செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சிநேகிதியே



இந்த வார 'கே.வா.போ.க' பகுதியில் என் பக்கம் மற்றும் நான் நானாக தளங்களின் சொந்தக்காரர் HVL என்று அறியப்படும் திருமதி ஹேமாவின் கதை இடம் பெறுகிறது.

முன்னர் எங்கள் ப்ளாக்கின் ரெகுலர் வாசகி!!  தற்சமயம் அவர் தன் 'என் பக்கம்' தளத்தில் எதுவும் எழுதுவதில்லை.  'நான் நானாக தளத்தில் இப்போது மறுபடி எழுதத் தொடங்கி இருக்கிறார். அதுவும் "அவ்வுலகமும் ஆன்மாக்களும்" என்கிற சுவாரஸ்யமான அமானுஷ்யத் தொடர்.  

வம்சி வெளியிட்ட வலைப்பதிவர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பில் வெளிவந்திருக்கும், இவர் எழுதிய 'வார்த்தைகள்' ஒரு குறிப்பிடத்தக்கக் கதை. அவ்வப்போது ஃபேஸ்புக்கில் கண்ணில் தட்டுப்படுவார்!  சமீபத்தில் கல்கியில் வந்த பாரதி பாஸ்கர் குறிப்பிட்ட கதை ஒன்றைப் பற்றி அவர் சரியாக ஒன்றும் சொல்லவில்லை என்று நான் பகிர்ந்தபோது, நான் கொடுத்திருந்த குறைந்த குறிப்புகளிலிருந்தே தேடி எடுத்துக் கொடுத்தார். அது அமரர் கல்கி எழுதிய கதை.

இந்தக் கதையைப் பற்றி ஹேமா சொல்வது :

======================================================================



திரு ஶ்ரீராம் அவர்களுக்கு,


திருமணமாகி, பத்து வருடங்கள் கழித்து என் பழைய தோழிகளைப் பார்த்து பேச ஆர்வம் ஏற்பட்டது. அந்த விடுமுறையில் இந்தியா சென்ற போது தோழிகளின் அம்மா வீட்டிற்குச் சென்று அவர்களின் அப்போதைய விலாசத்தை வாங்கி, தொலை பேசி எண்ணை வாங்கி அவர்களை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அதில் கிடைத்த அனுபவமே இங்கு கதையானது.

இந்த கதை கல்கி சிறுகதைப் போட்டி 2012ல் பிரசுரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 23.09.2012 தேதியிட்ட கல்கியில் பிரசுரமானது.


மிக்க நன்றி,
- ஹேமா

=======================================================================

இனி அவர் படைப்புக்குச் செல்வோம்.  நண்பர்களின் பின்னூட்ட மழை பொழிந்து முடிந்த பிறகு மனசு குமார் ஒரு சிறப்பான ஏற்புரை கொடுத்தார்.  அதே போல ஹேமாவும் எழுதுவார் என்று நம்புகிறேன்!

==========================================================


சினேகிதியே…
(ஹேமா)



     
      சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின் சீவல் ஷார்ப்னரிலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்தது. சிறுமியாய் இருந்த போது இதை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து, காய வைத்தால் ரப்பர் கிடைக்கும் என்று செய்து பார்த்தது நினைவுக்கு வந்தது. குண்டூசியில் வண்ண மணியைச் செருகி, ரப்பர்த் துண்டை திருகாணியாய் பொருத்தி, ஒரு ஜோடி பத்து காசுக்கு விற்ற பத்மா தான் அதைச் சொன்னாள். அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்ததாய் நினைவு. அந்த கம்மலைக் காசு கொடுத்து வாங்கி, பெருமையாய் போட்டுக் கொண்டிருந்தது நினைவிருந்தது சித்ராவுக்கு. அம்மா கூடஇதென்னடி பைத்தியக்காரி மாதிரிஎன்றாள்
 
     பத்மாவிற்கு இருந்த கற்பனைத்திறனுக்கு இன்று வடிவமைப்புத்துறையில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவள் இது போல ஏகப்பட்ட முயற்சிகளைச் செய்திருக்கிறாள். ஒருமுறை மாறுவேடப்போட்டியில் இருவரும் வளையல் விற்பவர்களாய் வேடம் போட்டனர். மேடையேறி கூட்டத்தைப் பார்த்ததும் இவளுக்கு கால்கள்வெலவெலவென்று நடுங்க, கைகளை மட்டும் அசைத்தாள். பத்மா தைரியமாய் பாடினாலும் இவர்களுக்கு பரிசு எதுவும் கிடைக்கவில்லை. அதுவே இவளுக்கு மேடையேறிய கடைசி அனுபவமாகவும் ஆனது.


     பள்ளியில் அடிக்கடி புத்தகத்தை மறந்தோ, வீட்டுப் பாடம் செய்யாமலோ, மதிப்பெண் குறைவாக எடுத்தோ ஆசிரியாரின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் ஒருத்தியாகவே இருந்திருக்கிறாள், சித்ரா. ஒருமுறை, யு. கே. ஜி என்று நினைவு, விவேகானந்தன் என்ற மாணவன் பாக்சைத் திறந்து உள்ளே இருந்த பிஸ்கட் வேண்டுமா என்று கேட்டான். உள்ளேயிருந்த சாக்லேட் வைத்த மஞ்சள் பிஸ்கட்டிற்கு ஆசைப்பட்டு, தலையசைத்தபடி எடுத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில், டாய்லெட் சென்று திரும்பிய மாதவன் வகுப்பு ஆசிரியையிடம் திருட்டு போன தன் பிஸ்கட்டைப் பற்றி புகார் கொடுத்தபோது தான், அந்த பிஸ்கட் மாதவனுடையது என்று தெரிந்தது. விவேகனந்தன் இவளைக் காட்டிக் கொடுக்க, பிஸ்கட் துணுக்குகள் ஒட்டிய வாயுடன் மாட்டிக் கொண்டாள். காதில் பெரிய வளையம் அணிந்திருந்த அந்த ஆசிரியை இவளின் இரட்டைப் பின்னலில் ஒன்றைப் பிடித்து இழுத்து, அனைவரின் முன்னும் உதாரணமாய் நிற்க வைத்து திருடுவது தவறு என்று உபதேசம் செய்த போது இவளுக்கு அவமானமாய் இருந்தது.


     அப்போதெல்லாம் எவ்வளவு முயன்றும் ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க முடிந்ததே இல்லை. கனத்த மழையில் இவள் பள்ளித்திடல் முழுக்க நீரால் நிரம்பிவிட்டதாகவும், அதில் ஆசிரியையின் குழந்தை மூழ்கி விடுவதாகவும், இவள் நீரில் குதித்து, நீந்தி அதன் குடுமியைப் பிடித்து இழுத்து காப்பாற்றுவதாகவும், ஆசிரியை அவளை கட்டி அணைத்து, அவளுக்கு பட்டுப் பாவாடையெல்லாம்  அணிவித்து, சாக்லெட் வாங்கிக் கொடுப்பதாகவும் கற்பனை செய்துக் கொள்வாள். சந்தோஷமாய் இருக்கும். பத்மா வகுப்பில் முதல் மாணவி இல்லையென்றாலும், இவளைவிட கெட்டிக் காரி என்று நினைப்பதற்கு அவள் ஆசிரியரிடம்  திட்டு வாங்கியதில்லை என்ற நிலையே போதுமானதாய் இருந்தது. பத்மா இவளைத் தோழியாய் வரித்ததற்கான காரணம் அவளுக்கு இன்று வரைப் புரியவில்லை.


     பாப்கட்டிங்கோடு பினோஃபார்ம் போட்ட பத்மா நினைவில் நின்றாள். ஏனோ இவளுக்கு இப்போதே பத்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவளைத் தேடி பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவளுடைய விலாசம் சித்ராவிடம் இல்லை. விலாசத்தை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் இருந்ததாய் அப்போதைய சித்ராவுக்கு தோன்றவில்லை.


    கூகிளில் தேட முயற்சித்தாள். அது பத்மா சுப்ரமணியத்தைப் பற்றி நிறைய காட்டியது. பெண் ஃபேஸ்புக்கில் தேட உதவி செய்தாள். நிறைய பெயர்கள், புகைப்படங்கள்……. இதில் தோழியை  எப்படி சலித்தெடுப்பது!


    இவளுக்கு கணவனை நினைத்து பொறாமையாய் இருந்தது. அவனுக்கு நிறைய நண்பர்கள். அவன் பிறந்ததிலிருந்து அதே வீட்டில் இருப்பதால் பள்ளி காலத்து நண்பர்கள் கூட அவனோடு தொடர்பிலிருந்தார்கள். அவளுக்கோ திருமணத்தோடு அனைத்து தொடர்புகளும் விட்டுப் போயிருந்தன. அம்மா வீடு போகும் போது தோழிகளைப் பார்க்கச் சென்றால், அவர்கள் திருமணமாகி வேறு இடத்திற்கு சென்றிருந்தார்கள். ஆண்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் அதிக சலனமற்று செல்ல, பெண்களுடையது திருமணத்திற்கு பின் காட்டாறு போல பாதை திரும்புவதாய் அவளுக்குத் தோன்றியது.


பெண்ணின் உதவியால் சில தோழிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. முதுகிற்கு பின்னாலிருந்து கணவன் எட்டி பார்ப்பது போன்ற ஒரு பிரம்மை இருந்தால், தன்னுடன் படித்த ஆண்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் அவளுக்கு தயக்கமிருந்தது. ரேகா சந்திரசேகர், ரம்யா வேணுகோபால், ப்ரியா பாலன், புனிதா கேசவன் என்று கணவரின் பெயரோடு கிடைத்த சில முதிர்ந்த தோழிகளைப் பார்க்கும் போது சந்தோஷமாய் இருந்தது. பத்மா மட்டும் கிடைக்கவில்லை. ரம்யா சென்னையிலேயே இருந்தது மகிழ்ச்சியளித்தது. ரம்யாவை அந்த வார இறுதியில் பார்ப்பதாக அவளுடன் பேசி முடிவு செய்து கொண்டாள், சித்ரா. வெள்ளிக் கிழமை இரவு முழுவதும் தூக்கமின்றி புரண்டு, காலை சீக்கிரம் எழுந்து, உணவு சமைத்தாள்.


     பெண்ணுடன் வண்டியில் பயணித்த போது எதிர்பார்ப்போடு ஆவலும் கலந்திருந்தது. ரம்யா இவளோடு ஆறாவது முதல் ப்ளஸ் டூ வரை படித்தவள். பேச்சுக்கு பேச்சு நகைச்சுவையாய் வெட்டிப் பேசுவாள். ஒருமுறை இவள் ரம்யாவின் வீட்டிற்கு போயிருந்த போது, அவளின் அம்மா மிக நன்றாய் கவனித்துக் கொண்டார். போதும் போதும் என்று மறுத்தும் தட்டில் சாதம் பரிமாறியது மட்டும் கஷ்டமாய் இருந்தது. அன்று சாப்பிட்டதில் கிட்டதட்ட மூச்சுமுட்டி போயிற்று.


     ரம்யாவிற்கென்று தனி அறையெல்லாம் இருந்தது. அன்று கார்த்திக்கைப் பற்றியும் கமலஹாசனைப் பற்றியும் நிறைய பேசினார்கள். ரம்யாவின் குரல் ஸ்வர்ணலதாவின் குரலோடு இணைந்து போகக்கூடியதாய் இருந்தது. ‘போவோமா ஊர்கோலம்என்ற பாடலை உருக்கமாய் பாடுவாள். இவள் அவளுக்கு மிக நெருங்கிய தோழியாய் இல்லாவிட்டாலும், நிறைய நாள் கழித்து பார்க்கப் போவது மகிழ்ச்சியாய் இருந்தது. அவள் வீட்டின் முன் இறங்கிய போது நடுவில் முப்பது வருடங்களை நழுவ விட்டிருந்தாள் சித்ரா. மகள் பிறகு வருவதாக சொல்லிவிட்டு சென்றாள்.


     வீடு பெரிதாக இருந்தது. வராண்டாவில் கூடை ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது. சற்றே முதிர்ந்த தோற்றமும் சில நரைமுடிகளையும் தவிர ரம்யாவிடம் பெரிய  மாற்றம் எதுவும் இல்லை. ரம்யா மிகவும் உரிமையோடு கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். பிரம்மாண்ட கூடத்தில் உட்கார்ந்தபடி துபாயில் இருக்கும் கணவனைப் பற்றியும், பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து பிறந்த மகனைப் பற்றியும் சொன்னாள். மகன் கூப்பிட்டதற்கு எட்டிப் பார்த்து ஹலோ சொல்லிச் சென்றான்.


சித்ராவுக்கு ரம்யாவுடன் பேச நிறைய இருந்தது.


நம்மோட படிச்ச கவிதா ஞாபகம் இருக்கா உனக்கு?” என்றாள் சித்ரா.


டி. கவிதா தானே! அவளை ஒரு அஞ்சு வருஷத்திற்கு முன்ன டி. நகர்ல பார்த்தேன். அவ விருதுநகர்ல இருக்காளாம். அவளுக்கு அப்போ ஒரு பையன் இருந்தான். ‘துரு துருன்னு ஒரு இடத்தில நிக்கல!”


கிருஷ்ணா கூட அப்படி தான்! ஒரு நிமிஷம் ஓய மாட்டான். . . குழந்தையா இருந்தப்ப இவன் பின்னாடி ஓடி ஓடியே இளைச்சுட்டேன்! ஒன்றை பிடிச்சா பிடிச்சது தான்! நினைச்சத சாதிச்சிடுவான்! ட்ரம்ஸ், கீ போர்ட் இதுக்கெல்லாம் க்ளாஸ் போட்டிருக்கேன். . . ”


     சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று கூக்குரலிட்டபடி சென்றது. தொலைகாட்சி நாடகத்தில் ஒரு நடிகை எதற்காகவோ மாய்ந்து மாய்ந்து அழுது கொண்டிருந்தாள். கணவன் சாப்பிட்ட பிறகு சாம்பாரை ஃப்ரிட்ஜில் வைப்பானா என்று சித்ராவுக்கு சந்தேகமாய் இருந்தது.


நாமெல்லாம் சங்கீதாவோட கல்யாணத்திற்கு போனோமே ஞாபகம் இருக்கா? அப்போ தான் நாம கடைசியா பார்த்தோம்ல்ல!” என்றாள் சித்ரா.


ஆமாம்! என்ன செய்யறது? கிருஷ்ணாவைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கு!”


காலையில சிக்ஸ் தர்ட்டிக்கு பூஸ்ட் குடிச்சுட்டு  ட்யூஷன் கிளம்பினா, நைட் ஏழரைக்கு தான் வரான். நடுவில ப்ரேக் ஃபாஸ்ட் கொடுத்து ஸ்கூல்ல விட்டுட்டு . . .  லஞ்ச் ரெடி பண்ணி அங்க கொண்டு கொடுத்து, சாயந்திரம் டிபன் போர்ன்விட்டா கொடுத்து மறுபடி மேத்ஸ் ட்யூஷன்ல விட்டு . . . ஒரு நாள் சாப்பிட்ட சாப்பாட்ட இவன் அடுத்த ஒரு வாரத்துக்கு சாப்பிட மாட்டான். அதுக்கேத்தா மாதிரி மெனு வேற ரெடி பண்ணனும்!”


     சித்ராவுக்கு கொட்டாவி வந்தது. மதிய உணவின் போதும் கிருஷ்ண புராணம் தொடர்ந்தது. அதன் பின் அவன் புகைப்படங்களும், வீடியோக்களும். பார்த்து முடித்த போது பெண் வந்தாள்.


வண்டியில் செல்லும் போது


அம்மா! டிட் யூ எஞ்சாய் யுவர் செல்ஃப்?” என்று கேட்டாள்.


ம் . . .” என்றாள் ஹீனமாய்.


எதிலோ ஏமாந்தது போல தோன்றியபடியே இருந்தது இவளுக்கு.


கவலைப்படாதே அம்மா! பத்மா ஆண்டியைக் கூட சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம்!”


சீக்கிரம் போடி! அப்பா வீட்ல தனியா இருப்பார்!”


அவர் என்னிக்கும்மா தனியா இருந்திருக்கார்? இன்னேரத்திற்கு சுந்தரம் அங்கிள் வீட்டிற்கோ, பூபதி அங்கிள் வீட்டிற்கோ போயிருப்பார்!”


சொன்னது போல கணவன் வீட்டில் இல்லை! இவளுக்கு மொத்த ஆண்வர்கத்தின் மீதும் பொறாமை ஏற்பட்டது.


பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த போது


வாம்மா! பத்மா ஆண்டியைத் தேடலாம்என்றாள் பெண்.


பத்மா கிடைத்தாலும் பதினோரு வயதில் தொலைந்த பத்மா கிடைக்க மாட்டாள் என்று தோன்றியது இவளுக்கு.


இல்லடி! நான் ராத்திரிக்கு சமைக்கணும்! நிறைய வேலை இருக்கு! அப்புறமா பார்க்கலாம்!” என்றாள் சித்ரா.

(கல்கி சிறுகதைப் போட்டி 2012ல் பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதை)

71 கருத்துகள்:

  1. "பதினோரு வயதில் தொலைந்த.." இதுதான் யதார்த்தமாக இருக்கிறது. விதிவிலக்கான நட்புகள் நமது அதிர்ஷ்டம் ஆகின்றன. குழந்தைப் பருவ நினைவுகளும் தோழிக்காக ஏங்குவதும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. இவருடைய பள்ளி அனுபவங்கள் என்னோட கணக்கு ஆசிரியரோட எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் போல் உள்ளது. எனக்கும் பள்ளித் தோழிகள் யாரையும் எங்கே இருக்காங்க என்பதே தெரியாது. என் கணவரும் சிதம்பரம், கும்பகோணம், பின்னர் கிராமத்து உயர்நிலைப்பள்ளி என்று மாறி மாறிப் படித்ததால் ஒரிரு சிதம்பரத்து தீக்ஷிதர் நண்பர்களைத் தவிர யாரும் தொடர்பில் இல்லை. :) அலுவலக சிநேகிதர்கள் நிறையவே உண்டு. எனக்கு அதுவும் இல்லை. கிட்டத்தட்ட எந்த அலுவலக சிநேகிதியைக் குறித்துமே தெரியாது! :)

    பதிலளிநீக்கு
  3. முடிவு எதிர்பார்த்த மாதிரியே அமைந்துள்ளது. ஒரு கட்டத்தில் தேடுவதில் அலுப்புத் தான் வந்துவிடுகிறது! :)

    பதிலளிநீக்கு
  4. யதார்த்த நிகழ்வுகளின் நல்ல நடை அருமை.

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அற்புதமான கதை
    பெண்கள் பக்கத்து இழப்புகள்தான்
    எத்தனை எத்தனை...

    பதிலளிநீக்கு
  6. ஆரம்பத்தில் சேரனின் ஆட்டோகிராஃப் நினைவில் ஃபிளாஷ் அடிக்க அதை மறக்க்டித்து வரிகளில் ஊர்ந்தால்--

    ஞாபகங்களை எவ்வள்வு அழகாய் அடுக்கடுக்காய் வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள் என்று மலைப்பாய் இருந்தது. நேர்த்தியான கதை சொல்லல். இப்படி நினைத்து நினைத்துப் பார்த்து மருகுவது, நடப்பை இழக்கிறோமோ
    என்று தோன்றியது. சித்ரா மட்டும் என்னவாம்?.. பதினோரு வயதில் இருந்த மாதிரியா இப்பொழுதும்?..

    அப்படி இப்படி வந்து கடைசியில் அந்த நீரோடை, காட்டாறு வேறு பாட்டைக் கரெட்டாகப் பிடித்து விட்டீர்கள். பிறந்த குடும்பம், புகுந்த குடும்பம் என்று இரண்டாகப் பிரியும் வாழ்க்கை. பிறந்ததை மறக்க முடியாது, புகுந்ததிலும் பதிய வேண்டும் என்பதைத் தாண்டி புகுந்ததில் தான் சாசுவதமாகப் பதிய வேண்டியிருக்கிறது. இதான் என் குடும்பம் என்று இழுத்துப் போட்டுக் கொண்டு அல்லாட வேண்டீயிருக்கிறது. ஆணுக்கு அப்படி இல்லை.. கடைசி வரை பிறந்த ஒற்றைக் குடும்பத்தோடையே ஒட்டி உறவாடல்... அவன், அவன் அப்பா, அம்மா, தங்கை, அக்கா-- என்று!

    இதனால் தான் பெண்கள் தன் குடும்பத்தைத் தனியாகப் பிரிக்க முயலுகிறார்களோ?.. பிரித்ததும் தன் குடும்பமே பெரிசாகி அதிலேயே மூழ்கிப் போதலாகிறது.. ஒருவிதத்தில் பார்க்கப் போனால், பிறந்த--புகுந்த என்கிற ரெட்டை வாழ்க்கையோடு முடிவதில்லை, பெண்களுக்கு.. ஒரு குழந்தை உருவானதும் அவளுக்கு ஒரு மூன்றாவது உலகமும் பரிச்சயமாகிறது. மற்ற இரண்டையும் தூக்கிச் சாப்பிடுகிற உணரவுபூர்வமானது இது.. இது தான் வாழ்க்கையாகவும், படைப்பில் பெண்களே உசத்தியாகப் போவதும் நினைத்து நினைத்து பெருமைப் படுகிறதாய் ஆகிறது. என்னதான் ஆண்களின் வெளிக்காட்டாத குழந்தையோடான அட்டாஸ்மெண்ட், இரண்டாம் பட்சம் தான் என்று ஆகிப்போகிறது.

    சிலர் பக்கத்தில் பார்த்து பார்த்துத் தான் தன்னைத் தாழ்த்தியோ, உயர்தியோ கொள்வார்கள். அந்த நிலை இந்தக் கதையில் வெகு அழகாகப் பதியப்பட்டிருக்கிறது. சொன்னதை வெகு அழகாகச் சொன்ன பாங்கிற்குப் பாராட்டுகள், சகோதரி!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலாவரியாய் பின்னூட்டமிட்ட உங்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. வெகு அழகான மிக இயல்பான கதை. சொல்லிச்சென்ற விதமும் மிக அருமை.

    //பத்மா கிடைத்தாலும் பதினோரு வயதில் தொலைந்த பத்மா கிடைக்க மாட்டாள் என்று தோன்றியது இவளுக்கு.//

    உண்மைதான். சூப்பர் ! :)

    கதாசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள். கல்கியில் வெளிவந்துள்ளதற்கு வாழ்த்துகள். பதிவாக வெளியிட்டு படிக்க உதவிய ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. பத்மாவைச் சந்தித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். ஒருவேளை பதின்ம வயதில் இருந்த பத்மா இப்பவும் அதே மாதிரி கலகலப்பாக சித்ராவின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் இருந்திருக்கலாமோ? என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பத்மாவை Facebookல் கண்டுபிடித்து introduce செய்துகொண்டு, friend request அனுப்பி 6 மாதத்திற்கு மேல் ஆகிறது. இன்று வரை பதில் இல்லை!

      நீக்கு
  9. சிறப்பானதோர் சிறுகதையை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  10. நல்லதோர் கதை பகிர்ந்ததற்கு நன்றி!
    த ம 7

    பதிலளிநீக்கு
  11. ஆச்..ஆச்....சரியம்தான்..பள்ளி தோழிகளை ......

    பதிலளிநீக்கு
  12. ஆச்..ஆச்....சரியம்தான்..பள்ளி தோழிகளை ......

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா
    படைப்பாசிரியருக்கு வாழ்த்துக்கள் படிக்க மீள்பதிவாக தந்தமைக்கு நன்றி ஐயா த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. வாழ்க்கையில் மீண்டும் எப்படியாவது ,சிறிய வயதில் உடன்படித்த நண்பனைச் சந்திப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ,அவன் காலமான செய்தி கிடைக்கும் !இழக்கக்கூடாத ஒன்றை இழந்து விட்டார்போல் மனம் துடிக்கும் !தொலைந்தது கிடைக்கவா போகிறது ?

    பதிலளிநீக்கு
  15. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
    ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை
    ...என்ற கந்தர்வனின் கவிதை நினைவில் வருகிறது...வாழ்த்துக்கள் ஒரு மிகையில்லாத கதைக்கு.

    பதிலளிநீக்கு
  16. மிக அருமை அதிலும் அந்த நீரோடை, காட்டாறு உவமை அற்புதம் . ரசித்துப் படித்தேன் வாழ்த்துகள் ஹேமா & நல்லதொரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஸ்ரீராம். :)

    பதிலளிநீக்கு
  17. அப்போது தொலைத்த தோழமை இப்போது இருப்பதில்லை தான். இருந்தாலும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலைமைகள், நேரமின்மை. நிகழ்காலத்தின் முக்கிய வேலைகள் கடந்த காலத்தை அசைபோட்டு நினைக்க நினைத்தாலும் முடியாது செய்து விடுகிறது. பெண்களின் உண்மையான நட்பு வட்டங்கள் போய் விடுகின்றன.
    ஆகையால் மனதுக்கு முழுமையான நட்பின் அன்பு கிடைக்காத போது டிவி சீரியல்கள், அக்கம் பக்கம் ஏதோ ஒன்றை பேச என போகின்றது வாழ்க்கை....

    நல்ல நிதர்சன கதை...

    பதிலளிநீக்கு
  18. நன்றி ராமலக்ஷ்மி. இந்தக் கதை அவர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டபோது இதற்கு மாற்று முடிவு ஒன்று நான் சொல்லியிருந்த நினைவு!

    பதிலளிநீக்கு
  19. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். என்னுடைய சிறு வயது நண்பர்கள் நினைவு சற்றே கசப்பு கலந்தது. குறிப்பாய் ஒரு நண்பன் வாழ்க்கைப் பாடம் புரிய வைத்தான்.

    பதிலளிநீக்கு
  20. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். தேடுவதில் அலுப்பு = தேடவே தோன்றுவதில்லை! மறந்து விடுகிறோம்!

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஜீவி ஸார். வழக்கம்போல நீங்கள் கதையை இணுக்கு இணுக்காய் ரசித்திருக்கிறீர்கள். உங்கள் அனுபவ வரிகள் எழுதுபவர்களுக்கு ஒரு பாடமாகும். ஆண், பெண் என்றில்லாமல் எல்லோருக்குமே இந்த அனுபவங்கள் போதுதானே?

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கும், படைப்பாளரைப் பாராட்டி, எங்களையும் பாராட்டியதற்கு நன்றிகள் வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு
  23. வரிசையாய்ச் சொன்ன நன்றிகளுக்கு நன்றி ஹேமா (HVL)

    பதிலளிநீக்கு
  24. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி கேஜிஜி. கதை உங்கள் மனதில் பதிந்து விட்டது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  26. நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி பகவான்ஜி.. உணர்ச்சிகரமான நிலை! இது போன்ற சம்பவத்தை மையமாக வைத்து ஜி எம் பி ஸார் மலையாளப் பின்னணியில் ஒரு கதை எழுதி இருந்தார், நினைவிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  28. நல்லதொரு கவிதை நினைவு. நன்றி நண்பர் மீரா செல்வக்குமார்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி தேனம்மை. ஹேமா அவர் அலுவலகத்தில் கூட ஏதோ இரண்டு வரிகள் தருவார்கள், அதை வைத்து கதை புனைய வேண்டும் என்ற போட்டியில் எல்லாம் பங்கு கொண்டிருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார் என்று நினைவு!

    பதிலளிநீக்கு
  30. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. இந்த நிலை ஆண்களுக்கும் நேரும் என்பது என் கட்சி!

    பதிலளிநீக்கு
  31. மீள் வருகைக்கு, மீள் நன்றிகளுக்கு நன்றிகள் ஹேமா (HVL). :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். இந்த வார இறுதியில் என் கருத்தைப் பதிகிறேன்.

      நீக்கு
  32. தொலைந்தவர்கள் வளர்ந்துவிடுகிறார்கள். நானும் பழைய தோழிகளைத் தேடிப்போய்ப்
    பார்த்து அவர்கள் மாறி இருப்பதைப் பார்த்தேன்.
    அமெரிக்கா வந்து அவளுடன் பேசும் பைத்தியம் இருந்தது.
    சென்னை வா. நான் வந்து பார்க்கிறேன் என்றவள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

    மாறாத தோழியும் உண்டு. அவள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை.
    50 வருடங்கள் ஓடி அவர்கள் இன்னும் அப்படியே இருக்க சந்தர்ப்பம் இல்லை.
    நானும் மாறி இருப்பேன். அவர்கள் அதைத்தான் உணர்ந்தார்களோ என்னவோ.

    சாம்பல் நிறப் பட்டுப் பாவாடையும், ரப்பர் கதையும் நாங்களும் அனுபவித்தது தான்.
    ஹேமா அவர்களின் எழுத்து மிக அருமை.
    மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  33. என் கதையை இங்கே பதிவிட்ட திரு ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றி! பொதுவாய் குழு சேர்ந்து ஆரம்பிக்கும் வேலைகள் நிறைய நாட்களுக்கு நீடிக்காது என்பது என் கருத்து. காலப் போக்கில் உறுப்பினர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் வேறு சில Blogகள் இப்படி தொடங்கப்பட்டு பாதியில் செயலிழந்து போவதைக் கவனித்திருக்கிறேன். எங்கள் ப்ளாக், இதில் விதிவிலக்காகி என்னை ஆச்சர்யப் படுத்துகிறது. அதற்காக எங்கள் ப்ளாகிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

    நான் ஈடுபாட்டுடன் ஒரு ப்ளாக் தொடங்கி ஓரிரு வருடங்கள் தொடர்ந்து எழுதி சலித்து, வீட்டுப் பொறுப்புகள் அதிகமான ஒரு கட்டத்தில் அதைப் மறந்து, ஏதோவொரு கணம் மீண்டும் எழுதத் துவங்கி . . . இந்த ஏற்ற இறக்கமான பயணத்தில் என்னுடைய அனைத்து பதிவுகளையும் படித்து தவறாமல் கருத்துரைத்து வந்திருக்கிறார் திரு ஶ்ரீ ராம். ( நான் இந்தப் பக்கம் வருவதே இல்லை என்ற பொழுதில் கூட அவர் பின்னூட்டமிடத் தவறியதில்லை.) அவருக்கு மீண்டும் என் நன்றிகள்!

    திரு ஶ்ரீராம் என்னிடம் கதை கேட்ட போது அதைப் பற்றி நான் பெரிதாய் எண்ணவில்லை. சரி கேட்டுவிட்டார், கொடுத்து விடுவோம்! என்ற மனநிலையில் தான் அனுப்பினேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கதையைப் பற்றி அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் கூட எனக்குள் இதுவரை இருந்ததில்லை.

    ஆனால் உங்கள் ஒவ்வொருவருடைய பின்னூட்டமும் எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது! உங்களால் இக்கதையினுள் நுழைந்து அதோடு பயணிக்க முடிந்திருக்கிறது என்பதே எனக்கு ஊக்கமளிக்கிறது. விரிவாக கருத்துரைத்து பின்னூட்டமிட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி! இனி இயன்ற போதெல்லாம் இத்தளத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன் -ஹேமா (ஜீவி சாரின் பெயர் நன்றி சொல்லும் போது விட்டுப் போயிருக்கிறது. அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி!,வேறு பெயராவது விட்டுப்போயிருந்தால் அவர்களுக்கும் என் நன்றி!)

    பதிலளிநீக்கு
  34. பதிந்த அன்றே வாசித்துவிட்டேன்...
    கருத்து இடத்தான் நேரமில்லை... :)
    நல்ல கதை...
    கதையாசிரியை சகோதரி ஹேமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. பதினொரு வயதில்.. கடைசி முத்திரை வரிக்காக இழுத்துப் பிடித்த கதை. பிடித்த கதை.

    பதிலளிநீக்கு
  36. அருமையான கதை. நடை உட்பட. யதார்த்தம்! வாழ்த்துகள் எழுத்தாளருக்கு! கதையை எழுத்தாளரை இங்கு அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!