வியாழன், 23 ஜூலை, 2015

கனிமொழியைக் காப்பாற்றிய சுவாமி.



மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கனிமொழிக்கு ஒய்வு எடுக்க நேரமில்லை.  கனியின் அம்மா ஒய்வு எடுக்கவும் விடவில்லை.  அம்மா என்று பெயர்தான். அப்பாவின் இரண்டாவது மனைவி.  

அம்மாவும் அப்பாவும் கார்த்திக்குடன் பஸ்ஸில் வந்து விட, கனிமொழி ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே இறக்கி விடப்பட்டு நடந்து வந்திருந்தாள்.  கார்த்திக்குக்கு இருமல் என்று மருத்துவமனை சென்று வந்திருந்தனர். 


பஸ்ஸில் சடன் ப்ரேக் போடவும், கார்த்திக்  இருக்கைக் கம்பியில் முட்டிக் கொள்ள, வலி தாங்காமல் அவன் கொடுத்த சத்தத்தில் அகிலாண்டம் துடித்துப் போனாள்.  கனிமொழியின் கவனமின்மைதான் காரணம் என்று தீர்ப்பெழுதிய அவள் அந்த இடத்திலேயே பஸ்ஸை நிறுத்தச் சொல்லி அவளை இறக்கி விட்டாள்.


பயத்துடன் இறங்கிய கனிமொழி, தன்னுடனேயே ஒரு பெரியவரும் இறங்கியதில் சற்று ஆறுதலடைந்தாள்.   பெரியவரை அவள் ஆஸ்பத்திரியிலேயே பார்த்திருந்ததும் நினைவுக்கு வந்தது.


அகிலாண்டத்திடம் இவள் படும் அவஸ்தைகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.  அவர் இவளை அடுத்த பஸ்ஸில் அழைத்துச் செல்ல அழைத்தார்.  கனிமொழி மறுத்து விட்டாள்.  அகிலாண்டம் எப்படியாவது கண்டு பிடித்து விட்டால் அப்புறம் இவள் வீட்டுக்கு வெளியில்தான் தூங்க வேண்டும்.


அவள் அப்பாவின் பார்வையில் வேதனையைக் கண்டாளே தவிர, அவர் கூட அவளை பஸ்சிலிருந்து இறக்கி விடக் கூடாது என்று சொல்லவில்லை.


பெரியவர் பின்தொடர, மூன்று நிறுத்தங்கள் தாண்டி நடந்து ஊருக்கு வந்து சேர்ந்தாள்.


"ன்னை சித்தி என்று கூப்பிடாதே கனி..  அம்மான்னுதான் கூப்பிடணும் என்ன?"   திருமணமாகி வந்த புதிதில் அகிலாண்டத்தின் தேன்வழியும் பேச்சு கேட்டு கனிமொழி பெரிதாக எதுவும் எதிர்பார்க்கவில்லைதான்.  வயது அப்போது மூன்றோ, நான்கோதான்.  ஆனால் அன்பு  செலுத்தாவிட்டாலும், கொடுமைகளாவது செய்யாமலிருக்கலாம்.


அதுவும் அகிலாண்டம் வயிற்றில் கார்த்திக் பிறந்த பிறகு கனிமொழி வேலைக்காரியாகவே மாறிப்போனாள்.  இல்லை, இல்லை மாற்றப் பட்டாள். அப்பா ஏதாவது தன்னைக் காப்பாற்றுவார் என்று ஆரம்பத்தில் நம்பிய கனிமொழி நாளடைவில் அதெல்லாம் வீண் என்று  புரிந்து கொண்டாள்.


செய்யும் வேலையில் ஏதாவது தவறிருந்து விட்டால் போதும்,  (இல்லாவிட்டாலும்தான்!)  அகிலாண்டத்தின் லீலைகள் தொடங்கிவிடும். 


குரலெடுத்துக் கத்துவதில்லை.  இருட்டறையில் வைத்துப் பூட்டுவதும், சரியான உணவு கொடுக்காமல் துன்புறுத்துவதும்....


கார்த்திக் பள்ளி செல்வதும்,  கனிமொழி வீட்டு வேலைகளை மாங்கு மாங்கு என்று செய்வதும் வழக்கமாகிப் போனது.


பரிதாபப் பட்டுத் தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரகள் அகிலாண்டத்தின் வாயில் சிக்கி சின்னாபின்னமானார்கள்.  அப்புறம் அவர்களும் மறைவில் அனுதாபம் காட்டுவதோடு சரி.


அவள் அப்பா நடக்கும் கொடுமைகளை ஒரு பார்வையாளராய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.  ஏனோ மனதின் வேதனையை வெளிக்காட்டத் துணிவில்லை.

சுவாமிநாதன் கோவிலில் அமர்ந்திருந்தார்.  மருத்துவமனையில் கனிமொழியைப் பார்த்ததிலிருந்து அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.  சிறிய ஊர் என்பதால் கோவிலில் அவரால் கனிமொழி பற்றி ஊர்ப்பெண்கள் அவ்வப்போது பேசிக் கொள்வதைக் கேட்க முடிந்தது.


இரண்டு நாட்களாகக் கோவில் வெளி மண்டபத்தில் படுக்கை.  அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து தெருக்களில் சுற்றி வந்தார். 
 
இன்றும் கிளம்பினார்.


அகிலாண்டம் வீட்டு வாசலில்வந்து நின்றார்.  அருகில் சென்று பார்த்தார்.  கனிமொழி வாசல் திண்ணையிலிருந்த தூணின் அருகே வலுக்கட்டாயமாக அமர்த்தி வைக்கப் பட்டிருந்தாள். அருகிலேயே குரங்கு ஒன்று கட்டப் பட்டிருந்தது.  கனிமொழியின் கண்களில் பயம் தெரிந்தது.


உள்ளே அகிலாண்டம் நாற்காலியில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்க, அவள் அப்பா மகளின் மேலேயே கண்ணாக உள்ளே அமர்ந்திருந்தார்.  கார்த்திக், "அக்கா... எழுந்து வா அக்கா... வந்துடு... அமா... அக்கா பாவம்மா....  கூப்பிடுமா" என்றபடி இருந்தான்.  அவன் தலையைக் கோதியபடி அமர்ந்திருந்தாள் அகிலாண்டம்.


சுவாமிநாதன் பொறுமை இழந்தார்.  படிக்கட்டில் ஏறி கனிமொழி கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தார்.


"யார்யா நீ?  பிச்சைக்காரனாட்டம் இருக்கே...  நீ பாட்டுக்க உள்ள நுழையறே..ஏய்.. கனி.. என்ன தைரியம் இருந்தா உள்ள வருவே... போடி வெளியே..."


சற்றே குரலை உயர்த்திப் பேசத்தொடங்கிய அகிலாண்டம் நிமிர்ந்து சுவாமிநாதன் கண்களைப் பார்த்ததும் உறைந்து போனாள்.


அந்தக் கண்களின் ஏதோ ஒன்று அவளைக் கட்டி நிறுத்தியது.


"அகிலாண்டம்.. நீ திருந்தப் போவதில்லை.  இனி சொல்லிப் பயனில்லை.  உனக்கான தண்டனைக் காலம் வந்து விட்டது.  இதோ பார்.. கட்டிய கணவனைப் பேச விடாமல் செய்தாய் அல்லவா...  இதோ!   குரங்கின் அருகே உட்கார்த்தி வைக்கப் பட்டு நடுங்கிக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்தும் பேச வக்கில்லாத, தைரியமில்லாத உன் கணவன் குரங்காக மாறட்டும்" என்றார்.


கனிமொழியின் அப்பா குரங்காக மாறுவதைக் கனிமொழி பிரமித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  குரங்காய் மாறிய அப்பா வெளியில் ஓடிப் போனார்.


"அகிலாண்டம்... நீ பேச முடியாத உன் கணவனாய் மாறுவாய்.  உன்னால் பேச முடியாமல் போகட்டும்" 

மாறினாள்.


கனிமொழி நீ கார்த்திக்காய் மாறு"   கனிமொழி கார்த்திக்கானாள்.


"கார்த்திக்!  நீ அகிலாண்டமாவாய்.    நீங்கள் என்று அந்த ஓடிப்போன குரங்காகிய உங்கள் அப்பாவைக் கண்டு பிடிக்கிறீர்களோ, அன்றுதான் உங்கள் சொந்த உருவங்களை நீங்கள் அடைவீர்கள்.  ஆனால் உன் அப்பா ஓடிக் கொண்டே இருப்பார்.  கடைசியில் ஏதாவது ஒரு கோவிலில் தஞ்சம் அடைவார்.  எந்தக் கோவில் என்று கண்டுபிடித்து நீங்கள் செல்லும்வரை அவர் உங்களுக்காகக் காத்திருப்பார்"


சுவாமிநாதன் வெளியேறினார்.


காத்திருக்கிறார்கள் அனைவரும் அந்த நாளுக்காக... 


சுமார் ஆறுமாத காலத்துக்குப்பின்
செய்தியில் வந்த இந்தச் செய்தியைப் படித்தார்களா இல்லையா, தெரியாது!


வைத்தீஸ்வரன் கோவில் பத்ரகாளியம்மன் சன்னதி முன்பு இரண்டு நாட்களாக உணவருந்தாமல் கண்களில் கண்ணீர்ப் பெருக்கெடுக்க அமர்ந்துள்ள குரங்கால் பரபரப்பு.


நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.  இக்கோவில் நவக்ரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கி வருகிறது.  கோவிலில் வடக்குப் பிரகாரத்தில் பத்ரகாளியம்மன் தனி சன்னதி உள்ளது. 

இந்நிலையில் நேற்று மதியம் முதல் ஒரு குரங்கு அம்மனை வழிபட்டபடியே அமர்ந்திருந்தது.  இதனைக் கண்ட பக்தர்கள் குரங்குக்கு பழம், பால் மற்றும் உணவுகள் வைத்தனர்.


ஆனால் எதையும் உட்கொள்ளாத குரங்கு கருவறை அருகே அமர்ந்து அழுதுகொண்டே அம்மனைப் பார்த்தபடி உள்ளது.  அருகில் செல்லும் பக்தர்களை எதுவும் செய்யாமல் சுவற்றில் சாய்ந்த நிலையிலேயே அமர்ந்துள்ளது.  இரண்டு நாட்களாகக் குரங்கு உணவருந்தாமல் கருவறை அருகே அமர்ந்து வணங்குவது பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  குரங்கைக் காண பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்"








பின்குறிப்பு :: இன்று வந்த வாட்ஸாப் வீடியோ பார்த்து "ஏன் இப்படி? என்னவாக இருக்கும்?" என்று சிந்தனையில் ஆழ்ந்ததன் விளைவு! அவசரமாய்ப் புனைந்த கதை.


49 கருத்துகள்:

  1. காணொளி முகனூலில் கண்டேன்... அதை வைத்து எழுதிய கதை, "அட...! அப்படியா...!" என நினைக்க வைத்தது...

    பதிலளிநீக்கு
  2. தினசரிகளில் படத்தோடு செய்தி வந்திருந்தது. ஆச்சரியமாய் இருந்தது. இப்படி ஒரு யோசனை தோன்றவில்லை. :) ஆனால் அப்பாவைக் குரங்காக மாற்றியதோடு நிறுத்தி இருக்கலாம். கார்த்திக்கை அகிலாண்டமாக மாற்றினால் உண்மையான அகிலாண்டம் தப்பை உணருவது எப்படி? இதெல்லாம் கொஞ்சம் இல்லை, நிறையவே பேத்தலாய்த் தெரியுது. அகிலாண்டம் பேச முடியாத கணவனாய் மாறினால் எல்லாம் சரியாகுமா? ம்ஹூம், தர்க்கரீதியாக யோசித்தால்.........................


    ஹிஹிஹி, நான் வரலை இந்த ஆட்டைக்கு! அம்பேல்! அம்பேல்! அம்பேல்! :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாமி என்றாலே குழப்பம்தானே... நடந்த கொடுமையை தடுக்கும் அதிகாரம் இருந்தும் சும்மா இருந்த அப்பாவுக்குதான் முதல் தண்டனை.

      தன் அன்பு மகன் கார்த்திக் காகவே அகிலாண்டம் திருந்துவாள்!

      நீக்கு
  3. அப்படியே கதையோடு கதையாய்க் கனிமொழி ஆஸ்பத்திரியில் இருப்பதையும் செய்தியாக்கி விட்டீர்கள்! :) நான் சொல்வது கலைஞர் வீட்டுக் கனிமொழி! :)

    பதிலளிநீக்கு
  4. //கனிமொழி ஆஸ்பத்திரியில் இருப்பதையும் செய்தியாக்கி விட்டீர்கள்! ://

    "கனிமொழி ஆஸ்பத்திரியில் இருக்கும் செய்தியையும் கதையாக்கி விட்டீர்கள்!" என்று வந்திருக்கணும். மாற்றி எழுதிட்டேன். டைபோ! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... நீங்கள் நினைக்கும் கனிமொழி இல்லை கீதா மேடம்.

      நீக்கு
  5. சென்னைப் பித்தன் 'கனியும் ,ராஜாவும் 'என்கிறார் .நீங்க 'கனிமொழியைக் காப்பாற்றிய சுவாமி'.என்கிறீர்கள் !தலைப்பில் அரசியல் வாடை அடிக்கிறதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... நீங்க நினைக்கறதுக்கு நான் பொறுப்பில்லை பகவான் ஜி.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா

    கதை அமா்க்கலமாக உள்ளது..வீடியோவையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நல்ல கற்பனை! இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்கத் தோன்றினாலும் கற்பனைதானே என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  8. கற்பனைக் கதைகள் புனைவது அவரவர் மனோதர்மப்படி. இதில் லாஜிக் பார்க்கக் கூடாது. சந்தடி சாக்கில் சிலநிகழ்வுகளைக் கதையில் சேர்த்தால் அது சுவை சேர்க்கும் . தஞ்சையம்பதியின் பதிவில் குரங்கு கோவிலில் படித்தேன்

    பதிலளிநீக்கு
  9. அட! இந்த செய்தியை நானும் படித்தேன்! ஆனால் இப்படி ஓர் கதை தோணவில்லை! சுவையாக இருக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இப்படி எல்லாம் கதை செய்ய எங்கே கற்றீர்கள்:)

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. மாத்துங்க வல்லிமா...உங்களுக்கில்லாத உரிமையா? :))

      நீக்கு
  12. அட! தலைப்பு அருமை! கனிமொழி ஆஸ்பத்திரியில்...அந்தச் செய்திதானோ அதுவும் சுவாமி காப்பற்றியதாக...வில்லங்கம்? என்று முதலில் தோன்றினாலும்...எங்கள் ப்ளாகில் அப்படி எல்லாம் வராதே அப்போ இதில் ஏதோ ஒரு பொடி உள்ளது என்று நினைத்துக் கொண்டே வந்தால் முதல் வரிகளும் அதற்கு ஏற்றார் போல் அமைய.....அடுத்துச் செல்லும் போது...அட சூப்பர் கதை! வாட்சப் வீடியோ பார்த்ததும் இன்ஸ்டன்ட் கதை! இன்ஸ்டன்டிற்கும், ஆர அமர டிகாஷன் இறங்கி அதில் காஃபி குடிப்பதற்கும் ஒரு சிறுவித்தியாசம் இருக்குமே அப்படி...ஒரு மிகச் சிறியது...வேறு ஒன்றுமில்லை...அந்த அகிலாண்டம் எப்படித் திருந்துவார் என்ற எண்ணம்தான்...அவர் இப்போது வாய் பேசமுடியாத அப்பாவின் ரூபத்தில் இருப்பதால்...எப்படி என்ற ஒரு எண்ணம் தோன்றுகின்றது அவ்வளவே..ஜீபூம்பா நன்றாகத்தான் இருக்கின்றது...

    அந்தக் குரங்கு ஆச்சரியமாக இருக்கின்றது.....பாவமாகவும் இருக்கின்றது. ரொம்ப அழகாக இருக்கின்றது.

    (கீதா: பாவம் அதற்கு ஏதோ உடம்பு சரியில்லை என்றே தோன்றுகின்றது. பொதுவாக விலங்குகள் தங்களுக்கு ஏதேனும் உடம்பு சரியில்லை என்றால் உணவு எடுத்துக் கொள்ளாது. தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும்....உங்களுக்கும் தெரிந்திருக்குமே...பாவம் அதற்கு யாராவது வைல்ட் லைஃப் கால்நடை மருத்துவர் மருத்துவம் பார்த்தால் நன்றாக இருக்கும்...மனதிற்கு ஏனோ வருத்தமாக இருக்கின்றது அதைப் பார்க்கும் போது...எப்படிப் பாவமாக உட்கார்ந்திருக்கிறது...மகனிடம் காட்ட வேண்டும்....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசிஜி / கீதா...

      அகி திருந்தினால்தான் சுய உருவம்!!! உருவம் மாறினாலும் உள்ளம் அவங்கவங்க உள்ளம்தான்.... ஓகே?!

      நீக்கு
  13. தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதோன்னு நினைத்தேன்:)) வட்ஸ் up செய்தி அட்டகாசமான கதையாகி இருக்கிறது! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  14. சூப்பர் கதை;அதை விட சூப்பர் தலைப்பு!

    பதிலளிநீக்கு
  15. அரசியல் பத்திரிகைகளில் வருகிற மாதிரி அதிரடி தலைப்பு!
    அந்தக்குரங்கை நினைத்தால் மனதைப்பிசைகிறது!

    பதிலளிநீக்கு
  16. மகனிடம் அந்த வீடியோவைக் காட்டினேன். அவன் சொல்லுஅது விலங்குகளுக்கும் மனிதர்களைப் போல் அவ்வப்பொது மன நிலை டல் ஆகுமாம்...டிப்ரெஷன்...அது போல குரங்கிற்கும் வந்திருக்கலாம்...என்று சொல்லுகின்றான்.அதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது...என்று சொல்கின்றான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி கீதா.... எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

      நீக்கு
  17. கதை அருமை அண்ணா...
    நிகழ்வை மையப்படுத்தி அசத்தி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  18. இந்தக் கதையையே இப்போதான் படித்தேன். கனிமொழி,சுவாமி, ஆஸ்பத்திரி என்னவோ ஏதோ குவம்பிப் போனால் அழகாக கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. நல்ல தில்லுமுல்லு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காமாட்சி அம்மா... வீடியோ பார்க்கவில்லையா?

      நீக்கு
  19. நிகழ்வும் அதனை வைத்து புனையப் கதையும் நன்று!

    பதிலளிநீக்கு
  20. இருந்தாலும் குசும்புதான் உங்களுக்கு... 'கனி', 'சுவாமி' -- அட பாம்பும் கீரியும்.. ஒன்னுக்கு மத்தொன்னு உதவியோனு நெனைச்சு வந்த படிச்சேன் பாருங்க.... என்னைச் சொல்லோனும்...

    பதிலளிநீக்கு
  21. கனிமொழி மருத்துவமனையில் இருந்த நேரம் பார்த்து இப்படியொரு தலைப்பு வைத்து நன்றாகக் குழப்பிவிட்டீர்கள்! கதை ரசிக்கும்படி இருந்தது. வாட்ஸ் அப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி! அது கிரியேட்டிவிட்டியைத் தூண்டி உங்களைப் படைப்பாளியாக்கும்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!