புதன், 23 ஏப்ரல், 2014

திருவாரூர்


தூரத்திலிருந்து பார்க்கும்போதே மனத்தைக் கொள்ளை கொண்டது கோவிலின் தோற்றம். பைபாஸ் செய்து சென்று விடலாமென்றும் பேச்சு இருந்தது. அப்புறம் மனம் மாறி கோவிலுக்குச் சென்றோம்.

                                                                   


9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்கும் தியாகராஜர் கோவிலைப் பார்க்க எங்களுக்குக் கிடைத்த நேரம் ஜஸ்ட் ஒரு மணிநேரம் மட்டுமே.
                                                     
அதுவும் அரைமணியில் வந்துவிடுங்கள், கிளம்பிடுவோம் என்று சொல்லப்பட்டு, உள்ளே சென்று வேகமாகத் திரும்பிவரவே ஒரு மணி நேரமானது.

                                                            
 
கேமிரா வெளியே எடுக்க நேரமில்லாமல் கொடுக்கப்பட்ட குறைந்த அவகாசத்தில் கோவிலைப் பார்க்க உள்ளே ஓடினோம். உண்மையில் நிதானமாகப் பார்க்க்க வேண்டுமானால், முழுதும் பார்க்க ஒருநாள் போதாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

                                              
 
கேமிரா இல்லாததால் அலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் திருப்திப் பட்டுக் கொண்டோம்.



தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனமும் செய்யவேண்டும் என்று படித்தேன். ஊர் பெயர் மட்டும் பார்த்துத் தாண்டிச் சென்றோம்!

நாங்கள் போன அன்று பிரதோஷம் வேறு. ஒரே கூ.....ட்டம். எனவே அந்தப் பக்கம் செல்லவில்லை. ஒருபக்கக் கோவிலைப் பார்க்காமல் பாதி கோவில் அதுவும் அவசர அவசரமாக, ஓட்டமும் நடையுமாகப் பார்க்கவே ஒருமணிநேரம் பிடித்தது.
அம்மன் சன்னதியின் பின்னால் உள்ள சுவற்றில் காத்து வைத்துக் கேட்டால் வீணையொலி கேட்கும் என்று சொல்லி என் ஒரு மாமா சுற்றிச் சுற்றி வந்து சுவரில் காதை வைத்துக் கேட்டு எங்களையும் கேட்கச் சொன்னார்.
நான் சுவரில் காது வைத்ததும் "இங்க வந்துடு செல்லம்... பேசலாம்" என்று குரல் கேட்டது. திகைத்துப் போய் மாமாவைப் பார்க்கத் திரும்பினால் அருகில் ஒரு பெண் அலைபேசியில் சிறு குரலில் பேசியபடி தாண்டிச் சென்றாள். மறுபடி மறுபடி காது வைத்துக் கேட்டும் ஒன்றும் கேட்காததால், வீணையொலி கேட்க என் பாஸுக்கு அலைபேசினேன். (உண்மையில் தினம் ஒரு கோவில் செல்வது என் பாஸ்தான். அவரில்லாமல் நான் மட்டும் சென்றிருந்ததால் இதுமாதிரிக் கோவில்கள் பார்ப்பதை அவரிடம் அவ்வப்போது வர்ணனை செய்துகொண்டே இருந்தேன்)

மீண்டும் ஒருமுறை இந்தக் கோவில் பார்க்க என்று மட்டுமே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.
                                                        
 
அடுத்தது கமலாலயம். திருக்குளத்தைப் பார்த்ததுமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தத்  திருக்குளத்தில் ஒரு படகில் அமர்ந்து சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் அப்பா, அம்மாவின் ஃபோட்டோ பார்த்துக் கொண்ருந்தது நினைவுக்கு வந்தது. அவர்கள் திருமணமான புதிதில் இங்கு வந்து எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளைப் புகைப்படம்.
                                               
 
தண்ணீர் நிறைந்து நின்ற திருக்குளத்தின் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. தெப்போற்சவம் நடைபெறும் நாளில் அங்கு நடக்கும்/நடந்த மகாராஜபுரம், எம் எஸ் கச்சேரிகள் பற்றி மறுபடி ஒரு முறை பேசினோம்.
                                                   

அப்புறம் கிளம்பிதான் மன்னார்குடி சென்றோம்!

20 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    தங்களின் பதிவின் வழிஇறைதர்சனம் கிடைத்தது போல ஒரு உணர்வு... வாழ்த்துக்கள் ஐயா.

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    தங்களின் பதிவின் வழிஇறைதர்சனம் கிடைத்தது போல ஒரு உணர்வு... வாழ்த்துக்கள் ஐயா.

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நம் கோவில்கள் எல்லாமே பெரிய கோவில்கள்தான். என் அம்மா இங்கு பிறந்ததால் அம்மாவுக்கு கமலம் என்று பெயர் வைத்தாராம் எங்கள் தாத்தா, இந்த கமலாலய(குள)த்தை நினைத்துக் கொண்டு.

    அங்கெல்லாம் போனால் ஒரு பதினைந்து நாளாவது இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லாக் கோவில்களையும் நின்று நிதானமாக சேவிக்க முடியும். இல்லை, திரும்பத்திரும்ப போகவேண்டும்.

    அடுத்த முறை எங்கள் ஊருக்கும் (திருக்கண்ணபுரம்) போய்விட்டு வாருங்கள். அந்த ஊரில் கிடைக்கும் அமைதி வேறெங்கும் கிடைக்காது!

    பதிலளிநீக்கு
  4. பத்து வருசத்துக்கு முன் வந்தது. மீண்டும் வர ஆசையை தூண்டுது உங்கள் படங்களும், பதிவும்...,

    பதிலளிநீக்கு
  5. கமலாலயக் குளத்தைப் பார்த்ததும் தில்லான மோகனாம்பாள் நினைவுதான். அப்புறம்தான் சிவனார் முகம். அப்பா அம்மா போட்டோ போட்டிருக்கலாமே ஸ்ரீராம். @ ரஞ்சனி நீங்க ஸ்ரீரங்கம் இல்லையா. கண்ணபுரமா. எனக்கும் கண்ணபுரம் குளமும் அதில் அடிக்கும் அலைகளும் கோபுரமும் நினைவில் வந்தாடியது. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள்.. விவரங்கள் கோவிலின் பிரமாண்டத்தை உணர வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. //வீணையொலி கேட்க என் பாஸுக்கு அலைபேசினேன். //

    ஹிஹிஹி, அவங்களுக்கு வெயிலுக்கு இதமா இருந்திருக்கும், இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. அப்பாடா, இன்னிக்கு வம்புக்கு நீங்க மாட்டினீங்க. இப்போப் பதிவு குறித்து!

    நாங்களும் அவசரமாகவே பார்க்க நேர்ந்தது திருவாரூரை. உண்மையில் மிகவும் திட்டமிட்டுச் சென்ற பயணம், எதிர்பாராமல் எட்டுக்குடியில் சநைச்வரர் சந்நிதியில் விளக்கு வைக்கப் போன ரங்க்ஸ் வழுக்கி விழுந்து எக்கச்சக்கமாய் அடிபட்டுவிட்டதால் பயணம் பாதியிலேயே நின்றுவிட்டது. திருவாரூரை விடக் கூடாது அங்கே மட்டும் ஒரு அவசரப் பார்வை பார்த்தோம். :(

    பதிலளிநீக்கு
  9. 97 ஆம் வருஷம் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளை தரிசிக்க எங்க பொண்ணோடு சென்றிருந்தேன். இன்னமும் அவளை அழைத்துச் சென்று பிரார்த்தனையை முடிக்கவில்லை. குளமும், குளத்தைச் சுற்றிய அக்ரஹாரமும், அங்கிருந்த கோவில் மடப்பள்ளியும், அதில் கொடுத்த தோசையும், புளிக்காய்ச்சலும் இன்னமும் நினைவில் இருந்து மங்காமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. http://aanmiga-payanam.blogspot.in/2010/02/5.html

    திருவாரூர் குறித்து எழுதியவற்றை மேற்கண்ட சுட்டியில் காணலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மீண்டும் ஒருமுறை இந்தக் கோவில் பார்க்க என்று மட்டுமே வந்து பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது.

    அப்படியே திருவாருர் தேரும்....

    பதிலளிநீக்கு
  12. @வல்லி, நான் பிறந்தது ஸ்ரீரங்கம். மாமியாரின் ஊர் திருக்கண்ணபுரம். அதனால் இரண்டையும் எங்கள் ஊர் என்றே சொல்லுவேன்!

    பதிலளிநீக்கு
  13. 2012 ம் வருடம் ஒரு இரண்டு மணி நேரம் இந்த கோயிலை சுற்றிவந்தோம்! அதுவே போதவில்லை! மிகப்பிரம்மாண்டமான கோயில் மிகப் பெரிய குளம் என பிரம்மிப்பில் இருந்து மீள முடியவில்லை! மீண்டும் ஒரு சமயம் சென்று தரிசிக்க வேண்டும்.நாங்கள் சென்ற போது திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது இன்னும் முடியவில்லை என்பது தங்களின் புகைப்படத்திலிருந்து அறிய முடிகிறது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. திருவாரூர் கோவிலுக்குள்ளே இரண்டுபாடல் பெற்றஸ்தலம் இருக்கிறது.
    1.புற்றிடம் கொண்டார் எழுந்தருளிய பூங்கோயில்.

    2.நமிநந்தி அடிகள் நீரால் விளக்குஎரித்த
    திருவாரூர் அரநெறி தனி பாடல் பெற்ற ஸ்தலம்.

    மூன்றாவது கோவில் கீழவீதியில் தேர்நிலைக்கு அருகில் மற்றொரு பாடல் பெற்ற கோவில் இருக்கிறது. ”பரவையுள்மண்டளி” அந்த கோவிலின் பெயர்.

    தேர்திருவிழா ஒருமுறை பார்த்து இருக்கிறோம்.

    ஆனி மாதம் என்று நினைக்கிறேன் தியாகராஜர் பாத தரிசனம் செய்து இருக்கிறேன்.திருவாரூர் கோவிலில் தான் முன் மண்டபத்தில் பார்த்து இருக்கிறேன்.
    விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் என்று இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
    உங்கள் பெற்றோர்களின் பழைய படத்தை போட்டு இருக்கலாம் பதிவில்.




    பதிலளிநீக்கு
  15. காலம்பர இருந்த அவசரத்தில் திருவாரூர்ப் பதிவுக்கான சுட்டியைக் கொடுக்காமல் திருப்புறம்பயம் கோவிலுக்கான சுட்டியை அளித்திருக்கிறேன். இதோ திருவாரூர்க் கோவில் பதிவுகளுக்கான சுட்டி இங்கே.
    http://aanmiga-payanam.blogspot.in/2010/02/blog-post_15.html

    எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! :))))

    பதிலளிநீக்கு
  16. இதுவரை திருவாரூருக்குப் போனதில்லை. போகவேண்டும்...

    பதிலளிநீக்கு

  17. இரு முறை சென்றிருக்கிறோம் . முதல் தடவை போனபோது அங்கே யாரோ இறந்து விட்டதால் சன்னதி மூடி இருந்தது கமலாலயம் மட்டும் பார்த்துத் திரும்பினோம். இரண்டாம் முறை சாவகாசமாகப் பார்த்தோம் தியாகராஜரின் தேர் சக்கரங்களுக்கு எங்கள் bhel-லிலிருந்து ஹைட்ராலிக்ஸ் ப்ரேக்ஸ் பொருத்தப் பட்டு தேரோட்டம் நிகழ்ந்தது தெரியும். ஆகவே அந்தத் தேரைக் காண ஆவல் அதிகமாயிருந்தது. ஆனால் என்ன சோகம் தேர் அக்கு வேர் ஆணிவேராகப் பிரிக்கப்பட்டுக் கிடந்தது கோவிலைப் பற்றி இரரா மேடம் எழுதிய பதிவொன்றில் தேர் ஓடுகிறதா என்று கேட்டுப் பின்னூட்டம் எழுதிய நினைவு. சரி. இப்போது தேர் சரியாகிவிட்டதா தேர் ஓட்டமுண்டா.?

    பதிலளிநீக்கு
  18. ஆம் அம்மா அப்பா படத்தைப் போட்டிருக்கலாம்.
    கைத்தொலை பேசியானாலும் படங்கள் நன்றாக இருந்தது.
    பதிவிற்கு நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  19. அலைபேசியில் எடுத்த படங்கள் பார்க்கும்போதே இங்கே செல்ல வேண்டும் எனத் தோன்றிவிட்டது. இம்முறை தமிழகம் வரும்போது செல்ல வேண்டும்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!