செவ்வாய், 9 செப்டம்பர், 2014

கல்யாணி ஏன் சிரித்தாள்? 02

           
முதல் & முந்தைய பகுதி சுட்டி இங்கே: மங்கா 
           
"விஸ்வம்; விஸ்வநாதன்."
          
"இந்த ஊரா?"
           
"இல்லை." 
         
"எந்த ஊரு?"
          
"உமாமகேச்வரபுரம்" 
          
"எப்படிப் பழக்கம்? 
               

"போன வருஷம் இங்கே எங்க தெருவுல நடந்த என் ஃபிரெண்டின் அக்கா கல்யாணத்திற்கு வந்திருந்தார். அவர்தான் மாப்பிள்ளைத் தோழன்." 
                
"எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?"
             
"கல்யாண வீட்டில் என்னைப் பார்த்ததுமே, நாந்தான் தன்னுடைய எதிர்கால மனைவி என்று தோன்றிவிட்டதாம். முதலில் என் ஃபிரெண்டின் அக்காதான் என்னிடம் வந்து சொல்லி, என்னுடைய சம்மதத்தைக் கேட்டாள்."
              
"யார், என்ன என்று தெரியாமலேயே நீ சம்மதம் சொன்னாயா?" 
                 
"இல்லை மா....... அம்மா. முதலில் நான் சொன்னது, இதெல்லாம் எனக்கு வேண்டாம் - என் அப்பாவுக்குத் தெரிந்தால், முதுகுத் தோலை உரித்துவிடுவார் என்றுதான்."
           
"அப்புறம்?"
          
"அவருடைய நண்பர்கள், என் ஃபிரண்டு எல்லோரும் சேர்ந்து என்னிடம் பேசி, என்னுடைய சம்மதத்தை அவரிடம் சொன்னார்கள். பிறகு அவர்கள் எல்லோரும் சுற்றி இருக்கும்பொழுது அவர் என்னிடம் பேசினார். தான் உமாமகேச்வரபுரம் பண்ணையாரின் மகன் என்றும், ஒரு அக்கா, ஒரு தங்கை என்றும் அவர்களுக்குக் கல்யாணம் ஆனவுடன், எங்கள் காதலைப் பற்றி அவங்க அம்மா அப்பாவிடம் சொல்லி, அவர்கள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்வதாயும் கூறினார். என்னுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லோரும் என்னுடைய அப்பாவிடம், சமயம் வரும்பொழுது பக்குவமாக எடுத்துச் சொல்லி, கல்யாணம் நடக்க உதவுவதாகச் சொன்னார்கள்."
               
"அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவே இல்லையா?"
             
"இல்லை" 
            
"அப்பிடீன்னா இப்போ அவர் எப்படி இருக்கார், என்ன செய்துகொண்டிருக்கார் என்றெல்லாம் உனக்குத் தெரியாதா?" 
           
"தெரியும். என்னுடைய ஃபிரெண்டின் அக்காவுக்கு, உமாமகேச்வரபுரத்தில் பண்ணையார் வீட்டுத் தெருவுக்குப் பக்கத்துத் தெருவில் இருக்கின்ற வீடுதான் புகுந்த வீடு. விஸ்வம் அவருடைய நண்பரைப் பார்க்க அடிக்கடி அங்கே வருவார். ஃபிரெண்டின் அக்கா பிறந்த வீட்டிற்கு வாரா வாரம் கடிதம் எழுதுவார். அந்தக் கவரில் என் பெயர் போட்டு தனியாக ஒரு கடிதம் இருக்கும்.  அது எனக்கு அவர் எழுதிய கடிதம். அதில் ஒவ்வொரு வாரமும் என்னை விசாரித்து, தான் எப்படியிருக்கிறார் என்பதையும் எழுதி விடுவார்."
           
"நீ பதில் கடிதம் எழுதுவாயா?"
              
"இல்லை. ஆனால் என்னைப் பற்றி, என்னுடைய தோழிக்கு எல்லா விவரமும் தெரியும், அதனால அவளே என்னைப் பற்றிய நிலைமைகளை அக்காவுக்கு எழுதி, அக்கா அதை அவரிடம் சொல்லுவாராம். அவருடைய அடுத்த கடிதத்தில் நான் சொன்ன விவரங்களைப் பற்றி ஞாபகமாக விசாரித்து எழுதுவார்."
                
"அவர் எழுதியக் கடிதங்களை இப்போ இங்கே வைத்திருக்கின்றாயா?"
              
"இதோ இருக்கு அம்மா!"
             
"என்னிடம் கொடுக்கின்றாயே! நான் பார்க்கலாமா?"
          
"தாராளமாப் பார்க்கலாம்; படிக்கலாம் அம்மா! அவர் எப்போவும் டீசண்ட். விகல்பமா ஒரு எழுத்து கூட எழுதமாட்டார்."
           
கடிதங்கள் எல்லாம் மேலே நம்பர் போடப்பட்டு, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 
          


மேலோட்டமாக இரண்டு மூன்று கடிதங்களைப் படித்த மங்கா மாமி, 'பரவாயில்லை. பையன் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியறது' என்று முணுமுணுத்தாள். 
                 
மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதம் கொஞ்சம் கசங்கி இருந்தது. கல்யாணி அதை அடிக்கடி எடுத்துப் படித்திருப்பாள் என்று நினைத்தால் மங்கா மாமி. தானும் அதை எடுத்துப் படித்துப் பார்த்தாள். விஸ்வம் தன்னுடைய அக்காவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதையும், அடுத்து தங்கை திருமணம் முடிந்து விட்டால், தான் கல்யாணியைக் கல்யாணம் செய்துகொள்வதில் தடை எதுவும் இருக்காது என்று எழுதியிருந்த கடிதம்! 
             
"விஸ்வத்தின் அக்காவுக்குக் கல்யாணம் ஆயிடிச்சா?"
                  
"உம். ரெண்டு வாரத்திற்கு முன்பு ஆயிடிச்சு அம்மா. அந்தக் கல்யாணத்திற்குப் போகலாம் என்று அப்பாவிடம் பெர்மிஷன் கேட்கப் போய்த்தான் அப்பா என்னைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். இங்கே கொண்டுவந்து உங்க கிட்டே, உங்க பொறுப்பிலே சேர்த்துவிட்டுவிட்டார்." 
                
"ஆகட்டும் அம்மா கல்யாணி. நீ வருத்தப்படாதே. மூர்த்தியிடம் நான் இது பற்றி பேசுகின்றேன்." 
             
(தொடரும்) 
             

17 கருத்துகள்:

  1. கல்யாணி என்றவுடன் கீதா மாமி விடாமல் எழுதும் கல்யாணிதான் நினைவுக்கு வந்தது..

    மங்கா மாமி என்ன செய்வார்கள் பார்ப்போம்..!

    பதிலளிநீக்கு
  2. கல்யாணி என்றதும் வைகோசாரின் கல்யாணி தான் நினைவில் வந்தாள். :))) இங்கேயானும் கல்யாணி கல்யாணம் ஆகி சந்தோஷமா இருக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கல்யாணியின் கல்யாணம் முடிவாகிறதா...தொடர்கின்றோம்! மங்கா மாமியின் முயற்சியை....ஒருவேளை இங்கு ஏதேனும் ட்விஸ்ட்?!!!1

    பதிலளிநீக்கு
  4. தொடர்கதையாயிருப்பதால் பதிவுகளுக்கிடையில் நாட்பட்டுப் போனால் நினைவுக்கு கொண்டு வர சிரமம்/ மீண்டும் படித்தைப் படித்து கண்டின்யூடி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. கல்யாணிக்கு ஏற்ற கணவனே வரட்டும். தொடருகிறோம்.

    பதிலளிநீக்கு
  6. //கல்யாணி என்றதும் வைகோசாரின் கல்யாணி தான் நினைவில் வந்தாள். :))) //

    கீதாம்மா, அந்தளவுக்கு 'அந்த கல்யாணி' மேலே இன்வால்வ்மெண்டா? அப்படீன்னா
    அவ நல்வாழ்வுக்கு எவ்வளவு நல்ல யோசனைகளைச் சொல்ல மிஸ் பண்ணியிருக்கீங்கங்கறதை நினைச்சா எனக்கே ஏதோ இழப்பா, இருக்கு..

    கல்யாணின்னா எனக்கென்னவோ 'பராசக்தி' படம் தான் நினைவுக்கு வரும்.. 'கல்யாணி! மங்களகரமான பெயர்; ஆனால் கழுத்திலோ...'

    இங்கே வந்து வேறே சளசளப்பெல்லாம் கூடாதில்லையா?
    சமத்தா கதையைத் தொடர்வோம்.

    விஸ்வத்தின் தங்கை கல்யாண விஷயத்தில் தான் கதாசிரியர் ஏதோ முடிச்சைப் போட முயற்சிக்கிற மாதிரி லேசாத் தெரியறது.. பாக்கலாம். இந்தளவுக்கு கதை வளர்ந்ததில் வேறெந்த சிக்கலும் தெரியாததினாலே ஏற்படற பிரமையாக் கூட அது இருக்கலாம்.
    ஆனா ஒண்ணு. கதைன்னா எதாச்சும்
    'நாட்' எங்கேயானும் விழன்னும்ன்னு தான் வாசிக்கறவங்களும் நெனைக்கறாங்க! அதான் சுவாரஸ்யமாம்! இதிலே என்ன சுவாரஸ்யமோ தெரிலே!
    'நாட்'எதுவும் வராமலேயே, எழுதற நடை சுவாரஸ்யமாத்தான் இருக்கு!
    இல்லே, 'நாட்' எப்போ விழப்போறதுன்னு எதிர்பார்க்கிற சுவாரஸ்யமோ அது?.. சரியாத் தெரிலே!

    அது போகட்டும், பண்ணையார் வர்றார்ன்னா, இது எந்தக் காலத்து கதைன்னு ஸ்ரீராம் கேப்பார். (ஒரு 'தாவணி'க்கே அப்படிக் கேட்டவராச்சே!) அவர் இன்னும் இதைப் படிக்கலே போலிருக்கு!
    ஆசிரியர் குழுன்னு ஒண்ணு வேறே நடுவுலே மாட்டிண்டு இடைஞ்சலா இருக்குமோ?.. என்ன இருந்தாலும்
    ஸ்ரீராம் வர்லேனா, அது என்னவோ பருப்பு இல்லாத கல்யாணம் மாதிரி...

    பதிலளிநீக்கு
  7. சுவாரசியமான எழுத்து நடை
    தொடருங்கள் நண்பரே
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. // அது போகட்டும், பண்ணையார் வர்றார்ன்னா, இது எந்தக் காலத்து கதைன்னு ஸ்ரீராம் கேப்பார். (ஒரு 'தாவணி'க்கே அப்படிக் கேட்டவராச்சே!) அவர் இன்னும் இதைப் படிக்கலே போலிருக்கு!
    ஆசிரியர் குழுன்னு ஒண்ணு வேறே நடுவுலே மாட்டிண்டு இடைஞ்சலா இருக்குமோ?.. என்ன இருந்தாலும்
    ஸ்ரீராம் வர்லேனா, அது என்னவோ பருப்பு இல்லாத கல்யாணம் மாதிரி... //

    எங்களை நாங்களே - ச்சே - நானே எப்படிக் கேட்பது? கேள்வியெல்லாம் வெளியேதான்!!!!

    முடிச்சு எங்கே வைத்திருக்கிறார் கே ஜி ஜி என்று அறிய எனக்கும் ஆவல். முடிச்சே இல்லாததே ஒரு முடிச்சாய் இருக்குமோ... ஒவொரு வாரமும் எங்கே எங்கே என்று தேட வைப்பதே அது!

    எந்தப் பிரச்னையையும் திரையில் காட்டாமலேயே ஒரு படம் வந்தது. 'வானத்தைப் போல' என்று நினைவு. சமயங்களில் அதுவும் ஒரு மாறுதலாய் நன்றாகவே இருக்கும்!

    பதிலளிநீக்கு
  9. கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது! தொடருங்கள்!!

    பதிலளிநீக்கு
  10. அடுத்து என்ன ஆச்சு? என்று அறிய ஆவலாய் தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. // விஸ்வத்தின் தங்கை கல்யாண விஷயத்தில் தான் கதாசிரியர் ஏதோ முடிச்சைப் போட முயற்சிக்கிற மாதிரி லேசாத் தெரியறது.. //

    டிவிஸ்ட அங்கிட்டு வெச்சுட்டாங்களா ... சரி.. சரி.. லெட் தி டனல் கம்.. வி வில் ஃபேஸ் இட்.

    பதிலளிநீக்கு
  12. விஸ்வத்தின் அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சா? அப்போ கல்யாணிக்கு கல்யாணம் பேசுவார் மங்கா மாமி.
    மாப்பிள்ளையை பையன் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியறது என்று மங்காமாமி பாராட்டுவதால் நம்பிக்கை ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  13. விஸ்வத்தின் அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சா? அப்போ கல்யாணிக்கு கல்யாணம் பேசுவார் மங்கா மாமி.
    மாப்பிள்ளையை பையன் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியறது என்று மங்காமாமி பாராட்டுவதால் நம்பிக்கை ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  14. விஸ்வத்தின் அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சா? அப்போ கல்யாணிக்கு கல்யாணம் பேசுவார் மங்கா மாமி.
    மாப்பிள்ளையை பையன் ரொம்ப நல்ல மாதிரியாத்தான் தெரியறது என்று மங்காமாமி பாராட்டுவதால் நம்பிக்கை ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!