புதன், 28 அக்டோபர், 2015

நாய் கற்பித்த பாடம் - பிலோ இருதயநாத்.



முன் குறிப்பு : சிறு வயதில் பிலோ இருதயநாத் எழுதிய மிகச் சுவாரஸ்யமான ஆக்கங்களைப் படித்திருக்கிறேன்.  காடுகளில் சுற்றுப் பயணம் செய்து மிக அருமையான படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.  பின்னர் அவர் எழுதிய புத்தகங்கள் விற்பனையில் கிடைக்கிறதா என்றும் தேடிப் பார்த்திருக்கிறேன்.  எங்குமே கிடைக்கவில்லை.  தோல்விதான்.
பிலோ இருதயநாத் யார் என்பதைச் சொல்ல எழுத்தாளர் எஸ்ரா எழுதி இருக்கும் வரிகளைத் துணைக்கழைக்கிறேன்.  'துணையெழுத்து'க் காரராச்சே...

"பிலோ இருதயநாத், தனது புத்தகம் ஒன்றில் நரிக்குறவர்கள் பற்றி சுவாரஸ்யமான சில தகவல்களை எழுதியிருக்கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து எழுதியவர் பிலோ இருதயநாத்.



ஒரு சைக்கிள், தலையில் தொப்பி, கருப்புக் கண் ணாடி, பாக்ஸ் டைப் கேமரா அணிந்த பிலோ இருதய நாத்தின் தோற்றம் தனித்துவமானது. தொடக்கப்பள்ளி ஆசிரியரான இருதயநாத், தனது விருப்பத்தின் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தேடிச் சென்று ஆராய்ந்து 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை உலகறியச் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு."
 

இந்த வகையில் பிலோ இருதயநாத் எழுதி, மஞ்சரியில் 1965 இல் வெளியாகி இருக்கும் இந்த உண்மைச் சம்பவத்தை உங்களுக்குத் தருகிறேன்.




ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?



அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன்.  மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன்.  தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன்.  அவர் சிறந்த வேட்டைக்கார்.  அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு.  வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.


"இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.


ரூப் சிங் சொல்லலானார்.


"அது ஒரு பெரிய கதை.  இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன.  அவர் ஒரு செல்வர்.  இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார்.  அவர் நல்ல வேட்டைக் காரர்.  அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை.  நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.  இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும்.   இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார்.  பிறகே உறங்கச் செல்வார்.  செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.


"மறுநாள் காலையில் செல்வரோ, அவருடைய மனைவியோ விழித்து எழுந்து வந்து மறுபடியும் நாயைத் தடவிக் கொடுத்த பின்பே வேலைக்காரர்கள் உள்ளே வருவார்கள்.  வரவும் முடியும்.  இரவில் எந்தத் திருடனும், எந்தக் கொடிய மிருகமும் உள்ளே வர முடியாது.  அப்படி வந்தால், முன்னூறு நாய்களும் ஒன்றாகச் சேர்ந்து எதிர்க்குமாம்.  மனிதனையோ, கொடிய மிருகத்தையோ அவற்றுள் பெரும்பாலான நாய்கள் துரத்திக் கொண்டு போகுமாம்.  மற்ற நாய்களோ வீட்டில் காவல் காக்குமாம்.  அப்படிக் காக்க நிரந்தரமாக உள்ள நாய்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும்  அந்த இடத்தை விட்டு அகல்வதில்லையாம்.  இப்படிப்பட்ட முன்னூறு நாய்களை நீங்கள் எங்கும் கண்டிருக்க மாட்டீர்கள்..


மேலும், அந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஆளுக்கு ஒரு துப்பாக்கியுடன் காட்டுக்கு வேட்டையாடத் தங்கள் இரண்டு வயதுக் குழந்தையையும் எடுத்துச் செல்வார்கள்.  காட்டில் எங்கேயாவது ஒரு மரக்கிளையில் ஏணை கட்டிக் குழந்தையை அதில் தூங்க விடுவார்கள்.  பிறகு திசைக்கு இரண்டு நாய்கள் வீதம் நான்கு திசைகளிலும் எட்டு நாய்களைக் குழந்தைக்குக் காவல் வைத்து விட்டு மற்ற நாய்களுடன் அவர்கள் இருவரும் வேட்டைக்குப் போவார்கள்.  குழந்தையின் பெற்றோர்க்கள் வருவதற்கு முன் குழந்தை எழுந்து அழுதால், உடனே ஏணையின் தனிக் கயிற்றைப் பிடித்து இப்படியும் அப்படியும் இழுத்து ஆட்டி விடுமாம் அவற்றில் ஒரு நாய்.


"வேட்டையாடிக் கொண்டு வந்த பிராணியின் மாமிசத்தில் பாதிக்கு மேல் தங்கள் நாய்களுக்கு அவர்கள் போடுவார்கள்.  அந்தச் செல்வரிடமிருந்து கிடைத்த நாய்தான் இது.  ஆனால் இந்த நாயை நான் வேட்டைக்கு மற்றொரு விதமாகப் பழக்கி வைத்திருக்கிறேன்."


நான் அவரது இல்லத்தில் இருந்தபோது ரூப் சிங்குக்கு மிக நெருங்கிய நண்பரான ஜயசீலன் என்பவர்,  தாம் புலி வேட்டைக்குப் போவதாகவும், ஆகவே புலி வேட்டையில் மிகவும் தந்திரமான ரூப்சிங்கின் நாயை ஒரு நாளைக்கு இரவல் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.


புலி வேட்டைக்கு ஜயசீலன் போவதைக் கேள்விப்பட்டவுடன், "நானும் உங்களுடன் வருகிறேன்" என்று ஜயசீலனிடம் கூறினேன்.


ஆனால் ரூப் சிங், "இப்போது வேண்டாம்.  நான் போகும்போது வாருங்கள்.  புலியை வேட்டையாடுவோருள், புலியின் குணத்தை முழுவதும் தெரிந்து கொண்டவர்கள் எவரும் இல்லை.  எது எப்படி இருக்குமோ, யாருக்குத் தெரியும்?  நீலகிரிப் பகுதியில் ஆட்கொல்லிப் புலி இல்லை என்று ஷிகாரிகள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் மைசூரிலிருந்து அத்தகைய புலி ஒன்று ஒரே இரவில் நூறு மைல் பிரயாணம் செய்து நீலகிரிக்கும் வருவதுண்டு" என்று கூறினார்.


நான் "அப்படியானால் சரி ; நான் இப்போது ஜயசீலனுடன் போகவில்லை" என்று ஒப்புக் கொண்டேன்.


"நீங்கள் என் நாயைக் கொண்டு போவதில் எனக்கொன்றும் தடையில்லை.  ஆனால் நான் சொல்வதைப்போல் மட்டும் தயை செய்து மறக்காமல் செய்ய வேண்டும்.  இல்லா விட்டால் வீணாக நாய் இறந்து விடும்.  காட்டினுள் நாயைக் கட்டி அழைத்துச் செல்லும்போது,  நாய் முன்னால் போய்க்கொண்டே இருக்கும்.  இடையில் புலியையோ, கரடியையோ மற்ற மிருகங்களையோ மோப்பம் பிடித்ததும், நாய் உங்களைச் சுற்றி வரும்.  அப்படி இது செய்தால், உடனே இந்த நாயை அவிழ்த்து விட்டு விடுங்கள்.  அவிழ்த்து விட்டதும் நாய் உங்களுக்கு முன்னால் சுமார் இருபது அல்லது முப்பது அடி தூரத்தில் போய்க்கொண்டே இருக்கும்.  மோப்பம் பிடித்த பிராணியைக் கண்டதும் நாய் கீழே உட்கார்ந்து மெதுவாக நகர்ந்து போக ஆரம்பிக்கும்.  நீங்களும் அதன் பின்னால் நடந்து போக வேண்டும்.  எதிரியின் அருகில் ஓரளவுக்கு நாய் போனதும், மேலே போகாமல் நின்று விடும்.  அப்போது நீங்கள் உடனே உங்கள் துப்பாக்கியால் ஆகாயத்தைப் பார்த்துச் சுட வேண்டும். அந்த வெடிச் சத்தம் கேட்டுப் புலி ஒரு வினாடி திரும்பும்.  அந்த கணத்திலே நாய் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து புலியின் தொண்டையைப் பிடித்துக் கொள்ளும்.  நாயை என்னதான் புலி உதறினாலும் நாய் தன் பிடியை விடாது.  கடைசியில் புலிக்கு மூச்சுத் திணற ஆரம்பிக்கும்.  அப்போது புலியை நீங்கள் சுட வேண்டும்.  அந்த நிலையில் புலி உடனே சுருண்டு கீழே விழுந்து விடும்.  நீங்கள் சுட்ட பிறகுதான் நாய் தன் பிடியை விடும்.  அதுவரையில் புலியின் கழுத்தை நாய் விடாது.  தயை செய்து இவற்றை எல்லாம் ஒழ்ங்காகச் செய்ய வேண்டும்" என்று ஜயசீலனிடம் ரூப் சிங் கூறினார்.


ஜயசீலனும் "சரி" என்று கூறி ரூப் சிங்கின் நாயைத் தம்முடன் அழைத்துக் கொண்டு போனார்.  அன்று மாலையில் சுமார் ஐந்து அல்லது ஆறு மணி இருக்கும். 


"காலையில் போனவர் இன்னும் வரவில்லையே" என்ற கவலையுடன் நானும் ரூப் சிங்கும் உட்கார்ந்து கொண்டிருந்தோம்.  சிறிது தூரத்தில் ஜயசீலன் மூச்சு வாங்க ஓடி வருவது தெரிந்தது.  ஆனால் நாயைக் காணவில்லை.


"மிஸ்டர் ரூப் சிங்!  நீங்கள் சொன்னதைப் போலெல்லாம் நாய் செய்தது.  ஆனால் பெரிய புலியின் எதிரில் நாயின் தோற்றத்தையும், பார்வையையும், புலியின் பார்வையையும் கண்ட எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் ஏற்பட்டு விட்டது.  ஒரு நிமிஷங்கூட நான் அங்கு இல்லை.  உடனே ஒரே ஓட்டமாக ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டேன்" என்று சொல்லி முடிப்பதற்கு முன், ரூப் சிங்கின் கண்கள் சிவந்தன.


அவர் மனம் பதறியவராய், ஜயசீலன் சுட்டிக் காட்டிய திசையிலே தம் துப்பாக்கியுடன் பறந்தார்.


ரூப் சிங்கின் வேகத்தையும், கோபத்தையும் கண்ட நான், வீட்டிலேயே தங்கி விட்டேன். 


சில மணி நேரத்துக்குப்பின் ஜயசீலன் தம் துடையில் ஏதோ காயக் கட்டுடன் வருவதைக் கண்டேன்.  நாயின் உடல் முழுவதும் காயங்கள்; குருதி!  திகைத்து நின்றேன்.


ரூப் சிங் சொன்னார் :


"நான் ஓடி இரா விட்டால் நாயை இழந்திருப்பேன்.  நாய் நான் வருவதை மோப்பத்தின் மூலம் தெரிந்து கொண்டு, தன் வாலை மட்டும் லேசாக ஆட்டியது.  ஆனால் தன் தலையை ஒரே பார்வையில் வைத்திருந்தது.  அது வாலை ஆட்டும் காட்சியைக் கண்டதும் எனக்குக் கண்கள் கலங்கின.  சட்டென்று துப்பாக்கியால் ஆகாயத்தில் சுட்டேன்.  புலி அதைக் கேட்டு ஒரு வினாடி திரும்பியது.  அடுத்த வினாடி புலியின் கழுத்தை என் நாய் பிடித்திருப்பதைக் கண்டேன்.  புலி என்ன என்னவோ செய்தது.  நாயின் உடலில் தன் நகங்களால் பீறிப் பல காயங்களை உண்டாக்கியது.  சுமார் பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் புலியின் வேகம் குறைந்தது.  சமயம் கிடைத்ததும் புலியின் நெற்றியைப் பார்த்துச் சுட்டேன்.  புலி தரையில் சாய்ந்தது.


"அடுத்த நிமிஷம் நண்பர் ஜயசீலனின் அலறல் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.  என் நாய் என்ன செய்தது தெரியுமா?  ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஜயசீலனின் துடையைக் கவ்விக் கடித்து விட்டது.  நான் மட்டும் நாய்க்குக் குரல் கொடுக்கா விட்டால், அவரைத் தீர்த்தே இருக்கும்.


" 'ஆபத்தில் உதவாத நண்பன் பகைவனே' என்று நாய் பாடம் கற்பித்திருக்க வேண்டும்."

24 கருத்துகள்:

  1. கவ்விக் கடித்து நன்றாகவே பாடம் கற்பித்து விட்டது...!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே
    ஆபத்தில் உதவாத நண்பன் பகைவனே
    அருமை
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடம்! இன்றும் எங்கள் கிராமப்புறங்களில் 6, 7வேட்டைநாய்களுடன் சென்று ஆளுக்கொரு திசையில் கிடைத்ததை கவ்விகொண்டு வரும்! சுமந்து வருவதுதான் வேலை! நன்றி

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான கதைக்கு பிலோ மார்க் போட முடியலே பாஸ் :)

    பதிலளிநீக்கு
  5. ஆஹா என்ன சுவாரசியமான பகிர்வு. தேடி எடுத்து பதிவு செய்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. மெய் சிலிர்க்கின்றது. மிகவும் அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான நிகழ்வு பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. விறுவிறுப்பான கதைபோல் இறுதிவரை சுவாரசியமாக சென்ற நிகழ்வு! அருமையான பதிவு!
    த ம 6

    பதிலளிநீக்கு
  9. நாய் செய்தது சரிதான். தொடை நடுங்கிகளெல்லாம் எதற்காக வேட்டைக்குப் போகவேண்டும்?

    பதிலளிநீக்கு
  10. அருமையான பகிர்வு
    நல்ல படிப்பினை
    சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

    பதிலளிநீக்கு
  11. ஆனந்த விகடனில் பிலோ இருதயநாத் நிறைய எழுதிப் படித்திருக்கேன். இது படித்த நினைவு இல்லை. திகில் ஊட்டும் சம்பவம்! :) நாயின் அறிவு வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. நன்றியை உணரத்தெரிந்த நாய்க்கு நன்றிகெட்ட தன்மையையும் உணரத்தெரிந்திருப்பதில் வியப்பென்ன? 1965 இல் மஞ்சரியில் வெளியான உண்மை சம்பவத்தை இப்போது வாசிக்கப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. சுவாரஸ்யமான பதிவு! அந்த நாய் செய்ததில் தவறில்லை!

    பதிலளிநீக்கு
  14. முன்னூறு நாய்களும் அவற்றின் செயல்களும் நிஜமா கற்பனையா என்று எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. ஆபத்தில் உதவாத நண்பன் பகைவனே.... கதையில் நல்ல பாடம் கிடைத்தது நண்பரே...

    பதிலளிநீக்கு
  16. சின்ன வயதில் ஆனந்த விகடனிலும் வேறு சில இதழ்களிலும்கூட பிலோ இருதயநாத் ஆக்கங்களைப்ப‌டித்திருக்கிறேன். அவரின் கட்டுரையை இங்கு வெளியிட்டு அவரை மறுபடியும் ஞாபகமூட்டியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. கேட்கவே பிரமிப்பாகவும் வியப்பாகவும் இருக்கின்றது...

    கீதா: ஃபிலோ இருதநாத் எழுதியவை வாசித்ததுண்டு. நாலுகால் செல்லம் நாலுகால் செல்லம் தான்.....

    பதிலளிநீக்கு
  18. சிறந்த பகிர்வு!
    நாய் அவரைக் கடித்தது நியாயம்தான்!

    பதிலளிநீக்கு
  19. பிலோ இருதயநாத் கதைகள் தொகுப்பு சிறு வயதில் வாசித்திருக்கேன் ..அதேபோல இந்த வேட்டை நாய்கள் மிக அன்புள்ளவை .உரிமையாளருக்கு ஒரு சோதனை என்றால் தன்னுயிரையும் கொடுக்கும் ..விருவிருப்பா இருந்தது வாசிக்க ..பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  20. நாய் நல்ல பாடம் புகட்டியது! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஸ்வாரசியமான பகிர்வு. இந்த பதிவு பற்றி தான் நீஙகள் சொன்னீர்கள் என நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  22. வானதி பதிப்பகத்தில் சில நூல்கள் கிடைக்கின்றன ...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!