தலைப்பைப் பார்த்துவிட்டு, 'ஆஹா! இரக்கமில்லாமல் வரதட்சணை கேட்கின்ற சம்பந்திகளை உருக்கி எடுத்து, பொடிப் பொடியாக செய்வது எப்படி ' என்று சொல்லப்போகிறோம் என்று நினைக்காதீர்கள்!
பொடி விஷயங்களை, நாங்கள் சொல்வதை முதலில் சிறிய அளவில் செய்து பாருங்கள். நன்றாக இருந்தால், உங்களுக்குப் பிடித்தால், பிறகு பெரிய அளவில் செய்துகொள்ளலாம்.
பொருட்கள்:
காம்பு அரிந்து, சுத்தம் செய்யப்பட்ட மிளகாய் வற்றல் கால் கிலோ.
தனியா : ஐம்பது கிராம்.
தேங்காய் மூடி ஒன்று. (தேங்காயுடன்தான் - வெறும் மூடி வேண்டாம்)
கறிவேப்பிலை : ஒரு பிடி (சுமார் ஐம்பது இலைகள்!)
புளி: எலுமிச்சம் பழம் அளவுக்கு.
உரித்த வெள்ளைப்பூண்டு: நூறு கிராம்.
உளுத்தம்பருப்பு ஐம்பது கிராம்.
கடுகு ஒரு டீஸ்பூன்.
பெருங்காயம் : பட்டாணி அளவு.
உப்பு தேவையான அளவு.
* மிளகாய், தனியா இரண்டையும் தனித் தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* தேங்காயைத் துருவி, அதனோடு கறிவேப்பிலையைச் சேர்த்து, ஓர் இரும்புச் சட்டியில் இட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். பொன் நிறத்திற்குக் கொஞ்சம் அதிகமாகவே வறுத்துக்கொள்ளவும்.
* மிளகாய், தனியா, உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு நன்றாக,அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையோடு, புளி, பூண்டு ஆகியவைகளையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். மிக்சியில் புளி, பூண்டு ஆகியவை நன்றாக அரைபட வேண்டும் என்றால், லேசாக அவைகளை இரும்பு சட்டியில் இட்டு, கொஞ்சமாக வறுத்துக்கொள்ளவும்.
* உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம் - இந்த மூன்றையும் தேங்காய் எண்ணையில் வறுத்து, மிக்சியில் உள்ள பொடியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
* பிறகு, இந்தக் கலவையுடன், ஏற்கெனவே வறுத்த தேங்காய்ப்பூ, கறிவேப்பிலைக் கலவையையும் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான்! சம்பந்திப் பொடி தயார். இந்தப் பொடியை, சூடு ஆறியவுடன், கண்ணாடி பாட்டிலில் பாக் செய்து வைத்துக் கொள்ளலாம். (பொடியை கையால் தொடாமல், கரண்டி / ஸ்பூனால் மட்டுமே எடுக்கவேண்டும். கை பட்டால், பொடியின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும்) கைபடாமல் தயாரித்தால், இந்தப் பொடியின் ஆயுட்காலம், செய்யப்பட்ட நாளிலிருந்து இருநூறு நாட்கள்.
ஆமாம், இந்தப் பொடியை என்ன செய்யலாம்?
# வடித்த சாதத்தோடு ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து, நல்லெண்ணெய் / நெய் விட்டு, மோர்க்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
* இட்லி / தோசைக்கு, மிளகாய்ப்பொடி போன்று, எண்ணையோடு சேர்த்துத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
* மோர்சாதத்திற்கு இந்தப் பொடியைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
* பயணம் செல்பவர்களுக்கு, ஹோட்டலில் இட்லிக்குத் தருகின்ற மூவர்ண சட்டினிகள் பிடிக்கவில்லை என்றால், இதை கையோடு எடுத்துச் சென்று, தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.