புதன், 22 அக்டோபர், 2014

தீபாவளி தீபாவளிதான்..

                                                             
                                                     
                                                  

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் போல, அன்று ரிலீஸ் ஆகும் புதுப் படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்ப்பது போல விசேஷ நாட்களின்போது பழைய நினைவுகள் கிளர்ந்தெழுவதும் தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரவர் நினைவுப் பதிவை படிக்க வேண்டியதும் அவ்வண்ணமே.....!

சில விஷயங்கள் பொதுவானவை. சில பிரத்யேகமானவை. அவரவர்க்கு அவரவர் அனுபவம்.

நினைவு தெரியாத வயதில் பெற்றோரின் கட்டாயத்துக்காக எழுந்து, கண்களில் கண்ணீருடன் எண்ணெய் தேய்த்துக் குளித்து, பயந்து பயந்து ஊசி வெடியில் தொடங்கி, பிறகு சிறிது சிறிதாக பெரியவர்களாகத் தொடங்கும் போது வெடியின் அளவும், வெடிக்கும் ஸ்டைல் மாற செய்யும் பந்தாக்களின் அளவும் கூடிக் கொண்டே போகும். 

                                                
             
முதலில் நம் வீட்டு வாசலில் நண்பர்கள் வெடித்தால் உரிமைப் பிரச்னையாகப் பார்க்கப் பட்டு, பிறகு குப்பை விழும் அளவில் மானப் பிரச்னை இருக்கிறது என்பதை உணரத் தொடங்கிய கால கட்டத்தில் நண்பர்களை நம் வீட்டு வாசலில் 'சேர்ந்து வெடிக்கலாம் வா' என்று சீனப் பிரதமர் போல அழைத்து வெடிக்கத் தொடங்குவோம்.  சூட்சுமம் புரிந்த நண்பர்கள் மாநாடு போட்டு அடுத்த தீபாவளியில் அவசரத் தீர்மானம் போட, பிறகு எல்லார் வீட்டிலும் 'சேர்ந்து வெடிப்பது' என்ற தீர்மானம் ஒருமனதாய் நிறைவேறும்!   

                                                      
                  
குப்பை மானம் கொஞ்சம் வயது ஏறியவுடன் மலையேறும் நாளும் உண்டு. வீட்டு வாசலில் வெடி வெடித்து சற்றே சம்ப்ரதாயத்தை முடித்த உடன், சிலபல வெடிகளை பையில் திணித்துக் கொண்டு நண்பர்கள் வீடு ஒவ்வொன்றாக சென்று, ஜமா சேர்ந்து வீதி வலம் கிளம்புவோம். 

                                                        
 
நண்பர்களுக்குள் சொல்லிக்கொள்ளப் படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. நண்பர்களின் சகோதரிகளைப் பற்றி யாரும் பேச மாட்டோம். அவர்களிடம் சகஜமாக நாங்களும் சகோதர பாவத்தில்தான் பேசுவோம்.  ஒவ்வொரு தெருவிலும் சில வீடுகள் அருகில் நின்று எங்கள் ஜமா இளைப்பாறும். 'பேசி'க் கொண்டிருப்போம். காத்திருந்தது வீண் போகாது! அகாரியமாய் வெளிப் படும் மின்னல் தேவை இல்லாத குப்பையை வெளியே கொட்டும், அல்லது ஒரு மத்தாப்பூவோ, புஸ் வாணமோ விடும்.  ஜமாவில் காத்திருந்த சம்பந்தப் பட்ட நண்பன், அல்லது ஜமாவே வெடி வெடிப்பதில் லேட்டஸ்ட் பயங்கர டெக்னாலஜியை அரங்கேற்றும். அவை ஒரு சிறிய மறைமுக இதழோரக் குறுஞ்சிரிப்புடன் acknowledge செய்யப் படும்!

                                          
சரவெடிகள் சிக்கனமாகக் கையாளப்படும். அவை அதிகமாய் வாங்க மாட்டார்கள். எனவே ஆரம்பத்தில் சரம் வைத்தால் இடையில் ஒன்று, முடிவில் இரண்டு என்று கணக்கு வைத்திருப்போம். சில வீடுகளில் சரவெடிக்கு அநியாய முக்கியத்துவம் கொடுத்து, சரம் சரமாக வெடிப்பார்கள்! எங்கள் ஒற்றை வெடிகள் அந்தச் சத்தம் அடங்கும்வரை காத்திருக்க நேரிடும்!   

                                                 
                       
எங்கள் பிரியத்துக்குரிய வகை 'பிஜிலி வெடி' என்று அழைக்கப்படும் 100 ஒற்றை வெடிகள் கொண்ட பாக்கெட்தான். அதைத்தான் எங்கள் வீதியுலாக்களில் பெரும்பாலும் நாங்கள் உபயோகப் படுத்துவது.
சினிமாக்கள் இரண்டாம் இடம் பிடித்த காலம்!  

                                                        
                                          
                 
காசு இல்லாத காரணத்தால் கொண்டாடாத தீபாவளி ஒன்றிரண்டு வரும். அப்போது நண்பர்கள் மத்தியில் வீட்டில் யாராவது தெரியாத அல்லது இல்லாத ஒரு உறவினர் சாகடிக்கப் படுவார்.  காலை எல்லார் வீட்டிலும் வெடி சத்தம் கேட்கும்போது நம் வீட்டில் அதைச் செய்ய முடியாத துக்கம் வார்த்தைகளாய் வெளிப் பட்டு அப்பா, அம்மாவைத் தாக்கும். அவர்கள் எந்த மாதிரி வேதனையில் இருந்திருப்பார்கள் என்று அப்போது உணர முடியாத பருவம்.
                   
இப்போது அவைகளை நினைத்துப் பார்க்கும்போது சுகமான சந்தோஷங்கள், சொல்ல முடியாத சோகங்கள் மனதைக் கவ்வினாலும், நம் வீட்டுக் குழந்தைகள் நாம் பெற்ற இன்பங்களை பெற வேண்டும் என்று எல்லாம் செய்யும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப் போவதை தடுக்க முடியவில்லை.  நாங்கள் அந்தக் காலத்தில் இருந்தது ஐநூறு வீடுகளுக்கும் மேல் இருந்த வீட்டு வசதிக் குடியிருப்பு. இடவசதி, ஆட்கள், நண்பர்கள், பொழுது போக்குகள் அதிகம். இப்போது கட்டிடக் காடுகளாகிவிட்ட (வார்த்தை உபயத்துக்கு நன்றி ஹேமா!) இந்த நாளில் பக்கத்தில் வீடுகளும் குறைவு. கவனத்தை திசை திருப்ப டிவி என்ற மிகப் பெரிய அரக்கன் இயற்கை சந்தோஷங்களை பறித்து விடுகிறது...
                  
தீபாவளி தீபாவளிதான்...
- மீள் பதிவு -
(மிக லேசான 'எடிட்டிங்'குடன்!)  


                             

22 கருத்துகள்:

  1. தீபாவளி பற்றிய நல்ல தகவல்
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. பட்டாசு பாகப்பிரிவினை சடங்கு..காய வைக்கும் வைபவம்.. வெடிக்காது போன வெடிகளை ஏதாவது செய்து வெடிக்க வைக்கும் சாகசம்.. நானும் நினைவுப் பயணம் போக முடிந்தது. இந்த நாள் அன்று போல்....

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. குப்பையைக் கூட்டி வைத்துப் பட்டாசுப்பேப்பர்களைப் பிரித்துப் போட்டு அதை எரிக்கும் அனுபவம் உங்களுக்கு இல்லை போலும்! :)))

    மதுரையில் பாம்பு வாணத்தை அறிமுகம் செய்தது நாங்க தான் என்ற பெருமை எங்கள் மூவருக்கும் உண்டு. ((நான், அண்ணா, தம்பி) :))))

    வெடியைக் காய வைப்பதெல்லாம் தெரியாது. ஏன்னா அந்த வருஷத்து வெடி அந்த வருஷமே தீர்ந்துடும். அதிலேயே அப்பா கார்த்திகைக்குனு எடுத்து வைச்சிருப்பார். மேலும் இன்று இரவு/நாளைக்காலை தீபாவளிக் குளியல்னா அன்று தான் வெடிகளே வாங்கப்படும். பண்டிகைக்கு முதல் நாள் கடைசியில் வாங்கறதாலே இருக்கிறதை எல்லாம் விலை மலிவாக் கொடுப்பாங்கனு ஒரு எண்ணம் அப்பாவுக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!!

    மீள் பதிவு என்றாலும், புதுசு மாதிரியே இருந்துச்சு... ஒவ்வொரு பண்டிகைக்கும் அதே(மீள்) பலகார வகைகள்தான் என்றாலும், அலுப்பதில்லையே... (ஹி..ஹி..)

    பதிலளிநீக்கு
  6. நன்றி காசிராஜலிங்கம்.

    நன்றி அப்பாதுரை.

    கீதா மேடம்... அப்பாதுரை சொல்லி இருக்கும் பாகப் பிரிவினை (நாங்க நாலு பேர்), வெடிக்காத வெடியை வெடிக்கச் செய்யும் சில்மிஷங்கள், மருந்தைச் சேகரம் செய்து பேப்பரில் கொட்டிக் கொளுத்தியது மட்டுமல்ல, என் அண்ணனுக்கு அதனால் கையில் செம தீப்புண் ஏற்பட்டதும், பல நாட்களுக்கு அவஸ்தை தாங்காமல் அவன் அரற்றியதும், புஸ வானம் பூமழை தூவாமல் வெடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியதும்.... எல்லாம், எல்லாம், எல்லாம் உண்டு!

    நன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.

    நன்றி ஹுசைனம்மா... இப்போதைய தீபாவளிகளில் பழைய சுவாரஸ்யம் இல்லை - இன்றைய பிள்ளைகளுக்கும்! :)))


    பதிலளிநீக்கு
  7. மீள் பதிவானாலும் பழைய நினைவுகளை எல்லோருக்கும் மீட்டெடுக்கும் பதிவு.

    எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. அருமையான நினைவுகள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. சீனப் பிரதமர் போல.. ஹஹ்ஹா!..

    சீனா தான் பட்டாசு வகையறாக்களுக்கு ஆரம்ப கண்டுபிடிப்பாளர்கள் ஆகையால் அந்தக் காலத்திலிருந்தே சரவெடிக்கு சீனா பட்டாசு, சீனி பட்டாசு, டபடப என்று காலந்தோரும் மருவி மருவி வந்த பல பெயர்கள்! தற்போது என்ன பெயரோ தெரியவில்லை!

    வானமே!.. அட்டகாசம்! கற்பனை அருமை! பட்டாசை (டப்பாசு என்று மாற்றி உச்சரிப்பதில் சிலருக்கு
    பெருமை) தூர வைத்து விட்டு
    கைகொடுங்கள்!

    அன்பான வாழ்த்துக்கள் 'எங்கள் ப்லாக்' குழுவினருக்கு! வருஷம்
    பூராவும் ஜமாய்த்துத் தள்ளுங்கள்!





    பதிலளிநீக்கு
  12. தீபாவளிச் சிறப்புப் பதிவு
    மிக மிக அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. நினைவுகளை மீட்டெடுத்த பதிவு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவும் பகிர்வும்!

    மிக அருமை!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  16. உங்களின் இளமைக்கால தீபாவளி நினைவுகள் மிகவும் யதார்த்தமாய் இருக்கிறது. என்னுடைய நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியது.

    பதிலளிநீக்கு
  17. அந்த சினிமா போஸ்டர் இருப்பது சிந்தாமணி தியேட்டர் தானே ?அங்கே பார்த்த ' நேற்று இன்று நாளை' படத்தை நினைவுக்கு கொண்டு வருதே !

    பதிலளிநீக்கு
  18. தீபாவளி பற்றிய நினைவுகளை தூண்டிய நல்ல பதிவு !

    இந்த திருநாளில் மனிதநேய வெளிச்சம் வையகமெங்கும் பரவட்டும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான மலரும் நினைவுகள்! ஓலைப்பட்டாசு இருந்திருக்குமே! ஊசிப்பட்டாசு? பாம்பு?

    பதிலளிநீக்கு
  20. இப்போது சீனப்பட்டாசு ரொம்ப ப்ரபலியம் அதுவும் தடுக்கப்பட்டு உள்ளது என்று கேள்வி

    பதிலளிநீக்கு
  21. மீள்பதிவா? புதுசு போலவே இருக்கிறது. தீபாவளி நினைவுகள் என்றும் நெஞ்சை விட்டு நீங்குவது இல்லை.

    மிக அருமையாக நினைவுகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. நினைவுகள் தொடர்கதை.

    எங்கள் ப்ளாகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!