புதன், 18 மார்ச், 2015

தொலை(த்)ந்த நிம்மதி


தினம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும்வரை மெகானிகலாக ஒரே மாதிரி வாழ்க்கை.  ஐந்து மணிக்கு அலாரமே வேண்டாம், தானே தூக்கம் விட்டுப்போய்விடும். எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி.  வயதாக, ஆக இதுமாதிரிக் கட்டாயங்கள் சேர்ந்து விடுகின்றன. அப்புறம் வீடு வந்து கொஞ்ச நேரம் ஒட்டாமல் கணினியில் ஃபேஸ்புக். 
 

                                                                  Image result for working in computer clipart images
 
டிவியில் பக்தி சேனலும், செல்லில் விஷ்ணு சகஸ்ரநாமமும் ஓடிக்கொண்டிருக்க, அவன் மனைவி அவனுக்காக அவசரம் அவசமாக ('ர' கூட விட்டுப் போகுமளவு அவ்வளவு அவசரம்) சமைத்துக் கொண்டிருந்தாள்.  இதோ கிளம்ப வேண்டும்.  இப்போதே கிளம்பினால்தான் அலுவலக பஸ் வரும் தூரத்தை அடைய முடியும். அலுவலக பஸ் பிடித்தால் சுத்தமாக ஒரு மணிநேரம் பயணம். 
 

                                                                   Image result for reading newspaper clipart images
 
ஒரே பாதையில், ஒரே மாதிரி தினமும் அலுவலக பஸ் பிடித்து பயணம்.  அலுவலகத்தில் ஒரே மாதிரி பணிச்சுமை.  மாலை வீடு திரும்பி, காலை இவன் கிளம்பிய பிறகு வந்திருக்கும் செய்தித் தாள்களை மேய்ந்து, தொலைகாட்சி பார்த்து, இரவு உணவு உண்டு படுக்கச் சென்றால்,  மறுநாள் மறுபடி...


மகன் வெளியூரில் வேலை பார்க்கிறான்.  மகளுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது. 

சமீப காலமாக மனது முழுவதும் ஒரு அலுப்பு மண்டிக்கொண்டு வருகிறது.  சுஜாதா தன்னுடைய 'கற்றதும் பெற்றதும்' பதிவில் சொல்லிய ப்ராக்ரஸ்ஸிவ் காம்ப்ரமைஸ் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. 


வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவனுக்கும் கனவுகள் இருந்தன. காதல் இருந்தது.  கனவுகள் போலவே காதலும் கட்டுப்படுத்தப்பட்டது.  கனவுக்கு சம்பந்தமில்லாமல் வேலை கிடைத்தது.  வேலையில் சேர்ந்ததும் ஆறுமாதமோ ஒரு வருடமோ கழித்து சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், அதை மனைவியின் பெயரில் தொடங்க வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது.  காதலி மனைவியாகாமல் புதிய முகம் ஒன்று மனைவியாக வந்தபோது தன் எண்ணம் நிறைவேறும் என்ற எண்ணம் அடிபட்டுப் போனது. 


அப்போதே தொடங்கி விட்டது இயந்திர வாழ்க்கை.  வெளிவரும் திசையறியாது அதன் போக்கில் போகத் தொடங்கினான். சீக்கிரம் ஒரு மாறுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் கொஞ்ச நாட்களுக்கு நினைவில் இருந்தது.   நாள்பட அதுவும் மறந்து, அப்படியே காலமும் ஓடிவிட்டது.


அலுப்பு ஏற்பட்ட ஒரு உச்ச நாளில் ஒருநாள் தன் வழக்கத்திலிருந்து மாறத் தீர்மானித்தான். 

இரண்டு நாட்களாக கணவன் சற்றுத் தாமதமாகக் கிளம்புவதை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.  அதுவும் இரண்டாம் நாளும் அவன் தாமதமாகக் கிளம்பிய போதுதான்,  'நேற்றும் இப்படித்தான் கிளம்பினான்' என்று நினைவு வந்தது. அது மட்டுமில்லாமல், இரவும் நேரம் கழித்துதான் வந்ததும் நினைவுக்கு வந்தது.

ரொம்பக் கவலைப்படாமல் தன் வேலைகளில் மறந்து போனாள். நினைவுபடுத்தியது அலைபேசி!  பிரச்னையும் தொடங்கியது.
 

காலை பதினோரு மணி இருக்கும். திடீரென்று அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டது. அது அவள் கணவனின் அலைபேசி ரிங் டோன். பரபரப்புடன் ஹாலில் தேடியவள் டிவியின் மேல் இருந்த செட் டாப் பாக்ஸின் பின்னே இருந்த அலைபேசியை எடுத்தாள். 


"மறந்து வைத்து விட்டுப் போய்விட்டாரா?"

"RPK calling..."

அதை எடுத்து உயிர் கொடுத்து காதில் வைத்தாள். இவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க' என்று கேட்டது அவன் மேலதிகாரியின் குரல்.


                                                                           Image result for cell phone near TV clipart images


"எங்க மூன்று நாளாய் ஆளைக் காணோம்... உடம்பு சரியில்லையா? ஆபீஸுக்குச் சொல்ல வேண்டாமா?"

"என்னது.. மூன்று நாட்களாய் ஆளைக் காணோமா... தினமும் அங்கதான வர்றார்?"  அதிர்ச்சியுடன் கேட்டாள்.


"அவர் மிஸஸா?  என்னம்மா ஆச்சு அவருக்கு?  ஒரு வாரமாவே சரியில்லை.  அதுலயும் மூணு நாளாய் ஆளைக் காணோம்... இப்படி இருக்க மாட்டாரே... கூப்பிடுங்க அவரை.."

"ஸார்.. ஸார்..."  எதிர்பாராமல் கேட்ட செய்தியால் திக்கியது, தடுமாறியது அடுத்து வரவேண்டிய வார்த்தைகள். 


"ஆபீசுக்குத்தான் கிளம்பி தினமும் போல வந்துகிட்டு இருக்கார்... இன்னிக்கிக் காலையும் கிளம்பி வந்தாரே....  ஏன் ஃபோனை வச்சுட்டு வந்துட்டார்?  இல்ல, போயிட்டார்?
என்ன ஆச்சு?  மூணு நாளாய் வரவில்லையா?  கடவுளே..."

சிறிய நிசப்தத்துக்குப் பின் எதிர்முனை அமைதியாகியது. 

இவளது அமைதி குலைந்து போனது.  'என்ன ஆச்சு இவருக்கு? என்கிட்டே கூட ஒண்ணும் சொல்லலையே..  வரட்டும்'


மதியம் மீண்டும் அதே அலைபேசி அழைத்தது. பெயர் வராமல் ஏதோ நம்பர் வந்தது. எடுத்துப் பேசினாள்.  கணவன் குரல் கேட்டது.  விட்டு விட்டு வந்தது.

"என்னங்க... என்னங்க... எங்கே இருக்கீங்க...  ஆபீஸ் போகலையா? செல்லையும் விட்டுட்டுப் போயிட்டீங்க..."


அவன் பேசுவதே கேட்கவில்லை. உடைந்து உடைந்து வந்தது. இவள் பெயரை உச்சரிக்கிறான் என்று புரிந்தது.  கட் ஆகி விட்டது.  குழப்பம் ஏறியது.  அந்த எண்ணுக்கு இவள் டயல் செய்து பார்த்தாள். போகவில்லை.

மதியத்துக்குமேல் மீண்டும் அந்தத் தொலைபேசியில் அழைப்பு வந்தது. 


இந்தமுறை பேசியது ஒரு காவல்துறையின் அதிகாரக் குரல். 

"இந்த நம்பர் யாருதுங்க... பேர் சொல்லுங்க.. நாங்க போலீஸ்.."

பெயர் சொன்னாள்.

"அட்ரஸ் சொல்லுங்க.."


சொன்னாள்.

"சரியாத்தான் இருக்கு..  ஏம்மா உன் புருஷனா அவன்.. கள்ள வோட்டுப் போட வந்தான்னு சொன்னாங்க...  பிடிச்சா கஞ்சா வச்சுருக்கான்.  உள்ளே பிடிச்சு வச்சுருக்கோம்..  கிளம்பி வாங்கம்மா..."  காவல் நிலையம் பெயர் சொல்லியபிறகு தொடர்பு அறுந்தது.


" கள்ள ஓட்டா... தன்னுடைய ஒட்டையே இவன் போடவில்லையே... என்ன சொல்கிறார்கள்..."  வயிற்றைப் பிசைவது போல இருந்தது. மயக்கம் வந்தது.  யாருமே இல்லையே...  என்ன செய்வது?

காலிங் பெல் அடித்தது.  கதவைத் திறந்தாள்.  மகன் நின்றிருந்தான். 
 
 

                                                                      Image result for man standing outside the door clip art images
 
"என்னம்மா ஆச்சு உனக்கு?  நீயே கதவைத் திறக்கறே?"

"எனக்கு என்ன?  ஒண்ணுமில்லையே?"  காலையிலிருந்து நடக்கும் எதுவும் சரியில்லை என்று தோன்றியது அவளுக்கு.

"ஏன் அப்படிக்கேட்கறே?"

"நேத்து ராத்திரி அப்பா ஃபோன் செய்து வந்து அம்மாவுக்குத் துணையாயிரு'ன்னு சொல்லிட்டுக் கட் பண்ணிட்டார்.  அப்புறம் உடனே மறுபடி மறுபடி டயல் செய்தாலும் எடுக்க மாட்டேங்கறார்.  என்ன ஆச்சு அவருக்கு?  ஏன் படுத்தறீங்க?  என்ன நிலைமையில கிளம்பி வந்திருக்கேன் தெரியுமா?  என்னன்னு நினைச்சுக்கறது?"

ஸ்விட்ச் ஆன் செய்த மாதிரி அழத் தொடங்கினாள்.

லேண்ட்லைன் அடித்தது.  மகன் எடுத்தான்.  மகள்.  வெளியூரிலிருந்து பேசினாள்.  மகன் பாடிய அதே பல்லவி. மகன் குழப்பத்துடன் அம்மாவைப் பார்த்தபடியே ஏதோ பேசி விட்டு ஃபோனை வைத்தான்.

சாப்பிட்டு விட்டு, காவல் நிலையம் கிளம்பினார்கள்.

அங்கு அவர் இல்லை. -ஒரு மணி நேரத்துக்கு முன்னால் யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாய்ச் சொன்னார்கள்.

குழப்பத்துடன் வீடு வந்து மாலை வரைக் காத்திருந்தும் அவர் வரவில்லை.

மாலை 6 மணிக்குமேல் தொலைபேசி அலறியது.  பேசியது பெண்குரல்.
 


























இந்தக் கதையை எப்படியோ தொடர நினைத்து எழுதி வைத்து ஆறு மாதங்களாகின்றன.  முதலில் நான் நினைத்தபடி எழுத எனக்குப் பிடிக்கவில்லை.  வேறு எப்படித் தொடரவும் அலுப்பாக இருக்கிறது!  'கனவிலிருந்து விழித்துக் கொண்டவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்று வேகமாகக் கிளம்பினான்' என்கிற வரிகள் எனக்குப் பிடிக்கவில்லை!

வேறு என்ன செய்யலாம்?

உங்கள் யாருக்காவது ஏதாவது தோன்றினால் தொடருங்களேன்...  ஒவ்வொரு பகுதி ஒவ்வொருவர் கூடத் தொடரலாம்.  முடியவில்லையா?  விட்டு விடுங்கள்!  அவன் ஏதோ மிகப் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.  
 
 
தலைவிதி நன்றாயிருந்தால் வெளிவருவான்!




.

28 கருத்துகள்:

  1. முடிச்சு போட்ட நீங்கதானே
    அவிழ்க்கணும்:)

    பதிலளிநீக்கு
  2. இவ்ளோ தூரம் ட்ரெயின்ல கூட்டிடு போனீங்க சரியா திருவள்ளூர் ஸ்டேஷன்ல இறக்கி விடனும் :)
    வேப்பம்பட்டு கிட்ட இறக்கி விடுவது நியாயமில்ல :)

    பதிலளிநீக்கு
  3. நானே இன்று அதிசயமாக இங்கு வந்து இதை மிகவும் சுவாரஸ்யமாகப் படித்துக்கொண்டே வந்தேன் ............

    ஆனால் முடிவு தெரியாமலேயே என் ’நிம்மதி தொலைந்துவிட்டதே’ இப்போது.

    எனினும் இந்த (மொட்டையாக முடிந்துள்ள) பகிர்வுக்கு நன்றிகள் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  4. அவள் கணவன் பெயர் சொல்லி.. அவர் மிசஸ் தானே பேசறீங்க.. டாக்டர் பரசுராம் கிளினிக்குக்கு உடனே வர முடியுமா? அட்ரஸ் நோட் பண்ணிக்குங்க... என்று சொல்லிக்கொண்டே போனாள்..

    யார் டாக்டர் பரசுராம்.. நான் ஏன் அங்க வரணும்?

    டாக்டர் பரசுராம் is a psychiatrist. உங்க ஹச்பண்ட் இங்க இருக்கார். அவர நீங்க கொஞ்சம் வந்து கூட்டிட்டு போகமுடியுமா?

    தெய்வமே.. அவருக்கு ஒன்னும் இல்லையே.. உடனே வரேன்..

    ...

    "நான் டாக்டரோட அசிஸ்டன்ட்.. உள்ள கன்சல்டிங் ரூம்ல தான் இருக்காங்க.. உள்ள போங்க.."

    கதவை திறக்கும் போது சன்னமாக குரல் கேட்டது..

    "உங்களுக்கு கவலை படர மாதிரி ஒன்னும் இல்லை.. வருஷக் கணக்கா உள்ளேயே அடக்கி வச்சிருந்த பெண்ட் அப் ஸ்ட்ரெஸ் தான்.. அதுக்கு தான் இப்ப ஒரு எக்ஸ்பெரிமென்ட் தெரபியா இந்த மூணு நாள் ப்ரோக்ராமை சஜ்ஜெஸ்ட் பண்ணினேன்.. வழக்கமா இருக்கற மாதிரியே இருந்தாலும் சில ரோடீன்லருந்து வெளிய வந்துடுறது.. குடும்பத்தில எல்லாரோட ஒத்துழைப்பு கிடைக்கறது கஷ்டம்ரதால ஆபீஸ் போகாம அந்த நேரத்தில வெளியே சுத்த சொன்னேன்.. இது ஒரு திரில்..யாரு கிட்டயும் சொல்லாம விதிகளை மீறர திரில். வெறும் மூணு நாள்ங்கறதால அப்புறம் ஈசியா எக்ஸ்ப்ளைன் பண்ணிக்கலாம் அப்படின்னு தான் மூணு நாள் சொன்னேன்.

    ஆனா நீங்க இந்த விளையாட்டோட விதிகளையும் மீறிட்டீங்க.. மகன் கிட்ட / மகள் கிட்டல்லாம் சொல்லிட்டேன் .. இனிமே வீட்டுக்கு போகமாட்டேன் அப்படீங்கறீங்க.. .ஏதோ கள்ள ஒட்டு ... கஞ்சா அப்படீன்னெல்லாம் உங்க மனைவிகிட்ட கதை விட்டிருக்கீங்க. அதுவும் எங்க கிளினிக் செக்யுரிட்டிய வச்சு..

    உங்களுக்கு தேவை உடனடியா கொஞ்சம் ரெஸ்ட்.. ஒரு முப்பது நாள் லீவ் எடுத்துக்குங்க.. அந்தமான் மாதிரி கூட்டம் இல்லாத எடத்துக்கு போய் இருங்க.. பதினஞ்சு நாளுக்கப்புறம் இந்த ரொடீன மிஸ் பண்ண ஆரம்பிச்சுடுவீங்க..

    இதோ.. உங்க மனைவியே வந்துட்டாங்களே..

    பேசிக்கொண்டே போனார் டாக்டர் பரசுராம்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    மனிதனாக பிறந்திட்டால் வாழ்க்கை கடலலை போலதான்.... நன்றாக உள்ளது த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. சமீபத்திய பதிவர்கள் எல்லாம் சேர்ந்து, இது போல் ஒரு தொடரே ஆரம்பிக்கலாமா...?

    பதிலளிநீக்கு
  7. அட! அடிச்சு ஆடி இருக்கீங்க. பந்துவின் முடிவும் ஓகே தான். ஆனால் த்ரில்லிங் மிஸ்ஸிங். டிடியின் யோசனை நல்லா இருக்கே!

    பதிலளிநீக்கு
  8. இதெல்லாம் எப்போப் போடறீங்க? நான் பார்க்கிறச்சே எதுவுமே இருக்கிறதில்லை. அப்புறம் பார்த்தாப் பதிவு போட்டு ஏழெட்டுக் கருத்துக்களும் வந்துடுதே! :)))) நான் வர வர தூ.மூ. ஆயிட்டேனோ?

    பதிலளிநீக்கு
  9. கதை நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் உங்களுக்கு என்னங்க ஆச்சு, இப்படி நட்ட நடுவுல விட்டுடீங்க.
    முதல்ல உங்களுக்கு என்ன அச்சுன்னு சொல்லுங்க அப்புறம் அவன் என்ன ஆனான்னு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் சார் என்ன திடீர் விளையாட்டு :-)

    பந்து சார் நீங்க கொடுத்த முடிவு அட்டகாசம்...

    பதிலளிநீக்கு
  11. நன்றாக ஆரம்பித்து இருக்கு கதை.. தொடருங்க....
    Richard Gere வின் shall we dance படம் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  12. ஆகா
    புது முயற்சி நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. மனகுழப்பம்(பிரச்னையிலிருந்து ) கொஞ்சம் தெளியட்டும் அப்புறம் ஒரு முடிவுக்குவரலாம்.

    பதிலளிநீக்கு
  14. பகவான்ஜி... முடிச்சு விழுந்துடுச்சு... இன்னும் முடிச்சு போட முடியும்னா போடுங்களேன்.. யாராவது அவிழ்க்கட்டும்!

    ஏஞ்சலின்... நீங்க கூட டிரை செய்யலாம்! :)))

    வைகோ ஸார்... இருந்திருந்து நீங்கள் வந்து படிக்கும் பதிவா இப்படி அந்தரத்தில் தொங்க வேண்டும்? கவலைப்படேல்... யாராவது தொடரக் கூடும். மேலும் bandhu ஸார் அருமையா முடிச்சுட்டார் பாருங்க! ஹா...ஹா...ஹா...

    கில்லர்ஜீ.. பட்டுக்காம எஸ்கேப் ஆயிட்டீங்களே...!

    bandhu ஸார்.. கலக்கிட்டீங்க. எங்கள் பாஸிட்டிவ் பதிவுகள் படித்து ரொம்பக் கெட்டுப் போயிட்டீங்க... அதான் பாஸிட்டிவா உடனே முடிச்சுட்டீங்க... நல்லா இருக்கு ஸார். இன்னும் கொஞ்சம் முடிச்சை இறுக்கிட்டு அவிழ்க்க நினைத்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடுமே..!

    நன்றி ரூபன்.

    டிடி... நீங்களே கூட ஆரம்பிக்கலாமே!

    கீதா மேடம்... நீங்களும் தொடரலாம்! நீங்க இரவு 7 அல்லது 8 மணிக்குமேல் இணையப் பக்கம் வரதில்லைன்னு நினைக்கிறேன்! அதான்!

    ஹா...ஹா... ஹா... சொக்கன் ஸார்... எனக்கு ஒண்.......ணும் ஆகலை!

    சீனு.. எங்கே ஆளையே காணோம்? ஒன்று செய்யலாம். இதன் அடுத்த பகுதியை நீங்கள் தொடருங்கள். அதற்கும் அடுத்த பகுதியை கீதா மேடம் தொடரட்டும். அவருக்கு அப்புறம் கோவை ஆவி (இந்தப் பதிவை அவர் படிக்கலைன்னாலும் இழுத்துட்டு வந்துடுவோம்!) தொடரட்டும்!

    ரமாரவி... தொடர்பவர்கள் லிஸ்ட் ஒன்று சொல்லி இருக்கிறேன். தொடர்கிறார்களா என்று பார்க்கலாம்! அவர்கள் விருப்பம்!

    நன்றி கரந்தை ஜெயக்குமார்.

    நன்றி கோமதி அரசு மேடம்.

    பதிலளிநீக்கு
  15. எனக்கும் நான் எழுதிய முடிவு முழு திருப்தி கொடுக்கவில்லை.. கீதா சாம்பசிவம் அவர்கள் சொன்னது போல் திரில் மிஸ்ஸிங்.. முடிச்சை இறுக்கி இருக்கலாம்! போகட்டும்.. முதல் முயற்சி தானே!

    பதிலளிநீக்கு
  16. என்ன ஆச்சோ என வாசித்துக் கொண்டே வந்தால் முடிவை வாசகர்களிடம் விட்டு விட்டு அப்பாடா எனக் கழன்று கொண்டீர்களே:)!

    பந்து அவர்களின் முடிவு நன்றே.

    பதிலளிநீக்கு
  17. உண்மைதான். யாரிடமும் சொல்லாம ஒரு மாதம் காணாமல் போயிடணும்.

    பதிலளிநீக்கு
  18. //உண்மைதான். யாரிடமும் சொல்லாம ஒரு மாதம் காணாமல் போயிடணும்.//

    ஐயா, உண்மையில் அப்படி இருந்து பார்க்கவும். ஒரு இரவு தாக்குப் பிடிக்கிறது கஷ்டம்! எந்த மன அழுத்தமானாலும், பிரச்னைகளானாலும் அதிலிருந்து விலகி இருந்து பார்த்துத் தீர்வைக் காண்பதே நல்லது. இப்போது சில நாட்களாக அதிக வேலையால் எனக்கும் இணையப்பக்கம் வரமுடியவில்லை. வந்தாலும் மனம் ஈடுபட வில்லை. ஆகவே அந்த நேரங்களில் புத்தகங்கள் படித்து, ஓய்வு எடுத்து எனப் பொழுதைக் கழிப்பேன். நீங்களும் மனச்சோர்வுக்கு மாற்றாக இசை கேட்பது, ஓவியம் வரைவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது, பிடிக்குமோ, பிடிக்காதோ கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ரசிப்பது என முயன்று பாருங்கள். அல்லது நேரம் இருந்தால் அக்கம்பக்கம் உள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, பாடல்கள் கற்றுக் கொடுப்பது, ஸ்லோகம் சொல்லிக் கொடுப்பது என்றும் செய்யலாம். இது உங்களுக்கு மட்டும் சொல்லலை. மனச்சோர்வு அடையும் மற்ற நண்பர்களுக்கும், மற்றும் என்னையும் சேர்த்துத் தான் சொல்லிக்கிறேன். இசை கேட்பதைப் போன்ற சிறந்த மருத்துவம் இல்லை.

    பதிலளிநீக்கு
  19. இம்மாதிரி ஒரு கதையை அந்தரத்தில் விட்டுப் பதிவர்களைத் தொடரச் சொன்னால் என் அனுபவப்படி யாரும் முயற்சிப்பதில்லை. நானுமொரு முறை மீதிக்கதை எழுதுங்கள் என்று போட்டியே வைத்தேன். வெற்றிலைப் பாக்கு வைக்காத குறைதான் நான் எழுதி வைத்திருந்த முடிவோடு ஒத்துப் போனால் பரிசு என்று அறிவித்திருந்தேன். ஒருவராவது நான் முடித்ததுபோல் எழுத வில்லை. முடிவில் வந்த கதைகளில் சிறந்தது என்று நடுவர் வைத்து தீர்மானித்துப் பரிசை அனுப்பினேன். இம்மாதிரி எக்ஸ்பெரிமெண்ட்டே வேண்டாம் சாமி. நானில்லை.

    பதிலளிநீக்கு
  20. இப்பவாச்சும் ஒத்துக்கோ.. நான் இல்லாம போனா உனக்கு எவ்வளவு டென்ஷன் ஆகுதுன்னு புரியுதா..
    தோள்பட்டை பக்கம் முகத்தை நீட்டி அவன் பெருமையாகச் சொல்ல.. படித்துக் கொண்டிருந்த பேப்பரை கீழே போட்டு ஒரு கதையை முழுசா முடிக்கத் தெரியல.. இதுல ஜபர்தஸ்து வேற.. முகத்தை நொடித்துக் கொண்டாள்.

    பதிலளிநீக்கு
  21. பந்து அவர்கள் அற்புதமாக முடித்திருக்கிறார். அதுவே எனக்குப் போதும்.
    சஸ்பென்ஸ் எல்லாம் டென்ஷன். எனக்கு வேணவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  22. //ரிஷபன் said...
    இப்பவாச்சும் ஒத்துக்கோ.. நான் இல்லாம போனா உனக்கு எவ்வளவு டென்ஷன் ஆகுதுன்னு புரியுதா..
    தோள்பட்டை பக்கம் முகத்தை நீட்டி அவன் பெருமையாகச் சொல்ல.. படித்துக் கொண்டிருந்த பேப்பரை கீழே போட்டு ஒரு கதையை முழுசா முடிக்கத் தெரியல.. இதுல ஜபர்தஸ்து வேற.. முகத்தை நொடித்துக் கொண்டாள்.//

    நச்சுன்னு நாலே வரியில் சூப்பர் முடிவு.:)

    That is the Great RISHABAN Sir.

    பதிலளிநீக்கு
  23. அப்புறம் கோவை ஆவி (இந்தப் பதிவை அவர் படிக்கலைன்னாலும் இழுத்துட்டு வந்துடுவோம் ///


    சார் நான் பின்னூட்டம் போடறது தான் இல்லை.. அப்பப்போ வந்துகிட்டே தான் இருக்கேன்.. ஹிஹிஹி.. சீனுவின் மைண்ட் வாய்ஸ் சொல்றது எனக்கு கேக்கறது.. உங்களுக்கு கேக்குதான்னு தெரியலை.. (நாங்க இப்படித்தான் ஆறு பேர் சேர்ந்து ஒரு தொடர் எழுதினோம்.. என்கிட்டே வந்து நின்னு போச்சு..) இந்தக் கதைஇலிருந்து மீண்டும் தொடங்கிடலாம்னு பார்க்கிறேன்.. :)

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே.!

    நல்ல விறுவிறுப்புடன் நகர்ந்து சென்ற கதை..பாதியில் நின்றுபோனது வேதனை..! கருத்துகளில் எழுதியிருக்கும் நண்பர்களின் முடிவும் ரொம்பவும்,பிரமாதமாய் பொருத்தமாயிருந்தது...எப்படியும் தங்கள் மனத்தில் அதற்கொரு முடிவலை அடித்துக்கொண்டேதான் இருக்கும். அதை கரைசேர்த்து விடலாமே..! சிலை அமைத்தவர் தானே அதன் கண்களையும் திறந்து விட்டால்தானே அந்த கலை பூரணத்துவமாகும்..ஏதோ என் மனதில் தோன்றியதை சொன்னேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. சே! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தாருன்னு யாருப்பா சொன்னது....இங்க லேட்டா வந்தது லேட்டாவே போயிடுத்து......நமுத்துப் போன பட்டாசு மாதிரி....ம்ம்ம்ம் ஏன் இந்த புலம்பல்...வேற ஒண்ணும் இல்ல, உங்கக் கதைய படிச்சுட்டே வந்தப்போ கிட்டத் தட்ட பந்து அவர்கள் முடிச்சை விடுவித்தது போல மனதில் விரிய...எழுதத் தொடங்க.....தன்னிச்சையாக கண்கள் அந்தப் பெரிய பின்னூட்டத்திற்குச் செல்ல...அட பந்து அவர்கள் அட்டகாசமாக நாம் நினைத்தது போலவே எழுதி முடித்து விட்டாரே ம்ம்ம் பரவாயில்லை உலகில் நாம் நினைப்பது போல் எங்கோ ஒரு மூலையில் இருப்பவரும் நினப்பார் என்பதாவது உறுதியாயிற்றே என்று மனதைத் தேற்றிக் கொண்டு ...ம்ம்ம் பின்ன வேற என்னத்தச் சொல்ல..ஹஹஹ்

    அருமை பந்து அவர்களின் அந்த முடிவு...என்ன ஒரே ஒரு வித்தியாசம் நாங்கள் நினைத்தது....அந்தப் பெண் குரல் கதையின் ஹீரோ காதலித்த ஃப்ளாஷ் பேக் ஹீரோயின்....ஆமாம் ஒரு கதைக்கு ரெண்டு ஹீரோயின் இருந்தாத்தானே சுவாரஸ்யம் இருக்கும்...அதான்....இப்ப இப்படிப் போனா யாராவது தொடரலாமே...ஹஹஹ

    பதிலளிநீக்கு
  26. போட்ட கமென்ட காணல? எங்க போச்சு...கமென்ட் மாடரேஷன்???

    பதிலளிநீக்கு
  27. கவனிக்கவேயில்லையே!
    bandhu, ரிஷபன் இரண்டு பேரும் அழகான தான் முடிச்சிருக்காங்க.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!