?'
'மாட்டேன்.'
'ஏன்?' 
'தெரியாது.'  
'எப்போ வருவார்?'
'தெரியாது.'
'நீங்க யாரு?'
'தெரியா ...... இல்லை நான் அவருக்கு தூரத்து உறவு.' 
'எவ்வளவு தூரம்?'
'முன்னூற்று நாற்பத்து ஒன்று கிலோ மீட்டர்!'
'உங்கள் பெயர் என்ன?'
'குப்புசாமி.' 
'சரி, மிஸ்டர் குப்புசாமி, உங்களுக்கு எங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட் பிளான் பற்றி சொல்லட்டுமா?'
'வேண்டாம்.'
'ஏன்?'
'எனக்கு வருமானமே கிடையாது.'
'அப்போ எப்பிடி சாப்பிடுகிறீர்கள்?' 
'கையாலதான்!'
மறு முனையில் பேசிக் கொண்டிருந்த குரல், மேலும் சம்பாஷணையை எப்படித் தொடர்வது என்று தெரியாமல், திகைத்து, இணைப்பை துண்டித்தார்கள்.
*********    *********** 
                   
ஸ்ரீராமை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். 
'ஹலோ? ஸ்ரீராம் எங்கே?'
'ஹலோ! குப்புசாமி மாமாவா?' 
'ஆமாம். '
'அவர் ஆபீசில் ஆடிட் என்று சொல்லி காலையில் சீக்கிரமே கிளம்பிப் போயிருக்கிறார். '
'அலைபேசி கொண்டு செல்லவில்லையா?'
'எடுத்துக்கிட்டுப் போயிருக்கார்.' 
'ஆனால் நான் கால் பண்ணினால், அலைபேசி சுவிட்ச் ஆஃப செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வருகின்றது?' 
'ஆமாம். ஆடிட் நேரத்தில் அலைபேசியை ஆஃப் செய்து வைத்துவிடுவார். '
'ஓ? அப்போ சரி. எப்பவாவது அவர் வீட்டுக்கு கால் செய்தால், ஏகாம்பரம் பற்றி என்னிடம் பேச வேண்டும் என்று சொல்லிவிடு.'
'யாரு மாமா ஏகாம்பரம்?' 
'கூகிள் ஏகாம்பரம் என்று சொன்னால், அவருக்குத் தெரியும்.' 
'சரி.' 

*****************     *******************   *************** 
மீண்டும் தொலைபேசி ர்ர்ர் ரிங் ரர்ர்ர்ர் ரிங்.
எடுத்தேன். 
'ஹலோ?'
'ஹலோ!'
மறுமுனையில் ஹலோ சொன்ன குரல், இதற்கு முன்பு பேசிய உபத்திரவ அழைப்பில் பேசிய குரல் போலவே இருந்தது. 
         
'ஹலோ, நான் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், எனக்கு வருமானமே கிடையாது; என்னால் எங்கும் ஒரு பைசா கூட போடமுடியாது. இருந்தாலும் என்னால் சாப்பிட முடியும். கைகளாலும் சாப்பிடுவேன், ஸ்பூனாலும் சாப்பிடுவேன். போதுமா?'
'மாமா என்ன ஆச்சு உங்களுக்கு? இதை எல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?'
பேசியவர், ஸ்ரீராமின் தூரத்து சொந்தம். (ஹி ஹி - ஆமாம் தூரத்தில் வசிக்கின்ற சகோதரர்!) 
'ஓ! நீங்களா!' 
'ஆமாம்.'
'என்ன விஷயம்?'
'மாமா - உங்களுக்கு ஏற்காடு ஏகாம்பரம் என்று யாரையாவது தெரியுமா?' 
'எனக்குத் தெரிந்தது எல்லாம் கூகிள் ஏகாம்பரம்தான். அதுவும் இன்று காலையில்தான்.அது போகட்டும், ஏற்காடு ஏகாம்பரம் யாரு?'
'அப்படி ஒருவர் சற்று நேரம் முன்பு எனக்கு போன் செய்தார்.' 
'என்ன சொன்னார்?'
"இன்னும் ஒரு மணி நேரத்திற்குள், அவர் சொல்கிற இடத்திற்கு சொல்கிற அமவுண்ட் கொண்டு வந்து கொடுத்தால், ஸ்ரீராமை வீட்டுக்கு அனுப்புவோம். இல்லையேல் அவரை பல்லாவரம் பக்கத்தில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் சிறை வைத்துவிடுவோம்" என்றார். 
                  
(முக்கியக் குறிப்பு: இந்தக் கதையில் காணப்படும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் -------------)
             

சனி, 16 மார்ச், 2013

பாசிட்டிவ் செய்திகள் கடந்த வாரம் - மார்ச் 9, 2013 முதல் மார்ச் 16, 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  

=========================================================


முக்கியச் செய்திகள் என்ற தளத்திலிருந்து இந்தப் பகிர்வு : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்று மனுநீதி நாள். பொதுமக்களின் வரிசையில் நின்ற அந்த முதியவர், கலெக்டர் ராஜேந்திரனிடம் கத்தை கத்தையாய் மனுக்களை கொடுக்க, அதை கலெக்டர் கவனமாக வாங்கி உடனடியாக பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளோ அந்த முதியவரை பயப் பார்வை பார்த்தபடி இருந்தனர்.

யார் இவர்?

""அவர் பேரு சின்னையன். சட்டத்துக்கு புறம்பா செயல் படறவங்களை குறிவச்சி பெட்டிஷன் போட்டு குடைச்சல் தருவாரு. அதனால்தான் இவரை கண்டா எல்லாருக்குமே பயம். குறிப்பா திருவண்ணாமலை மாவட்டத்துல 301 இடத்துல டாஸ்மாக் பார்கள் நடத்த முடிவுபண்ணி அரசாங் கம் ஏலம் விட்டப்ப... 46 பார்கள்தான் ஏலம் போச்சி. ஆனா மாவட்டத்துல அரசு கணக்கைவிட அதிகமா 350 இடங்கள்ல பார்கள் கள்ளத்தனமா நடக்குது. இந்த பார்களை உடனே மூடணும்னு சி.எம்.வரை புகார் மேல புகார் அனுப்புனாரு. விசாரணையில் அவரது புகார்கள் உண்மைன்னு தெரிஞ்சி ஏலத்தில் விடப்பட்ட பார்களைத் தவிர மற்றதை மூட உத்தர விட்டாங்க. இதனால் சின்னையனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸை வச்சி அவரை கைது செய்து உள்ளே தள்ளினாங்க. அதுக்கப்புறம் நடந்ததை அவர்கிட்டயே கேளுங்க'' என சின்னையனின் முகவரியைத் தந்தார் அங்கிருந்த ஊழியர்.
                                                 

இராமலிங்கனார் தெருவில் தனது டீக்கடையில் இருந்த சின்னையனிடம் பேசியபோது... ""பார்களை நடத்தின தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு புள்ளி என்னைத் தூக்கி ஜெயில்ல போடச்சொல்லி டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு பணம் தந்தாரு. அவரும் பணத்துக்கு விசுவாசமா 23.10.2009-ந் தேதி காலை என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சி வரச்சொல்லி பொதுவா பேசுனவரு... "சின்னையா நீ கவிதை எழுதுவியாமே? ஒரு கவிதை எழுது, இதோ வந்துடறேன்'னு வெளியில போனாரு. நானும் எழுத ஆரம்பிச்சேன்.

மதியம் 1.30மணி இன்ஸ்பெக்டர் ரூமைவிட்டு வெளியில வந்தேன். "உங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கு. நீங்க வெளியில போகக் கூடாது'னு போலீஸ்காரர் ஒருத்தர் தடுத்தாரு. ஜட்ஜ் வீட்டுக்கு கொண்டு போனாங்க. அவங்க நீங்க பஜார்ல கத்திய காட்டி வியாபாரி ஒருத்தர மிரட் டியதா வழக்குன்னாங்க. என் வயசுக்கு நான் மிரட்டினா பயப்படுவாங்களா? இது பொய் வழக்குன்னேன். அவங்க கோர்ட்ல சொல்லுங்கன்னு 15 நாள் ரிமாண்ட் பண்ணாங்க.

திருவண்ணாமலை சப்ஜெயிலுக்கு கொண்டு வந்தப்ப ஜெயிலர் சாப்பிட் டீங்களான்னு கேட்டாரு. காலையில இருந்து சாப்பிடலைன்னு சொன்னேன். இங்க சாப்பாடு தர்ற டைம் முடிஞ்சிப் போச்சுன்னாரு. என்கூட வந்த போலீஸ் காரங்க பிரியாணி சாப்பிட்டுட்டு வரலாம் வான்னு கூப்பிட்டாங்க. நான் உங்க பணத்துல சாப்பிட விரும்பல, என்னை அரெஸ்ட்பண்ணி வச்சிருந்தப்ப அரசாங்க செலவுல சாப்பாடு வாங்கித் தரணும்னு விதியிருக்கு. மதியம் ஏன் வாங்கித் தரலை. அந்தப் பணம் என்னாச்சின்னு கேட்டேன். முழிச்சாங்க. அது தெரியிறவரை சாப்பிடமாட் டேன்னுட்டேன். இதப்பாத்த ஜெயிலர் இவரை இங்க வச்சிக்க முடியாது, வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு போங்கன்னுட்டாரு.

வேலூருக்கு நைட் 10.30-க்கு வண்டி போச்சு. என் உடம்பு ரொம்ப துவண்டுப் போயிருந்ததால அதிகாரிங்க என்னை, வேலூர் ஜி.ஹெச்.சுக்கு அனுப்பினாங்க. நைட் 11.30-க்கு டாக்டர் குளுக்கோஸ் போட பாத்தாரு. நான் மறுத்து உண் ணாவிரதம்னேன். மறுநாள் பெரிய டாக்டருங்க வந்து என்னை மனநல பாதிப்புன்னு அந்த பிரிவுக்கு அனுப்பி னாங்க. அங்கயிருந்த டாக்டர்கிட்ட உணவு விஷயத்தைச் சொன்னேன். அவர் கோபமாகி போலீஸை சத்தம் போட் டாரு. என்கூட வந்த போலீஸ்காரங்க பிரச்சினையை எங்கயோ சொல்ல, இன்ஸ்பெக்டர் ரமேஷே இரண்டுபேர தயார்பண்ணி எனக்கு ஜாமீன் வாங்கித் தந்து அனுப்பினாரு. அதுக்கப்புறம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு மறுநாள் வந்து என்மேல பொய் கேஸ் போட்ட இன்ஸ்பெக்டர், மிரட்டினதா சொன்ன வியாபாரி, லஞ்சம் வாங்கின டாக்டர் எல் லார் மேலயும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆதாரங்களோட மனு தந்திருக்கேன்'' என்றவர்...

""30 வருஷத்துக்கு முன்ன ரேஷன் கடையில வேலை பார்த்தேன். கடைக்கு வந்த எஸ்.ஓ. மாச மானா 300 ரூபா தரணும்னு சொன் னாரு. தப்புபண்ணச் சொல்றியான்னு அடிச்சிட்டேன். வேலையவிட்டு நீக்கிட்டாங்க. பொதுநல சேவை மையம்ங்கிற பேர்ல இதுவரைக்கும் 2500 மனுக்களுக்கு மேல தந்திருக்கேன்.

திருவண்ணாமலை நகராட்சிக் குச் சொந்தமா எத்தனை கடைங்கயிருக் குன்னு கேட்டேன். 270, 281, 356-ன்னு மாத்தி மாத்தி தகவல் தந்திருக்காங்க. பவன்குமார் (அ.தி.மு.க.) தன் பினாமி கமலக்கண்ணன் பேர்ல எடுத்திருக்கிற 2 கடைக்கு 2003-2009 வரை வாடகை பாக்கி 62,900-னு டாகுமெண்ட் சொல் லுது. 2 கடைக்கே இவ்வளவான்னு மொத்த கடைங்களோட வாடகைத் தகவல்கள் கேட்டு மனு தந்தேன், தக வல் வரலை. அதேமாதிரி 2500 மாணவிகள் படிக்கிற நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதிய இடிச்சிட்டு நகராட்சி சார்பா 20 கடைங்க கட்டறாங்க. பணத்துக் காக பள்ளிய இடிச்சிக்கிறாங்க. பணம் வேணும்னா என் பேர்ல 100 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கட் டும். வாரிசா சேர்மன் ஸ்ரீதர நியமிக் கிறேன். அவர் கூலிப்படைய வச்சி என்னை கொன்னுட்டு இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிக்கட்டும். பள்ளிய விட்டுட சொல்லுங்கன்னு கலெக்டருக்கு மனு தந்திருக்கேன்'' என்றார் புன்னகைத்தபடி.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவரின் மனைவி தாமரைச்செல்வி, ""வீட்டுக்குன்னு அவரால 10 பைசாவுக்கு பிரயோஜனமில்லை. ஆனா இவர் தினமும் கடைக்கு வந்து 50 ரூபா எடுத்துட்டுப் போயிடறாரு. "மத்தவங்களை மாதிரி நான் குடிக்கவா எடுத்துட்டுப்போறேன். சிலருக்கு குடிக்கிறது பழக்கம், சிலருக்கு சிகரெட் புடிக்கிறது பழக்கம். எனக்கு பொதுமக்களுக்கு சேவை செய்றது பழக்கம்'னு சொல்றாரு.. அதுக்குமேல அவர்ட்ட என்ன கேட்கிறது'' என சலித்துக்கொண்டவரிடம் புகைப்படம் எடுக்கணுமே என்றதும், ""இதுல அது வேறயா போப்பா'' என மறுத்துவிட்டார்.


எந்த ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் உடனே வெள்ளை பேப்பர் வாங்கி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தந்துவிட்டு வருகிறார் சின்னையன். வித்தியாச மான மனிதர்.


2) இன்று ஒரு தகவல் என்ற தளத்திலிருந்து இந்தப் பகிர்வு : சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்...
                                  

படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி...!




[பாசிட்டிவ் செய்திகளில் இதைச் சேர்த்திருக்கிறேன் என்றாலும், சுவாரஸ்யம் கருதியே.
காக்கைக்கும் இருக்கும் பாசிட்டிவ் அப்ரோச் மனிதனுக்கு வரட்டும் என்று எடுத்துக் கொள்ளலாமா!
]


3) நிழலில் ஒதுங்க இடமில்லாமல் பாம்புகள் செத்துப் போவதைப் பார்த்து மனம் நொந்த Jadav Molai Payeng, வன அலுவலகத்தில் சொல்லி 'உங்களால் ஏதாவது செய்ய முடியுமா' என்று கேட்க, அவர்கள், உங்களால் முடிந்தால் நீங்களே வளருங்கள்... குறிப்பாக மூங்கில் என்று சொல்ல ஐவரும் 'ஏன் செய்யக் கூடாது' என்று முயற்சித்து, இன்று தனி ஒரு மனிதனாக 1360 ஏக்கர் காட்டை உருவாக்கியிருக்கிறார். 

                                       

இப்படி ஒருவரால் ஒரு காட்டை உருவாக்க முடியும் என்றால், நம்மால் ஏன் ஒரு தோட்டத்தையாவது உருவாக்க முடியாதா என்று கேட்கிறது இந்த தளம்.

வெள்ளி, 15 மார்ச், 2013

(எனக்கும் பிடித்த) P B ஸ்ரீனிவாஸ்

                                              
                               

சமீபத்தில் இசைவிழா நிகழ்ச்சிக்குச் சென்றபோது மயிலை ஸ்ரீ பார்த்தசாரதி சபாவில் டி. எம். கிருஷ்ணா கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த போது பாடகர் பி. பி. ஸ்ரீநிவாஸ் வந்தார். மெல்ல நடந்து வந்தார். அவரை இரண்டு பேர் கைப் பிடித்து அழைத்து வந்தார்கள். கையில் ஏகப் பட்ட நோட்டு, நோட்டிஸ்கள், என்று வைத்திருந்தார். அவரை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்து விட்டுச் சென்றார்கள் அவர்கள். காதிலிருந்த காது கேட்கும் கருவியைச் சரி செய்து கொண்டு கச்சேரி கேட்டார் அவர். 

என்ன இனிமையான பாடல்களை நமக்குத் தந்தவர்...

மெகா டிவி என்று நினைவு.  சமீபத்தில் அங்கு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இவர், கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாணி ஜெயராம், ஏ. எல். ராகவன், டி. எம். எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ. எல். ராகவன் குரல் தவிர, வேறு யார் குரலும் பழைய மாதிரி இல்லை. 

                                         

பி. பி. ஸ்ரீநிவாஸ் என்றதும் என் நினைவுக்கு உடனடியாக வந்த சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எல்லோர் நினைவிலும் இன்னும் பல பாடல்கள் இருக்கும். பாசமலர், சுமைதாங்கி, பொன் ஒன்று கண்டேன் என்று நிறைய இருக்கும்... எனக்கும் அதேபோல பெரிய லிஸ்ட் உண்டு. எனினும் சில பாடல்களை மட்டும் இங்கு உங்களுடன் சேர்ந்து கேட்கிறேன்..


1) பூவரையும் பூங்கொடியே... கைகளால் வரையும் ஓவியமும், கண்களால் வரையும் ஓவியமும்! 

"வடிவங்கள் மறைந்து விடும்... வண்ணங்கள் மறையாதே..: உருவங்கள் மாறி விடும்... உள்ளங்கள் மாறாதே..."



2) இளமை கொலுவிருக்கும்..... "பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா.. ஒரு பூவைக்கு மாலையிடும் நாள் வருமா.."

"அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ... ஒரு அணைப்பில் அடங்குவதும் அவள் அல்லவோ.."


"பெண் இயற்கையின் சீதனப் படைப்பல்லவா" // "எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா?"




3) துள்ளித் திரிந்த பெண்ணொன்று... "வேலில் வடித்த விழியொன்று மூடிக் கொண்டதே(ன்) இன்று.."
 
"அன்னை தந்த சீதனமோ...என்னை வெல்லும் நாடகமோ.."



4) நிலவுக்கு என்மேல் என்னடி கோபம... "சித்திரை நிலவே... அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு..."



5) ஏதோ மனிதன் பிறந்து விட்டான...."பெண்ணே தெய்வம், அன்னை கடவுள், பெருமை என்று பேசுகிறான்.... பெண் பேதைகள் தீமைகள் என்றும் அவனே மறுநாள் ஏசுகிறான்..."

"...நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்....ஆறறிவுடனே, பேச்சும் பாட்டும், அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்... அந்த ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்..."


6) ஜாவ்ரே ஜாவ் இந்த கேட்டுக்கு நீ ராஜா... "அகப்பட்ட மனிதரைப் பிடிக்கிற வேலைக்கு ஆர்ப்பாட்டம் என்ன ராஜா...."
 
"பம்பம்பம்" என்பதும் அதைத் தொடரும் இசையும்...
"காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ? கழுதைக்குச் சுமக்கிற பொதி சொந்தமோ..."
 
 மிகத் தேடி எடுத்தேன்    வீடியோவை. கட் ஆகி கட் ஆகி வருவது சோகம்.



7) நேற்று வரை நீ யாரோ நான் யாரோ... "யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்"
 "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே" 


"நேரிலே பார்த்தால் என்ன. நிலவென்ன தேய்ந்தா போகும்? புன்னகை புரிந்தால் என்ன? பூமுகம் சிவந்தா போகும்?



8) எங்கேயோ பார்த்த முகம்..."இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்...புதுநிலவோ... பூச்சரமோ... மதுமலரோ... மாணிக்கமோ..."

வியாழன், 14 மார்ச், 2013

இப்படி எல்லாம் நடக்குமா?

                      
ஹலோ? எங்கள் ப்ளாக் ஆசிரியர்? 



ஆமாம். 

இன்றைக்கு போஸ்ட் எதுவும் போடாதீர்கள். 

ஏன்? 

தமிழ் ப்ளாக் கூகிள் இந்திய ஒருங்கிணைப்பு அலுவலகத்திலிருந்து, ஏகாம்பரம் பேசுகின்றேன். உங்கள் ப்ளாக் போக்கு வரத்துகளை பதிவு பண்ணுகின்ற எங்கள் கணினி, உங்கள் ப்ளாக் நண்பர்கள் : வரவுகள் : தரவுகள்: இண்டெக்ஸ் தயார் செய்துள்ளது. அதில் உங்கள் (எங்கள்) ப்ளாக் முதல் இடம் பெற்றுள்ளது. உங்கள் ஜி+, முகநூல், யாகூ, பிகாசோ, இத்யாதி கணக்குகளில், உங்கள் அலைபேசி எண்ணை கண்டு பிடித்து, அதன் மூலமாக உங்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றேன். 
       
அதுக்கும் போஸ்ட் எழுதாமல் இருப்பதற்கும் என்ன அய்யா சம்பந்தம்? 

அது, நீங்க போஸ்ட் எழுதுகின்ற நாட்களில், வைரஸ் ஜுரம் போல அல்லது விலைவாசி போல கவுண்ட்டர் ஓடுகிறது. எங்களால், உங்களுக்கு அதாவது உங்கள் அல்லது எங்கள் ப்ளாக் வலைப் பதிவிற்கு செய்ய நினைக்கின்ற சில மேம்பாடுகளை கவுண்ட்டர் ஓடுகின்ற நேரங்களில் செய்ய முடியவில்லை. அதனால்தான் போஸ்ட் எதுவும் போடாமல் இருக்கச் சொல்கின்றேன். 

மேம்பாடு?  நான் கேட்டேனா? 
            
நீங்க கேட்கலை. நான் ஏற்கெனவே சொன்னபடி எங்கள் கணினி இண்டெக்ஸ் பார்த்து, அதில் முதன்மை இடம் வகிக்கின்ற வலைப் பதிவிற்கு, சில மேம்பாடுகள் மற்றும் சோதனை வடிவ அமைப்புகளை அமைத்து, உங்களிடமிருந்து அவைகளின் செயல்பாடு குறித்து அபிப்பிராயங்கள் கேட்டு, மற்ற பதிவாளர்களுக்கும் அந்த மேம்பாடுகளை அறிமுகப் படுத்துவோம்.

நீங்கள் ஒன்றும் படுத்த வேண்டாம். ஏற்கெனவே இரண்டு மூன்று நாட்கள் போஸ்ட் இல்லையே ஏன்? என்று ஸ்ரீராம் என்னை அலையிலும், தொலையிலும், வலையிலும், (முகநூல்)நிலையிலும், நச்சரித்துக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு ஏதேனும் போஸ்ட் போடலை என்றால், என்னை டீ-பிரமோட் செய்துவிடுவேன் என்கிறார். எனவே, நான் நிச்சயம் போஸ்ட் போடுவேன். 
              
சரி. அப்படியானா ஸ்ரீராம் நம்பர் கொடுங்க. நான் அவரிடம் பேசுகின்றேன். 

கொடுத்தேன். 

**************    ***************   ***********   

ஹல்லோ ஸ்ரீராம்? 

ஆமாம். 

ஏகாம்பரம் பேசினாரா? 

ஆமாம். 

என்ன செய்யலாம்? 

அவர் சொல்வது போலவே செய்து விடப் போகின்றேன். 

அலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. 

ஹல்லோ? ஹல்ல்ல்லோ? ????? கீங்க்க் கீங்க்க்..... மௌனம். 

மீண்டும் ஸ்ரீராமை அலைபேசியில் அழைத்தால், "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது." 
             
பிறகு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை அதே முயற்சி, அதே போன் குரல், அதே வாசகம். இந்த நாடகம் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நடந்தது. 

அப்பொழுது, தொலைபேசியில் ஒரு அழைப்பு. 

இருங்க அது யார் என்ன என்று கேட்டுவிட்டு வந்து, பிறகு பதிவைத் தொடர்கின்றேன்.  
------------------
               
(பிறகு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பவர்கள் பின்னூட்டத்தில் பதியுங்கள்) 
                        

திங்கள், 11 மார்ச், 2013

அலுவலக அனுபவங்கள் - பசவப்பா

                   
பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. எங்கள் அலுவலகம் எப்போதுமே ஜாலியான குடும்பம் போல இருக்கும். சண்டைகளும் இருக்கும். கிண்டல் கேலிகளும் இருக்கும்.
         
வேளாண் துறை அலுவலகம் அது.   ஆல் இந்தியா ரேடியோவில் இவர்கள் அலுவலகம் பங்கு பெறும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. வேளாண்மை சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் போல இருக்கட்டும் என்று பேசி முடிவெடுத்தார்கள்.
               
டைரக்டர் உள்ளே வரும்போதே உற்சாகமாக வந்தார். எல்லோரையும் ஆபீசின் மெயின் ஹாலில் கூட்டினார். 


                                                                                    

அந்தக் காலத்தில் ரேடியோவில் வருவது பெரிய கவரேஜ். எனவே அன்று முழுவதும் டிஸ்கஷன் நடந்தது. யார் யார் என்னென்ன பேசுவது என்று ஒதுக்கிக் கொண்டார்கள்.

டைரக்டர் சொன்னார். "யார் யார் என்னென்ன பேச வேண்டும் என்று குறித்துக் கொடுத்திருக்கிறேன். நான் உங்கள் பெயர் சொல்லி உங்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கும் விஷயத்தைச் சொல்லி, அது குறித்து என்ன நினைக்கறீங்கன்னு கேட்பேன். நீங்கள் பதில் சொல்வது போல நேச்சுரலா படிக்கணும்... ரிஹர்சல் நாளைலேருந்து பார்த்துடுவோம்.." என்றார். 

                                         

 

அவரவர்கள், அவரவர் பேப்பரை வைத்துக் கொண்டு பேசிப் பழகினார்கள். டைரக்டர் இன்று உற்சாகமாக இருந்தாலும் என்றுமே அவர் டெரர். கோபம் வந்து விட்டால் வாயில் சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.

ரிஹர்சலில் டெஸ்பாட்ச் கிரிஜா நிறையத் திட்டு வாங்கினாள். பசவப்பாவுக்கு தமிழ் வராது. வடநாட்டு நடிகை தமிழ் பேசுவது போல எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பித்துக் கொண்டிருந்தான்.

மேனஜர் குருநாதன் தனி டைப். யார் லீவு போட வேண்டி வந்தாலும் அவரிடம்தான் போவார்கள்.

"சார்... நான் நாளையும் நாளை மறுநாளும் லீவு..."

"சரி.."

"பில் போட எல்லாம் ரெடியா வச்சிருக்கேன்..."

"சரி..."

எந்த சீட்டாக இருந்தாலும் அவர்கள் லீவு போட்டால் அவர்கள் சீட்டில் அமர்ந்து அங்கு பெண்டிங்கில் இருக்கும் வேலையை குருநாதன் முடித்து விடுவார். மிக நல்லவர். அவரிடம் ஒரே ஒரு குறை, அவரின் குசும்பு. சாரி குறும்பு!

ரெகார்டிங் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது...பசவப்பா குணசேகரை நெருங்கினான்.

"ஒரு ஹெல்ப் குணா... ரெகார்டிங் அப்போ டைரக்டர் என்னைக் கேள்வி கேட்கும்போது என் காலில் லேசா சுரண்டு...இல்ல தட்டு... காது சரியாக் கேட்காது. தமிழ் வேற அவ்வளவு தெரியாது..."


                                               

குணா 'சரி' என்றான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் குரு. என்னை நிமிண்டி ஓரமாக அழைத்துச் சென்றார்.

"ரெகார்டிங்க்ல பசவப்பாவைப் போட்டுப் பார்க்கறோம். அவனை நான் சொல்ற நேரத்துல நீ சொரண்டிடு" என்றார்.

"எதுக்கு சார் பாவம்..."


                                     


"அட.. சும்மா தமாஷ்தானே... விடு"

அந்த நாளும் வந்தது. வானொலி நிலையம் சென்றோம். ரெகார்டிங் ஆரம்பித்தது. டைரக்டர் இறுக்கமாக இருந்தார். இரண்டு பேர் கேள்வி பதில் முடிந்தது. அடுத்ததாக ஏதோ ஒரு விஷயம் சொல்லி, "நீங்க என்ன நினைக்கறீங்க கிரிஜா" என்றார்.

சரியாக இந்த சமயம் குருநாதன் எனக்கு ஜாடை காட்ட, பேனாவைக் கீழே போட்டு விட்டு அதை எடுக்கும்போது யதேச்சையாகப் படுவது போல பசவப்பா காலில் சுரண்டி விட்டேன்.

திடுக்கிட்டுச் சுதாரித்த பசவப்பா பேப்பரை எடுத்துக் கொண்டு ராகமாக ஒப்பிக்க ஆரம்பிக்க, பதில் சொல்லத் தொடங்கிய கிரிஜா குழம்பிப் போய் எங்கள் டைரக்டர் முகத்தைப்பார்க்க, அவர் கை காட்டி ரெகார்டிங்கை நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டியவர், பசவப்பாவை நோக்கிக் கை நீட்டி ஜாடை செய்தபடி "*&^%***&^$#*#$%&*(&^%#)(*&&^***... " என்று ஆரம்பித்து.....


நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். பசவப்பா "சாமி... காலை வாரி வுட்டிட்டியே" என்றான்.


                                       

"யோவ்... நான் என்ன செஞ்சேன்... நீ குணா கிட்டதான சொல்லியிருந்தே...கீழ விழுந்த பேனாவை எடுக்கும்போது கை பட்டுடுச்சி...பசவப்பா.. உனக்குத் தமிழ்தான் தெரியாது.. உன் பெயர் கூடவா தெரியாது? கிரிஜான்னுதான சொன்னாரு?"

"அதானே" எல்லோரும் கோரசாகச் சொல்ல, பசவப்பா நொந்து போய்க் கிளம்பிச் சென்றான்.          

           
படங்கள் : நன்றி இணையம்