செவ்வாய், 26 மே, 2015

நியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்!



செய்தித் தாளிலிருந்து பாஸிட்டிவ் செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.  அவற்றைத் தவிர சில செய்திகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.  இவை ஒரு செய்தி போல இல்லாமல், ஒரு துணுக்கு போல இடம் பெறுவதால், எத்தனை பேர்கள் இது போன்ற செய்திகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றும்.  எனவே அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று அவ்வப்போது இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.  'லிங்க்' ஆதாரத்துக்குத்தான்.  அங்கிருப்பதுதான் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.


1)  ரத்த சோகையைப் போக்க ஒரு புதிய வழி!

கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ்.  6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது. சத்தான மாத்திரைகளையும் வாங்க முடியாது. இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருந்தது. 





கிறிஸ்டோபர் யோசித்து, இரும்புக் குண்டுகளை உருவாக்கினார். சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த இரும்புக் குண்டைப் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஓர் இரும்புக் குண்டைப் போட்டுச் சமையல் செய்வதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரும்புக் குண்டை தாமரை வடிவமாக மாற்றிச் சமைக்கச் சொன்னார். அதையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியில் மக்களின் கலாசாரத்தைப் படித்தார். மீன் அவர்களின் அதிர்ஷ்டச் சின்னம். அதனால் இரும்பால் ஆன மீனைச் செய்து கொடுத்தார். 


மக்கள் மகிழ்ச்சியோடு சமையலில் இரும்பு மீனைச் சேர்த்துக்கொண்டனர். இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது. மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
ரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் பெண்கள். 


கம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். “எவ்வளவுதான் பிரமாதமான சிகிச்சைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் பலன் ஒன்றும் இல்லை. எந்த விஷயமும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் விதத்தில் கொண்டுவர வேண்டும்’’ என்கிறார் கிறிஸ்டோபர். 



2) என்றும் டால்ஃபின் எங்கள் நண்பன்!




பிரேஸிலின் லகுனா நகரில் வசிக்கும் மீனவர்களுக்கும் டால்பின் களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. தினமும் அதிகாலை வலைகளுடன் மீனவர்கள் வருகிறார்கள். டால்பின்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனிதர்களின் தலைகளைக் கண்டதும் உற்சாகத்தோடு நீந்தி வருகின்றன டால்பின்கள்.


இப்படியும் அப்படியும் வேகமாக நீந்தி, மீன்களை எல்லாம் மீனவர்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. உடனே மீனவர்கள் வலைகளை வீசுகிறார்கள். மிகப் பெரிய மீன்கள் வலைகளில் வந்து விழுகின்றன. வலைகளில் இருந்து தப்பும் மீன்களை டால்பின்கள் உணவாக்கிக்கொள்கின்றன. டால்பின்கள் பொதுவாக மனிதர்களிடம் பழகக்கூடியவை. இந்தப் பகுதியில் 20 பாட்டில் மூக்கு டால்பின்கள் வசிக்கின்றன. 


200 மீனவர்களுக்கும் இந்த டால்பின்கள்தான் மீன் பிடிக்க உதவுகின்றன! டால்பின்களுக்கு ஸ்கூபி, கரோபா என்று பெயர்களைக் கூட வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். தண்ணீருக்குள் இறங்கி, டால்பின்கள் வரவில்லை என்றால் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். உடனே டால்பின்கள் மகிழ்ச்சியாக நீந்தி வருகின்றன. டால்பின்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று வழிவழியாக மீனவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். 


அதேபோல மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று டால்பின்கள் தங்கள் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. மனிதர்களும் டால்பின்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு, நூறு ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் உறவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். 




3) ஒரு அரிய சம்பவம்.  




கொஞ்ச நாட்களுக்குமுன் கரையில் ஓய்வாகப் படுத்திருக்கும் முதலை ஒன்றை புலியோ, சிறுத்தையோ சத்தமில்லாமல் வந்து  ஓடும் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.


எருது போன்ற தோற்றம் கொண்ட மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு வில்ட்பீஸ்ட். தென்னாப்பிரிக்காவில் உள்ள சபி வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள் காத்திருந்த முதலை மானை வாயால் கவ்வியது. முதலைக்கும் மானுக்கும் கடுமையான போராட்டம். அந்த வழியே வந்த நீர்யானை சட்டென்று முதலையின் அருகில் வந்தது. 


முதலையைத் தன் வாயால் இழுத்தது. ஆனால் முதலை தன் பிடியை விடுவதாக இல்லை. சட்டென்று யோசிக்காமல் மானுக்கும் முதலைக்கும் இடையே தன் தலையை நுழைத்து முதலையின் பிடியை விடுவிக்கப் போராடியது. ஆனால் முதலை நீர்யானையையும் சமாளித்துக் கொண்டு, மானையும் விட்டுவிடாமல் இருந்தது. மூன்று விலங்குகளும் நீண்ட நேரம் போராடின. 


மான் உயிர் இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. தான் ஓர் அசைவ பிராணியிடம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தவுடன் வேகமாக முதலையை விட்டு அகன்றது நீர்யானை. விலங்குகளில் இப்படி அடுத்தவருக்காக உதவ வருவது அரிது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

15 கருத்துகள்:

  1. மூன்று செய்திகளும் படிக்க மிகவும் வியப்பளித்தன.

    படத்தேர்வுகளும் அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆச்சரியமாகவும்,வியப்பாகவும் இருக்கிற்து.அந்த காலத்தில் இருப்பு சட்டியில் செய்வார்கள். தோசைக்கல்லும் இரும்பாக இருந்தது.சில பல கரண்டிகலும் இரும்பி இருக்கும்...நல்ல தகவல்கள் சகோ

    பதிலளிநீக்கு
  3. மூன்று செய்திகளுமே வியப்பைத் தருகின்றன நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. இரும்பு மீன், நட்பு பாராட்டும் டாப்ஃபின்கள், நீர்யானையின் செயல்... ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள்!

    மானின் உயிர் போராட்டம் திகிலளிக்கும் விதத்தில்... நீர்யானை வாய் திறந்து நிற்கும் கோணத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. சுவையான அரட்டை தான். என்ன இது பின்னூட்டப் பெட்டி நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாக இருக்கு?

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    தகவல் ஒவ்வொன்றும் பிரமிக்கவைக்கிறது... படித்து மகிழ்ந்தேன்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா
    தகவல் ஒவ்வொன்றும் பிரமிக்கவைக்கிறது... படித்து மகிழ்ந்தேன்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. இன்றைய என் பதிவுக்கு (நான் ஸ்டிக் பாத்திர சமையல் உடம்புக்கு ஒட்டாது)சரியான எதிர் பதிவுதான் இரும்பு மீன் செய்தி :)

    பதிலளிநீக்கு
  9. இரும்பு வாணலி, இரும்பு தோசைக்கல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாகரீகம்+சுலபம் என்று நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு மாறிவிட்டோமோ! இந்தக் கொடுமையை எங்கு போய் சொல்ல?
    மனிதர்களுக்கு உதவும் டால்பின்களும், முதலை வாயிலிருந்து இன்னொரு மிருகத்தைக் காப்பாற்றப் போராடும் நீர்யானையும் பாராட்டுக்குரியவை.

    பதிலளிநீக்கு
  10. @ரஞ்சனி, எங்க வீட்டில் நான் ஸ்டிக் பயன்பாட்டில் இல்லை. இரும்பு வாணலி, சீனாச்சட்டி, இரும்பு தோசைக்கல் ஆகியவை தான் பயன்பாட்டில் இருக்கின்றன. அதுவும் சீனாச்சட்டியில் செய்தால் எண்ணெய்ச் செலவும் குறையும். எந்த நான் ஸ்டிக் சட்டியும் சீனாச் சட்டிக்கு ஈடு ஆகாது.

    பதிலளிநீக்கு
  11. அட! அந்த நீர்யானை யை நினைத்தால் அதியசயமாகதான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  12. சுவாரஸ்யமான தகவல்கள்...நீர்யானை அதிசயம்....

    நாங்கள் இரும்புதான் நோ நான் ஸ்டிக்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!