திங்கள், 30 மார்ச், 2015

'திங்க'க்கிழமை : தொஸ்ஸு



சுடச்சுட விருந்து சாப்பிடப்போகும் அனுபவமே தனிதான்.  குழம்பு என்ன, கூட்டு என்ன, பொரியல் என்ன...  புதிதாய்ச் சமைத்து உடனுக்குடன் சாப்பிடுவது... ஆஹா...

சில சமயங்களில் வீடுகளில் நேற்றைய குழம்பு மிஞ்சி விடும்.  அவற்றை என்ன செய்வது?
தஞ்சையில் நான் படித்த பள்ளியில் ஆறுமுகம் என்று ஒரு டிராயிங் மாஸ்டர் இருந்தார்.  டிராயிங் வகுப்பில் வந்து போர்டில் ஏதாவது ஒரு படத்தை வரைந்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து நிறைய கதை சொல்வார், கதை அடிப்பார்.  சில சமயங்களில் வேறு ஏதாவது வகுப்புக்கு ஆசிரியர் லீவென்றால் இவரை அனுப்புவார்கள்.  இவர் வந்து கதை சொல்வார்.
இவர் சொன்ன ஒரு சமையல் குறிப்புதான் 'தொஸ்ஸு'.  இது அவரே வைத்த பெயர் என்று நினைக்கிறேன்.
முதல்நாள் செய்து மீந்து போகும் குழம்பு, ரசம், பொரியலை எல்லாம் ஒன்றாகப் போட்டு (பொரியலை எப்போதும் சேர்க்க மாட்டார்கள் - சில சமயங்களில் சேர்ப்பார்கள்) புதிதாகக் கொதிக்க வைப்பதுதான் தொஸ்ஸு!

எங்கள் வீட்டில் அதுபோல ஆனால் வேறு மாதிரிச் செய்வது இந்த தொஸ்ஸு எனும்  பழங்குழம்பு! கார அல்வா!

முதல்நாள் மீந்துபோகும் சாம்பாரை,  - கவனிக்கவும் சாம்பாரைத்தான் - அதுவும் குறிப்பாக முருங்கைக்காய், அல்லது கத்தரிக்காய்ச் சாம்பாராக இருந்தால் இன்னும் சுவை.
 

                                                       Image result for sambar images
 
ஆனால் நாங்கள் சாம்பாரையும் ரசத்தையும் ஒன்றாக்குவதில்லை. சாம்பார் மட்டும்தான் எடுத்துக் கொள்வோம்.  காரக்குழம்பு எனும் வெந்தயக் குழம்பாயின் அதற்கு இந்த ட்ரீட்மெண்ட்டே தேவையில்லை. கொஞ்சம் சூடு பண்ணி அப்படியே சாப்பிடலாம்!  பருப்புக்குழம்புக்குத்தான் இது ஒத்து வரும்!
 
                                                                Image result for brinjal sambar 

ஏழெட்டு சின்ன வெங்காயங்களை நறுக்கிக் கொண்டு, அந்தப் பழங்குழம்பில் போட்டுக் கொள்வோம்.  (நாங்கள் முருங்கை, அல்லது கத்தரிக்காய் அல்லது முருங்கை, கத்தரிச் சாம்பார் என்றால் அந்தக் காய்கள் மட்டும்தான் போடுவோம். நோ வெங்காயம், நோ தக்காளி!) அந்தப் பழங்குழம்பைக் கொதிக்க வைப்போம்.  அடுப்பை ' சிம்'மில் வைத்து கிண்டிக் கொண்டே இருப்போம்.  அவ்வப்போது கொஞ்சமாய் நல்லெண்ணெய் ஊற்றிக் கொதிக்க வைப்போம்.  குழம்பிலிருக்கும் நீர்ச் சத்தெல்லாம் சுண்டி அல்வா பதத்துக்கு வரும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சுற்றி ஊற்றி இறக்கி வைத்து விடுவோம். 
 

                                                                              Image result for பழங் குழம்பு
 
எங்கள் டிராயிங் மாஸ்டர் சொன்ன தொஸ்ஸுவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.  தலைப்பு வைக்க ஒரு பெயர்க் கவர்ச்சிக்காக அதை உபயோகித்துக் கொண்டேன்.  அவ்வளவுதான்!

வீட்டில் இந்தக் குழம்புக்கு இருக்கும் வரவேற்பு இருக்கிறதே... அடடா....  அது தனிச் சுவை போங்க!  சில சமயங்களில் "அம்மா...  இன்னிக்கி பழங்குழம்பு வையேன்" என்றே கேட்குமளவு பிரசித்தம்.  எங்கள் வீட்டில் இந்தக் கார அல்வாவுக்கு வைத்திருக்கும் பெயர் சக்தி மசாலாக் குழம்பு!


படங்கள் :   "இணையம்தாங்க!"

23 கருத்துகள்:

  1. அட, நம்ம 'சுண்டக்குழம்பு' சார்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    வித்தியாசமான ஐடியா... நாவில்எச்சி ஊறுகிறது. பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  3. புகைப்படத்தை கண்டதாலோ என்னவோ பசிக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஆமா நாங்களும் சுண்டக்குழம்பு என்றுதான் சொல்வோம். இதில் துவையல் பொரியல் ரசம் எல்லாம் சேர்ப்பதில்லை.

    ரொம்ப ரேராக அம்மா சேர்ப்பார். ஆனால் வெறும் கூட்டு புளிக்குழம்பு இதுபோல் சேர்த்துக் கொதிக்கவைத்தால் சூப்பரா இருக்கும்

    லா ச ரா கதைகளில் வரும் பொங்கல் குழம்பு போல பொங்கலன்று நாங்கள் 3 குழம்பு 4 பொரியல் கூட்டு எல்லாம் வைப்போம் சாயங்காலம் இதை எல்லாம் ஒன்று சேத்துக் கொதிக்க வைப்போம். இது இரண்டு மூணு நாளைக்கு வரும்.

    முதல் நாள் பொங்கல் பூஜை செய்ய தேங்காய் அதிகம் உடைப்பதால் மறுநாள் காலை ஆப்பம் உண்டு. அதுக்கு தேங்காய்ப் பால் போக 3 வது 4 வது ஆப்பத்துக்கு இந்தக் குழம்பு தொட்டுக் கொண்டால் ப்ரம்மாதம் போங்கோ.

    ஹாஹா சாப்பாடு என்றதும் கூப்பிடாமலே வந்துவிட்டேன் ஸ்ரீராம். :) :) :)

    பதிலளிநீக்கு
  5. மிச்சமானால் அந்தப் பொங்கல் குழம்பை மூன்றாம் நாள் காலை ஒரு கரண்டு எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு இரண்டு வரமிளகாய், ஒரு கை சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து போட்டு வதக்கி இந்தக் குழம்பையும் ஊற்றிக் கொதிக்க வைத்தால் இன்னும் சூப்பர் :) :) :)

    பதிலளிநீக்கு
  6. கரண்டி ஜொள்ளியதில் கரண்டு ஆகிவிட்டது போன கமெண்டில் :)

    பதிலளிநீக்கு
  7. எங்கள் வீட்டில் காலையில் வைத்த குழம்பை இரவில் உபயோகிக்கவே எனக்கு ஆசை மட்டு. இருந்தாலும் யூஸ் செய்வோம். மீந்து போன சாம்பாரை வேண்டுமானால் சுட வைத்துச் சாப்பிடலாம். அதையே கிண்டி அல்வாபதத்துக்குக் கொண்டு வருவது.......ஹூம் // எப்பவாவது செய்து பார்க்கவேண்டும்...!

    பதிலளிநீக்கு
  8. நாங்களும் இதை சுண்டக் குழம்பு என்று சொல்வோம். அதன் ருசியே தனி தான் . பழையதும், சுண்டக் குழம்பும், அதுவும் இந்த வெயில் காலத்தில் ......ஆஹா......சுவையோ சுவை தான்.

    பதிலளிநீக்கு
  9. மீதம் இருப்பதில்லை... சாம்பாரே அவ்வளவு ருசியாக்கும்...!

    பதிலளிநீக்கு
  10. பொங்கல் சமயம் செய்யும் தனிக்கூட்டுக்களோடு அன்றைய அரைத்து விட்ட ர்சத்தையும் சேர்த்துக் கொதிக்க வைப்போம். இதை எங்க மாமியார் வீட்டில் எரிசேரி என்பார்கள். அல்லது எரிச்சேரி? ஏதோ ஒண்ணு! கல்யாணம் ஆனப்போ வந்த் முதல் தைமாதப் பிறப்பிலே எரிசேரின்னா தெரியுமானு கேட்டதுக்கு ஆஹானு ஆசையாத் தலையாட்டினேன். சாப்பிடும்போது எரிசேரியைத் தேடி அலுத்துப் போச்சு! எரிசேரி எங்கே காணோம்னு சின்ன நாத்தனாரைக் கேட்டதுக்கு, இதோ, அம்மா கொதிக்க வைப்பா, ராத்திரிக்குத் தொட்டுக்கலாம் என்றாளே பார்க்கலாம்! என்னடாப்பானு பார்த்தா மிச்சம், மீதியெல்லாம் கொட்டி, போதாததுக்குப் புதுசா வேறே காய்களை நறுக்கிச் சேர்த்து ஒரு பெரிய கல்சட்டி நிறைய இந்த எரிச்ச குழம்பு கொதிச்சது. அதுக்குனு தனிக் குமுட்டி அடுப்பு! அன்னிக்கு மட்டுமில்லாமல் மறுநாள், அதுக்கு மறுநாள்னு செய்யும் குழம்பை எல்லாம் இதிலே கொட்டிச் சூடு பண்ணி, போதும்டா சாமினு இருந்தது எனக்கு! ஒத்துக்கவே இல்லை! :( நான் பண்ணினா இன்னிக்குச் சூடு பண்ணின குழம்பை நாளைக்குத் தீர்த்துடுவேன். அதோடு சரி! அதுக்கு ஏற்றாற்போல் கொஞ்சமாய்த் தான் தனிக்கூட்டு வகையறா எல்லாம் செய்வேன்.

    பதிலளிநீக்கு
  11. நான் நினைச்ச எரிசேரி சேனையும், வாழையும் போட்டுச் செய்யும் எரிசேரி. ஆனால் இங்கே எரிச்ச பழங்குழம்பை எரிசேரினு சொல்லி ஏமாத்திட்டாங்க! :)))))

    பதிலளிநீக்கு
  12. எங்கள் வீட்டில் மோர்க்கூழுக்குத் தான் கார அல்வா என்று பெயர்!! அதனால் இதற்கு வேண்டுமானால் கூழ்க்குழம்பு என்று வைத்துக் கொள்ளலாம்!! :-))

    பதிலளிநீக்கு
  13. நாங்கள் பழங்கறி என்போம். சாம்பார், அவியல் இதற்காகவேக் கூடுதலாக வைத்து மீதமாக்கி செய்வதுண்டு:)!

    பதிலளிநீக்கு
  14. எங்க வீட்டிலும் இந்த பழைய குழம்பை புதுசு பண்ணும் வழக்கம் உண்டு. இது சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்..
    சுவையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  15. சுண்டக்குழம்பைச் சிலாகித்த நண்பர்கள் திருமாறன், (வாங்க, வாங்க.. முதல் வருகையா? அடிக்கடி வாங்க) பழனி கந்தசாமி ஸார், தேனம்மை, ராஜலக்ஷ்மி மேடம், வெங்கர் நாகராஜ், அனைவருக்கும் நன்றி.

    பொங்கல் சமயத்தில் செய்யும் கூட்டை நாங்களும் இப்படி பிறகு வதம் செய்வோம் கீதா மேடம், தேனம்மை.. நாங்கள் செய்யும் பழங்குழம்பும் ஒரே நாளில் தீர்ந்து விடும். அடுத்தடுத்துத் தொடர்வதில்லை! எரிசேரி என்பதை நானும் சேனை போட்டு மிளகு போட்டு செய்யும் கூட்டாகவே அறிந்திருக்கிறேன் கீதா மேடம்!

    நாங்களும் மோர்க்கூழை கார அல்வா என்றுதான் சொல்வோம் midleclassmadhavi!

    பழங்கறி புதுசா இருக்கு! அவியலை இதில் சேர்க்க மாட்டோம். தேங்காய் சேர்ப்பதால் இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி ராமலக்ஷ்மி.

    செய்து பார்க்கலாம் ஒருமுறை ஜி எம் பி ஸார்! நன்றாக இருக்கும்.

    மீந்து போகவே போகாதா உங்கள் வீட்டில் என்றும் சாம்பார் டிடி?

    கில்லர்ஜி, ரூபன்... ஹா...ஹா...ஹா... உங்கள் பசியுணர்வு தூண்டப்பட்டு விட்டதா?

    பதிலளிநீக்கு
  16. சுண்டக் குழம்புக்கு தனி ருசிதான். ஆனால் சமைத்த நான்கு மணி நேரத்திற்குப் பின்னால் சாப்பிடத் தகுதியானதல்ல என்று கண்ணாலம் ஆனதிலிருந்து மீந்த மேட்டர் கண்ணுலேயே படாது. நாம் சந்திக்கும் போது முன்கூட்டியே சொல்லி விட்டு வருகிறேன். சுண்டக் கஞ்சி' சாரி ... சுண்டக் குழம்புடன் என்னை வரவேற்கவும் ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  17. சேம்...சேம்......தொத்சு, எங்கள் பகுதிகளில், சுண்டக் குழம்பு, எரிச்சகரி என்போம்......ஸ்ஸ்ஸ்...என்னம்மா இருக்கும்...தேவாம்ருதம்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. தேங்காய் சேர்த்து அரைப்பதோடு அல்லாமல் தேங்காயைப் பல்லுப் பல்லாகக் கீறியும் போடும் தனிக்கூட்டைத் தான் எரிச்ச குழம்பாக மாத்துவோம். :) ஆனால் திரு மோகன் ஜி சொல்லுவது போல சமைத்த 4 மணி நேரம் ஆன பின்னால் உண்ணக் கொஞ்சம் யோசனையாத் தான் இருக்கும். இங்கே மாமியார் வீட்டில் கனுவன்று வைக்கும் காக்காய்ப் பொடிக்கு இந்தக் குழம்பும் வைக்கணும் என்பதால் வேறு வழியில்லாமல் பண்ணுவேன். ஆனால் கனுவன்றோடு சரி! சுட்ட எண்ணெயைக் கூடப் பயன்படுத்துவது கிடையாது. இன்று பொரித்த எண்ணெய் மிச்சம் நாளைக்கே தீர்த்துவிடுவேன். அப்படி மிஞ்சினால் கொட்டத்தான் கொட்டணும்! ஆகவே எண்ணெயெல்லாமும், சாம்பார் வைப்பது எல்லாமும் சிக்கனமோ சிக்கனம்! :))) டிடி சொன்னாப்போல் மிஞ்சுகிறாப்போல் வைக்கிறதில்லை. :))) விருந்தினர் வந்து அவங்க சாப்பிடும் அளவு தெரியாமல் சமைத்து மிஞ்சுவது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. ஒரு காலத்தில் (மிச்சம் உள்ள வடை, போண்டாக்கள், மசால்வடைகள் எல்லாமும் சேர்த்து) இதைத் தான் சின்ன வெங்காயமும், பூண்டும் வதக்கிச் சேர்த்து ப.மி. இஞ்சி அரைத்து விட்டு வடகறினு சென்னை ஹோட்டல்களிலே கொடுப்பாங்க! :))) இப்போல்லாம் வடகறினு தனியே பாவ்பாஜி பக்குவத்துக்குப் புதுசாவே பண்ணறாங்க! :))

    பதிலளிநீக்கு
  20. பின்னூட்டங்கள் பலே ஜோர் கீதா அளிக்கும் சேதிகள் சுவை. பொங்கல் அன்றைக்கு மறு நாள் கனுப் பழைசதுக்குத் தொட்டிக் கொள்ள இந்த எரிச்ச குழம்பு கிடைக்கும். புகுந்த வீட்டில் கிடையாது..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!