சனி, 31 ஜனவரி, 2015

டென்னிஸ் போட்டிக்குள் போட்டி

மகளிர் போட்டிகளில் குட்டை உடை போட்டி அறிவிக்காத ஐட்டமாக நடைபெறுகிறது. இன்றைய மகளிர் இறுதிச் சுற்றில் குட்டையாடைப் போட்டி ட்ராவில் முடிந்தது. ஸெரீனா மரியா இருவருக்கும் 99 மதிப்பெண்கள்.

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) தாய்மையின் அன்புக்கு வயதேது?





2)  எப்படி வேண்டுமானாலும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  இப்படித்தான் வாழவேண்டும் என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள் - இவரைப்போல.
 
 


3)  இதுவரை எந்த ஆட்சியாளரும் இப்படிச் செய்தது இல்லை என்று நினைக்கிறேன்.  (சிலசமயம் இப்படி மீட்கப்பட்டவர்கள் மறுபடி பழைய தொழிலுக்கே சென்று விடுவார்கள்) கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் 
 


4)  நாடென்ன செய்தது  எனக்கு, என்று கேள்விகள் கேட்பது எதற்கு?  நீ என்ன செய்தாய் அதற்கு? என்று நினைத்தால் நன்மை உனக்கு!"  தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற சர்வதேச அமைப்பின் விருது பெற்ற ஆங்கில ஆசிரியர் ஆனந்த்
 


5)  பரத் செய்தது அவர் பெற்றோருக்கு எப்படி இருந்ததோ,  அவரைப் பொறுத்தவரையும் அவர் நண்பர் அஷ்வினைப் பொறுத்தவரையும் அசாதாரணமானது.  அஷ்வினின் விடாமுயற்சியும் திறமையும் பாராட்டுக்குரியது.
 



6) 2002 லிருந்து புகை, மது பழக்கங்களிலிருந்து விடுபட்ட கிராமம்.  பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரிய நாகபூஷணா.
 



7)  சின்னஞ்சிறு வீரர்கள்.  இளம் சிறார்கள்.
 


8) பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவுவதற்கான அமைப்பு. ACT நிவேதிதா தேசாய்.
 



9) தொழில் பயிற்சி.  நல்ல முயற்சி.


வியாழன், 29 ஜனவரி, 2015

2. ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி.




சென்னையில் நவீன திருமண மண்டபங்களைப் பார்த்துப் பழகியிருந்த கண்களுக்கு இந்த மண்டபம் பழைய பாணியில் சற்றே வித்தியாசமாக இருந்தது.  அகலவாக்கில் சிறிய சைஸில் இருந்தது.  திருமணம் நடக்கும் மேடைக்கு தனி செக்ஷன் போல ஒரு பார்டிஷன்.  ஆனாலும் சிறிய மண்டபம்தான். 

ண்டபத்துக்குப் பின்னால் இரண்டாம் கட்டுக்குச் சென்றால், (மேலேயும் கீழேயும்) மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தங்குமிடம் கொஞ்சம்  பெரிய இடமாக அழகாக இருந்தது!  

மூன்றாம் கட்டுக்குப் போனால் சாப்பிடுமிடம்.  நான்காம் கட்டு கை கழுவுமிடம்.  நவீன மண்டபங்களும் ஸ்ரீரங்கத்தில் நிறையவே இருக்கின்றன.  

இரவு சாப்பிட்டபின்(னும் முன்னும்) உறவுகளிடம் கொஞ்சம் பேசி விட்டு திரு கௌதமனின் சம்பந்தி வீட்டில் சென்று இரவு படுத்து விட்டோம்.  அதிகாலை 3 மணிக்கே விழிப்பு வந்துவிட,  சித்தப்பா தான் கிளம்பிச் சென்று காவேரியில் குளிக்கப் போவதாய்ச் சொன்னார்.  "யார் யார் கூட வர்றீங்க?" என்றார்.  கேஜி முதலில்,  'தான் காவிரியில் குளிக்கா விட்டாலும் சும்மா பார்க்கக் கூட வருவதாக'ச் சொன்னார். 'நானும் வேடிக்கைப் பார்க்க வருகிறேன்' என்றேன்.   நான்கரை மணிக்கு நான் வீட்டிலேயே குளித்து விட்டு, காவிரிக்குக் கிளம்புபவர்களுடன் கிளம்பினேன்.  


குளிப்பவர்கள் இரண்டுபேரும்  (ஆம், இன்னொருவரும் குளிக்க ரெடியாகி விட்டார்) முன்னால் சென்றுவிட, குளிக்காத, வேடிக்கை பார்க்கக் கிளம்பிய நாங்கள் மூன்று பெரும் பின்னால் சென்றோம்.  எல்லோருக்குமே அந்நேரத்திலேயே எழுந்து சிரமம் பார்க்காமல் காபி தந்து உபசரித்தார்கள் அந்த வீட்டுத் தலைவி.  அம்மா மண்டபம், கருட மண்டபம் குழப்பத்தில் அவர்கள் சரியாக இடது புறம் திரும்பி கருட மண்டபம் சென்றிருக்க, நாங்கள் வலதுபுறம் திரும்பி அம்மா மண்டபம் சென்றோம்.


அந்நேரத்திலும் அந்த ஏரியா கலகலப்பாக இருந்தது.  டீக்கடைகள் சுறுசுறுப்பாக டீ போட்டபடி இருக்க, ஓரிரு கடைகளில் வடை கூடப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  நிறைய டூரிஸ்ட் - குறிப்பாக வடநாட்டுப் பயணிகள் - கண்ணில் பட்டார்கள்.


உள்ளே சென்று காவிரியை இருளில் தரிசித்தோம்.  அந்த இடங்களில் குளிக்குமளவு தண்ணீரைத் தேக்கியிருந்தார்கள்.  அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டதிலிருந்து நாங்கள் இருக்கும் திசைக்கு நேரெதிர்த் திசையில் அவர்கள் குளித்துக் கிளம்புகிறார்கள் என்று அறிந்தோம்.  கரையில் நின்றிருந்த தும்பிக்கை நண்பரை இருளிலேயே படம் பிடித்துக் கொண்டு திரும்பினோம்.


அவர்கள் தனியாக, நாங்கள் தனியாக வீடு வந்து சேர்ந்தோம்.  இந்த வகையில் அதிகாலை நாலரை மணி முதல் ஐந்தே முக்கால் வரை ஒரு நடைப்பயிற்சி முடித்தோம்!

அந்த நடைப் பயிற்சியில் ராமன் பிரம்ம குமாரிகள் சங்கம் வழங்கும் சொற்பொழிவுகள் சென்று வருவதாகக் குறிப்பிட்டு, அவர்கள் சொல்லும் தத்துவத்தைச் சுருக்கமாகக் கூறிக் கொண்டே வந்தார்.  அவ்வளவு கோர்வையாக அந்தக் குழப்ப விஷயத்தை அவர் தடையில்லாமல் சொல்லிக் கொண்டு வந்தது எனக்கு வியப்பைத் தந்தது.  உண்மையில் 'மரணமும், மரண பயமும்' என்ற தலைப்பில் பேச்சு தொடங்கியிருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் அதற்குள் வீடு வந்து விட்டதே என்றுதான் தோன்றியது.

உடனடியாகக் கிளம்பி மண்டபம் வந்து விட்டோம்.  இங்குமொரு காபியைக் குடித்து விட்டு, கொஞ்ச நேரம் திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்து, படம் பிடித்து, உடனுக்குடன் வாட்சப்பில் உறவு க்ரூப்புக்கு அனுப்பிக் கொண்டுமிருந்தோம்.


7 மணிக்கு டிபன் சாப்பிட்டு விடலாம் என்று முடிவு செய்தோம்.  சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் சென்றால் அங்கே மண்டபத்தில் பதிவர் மீட் வைக்க முடியுமா என்று கேஜி ஒரு யோசனை சொன்னார்.  பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் அது சாத்தியமில்லை என்று புரிந்தது.  எங்கே விட்டேன்?  டிபன் சாப்பிட... அது முக்கியம். எதைச் சொல்கிறோமோ இல்லையோ இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் சொல்லி விட வேண்டும்.  என்ன சொல்கிறீர்கள்?  அப்புறம் சாப்பாட்டு ராமன் என்ற என் நற்பெயருக்குக் களங்கம் வந்து விடுமே....

சிலர் மட்டுமே அமர்ந்திருக்கும் அதிகாலை சாப்பாட்டுக் கூடம்.  முதல் இரண்டு வரிசைகள் மட்டுமே பாதிப் பாதி நிறைந்திருந்தது.  பரிமாறுபவர்கள் சௌகர்யம்.  

முதலில் பெயர் தெரியாத ஸ்வீட் போட்டார்கள். ஆனால் ஸ்வீட்டாக இருந்தது. நல்ல சிகப்புக் கலர்!  அடுத்துப் போட்டது ரவா கிச்சடியா, ரவாப் பொங்கலா என்ற சந்தேகம் எனக்கு இன்னமும் உண்டு.  


எதுவானால் என்ன, சூடாக, - எவ்வளவு சூடு என்றால் தொண்டைக்குழி வழியாக சூடாக இறங்கி, வயிறு வரை சூடு தெரியும் வரைப் பயணிக்கும் அளவு சூடு - இதற்குத் தொட்டுக் கொள்ளத் தேங்காய்ச் சட்னி மட்டும் போட்டுச் சென்றவரைக் கடுப்புடன் பார்த்தேன்.  பின்னாலேயே ஒருவர் சாம்பாருடன் வந்து வயிற்றில் சாம்பாரை வார்த்தார்.  


அடுத்து ஒருவர் ஒற்றை இட்லி போட்டவாறு செல்ல, அவரை அழைத்து 'ஆகாது, தப்பு! ரெண்டு ரெண்டாப் போடுங்கோ' என்று இரண்டாவது இட்லியும் வாங்கிக் கொண்டேன். அரைக்கரண்டி மட்டும் சாம்பார் விட்டு விட்டு தாண்டிச் சென்று திரும்பியவரை எதிர்த் திசையில், எனக்கு நேராகப் பரிமாறியபோது கையும் சாம்பார் வாளியுமாகப் பிடித்து இன்னும் இரண்டு கரண்டி சாம்பார் வாங்கி இட்லியையும், கிச்சடிப் பொங்கலையும் சாம்பாரில் குளிப்பாட்டினேன்.  அடுத்து வந்தது உள்ளங்கையை விட சற்றே பெரிதான அளவில் இருந்த ஊத்தப்பம்.  ஏற்கெனவே எக்ஸஸில் வாங்கி வைத்திருந்த சாம்பார் இதற்கும் உதவியது!  ஒற்றை ஊத்தப்பத்தை நான் ஒத்துக் கொண்ட காரணம் அடுத்து பூரி வரும், அதைச் சாப்பிட வயிற்றில் இடம் இருக்க வேண்டுமே என்றுதான்.  ஆனால் ஐயகோ...இதோடு எல்லோரும் சென்று முன்னால் செட்டிலாகி விட்டார்கள்.  வேறு ஐட்டம் இல்லை!


என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.  எழுந்து விட்டோம்.  டிபன் சாப்பிட்ட உடன் காபி சாப்பிடுவது தமிழர் மரபாகையால் இங்கும் ஒரு காபி ("சர்க்கரை கம்மியாய்!") வெளியே வந்தோம்.  "ஏவ்..."

ஆறே முக்கால் ஆனது.  இந்நேரம் நண்பர்களுக்கு அலைபேசினால் அவர்களுக்கும் தொந்தரவிருக்காது என்று முடிவு செய்து, முதலில் நான் கீதா மேடத்துக்கு அலைபேசியில் பேசினேன்.  வெங்கட் நாகராஜும் அவர் திருமதியும் வேறொரு விசேஷத்துக்காக வேண்டி சென்னை கிளம்பிச் சென்றிருக்கிறார்கள் என்ற தகவலைத் தெரிவித்தார் கீதா மேடம்.  நாங்கள் ஐந்தாறுபேர் வருவோம் என்று கூறியும் அசராமல் 'தாராளமா வாங்க' என்றார். 

கௌதமன் திரு வைகோ அவர்களுக்கும், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களுக்கும் பேசினார்.  எல்லோரையும் ஒரு இடத்தில் பார்க்க முடியுமா என்று நாங்கள் நினைத்த எண்ணம் நிறைவேற வழியில்லை என்று தெரிந்தது.


ஆர் ஆர் ஆர் அவர்களுக்கு வீட்டை விட்டு நகர முடியாத சூழல்.  வைகோ அவர்கள் கண் சிகிச்சைக்காக வெளியே கிளம்ப வேண்டிய நிலை.  அரங்கனைத் தரிசிக்கக் கோவில் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.   நேரமோ எட்டு மணி முதல் ஒன்பதரைக்குள்!

                                                                                                                                                         
                                                                                                                                          - தொடரும் -

புதன், 28 ஜனவரி, 2015

ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும்!




உறவினர் இல்லத் திருமணம் ஜனவரி மாதம், ஸ்ரீரங்கத்தில் என்று டிசம்பரில் தெரிந்தது.  உடனே எதுவும் முடிவு செய்துவிட முடியவில்லை.  வெளியூர்த் திருமணங்களுக்கு அட்டெண்டன்ஸ் போடுவது என்பது கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது!  எனவே அவசரப்பட முடியவில்லை.

                                                   
கிளம்பும்வரை நிச்சயமில்லாத சூழல் என்பது எனக்கு மட்டும்தான்.  மற்ற மூன்று எங்கள் ஆசிரியர்கள் அட்டெண்டன்ஸ் உறுதி என்று ஆனது.  இருந்தாலும் ஸ்ரீரங்கம் வந்தால் சந்திக்க முடியுமா என்று கீதா மேடத்தின் வசதியைக் கேட்டு வைத்தேன்.  நல்லவேளை, முன்கூட்டியே நாங்கள் வருவது பற்றிச் சொல்லியும் அவர் தப்பித்துச் சென்று விடவில்லை.  பிழைக்கத் தெரியாதவர்!!


கௌதமன் வைகோ அவர்களிடமும்,  திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களிடமும் பேசி வைத்தார்.  ரிஷபன்ஜி அலைபேசி எண் எங்களிடம் இல்லாததால் ஸ்ரீரங்கம் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டோம்.


ஜனவரி 24 ஆம் தேதி காலையே ஸ்ரீரங்கம் வந்துவிட்ட திரு கௌதமன் அலைபேசியில் தான் அங்கு வந்து சேர்ந்துவிட்டதைச் சொல்லி, எங்கள் பயண விவரமும் கேட்டுக் கொண்டார்.  நாங்கள் மதியம் மூன்று மணிக்கு சென்னையிலிருந்து கேஜியின் போலீரோவில் கிளம்பினோம்.  21 ஆம் தேதியிலிருந்து சென்னை அகில இந்திய டாக்டர்கள் மாநாட்டால் குலுங்கித் திணறிக் கொண்டிருந்தது.  காலையும், மாலை 5.30 க்கு மேலும் சென்னை டிராபிக்கில் சிக்கித் திணறுபவர்கள்,  இந்தத் தண்டனைக்குக் கருடபுராணத் தண்டனைகளே தேவலாம் என்று உணர்ந்து கொண்டிருந்தார்கள்!

 
அதற்கு முதல்நாள்தான் மதுரையிலிருந்து வந்திருந்த அண்ணன் மகனை, கோயம்பேடு அனுப்ப ஒன்பது மணி பஸ்ஸுக்கு 7 மணிக்கேக் கிளம்பியும் கடைசி நிமிடத்தில்தான் செல்ல முடிந்த அனுபவம் இருந்தது.  இத்தனைக்கும் எங்கள் இருப்பிடத்திலிருந்து கோயம்பேடு அரை மணிநேரப் பயணம்.



                                               


பெருங்களத்தூரை அதற்குண்டான நேரத்தில் அடைந்து விட்டோம்.  அங்கிருந்து வண்டலூர் தாண்டுவதற்குள் முழி பிதுங்கிப் போனது!  இன்ச் இன்ச்சாக நகர்ந்த வண்டிக்கூட்டங்கள் வெறுப்பேற்றின.

 
நடுவில் ஒரு இடத்தில் எரிபொருள் நிரப்பியதைத் தவிர, எங்கும் நிறுத்தாமல் ஸ்ரீரங்கம் அடைந்தபோது மணி இரவு 8.30.  நேராகச் சாப்பாட்டு ஹால் சென்று, ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டோம்!


முன்னரே நாங்கள் மூவர் ஆளுக்கொருவரிடம் 5 சாப்பாடுகள் எடுத்து வைக்கச் சொல்லியிருந்தோம்.  மொத்தம் 15 சாப்பாடு காத்திருக்கப் போகிறது என்று பேசிச் சென்றோம்.  அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் அப்போதுதான் கடைசி பந்திக்கு முதல் பந்தி ஓடிக் கொண்டிருந்தது.

                                                          
சாப்பாட்டில் இரண்டு விஷயங்கள் நாக்கைக் கவர்ந்தன.  ஒன்று பாயசம்.  இரண்டாவது கிடாரங்காய் ஊறுகாய்..  பாயசம் பயங்கரப் பற்றாக்குறை போலும்.  முதல்முறை ஒரு கரண்டி ஊற்றியவர், இரண்டாவது முறை கேட்டதும் அரைக் கரண்டிதான் ஊற்றினார்!  ஊறுகாய், கேட்ட அளவு கிடைத்தது.  நாங்கள் காரத்தையும் ரசிப்போம்,   இனிப்பையும் ரசிப்போம்ல...   ரிசப்ஷனுக்கு வந்த கூட்டத்தின் அளவு சாப்பாட்டில் தெரிந்தது.  குறிப்பாக ரசத்தில்!!

                                                                                                                                      -  தொடரும்  -


திங்கள், 26 ஜனவரி, 2015

'திங்க'க்கிழமை : காய்கறி கார புட்டு

   
90 களில் வந்த மங்கையர் மலர் இதழில் இந்த ரெசிப்பியை எழுதி, கடலூரிலிருந்து எஸ். ஜெயலட்சுமி என்பவர் 'இம்மாத இல்லத்தரசி' பகுதியில் முதல் பரிசு வென்றிருக்கிறார்.
      
அதை இங்கு பகிரலாம் என்று தோன்றுகிறது.
     
தேவையான பொருட்கள் :  
     
கோதுமை ரவை (சம்பா)  -  200 கிராம்.
பயத்தம் பருப்பு                   -  200 கிராம்.
உப்பு                                      -  தேவையான அளவு.
கடுகும் உ.பருப்பும்            -  ஒரு, ஒரு டீஸ்பூன்.

டால்டா அல்லது 

எண்ணெய்                           - 50 கிராம். (நான் டால்டாவுக்கு எதிரி!)


வேண்டிய காய்கறிகள் :  

கேரட் அல்லது பீட்ரூட்  -  200 கிராம்.
காலிஃபிளவர்                   -  சிறியது
பச்சைப்பட்டாணி            -  50 கிராம்.
(பெரிய) வெங்காயம்     -  2
உ.கிழங்கு                         -  2
கொத்துமல்லித் தழை  -  ஒரு கட்டு
பச்சை மிளகாய்              -  6
இஞ்சி                                -  சிறு துண்டு
தேங்காய்                         -  ஒரு மூடி
எலுமிச்சம்பழம்              -  1 

  



செய்முறை :
பயத்தம்பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்கவும். கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.  வறுத்த ரவையைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.  கேரட் அல்லது பீட்ரூட்டை பூப்போல் சீவி வைத்துக் கொள்ளவும்.  ஊறிய பயத்தம் பருப்பைத் தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும்.  அரைத்த விழுதுடன் ஊற வைத்த கோதுமை ரவை, சீவிய துருவல், திட்டமாக உப்பு சேர்த்துக் கரைக்கவும்.  கரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி வேக விடவும்.  வெந்தவுடன் எடுத்து, ஆறவைத்து, நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 
    
(உரித்த பச்சைப்) பட்டாணி, உருளைக்கிழங்கு, காலி ஃபிளவர் இவைகளைச் சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.  
     
காலிஃபிளவரை உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்தால் அதில் உள்ள புழுக்கள் வந்து விடும் (அதான் எனக்குத் தெரியுமே...)  
     
வெங்காயம், இஞ்சி, மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  மல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.   
     
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்ப........   
      
ஐயையோ..... இந்த இடத்திலிருந்து கிழிந்து போயிருக்கிறதே....  என்ன செய்ய?  இவ்வளவு தூரம் டைப் செய்ததை எதற்கு வீண் செய்ய வேண்டும்?  கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.  மிச்சம் இருப்பதை என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியாதா என்ன?
அன்புள்ள கடலூர் எஸ். ஜெயலட்சுமி......  எங்கே இருக்கிறீர்கள்?  நீங்கள் இதைப் படிக்கிறீர்களா?  அப்புறம் என்ன சொல்லுங்களேன்....!  



ஆ.... கிடைத்து விட்டது.  மிச்ச பாகமும் கிடைத்து விட்டது. இதோ...
 


அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வறுபட்டவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.  வதங்கியவுடன் ஆவியில் வெந்த கோதுமைக் கலவையைக் கொட்டி நன்கு கிளறவும்.  ஆறியவுடன், எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.
                 

சனி, 24 ஜனவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) டீ இங்கல்ல, மும்பையில்!
 
 


3) 40 ஆண்டுகளாக ஏழைகளின் பசியைத் தீர்க்கும் பிரியாணி பாபா.
 


4) வல்லவளுக்குக் கேமிராவும் ஆயுதம்! அனு.
 



5) 18 நாடுகளில் இருந்து, என்னைப் போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்கானிக்குகள் வந்திருந்தனர். அதில், அனைத்துத் தேர்வுகளி லும் வென்று, முதல் இடம் பிடித்து, உலக அளவில், 2014ம் ஆண்டின் சிறந்த மெக்கானிக்காகத்தேர்வானேன். மதுரை மீனாட்சி சுந்தரம்.
 


6) இப்படித்தான் இருக்கவேண்டும். முதியோர் உதவித்தொகை வேண்டாம் என்று சொன்ன புச்சம்மாள். (ஆந்திரா)
 
                                                                                 

7) நெகிழ்ச்சியான  செய்தி.  பேருந்து ஓட்டுனரைப் பாராட்டுவதா?  முகம் காட்டாமல் உதவிச் சென்ற காரில் வந்தவரையா? இருவரையும்தான்.
 
              
 
8) இப்போதல்ல, 92 லிருந்தே ஆட்டோ ஓட்டுகிறார் பி ஏ படித்த லட்சுமி.