வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140228::

       
                
ஒரிஜினலா நாங்க போட நினைத்த ஒளிக்காட்சி பதிவேற மறுக்கின்றது. ஆறுதல் பரிசாக இதோ ஒன்று. 
   
பாடலைப் பாடியவர் எஸ் ஜி கிட்டப்பா. இருபத்தேழு வருடங்கள் மட்டும் வாழ்ந்து மறைந்த இசைமேதை. 
             

புதன், 26 பிப்ரவரி, 2014

என்றென்றும் சுஜாதா





இந்தப் புத்தகம் படித்தபோது மறுபடி சுஜாதா நம்மிடையே இருப்பது போன்றே உணர்வு. படிப்படியாக அவருடனான தனது முதல் சந்திப்பிலிருந்து சொல்லத் தொடங்குகிறார் அமுதவன். கொடுத்து வைத்தவர். 'ஆறடி தாண்டிய அந்த அற்புத மனிதருடன்' வெளியூர்ப் பயணத்தில் உடன் செல்வதே சுவாரஸ்யம் என்று எழுதி இருக்கும் இவர், அவருடன் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நெருக்கமான நண்பராக இருந்திருக்கிறாரே....

                                                                       
 
மூன்று மாதங்களுக்குமுன் இந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டபோது சுஜாதா பெயரை உபயோகித்து காசு பார்க்க நினைக்கும் முயற்சியாகவே தோன்றியதால் (அதுமாதிரி ஒரு புத்தகம் வாங்கி ஏமாந்திருந்தேன்) இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படவில்லை. புத்தகத் திருவிழாவுக்குமுன் எங்கேயோ படித்த ஒரு விமர்சனம் 'இது வாங்கவேண்டும்' என்று குறித்து வைத்துக் கொள்ளத் தோன்றியது. (இப்போது கூட ஒரு வாரமாக எஸ்ரா எழுதியுள்ள இதே போன்றதொரு சுஜாதா நினைவுகள் புத்தகம் பற்றி முகநூலில் பார்த்தேன். வாங்க வேண்டுமா என்று இனிதான் முடிவெடுக்க வேண்டும்.)
                          


புத்தகக் கண்காட்சியில் புத்தகம் எடுத்து சற்றே புரட்டிப் பார்த்ததுமே நல்லவேளை, வாங்கி விட்டேன்.
    


புத்தகத்தின் கடைசி பகுதிகளில் கண்கலங்க வைத்திருக்கிறார் அமுதவன். சுஜாதா ரெங்கராஜனின் கடைசி நாட்களைப் பற்றி எழுதி இருக்கிறார். கற்றதும் பெற்றதும் பகுதியில் அமுதவன் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட வாரப் பதிவை என்போன்ற பலரும் படித்து அதிர்ந்துதான் போயிருந்தோம்.


பல பிரபலங்கள் 'முன்னாள் பிரபலங்களா'க மறைவதே வழக்கம். அதாவது அவர்தம் துறையில் சமீபத்தில் அவருடைய பங்களிப்பு என்று ஒன்றும் இருக்காது என்ற நிலையிலேயே கூட அவர்களது மறைவுகள் அவர்களை நேசித்த மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். (உதாரணம் சிவாஜி கணேசன், ராஜேஷ் கன்னா, பி பி ஸ்ரீனிவாஸ், டி எம் எஸ்) கடைசிவரை எழுத்துலகில் உயிர்ப்புடனிருந்த சுஜாதாவின் மறைவு எங்களைப் போன்ற அவர் ரசிகர்களுக்கு மாறாத சோகம்தான். 


என் நண்பன் ஒருவன் - அவனும் தீவிர சுஜாதா விசிறி - அவர் மறைவுச் செய்தி கேட்டு மயிலை செல்லலாமா, அஞ்சலி செலுத்தலாமா என்றுகேட்டபோது, வேண்டாம் என்று சொல்லி விட்டேன். விட்டு விட்டோம். உயிருடன் அவரைப் பார்த்திருந்தால் அர்த்தம் இருந்திருக்கும். மறைந்தவுடன் போய்ப் பார்ப்பதில் என்ன இருக்கிறது? சுஜாதா என்றென்றும் எங்கள் மனதில் இருக்கிறார்தான். 


லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நிருபமா என்று ஒருவரும் முன்னுரை எழுதி இருக்கிறார். யாரென்று தெரியவில்லை. ஆனால் நிருபமா என்ற பெயர் பார்த்ததும் 'எதையும் ஒருமுறை' நிரு நினைவுக்கு வந்தார். கூடவே மாருதி வரைந்திருந்த அந்த ஓவியப்பெண்ணும்!


பழகுவதற்கு எவ்வளவு எளிமையானவர் சுஜாதா என்று அமுதவன் விவரித்துக்கொண்டு வரும்போது சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது. அந்த எளிய மனிதரின் பயம் (ரத்தம் ஒரே நிறம்) பற்றி அமுதவன் எழுதி இருந்தது பற்றிப் படித்தபோது பாவமாக இருந்தது. "என்னை ரொம்பவும் நேசிப்பதாக என்னிடம் நட்பு பாராட்டும் சில நண்பர்களே இதைத் தூண்டி விட்டு நடத்துகிறார்கள் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி" என்று சொல்லியிருக்கிறார் சுஜாதா. 


சுஜாதாவே கமலிடம் விருப்பம் தெரிவித்திருந்தும் அவரை நடிக்கவைக்க கமல் முயற்சி எடுக்காதது ஆச்சர்யம்தான். கமல் நினைத்திருந்தால் அது பெரிய விஷயமில்லை.

                     


பதிப்பகத்தார் சிலர் அவரை ஏமாற்றியது குறித்துச் சொல்லியிருப்பது (ஒரு புத்தகத்துக்கான ராயல்டி ஒரு வெள்ளிக்குடம், இன்னொன்றுக்கு ஒரு பேன்ட் பிட் - அதுவும் அவரின் கணுக்கால் அளவுக்குத்தான் வருமாம்), திரையுலகிலும் அவரை உபயோகித்துக் கொண்டு அவருக்குச் சேர வேண்டியதைத் தராமலிருந்தவர்கள், ("சுஜி எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கா") சுஜாதா எழுத்துகளுக்கு திருமதி சுஜாதாவின் உதவி, சுஜாதா பங்குபெற்ற முதல் வாசகர் கூட்டத்தின் சுவாரஸ்யம், அவருக்கு வந்த திரைப்பட இயக்குனர் வாய்ப்பு... அலுவலகத்தில் அவரின் சாதனைகளும், வேதனைகளும்,... நண்பரின் திருமணத்தைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, அப்போது அந்தக் காலத்தில் அரிதாகவே கிடைக்கக் கூடிய அமெரிக்கப் பயண வாய்ப்பையே சுருக்கிக் கொண்டது, 

நிறையவே சுவாரஸ்யமான பகுதிகள். 

திருமதி சுஜாதா தன் கணவர் பற்றிச் சொன்னதாக சமீபத்தில் ஒரு வார இதழில் வந்த பேட்டி எவ்வளவு பொய் என்று இதைப் படிக்கும்போது தெரிகிறது. போதாததற்கு திருமதி சுஜாதாவே தான் தற்சமயம் எழுதிவரும் ஒரு தொடரிலும் இது பற்றிச் சொல்லியிருக்கிறார்.


                                               _MG_2251
பல இடங்களில் பல விவரங்களை, தனக்குத் தெரிந்திருந்தும் நாகரீகம் கருதி அளவாகவே சொல்லிச் செல்கிறார் அமுதவன்.
எல்லோரும் பாட்டெழுத நான் என்ன விதிவிலக்கா என்று ஆரம்பித்து சுஜாதா எழுதிய ஒரு கவிதை!

"படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த கதை பற்றிச் சொல்ல நினைத்தவன்
பாயை விரித்துப் படுத்தவளை பாச்சா
வாயைத் திறந்து...வரைக்கும் வந்துவிட்டேன்.
மாயச் சுழலிது மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு வா!"
ரசிகர்கள் தன்னைப் பார்க்கும்போது கேட்கும் கேள்விகளாக சுஜாதா சொல்வது பற்றி இரண்டு இடங்களில் வந்திருக்கிறது. (பக்.30 மற்றும் பக்.78)

சுஜாதாவால் கைதூக்கி விடப்பட்ட அப்போதைய ஒரு இளம் எழுத்தாளரே சுஜாதா பெயரைக் கெடுக்க முயற்சித்ததும், அவரை மன்னித்த சுஜாதாவின் பெருந்தன்மையும், சாவியுடனான அவரின் ஊடல் உட்பட்ட நட்பு அனுபவங்கள்....
சுஜாதா எழுதிய ஒரு தொடர்கதைக்கு அண்ணாசாலையில் வைக்கப்பட்ட ஒரு கட் அவுட் குறித்து அவர் அடைந்த சந்தோஷம், (கனவுத் தொழிற்சாலை என்று நினைக்கிறேன்)
                


ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவரா சுஜாதா என்ற சந்தேகம் வந்ததாம் ஒருவருக்கு. சிந்தனைக்கு மொழி உண்டோ? அப்படியே இருந்தாலும் அது தாய்மொழியாகத்தானே இருக்க முடியும்?


படிக்கப் படிக்க சுஜாதாவின் இன்னொரு பக்கத்தை அறிய முடிகிறது. எவ்வளவு எளிய மனிதர்! உடம்பு மிகவும் முடியாத நிலையிலும் அவர் ஓய்வெடுக்காமல் இரண்டு மூன்று வேலைகளை ஒத்துக் கொண்டு அவர் உழைத்தது,

அப்போதைய கர்னாடக முதல்வர் வீரப்ப மொய்லியுடன் நடந்த நேர்காணலில் சுஜாதா கொண்டு சென்றிருந்த டேப் ரெகார்டர் வேலை செய்யாமல் போக, மூட் அவுட் ஆன சுஜாதாவுக்கு ஆறுதல் சொல்லி அந்த நேர்காணலைத் தனது நினைவிலிருந்து அழகாக, ஒன்றையும் விடாமல் அமுதவன் எழுதிக் கொடுத்ததை சுஜாதா மிகவும் பாராட்டினாராம். உண்மை. சுஜாதா பற்றி இவர் எழுதி இருப்பவை சுஜாதா பேசுவது போலவே இருக்கின்றன. 


கமலை அழைத்து வந்து சுஜாதா நடத்திய (அவர் அலுவலகத்தில்) விழா ஒன்றுக்கு இவரை அழைக்கவில்லை சுஜாதா.  அதைப் பற்றியும் எழுதி இருக்கிறார் அமுதவன். அந்தக் கட்டுரையே ஏதோ பாதியில் நிற்பது போல இருக்கிறது (பக்.87). அதை கவனித்தீர்களா, அந்தக் கட்டுரையே அவ்வளவுதானா அமுதவன் ஸார்?


இன்னொரு இடத்தில் 'கண்ணதாசனைப் பார்த்த பிரமிப்புப் போலவே அவர் தொழில்ரீதியாக பிரமித்துச் சொன்னது ரஹ்மானைத்தான்' என்று எழுதி இருக்கிறார் அமுதவன். கண்ணதாசன் பற்றிய அந்தக் குறிப்பு இந்தப் புத்தகத்தில் இல்லை.


புகைப்படங்களைப் பொறுத்தவரை ஆரம்பகாலப் புகைப்படங்களில் தொடங்கி படிப்படியாக அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற புகைப்படங்களைத் தொகுத்திருப்பது அழகு. கடைசி பகுதிகளில் இளைத்து, கூன் விழுந்த அந்த உயர மனிதரின் புகைப் படங்கள் சோகத்தைத் தருகின்றன.


இப்படிச் சொல்லிக் கொண்டே போனால் அவர் எழுதி இருக்கும் எல்லாவற்றையும் நானே பகிர்ந்து விடுவேன்...

அவசியம் சுஜாதா ரசிகர்கள் தவற விடக் கூடாத புத்தகம்.

'என்றென்றும் சுஜாதா'
விகடன் பிரசுரம்
184 பக்கங்கள் - 90 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க.

ஜோதிஜி திருப்பூர் தனது தேவியர் இல்லம் பக்கத்தில் பகிர்ந்துள்ள, இதே புத்தகத்துக்கான விமர்சனம்.
 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கணித எருமை!

     
என்னை எருமை என்று அழைத்த கணித ஆசிரியர் பற்றி சென்ற வாரம், முகநூலில் நிலைப்பாடு பதிந்திருந்தேன்.
      
         

நான் எருமைப் பட்டம் வாங்கியது பற்றி ஒரு விவரமான பதிவு இப்போ, இங்கே. 
     

அப்போ நான் படித்தது ஐந்தாம் கிளாஸ். தேசிய ஆரம்ப பாடசாலை, நாகப்பட்டினம். 
   
அந்த வருடத்தில் நாங்கள் சட்டயப்பர் கோவில் தெருவிலிருந்து பெருமாள் கோவில் சன்னதித் தெரு வீட்டிற்கு மாறப் போகின்றோம் என்றும் அதனால் அந்தப் பள்ளியிலிருந்து தேர்முட்டிப் பள்ளிக்கூடத்திற்கு மாறப் போகின்றேன் என்றும் தெரிந்துகொண்டேன். 
     
ஒருவகையில் சந்தோஷமாக இருந்தது. வாரம் ஒருநாள் வாய்ப்பாடு ஒப்பிக்கச் சொல்லும் தண்டபாணி வாத்தியாரிடமிருந்து தப்பித்துவிட்டேன் என்று சந்தோஷம். பள்ளிக்கூடம் மாறுவதால், வாய்ப்பாடு படிக்கவேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. 

ஆனால் பாருங்க - என்னுடைய அப்பா, "ஸ்கூல் மாறும் வரை இந்த ஸ்கூலுக்கே போய் வா, கால் பரீட்சை நேரத்தில் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகின்றேன்" என்றார். 

வேறு பள்ளிக்கூடத்தில் சேரப் போகின்றேன் என்பதால், இந்தப் பள்ளிக்கூடத்தில் சொல்லப்பட்ட  புத்தகங்கள் / நோட்டுகள் எதையும் வாங்கவில்லை. அனாவசிய செலவு வேண்டாம் என்று சிக்கன நடவடிக்கை, வீட்டு மந்திரிசபை கூடி தீர்மானம் எடுத்து விட்டார்கள். 

தண்டபாணி வாத்தியாரின் வகுப்பில் வாய்ப்பாடு சொல்லச் சொல்லும் கொடிய நிகழ்ச்சி வாரம் ஒருநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கும். முதல் பையன் ஒன்றாம் வாய்ப்பாடு. இரண்டாம் பையன் இரண்டாம் வாய்ப்பாடு ... (அதனால் வகுப்பில் ஆசிரியருக்கு அருகே, முதலிடம் பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் ஒரு வியட்நாம் போரே நடக்கும்) முதல் மூன்று வாய்ப்பாடுகள் எல்லோரும் சுலபமாகச் சொல்லுவார்கள். மூன்றாம் வாய்ப்பாடு மற்றும் நான்காம் வாய்ப்பாடு கொஞ்சம் கஷ்டம்தான் - ஆனாலும், "மூவஞ்சு பதினஞ்சு" என்று சொல்லிவிட்டு, 'மூவாறு ...' என்று சொல்லுவதற்குள் மனதுக்குள் பதினாறு, பதினேழு, என்று சொல்லி, பதினெட்டு என்று சொல்லலாம். 

ஐந்தாம் வாய்ப்பாடும் பத்தாம் வாய்ப்பாடும் ரொம்ப ரொம்ப சுலபம். 

ஆறு முதல் ஒன்பதாம் வாய்ப்பாடு வரை ரொம்பக் கஷ்டம். 

சில வெள்ளிக்கிழமைகள் வகுப்புக்குக் கட் அடித்தேன். நடிப்புத் திறமையில் என்னை மிஞ்ச ஆள் கிடையாது (வயிற்று வலி), அண்ணன் அடித்ததால், பல் குத்தி (என்னுடைய பல்தான்) உதட்டில் காயம், (ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஸ்கூலுக்குக் கட்டு; அண்ணனுக்குத் திட்டு!) பக்கத்து வீட்டில் கல்யாணம் என்று சில வெள்ளிக்கிழமைகள் இனிதே கழிந்தன. 

ஒரு வெள்ளிக்கிழமை காரணம் எதுவும் கிடைக்கவில்லை. சரி முதல் மூன்று இடங்களுக்குள் போய் உட்காரலாம் என்று பார்த்தால், முதல் இரண்டு பெஞ்சுகள் ஃபுல். 

தண்டபாணி வாத்தியார் இன்றைக்கு வராமல் இருக்கவேண்டும் என்று தண்டபாணியை (முருகா, முருகா, முருகா) வேண்டிக்கொண்டேன். கடவுள்கள் யாரும் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை. 

தண்டம் ஒன்றை (பிரம்பு) கையில் ஏந்தி, தண்டபாணி சார் வந்துவிட்டார். முதல் பையன் ஒன்றாம் வாய்ப்பாடு. இரண்டு மூன்று நான்கு என பத்து வாய்ப்பாடுகள் சொல்லப்பட்டன. இந்த வாய்ப்பாடு வகுப்பில் இன்னும் ஒரு கொடுமை, வாய்ப்பாடை சொல்லும் பையன் ஒவ்வொரு வரியாக சொல்லுவான், கிளாஸ் மொத்தமும் கோரசாக அதை அதே இராகத்தில் திருப்பிச் சொல்வார்கள். 

பிறகு மாணவிகள் ஒன்று முதல் பத்து வரை வாய்ப்பாடு சொன்னார்கள். 

மீண்டும் அடுத்த பத்து மாணவர்கள். 
    
எனக்கு முன்னால் இருந்த ஆறு மாணவர்கள் ஒன்று முதல் ஆறு வரை கூறியாகிவிட்டது. 

எனக்கு ஏழாம் வாய்ப்பாடு. எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பாலச்சந்திரன், அதற்குள் கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, அவனுடைய ஆரல் மணீஸ் வாய்ப்பாடுப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு, எட்டாம் வாய்ப்பாட்டை கடம் அடிக்கத் துவங்கியிருந்தான்.  (என்னிடம் புத்தகங்கள் எதுவும் கிடையாது என்பது தெரிந்ததே!) 

நான், நடுங்கும் முழங்கால்களோடு எழுந்து, சொன்னேன் .... 

நான்: "ஏழோன் ஏழு."

கிளாஸ்: "ஏழோன் ஏழு" 

நான்: "ஏழிரண்டு பதினாலு" 

கிளாஸ்: "ஏழிரண்டு பதினாலு" 

கிளாஸ் உரத்த குரலில் சொல்லும் பொழுதெல்லாம், நான் பாலச்சந்தரின் ஆரல் மணீஸ் வாய்ப்பாட்டு புத்தகத்தை ஓரக்கண்ணால் பார்த்து, அடுத்து சொல்லவேண்டிய எண் எது என்று பார்த்து சொல்லிவந்தேன். 

ஏழ் நான்கு இருபத்தெட்டு வரை எல்லாம் நல்லபடியாக நடந்தது. 

"ஏழஞ்சு ..."  என்று சொல்லிவிட்டு ஆரல் மணீஸ் பக்கம் பார்த்தால், அந்த கிராதகன், வாய்ப்பாட்டுப் புத்தகத்தை பட்டென்று மூடி வைத்துவிட்டான்! ஆனாலும், நொடிப்பொழுதில் என் கண்ணில் பட்ட .. X 5 = 40 என்பது என்னுடைய மண்டைக்குள் ஆணியடித்து அமர்ந்து, ஆலாபனை செய்ததால், ஒரு வினாடி தடுமாறிய நான்,  "நாற்பது" என்றேன்.

கிளாஸ்: " ("கொல்!!") (சிரிப்பு!) 

'சற்றுக் கண் அயரலாமா' என்று யோசித்துக் கொண்டிருந்த தண்டபாணி சாரின் கவனம் என் பக்கம் திரும்பியது. 

"டேய் எருமை! திரும்ப சொல்லு!"

நான்: "எருமை" 
    
த வா: மேலும் உக்கிரமாக ... "டேய் ஏழஞ்சு எவ்வளவு?" 

நான் : "நாற்பது." (ஆரல் மணீஸ் பொய் சொல்லாது என்று என் திடமான நம்பிக்கை) 

த வா : "டேய் - உங்கப்பா ஜெ மு சாமி கடையில  (தண்டபாணி சாருக்கு என் அப்பாவைத் தெரியும்) இப்படி எண்ணி பணத்தைக் கொடுத்தால் ஜெ மு சாமி தலையில துண்டைப் போட்டுகிட்டு போகவேண்டியதுதான். ஏறுடா பெஞ்சு மேலே!" நான் அப்பாவின் முதலாளியை அப்போ பார்த்ததில்லை.  இப்போ யோசித்துப் பார்த்தால், ஒரு வேளை ஜெ மு சாமி கடை முதலாளி தலையில் துண்டு போர்த்திக் கொண்டு அர்விந்த் கேஜ்ரிவால் போல இரு(ந்திரு)ப்பாரோ என்று தோன்றுகிறது. 
     
பெஞ்சு மேலே ஏறி நின்ற எனக்கு அன்று கையிலும் காலிலும் பலத்த பிரம்படி. 
            
மறுநாள், நான் ஏழாம் வாய்ப்பாட்டை ஏழுதடவை இம்போசிஷன் எழுதிச் செல்ல வேண்டியதாயிற்று! 
    
இந்த ஏழாம் வாய்ப்பாடு சம்பவம் நடந்த ஏழு வருடங்கள் கழித்து, தண்டபாணி சாரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலேயே கட்டியப்பர் சந்நிதியில் நாங்கள் குடி பெயர்ந்தோம். 
     
அதற்கு முதல் வருடம், ஜூனியர் டெக்னிகல் ஸ்கூல் முதல் பேட்ச் படித்து, முதல் ரேங்க் வாங்கி, (ஆரல் மணீஸ் புகழ் பாலச்சந்திரன் அப்போ இரண்டாவது ரேங்க்) அதற்காக எனக்கு வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஆண்டு விழாவில் புத்தகம் & ஐஸ்க்ரீம் கப் பரிசு கொடுத்தார்கள். 
       
அந்தப் பரிசுகளை என்னால் தண்டபாணி சாரிடம், பெருமையாகக் காட்ட இயலவில்லை. ஏனென்றால், நான் பரிசு வாங்கிய அதே நாளில்தான் அவர் இறந்து போனார். 
                         

திங்கள், 24 பிப்ரவரி, 2014

திங்க கிழமை 140224 :: இ எ மி கா ஊறுகாய்.

                    
ரொம்ப சிம்பிள் ஊறுகாய் இதுதான்.

குறுகிய நேரத்தில் தயாரிக்கலாம்; ஒன்றிரண்டு நாட்களுக்குள் உபயோகித்து விடுதல் நலம். 
    

காரட் கால் கிலோ. 

குருத்து இஞ்சி ஐம்பது கிராம்.
  

எலுமிச்சம்பழம் அரை மூடி. 
   

பிஞ்சு பச்சை மிளகாய் பதினைந்து. 
  

நல்ல காரட், தலைப்பக்கம் பச்சை இல்லாமல், தலைப்பகுதி பருத்தும், நுனி வரை சீராகக் குறுகியும் இருக்கும். நல்லா ஆரஞ்சு வர்ணத்தில் இருக்கும். காரட்டை நன்றாக ஓடுகின்ற தண்ணீரில் சுத்தமாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும். 

நறுக்கிய காரட் துண்டுகளில், உப்புத்தூள் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை இட்டுக் கலக்கி, எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழியவும். தேவையானால், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்க்கலாம். 

குருத்து இஞ்சி கிடைத்தால், அதை அப்படியே கழுவி, சிறு துண்டுகளாக செய்து கொள்ளலாம். சாதாரண இஞ்சிதான் கிடைத்தது என்றால், அதைக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். 

பச்சை மிளகாய்களையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, இஞ்சி + பச்சை மிளகாய் துண்டுகளை, காரட் துண்டுகளோடு சேர்த்து ஊறவிடவும். 

(சிலர், இதோடு சாம்பார் வெங்காயத்தை உரித்து, சிறு துண்டுகளாக செய்து சேர்ப்பார்கள்) 
    

சுவையான ஊறுகாய் தயார். 
         
  


            

சனி, 22 பிப்ரவரி, 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1) இரண்டு நாள் தமிழ் மாநிலம் தாண்டி போனாலே "ஹோம் சிக் 'என்று சொல்லக்கூடிய மனிதர்கள் நிறைந்திட்ட காலத்தில் கடந்த பத்து வருடங்களாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதற்கேற்ப வடமாநிலங்களில் பணியாற்றும் கலெக்டர் அலர்மேல் மங்கை பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
 


 
2)தொழில் துவங்குவது பணம் சம்பாதிப்பதற்குதான், ஆனால் அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் சொன்ன விதத்தில்தான் மிகவும் உயர்ந்து போனார். பானுரேகா
 
 
 
3) பாஸிட்டிவ்வாகவே பாருங்கள்! எர்ணாகுளம் கிருஷ்ணன் 
 

 
 


 
5) பதினாறு வயது விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பிளஸ் 1 மாணவர் டெனித் ஆதித்யாவின் சாதனை.
 

 
6) விரும்பினால் நாமும் இளங்கோவனோடு இணையலாம்.
 


 
7) ...இதற்கான ஆராய்ச்சி உலகளவில் நடந்து வந்தாலும் முடிவுக்கு வந்திருக்கும் இவர்களின் ஆராய்ச்சியை அமெரிக்க அரசு ஏற்று ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது....எரிபொருள் பிரச்சினைக்கு எளிய தீர்வு கண்ட இளைஞர்கள்
 
 

புதன், 19 பிப்ரவரி, 2014

என் காதலி... யார் சொல்லவா.. ?



கல்யாணங்களுக்குச் செல்வது ஒரு தனி அனுபவம். 


 


நேற்றைய ரிசப்சனுக்கும் வந்திருந்தான். அலுவலகக் கும்பல். இன்று வந்தால்தான் பல உறவுகளைக கண்டு பேச முடியும் என்கிற எண்ணத்தினால்தான் இன்றும் வந்திருக்கிறான்.  கல்யாணக் கும்பல் மற்ற உறவுகளோடு ஓடிப்போன அப்பாக்களையும் காட்டுகிறது. அதை முன்னாலேயே சொல்லியாகி விட்டது. பிரிந்து சென்ற காதலியையும் காட்டுகிறது. இப்போது ரெண்டாவது ரகம். இது அந்நாளைய சோக ராகம்.

 

கல்யாணக் கும்பலில் ஆங்காங்கே நின்று, நின்று உறவுகளைப் பார்த்து, பேசி, சிரித்து என்று சுற்றி வந்து கொண்டிருந்தபோது அவள் 'சட்' டெனக் கண்ணில் பட்டு விட்டாள். இவன் கண்களும் நிலைகுத்தி நின்றன. உடனே அடையாளம் புரிந்து விட்டது. நாற்காலியில் சற்றே தனியாக அமர்ந்திருந்தாள்.  நீண்ட நேரமாக இவனைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்று தெரிந்தது. 

அவளை நோக்கி உடனே முன்னேறத் துடித்த கால்களை மனம் அடக்கியது.  இவன் பார்த்து விட்டதை அவளும் பார்த்தாள். மெல்லப் புன்னகைத்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான். நம் கண்களை ஆழமாகப் பார்ப்பாள். நிறுத்திப் புன்னகைப்பாள். அளந்து பேசுவாள். யோசித்து யோசித்து வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவாள்.

சுவாமிக்குப் பூத் தொடுப்பவன் நல்ல மலர்களைப் பொறுக்கி எடுத்து பூ கட்டுவது போல அவள் பேச்சில் வார்த்தைக்கோவை இருப்பதாக எண்ணியிருந்த காலம் ஒன்று இருந்தது. பொருத்தமில்லாத சொற்களே இல்லாத வரிகளில் பேசுவாள். அல்லது அவள் வாயிலிருந்து வருவதாலேயே எல்லா வார்த்தைகளும் புதிய மதிப்பைப் பெற்று விடுகின்றன என்று எண்ணியிருந்த காலம் அது. இப்போது தீர்மானமாகப் புன்னகைப்பதைப் பார்த்தபோது இவை எல்லாம் நினைவுக்கு வந்தது.

நீண்ட நேரமாக அவள் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்ததால் அவள் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருப்பாள் என்று தனக்குள் நினைத்தான் இவன். ஆனால் தனக்கு இன்னமும் அந்த சௌஜன்யம் ஏற்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. 

கல்லூரி நாட்களில் ஓடி ஓடி காதலித்தது நினைவுக்கு வந்தது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டவள் அவள். அவளுக்கு தன்னைப் பிடித்திருக்கிறது என்று அறியவந்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. தன் கூடப் படிக்கும் சதீஷ், குமாரவேல் போன்றவர்களுக்கு இருந்த ஒரு ஆளுமை தன்னிடம் இல்லையென்று எண்ணியிருந்தான். அதனாலேயே ஆச்சர்யம் ஏற்பட்டது. ஆனால் இவனுக்கும் அவளிடமிருந்த ஈர்ப்பு அந்தப் பிரியத்தை ஏற்றுக் கொண்டது.
அவள் அருகில் காலியாய் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான். மறுபடி அழகாய்ப் புன்னகைத்தாள்.

"சௌக்யமா?"

"ம்... "

"பொண்ணு பக்கமா, மாப்பிள்ளை பக்கமா?" என்றாள்.

"மாப்பிள்ளை. சந்த்ரு என் அத்தைப் பையன்" என்றான் இவன். தான் அவளை நலம் விசாரிக்கவில்லை என்று ஞாபகம் வந்து உறுத்தியது. 

"நீ........ ங்க?"

"நீன்னே சொல்லலாம். நாம ஒரே க்ளாஸ்தான படிச்சோம்" என்றாள்.

'அவ்வளவுதானா?'

"நீ...  பொண்ணு  உனக்கு உறவா?"

"ஃபிரெண்ட்... அவள் என் ஃபிரெண்டோட தங்கை"

அவள் அவனையே பார்த்துதான் பேசிக் கொண்டிருந்தாள். இவன் மேடையைப் பார்ப்பதும், மற்றவர்களைப் பார்ப்பதும் அவளைப் பார்ப்பதுமாய் இருந்தான்.

அவளுக்குத் திருமணமாகி விட்டதா என்று தெரியவேண்டும் என்று தவித்தான். எப்படிக் கேட்பது என்று யோசித்தான். திரும்பி அவள் கழுத்தைப் பார்க்கும் துணிவு வரவில்லை. இதே கழுத்தில் இவன் விரல்களால் கோலம் போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. 

"அவர் வரல்லியா?"

"கழுத்தைத் திருப்பி அவனைப் பார்த்தாள். "எவர்?"

சங்கடத்துடன் அசைந்தான் இவன். "உங்க.. உன் வீட்டுக்காரர்"

"ஹௌஸ் ஓனரைச் சொல்றியா... நான் இருப்பது சொந்த வீடு"

அவள் பதிலில் பழைய குறும்பு அவளை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது. தன்னால் ஏன் இப்படி சகஜமாக இருக்க முடியவில்லை? அதே நேரம், இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லையோ... அதைத்தான் சொல்கிறாளோ... 

ஏன் இப்படி யோசிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். 'என்ன எதிர்பார்க்கிறேன்?'

"அவள்  தன் கைவிரல் மோதிரத்தைத் திருகியபடியே சொன்னாள், "பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார். நானும் பையனும்தான் வந்தோம். அதோ... அங்கே விளையாடிகிட்டிருக்கான் பார்... சிகப்பு டீ ஷர்ட்..."

அவள் காட்டிய திசையில் சிவப்பாக ஒரு பையன் களையான முகத்துடன் இன்னொரு சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
இவள் ஜாடையும் தெரிந்தது. 


"உன் மனைவி வரவில்லையா?"

"இல்லை. அவள் ஊருக்குப் போயிருக்கிறாள். அவள் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை"

மனைவி பற்றிய மேற்கொண்டு பேசுவதைத் தவிர்க்க அவசரமாகக் கேட்டான். "இந்த ஊர்லயா இருக்கே?"

"ஊ...ஹூம்! இன்னமும் அதே தஞ்சாவூர்தான்"

தன்னுடன் இவள் சினிமாவுக்கு வரவில்லை என்று தான் முறைத்துக் கொண்டதும், அவள் சமாதானப்படுத்தியதும், அப்புறம் இவனையும் அழைத்துக் கொண்டு சென்ட்ரல் லைப்ரரி சென்றதும் நினைவுக்கு வந்தது.

"இங்கயும் யாரும் இருக்க மாட்டாங்க... இன்னும் சொல்லப் போனா தள்ளித்தான் இருப்பாங்க" என்று இவன் முழங்கையைப் பற்றிக்கொண்டு கிசுகிசுத்தது நினைவுக்கு வந்தது. 

திரும்பிச் சுதந்திரம் எடுக்க முனைந்தபோது தடுத்தாள். "தப்பு... சும்மா கூட இருந்தால் போதும்....  இப்போதைக்கு" என்றாள்.

பேசுவது தவிர தினமும் ஒரு லெட்டர் கொடுப்பான் அவளுக்கு.  இரவு உட்கார்ந்து உருகி உருகி எழுதியிருப்பான். வாங்கிக் கொள்வாள். 

எப்போதாவது அவளும் பதிலுக்கு ஒரு லெட்டர் தருவாள். அதிகபட்சமாய் ஒருமுறை அவளைக் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறான். அவ்வளவுதான். அதற்கே கோபத்தினாலும் முகம் சிவந்து விலகியவள், அடுத்த சிலநாள் பொது இடங்களிலும், அங்கேயும் கூட, பாதுகாப்பான தூரத்தில் நின்றுமே பேசினாள்.

15 நாள் இவன் வெளியூர் சென்று வந்தபோது தவித்துப் போனவள். இப்போது அந்த மாதிரி எந்தச் சுவடும் தெரியாமல் பேசுகிறாளே...

'அதுசரி! பார்க்காதது போலவே கூடப் போயிருக்கலாமே.. பேசுகிறாளே.. பரவாயில்லையே...' மனம் தன்போக்கில் எண்ணங்களுடன் ஓடியது.

நடுவில் ஆங்காங்கே பிரிந்து சென்று மற்றவர்களுடன் பேசி வந்தாலும் முடிந்தவரை சேர்ந்தே அமர்ந்திருந்தார்கள். பார்த்தாள், புன்னகைத்தாள், பேசினாளே தவிர, உரையாடலில் அவள் காட்டிய தூரம் புரிந்தும் ஏன் இன்னும் திரும்பத் திரும்ப இவள் பக்கத்தில் வந்து அமர்கிறோம் என்று புரியவில்லை அவனுக்கு.

தனக்குப் பழைய நினைவுகள் வந்தது போல அவளுக்கும் வந்திருக்குமா என்று யோசித்தான்.

'வராமலா என்னுடன் பேசுகிறாள்?' 'அப்புறம் ஏன் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை? 

'நாம் மட்டும் பேசுகிறோமா என்ன?' எதற்காகப் பிரிந்தோம் என்று நினைக்கவே பிடிக்கவில்லை இவனுக்கு.
 'பந்தி ரெடி, சாப்பிட வரலாம்' என்று அழைத்தார்கள்.

வரிசையாக எழுந்தவர்களுடன் இவர்களும் எழுந்து சாப்பிடப் போனார்கள்.  இவன் முதலிலேயே தண்ணீர் பாட்டிலைத் திறந்து கடகடவெனக் குடித்தபோது திரும்பி அவனை ஒருமுறை பார்த்தாள். அவளுக்கு சாப்பிடுமுன் நிறையத் தண்ணீர் குடிப்பது பிடிக்காது. 



அந்நாட்களில் ஹோட்டலில் அருகில் அமர்ந்து ருசித்துச் சாப்பிட்டது போலவே, இன்றும் ஒவ்வொரு ஐட்டத்தையும் நிதானமாக, ரசித்துச் சாப்பிட்டாள். சாப்பிடும்போது பேச மாட்டாள். ஏதாவது கேட்டால் பதில் சொல்வாள். இன்று இவனும் அவளை ஒன்றும் கேட்கவில்லை.

இவன் தான் கிளம்பவேண்டும் என்று நினைத்திருந்த நேரம் தாண்டியும் அமர்ந்திருந்தான். 

அவ்வப்போது அலைபேசியைப் பார்த்துக் கொண்டாள். இரண்டுமுறை அவளே அதிலிருந்து யாருக்கோ ட்ரை செய்துவிட்டு லைன் கிடைக்காமல் கட் செய்தாள்.  கொஞ்சநேரம் கழித்து அலைபேசியில் ஓசை வர, எடுத்துப் பேசினாள். அருகிலிருக்கும் இவனுக்குக் கூட என்ன பேசுகிறாள் என்று தெரியாத மென்மையான பேச்சு. அலைபேசியை வைத்தவள், தன்னைச் சரிப் படுத்திக் கொண்டாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள். 
 இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"ஸோ...  கிளம்பறேன்..."

தலையசைத்தான். 

பையனை அருகில் அழைத்தாள். 'அங்கிளுக்கு டாட்டா சொல்லு' என்றாள்.

அவன் கன்னத்தைத் தட்டியவன் "உன் பேர் என்ன? என்ன கிளாஸ் படிக்கிறே" என்றான்.

ஒரு சின்ன எதிர்பார்ப்பு...

அவன் இவன் பெயரைச் சொல்லவில்லை என்பதாலோ என்னவோ அவன் என்ன படிக்கிறான் என்று சொன்னது இவன் காதில் விழவில்லை!

மகனின் கையைப் பிடித்தபடி நிதான நடையில் சென்றுகொண்டிருக்கும் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

Dr H. அமலா பால் பல் வைத்தியர்


பல் சற்று குறுகுறுக்கிறது என்று சொன்னவுடன் ராகவன் 'நான் ஆபீசிலிருந்து வரும் வழியில் ஒரு போர்டு தினம் பார்க்கிறேன். அமலா பால் என்றொரு டாக்டர். சின்ன இடம் தான்.  ஆனால் பக்கத்தில் வண்டி நிறுத்த வசதியாக நிறைய இடம் இருப்பதனாலோ என்னவோ நிறைய பேர் குழந்தை குட்டிகளை அழைத்துக் கொண்டு வருவதைப் பார்க்கிறேன்.' என்றார்.



எங்கே என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக விசாரித்துக் கொண்டேன் ராஜு  என்கிற நான்.


மறு நாள் வெள்ளிகிழமை.  ராகவன் சொன்ன இடத்துக்கு சென்றால் கூட்டமே இல்லை.  வண்டியை அவர் சொன்னது போல பக்கத்தில் இருந்த காலி மனையில் நிறுத்திவிட்டு நாம் சற்று முன்னர் வந்து விட்டோம் போலிருக்கிறது என்றெண்ணி தெருவின் கடைசி வரை ஒரு முறை நடந்துவிட்டு மீண்டும் ஒரு முறை பார்க்கும் நேரம் 0930 - 1230 & 1630 - 2030 என்றும் இன்னும் என்னவோ எழுதியிருக்க கிட்டே போய் பார்த்த பின் தான் வெள்ளி விடுமுறை என்பதும் அதனால் தான் என்னையன்றி வேறு யாரும் வராததன் காரணமும் புரிந்தது. 

மாலை ராகவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் 'என்ன ராகவா இப்படி செய்து விட்டே.   டென்டிஸ்ட் வெள்ளிக் கிழமை லீவுனு சொல்லக் கூடாதா?' என்றேன்.   இதன் நடுவே கிராம்பு,  ஏலக்காய்,  ஜாதி பத்திரி என்று விதம் விதமாக  சாப்பிட்டு பல் கூச்சம் குறைந்து போயிருந்ததால் அமலா பால் நினைவே வரவில்லை.  இரண்டொரு வாரம் கழித்து மீண்டும் பல்வலியும் தொடர்ந்து அமலா பால் நினைவும் வர வாட்சைப் பார்த்து வேலை நேரம் வெள்ளிக்கிழமை அல்லாததை உறுதி செய்து கொண்ட பின்னர் கிளம்பினேன்.



நல்ல கூட்டம்.  எல்லோருமே ஒரு குழந்தையை அழைத்து வந்திருந்தவர்கள்  என்னைப் பார்த்ததும் ஏன்  எழுந்து நின்றனர் என்பது புரியாமல் ஒரு அரைப் புன்னகையுடன் கிடைத்த இடத்தில் உட்கார்ந்தேன். சற்று நேரம் கழித்து குறுந்தாடியுடன் இளைஞர் ஒருவர் உள்ளே நுழைய அவரைப் பார்த்ததும் எனக்கு மற்றவர்கள் காட்டிய மரியாதையின் காரணம் புரிந்தது.  பல் வலிக்கிறது என்று ஷேவ் செய்யாமல் விட்ட தாடிதான் மரியாதைக்குக் காரணம். கூடியிருந்தவர்கள் என்னை டாக்டர் என்று எண்ணச் செய்தது .

என் முறை வந்ததும் நான் உள்ளே செல்ல தாடிக்கார டாக்டர் என்னைத் தாண்டி வாயிற்படியை நோக்கிப் பார்வையை செலுத்த நானும் திரும்பிப் பார்த்தேன் [அமலா பால் ?] யாரும் இல்லை. டாக்டர் 'வாங்க. உட்காருங்க' என்று சொல்லி விட்டு மீண்டும் தயங்குவது போல  ' குழந்தை...' என்றிழுக்க, பல்வலி எனக்குத் தான் என்றேன்.  குழந்தைகளுக்குப் பல் வைத்தியம் என்றெழுத போர்டில் இடமில்லை என்பதால் பால்-பல் வைத்தியம் என்று எழுத வைத்தேன் என்று அவர் கூறியதும் தான் அவர் டாக்டர் ஹமீது அமலா,  குழந்தைகள் பல் வைத்தியர் என்பதும் புரிந்தது.


என்னை மாதிரி அமலா பாலைப் பார்க்க எத்தனை பேர் வந்தார்களோ தெரியாது ஆனால் பலர் போர்டு படிக்காமல் யாரோ சொல்லி வந்தவர்கள் என்பது அவர்கள் குழந்தைகளை அழைத்து வந்ததிலிருந்தே புரிந்தது.

பல் வலி என்ன ஆயிற்று என்கிறீர்களா ?

மேலும் படியுங்கள்.

டாக்டர் அமலா [பால்! என்ன ஒரு ஏமாற்றம்!] சிபாரிசின் பேரில் டாக்டர் வெண் பிங் சாங்கைப் போய் பார்த்தேன்.  இரண்டு தெரு தள்ளி சற்றே பெரிய இடத்தில் இருந்தது.  கூட்டம் அதிகமாயில்லை. இரண்டோருவர்தான் முனகிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

சாங்குக்கு ஐம்பது வயதிருக்கும்.  குலம், கோத்ரம், ஜன்ம லக்கினம் தவிர எல்லாவற்றையும் விசாரித்த பின்னர் டென்டிஸ்ட் நாற்காலியில் அமரச் சொல்லி வாயைத் திறக்கச் சொல்லிப் பல திசைகளிலிருந்தும் டார்ச் அடித்துப் பார்த்தார். பின்னர் சின்ன X ray  மெஷின் கொண்டு வந்து இடது கன்னத்தை ஒட்டி வைத்து சற்று நேரம் அசையாதிருங்கள் என்று ஒரே ஒரு ஷாட் எடுத்துக் கொண்டு 'நாளை வாருங்கள்.  பல்லை எடுக்கணுமா இல்லை மருந்து கொடுத்தே சரி பண்ணி விடலாமா என்று பார்ப்போம் என்றார்.


மறு நாள் சாங்கின் கிளினிக்குள் நுழைந்ததும் 'வாங்க சார்.  டாக்டர் அமலா உங்களையும் இங்கே தான் அனுப்பினாரா என்று ஒருவர் கேட்டுக்கொண்டே அவர் பக்கத்தில் இருந்த [ நாற்]காலியை சுட்ட அதில் உட்கார்ந்தேன்.

டாக்டர் சாங் யாரோ ஒரு பேஷண்டின் பல்லைப் பிடுங்குவதில் படு பிசி.  கணேஷ் - அவர்தான் என்னைப் போலவே அமலா சொல்லி இங்கு வந்தவர்...ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர் 'ராமர் கோவில் கட்டுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க, உங்கள் கேள்வியே தப்பு.  ராமருக்குக் கோவில் கட்டுவது பற்றி என்று சொல்லியிருக்க வேண்டும். என்று நான் என் தமிழ்ப் புலமையைக் காட்டப் போய்   கடைசியில் 'அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவது பற்றிய என்னுடைய அபிப்பிராயம் என்று அவர் கேட்க நான் அதிலென்ன தப்பு மசூதி கட்டுவதற்கு முன் அங்கே கோவில் இருந்தது உண்மை என்றால் கோவில் கட்டுவதில் தவறிருப்பதாக எனக்குத்தெரிய வில்லை என்று சொன்னேன்.

கணேஷ் என் பதிலில் திருப்தி அடைந்தவராக சற்று மெளனமாக இருந்தார்.  கொஞ்ச நேரம் கழித்து 'அப்படீன்னா சீனாக்காரர்கள் செய்வது விஞ்ஞான பூர்வமாக சரியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது' என்று தனக்குள் முணுமுணுப்பது எனக்குக் கேட்டும் நான் எதுவும் சொல்லவில்லை.  'சார் எல்லோரையும் போலத்தான் நீங்களும். பல் வலித்தால் கூட தாங்க முடியவில்லை என்றால் வைத்தியரை நாடி வருகிறோம் சற்றுப் பரவாயில்லை என்றால் பல் வைத்தியர் பற்றி சிந்திப்பதே இல்லை'. இவருக்கு என்ன ஆயிற்று என்று நான் யோசிக்க முயலும் முன் சங் என்னை அழைக்க உள்ளே சென்றமர்ந்தேன்.  

என்னுடைய Xray படத்தை எடுத்து கிளிப்பில் வைத்து லைட்டை ஆன் செய்தவர் 'உங்கள் பல்லில் சுற்றுப் புறம் சுத்தம் செய்து 15 நாட்களுக்கு தொடர்ந்து மருந்து போட்டால் பல்லை எடுக்க வேண்டி வராது என்றவர். 'ஆமாம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சரி என்று தானே சொன்னீர்கள்?  நானும் கேட்டுக் கொண்டு தானிருந்தேன் ' என்றார்.


'ஆம் அது பற்றி நீங்கள் ....' என்று நான் தொடருமுன் மறித்தவர்,

'இந்திய உப கண்டம் வடக்கு நோக்கி நகர்வதாக விஞ்ஞான பூர்வமாக ஆய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது' என்றார்.


மேலும் தொடர்ந்து,  'அப்போ பல்லாயிரக் கணக்கான வருடங்களாக சீனாவின் மீது இந்திய ஆக்கிரமிப்பு தொடர்கிறது இல்லையா ?' என்றும் கேட்டு விட்டு இ'ப்போது அவர்கள் [கவனிக்க "அவர்கள்"] செய்வது நியாயம் என்று சொல்வீர்களா ? ' என்றார்.  

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை !