புதன், 15 ஏப்ரல், 2015

காக்கையும் நானும்



ஒரு வாரமாகக் கண்ணில் படாமல் இருந்த காக்கை இன்று மறுபடியும் வந்து விட்டது. அதைப் பார்த்ததும்தான் 'கொஞ்ச நாட்களாய்க் காணோமோ?' என்று எண்ணம் வந்தது.  நான் அதைத் தேடுகிறேனோ என்று சோதித்திருக்குமோ!



மதியங்களில் மூன்று மணி சுமாருக்கு அந்தக் காக்கை வாசல் பால்கனிச் சுவரில் அமர்ந்து என்னைக் கூப்பிடும்.  அதே காக்கையாகத்தான் இருக்க வேண்டும்.  குறிப்பிட்ட நேரத்துக்கு வருகிறது.  ஒரே மாதிரி செயல்பாடுகள்.  எனவே அந்த அனுமானம்.



நான் கவனிக்கவில்லை என்றால் சற்றே நகர்ந்து வாசல் துணி காயப்போடும் கொடியில் அமர்ந்து குனிந்து உள்ளே நான் எங்கே கண்ணில் படுகிறேன் என்று தேடும்.  குரல் கொடுக்கும்.  அப்படியும் திரும்பிப் பார்க்கவில்லை என்றால் வாசல் கதவின் மீது வந்து அமர்ந்து குரல் கொடுக்கும்.  இன்னும்  வீட்டுக்குள்தான் வரவில்லை.

நான் உள்ளே பாஸுக்கு ஒரு குரல் கொடுப்பேன்.  உடனே உள்ளே திரும்பிப் பார்க்கும்.  காத்திருக்கும்.  அல்லது நானே எழுந்துபோய் உள்ளே டப்பாவைத் திறந்து ஏதாவது பிஸ்கட்டோ, ரஸ்க்கோ எடுத்துப் போடுவேன்.  சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும்.


கொஞ்சநாட்களாக காக்கைகள் சற்றே நட்பாகி விட்டன.  காக்கைகளை அடையாளம் காண முடியவில்லை.  சற்று மண்டை பெருத்த, கரிய காக்கை ஒன்றை மட்டும் தனியாகத் தெரியும்.  அதன் அசைவுகள் கொஞ்சம் பயமுறுத்துமே தவிர, அதுவும் முன்போல் எதுவும் செய்வதில்லை!  அது என்றால் அது இல்லை!   காக்கைகளின் பொதுவான குணம்!  கூடு கட்டியிருந்திருக்கலாம்.

முன்பெல்லாம் நான் மொட்டைமாடி பக்கம் போகமுடியாது.  இங்கும் அங்கும் தாழப் பறக்கத் தொடங்கும் காக்கைகள், பின்னர் மண்டையில் லொட்டென்று ஒன்று போட்டுப் பறக்கும்.  உட்கார்ந்து புத்தகம் படிக்க முடியாமல் தலைக்குமேல் போர் விமானங்களாய் சர் சர்ரெனத் தாண்டிப் பறக்கும்.  


இப்போதெல்லாம் மொட்டை மாடியில் புத்தகம் படிக்க அமர்ந்த உடனே காலுக்கு அருகில் துணிச்சலாக அமர்ந்து, குனிந்து ஓரப்பார்வையாய் என் கண்களைப் பார்த்து "கா...கா" என்று குரல் கொடுக்கிறது.  இதற்காகவே நான் மேரி பிஸ்கட், முறுக்கு, சீடை போன்றவற்றை வாங்கி வைத்து, மேலே எடுத்துச் செல்கிறேன்.


சுவரின்மேல் என் பக்கத்திலேயே வைத்தாலும், என் கை நீளும்போது பறந்து விடாமல், சற்றே தள்ளி மட்டும் அமர்ந்துக் காத்திருந்து, வைத்த உணவுப் பொருளைக் கொத்தி எடுத்துச் செல்லும். அது இவற்றைச் சாப்பிடும் முறை பற்றியும் நான் கவனித்தவற்றைச் சொல்ல வேண்டும்.


மேரி பிஸ்கட் சாப்பிடக் கஷ்டமிருக்காது என்று பெயர்.  கொஞ்சம் அப்படியே சாப்பிட்டாலும், கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு தத்தித் தத்தி நடந்துபோய் பறவைகளுக்கென்று மாடியில் வைத்திருக்கும் அகல பேசின் தண்ணீரில் போடும்.  சில நொடிகள் காத்திருந்து அவற்றைக் கொத்திச் சாப்பிடும்.   

பிஸ்கெட்டோ, முறுக்கோ, அவற்றை அவை தங்கள் கால்களில் இடுக்கிக் கொண்டு அலகால் மிகச் சிறிய துண்டுகளாக உடைத்துச் சாப்பிடும்.  நொடிக்கொருமுறை நாலு புறமும், என்னையும் பார்த்துக் கொள்ளும்!




முறுக்கு சீடைகளையும் தண்ணீரில் போட்டுச் சாப்பிடுவதுண்டு.  அதைவிட விநோதமாக இன்னொன்று செய்யும்.  முறுக்கு, சீடைகள் போன்றவற்றை மட்டும் கவ்விக் கொண்டு உயரமான இடத்துக்கோ, உயரமான கிளைக்கோ சென்று அமர்ந்து கொண்டு, இந்தப் பக்கம் ஒருமுறை, அந்தப்பக்கம் ஒருமுறை சாலையைக் கடக்கப் போகும் பாதசாரி போலப் பார்த்துக் கொண்டு, அங்கிருந்து அவற்றை 'பொத்' தென்று கீழே போடும்.  அவை துண்டு துண்டாய் உடைந்தவுடன் பொறுக்கிக் கொண்டு பறக்கும், சாப்பிடும்.  உடையாவிட்டால் மீண்டும் அதே முயற்சி!  இந்த  சுவாரஸ்யமான லிங்க்கைப் பாருங்கள்.

இதைவிட விநோதமாக இன்னொன்றும் செய்யும்.  இரண்டு துண்டு சாப்பிட்டால், மூன்றாவது நான்காவது துண்டுகளை கவ்விக்கொண்டு அங்கிருக்கும் இலைக் குப்பையில் கொண்டு போய்ச் சொருகி வைத்து,  அருகிலிருக்கும் இன்னும் கொஞ்சம் காய்ந்த இலைகளை எடுத்து அதன்மேல் போட்டு மூடும்.  சற்றே நடந்து சென்று சிறு குச்சிகளையும் கொண்டு வந்து போட்டு மூடும்.  சேமிப்பு!  அப்புறம் அதுதான் அவற்றை எடுத்துக் கொள்ளுமா, வேறு காக்கைகள் எடுத்துக் கொள்ளுமா?  
தெரியாது!


இந்தப் பிளாஸ்டிக் தொட்டியின் இந்த இடுக்கில் நுழைக்க முயற்சி செய்து விட்டு,
                                                                                          


அது பிஸ்கட் துண்டை "ஒளித்து" வைத்திருக்கும் இடம்!  சமயங்களில் கூடவே இன்னொரு காக்காய் வந்து உடனே உடனே அவற்றை எடுத்துச் சாப்பிட்டும் விடும்!
 

சில காக்கைகள் கூடவே வந்து சாப்பிடுவதை அனுமதிக்கும்.  சில காக்கைகளைத் துரத்தி விடும்.  தவிட்டுக் குருவி போன்ற சில குருவிகள் வரும்.  அவற்றையும் காக்காய் அண்டவிடாது,  அதே போல, மரங்களிலிருந்து மின்னல் வேகத்தில் வாலை உசத்திக்கொண்டு இறங்கி ஓடிவரும் அணில்களையும் அண்ட விடாது!

அதற்காக அவற்றுக்கு ஒற்றுமை உணர்வு இல்லையா, என்று யோசித்தால், இல்லை, அதற்கும் வேறு சில சம்பவங்கள் இருக்கின்றன.

கீழே நாய்க்கு ஏதாவது போட்டாலோ, அல்லது நாய்கள் ஏதாவது உணவுகளைக் கண்டு விட்டாலோ அவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, காக்கைகள் சற்றுத் தள்ளி அமர்ந்து குரல் கொடுக்கும்.  நாய் நிமிர்ந்து இவற்றைப் பார்க்கும்போது தலையைச் சாய்த்து இவைகளும் அவற்றைப் பார்த்து மறுபடி குரல் கொடுக்கும்.


நாய்கள் தொடர்ந்து சாப்பிடும்.  இவை உடனே பறக்கத் தொடங்கி, நாய்களைத் தாண்டும்போது கீழே இறங்கிப் பறந்து நாய்களின் முதுகைத் தொட்டுத் தாண்டிச் செல்லும்.  நாய்கள் நிமிர்ந்தும் பார்ப்பதில்லை, எதிர்ப்பும் காட்டுவதில்லை.  மறுபடியும் காக்கைகள் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கம் மறுபடியும் முதுகைத் தொட்டுச் செல்லும்.  சிலமுறை இப்படி நடக்கும்.

இப்போது ஒரு ஆச்சர்யகரமான நிகழ்வு நடக்கும்!

சாப்பிட்டுக் கொண்டிருந்த நாய், முழுவதும் சாப்பிடாமல் கால் வாசிக்கும் குறைவாய்க் கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டு நகர்ந்து சென்று விடும்.  காக்கைகள் உடனே வந்து சாப்பிடத் தொடங்கும்.

இதே போன்று காக்கைகளும் பகிர்ந்துண்டுச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.   சுவரில் வைக்கப்பட்டிருக்கும் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இரண்டு மூன்று காக்கைகள்.  ஒரு அணில் மரத்திலிருந்து குதித்து மெல்ல, மெல்ல சாப்பாட்டின் அருகில் வரும்.  காக்கைக் கூட்டத்தில் ஒன்று அவற்றைத் திரும்பிப் பார்த்து, தத்தித் தத்திச் சென்று அவற்றை விரட்டும்.  அணில் ஓடி விடாது.  சற்று நகர்ந்து பின்சென்றாலும், மறுபடியும் அருகில் வரும்.  என்ன பாஷையோ, என்ன சொல்கின்றனவோ அவற்றுக்குள்!

இது போல இரண்டு மூன்றுமுறை நடந்தாலும், காக்கைகள் திடீரென சற்று நகர்ந்து அமர்ந்து வழி விடும்.  கொஞ்ச நேரம் அணில்கள் சாப்பிடும்.  அப்புறம் காக்கைகள், மறுபடி கொஞ்சநேரம் அணில்கள்...
ஆச்சர்யப்படுத்திய நிகழ்வு அது.  கையில் கேமிராவோடு டிஸ்கவரி சேனல் நிருபர் போலக் காத்திருந்தால் இவற்றை எல்லாம் வீடியோவோ, அட்லீஸ்ட் புகைப்படமாவது எடுத்துப் போட்டிருக்கலாம்.  நான் என் வேலையைக் கவனித்துக் கொண்டே இவற்றைக் கவனித்ததில் அதெல்லாம் முடியவில்லைதான்.

ஆனால் வீடியோ எடுத்த விஷயம் ஒன்றும் உண்டு.  எங்கள் தெருநாய் குட்டி போட்டிருந்தது.  அதுதான், முதுகில் காக்கைத் தொடல் வாங்கி, சமிக்ஞை பெறுமே, அந்த நாய்!  கொஞ்சம்  வளர்ந்த குட்டிகளுடன் தாய் நாய் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்.  இந்தக் காக்கைகள் கோஷ்டியில் இரண்டு மூன்று குறும்புக் காக்கைகள் இருக்கின்றன.  அவை பறந்து வந்து இவைகளின் அருகில் சற்று தூரத்தில் அமரும்.  நாயக் குட்டிகள் மும்முரமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவைகளின் பின்னால் செல்லும் இந்தக் காக்கைகள் அதன் வாலைக் கொத்தி சட்டென்று இழுத்து விட்டு நகர்ந்து ஓடித் தொலைவில் அமர்ந்து அவை என்ன செய்கின்றன என்று பார்க்கும்.

குட்டிகள் திரும்பிப் பார்த்து விட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கும்போது கு.கா மீண்டும் அருகில் வந்து மீண்டும் வம்பிழுத்துச் செல்லும்.  அப்புறம் குட்டிகள் காக்கைகள் தத்தித் தத்தி அருகில் வரும்போதே லேசாகத் திரும்பி அவற்றைப் பார்க்கும், சிறு அழுகையுடன் துரத்தும்.  வாலைச் சுருட்டி கால்களுக்குள் மறைத்துக் கொள்ளும்!  அவற்றையும் கொத்தி வெளியில் இழுத்து விட்டுப் பறக்கும் காக்கைகள்.

ஓய்வான நேரங்களில் கீழே அமர்ந்திருக்கும் காக்கைகளைத் துரத்தும்.  அவை ஒரேயடியாகப் பறந்து விடாமல் இடம் மாற்றி மாற்றி அமர்ந்து விளையாட்டுக் காட்டும், விளையாடும்!


இரண்டு நாட்களுக்குமுன் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.  மூன்று மணிக் காக்கை சற்றுத் தொலைவில் வந்து அமர்ந்து என்னைப் பார்த்துக் குரல் கொடுத்தது.  மனிதர்களிடம் பேசுவது போல வழக்கம் போல அதனிடம் பேசினேன்.  "இப்போது ஒன்றுமில்லை" என்றேன்.  அப்புறம் அருகில் வந்து அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.  நான் குடித்து விட்டு வைத்திருந்த காபிக் கோப்பையின் விளிம்பைக் கவ்வ முயற்சித்தது.  

"ஏய்...  அதெல்லாம் எடுக்காதே" என்று டம்ளரை எடுத்து உள்ளே ஓரமாக வைத்தேன்.  மறுபடியும் அது குரல் கொடுத்து அருகில் வர, நானும் சும்மா பதிலுக்குப் பேசிக் கொண்டிருந்தேன்.

விடாமல் தொந்தரவு செய்யவும், வேறு ஏதுமில்லாததால் உள்ளேயிருந்து கார்ன்ஃப்ளேக்ஸ் எடுத்துப் போட்டேன்.  அதைக் கொத்திப் பார்த்த காக்கை, கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டுப் பறந்து போய் விட்டது.

கொஞ்ச நேரம் போயிருக்கும்.  வாயில் ஒரு வடகத் துண்டுடன் என் அருகில் வந்து அமர்ந்தது.  சற்றே பெரிய வடகம்.   யார் வீட்டில் போட்டிருந்தார்களோ!  அதைக் கொண்டு வந்து என் அருகில் அமர்ந்தது.  "ஏய்... எடுத்துக் கொண்டு மாடிக்குப் போ... அங்குதான் தண்ணீர் இருக்கும். அதில் போட்டுச் சாப்பிடு" என்றேன்.

ஏதோ புரிந்த மாதிரி மேல் ஷட்ஜத்திலும், கீழ் ஷட்ஜத்திலும் குரல் கொடுத்தது.  என்ன பேசுகிறதோ என்று யோசித்துக் கொண்டு படிப்பதைத் தொடர்ந்தேன்.  வடகத்தை கவ்விக் கொண்டு இன்னும் என் அருகில் வந்த அந்த நண்பன் அதை என் கையருகே போட்டு விட்டு, குனிந்து என் கண்களைப் பார்த்து "கா" என்றது!

உடைத்துத் தரச் சொல்கிறதோ என்று யோசித்து இடது கையால் அதை இரண்டு மூன்று துண்டுகளாய் உடைத்து விட்டேன்.  மறுபடி அருகில் வந்த நண்பன் இரண்டு துண்டுகளை அலகால் என் பக்கம் தள்ளி விட்டு நகர்ந்து அமர்ந்து கொண்டான்.  என்ன சொல்ல வருகிறார் நண்பர்?  எனக்கும் ஒரு பங்கு தருகிறாரா?  பேசாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  

கொஞ்ச நேரம் பார்த்த காக்கை, அப்புறம் என் அருகிலேயே கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்து அந்த வடகத்தை சிறு சிறு மைக்ரோ துண்டுகளாக்கி, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு விட்டுப் பறந்தது!

என்ன சொல்ல வந்ததோ!  இன்னும் என்னென்ன நடக்குமோ!


30 கருத்துகள்:

  1. அபாரமான கவனிப்பு. சில விஷயங்கள் நம்புவதற்கே சிரமமாய் இருக்கிறது. காகத்தின் குணாதிசயங்கள் பற்றி ஒரு லெக்சரே கொடுக்கலாம் கோவையில் என் தம்பி வீட்டுக்குப்போன போது சமையல் கட்டுக்கு அருகே சொல்லி வைத்தாற்போல் குறிப்பிட்ட நேரத்துக்குஒரு காகம் வந்து கரையும் என் தம்பிமனைவிஏதாவது தின்னக் கொடுப்பாள் பெற்றுக் கொண்டு பறந்து விடும் தலையில் காகம் கொட்டுவதைச்சொன்ன போது ஹிட்ச்காக்கின் THE BIRDS படம் நினைவுக்கு வந்தது. பறவைகள் நம்மை அட்டாக் செய்தால் எப்படி இருக்கும். நாம் எப்படி எதிர்கொள்வோம் பல விஷயங்கள் சொல்லிப் போனபதிவு ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  2. உங்களைச் சாப்பிடச் சொல்லி உபசாரம் செய்திருக்கிறது. சாப்பிட்டிருக்கலாம். :) இங்கே காலை வேளையில் நடைப்பயிற்சிக்குச் சென்றால் நீங்க சொல்றாப்போல் காக்கைகள் தலைக்கு மேல் பறக்கும், விர், விர் விர்ர்னு பறக்கும். சாதம் போட்டால் சாப்பிட வரதில்லை. :)

    பதிலளிநீக்கு
  3. மிகவும் ரசித்துப்படித்தேன். மிகவும் பெரிய பதிவாக அழகாக ஒன்றையும் விட்டு விடாமல் ரசனையாக பதிவு செய்துள்ளீர்கள்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஸ்ரீராம்.

    [I'm not a robot பகுதி மிகவும் எரிச்சலூட்டுகிறது. அதை தயவுசெய்து எடுத்துவிடவும்.]

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே.!

    காக்கைகளின் குணாதிசயங்களை உன்னிப்பாக கவனித்து எழுதி இருக்கிறீர்கள்.படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.படங்களும் நன்றாக இருந்தது. நீங்கள் குறிப்பிடுவது போல் இவற்றின் செய்கைகளை ஒரு வீடியோவாக நாம் எடுக்கலாமா? என்ற யோஜனை வருவதற்குள் அவை அந்த இடத்தை காலி செய்துவிட்டு பறந்தோடிவிடும் காக்கைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பொழுதில் சாதம் இட்டு வந்தால், நாம் ஒருநாள் சிறிது தாமதித்தாலும் அது அந்த நேரத்திற்கு வந்து கரைய ஆரம்பித்து விடும். தற்சமயம் நானிருக்கும் இடத்தில் புறாக்களும் கழுகுகளும் அதிகம். காக்கை கண்ணில் படுவதே அரிது. தங்களின் காக்கை பற்றிய பதிவு நன்றாகவிருந்தது.தங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. Dr.Sriram Ph.D
    Subbuthatha recoomends a doctorate



    Even a crow is interesting !

    பதிலளிநீக்கு
  6. பூனை செத்த எலியை மிதியடியில் போட்டு வைக்கும், எங்களுக்கு 'offer' ஆக!! அது போல் காக்கை நண்பர் செய்திருக்கார் போல!!
    காக்கைக்கு நீர் வைத்திருப்பது noted!! காக்கை குருவி எங்கள் ஜாதி - என்ற வரி மனதுள் ஓடிக் கொண்டிருக்கிறது!!!

    பதிலளிநீக்கு

  7. எப்படித்தான் இவ்வளவையும் பொருமையாக பார்த்துக்கொண்டு இருந்தீர்களோ.... காகத்துக்கு கண்கள் ஒன்றுதான் இரண்டு புறமும் சுழற்றிப் பார்க்கும் தன்மை உடையது என்று படித்திருகிறேன் எந்த அளவு உண்மையோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. காக்காய்ப் புராணம் மிக அருமை. இத்தனை அன்பாகக் கவனித்து வருகிறிர்களே .உண்மையில் நல்ல தோழன் தான். குணதிசயங்களை அழகாக வர்ணித்து இருக்கிறீர்கள். இந்த ஊர்க் காக்கைகள் ப்ரெட் போட்டாலும் எடுத்துக் கொள்வதில்லை. RAVEN வகை.குரலும் தொண்டை கட்டின பாகவதர் போல இருக்கும். தினம் சாதம் வைக்க ஆசைதான்..

    பதிலளிநீக்கு
  9. அடேயப்பா... எவ்வளவு நுட்பமான அவதானிப்பு... உண்மையில் அந்தக் காக்கை உங்களைத் தன் நண்பராக ஏற்றுக்கொண்டுவிட்டது. அதனால்தான் பகிர்ந்துண்ண உங்களை அழைத்திருக்கிறது. நீங்கள் வேறு 'இப்போது ஒன்றுமில்லை' என்று சொல்லிவிட்டீர்களா? ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டு வடகம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறது. நேசிக்கும் மனங்களை மிக நன்றாகவே அடையாளம் கண்டுகொள்கின்றன மரங்களும் பறவைகளும் விலங்குகளும்.

    பதிலளிநீக்கு
  10. நேஷனல் ஜியாகரபிக் சேனல் பார்த்தது போன்ற உணர்வு.. அசத்தீட்டீங்க சார்..!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    காக்கா பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. காக்கா கூட்டம் போல நாமும் இருந்தால் சிறப்பு த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. மிக சுவாரஸ்யமாக கவனித்து எழுதி உள்ளீர்கள்! பறவைகள் மட்டுமல்ல! எல்லா உயிரினங்களும் பழகினால் நட்பு பாராட்டும் என்று புரிகிறது! எங்கள் வீட்டிலும் இப்படி காக்கைகள், அணில்கள் உலா வருவதுண்டு. நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நன்றாகக் கவனித்து சுவைபட எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. வைகோ,
    I'm not a robot ஐ கண்டு கொள்ளாதீர்கள். எப்போதும் போல் Publish ஐ கிளிக் செய்யுங்கள். போதும்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி ஜி எம் பி ஸார்.. நன்றி. காக்கைகளுக்குக் குறிப்பிட்ட சமயத்தில் உணவு கொடுத்துப் பழகி விட்டால் அலார்ம் வைத்தது போல அந்நேரத்துக்கு அவை வருவது இன்னொரு ஆச்சர்யம்.

    நன்றி கீதா மேடம்.

    நன்றி வைகோ ஸார். பழனி, கந்தசாமி ஸார் சொல்வது போல அதை லட்சியமே செய்யாமல் நீங்கள் உங்கள் பின்னூட்டத்தை பப்ளிஷ் கொடுங்கள். அது நாங்கள் வைப்பது அல்ல. கூகிளின் சதி! ஆனால் அது ஒன்றும் செய்வதில்லை!!

    நன்றி கமலா ஹரிஹரன் . நாய்களின் வாழை காக்கை இழுத்து வம்பிழுப்பதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அதை இப்போது தேடினால் காணோம்! காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு போல!!

    நன்றி சுப்பு தாத்தா... இனி நான் டாக்டர் ஸ்ரீராம் என்று போட்டுக் கொள்ளப் போகிறேன். :))))

    நன்றி middleclassmadhavi.. கீழே நாய்களுக்கும் தண்ணீர் வைத்திருப்பேன். குறும்புக்கார நாய்கள் அந்தப் பாத்திரத்தையே கவ்வி எடுத்துத் தட்டி விட்டு விடும். அகலமான அந்தப் பாத்திரத்தில் சாம்பல் குருவிகள் வந்து குளிக்கும்!

    நன்றி கில்லர்ஜி .. மொட்டை மாடியில் மாலை வேளைகளில் புத்தகம் படிக்கும்போது இவற்றைப் பார்க்க முடியும்!

    நன்றி வல்லிம்மா.... நம்மூரிலும் காக்கைகள் அதன் வழக்கமான உணவுகளை நிராகரித்து வருகின்றன! :)))))

    நன்றி கீதமஞ்சரி.. நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் நடந்திருக்கிறது!

    நன்றி கோவை ஆவி.

    நன்றி ரூபன்.

    நன்றி 'தளிர்' சுரேஷ்.

    நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  16. எவன் எவனோ காக்காய் பிடித்து டாக்டர் பட்டம் வாங்குறான் ,சுப்பு தாத்தா சொன்ன மாதிரி ,காக்காய் ஆராய்ச்சி செய்த உங்களுக்கு டாக்டர் பட்டம் தர வழிமொழிகிறேன் ,டாக்டர் பழனி .கந்தசாமி அய்யா கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்பிக்கையுடன் :)

    பதிலளிநீக்கு
  17. மிக சுவாரஸ்யமானப் பதிவு. காக்கை தங்களுக்குள் மட்டுமல்லாமல், மற்ற விலங்குகளுடனும் ஒற்றுமையாக பகிர்ந்துண்ணுவதைப் பார்க்கும் போது மனிதர்களாகிய நாம் அவைகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமோ ஏராளம்.
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. சுவாரஸ்யமான பகிர்வு, அருமையான நடையில்.

    நீரில் நனைத்துச் சாப்பிடுவது, கிளையிலிருந்து கீழே போட்டு உடைப்பது, நாய்களிடம் பங்கு கேட்டு வாங்கும் அதே நேரம் அணில்களுக்குப் பங்கு கொடுப்பது, உணவு அளித்தவரை உபசரிப்பது என எல்லாமே ‘அடேங்கப்பா’ என வியக்க வைக்கிறது. காக்கைகளின் குறும்பும் ரசிக்க வைத்தது. பின்னே அவர்களுக்கும் பொழுது போக வேண்டாமா?

    வீட்டு பால்கனியில் வந்தமர்ந்த அண்டங்காக்கைகள் இரண்டைச் சில படங்கள் எடுத்தேன் சமீபத்தில். ஒரு காக்கை எங்கோ போய் உணவு கொண்டு வந்து ஜோடி வேண்டாம் என மறுக்க மறுக்க ஊட்டி விட்டு சாப்பிட வைத்தது:).

    பதிலளிநீக்கு
  19. காக்கைகளின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து பதிவு இட்டுள்ளீர்கள்
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  20. என்னவொரு ரசனை... பொறுமை அதை விட...!

    வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார்

    பதிலளிநீக்கு
  21. இங்கேயும் பாருங்கள்!

    http://www.bbc.com/news/magazine-31604026

    நமக்கு மட்டும்தான் கொடுக்கத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  22. ஆஆஹா ! ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க ..நேத்தே படிச்சேன் ..எங்கம்மாவின் நினைவுகள் அவரின் மொட்டை கழுத்து காக்கா தோழன்லாம் வந்து போனாங்க .. உங்க நண்பர் வடகம் கொடுத்தது சூப்பர்ப் :)

    பதிலளிநீக்கு
  23. காக்கை கூர்நோக்கல் பதிவு மிகவும் அருமை. காகம் மனிதர்களை நன்றாக அடையாளம் கண்டு கொள்ளுமென்று எங்கோ படித்திருக்கின்றேன். உங்களைத் தன் நண்பனாக அடையாளங்கண்டு கொண்டு விட்டது. காணொளிக்காட்சி வெகு சிறப்பு! எவ்வளவு புத்திசாலித்தனம்? சிக்னல் விதிகளைக் கரைத்துக் குடித்திருக்கிறது. கடினமான உருண்டையை உடைக்க கையாளும் உத்தி வியப்படைய வைக்கிறது. பறவைகளுக்கு பேசினில் நீர் வைத்திருப்பதுஅறிந்து மகிழ்ச்சி. பாசிட்டிவ் செய்திகளை உங்கள் தளத்தில் கொடுப்பது மட்டுமின்றி அதை நீங்களும் கடைபிடிக்கிறீர்கள் என்றறியும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது. உங்கள் கூர்நோக்கல் தொடரட்டும். இது போன்ற செய்திகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க வெகு சுவாரசியமாயிருக்கிறது! மிகவும் நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  24. ஆஹா.... எவ்வளவு ஆழ்ந்த கவனிப்பு.....

    சுப்பு தாத்தா சொல்வது போல உங்களுக்கு பட்டம் தரலாம்.

    உங்கள் கவனிப்பில் நானும் சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  25. ஆழ்ந்த கவனிப்பு. அபாரமான கட்டுரை.

    காக்கை என்றாலே அழுக்கு என்ற எண்ணத்துடன் ஒதுங்கிவிடும் என்னைக் கொஞ்சம் அசர வைத்தன விவரங்கள். பகிர்ந்துண்ணும் காக்கை என்பது உண்மைதானா? விரட்டியடிக்கும் காக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  26. doctor sriram hahaah super pattam subbu sir. :)

    geetha rendu perum sonathai rasithen :)

    பதிலளிநீக்கு
  27. அட சூப்பர் பதிவு! நாங்களும் இதே போன்றுதான் காக்கையை கவனிப்பது உண்டு. இப்போதெல்லாம் காக்கைகள் சாதம் உண்பதில்லை. கொஞ்சம் சண்டையும் போடத் தொடங்கி உள்ளன....ஆனால் நாய் குட்டிகளுடம் விளையாடும். எருமை மாட்டின் மீது அமர்ந்து பயணம் செய்யும். அதே போன்று அவர்களது பயலாஜிக்கல் க்ளாக் செமையா வேலை செய்யும்...

    பதிலளிநீக்கு
  28. Second comment posting:
    அருமை அண்ணா! நல்ல அப்ஸர்வேஷன்ஸ். காலியா மை ஃப்ரெண்ட்! :)

    பதிலளிநீக்கு
  29. அன்புடன் உங்களுக்கு கொடுக்கிறது.
    இவ்வளவு நாள் கொடுத்த ந்ண்பர் ஒன்றும் இல்லை என்ரு சொல்லிவிட்டாரே ! (என்று உங்களுக்கு பிடித்த வடகம்) நண்பருக்கு வ்டகம் கொடுத்து உபசரித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!