வியாழன், 21 ஏப்ரல், 2016

வைகையில் நான் பார்த்த 3 கேரக்டர்கள் தொடர்ச்சி - 4


மூன்றாவது நபர் ஒரு இளைஞர்.   28 வயசிருக்குமா...?

செங்கல்பட்டில் ஏறினார்.  ஏறி அமர்ந்த உடனேயே பிரியாணிப் பொட்டலம் ஒன்றைத் திறந்து பதம் பார்த்தவர், அப்புறம் ரயிலில் வந்த எதையும்....... விடவில்லை என்று சொல்லப் போகிறேன் என்றுதானே நினைத்துப் படித்தீர்கள்?   ஹா.... ஹா.... ஹா.... இல்லை, ஒன்றையும் அவர் லட்சியம் செய்யவில்லை.  தக்காளி சூப் மட்டும் அவரைக் கவர்ந்தது.  நடுவில் அதை மட்டும் சுவைத்தார் - அதுவும் நான் வாங்கியதைப் பார்த்துத்தான்!




                                                      Image result for biryani parcel images
 

இடையில் வெய்யில் தாங்க முடியாமல் அவஸ்தைப் பட்டு நாங்கள் ஜன்னலை மூட முயன்றபோது, அது மூட வராமல் மேலே மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டதைப் பார்த்து தானே எழுந்து எங்களுக்கு உதவி செய்தார்.  எங்களைப் பார்க்காமலேயே, எங்கள் நன்றியை எதிர்பார்க்காமலேயே தன் வேலையைத் தொடர்ந்தார்.  ஆமாம், கேரக்டர் என்று சொல்லுமளவு அவர் என்ன செய்தார் என்பதுதானே உங்கள் மனதின் அடுத்த கேள்வி? 


சொல்கிறேன்.

சாப்பிட்டு முடித்து, தனது அலைபேசியை எடுத்துக் கொண்டார்.  காதில் (மட்டும்) 'கேட்பானை'ச் சொருகிக் கொண்டார்.  பையை கீழே வைத்தார்.  அலைபேசியில் திரைப்படம் சேமித்து வைத்திருப்பார் போலும். ஒரு படமா, வெவ்வேறு, இரண்டு அல்லது மூன்று படங்களா தெரியாது.  அதை செலெக்ட் செய்து போட்டார்.  கண்களுக்கு கஷ்டம் வராத தூரத்தில் செல்லை வைத்துக் கொண்டார்.  அதிலேயே ஆழ்ந்து விட்டார்.  மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யவில்லை. 


இத்தனைக்கும் அவரருகில்தான் ஒரு நபர் விட்டு 'அந்த' இளம்பெண் அமர்ந்து பே...........சிக் கொண்டிருந்தார்!  ஊ...ஹூம்!  செல்லில் படம் பார்த்துக் கொண்டே நவரசங்களையும் முகத்தில் காட்டினார்.


அவர் என்னென்ன காட்சிகள் கண்டு கொண்டிருந்திருப்பார் என்று யூகிக்க முடிந்த அளவில் இருந்தன அவர் முக பாவங்கள்.


Image result for watching film in cell phone images

 
திடீரென்று அவர் முகம் சுருங்கும்.  கண்கள் கலங்கும். உதடுகள் துடிக்கும்.  என்ன ஓடுகிறது திரையில் என்று புரிந்து கொள்வேன்.  திடீரென கண்கள் மலரும்.  இதழ்கள் ஒரு ஆனந்தச் சிரிப்பை உதிர்க்கும். முகத்தில் சந்தோஷம் பொங்கும்.  காட்சி மாறி விட்டது என்று தெரிந்து கொள்வேன். 


திடீரென கைகள் இறுகும்.  இறுக்கமாக, இருக்கையில் மாறி மாறி அமர்வார்.  அவர் டென்ஷனைப் பார்த்து எனக்கே கவலை வந்து விடும். யாருக்கு என்ன அபாயமோ என்று என் மனமும் பதறும். அவ்வப்போது இடைவெளி விட்டு அவரையே கவனித்துக் கொண்டிருப்பேன்.  அவர் முகத்தில் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்ததும்தான் எனக்கும் நிம்மதியாகும். 


அப்பாடி!  நாயகிக்கோ, அல்லது நாயகனுக்கோ வந்த ஆபத்து நீங்கி விட்டது!  நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறார் என்பது கன்னம் குழி விழும்
அவர் வாய் திறந்த சிரிப்பில் தெரியும்.  
 

Image result for cell phone power bank images

 
இரண்டு 'பவர் பேங்க்' வைத்திருந்தார்.  அதில் அலைபேசியைச் சொருகி பேட்டரி தீராமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.  மதுரை ஸ்டேஷன் வந்தும் அவர் எழவில்லையே என்று எனக்குக் கவலையாக இருந்தது.  'மதுரை வந்து விட்டது' என்று சொல்லலாமா என்று கூடத் தோன்றியது.  ஆனால் ரயில் நின்ற இரண்டாவது கணத்தில், நொடியில் எழுந்து pack செய்து கொண்டு இறங்கிக் காணாமல் போனார்.


மதுரையில் திருமதி கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தது ஒரு சந்தோஷம்.  எங்கள் வீடு அமைந்திருக்கும் இடத்துக்கு அருகிலேயே அவர்கள் வீடும் அமைந்திருந்தது சௌகர்யம். 


அரசு ஸார் ஒரு பல்துறை வித்தகர்.  ஓவியம் வரைவார். ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றுவார்.  மேடம் சளைத்தவரில்லை என்பது அவரது வலைத்தளப் பதிவுகளிலிருந்து நமக்குத் தெரியும்.  முன்பு அவர் வலைத்தளத்தில் அவர் மகன் தன் கையால் தயாரித்திருந்த சாக்பீஸால் செய்யப்பட்ட கோவிலைக் காட்டினார்.  பிரமிப்பாக இருந்தது.  நுணுக்கமான வேலை. 


ஏகப்பட்ட புத்தகங்கள் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  எடுத்து அடுக்க நேரமின்றி அலமாரியிலேயே வைத்திருந்ததைக் காட்டினார்கள். 


எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்தது இனிய ஆச்சர்யம்.  பழைய காமிக்ஸ் புத்தகங்கள் சில 'படித்து விட்டுக் கொடுங்கள்' என்று கொடுத்திருக்கிறார்.  வீடு வந்து முயற்சித்ததில் சிறிய புத்தகத்தில் சிறிய எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருந்தது.  இந்த அளவுப் புத்தகங்களைச் சிரமப் படாமல் சிறிய வயதில் படித்திருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது.  மதுரையில் அந்தப் புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.  சீக்கிரம் திருப்பித் தருகிறேன் கோமதி அரசு மேடம்!

நண்பர் பகவான்ஜியுடன் அலைபேசினேன்.   முறையாவது நேரில் சந்திக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.  அவர் பணி நேரம் ஒத்து வரவில்லை.

31 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம் மதுரைப் பயணம் எப்போவோ தெரியலை. அருமையாக ஆழ்ந்து கவனித்திருக்கிறீர்கள். கடைசியில் அந்தப் பெண் எங்கே இறங்கினார்னு சொல்லவே இல்லையே! அதான் நீங்க பாஸ் பக்கத்தில் இருந்ததால் கவனிக்காமல் விட்ட பெண்! :P:P :P

    பதிலளிநீக்கு
  2. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. நன்றி! அந்தப் பெண் கூட்டத்தில் இறங்கிக் காணாமல் போனாள் என்று சென்ற பதிவின் முடிவிலேயே சொல்லி இருக்கேனே...

    பதிலளிநீக்கு
  3. கேரக்டர்களை நன்கு கவனித்திருக்கிறீர்கள்....
    அருமையான பயணம் ...

    பதிலளிநீக்கு
  4. அனுபவப்பகிர்வும், மொழி நடையும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. பெண் பாவம் பொல்லாதது.....அருகில் பெண் உட்கார்ந்து இருந்தும் அதை கவனிக்காமல் அந்த ஆள் செல்போனில் சினிமா பார்பதை கவனித்து அவர் முகபாவனைகளை கவனித்து வந்து இருக்கிறீர்கள் அது நல்லதுக்கு இல்லை அந்த பெண் சாபம் விட்டி சென்று இருப்பாள்

    பதிலளிநீக்கு
  6. படித்தேன்! நான் பயணம் செய்யும் போது யாரையும் கவனிப்பதில்லை!பொதுவாக அறிமுகம் இல்லாதவரோடு பேச முற்படுவதில்லை!

    பதிலளிநீக்கு
  7. 'மூன்று கேரக்டர்களைப் பார்த்த ஒரு கேரக்டர்' அல்லது 'ஒரு கேரக்டரின் பார்வையில் மூன்று கேரக்டர்கள்' என்று இந்த மாதிர்யும் தலைப்புகள் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

    மதுரையில் திருமதி கோமதி அரசு மேடம் என்று வாசிக்கத் தொடங்கிய பொழுது தான் இதுவரை துண்டு துண்டாக விவரித்த நேரஷன் ஒரு முழு உருவுக்கு வந்த மாதிரி உணர்வு. எனக்குத் தான் இப்படியே தவிர மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.

    அடுத்த முயற்சி இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. பயணங்களில் மனிதர்களைப் படிப்பது(கவனிப்பது) ஒரு சுவாரஸ்யம். சென்ற பதிவை வாசித்து விட்டுத் தொடருகிறேன்.

    கோமதிம்மா அவர்களுடனான இனிய சந்திப்பு அறிந்து மகிழ்ச்சி. அவரது பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  9. //அவர் என்னென்ன காட்சிகள் கண்டு கொண்டிருந்திருப்பார் என்று யூகிக்க முடிந்த அளவில் இருந்தன அவர் முக பாவங்கள்.//

    மற்ற எதையுமே லட்சியம் செய்யாமல், அவர் அதனுடன் அப்படியே ஒன்றிப்போய் இருக்க, தாங்கள் அவரை ஸ்டெடி செய்து யூகித்தும் விவரித்துச் சொல்லியுள்ளவை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. //மதுரையில் திருமதி கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தது ஒரு சந்தோஷம். //

    ஆஹா, இதனைக்கேட்க எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.

    //எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்தது இனிய ஆச்சர்யம்.//

    ’உன்னை என்ன வெற்றிலை-பாக்கு வைத்து அழைக்கணுமா?’ என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

    வெற்றிலை-பாக்கு வைத்து, புத்தகத்தைப் படிக்கச்சொல்லி வற்புருத்தி அன்புடன் அவர்கள் கொடுத்துள்ளது புதுமையாக உள்ளது. வெற்றிலை-பாக்கை என்ன செய்தீர்கள்? புத்தகத்தைப் பிரித்துப் படித்தீர்களா? என்று அறிய ஒரு சின்ன ஆவல்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  11. //எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று//

    இதில் கடைசியில் ’ஒன்று’க்கு பதிலாக ’இரண்டு’ என்றல்லவா வார்த்தை வந்திருக்க வேண்டும் ?????

    1+1=2 அல்லவா :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  12. சென்னை >>>>> மதுரை பயணத்தொடர் அருமை.

    மதுரை >>>>> சென்னை இனிமேல் தொடருமா ? :)

    பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  13. மேலே என் பின்னூட்டமொன்றில் சிறு திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
    =================================================================================

    //யூகித்தும் விவரித்துச் சொல்லியுள்ளவை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. //

    யூகித்ததும், அதனை விவரித்துச் சொல்லியுள்ளதும், எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    பதிலளிநீக்கு
  14. அவரது முகபாவத்தைக் கவனித்தே நீங்களும் செலவு இல்லாமல் சினிமா பார்த்த அனுபவம் பெற்றுக் கொண்டீர்கள் போலயே.....

    பதிலளிநீக்கு
  15. மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் இருப்பவர்..ந3ல்ல மனுசனா இருப்பார் ........

    பதிலளிநீக்கு
  16. மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் இருப்பவர்..ந3ல்ல மனுசனா இருப்பார் ........

    பதிலளிநீக்கு
  17. படம் பார்ப்பதில் அதிகம் லயிப்பவர் அருகே அமர்வதும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் சண்டைக் காட்சி வந்தால் அருகே இருப்பவர் பாடு திண்டாட்டமாகும்

    பதிலளிநீக்கு
  18. சுவாரஸ்யமாக பதிவினை முடித்து இருக்கிறீர்கள். நாடகமே இந்த உலகம்

    பதிலளிநீக்கு
  19. // முறையாவது நேரில் சந்திக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.// அடுத்தமுறையாவது என்றிருக்க வேண்டுமோ? (தப்பு கண்டுபிடிச்சே பேர் வாங்கறவங்க...ன்னு நீங்க மனதுக்குள் சொல்லிக் கொள்ளவது கேட்கிறது!
    கோமதியை சந்தித்தது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம். நான் எப்போது மதுரைக்குப் போகப்போகிறேன் என்று தெரியவில்லை.

    ஒரு சின்ன வேண்டுகோள்: முந்தின பகுதியின் இணைப்பை முதலில் அல்லது கடைசியில் கொடுங்கள். விட்டுப்போயிருந்தால் படிக்க சுலபமாக இருக்கும்.

    பலவிதமான மனிதர்களை ரயில் பயணங்களில் பார்க்கலாம். நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் கண்ணில் படும். உங்கள் பதிவைப்படித்தவுடன் பாதியில் நிற்கும் எனது ரயில் பயணங்களை தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  20. என்னம்மா கவனிச்சுருக்கீங்க ஸ்ரீராம். அது சரி அப்போ நீங்க அந்த இளைஞருடன் சேர்ந்து படம் மனத்திரையில் பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்..

    கோமதி அரசு சகோவைச் சந்தித்தது..நல்ல விஷயம்...
    (கீதா: ஆ! தேவன் கதைகள் புத்தகமா....எனக்கு ரொம்பப் பிடித்த எழுத்தாளர். நகைச்சுவைக்கு நான் ஃப்ளாட்!! ..அவரது "எங்கள் குடும்பம் பெரிது" கதையின் ஒரு பகுதியை நாடகமாகப் போட்டு இயக்கினேன்..வசனம் எழுதி..அதில் கொஞ்சம் அசமஞ்சமாக/அரைக்கிறுக்கு போல வரும் கதாபாத்திரத்தை நான் நடித்து ..ஹிஹி!! )

    அது சரி முதல் படத்துல "திங்க" ஏதோ இருக்கே அதுதான் நீங்கள் சாப்பிடக் கொண்டு சென்றதோ??!!

    பதிலளிநீக்கு
  21. அருமையான கவனிப்பு
    நேர்த்தியான விவரிப்பு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  22. ரயில் பயணத்தில் நல்ல சகபயணிகளை நன்கு கவனித்து இருக்கிறீர்கள்.
    என்னைப் பற்றியும் சாரைப்பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. நல்ல அனுபவமாக அமைந்தது. கண்ணு காது திறந்து வைத்தால் சுவாரஸ்யமாக அமைந்த
    படயணம். அவர் படம் பார்த்ததும் ,நீங்கள் பதைத்ததும் படு சுவாரஸ்யம்.
    கோமதியை இன்னும் நேரே பார்க்கவில்லை.
    அது ஒரு வருத்தம் இருக்கிறது.

    இந்தப் பாசப் பிணைப்பு எப்பொழுதும் நீடிக்கட்டும். ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  24. இன்றைய இளைஞர்கள் இப்படித்தான் :) யாரையும் பார்ப்பதே இல்லை. தானுண்டு தன் செல் உண்டு அதே உலகம் :)

    பதிலளிநீக்கு
  25. அந்தப் பெண்ணைவிட இந்த இளைஞன் அதிகம் உங்களைக் கவர்ந்து விட்டார்.
    ஒரு அழகிய கதையைப் படிப்பது போல் ரசிச்சி வாசிக்க வைத்தது....
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  26. சுவாரசியமான கேரக்டர் தான்.
    கோமதி அரசு மாயவரத்துல இருக்காருன்னு நினைச்சிட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  27. :) the guy who was sitting opposite to us was watching films. one liner.. adhukku ivlo build up.. ivlo periya post! :D :D :D

    Observing other people is always fun.. and the way you have narrated his expressions on watching the movies is so cool!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!