வியாழன், 29 ஜனவரி, 2015

2. ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி.




சென்னையில் நவீன திருமண மண்டபங்களைப் பார்த்துப் பழகியிருந்த கண்களுக்கு இந்த மண்டபம் பழைய பாணியில் சற்றே வித்தியாசமாக இருந்தது.  அகலவாக்கில் சிறிய சைஸில் இருந்தது.  திருமணம் நடக்கும் மேடைக்கு தனி செக்ஷன் போல ஒரு பார்டிஷன்.  ஆனாலும் சிறிய மண்டபம்தான். 

ண்டபத்துக்குப் பின்னால் இரண்டாம் கட்டுக்குச் சென்றால், (மேலேயும் கீழேயும்) மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தங்குமிடம் கொஞ்சம்  பெரிய இடமாக அழகாக இருந்தது!  

மூன்றாம் கட்டுக்குப் போனால் சாப்பிடுமிடம்.  நான்காம் கட்டு கை கழுவுமிடம்.  நவீன மண்டபங்களும் ஸ்ரீரங்கத்தில் நிறையவே இருக்கின்றன.  

இரவு சாப்பிட்டபின்(னும் முன்னும்) உறவுகளிடம் கொஞ்சம் பேசி விட்டு திரு கௌதமனின் சம்பந்தி வீட்டில் சென்று இரவு படுத்து விட்டோம்.  அதிகாலை 3 மணிக்கே விழிப்பு வந்துவிட,  சித்தப்பா தான் கிளம்பிச் சென்று காவேரியில் குளிக்கப் போவதாய்ச் சொன்னார்.  "யார் யார் கூட வர்றீங்க?" என்றார்.  கேஜி முதலில்,  'தான் காவிரியில் குளிக்கா விட்டாலும் சும்மா பார்க்கக் கூட வருவதாக'ச் சொன்னார். 'நானும் வேடிக்கைப் பார்க்க வருகிறேன்' என்றேன்.   நான்கரை மணிக்கு நான் வீட்டிலேயே குளித்து விட்டு, காவிரிக்குக் கிளம்புபவர்களுடன் கிளம்பினேன்.  


குளிப்பவர்கள் இரண்டுபேரும்  (ஆம், இன்னொருவரும் குளிக்க ரெடியாகி விட்டார்) முன்னால் சென்றுவிட, குளிக்காத, வேடிக்கை பார்க்கக் கிளம்பிய நாங்கள் மூன்று பெரும் பின்னால் சென்றோம்.  எல்லோருக்குமே அந்நேரத்திலேயே எழுந்து சிரமம் பார்க்காமல் காபி தந்து உபசரித்தார்கள் அந்த வீட்டுத் தலைவி.  அம்மா மண்டபம், கருட மண்டபம் குழப்பத்தில் அவர்கள் சரியாக இடது புறம் திரும்பி கருட மண்டபம் சென்றிருக்க, நாங்கள் வலதுபுறம் திரும்பி அம்மா மண்டபம் சென்றோம்.


அந்நேரத்திலும் அந்த ஏரியா கலகலப்பாக இருந்தது.  டீக்கடைகள் சுறுசுறுப்பாக டீ போட்டபடி இருக்க, ஓரிரு கடைகளில் வடை கூடப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  நிறைய டூரிஸ்ட் - குறிப்பாக வடநாட்டுப் பயணிகள் - கண்ணில் பட்டார்கள்.


உள்ளே சென்று காவிரியை இருளில் தரிசித்தோம்.  அந்த இடங்களில் குளிக்குமளவு தண்ணீரைத் தேக்கியிருந்தார்கள்.  அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டதிலிருந்து நாங்கள் இருக்கும் திசைக்கு நேரெதிர்த் திசையில் அவர்கள் குளித்துக் கிளம்புகிறார்கள் என்று அறிந்தோம்.  கரையில் நின்றிருந்த தும்பிக்கை நண்பரை இருளிலேயே படம் பிடித்துக் கொண்டு திரும்பினோம்.


அவர்கள் தனியாக, நாங்கள் தனியாக வீடு வந்து சேர்ந்தோம்.  இந்த வகையில் அதிகாலை நாலரை மணி முதல் ஐந்தே முக்கால் வரை ஒரு நடைப்பயிற்சி முடித்தோம்!

அந்த நடைப் பயிற்சியில் ராமன் பிரம்ம குமாரிகள் சங்கம் வழங்கும் சொற்பொழிவுகள் சென்று வருவதாகக் குறிப்பிட்டு, அவர்கள் சொல்லும் தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறிக் கொண்டே வந்தார்.  அவ்வளவு கோர்வையாக அந்தக் குழப்ப விஷயத்தை அவர் தடையில்லாமல் சொல்லிக் கொண்டு வந்தது எனக்கு வியப்பைத் தந்தது.  உண்மையில் 'மரணமும், மரண பயமும்' என்ற தலைப்பில் பேச்சு தொடங்கியிருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் அதற்குள் வீடு வந்து விட்டதே என்றுதான் தோன்றியது.

உடனடியாகக் கிளம்பி மண்டபம் வந்து விட்டோம்.  இங்குமொரு காபியைக் குடித்து விட்டு, கொஞ்ச நேரம் திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்து, படம் பிடித்து, உடனுக்குடன் வாட்சப்பில் உறவு க்ரூப்புக்கு அனுப்பிக் கொண்டுமிருந்தோம்.


7 மணிக்கு டிபன் சாப்பிட்டு விடலாம் என்று முடிவு செய்தோம்.  சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் சென்றால் அங்கே மண்டபத்தில் பதிவர் மீட் வைக்க முடியுமா என்று கேஜி ஒரு யோசனை சொன்னார்.  பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் அது சாத்தியமில்லை என்று புரிந்தது.  எங்கே விட்டேன்?  டிபன் சாப்பிட... அது முக்கியம். எதைச் சொல்கிறோமோ இல்லையோ இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் சொல்லி விட வேண்டும்.  என்ன சொல்கிறீர்கள்?  அப்புறம் சாப்பாட்டு ராமன் என்ற என் நற்பெயருக்குக் களங்கம் வந்து விடுமே....

சிலர் மட்டுமே அமர்ந்திருக்கும் அதிகாலை சாப்பாட்டுக் கூடம்.  முதல் இரண்டு வரிசைகள் மட்டுமே பாதிப் பாதி நிறைந்திருந்தது.  பரிமாறுபவர்கள் சௌகர்யம்.  

முதலில் பெயர் தெரியாத ஸ்வீட் போட்டார்கள். ஆனால் ஸ்வீட்டாக இருந்தது. நல்ல சிகப்புக் கலர்!  அடுத்துப் போட்டது ரவா கிச்சடியா, ரவாப் பொங்கலா என்ற சந்தேகம் எனக்கு இன்னமும் உண்டு.  


எதுவானால் என்ன, சூடாக, - எவ்வளவு சூடு என்றால் தொண்டைக்குழி வழியாக சூடாக இறங்கி, வயிறு வரை சூடு தெரியும் வரைப் பயணிக்கும் அளவு சூடு - இதற்குத் தொட்டுக் கொள்ளத் தேங்காய்ச் சட்னி மட்டும் போட்டுச் சென்றவரைக் கடுப்புடன் பார்த்தேன்.  பின்னாலேயே ஒருவர் சாம்பாருடன் வந்து வயிற்றில் சாம்பாரை வார்த்தார்.  


அடுத்து ஒருவர் ஒற்றை இட்லி போட்டவாறு செல்ல, அவரை அழைத்து 'ஆகாது, தப்பு! ரெண்டு ரெண்டாப் போடுங்கோ' என்று இரண்டாவது இட்லியும் வாங்கிக் கொண்டேன். அரைக்கரண்டி மட்டும் சாம்பார் விட்டு விட்டு தாண்டிச் சென்று திரும்பியவரை எதிர்த் திசையில், எனக்கு நேராகப் பரிமாறியபோது கையும் சாம்பார் வாளியுமாகப் பிடித்து இன்னும் இரண்டு கரண்டி சாம்பார் வாங்கி இட்லியையும், கிச்சடிப் பொங்கலையும் சாம்பாரில் குளிப்பாட்டினேன்.  அடுத்து வந்தது உள்ளங்கையை விட சற்றே பெரிதான அளவில் இருந்த ஊத்தப்பம்.  ஏற்கெனவே எக்ஸஸில் வாங்கி வைத்திருந்த சாம்பார் இதற்கும் உதவியது!  ஒற்றை ஊத்தப்பத்தை நான் ஒத்துக் கொண்ட காரணம் அடுத்து பூரி வரும், அதைச் சாப்பிட வயிற்றில் இடம் இருக்க வேண்டுமே என்றுதான்.  ஆனால் ஐயகோ...இதோடு எல்லோரும் சென்று முன்னால் செட்டிலாகி விட்டார்கள்.  வேறு ஐட்டம் இல்லை!


என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.  எழுந்து விட்டோம்.  டிபன் சாப்பிட்ட உடன் காபி சாப்பிடுவது தமிழர் மரபாகையால் இங்கும் ஒரு காபி ("சர்க்கரை கம்மியாய்!") வெளியே வந்தோம்.  "ஏவ்..."

ஆறே முக்கால் ஆனது.  இந்நேரம் நண்பர்களுக்கு அலைபேசினால் அவர்களுக்கும் தொந்தரவிருக்காது என்று முடிவு செய்து, முதலில் நான் கீதா மேடத்துக்கு அலைபேசியில் பேசினேன்.  வெங்கட் நாகராஜும் அவர் திருமதியும் வேறொரு விசேஷத்துக்காக வேண்டி சென்னை கிளம்பிச் சென்றிருக்கிறார்கள் என்ற தகவலைத் தெரிவித்தார் கீதா மேடம்.  நாங்கள் ஐந்தாறுபேர் வருவோம் என்று கூறியும் அசராமல் 'தாராளமா வாங்க' என்றார். 

கௌதமன் திரு வைகோ அவர்களுக்கும், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களுக்கும் பேசினார்.  எல்லோரையும் ஒரு இடத்தில் பார்க்க முடியுமா என்று நாங்கள் நினைத்த எண்ணம் நிறைவேற வழியில்லை என்று தெரிந்தது.


ஆர் ஆர் ஆர் அவர்களுக்கு வீட்டை விட்டு நகர முடியாத சூழல்.  வைகோ அவர்கள் கண் சிகிச்சைக்காக வெளியே கிளம்ப வேண்டிய நிலை.  அரங்கனைத் தரிசிக்கக் கோவில் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.   நேரமோ எட்டு மணி முதல் ஒன்பதரைக்குள்!

                                                                                                                                                         
                                                                                                                                          - தொடரும் -

29 கருத்துகள்:

  1. இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன். பாயாசம். கிடாரங்காய் ஊறுகாய், ரவா கிச்சடி (எனக்கு தெரிந்து ரவா பொங்கல் போடுவதில்லை), இட்லி, சாம்பார், காபி என்று நல்ல ருசி..... அப்புறம்? இதன் அடுத்த தொடர்ச்சியையை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையாகவும் பொறுமையாகவும் பயணக்கட்டுரையை நகர்த்திச்சென்றுள்ளீர்கள்.

    ராஜாகோபுரத்திலிருந்து அம்மா மண்டபம் வரை மெயின் ரோட்டிலேயே இருபுறமும் மிகப்பிரமாதமான கல்யாண மண்டபங்கள் அமைந்துள்ளன.

    மற்றபடி ஸ்ரீரங்கத்தில் உள்ளடங்கி அமைந்துள்ள மண்டபங்கள் யாவும்
    இதுபோலத்தான் ... ஒன்றும் சரியாக இருக்காது.

    அந்தக்காலப் பழைய ஆனால் சற்றே பெரிய வீடுகளையே கல்யாண மண்டபமாக ஆக்கியுள்ளார்கள்.

    அதனால் எல்லோருக்குமே சிரமம் தான்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. // வைகோ அவர்கள் கண் சிகிச்சைக்காக வெளியே கிளம்ப வேண்டிய நிலை.//

    அன்று கண் சிகிச்சை எனக்கு அல்ல. என் மனைவிக்கு.

    விழித்திரை SPECIALIST ஒருவர் சென்னையிலிருந்து திருச்சி மஹாத்மா கண் மருத்துவ மனைக்கு வருவார் என்று அவரிடம் ஓர் OPINION கேட்க வேண்டும் என்று சொல்லி 25.01.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு மேல் 3 மணிக்குள் அவர்கள் சொல்லும் நேரத்திற்கு வரவேண்டும் எனச்சொல்லி appointment fix செய்திருந்தார்கள்.

    ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் சென்னையிலிருந்து அன்று வரவில்லை என்றும் நாங்கள் 8.2.15 ஞாயிறு அன்று வந்தால் போதும் என்றும் மாற்றி விட்டார்கள்.

    இந்தத்தகவல் 25.01.2015 ஞாயிறு காலைதான் எனக்கு போன் மூலம் தெரிவித்தார்கள். நல்லவேளையாக நாங்களும் அதுவரை வீட்டைவிட்டே புறப்படவில்லை.

    எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, திரு. KG கெளதமன் சாருக்கு பலமுறை போன் செய்து, நம் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வாங்கோ, என்றேன். அவர் சொல்லித்தான், ஸ்ரீராம் ஆகிய தாங்களும் வர இருப்பதும் எனக்குத் தெரியவந்தது.

    மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் அன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது, மிகவும் மகிழ்ச்சியளித்தது.

    அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளது.

    இது அனைவரின் தகவலுக்காகவும்.

    காணத்தவறாதீர்கள் !

    கருத்தளிக்க மறவாதீர்கள் !!

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் அன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது, மிகவும் மகிழ்ச்சியளித்தது.

    அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளது.

    இது அனைவரின் தகவலுக்காகவும்.

    காணத்தவறாதீர்கள் !

    கருத்தளிக்க மறவாதீர்கள் !!

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  7. இன்று மாலை 5 to 7 pm வேறொரு பிரபல பதிவருடன் முக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அதையும் நான் பிறகு யோசித்து வெளியிட வேண்டியிருக்கும்.

    அதனால் என் தொடர் பதிவான
    ‘என் வீட்டுத்தோட்டத்தில்....’
    நிறைவுப்பகுதி 16/16 [101-110] ஓரிரு நாட்கள் தள்ளி வெளியிடப்பட உள்ளது.

    இதுவும் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  8. இருட்டுல காவிரியைப் பார்த்த புண்ணியவான். காலையில் பார்த்திருந்தால் வேண்டாதது கண்ணில் பட்டிருக்கும். கல்யாண காலை உணவு விவரணை பிரமாதம். கீட்டு வாங்கி சாம்பார் குடித்தது இன்னும் பிரமாதம். இனி பதிவர் சந்திப்பு. கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் பார்த்திர்களா.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு ஒரு சந்தேகம்.

    நன்றாக வக்கணையாகச் சாப்பிடுகிறவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள், என்று.

    எல்லாம் பக்கத்து இலை பார்த்த வர்ணிப்போ?...

    பதிலளிநீக்கு
  10. //அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளது. //

    இம்மென்று சொல்லுமுன்பே, இந்தா எடுத்துக்கோ வேகமோ?..

    வரார்! வரார்! சுடசுடப் புகழ் வைகோ சார், வரார்!

    நள்ளிரவில் மலரும் அல்லியென
    பதிவு மலரப்போகுது!

    பொழுது புலர்ந்தாலும் பூத்திருக்கும்! பார்த்துக்கோங்கோ!

    பதிலளிநீக்கு
  11. சாம்பார் ஊத்திண்டது சரி, அது நல்லா இருந்ததானு சொல்லவே இல்லையே! இப்போல்லாம் இந்தக் குட்டி ஊத்தப்பத்தைப் போட்டுடறாங்க. நல்லாவே இருக்கிறதில்லை. :) தோசை எல்லாம் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் கல்யாணங்களில் பார்க்க முடியலை. முதலில் போட்ட ஸ்வீட் அசோகாவா? அது தான் சிவப்பாக இருக்கும். ஆனால் இங்கே வெறும் கோதுமை மாவில் சர்க்கரைப் பாகு போட்டுக் கிளறிச் சிவப்புக் கலர் சேர்த்துப் பரிமாறிடறாங்க. சகிக்காது. நாக்கில் ஒட்டிக்கும். :)

    பதிலளிநீக்கு
  12. எப்போ போஸ்ட் போடறீங்கனு தெரியறதே இல்லை. நம்ம டாஷ்போர்டிலே எதுவுமே காட்டறதில்லை. சுத்தம்! :))) அப்படிக் காட்டினாலும் ஒரு மாதம் முந்தைய பதிவுகள். :)

    பதிலளிநீக்கு
  13. ரிசப்ஷன் சாப்பாட்டைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. கல்யாணச் சாப்பாட்டை மற்ந்துடாதீங்க. அதோட வர்ணனையும் முக்கியம்! :)))

    பதிலளிநீக்கு
  14. ஆனால் கல்யாணச் சாப்பாடு என்றால் அது சென்னையில் தான். வித விதமாய் இருக்கும். நம்மால் சாப்பிட முடியாது. பல ஐடங்களைப் பார்ப்பதோடு திருப்தி அடையணும். இங்கெல்லாம் லிமிடெட் சாப்பாடு தான். அதோடு அப்படி ஒண்ணும் ருசிகரமாச் சமைக்கிறதும் இல்லை. :))))) மதுரையில் இன்னமும் மோசம்.

    பதிலளிநீக்கு
  15. ’ருசி’ யான ;பகிர்வு.அனுபங்களைச் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  16. காலை பலகாரம் சாப்பிட்ட உணர்வு. நாங்கள் தான் உங்களைச் சந்திக்க முடியாது போனது!

    பதிலளிநீக்கு

  17. திருமண அல்லது எந்த விசேஷ விருந்துக்குச் சென்றாலும் பரிமாறுபவர் வேகத்துக்கு என்னால் சாப்பிட முடியாது. பலன் விருந்துக்குப் போய் வரும் அனுபவம் மட்டுமே. மற்றபடி வயிறு நிறைவதெல்லாம் நினைக்க முடியாதது. I am a very slow eater. !

    பதிலளிநீக்கு
  18. நீங்க கல்யாணத்துக்கு தான் போனீங்களான்னு சந்தேகம் வந்துடுச்சு....
    "//"ஏவ்..."//" - இந்த சத்தம் சிட்னி வரைக்கும் கேட்டுச்சு.
    சரி,சரி அடுத்த பதிவுல மதிய சாப்பாடு பற்றி சொல்லிடுங்க...

    பதிலளிநீக்கு
  19. //தும்பிக்கை நண்பரை //

    ஆஹா.... அருமை!

    பதிவைத் தொடர்கின்றேன்.

    காலங்கார்த்தாலை இவ்ளவும் சாப்பிட முடிஞ்சதோ?

    பதிலளிநீக்கு
  20. //"....பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி//.
    திருச்சி வரைக்கும் வந்துட்டீங்க, அப்படியே 'திருச்சி-ஹௌரா'வப் பிடிச்சு சுமார் 20 மணி நேரம் பயணப் பட்டு இருந்தா என்னையும் பாத்திருக்காமில்ல ?

    # Opportunity missed.

    பதிலளிநீக்கு
  21. சாப்பாட்டை ரசிச்சிருக்கீங்க...
    தொடருங்கள் அண்ணா... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  22. காலை டிபன் வர்ணனை அருமை. அது ரவாப்பொங்கலாகத்தான் இருந்திருக்கும்...:) நாங்களும் சென்ற வாரத்தில் சென்னையில் கல்யாணத்தில் ருசித்தோம்....:)

    கீதா மாமி எங்களுக்கு தகவல் தரும்போது பல்லவனுக்காக ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்தோம்...:)

    அடுத்த முறை முடிந்தால் சந்திக்கலாம்...:)

    பதிலளிநீக்கு
  23. ஹஹாஹ் நகைச் சுவை இழையோடிய பயணக் கட்டுரை. ஆனாலும் பாருங்க நண்பரெ! இப்பல்லாம் எங்கள் டாஷ் போர்ட் எப்போ உங்க இடுகை வருகின்றதுனு காட்ட மாட்டேங்குது...லேட்டாத்தான் காட்டுது. இல்லன நாங்க பாக்கும் போது அது கீழ போயிடும்....இப்ப எப்படிக்கண்டு பிடிச்சோம்...எங்க ப்ளாக்ல திடீர்னு "ஏவ்" அப்படின்ற சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துதா..என்னடானு பார்த்தா அது எங்கள் ப்ளாக்...அப்பதான் தெரிஞ்சுச்சு நீங்க சாப்ட ஐட்டம் ... இப்படி ஏமாத்திட்டாங்களே பூரி போடாம....

    ஏன் ரிசப்ஷன் டின்னர் மெனு ஏன் போடலை? வெயிட்டிங்க் அடுத்த பதிவிற்கு.....

    பதிலளிநீக்கு
  24. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆற்றில் குளிக்க ஆசை இல்லையா? ஆம்.குடும்ப நிகழ்வுகள், விழாக்கள் உடனுக்குடன் காணக் கிடைக்கின்றன, வாட்ஸ் அப் உதவியால்.

    தொடரக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் சொல்லியிருக்கும் வர்ணனையைப் பார்த்ததால், பேசாமல் பெயரை சா.ராம் என்று மாற்றிக்கொண்டு விடலாம் போலிருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  26. பயண அனுபவ பதிவு அருமை.
    விழாக்கள், கல்யாணநிகழ்வுகளை நேரடி காட்சியாக உடனுக்கு உடன் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி அவர்களையும் மகிழ்ச்சி படுத்துகிறோம்.
    வாட்ஸ் அப் வாழ்க!
    அடுத்து பதிவர் சந்திப்பு படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!