புதன், 12 மார்ச், 2014

முதியோர் இல்லமும் கூட்டுக் குடும்பமும் - வெட்டி அரட்டை - 1

                         
கொஞ்சநாள் முன்பு கல்கியில் ஒரு முதியோர் இல்லம் விளம்பரம் கண்ணில் பட்டது.  6 பெரிய நகரங்களில் இருப்பதாக விளம்பரம். தனி காம்பவுண்ட் மைய சமையலகம், ஆரோக்கிய பராமரிப்புச் சேவைகள், விளையாட்டு வளாகம், வீடு தூய்மையாக்கம், நூலகம், போக்குவரத்துச் சேவைகள் பராமரிப்பு, சொத்து மேலாண்மைச் சேவைகள், மின்சாரப் பராமரிப்புச் சேவைகள், 24 X 7 பாதுகாப்பு, இன்னும் என்ன வேண்டும்?

 

படிக்கும்போது பேசாமல் அங்கு பணம் கட்டிவிட்டு சென்று தங்கி விடலாம் என்று ஆசை வருகிறது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அல்லது முதியவரைக் கத்தியால் குத்தி நகை பறிப்பு என்றெல்லாம் செய்தி வருகிறது.
பலருக்கு அவரவர்கள் அருகாமை வீடுகளில் இருப்போர் யார் என்றே தெரிவதில்லை.  அதற்கு இந்த முறை தேவலாம். பேசாமல் தங்களுக்கான அறையில் புத்தகம் படித்துக் கொண்டோ, தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டோ, போரடிக்கும்போது கோவிலுக்கோ, நூலகமோ, நடைப்பயிற்சியோ சென்று வரலாம்.

முன்னர் எனக்கொரு கனவு இருந்தது. சுஜாதா தனது 'கற்றதும் பெற்றதும்' கட்டுரையில் சொன்னது போல படிப்படியாக அப்புறம் அது காணாமல் போனது. பல வருடங்களுக்கு முன்னால் வந்த கனவு.

 

சென்னையில் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் கொஞ்சம் பெரியதாக ஒரு இடம் வாங்கிவிட வேண்டியது. கொஞ்சம் பெரிய அளவில் நிறைய அறைகள் கட்டிவிட வேண்டியது. கிட்டத்தட்ட தனித் தனி போர்ஷன் போல. ஒவ்வொன்றிலும் அவரவர்களுக்கான பிரைவசிகள் பாதிக்கப் படாமல் குடும்பம் குடும்பமாக நம் உறவினர்களே. . ஒவ்வொரு வீட்டிலும் தனித் தனி சமையல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.  தனி டிவி உண்டு. தனி படுக்கை அறைகளும் உண்டு. அல்லது ஒத்துக் கொண்டால் ஆள் வைத்தோ, சுழற்சி முறையிலோ அல்லது கூட்டு முயற்சியிலோ மையமாக ஒரே சமையல். 

நடுவில் பெரிய ஹா...ஆ......ஆ...ல்.  அங்கு(ம்) ஒரு டிவி.  அங்கு எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் கூடும் வசதி. வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் தங்க வசதியான அறைகள்.


காம்பவுண்டுக்குள் மற்றும் மொட்டை மாடியில் தேவையான காய்கறிகள், கீரைகள், பழங்கள் பயிர் செய்து கொள்ளலாம். அல்லது இன்னும் கொஞ்சம் வசதி இருந்தால் அருகிலேயே, அல்லது கொஞ்ச தூரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டு, அங்கும் நெல் உட்பட, வாழை, தென்னை, காய்கறிகள் பயிர் செய்யலாம்.

                                                              

வீட்டில் பெரிய அளவில் பிரமிட் அமைப்பில் ஒரு பெரிய தியான ஹால்.

எல்லோரும் எப்போதும் பார்த்துக் கொண்டே, பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று இல்லை. தேவைப்படும்போது கூடிக் கொள்ளலாம். தனித்தனியாக, ஆனால்  சேர்ந்து இருக்கலாம். பெரிய அபார்ட்மெண்ட்களில் வசிக்கிறோம். ஒரு அவசர நேரத்தில் உடம்பு சரியில்லை என்றால் கூட 'யார் உதவிக்கு வருவார்கள், நமக்கு யாரைத் தெரியும்' என்ற நிலை இருக்காது என்றெல்லாம் எண்ணம் ஓடும்.

சில இடங்களில் நண்பர்கள் ஒரு குழுக்களாகச் சேர்ந்து இடம் வாங்குகிறார்கள். ஆனால் அப்புறம் அவரவர்கள் விற்று விட, எத்தனை பேர் சேர்ந்து ஒரு இடத்தில் வசிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. அப்படியே இருந்தாலும் பக்கத்துப் பக்கத்து வீடுகள்தானே... நான் சொல்வது ஒரு கட்டிடத்துக்குள்... ஒரு காம்பவுண்டுக்குள்.
இந்தக் கனவு நடைமுறையில் சாத்தியம் என்பது மிகக் கஷ்டம்தான். அதனால்தானே கனவு என்றே சொல்கிறேன்! எனக்கிருந்த இதே கனவு எனக்கு முன்னரே இதே போல என் மாமாவுக்கும் இருந்தது என்பது அப்புறம் பேசியபோது தெரிந்தது.

    

இது அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தைப் போலத்தான். அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தில் சகோதரர்கள் குடும்பம் அவரவர்கள் மகன்கள், மருமகள்களோடு, பேரன், பேத்திகளோடு சேர்ந்து வாழ்ந்த காட்சிதான். இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. காணாமல் போய்விட்டது.

இப்போதும் இருக்கலாம் எங்கேனும் இதுபோன்ற கூட்டுக் குடும்பங்கள்.  அப்படி இருந்தால், வாழ்க அவர்கள்................

- தொடரும்  -
                   

28 கருத்துகள்:

  1. நெல்லையில் கோட்டை பிள்ளைமார் என்ற ஒரு சமூகம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து (கோட்டையிலிருந்து) இரு கோஷ்டிகளாக பிரிந்து வந்து அதில் ஒரு கோஷ்டி நெல்லை NGO காலனியில் 1980களில் ஒரே காம்பெளண்டில் 10 வீடுகள் கட்டி குடியேறினார்கள். இன்றும் அப்படியே வாழ்கிறார்கள்.கல்யாணம் மற்ற விஷேஷங்கள் நடுவில் இருக்கும் க்ரெவுண்டில் நடக்கும். அதில் இரண்டொரு விஷேசத்தில் 90-களில்
    கலந்து கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கும்பகோணம் பக்கத்தில் என்று நினைக்கிறேன். கோவிந்தபுரம் என்ற இடத்தில் இதைபோல இருப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.

    நாம் ப்ளாகர்கள் எல்லோரும் சேர்ந்து இது போல இருக்கலாமா?
    ப்ளாகர்புரம்/ ப்ளாகர் காலனி என்று பெயர் வைத்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
  3. இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது தம்பிகளா!

    பதிலளிநீக்கு
  4. சொர்க்கமான கனவு தான்...

    கூட்டுக் குடும்பங்கள் இருந்தால், வளமுடன் வாழ்க...!

    ரஞ்சனி அம்மாவின் கருத்து அசத்தல்...!

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு. அருமையான கனவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கனவு சிறப்பானது! மெய்ப்பட்டால் நன்றாகத்தான் இருக்கும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நல்ல கனவு..!கனவுதானே. நிஜமாக இருந்தால்தானே சாத்துயக் கூறு பற்றிப் பேச. இதில் உங்கள் ஆதங்கம் தெரிகிறது. நல்ல மனம் வாழ்க. நாடு போற்ற வாழ்க.

    பதிலளிநீக்கு
  8. எனக்கும் இதே போல் கனவு இருந்தது. இன்னும் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாகாது என்றே நினைக்கிறேன். நவக்கிரகங்கள் போல் நிற்கும் உறவினரை எப்படி சேர்ப்பது சொல்லுங்கள்.
    ஆனாலும் இது ஒரு இனிய கனவு தான்.

    பதிலளிநீக்கு
  9. நாங்களும் இதை ஒரு நாலைந்து வருடங்கள் முன் பதிவுகளில் பகிர்ந்து கொண்டோம். ரஞ்சனி சொல்வது போல. ஆனால் இங்கில்லை. ரிஷிகேசத்தில். முதுமை வந்தாலும் நட்பு தொடர்ந்தால் நன்றாகத்தான் இருக்கும். உறவுகள் சேர்வது கொஞ்சம் சிரமமே. உங்கள் கனவு இனிமை. எப்பொழுதும் நட்புகள் உதவுவது போல யார் வருவார்கள். இவர் திடீரென விழுந்தபோது என் செயல்கள் அத்தனையும் ஸ்தம்பித்தன. பக்கத்து எதிர்த்த வீட்டு சிறியவர்கள் வந்துதான் கை கொடுத்தார்கள். மறக்க முடியுமா.

    பதிலளிநீக்கு
  10. //சென்னையில் ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் கொஞ்சம் பெரியதாக ஒரு இடம் வாங்கிவிட வேண்டியது. கொஞ்சம் பெரிய அளவில் நிறைய அறைகள் கட்டிவிட வேண்டியது. கிட்டத்தட்ட தனித் தனி போர்ஷன் போல. ஒவ்வொன்றிலும் அவரவர்களுக்கான பிரைவசிகள் பாதிக்கப் படாமல் குடும்பம் குடும்பமாக நம் உறவினர்களே. . ஒவ்வொரு வீட்டிலும் தனித் தனி சமையல் செய்து கொள்ளவும் வசதி உண்டு. தனி டிவி உண்டு. தனி படுக்கை அறைகளும் உண்டு. அல்லது ஒத்துக் கொண்டால் ஆள் வைத்தோ, சுழற்சி முறையிலோ அல்லது கூட்டு முயற்சியிலோ மையமாக ஒரே சமையல்.

    நடுவில் பெரிய ஹா...ஆ......ஆ...ல். அங்கு(ம்) ஒரு டிவி. அங்கு எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் கூடும் வசதி. வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் தங்க வசதியான அறைகள்.//

    இப்போவும் ராஜஸ்தான், குஜராத்தில் பாரம்பரியத்தை விடாமல் பின்பற்றும் சில குடும்பங்களில் அண்ணன், தம்பிகள் சேர்ந்தே வாழ்கின்றனர். தொழில் ஒன்றாக இருக்கும். வீட்டுப் பெரியவரான தந்தை, தாய்க்கு ஒரு படுக்கும் அறை, உட்காரும் அறை சமையலறை அதே போல் மற்றப் பிள்ளைகளுக்கும். பொதுவான கூடம். தாய், தந்தை விரும்பினால் சமைத்துச் சாப்பிடுவார்கள். இல்லை எனில் ஒரு நாளைக்கு ஒரு பிள்ளை வீட்டில் எனச் சாப்பிடுவார்கள். பணம் பட்டுவாடா எல்லாம் தந்தை இருக்கும்வரை அவர் கையில். அவர் இறந்ததும் மூத்த மகன் பொறுப்பில். அவரவர் குடும்பத் தேவைக்கான பணத்தைக் கொடுப்பார்கள். மீதப் பணம் சேமிக்கப்பட்டு அவசரத் தேவைகள், திருமணங்கள், விசேஷ நிகழ்வுகளுக்கு எடுப்பார்கள். அதே போல் பெண்ணுக்குக் கல்யாணம் என்றாலும் பிள்ளை வீட்டிலும் பெண் வீட்டிலும் சேர்ந்தே மொய் வாங்குவார்கள். நம் பக்கம் போல் பெண்ணுக்குத் தனியாக மொய் எழுதுவது, பிள்ளையின் சொந்தக்காரர்கள் அவருக்குத் தனியாக மொய் எழுதுவது என்றெல்லாம் கிடையாது. வரும் மொத்தப் பணத்தில் அந்தத் தம்பதியினர் தேன் நிலவு செல்ல, குடித்தனம் நடத்தத் தேவையான பொருட்கள் வாங்கி அவர்களிடமே கொடுத்துவிடுவார்கள். இது இப்போதும் நடைபெற்று வரும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  11. கோவைக்கு அருகிலுள்ள தபோவனத்துக்குச் சென்று தங்கலாம் என எங்கள் இருவருக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. ரஞ்சனி சொல்வது போல் கோவிந்தபுரத்தில் எங்க உறவினர்களும் இருக்கின்றனர். ஆனால் தனித்தனி வீடுகளில் தான். பொதுவாக ஒரு வீட்டில் சமைத்து அவரவர் தேவைக்கு வாங்கிக் கொள்கின்றனர். யார் வீட்டுக்கு விருந்தாளி வருகின்றனரோ அவர்கள் முன் கூட்டியே சொல்ல வேண்டும். இது குறித்து நம்ம அப்பாதுரைக்கு இன்னும் நன்றாகத் தெரியலாம்.

    பதிலளிநீக்கு
  12. அன்பர்களே ! பிறந்த சிசு பாலுக்காக அழுகிறது !குழந்தை உணவுக்காக அழுகிறதூ ! சிறுவன் கல்விக்காக அழுகிறான் ! வளர்ந்தவன் வேலைக்காக அழுகிறான் ! குடும்பஸ்தன் தன் வாரிசுக்காக அழுகிறான் ! வயோதிகன் தன் பாதுகாப்புக்காக அழுகுறான் ! இவை அத்துணையும் கொடுக்க வேண்டிய நாமும் அழுகிறோம் ! அநதையாக ஒருவன் விட்டு விடப்படாது என்பதற்காக barial society ஐ உருவாக்கிய சமூகம் நம்முடையது ! ஒன்று பட்டு நின்றால் நம்மாலும் முடியும் ! அடிப்படையில் சாதி,மத பேதங்களை விட்டோழித்தோமானால் முடியும் ! ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கனவு. சாத்தியப்பட்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசமான ஐடியா தான்.நடைமுறையில் இருந்தால் சுவாரசியமாகத் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. ப்ளாக்கர் காலனி நல்ல ஐடியா ரஞ்சனி அம்மா...!

    பதிலளிநீக்கு
  16. தூர இருந்தா தான் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி ஸார்!

    பதிலளிநீக்கு

  17. @அமுதா கிருஷ்ணா
    80 களிலேயேவா... அட! நல்ல தகவல்.

    @Ranjani Narayanan
    பிளாக்கர் காலனி...! நல்ல யோசனை. இப்பவே நம் வீடு பக்கத்தில் தேடிப்பார்த்தால் நான்கைந்து ப்ளாக்கர்கள், முகநூல் நண்பர்களாவது தேறுவார்கள் போல!

    @Chellappa Yagyaswamy
    அதுதான் சோகமே ஸார்... தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

    @DD
    நன்றி.

    @ரத்னவேல் நடராசன்
    நன்றி ஸார்.

    @'தளிர்' சுரேஷ்
    நன்றி.

    @G.M. Balasubramaniyam
    நனவாக மாற்ற முடியுமா என்ற ஆசைதானே...

    @rajalakshmi paramasivam
    உண்மைதான். ஆனால் அதற்குத்தான் தனித்தனி போர்ஷன் கட்டி விடுகிறோம். விரும்பும்போது பார்த்துக்கொள்ள, பேசிக்கொள்ள...

    @வல்லிசிம்ஹன்
    முன்னரே யோசித்தது பதிவர்கள் அல்லது நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இருக்கவா அம்மா... நல்ல மனைவி, நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம் என்று சொல்வது போல உதவும் உள்ளம் கொண்ட நண்பர்கள் அமைவதும் தெய்வீகம்தான். என் அண்ணி மறைந்தபோது அங்கும் உறவுகள் வரும்வரை நண்பர்கள் குடும்பம் துணை நின்றது.

    @Geetha சாம்பசிவம்
    ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களில் இப்படி இருப்பது நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். சில இந்திப் படங்களில் அப்படி இருப்பது போலக் காட்டுவார்கள் பார்த்திருக்கிறேன். நம் தமிழ்ப் படங்களில் இல்லாததா! பாமா விஜயம் படத்தில் மூன்று சகோதரர்களும் தங்கள் சம்பளத்தை பாலையா கையில் தருவது போல காட்சி வருமே...! :)))

    //கோவைக்கு அருகில் தபோவனம்// இடம் குறிப்பிடாமல் முன்னரே ஒரு பதிவில் கூட நீங்கள் இந்த எண்ணம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

    @Kashyapan
    நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கைதான் ஆறுதல். இப்போது வந்திருக்கும் பின்னூட்டங்களிலிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஏற்கெனவே இருப்பது தெரிய வருகிறதே... தெரியாமல் இன்னும் எத்தனையோ...

    @ராமலக்ஷ்மி
    நன்றி.

    @டி.என் முரளிதரன் - மூங்கில்காற்று
    நன்றி TNM

    @கோவை ஆவி
    உண்மை ஆவி. ஆனால் சேர்ந்து ஒரே இடத்தில் இருந்தாலும் ப்ரைவசி பாதிக்கப் படாமல்தானே இருக்கப் போகிறோம்!

    பதிலளிநீக்கு
  18. சிறந்த பகிர்வு
    தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. சிறந்த பதிவு.

    வியாபாரம், விவசாயம் செய்தால் தான் கூட்டுக் குடும்பம் சாத்தியம். அதைக்கூட ஒற்றுமை இல்லாமல் தனி தனியாக செய்பவர்கள் உண்டு.

    கூடி வாழந்தால் கோடி நன்மைதான்.

    என் மாமனார் இப்போது திடீரென்று இறந்த போது சொந்தம் வரும் முன் அக்கம் பக்கத்து நட்புகள் தான் எங்களுக்கு உதவியது.

    கோவையில் எல்லா வசதிகளும் உள்ள அருமையான அமைதியான ஒரு இடம் இருக்கிறது ’தர்பாரி இல்லம்’ என்று நினைக்கிறேன் இருக்கிறது.

    ஆனால் கொஞ்ச பேர் தான் இருக்க முடியும். மொத்த உறுப்பினர்களே 27 பேர் தான். நூலகம், மருந்தகம், சாத்வீகமான,சுகாதாரமான சமையல் அறை, சாப்பாட்டு அறை . எல்லா வசதிகளும் கொண்ட தங்கும்அறை. என்று இருக்கிறது.

    அதை மாடலாக கொண்டு ரஞ்சனி அவர்கள் சொல்வது போல் நமக்கு
    ப்ளாக்ர்ஹோம் அமைத்துக் கொள்ளலாம்.

    கூட்டுக் குடும்பங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  20. சில இடங்கள் இது போல இருக்கின்றன....

    இன்றைய நகர வாழ்க்கையில் எதிர் வீட்டில் இருக்கும் நபரையே தெரியாது வாழ்த்து கொண்டிருக்கிறோம்......

    பிளாக்கர் காலனி.... நல்ல ஐடியா.!

    பதிலளிநீக்கு
  21. ஊர்ப்புறங்களில் கூட்டுக் குடும்பமாக வாழாவிட்டாலும் அக்கம் பக்கதுக்காரர்களாக வாழ்கிறார்கள்.. தென்காசியில் நாங்களும் அப்படி வாழ்ந்தவர்கள்/பவர்கள் தான்... அதனால் தான் பெருநகரம் சமயங்களில் பிடிக்காமல் போய்விடுகிறது..

    பதிலளிநீக்கு
  22. சின்ன கிராமம் போன்ற அமைப்பில் வீடுகள் அமைத்து அதில் தங்கலாம். சமையல் மட்டும் பொது அடுக்களையில். சாப்பாட்டுக்கூடமும் பக்கத்தில் இருக்கணும்.

    நல்லதா ஒரு கோவில் பொதுவாக.

    மாலையில் அனைவரும் கோவிலில் கூடலாம்.
    இன்னும் என்னென்னவோ மனசில் ஓடுது.

    கனவு காண எனக்குச் சொல்லித் தரணுமா என்ன:-))))

    பதிலளிநீக்கு
  23. கோவைக்கருகில் தபோவனத்தில் நீங்க சொல்றாப்போல் தான் இருக்கு துளசி. சமையல் பொதுவில் தான். வீடாகவும் வாங்கிக்கலாம். ஒத்திக்கு(குத்தகை?) எடுத்துக்கலாம். அல்லது இரண்டு படுக்கை கொண்ட அறை போதும்னா அப்படியும் வாங்கிக்கலாம். ஒரு மாசம் இருந்து தங்கிப் பார்க்கலாம்னா அதுக்கே 2 லக்ஷம் ஆகுது. அதான் யோசனை. தெரிஞ்சவங்க ஒருத்தங்க இன்னொருத்தரோட கெஸ்டாப் போகப் போறாங்க. அவங்க போயிட்டு வந்து சொல்லட்டும்னு பார்க்கிறோம். எங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரும் அங்கே இல்லை! :))) இல்லாட்டி கெஸ்டா இரண்டு நாளோ, ஒரு வாரமோ இருந்துட்டு வரலாம். :))))

    பதிலளிநீக்கு
  24. ஒரு மாசம் தங்க 2 லட்சமா... அடேங்கப்பா...

    துளசி மேடம்... சின்ன கிராமம் போன்ற அமைப்பில் என்றால் உறவுகளுடனா, புதிய நண்பர்களுடனா..

    சீனு நீங்களும் கிட்டத்தட்ட இதையேத்தான் சொல்லியிருக்கீங்க..

    கோமதி அரசு மேடம், கீதா மேடம் சொல்றதும் நீங்கள் சொல்றதும் ஒரே இடமா?

    ஜீவலிங்கம் காசிராஜலிங்கம், வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. கோமதி அரசு சொன்னது குறித்து நான் கேள்விப்பட்டது இல்லை. அது வேறு, இது வேறு. நான் சொல்வது கிட்டத்தட்ட முதியோர் இல்லம்னே சொல்லலாம். :)))) செரீன் மாதிரி! :))))

    பதிலளிநீக்கு
  26. கீதா,

    எங்களுக்கு ரொம்பவே நண்பர்களான ஒரு தம்பதிகள், இப்போ 6 வருசமா கோவைக்கருகில் (20 கிமீ) நானா நானி என்ற ரிட்டையர்மெண்ட் வில்லாவில் இருக்காங்க.

    நல்ல வசதியா இருக்குஞுதான் சொன்னாங்க. விருந்தினர்கள் அங்கே வந்து சிலநாட்கள் தங்கிக்கலாமாம்.

    அடுத்த இந்தியப்பயணத்தில் கோவை போய் அவர்களை சந்திக்கிறோம்.

    வசதி எல்லாம் எப்படி இருக்குன்னு அப்புறம் சொல்வேன்:-)

    ஸ்ரீராம்,
    உறவுகளுடந்தான்...... நமக்கு நண்பர்கள் எல்லாம் உறவுகளில்லையோ!!!

    பதிலளிநீக்கு
  27. ஹை! என்னுடைய யோசனைக்கு நிறைய வோட்டுகள் விழுந்திருக்கிறதே!ரிஷிகேசத்தில் என்றால் நான் ரெடி, வல்லி.

    முதியோர் இல்லம் என்பதும் இப்போது காஸ்ட்லி தான் ஸ்ரீராம்.
    சோளிங்கநல்லூரில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் எங்கள் உறவினர் ஒரு பெண்மணி இருக்கிறார். கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். எப்போதும் கூடவே ஒரு ஆள் இருக்கவேண்டும். இன்னும் ஒரு லட்சம் கூடுதல். கூடப் பிறந்தவர்கள் அமெரிக்காவில்.

    கையில் காசு இல்லையென்றால் முதியோர் இல்லமும் நமக்கு இல்லை!

    பிள்ளைகளுடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போவதுதான் உத்தமம். கூடவே 'சீக்கிரம் இரங்கு' என்று கடவுளிடம் கோரிக்கை வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  28. /நானா நானி என்ற ரிட்டையர்மெண்ட் வில்லா/

    பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இரண்டு வருடம் முன் அங்கே வீடு வாங்கிச் சென்றார்கள். வில்லாவும் உண்டு. க்ரவுண்ட்+2 பில்டிங்கில் ஃப்ளாட்டும் உண்டு என சொன்ன நினைவு. சமீபத்தில் அவர்களைச் சந்தித்த போது வசதிகளைப் பற்றி மன நிறைவோடு சிலாகித்துச் சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!