வியாழன், 4 ஜூலை, 2013

வெறும் செய்திகள் அல்ல.

                    
இன்று செய்தித்தாளில் பார்த்த, படித்த இரண்டு விஷயங்கள், மனதை தைத்தன. 

ஒன்று, இருபத்து நான்கே வயதான (கன்னடப்பட) நடிகர் ஹேமந்த் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

டாக்டர்கள் கூறிய விவரம்: ஹேமந்த் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் (செயின் ஸ்மோக்கர்). அவருடைய மாரடைப்புக்கு இது ஒரு முக்கிய காரணம். 

அதே செய்திப் பக்கத்தில் உள்ள பெட்டிச் செய்தியில், காணப்படும் விவரம்: ஹேமந்த் தன்னுடைய புகைபிடிக்கும் பழக்கம்தான் இந்த நிலைக்குக் காரணம் என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், உலகத்தோருக்கு ஒரு செய்தியை, இறுதியாக அளிக்கவேண்டும் என்று நினைத்தார், அவ்வாறே செய்தார். 
  
தன்னைக் காண வந்த உறவினர் ஒருவரிடமிருந்து பேப்பரும் பேனாவும் கேட்டுப் பெற்று, அதில் அவர், எழுதிய இரண்டே வார்த்தைகள்: "புகை பிடிக்காதீர்கள்" (Don't smoke) - இந்த விவரங்களைக் கூறியவர் அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் வி எஸ் பிரகாஷ். 

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஹேமந்தின்  மரண வாக்குமூலத்தை ஒவ்வொரு முறையும் புகை பிடிக்கும் முன்பு யோசிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். 
====================

இரண்டாவது செய்தி, மூன்று வயது பெண் குழந்தை பற்றியது. 
இந்தக் குழந்தை, ரிஷிகேஷ் பகுதியில், அண்மையில் நிகழ்ந்த பேரழிவுப் பகுதியில் கடுமையான காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாள். இந்தக் குழந்தைக்கு, 'தான் யார், தன்னுடைய ஊர் எது, பெற்றோர் யார்' என்ற விவரங்களை, சொல்லத் தெரியவில்லை. 

இவளைப் பற்றியோ, அல்லது இவளுடைய பெற்றோர் பற்றியோ விவரம் அறிந்தவர்கள், அவற்றை 0135 - 2726066 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கூறலாம். (இது டேராடூன் தாலுக்கா பேரழிவு கட்டுப்பாடு பிரிவின் தொலைபேசி எண் - District Disaster Control Room, Dehradun). 
   
நம்முடைய நண்பர்கள் எல்லோரும், இந்தப் பதிவினை, உங்கள் வலைப்பதிவு, முகநூல், ட்விட்டர் போன்ற எல்லா சமூகத் தளங்களிலும் நண்பர்களுக்கு இந்தப் பதிவின் லிங்க் கொடுத்தும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
   
இவை இரண்டுமே மிகவும் முக்கியமான செய்திகள். முதல் செய்தி புகை அரக்கனிடமிருந்து அந்தப் பழக்கம் உள்ளவரைக் காப்பாற்ற உதவும். இரண்டாவது செய்தி, ஒரு மழலையின் துயர் துடைக்க உதவும். 
  
நன்றி நண்பர்களே! 
                   

16 கருத்துகள்:

  1. அவசரமான உலகில் அவசியமான செய்திகள்

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே முக்கியமான செய்திகள்...
    இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...
    குழந்தையின் பெற்றோர் கிடைத்து அது நல்லா வாழ பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
  3. இரண்டையுமே பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வருத்தமா இருக்கு. நெருங்கிய உறவினர் ஒருத்தரும் புகை பிடித்தலால் இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்போது நெருங்கிய நண்பர் ஒருத்தரும் அப்படித்தான் இதயம் பாதிக்கப்பட்டு தற்சமயம் முழு ஓய்வில் இருக்கிறார். :((( புகை அவர்கள் பிடிப்பதோடு அல்லாமல் கூட அருகில் இருக்கிறவர்களையும் வலுக்கட்டாயமாகப் பிடிக்க வைக்கின்றனர். தங்கள் உடலை மட்டுமில்லாமல் சுற்றி நிற்பவர்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். பெரெஉந்து நிலையங்களில், ரயிலில் எல்லாம் புகை பிடிப்பவர்களைக் கண்டித்தால் சண்டைக்குத் தான் வருகின்றனர் :))))

    பதிலளிநீக்கு
  5. குழந்தையைப் பற்றிய செய்தியைப்பார்த்தேன். ஆனால் பெற்றோர் விட்டுவிட்டுச் சென்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படியோ குழந்தை அதன் தாய், தந்தையிடம் போய்ச் சேர வேண்டும். அல்லது நல்லமுறையில் வளர்ப்பவர்களிடம் போய்ச் சேர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. புகைபிடிப்பதைப் பற்றி எத்தனை நபர்கள் எடுத்துக் கூறினாலும் கேட்காதவர்களோ அதிகம்.

    இந்தச் சின்னத் தளிருக்கு பெற்றோர்களோ வளர்ப்பவர்களோ கிடைக்க இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அவசர யுகத்தில் இதெல்லாம் கண்டுக்க ஆளே இல்லை என்பதுதான் கொடுமை.

    பதிலளிநீக்கு
  8. இறந்த நடிகருக்கு 27 வயதே என்று செய்தியில் படித்தபோதே வருத்தமாக இருந்தது. ஆனால் செயின் ஸ்மோக்கர் என்பதும், இப்படி எழுதித் தந்தார் என்பதும் இப்போத்தான் அறிந்தேன். பலரும் இப்படித்தான் கடைசி நேரத்தில்தான் திருந்துகிறார்கள். :-(

    குழந்தை நிலைமை - இறைவன் அவளுக்கு பெற்றோருடன் நல்வாழ்வு தரட்டும்.

    பதிலளிநீக்கு
  9. புகை நமக்கு பகை என்று இளைஞர்கள் உணர வேண்டும்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்...

    மூன்று வயது பெண் குழந்தைக்கு பெற்றோர்கள் விரைவில் கிடைக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  11. இரண்டு விஷயங்களும் மன வருத்தம் தருகிறது.
    வாழ வேண்டிய வயதில் மாரடைப்பு என்று கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.
    இதை படிக்கும் புகைபிடிப்பவர்கள் திருந்தினால் நலம்.
    குழந்தையை வளர்க்க நிறைய பேர் முன் வந்ததை செய்திகள் சொல்கிறது.
    பெற்றோரிடம் குழந்தை சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க பிராரத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. காரணம் தெரியவில்லை என்பதாக இருந்தது TOI-ல்.இளம் வயது. தீங்கு எனத் தெரிந்தே பழக்கங்களை விட மறுப்பவர் சிந்திக்க வேண்டும். குழந்தை நலமே பெற்றோருடன் சேர்ந்திடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  13. மனம் கனக்க வைத்த பகிர்வு! அதிலும் புகை பிடிப்பதை நிறுத்த சிலருக்காவது இந்த பதிவு ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும். அண்மையில் தான் அடையாறு புற்று நோய் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் சாந்தா, ஒருவர் சிகிரெட் புகைக்கையில், பக்கத்திலிருப்பவர் அவர் வெளியிடும் புகையை சுவாசிக்கும்போது, அவருக்கும் புற்று நோய் ஏற்படுகிறது என்று சொல்லியிருப்பதைப்படித்தேன். தானும் அழிவதுடன் பிறரையும் நாம் தெரிந்தே அழிக்கிறோம் என்பதை புகை பிடிப்பவர்கள் உணர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு செய்திகளுமே மனதை கனக்க வைத்தது.

    புகைபிடிப்பவர்கள் மனது வைத்து பழக்கத்தை நிறுத்திக் கொண்டால் நல்லது.

    சிறுமி விரைவில் தாய் தந்தையுடன் சேரட்டும்.

    பதிலளிநீக்கு
  15. புகை நமக்குப் பகை என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டிருக்கிறார். மற்றவர்களாவது சீக்கிரம் புரிந்து கொள்ளட்டும்.....

    குழந்தை சீக்கிரம் அவரது தாய்-தந்தையருடன் சேர எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!