சனி, 13 ஏப்ரல், 2013

பாசிட்டிவ் செய்திகள் ஏப்ரல் 7, 2013 முதல் ஏப்ரல் 13, 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


1) பெங்களூருவின் பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து- ஜேனட் யக்னேஷ்வரன்!
                                    


‘பூங்கா நகரம்’ என்கிற பெருமையுண்டு பெங்களூருக்கு. இன்று திரும்பின பக்கமெல்லாம் பச்சைக்கம்பளம் விரித்தது போல அழகாக வரவேற்கும் அந்த நகரத்தின் 10 வருடங்களுக்கு முந்தைய நிலைமையே வேறு! மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பொட்டல்வெளியாக மாறிக்கொண்டிருந்த அந்த நகரத்தை மீட்டு, அழகு நகரமாக, பசுமைப் பிரதேசமாக மாற்றிய புண்ணியம் ஜேனட் யக்னேஷ்வரனையே சேரும். கணவரின் நினைவாக அவர் தொடங்கிய ‘ட்ரீஸ் ஃபார் ஃப்ரீ’ அமைப்புதான், இன்றைய பெங்களூருவின் பசுமைப் புரட்சிக்கான முதல் வித்து!

‘‘முப்பது முதுகலை டிகிரி, 14 டிப்ளமோ, இன்னும் எக்கச்சக்க படிப்புகள் படிச்சு, லிம்கா சாதனைப் புத்தகத்துல இடம்பிடிச்சவர் என் கணவர் யக்னேஷ்வரன். 10 வருடங்களுக்கு முன்னாடி, சிறுநீரகம் செயலிழந்து இறந்துட்டார். அந்தத் துக்கத்துலேருந்து மீண்டு வர்றது எனக்கு அத்தனை எளிதானதா இல்லை. இறந்த பிறகும் தன்னோட உடலை ஆராய்ச்சிக்கு தானமா கொடுத்த அவரைக் கவுரவப்படுத்தற மாதிரி ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அந்த நேரம் என் துயரத்துக்கும் ஒரு மருந்து தேவைப்பட்டது.

பெங்களூருல மரங்கள் பெருவாரியா வெட்டப்பட்டுக்கிட்டிருந்த நேரம் அது. லேன்ட்ஸ்கேப்பிங் பண்ணிட்டிருந்ததால, ‘மரங்களை வெட்டறதைத் தடுக்க ஏதாவது செய்யக் கூடாதா’ன்னு மக்கள் என்னைக் கேட்க ஆரம்பிச்சாங்க. பெருகிட்டிருக்கிற போக்குவரத்தைக் கட்டுப்படுத்த, சாலைகளை அகலப்படுத்த, மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயத்துல இருக்கிற அதிகாரத்தோட சண்டை போட்டுப் பலனில்லைன்னு தெரிஞ்சது. மரங்களை வெட்டறவங்களோட போராடறதுக்குப் பதில், புதுசா மரங்களை நடறதுதான் சிறந்ததா பட்டது எனக்கு.

மரங்கள் வெட்டப்படறதை நினைச்சுக் கவலைப்பட்ட மக்களுக்கே, புதுசா மரங்கள் நடறதை ஏத்துக்க முடியலை. மரங்கள்லேருந்து குப்பைகள் விழுமே, டூ வீலர், கார்களை நிறுத்த இடமிருக்காதேன்னு யோசிச்சவங்கதான் அதிகம். ‘ட்ரீஸ் ஃபார் ஃப்ரீ’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். ஆரம்ப காலத்துல வீடு, வீடா போய், ‘மரம் நட ஒரு சின்ன இடத்தை மட்டும் கொடுங்க… நாங்க நட்டுட்டுப் போற மரத்துக்கு தண்ணீர் விட்டுப் பார்த்துக்கோங்க’ன்னு தேடிப் போய் கேட்டுத்தான் விழிப்புணர்வைக் கொண்டு வந்தேன். இப்ப, மக்களே எங்களை அணுகி, மரம் நட்டுத் தரச் சொல்லிக் கேட்கற அளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்திருக்கறதுல சந்தோஷம்’’ என்கிற ஜேனட், மரங்களுக்கு இழைக்கிற கொடுமைகளைப் புரிய வைத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைக் குழந்தைகளுக்கும் போதிக்கிறார்.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு மா, சப்போட்டா மாதிரியான பழ மரங்களை நட்டுத் தருவதாகவும், அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் பெருகும் என்றும் சொல்கிற ஜேனட், மரக்கன்றுகளை யாருக்கும் தானமாகத் தருவதில்லையாம். விருப்பமுள்ளோருக்கு, அவர்களது இருப்பிடம் தேடிச் சென்று, தம் குழுவினரே நட்டுக் கொடுத்து விட்டு வருவதாகச் சொல்கிறார். இப்போதைக்கு பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மட்டுமே இந்தச் சேவையைச் செய்கிறவர், விரைவில் விரிவுபடுத்தும் திட்டத்திலும் இருக்கிறாராம்.

மரங்கள் நடுவதில் முன்னோடியான திம்மக்காவை சந்தித்ததைத் தன் வாழ்க்கையின் வசந்தகால அனுபவமாகக் குறிப்பிடுகிறார் ஜேனட்.‘‘எங்கக் குழு மொத்தமும் திம்மக்காவோட இருப்பிடத்துக்கே போயிருந்தோம். 3 கி.மீ. தூரத்துக்கு வெறும் மரங்கள் அடர்ந்த பாதையில, பறவைகளோட கிரீச் சத்தத்தையும், பட்டாம்பூச்சிகளோட பட்டு ஸ்பரிசத்தையும், இலைகள் உரசற ஒலியையும் கேட்டபடி, நடந்த அந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் சிலிர்க்குது. எங்க அமைப்போட முதல் ஆண்டுவிழாவுக்கு திம்மக்காவை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தோம். 3 நாள் எங்களோட தங்கியிருந்தாங்க. அவங்களோட உழைப்பும் உற்சாகமும்தான் எங்களுக்கான ஊக்கம்’’ என்கிற ஜேனட், வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

‘‘மாட மாளிகையோ, ஓலைக் குடிசையோ… உங்க வீட்டைச் சுத்தி கொஞ்ச இடத்தையாவது பசுமைக்கு ஒதுக்குங்க. உங்க ஆரோக்கியம், உங்க வீடு எத்தனை பெரிசு, எத்தனை பெட்ரூம் இருக்குங்கிறதைப் பொறுத்த விஷயமில்லை. உங்க வீட்டைச் சுத்தி பசுமைக்கு எவ்வளவு இடம் இருக்குங்கிறதைப் பொறுத்தது. உங்க ஆரோக்கியத்தைக் காப்பாத்தற செலவில்லாத, சிம்பிளான டாக்டர், மரங்கள் மட்டுமே...

நன்றி ஆந்தை ரிப்போர்டர்   (முகநூலிலிருந்து)

2)
இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூல் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான் அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது இவர் சரியாக ஒரு நாளைக்கு .
                                                 

..பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூல் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பானை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த
பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் (முகநூலிலிருந்து)

3)
இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர்.அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது
                                                          
"ரீயூனிட் டூ ரீடிபைன் இந்தியா' (ஆர்.ஆர்.ஐ.,) என்ற தொண்டு நிறுவனம். அதன் செயலர் அகிலனிடம் உரையாடியதில் இருந்து...
கல்வி பயிற்சிக்கு குறவர்களை தேர்ந்து எடுத்ததன் பின்னணி என்ன?
சுதந்திரம் அடைந்து, 66 ஆண்டுகள் ஆகியும், பல்வேறு சமூக மாற்றங்கள் வந்த போதிலும், தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளாதவர்கள் குறவர்கள் மட்டுமே.தங்களது தொழிலுக்கு ஏற்ப இடம்பெயர்வதால், அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கே வாய்ப்பிருக்காது. அவர்களின் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில், குறவர்களின் வாழ்விடங்களை கண்டறிந்து, முகாம்கள் நடத்தினோம்.இதற்காக, பல ஆண்டுகள் முயன்றும், ஒருங்கிணைக்க முடியவில்லை. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தில், அதிகளவு குறவர்கள் தங்குவதாக கேள்விப்பட்டு, கிராம தலைவரின் உதவியோடு, விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். அவர்களின், 65 குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்கின்றனர்.
எந்த விதத்தில் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தது?
துவக்கத்தில், பெரும் சிரமமாக இருந்தது. குறவர்கள் இடம் பெயர்வதற்கு காரணமே, குடியிருக்க நிரந்தர இடமும், வருமானம் தரும் நிலையான தொழிலும் இல்லாதது தான்.கிராம தலைவர் உதவியோடு, அந்த கிராமத்தில், 100 குடும்பங்கள் தங்க, அரசின் இலவச வீடுகள் கட்டி தரப்பட்டன. தோட்டம், கிராம வேலைகளில் ஈடுபடுத்தி வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்ததால், இடம் பெயரும் எண்ணத்தை கைவிட்டனர்.குழந்தை வளர்ப்பு முறை, தன் சுத்தம் ஆகியவற்றை எடுத்து கூறினோம். நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும், தொடர் முயற்சியால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒத்துழைத்தனர்.கிராம பள்ளி தலைமையாசிரியர் உதவியோடு, 65 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு கிராமத்தில் உள்ள, 100 குடும்பங்களில் கல்வியை கொண்டு வருவதற்கே, 3 ஆண்டுகளாகி விட்டன.
சிறப்பு வகுப்புகளின் அம்சங்கள்?
எழுதக் கற்பித்தல், பின் எழுத்து கூட்டி வாசிப்பு, செய்தித் தாள் வாசிப்பு என, பல கட்டங்களாக கற்பித்தல் நடக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, ஆடியோ உதவியுடன் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு கற்று தரப்படுகிறது.எளிமையான ஆங்கில வார்த்தைகள், அவற்றின் பொருள் ஆகியவை கற்று கொடுக்கப்படுகின்றன. மாதந்தோறும் தேர்வு நடத்தி, பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாட்கள் அலுவலக விடுப்பு எடுத்து, தொடர்ச்சியாக மாணவர்களை ஒன்றிணைத்ததால், முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.
இந்த முயற்சிக்கான உந்துதல் என்ன?
எங்கள் அமைப்பில், 10 பேர் மட்டுமே உறுப்பினர்கள். கல்லூரியில் படிக்கும் போதே, சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. தற்போது ஒவ்வொரு துறையிலும் உள்ள, நண்பர்களின் உதவியோடு, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.கடந்த, 2009ல் இந்த அமைப்பை துவக்கினோம். தற்போது சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், டில்லி ஆகிய இடங்களிலும், எங்கள் அமைப்பு செயல்படுகிறது.குறவர் இனம் மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் முயற்சியில், இந்த அமைப்பை சேர்ந்த, 500 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கல்லூரி மாணவர்கள் தான். rrindia.org என்ற இணையதளத்தில் எங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.   (தினமலர்)

 
4) R. பத்மகுமாரி மதுரை மதிச்சியத்தில் செய்யும் சேவைகளைப் பற்றி முகநூலில் படித்தேன். பல்வேறு விதத்தில் ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பங்களின் குழந்தைகளை அழைத்து பாடத்திலும், சொந்த விஷயங்களிலும் ஆலோசனைகளை, தினசரி மாலை 6 மணி முதல் 8.30 வரை வழங்குகிறார். அவரைப் பற்றியும் அவர் சார்ந்திருக்கும் அமைப்புப் பற்றியும் விளக்கமாகப் போட்டிருக்கிறார்கள்.

                          


5) விளக்கம் தேவையில்லை 1



6) விளக்கம் தேவையில்லை  2

20 கருத்துகள்:

  1. கடைசி இரண்டு செய்திகளும் மனத்தை உருக்குகின்றன.
    அதுவும் அந்தப் பெண் அழுவது ஐய்யோ என்றிருக்கிறது.
    பங்களூரின் ஜேனட் முயற்சிகள்


    இன்னும் மலரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பசுமை புரட்சி செய்யும் திருமதி ஜேனட் யக்னேஷ்வரன் வாழ்க.

    குறைந்த விலையில் கம்மங்கூழ் விக்கும் அம்மா வாழ்க!

    குறவர் இன குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து அவர்கள் நிலை உயர சேவைசெய்யும் ஆர்.ஆர்.ஐ தொண்டு நிறுவனம் வாழ்க!


    ஆர். பதமகுமாரி சேவை வாழ்க!


    பிச்சைஎடுத்து படிப்பதை கேள்விப் பட்டு இருக்கிறேன். பிச்சைஎடுத்து படிக்கவைக்கும் உன்னதமனிதர் வாழ்க! வாழக!

    பாதை ஒர பெண்ணுக்கு செருப்பு கொடுக்கும் நல் உள்ளம் வாழக!.

    நல்ல செய்திகளை வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன்.


    பதிலளிநீக்கு
  3. பாஸிடிவ் செய்திகள் அருமை..

    தற்போது நமக்குத் தேவை மரங்களும் சுகாதாரமான கம்பங்கூழும், பிச்சை புகினும் கற்கை நன்றேவும்.... நல்ல பகிர்வு...

    கடைசிப் படம் மிக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை... பாட்டியின் நேர்மை மனதை கவர்ந்தது...

    பதிலளிநீக்கு
  5. நாம் ஒவ்வொருவரும் ஜேனட் சொல்வதைக்கேட்டு மரம் நட்டால் போதுமே. தண்ணீர் இல்லா பஞ்சமா? அப்படி என்றால் என்ன என்று கேட்க வைக்கலாம்.
    " பிச்சை புகினும் கற்கை நன்றே " என்று படிக்க வைப்பவர் மனதை நெகிழ் வைக்கிறார் .
    பாட்டியின் நேர்மையும், தன்னிலை விளக்கமாக கொடுத்திருக்கும் படங்கள் எல்லாமே அசத்தல்.
    வாழ்த்துக்கள்,தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  6. எங்க ஏரியாவிலும் இதேபோல 5 ரூபாய்க்கு கூழ் விற்கும் பாட்டி இருக்கிறார்

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமையான ஊக்கம் தரும் செய்திகள்! நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. கடைசிப்படம் அருமை. மற்றச் செய்திகளும் எப்போவும் போல் மனதைக் கவர்ந்தன. கம்மங்கூழ்ப் பாட்டி பற்றியும் ஏற்கெனவே படிச்சேன். :))))

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பாசிடிவ் செய்தி பெண்கள் சிறப்புச் செய்திகளாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 'பிச்சைப் புகினும் கற்கை நன்றே - வாழ்ந்து காட்டும் திரு செல்வராஜ் வாழ்க!
    விளக்கம்ம் தேவையில்லாத படங்கள் பல பல விஷயங்களைச் சொல்லுகின்றன.
    ரீயுனைட் (டு ரீ டிபைன்) என்று இருக்க வேண்டுமோ?

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் எல்லோருக்கும் இனிய விஜய வருட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. தமிழ் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில் இதமான செய்திகள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. இந்த வலைப்பதிவு ஆசிரியர்கள் அனைவருக்கும்
    இந்த வலைக்கு வரும் அனைத்து நண்பர்களுக்கும்
    வாசகர்களுக்கும்
    கமென்ட் போடுபவர்களுக்கும், கமென்ட் போடாமலே செல்பவர்களுக்கும்
    சுப்பு தாத்தாவின்
    விஜய வருஷம் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    மேஷ ராசி முதல் மீன ராசி வரை எல்லோருக்கும்
    ஒரே பலன் தான்.

    இந்த வருஷம் அமோகமா இருக்கும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்குரியவர்களைப் பற்றி அறியத் தந்திருக்கிறீர்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. அருமையான செய்தியை அறியத் தந்திருக்கிறீர்கள்...

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. பாட்டியின் நேர்மை இப்போது சரவண பவன், ரிலையன்ஸ் இவர்களிடம் இருக்கிறதா?
    வால்மார்ட்டைப் பிடித்து ஏன் தொங்குகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  16. அனைத்துமே அருமையான செய்திகள். கடைசி படம் முகப்புத்தகத்தில் நானும் பார்த்தேன்.....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. அனைத்தும் நன்று. கடைசி இரண்டு நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
  19. ஜேனட் மனதை கவர்கிறார். கடைசி இரண்டும் மனதை கனக்க வைத்த செய்திகள்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!