திங்கள், 27 ஜனவரி, 2014

திங்க கிழமை 140127 :: சம்பந்திப் பொடி.

              
தலைப்பைப் பார்த்துவிட்டு, 'ஆஹா! இரக்கமில்லாமல் வரதட்சணை கேட்கின்ற சம்பந்திகளை உருக்கி எடுத்து, பொடிப் பொடியாக செய்வது எப்படி ' என்று சொல்லப்போகிறோம் என்று நினைக்காதீர்கள்! 

பொடி விஷயங்களை, நாங்கள் சொல்வதை முதலில் சிறிய அளவில் செய்து பாருங்கள். நன்றாக இருந்தால், உங்களுக்குப் பிடித்தால், பிறகு பெரிய அளவில் செய்துகொள்ளலாம். 

பொருட்கள்:  
   

காம்பு அரிந்து, சுத்தம் செய்யப்பட்ட மிளகாய் வற்றல் கால் கிலோ. 
தனியா : ஐம்பது கிராம். 
தேங்காய் மூடி ஒன்று. (தேங்காயுடன்தான் - வெறும் மூடி வேண்டாம்) 
கறிவேப்பிலை : ஒரு பிடி  (சுமார் ஐம்பது இலைகள்!) 
 புளி: எலுமிச்சம் பழம் அளவுக்கு. 
உரித்த வெள்ளைப்பூண்டு: நூறு கிராம். 
உளுத்தம்பருப்பு ஐம்பது கிராம்.
கடுகு ஒரு டீஸ்பூன். 
பெருங்காயம் : பட்டாணி அளவு.
உப்பு தேவையான அளவு.

* மிளகாய், தனியா இரண்டையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

* தேங்காயைத் துருவி, அதனோடு கறிவேப்பிலையைச் சேர்த்து, ஓர் இரும்புச் சட்டியில் இட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொன் நிறத்திற்குக் கொஞ்சம் அதிகமாகவே வறுத்துக்கொள்ளவும். 

* மிளகாய், தனியா, உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு நன்றாக,அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையோடு, புளி, பூண்டு ஆகியவைகளையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். மிக்சியில் புளி, பூண்டு ஆகியவை நன்றாக அரைபட வேண்டும் என்றால், லேசாக அவைகளை இரும்பு சட்டியில் இட்டு, கொஞ்சமாக வறுத்துக்கொள்ளவும். 

* உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம் - இந்த மூன்றையும் தேங்காய் எண்ணையில் வறுத்து, மிக்சியில் உள்ள பொடியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

* பிறகு, இந்தக் கலவையுடன், ஏற்கெனவே வறுத்த தேங்காய்ப்பூ, கறிவேப்பிலைக் கலவையையும் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
   

அவ்வளவுதான்! சம்பந்திப் பொடி தயார். இந்தப் பொடியை, சூடு ஆறியவுடன், கண்ணாடி பாட்டிலில் பாக் செய்து வைத்துக் கொள்ளலாம். (பொடியை கையால் தொடாமல், கரண்டி / ஸ்பூனால் மட்டுமே எடுக்கவேண்டும். கை பட்டால், பொடியின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும்) கைபடாமல் தயாரித்தால், இந்தப் பொடியின் ஆயுட்காலம், செய்யப்பட்ட நாளிலிருந்து இருநூறு நாட்கள்.   

ஆமாம், இந்தப் பொடியை என்ன செய்யலாம்? 

# வடித்த சாதத்தோடு ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து, நல்லெண்ணெய் / நெய் விட்டு, மோர்க்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 
     

* இட்லி / தோசைக்கு, மிளகாய்ப்பொடி போன்று, எண்ணையோடு சேர்த்துத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

* மோர்சாதத்திற்கு இந்தப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 

* பயணம் செல்பவர்களுக்கு, ஹோட்டலில் இட்லிக்குத் தருகின்ற மூவர்ண சட்டினிகள் பிடிக்கவில்லை என்றால், இதை கையோடு எடுத்துச் சென்று, தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். 
                

16 கருத்துகள்:

  1. இதான் தேங்காய் பொடியா?

    சம்பந்தி பொடி - பெயர் காரணம் தெரியுமா?

    ரெசிபி செய்து பார்க்கத் தோணுது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இந்த பொடியை பூண்டு இல்லாமல் செய்து இருக்கிறேன். பூண்டு போட்டு செய்து பார்க்கிறேன்.
    செய்முறை விளக்கம் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கோமதி அரசு சொல்வது போல் நாங்க பூண்டுஇல்லாமல் தான் செய்வோம். :)))) ஆனால் தேங்காய்ப் பொடினு பேரு. சம்பந்தியை எல்லாம் பொடியாக்கினதில்லை. :)

    பதிலளிநீக்கு
  4. சம்பந்தி(ப் பொடி) என்றால் சும்மாவா...? ஆயுட்காலம் நம் கையில்...!

    உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. திருமணம் முடிந்து சம்பந்திவீட்டாருக்குக் கட்டு சாதம் கொடுக்கும்போது இதைக் கொடுப்பார்களோ. ரொம்ப நன்றாக இருக்கிறது. இருநூறு நாளா.அப்பாடி. செய்துபார்க்கவேண்டும்.பூண்டுதான் கொஞ்சம் இடிக்கிறது****

    பதிலளிநீக்கு
  6. நல்ல குறிப்பு.செய்து பார்த்திடுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நாங்க தேங்காய்ப்பொடியில் தனியா போட மாட்டோம்! இது வித்தியாசமா இருக்கு! ஜோர்!

    பதிலளிநீக்கு
  8. செய்து பார்க்கத் தோணுது.அருமை.

    பதிலளிநீக்கு
  9. பொடி வைத்து மயக்கிட்டீங்களே! அருமையான பொடி! நன்றி!

    பதிலளிநீக்கு

  10. மலையாளத்தில் சம்மந்தி என்றால் துவையல் அதையே dry ஆகச் செய்து வைத்தால் சம்மந்திப்பொடி. சரிதானே...?

    பதிலளிநீக்கு
  11. Nice. A little less garlic for people who don't like strong garlic flavors. Nicely done recipe. Enjoyed the humorous twists.

    பதிலளிநீக்கு
  12. கேரளத்திலிருந்து வந்த வழக்கம் என நினைக்கிறேன். மலையாளத்தில் சம்பந்தி என்றால் சட்னி/துவையல்.....

    நல்ல குறிப்பு. தேங்காய்ப் பொடி அம்மா செய்வார்கள்... பல வருடங்களுக்கு முன்பு சாப்பிட்டது.

    பதிலளிநீக்கு
  13. தேங்காய் பொடி எங்கம்மா கையால் செய்து சாப்பிட்டிருக்கிறேன்... பூண்டு தான் இடிக்கிறது...:))

    பதிலளிநீக்கு
  14. ஆஹா நல்லாருக்கே ..செஞ்சிடறேன் ..என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் .. இந்த பொடி வகைகளை பூண்டு நல்லெண்ணெய் சேர்த்தா மட்டா அரிசியுடனும் ..நெய் சேர்த்தா பொன்னி அரிசியுடனும் சாப்பிட நல்லா இருக்கும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!