திங்கள், 2 மே, 2016

'திங்க'க் கிழமை 160502 :: இட்லி அடை.

இட்லி அடை உங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வேண்டும் என்றால், சனிக்கிழமை மாலை ஐந்து மணி சுமாருக்கு, தயாரிப்பு ஆரம்பிக்கவேண்டும். 
      
தேவையான பொருட்கள்: 
புழுங்கல் அரிசி : மூன்று கப். 
உளுந்து : ஒரு கப். 
மோர் : இரண்டு கப். 
இஞ்சி : ஒரு துண்டு. 
மிளகாய் வற்றல் : நான்கு அல்லது ஐந்து. 
நல்லெண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி. 
தேங்காய்த் துருவல் : ஒரு கப். 
கொத்துமல்லித் தழை : ஒரு கைப்பிடி அளவு. 
உப்பு : தேவையான அளவு. 
(சமையல் சோடா உப்பு : ஒரு டீஸ்பூன்) (சிலருக்கு சமையல் சோடா பிடிக்காது அல்லது ஒவ்வாமை இருக்கும் - அவர்கள் இதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது) 
   
முதலில், அரிசி உளுந்தை, தனித்தனியே , சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கவும். சுமார் இரண்டு மணி நேரம் ஊறவேண்டும். 

பிறகு அவற்றைக் கழுவிக் களைந்து, மிக்சியில் (பெரிய ஜாடி) ஒன்றாகப் போட்டு, சிறிது மட்டும் தண்ணீர் விட்டு, வெண்ணெய் போல் அரைக்கவேண்டும். (வெட் கிரைண்டரும் பயன்படுத்தலாம்.)  
    
அரைத்த மாவில், இஞ்சியை பொடியாக நறுக்கிப் போட்டு, மிளகாய் வற்றல்களைக் கிள்ளிப் போட்டு, மீண்டும் எல்லாவற்றையும் வெண்ணை போல் அரைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, அந்த மாவில், மோர், உப்பு, (சமையல் சோடா) போட்டு, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து, நன்றாகப் பிசைய வேண்டும். 
    
இந்தக் கலவையை, இரவு முழுவதும் தொந்தரவு செய்யாமல் மூடி வைத்துவிடவேண்டும். 

மறுநாள் காலை, இட்லித் தட்டுகளில் சிறிது நல்லெண்ணெய் தடவி, மாவை இட்லியாக தட்டுகளில் ஊற்றி, இட்லிகளின் மீது, கொஞ்சம் தேங்காய்த் துருவலைத் தூவவும். கொத்துமல்லித் தழையை, பொடியாகக் கிள்ளி, ஒவ்வொரு இட்லியின் மீதும் தூவவும். 

பிறகு, இட்லிகளை ஆவியில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், இறக்கி, இட்லிகளை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போடவும். 

இட்லி அடை தயார். 
   
சூடாகச் சாப்பிட, சுவையாக இருக்கும். 

இதற்குத் தொட்டுச் சாப்பிட, வெண்ணெய் நன்றாக இருக்கும். இல்லையேல், வெங்காயச் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னி தொட்டுச் சாப்பிடலாம். 
          

17 கருத்துகள்:

  1. நான் சாதாரண அடைமாவையே (மீந்து போனது )இட்லித்தட்டில் ஊற்றி இட்லி பண்ணியிருக்கேனே. அது ஆறினதும் உதிர்த்து எடுத்தால் உசிலிக்கு ஆச்சு😁

    பதிலளிநீக்கு
  2. இட்லி அடையா? இதில் அடை சமாச்சாரம் ஒண்ணும் இல்லையே.. காஞ்சீபுரம் இட்லியான்னு பார்த்தால் அது மாதிரியும் இல்லை. இஞ்சியும் வத்தல் மிளகாயும் கூடச் சேர்த்துள்ளீர்கள். சரி.. பண்ணித்தான் பார்ப்போமே..

    டீச்சர் சொன்ன ஆலோசனை ரொம்ப உபயோகம் எனக்கு. சமயத்துல மீந்துபோன அடைமாவை என்ன பண்ணறதுன்னு யோசிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  3. மீந்து போன அடைமாவைக் குணுக்காகப் போடலாம். இட்லியாக வார்த்து உதிர்க்கலாம். வெங்காயம் போட்டு உப்புமாக் கிளறலாம். எத்தனையோ இருக்கே! இட்லி அடை இங்கே போட்டது தானா முகநூலில் வரகூரார் பகிர்ந்திருக்கார்? இது கொஞ்சம் புது மாதிரியா இருக்கு. பெரிய பெரிய பார்ட்டிகளில் முதலில் சாப்பிடக் கொண்டு வரும் ஸ்டார்டர்ஸில் மாவை இம்மாதிரி அரைத்துக் கொண்டு அரைக்கரண்டி மாவை முதலில் ஊற்றிப் பின் உப்பு, காரம், மசாலா சேர்த்த காய்களை உள்ளே வைச்சு மீண்டும் மேலே இன்னொரு அரைக்கரண்டி மாவை விட்டு இட்லி சான்ட்விச் என்று பண்ணிப் பார்த்திருக்கேன். அதை வெந்த பின்னர் துண்டங்களாக்கி நல்லெண்ணெயும் மிளகாய்ப் பொடியும் சேர்ந்த கலவையில் பிரட்டி எடுத்து ஒரு குச்சியில் (லாலி பாப் மாதிரி) குத்தித் தருவார்கள். அது ஒரு சுவை! :) இது மாதிரியும் பண்ணிப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. என்னது அடை இட்லியா? நல்லா இருக்குமா? செய்து பார்க்கிறேன். இது போல் அடைசெய்வேன். நல்லா இல்லை என்றால் பொருட்களுக்கான பணத்தைக்கொடுத்துடனும். ஹாஹா

    பதிலளிநீக்கு
  5. செய்து கொடுத்தால் சாப்பிடுவேன்

    பதிலளிநீக்கு
  6. எங்க வீட்ல சமீபத்தில் கருப்பு உளுந்து போட்டு இதே ரேஷியோவில் தோசை சுட்டேன் மெத் மேத்னு வந்ததே ..இஞ்சிக்கு பதில் சுக்கு துருவிபோட்டேன் அரைக்கும்போதே ..அந்த மாவை இட்லி வார்த்தா இப்படிதான் வரும்னு நினைக்கிறேன் ..செஞ்சி பார்த்துட்டா போச்சு ..
    முக்கியமான விஷயத்தை சொல்லணும் ..இந்த தோசைக்கு உங்க ரெசிப்பி தனியா பொடி /தேங்காய் பொடி ரொம்ப நல்லா இருக்காம் வீட்ல சொன்னாங்க ..

    பதிலளிநீக்கு
  7. நான்நினைத்தேன். கல்லுமாதிரி இட்லி வந்து விட்டால் அதை அடை மாதிரி ஏதாவது செய்ய முறை கொடுப்பீர்கள் என்று பெயரைப் படித்ததும் தோன்றியது.
    இது தேங்காய் முதலானது போட்டு முதல் நாளே அரைத்தது கொஞ்சம் காரமான ஆப்ப ருசியாக வருமோ என்னவோ கற்பனை எதற்கு. பண்ணி விட்டால்ப் போகிறது. இதுதான் ஸரியான மார்கம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  8. ஹலோ கீதா சாம்பசிவம் நீங்க முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு நெல்லை தமிழனுக்கு மீந்து போன அடைமாவைக் குணுக்காகப் போடலாம் என்று சொல்லீட்டீங்க. அதைதான் நான் சொல்லுவதாக இருந்தேன் இப்ப என்ன சொல்லுவது என்பது தெரியாமல் இப்படி கருத்து போட்டுட்டேன் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  9. ஆஹா ...
    படிக்கும்போதே
    ருசியின் குணம்
    நாவில் தெரிகிறதே...

    பதிலளிநீக்கு
  10. புதுசா இருக்கு. கீதா சொல்வது போலக் கல்யாணங்களில் பார்த்திருக்கிறேன். உளுந்து செய்யும் வாயுத் தொல்லைக்கு இஞ்சி சேர்ப்பது நல்லதுதான்.
    ஏஞ்சல் சொல்லி இருப்பது போல சுக்கும் நல்லதே. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  11. புதியதாகத் தோன்றுகிறது. செய்து பார்க்க எண்ணம் உண்டு. தில்லி திரும்பியதும் செய்து பார்க்கிறேன்! :)

    பதிலளிநீக்கு
  12. கீதா மேடம்... நான் அடை மாவு (பொடி) சில பல பிராண்ட் வாங்கிவந்தேன். அதில் அடை வார்த்தால் நன்றாக இல்லை. அந்த மாவை என்ன என்ன பண்ணி உபயோகப்படுத்தலாம்?

    இந்த மாதிரி பிளாக்கர்கள் (சமையல் பற்றி எழுதுபவர்கள்), மாதம் ஒரு நாள், கேள்வி பதில் எழுதலாம். உபயோகமாக இருக்கும்.

    இந்த ரிசைப்பிக்கும் காஞ்சீவரம் இட்லிக்கும் என்ன வித்யாசம்?

    மதுரைத் தமிழன்-- உங்களுக்கு எதை என்ன பண்ணலாம் என்று நன்றாகத் தெரிந்திருந்தால், பூரிக்கட்டைக்கு வேலையே இல்லையே ('நீங்களே சமையல் டிபார்ட்மென்டையும் பார்த்துக்கொள்வதால்).

    பதிலளிநீக்கு
  13. இட்லி அடை செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. மிக அருமையாக சொன்னிர்கள்..நான் படித்ததத்தில் பிடித்தது ..
    சளி... காரணங்களும் விடுபட வழிகளும்!
    நோயில்லாத சுகமான வாழ்வை விரும்புபவர்களுக்கு manam.online/news/2016-MAY-06/Solutions-for-cold

    பதிலளிநீக்கு
  15. ஹஹஹ நெல்லைத்தமிழன் உங்களுக்குத் தெரியாதா மதுரைத் தமிழன் தான் சமையல் டிப்பார்மென்டும்....அதான் அவர் மேல பூரிக்கட்டை அடிக்கடிப் பறக்குது தெரியுமா.....கூடவே ஒரு குறிப்பு மதுரைத் தமிழன் செய்யும் சாம்பாரினால் அமெரிக்காவே மணக்குதாமே....(நான் நல்லா சாம்பார் செய்வேனு அவரே எங்கேயோ சொல்லியிருந்த நினைவு அதான்.... ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஸ்ரீராம் இது புது ரெசிப்பியாக இருக்கே...காஞ்சிபுரத்திற்கும், அடைக்கும் இடைப்பட்ட ஒன்றாக....செய்து பார்த்துடணும்....பகிர்விற்கு மிக்க நன்றி...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!