சனி, 13 ஜூலை, 2013

பாசிட்டிவ் செய்திகள் - 7 ஜூலை, 2013 முதல் 13, ஜூலை, 2013 வரை.


எங்கள் B+ செய்திகள்.  
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.   
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.   
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
 

1) உடுமலை : உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

                                                       

உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமவராப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். படிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க தன்னார்வலர்கள் மூலம் தேவையான இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. பசுமைப்படை மற்றும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்புகளும் பள்ளியில் செயல்படுகின்றன.

மாணவர்களின் நிர்வாகத்திறமையை வளர்க்கும் வகையில், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்திலேயே அங்காடி ஒன்றை துவங்கலாம் என ஆலோசித்து முடிவெடுத்தனர்.இதற்காக ஆசிரியர்கள் சார்பில் பங்களிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு ஒரு அங்காடி ஒன்றும் துவங்கப்பட்டது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு 6,7,8 மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்காடியில், மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், காகிதம், வரைபட அட்டைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மற்ற குழந்தைகளுக்கு லாபம் இல்லாமல் அடக்க விலையிலேயே விற்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் சில அவசர தேவைகளுக்காக கடனாக பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள் தலையீடு இல்லாமல் கணக்கு பார்ப்பது முதல் பணத்தை பாதுகாப்பது வரை நிர்வாக ரீதியான அனைத்து பணிகளையும் மாணவர்களே மேற்கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். தேவையான பொருட்களை மாணவர்களே ஆசிரியர்கள் உதவியுடன் கொள்முதல் செய்கின்றனர்.படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், காலை பள்ளி துவங்குவதற்கு முன்பு அரைமணி நேரம், மதியம் உணவு இடைவெளியில் போதும் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

""மாணவர்களிடம் நிர்வாகத்திறன் மற்றும் தன்னம்பிக்கையினை சிறுவயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்காடித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை வெற்றிகரமாக இயக்கி வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது,' என்கிறார் அங்காடி பொறுப்பாசிரியர் ஆலிஷ் திலகவதி.

"" அங்காடித்திட்டத்தை மாணவர்கள் ஆர்வமுடன் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டம் மூலம் கிடைக்கும் லாபத்தொகை மட்டுமின்றி மாணவர்கள் சேமிப்பு திட்டம் மூலம் கிடைக்கும் தொகையினை கொண்டும், பெதப்பம்பட்டி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஒரு கணக்கு துவக்கி சேமித்து வைக்கப்பட்டு வருகிறது,'' என பெருமையுடன் தெரிவித்தார் பள்ளித்தலைமையாசிரியர் மணி.

2)நேப்பாள் நாட்டுக்காரர், எழுத, படிக்க, தெரியாத இளம் விவசாயி.

பெற்றோர் மற்றும் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவருக்கு விவசாயம் கை கொடுக்காமல் போகவே வீட்டில் வறுமை சூழ்ந்தது, வெளியூர் போய் கைநிறைய சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்பவேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் ஒரு விரக்தியுடன் வீட்டைவிட்டு புறப்பட்டார்.
                                          
வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாரே தவிர, எங்கு போவது என்ன செய்வது என்று தெரியவில்லை, கிடைத்த பஸ், ரயில் என்று பயணப்பட்டவர் கடைசியில் கையில் இருந்த காசெல்லாம் செலவான நிலையில், கந்தலான உடையுடனும், பசியுடனும் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தார்.

பசியும், தூக்கமின்மையும் அவரை மனம் பேதலிக்க செய்ய தனக்குதானே பேசியபடி பரிதாபமாக கிடந்தவரை மனிதாபிமானம் கொண்டோர் போலீசார் துணையுடன் கோவையில் உள்ள மாநகராட்சி மனநல காப்பகத்தில் அடையாளம் தெரியாத மனநோயாளி என்ற "அடையாளத்துடன்' கொண்டுபோய் சேர்த்தனர்.

                                              
 
இது நடந்து இரண்டு வருடமாகிவிட்டது. இந்த இரண்டு வருட இடைவெளியில் சாகர் முழுமையாக குணம் அடைந்ததுடன், கொஞ்சம், கொஞ்சமாய் தமிழ் பேசவும், பேசுவதை புரிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டார். அந்த காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதும், காப்பகத்தின் கதவை திறந்து மூடுவதும்தான் சாகரின் பிரதான வேலையாகவும் போய்விட்டது.

இந்த நிலையில் கோவை ஈர நெஞ்சம் அமைப்பின் மகேந்திரன், அந்த காப்பகத்திற்கு ஆதரவற்ற மனநலம் குன்றியவர்களை அழைத்து வருவதையும், பின் அவர்கள் குணமானதும் உறவினர்களை அழைத்து ஒப்படைப்பதையும் பார்த்ததும் சாகருக்கு தன் குடும்ப நினைவுகள் வந்து வாட்டத் துவங்கியது.

தன்னையும் தனது குடும்பத்துடன் சேர்த்து வைக்குமாறு கேட்டார் என்பதை விட கெஞ்சினார் என்பதே பொருத்தமாக இருக்கும்.
சாகரை அவரது குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்றால் அவரது உறவினர்கள் யாராவது நேப்பாளில் இருந்து தகுந்த ஆதாரங்களுடன் வந்தால் அனுப்பி வைக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது.

உடனே சாகர் பற்றிய குறிப்புகளை படத்துடன் "முகநூலில்' வெளியிட அதனைப்பார்த்து ஒருவர் பின் ஓருவர் என்று பலரும் தங்களது முகநூலில் சாகரைப்பற்றி பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் திடீரென நேப்பாளில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி பேசியதும் மகிழ்ச்சி ஏற்பட்டது, சாகரின் உறவினர்கள் பற்றிய தகவல் கிடைத்தது.

சாகருக்கு எங்கே தான் தனிமையில் இருந்தே செத்துப் போய்விடுவோமோ என்ற கவலை இருந்தது, அது சமீபகாலமாக அதிகரித்தும் வந்தது, அவர் வாட்ச்மேன் போல காப்பகத்தில் செயல்பட்டும் வந்தார், நினைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் காப்பகத்தைவிட்டு தப்பியோடியிருக்க முடியும், ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாமல் எப்படியாவது முறைப்படி தன் ஊர் போகவேண்டும், உறவுகளை பார்க்கவேண்டும் என்றே எண்ணியிருந்தார்.

இந்த நிலையில் சாகரின் அண்ணன் போனில் பேசியதும் சாகருக்கு தான் ஊர் போய்விடுவோம் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது, அதே நேரம் சோகத்திற்கும் உள்ளானார், காரணம் இந்த இடைவெளியில் சாகரின் அப்பா இவரது பிரிவின் காரணமாக இறந்து போனாராம். இரண்டாவதாக இவர் இனி வரமாட்டார் என எண்ணி இவரது மனைவிக்கு மறுமணம் செய்து வைக்கும் ஏற்பாடும் நடந்து கொண்டிருந்ததாம்.

இதன் காரணமாக நேப்பாள் செல்லும் நாளை ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்தார்.
சாகர் நேபாள் போகவேண்டும் என்பதில் சாகருக்கு இணையாக துடித்தவர் "ஈரநெஞ்சம்' மகேந்திரன்தான், காரணம் ஒவ்வொரு முறை காப்பகத்திற்கு போகும் போதும், வரும்போதும் சாகரின் கண்களில் தெரியும் ஏக்கத்திற்கு நல்ல பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக தனது தூக்கத்தையும் துறந்தார்.

இவரது முயற்சி வீண் போகவில்லை, அந்த ஒரு நாளும் வந்தது. சாகரின் அண்ணன் உரிய ஆதாரங்களுடன் காப்பகத்தில் நுழைந்ததும், சாகர் ஒடிப்போய் கட்டிப் பிடித்துக் கொள்ள, அண்ணனோ தம்பியை கட்டிப்பிடித்து அழ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வுகளின் பகிர்வு அங்கே நிகழ்ந்தது.

கடைசியில் தான் விரும்பியபடி தன் சொந்த மண்ணிற்கு போகப்போகிறோம் என்றதும் மகேந்திரனை கட்டிப்பிடித்து சாகர் முத்தமழை பொழிந்துவிட்டார்.

அடுத்த அடுத்த நிகழ்வுகள் சுபமாக நடந்தேற சாகர் தன் சகோதரருடன் பிரியாவிடை பெற்று தன் சொந்தமண்ணிற்கு சென்று தன் சொந்தங்களுடன் சேர்ந்துவிட்டார்.

காசு, பணத்தை விட சொந்தம் பந்தமே மேல் என்பதை சாகர் இப்போது நன்கு புரிந்து கொண்டார்.

இதை புரிந்து கொள்ளாத ஆயிரக்கணக்கான சாகர்கள் இன்னமும் நம்மிடமே இருக்கின்றனர்தானே. [தினமலர்]

3) நேர், எதிர் என இருவகை மின்சாரங்களையும் ஒரே கேபிள் வயரில் கடத்தும் புதிய வயரை, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவி கண்டுபிடித்து சாதித்துள்ளார். அவரது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி ராக்கி ஷெனாய். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார். 
 
மின் உற்பத்தி பிரிவில் புதிதாக சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் புராஜக்ட் செய்து வந்தார். அதன்படி, மின்சாரத்தைக் கடத்தும் நேர் (+) எதிர் (&) என்ற இரு கேபிள்களுக்கு பதிலாக ஒரே கேபிளை உருவாக்கினார்.அதில் அனைத்து மின் கம்பிகளையும் உள்ளடக்கி, ஒன்றோடு ஒன்று உராய்வு செய்யும் போது தீப்பற்றி விடாமல் தடுக்க மின்தடை கம்பி ஒன்றையும் நடுவில் உண்டாக்கினார். பின்னர், இந்த கேபிளை ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் சென்று, அங்கு வெல்டிங் மூலம் முறையாக பொருத்தும் பணியை செய்து முடித்தார். 
 
இந்த புதிய கேபிள் வயர் மூலம் 25% அளவுக்கு மின் இழப்பு, செலவு குறைகிறது. பேட்டரி கேபிள்ஸ், பஸ்கள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில் இந்த கேபிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
                                                      

புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவி ராக்கி ஷெனாய் கூறுகையில், ‘‘இந்த கேபிள் வயரை பயன்படுத்தும் போது மின்சாரம் அதிகமாக, அதாவது 14, 15 ஆம்பியர் அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அதிகமாக வருவதால் எந்த ஆபத்தும் இல்லை. 
 
இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைக்காக டெல்லியில் உள்ள கன்ட்ரோலர் காப்புரிமை வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தேன். அதற்கு, மத்திய காப்புரிமை கழகம் சார்பில் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய காப்புரிமைக் கழக மலரில் வெளியாக உள்ளது‘‘ என்றார்.
 
ஒரே வயரில் மின்சாரம் செல்லும் கேபிள் வயரை கண்டுபிடித்த மாணவி ராக்கி ஷெனாயை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், துணைவேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன், துறைத் தலைவர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

நாமும் இந்த மாணவிக்கு எம் வாழ்த்துக்களை பகிர்வோம்!
  [முகநூல்]

10 கருத்துகள்:

  1. மாணவி ராக்கி ஷெனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. சாகருக்கும் பள்ளிக்குழந்தைகள்க்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக் குழந்தைகளுக்கும் மகேந்திரனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஓட்டுப் பட்டையைக் காணாமே?

    பதிலளிநீக்கு
  5. படித்த செய்திகள்தான் இருந்தாலும் பாசிட்டிவ் செய்திகள் எத்தனை முறை படித்தாலும் தவறில்லை...எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்ல செய்திகளுக்கும் ,முக்கியமாக சாகர் குடும்பத்தை அடைந்த மகிழ்ச்சிக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் நல்ல செய்திகள். சாகர் தனது குடும்பத்துடன் இணைந்தது தெரிந்து மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  8. காப்பகத்தில் இருந்து தன் உறவினர்யிடம் சேர்ந்த சகாருக்கு வாழ்த்துக்கள்
    /


    பதிலளிநீக்கு
  9. 1. நல்ல திட்டம். சிறப்பாக செயலாற்றும் மாணவர்கள், ஊக்கத் தரும் ஆசிரியர்கள்!!

    2. நெகிழ்ச்சி

    3. மாணவி ராக்கி ஷெனாய்க்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. மாணவர்களின் நிர்வகத்திரன் பளிச்சிட உதவும் பள்ளிக்கு நன்றி.
    சாகர் பற்றிய செய்திகள் அருமையாய் விவரித்து இருக்கிறீர்கள். பதிவுலகத்தை கூட உபயோகித்திருக்கலாம் என்று தோன்றும்படி எழுதியிருக்கிறீர்கள்.
    மாணவி ராக்கிக்கு ஒரு சல்யுட்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!