புதன், 15 ஜூன், 2016

நான் ஏன் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவில்லை.





முன்குறிப்பு  :  "தியேட்டர் நினைவுகள்" தொடர் அடுத்த வாரம் வெளியாகும்!



Image result for புத்தகக் கண்காட்சி

     ஜனவரியின் குளிர்ச்சியில் வைக்காமல் ஜூனின் வெப்பத்தில் வைத்ததாலா?  அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், சென்னை வெள்ளம் புரட்டிப் போட்டது!  அப்போதே வைத்திருந்தால் ,  இப்போது வரும் கூட்டம் கூட வந்திருக்காது என்று தோன்றுகிறது!   


பொதுவாக, ஜனவரியில் என்னும்போது வருடத்தின் ஆரம்ப மாத உற்சாகம் எல்லோரிடமும் இருக்கும்.  புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்... இந்த வருடமாவது இதை வாங்க வேண்டும், இதைப் படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.  அந்த சமயத்தில் புத்தகத் திருவிழா வைத்தால் அந்த மயக்கத்திலேயே சில புத்தகங்கள் வாங்கி விடலாம்.  இன்றைய தினத்தின் வெப்பம் ஆயாசம் தருவதாக இருக்கிறது.  அதுமட்டும்தான் காரணமா?


     இந்த முறை என் இருப்பிடத்திலிருந்து தூரம் அதிகம்.  எளிதாக அப்ரோச் செய்யும் தூரம் இல்லை.  அதுவும் ஒரு காரணம்.


     இந்த வருடம் 'புத்தகம் வாங்கா' விரதம் இருக்கத் தீர்மானம்.  புத்தகம் வாங்கா விட்டாலும் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கண்காட்சியில் சுற்றி வரலாம் என்பது,  சிகரெட்டை விட்டவன் இன்று ஒரு நாள் மட்டும் ஒரே ஒரு தம் இழுத்துப் பார்க்கலாம் என்றோ, சும்மா கண்ணால் மட்டும் பார்ப்போம் என்றோ நினைப்பதற்குச் சமம்.  


அரித்தவன் கை சொரியாமல் இருக்குமா?  இது ஒரு காரணம்.  அங்கு சென்றால் நண்பர்களைப் பார்க்கலாம்தான்.  அந்தக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு போகவேண்டுமா என்று செல்லவில்லை.

Image result for புத்தகக் கண்காட்சி



     இதுவரை வாங்கியுள்ள புத்தகங்களில் ஒரு அளவாவது படிக்காமல் புதிய புத்தகங்கள் வாங்குவதில்லை என்கிற தீர்மானம்!  எங்கே போய்விடப் போகிறோம், வாங்கி வைத்து விடுவோம்...    ப்புறம் படிக்கலாம் என்கிற மன நிலையிலிருந்து வெளி வந்திருப்பதாகவே நினைக்கிறேன்.  பிடிக்கும் பிடிக்கும் என்று பிரியாணியை ஐந்தாறு ப்ளேட் வாங்கிச் சாப்பிட முடியுமா சொல்லுங்கள்.. வைத்திருந்தாலும்தான் அப்புறம் சாப்பிடத் தோன்றுமா?   கொஞ்சமாக இருந்தால் சாப்பிடத் தோன்றும் ஆர்வம் மொத்தமாகப் பார்த்தால் வடிந்து விடும்தானே? 
 

       நண்பர் ஒருவர் வீட்டில் சமீபத்தில் ஒரு 'குழுக் கூடுதல் விழா'வில் சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறும்போது ஒரு பெரியவர் சொன்னார்..  "சாம்பாரை சின்ன பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வந்து பரிமாறுங்கள்...  இவ்வளவு பெரிய பாத்திரத்தில் பார்த்தால் பிரமிப்பு வருகிறது.  சாப்பிடத் தோன்றவில்லை"   அது போலத்தானே புத்தகங்களும்?  


     எப்படி?  லாஜிக்கிலேயே அடிக்கிறேனா?



     ஜீவி ஸார் தனது பதிவில் எங்கள் ப்ளாக் புத்தகக் கண்காட்சிப் பதிவைப் படிக்கக் காத்திருப்பதாய்ச் சொன்னார்.  அவருக்கு இந்தப் பதிவு (இதை அவர் படித்தால்) ஏமாற்றம் அளிக்கலாம்.


   தேனம்மை அலைபேசி அவர் புத்தகத்தின் வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார்.  கண்காட்சிக்குச் செல்வீர்களா, வெளியீட்டு விழாவுக்கு வருவீர்களா என்று கேட்டார்.  

     விகடனில் எழுதி இருந்தார்கள்...  புத்தக ஸ்டால்களை விட, தீனிக் கடைகளில்தான் கூட்டம் இருந்தது என்று... அதற்கு ஃபேஸ்புக்கில் என் பதிவு..


     இந்தமுறை நிறைய ஸ்டால்களில் 10% க்கும் அதிகமாக தள்ளுபடி தருகிறார்கள் என்று தமிழ் இந்துவில் போட்டிருந்தார்கள்.  ஏற்கெனவே சாஹித்ய அகாடமி ஸ்டால்களில் நடப்பதுதான் அது.  சில மத சம்பந்தப்பட்ட ஸ்டால்களிலும்.  மேலும் சென்னை வெள்ளத்தில் சிக்கிச் சீரழிந்ததில் நஷ்டப் பட்டுப் போன பதிப்பாளர்கள், அதில் ஓரளவு தேறக்கூடிய புத்தகங்களைத் தள்ளுபடியில் தருகிறார்கள் என்றும் சொன்னார்கள்.  




     அப்பா காலமாவதற்கு முன்னரே, சென்ற வருடத்தின் மத்தியில் மதுரையிலிருந்த அப்பாவின் மற்றும் எண்களின் மொத்த கலெக்ஷன் பைண்டிங் புத்தகங்களும் சென்னைக்கு என் வீட்டுக்கு வந்து விட்டன.  அவற்றை வைக்கவே இடமில்லாமல் பரணில் தூக்கிப் போட்டிருக்கிறேன்.  அந்த வேதனையே உறுத்துகிறது.  இன்னும் இன்னும் என்னென்ன வாங்க?


     வாங்குவதற்குப் புத்தகங்களே இல்லையா?  இருக்கிறது.  மலையாள மூலம் என்று நினைவு, ஒரு மொழிபெயர்ப்புக் கதை.  டாவின்ஸி கோட் மாதிரியான புத்தகம் என்று விமர்சனம் படித்து, தலைப்பு மறந்து விடக் கூடாது என்று அந்தப் புத்தகத்தின் படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்திருந்தேன்.  தொலைந்து விட்டது.  காலச்சக்கரம் நரசிம்மாவின் கர்ண பரம்பரை.  முகில் எழுதிய ஒரு புத்தகம் (தலைப்பு மறந்து விட்டது.  ஆனால் விலை மறக்கவில்லை,,999 ரூபாய்) இன்னும் சில புத்தகங்கள்..  கோவை ஆவியிடம் பதிப்பகங்களின் விலைப் பட்டியல் கேட்டிருக்கிறேன்.  அவற்றைப் பார்த்தால் கண்காட்சியே போன நிறைவு ஏற்படும்.  ஏதாவது புத்தகம் அவசியம் வாங்கித்தான் ஆகவேண்டுமென்றால் அதே பத்து சதவிகிதக் கழிவில் கதவுப் பிரசவம் செய்யக் கதிரேசன் இருக்கிறார்!




     அதுவரை...?

  
     வாங்கிப் படிக்கப் படாமல் காத்திருக்கும் புத்தகங்கள் ஏக்கத்துடன் என் கைகள் பட்டு விழியின் வழியே இதயம் நுழையக் காத்திருக்கின்றன.  படிக்கப் படாததால் வெறுத்துப் போன எழுத்துகள் புத்தகங்கள் விட்டுப் பறந்து போய்விடக் கூடாதல்லவா...  


 


                                                           [படம் தி இந்து (தமிழ்) லேருந்து திருடியது!]


 
     இந்தப் பதிவு போகாமல் விட்டு விட்டேனோ என்கிற புலம்பல் மாதிரியும் ஒலிக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கே வருகிறது.

57 கருத்துகள்:

  1. புத்தகங்களைப் பார்ப்பது கூட சுகம்தான்
    ஒரு முறை சென்றுவந்திருக்கலாம் நண்பரே
    தம =1

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்ம்ம், எனக்கெல்லாம் இம்மாதிரிப் புத்தகக் கண்காட்சிகளைப் பற்றிப் படிப்பது மட்டுமே சுகம். சென்னையிலேயே இருந்தால் மட்டும் போய்க் கிழிச்சுடவா போறேன். அதெல்லாம் எந்தப் புத்தகமும் வாங்க முடியாது! ஆகவே போகவே முடியாது. போறவங்களைப் பார்த்தும் புத்தகங்கள் வாங்குபவரைப் பார்த்தும் பொறாமைப் படுவதோடு சரி. அப்பாவோட கலெக்‌ஷனிலே இருந்து ஏதானும் ஒண்ணு, ரெண்டு நமக்குத் தேறும்னா தனியா வைங்க! வாங்கிக்கிறேன். :) இப்படி ஓ.சி.யில் புத்தகங்கள் வந்தால் தான் உண்டு! :)

    பதிலளிநீக்கு
  3. அருமை ... உங்கள் முகநூல் ஐ டி யை தெரிந்துகொண்டது கூடுதல் சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் விவரித்த பல நிஜமே.

    ஆங்காங்கே ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு
    தான் எழுத்தாளன் என்பதை பறை சாற்றியபடி சில அந்தக்காலத்து
    வஸ்துக்கள் கண்களில் பட்டன.

    தீனி வயிற்றுக்கும் எராளமான ஏரெடெட் வாடர். சோளப்பொறி, பஞ்சு மிட்டாய், சுற்றி வரும் ரயில். நல்ல வேளை குத்துப்பாட்டு மேடை இல்லை.

    கூட்டம் மிகவும் அதிகம்.தேவையில்லாத சத்தம் போடும் அதீத மைக் பாட்டு.

    ஒரு வழி காட்டி, எந்த மாதிரி புத்தகங்கள் எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்று கியோஸ்க் ஒன்று இருந்தால் நல்லது. இருக்குமோ என்னவோ
    தெரியவில்லை.

    எனது அனுபவங்களை இட்டு இருந்தேனே... நான்பு பதிவர் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் பு த்தக வெளியிட்டு நிகழ்வுக்காகத் தான் சென்றே ன். அவர், அவர் கணவர், அங்கு வந்திருந்த எழுத்தாளர் பெருமக்கள் சந்தித்த திருப்தியே மன நிறைவைத் தந்தது.

    1975 முதல் வருவாயில் பத்து சதவீதம் புத்தகங்களுக்காகவே ஒதுக்கி ஒரு 1000 புத்தகம் வாங்கி அதில் பலவற்றை இன்று என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு ருசிக்கும் பல விஷயங்களில் என் சந்ததிகளுக்கு பிடித்தம் இல்லை.

    லோகோ பின்ன ருசிஹி.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நான் எழுதிய பின்னூட்டத்தில் கீழ் இருந்து மூன்றாவது பாராவில்,
    "நான் பதிவர் " என்று இரண்டாவது வாக்கியம் தொடரவேண்டும்.
    நான்பு என்று தவறுதலாக இருக்கிறது.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  6. தங்களது உள்ளத்தை பதிவின் மூலம் திறந்து காண்பித்து விட்டீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. அடுத்த தடவை புத்தக காட்சி நடக்கும் போது நீங்களும் ஒரு ஸ்டால் போட்டுடுங்க புத்தக ஸ்டால் அல்ல உணவு ஸ்டால்தான்

    பதிலளிநீக்கு
  8. புத்தகத் திருவிழாவை, நிறைய பேர் வெறும் திருவிழாவாகத் தான் பார்க்கிறார்கள். இதுவும் பொங்கல் ட்ரேட் ஃபேர் மாதிரி ஒன்று என்று நினைத்துக் கொண்டு வருகிறார்களோ என்று தான் எனக்குத் தோன்றும். அதனால் தான் உணவுக் கடைகளில் அவ்வளவுக் கூட்டம்.
    ஆனால் ஜூன் மாதம் , பள்ளி புத்தகங்களுக்கு பணம் கொட்டவேண்டியிருக்குமே. புதத்கத் திருவிழாவில் செலவழிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  9. தலைப்பை படிக்குபோதே நிணைச்சேன் இதுவாகத்தான் இருக்கும் என்று”.என் இருப்பிடத்திலிருந்து தூரம் அதிகம்

    பதிலளிநீக்கு
  10. தலைப்பை படிக்குபோதே நிணைச்சேன் இதுவாகத்தான் இருக்கும் என்று”.என் இருப்பிடத்திலிருந்து தூரம் அதிகம்

    பதிலளிநீக்கு
  11. கர்ண பரம்பரை உங்களைக் காணக் காத்துக் கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. இப்போது எல்லாம் படிக்க புத்தகம் வாங்குவது இல்லை பரிசளிக்க மட்டுமே வாங்குகிறேன். முன்பு மாதிரி கதை புத்தகத்தை எடுத்தால் படித்து விட்டு தான் கீழே வைக்கும் ஆசை குறைந்து விட்டது. படிக்கிறேன் கொஞ்சம். நீங்கள் சொல்வது சரிதான் புத்தகங்களை வைக்கவும் இடம் வேண்டுமே வீட்டில்.

    பதிலளிநீக்கு
  13. நான் இதுவரை புத்தக கண்காட்சிக்கு சென்றதே இல்லை. செல்லவும் முடியாது, அவர்கள்Decemberல் வைத்தாலே தவிர... ஆனால் முதல் முறையாக என் கதை ஒன்று (புத்தகம் அல்ல) கண்காட்சிக்குள் நுழைந்திருக்கிறது, சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உதவியுடன்

    பதிலளிநீக்கு
  14. நான் இதுவரை புத்தக கண்காட்சிக்கு சென்றதே இல்லை. செல்லவும் முடியாது, அவர்கள்Decemberல் வைத்தாலே தவிர... ஆனால் முதல் முறையாக என் கதை ஒன்று (புத்தகம் அல்ல) கண்காட்சிக்குள் நுழைந்திருக்கிறது, சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் உதவியுடன்

    பதிலளிநீக்கு
  15. நாங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றது தான்...வாங்க ஆசை தான்... வைக்கத் தான் இடமில்லை...:))

    பதிலளிநீக்கு
  16. நாங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றது தான்...வாங்க ஆசை தான்... வைக்கத் தான் இடமில்லை...:))

    பதிலளிநீக்கு
  17. அங்கே இல்லாத்தால் நான் புத்தக சந்தையை மிகவும் மிஸ் செய்கிறேன்.
    மூலிகை மருந்து புத்தகங்கள்,
    சரித்திரக்கதைகள் வாங்க மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் சொல்வதுதான் நடந்து கொண்டிருக்கிறது. படிக்காமல் அலமாரியில் தூங்கும் புத்தகங்களே அதிகம்.
    ஒரு நடை போய்விட்டு வந்திருக்கலாம் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. வாசிப்பு பழக்கமும், புத்தகம் வாங்குவதில் சலிக்காத மனமும் கொண்ட ஒரு வலைப்பதிவரின் பொதுவான எண்ணங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். சுப்பு தாத்தா சொல்வது போல, இன்றைய தலைமுறைக்கு விருப்பம் இல்லாத இந்த புத்தகங்கள்,நமக்குப் பின் என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோருக்கும் உண்டு? அப்பா வாங்கிய புத்தகங்கள் பரணிக்கு. நாம் வாங்கிய புத்தகங்கள்? ஒரு பதிவே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  20. போக வேண்டுமென்ற ஆசை நிறையவே உண்டு! இரண்டாண்டுகளாக இயலவில்லை முதுமை இயலாமை!

    பதிலளிநீக்கு
  21. இதுவரை எந்தபுத்தகக் கண்காட்சிக்கும் போனதில்லை. இருக்கும் புத்தகங்களையே படிக்க முடியவில்லை. மேலும் வாங்கிச் சேர்த்து என்னதான் செய்வது

    பதிலளிநீக்கு
  22. //புலம்பல் மாதிரியும் ஒலிக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கே வருகிறது.//

    நிச்சயமா இல்லை. ஏக்கம் இழையோடறத்தே புலம்பல் எங்கிருஜ்து வரும்?.. ஆனால் சுஜாதா காலத்திற்கு அப்புறம் எழுதுவதில் நிறைய மாற்றன்கள் ஏற்பட்டிருப்பது நிச்சயம். அதற்கு பழைய வாசகர்கள் பழக்கப்படவில்லை என்பதும் பலரில் ஆர்வமின்மைக்கு ஒரு காரணம்.

    இந்த புத்தக சந்தையில் முக்தா சீனிவாசனும், வைரமுத்துவும் தனிக் கடையே போட்டிருந்தார்களாம்.

    புத்தகப் பதிப்பகத்தாரின் சங்கம் நிரந்தரமாக புத்தக விற்பனைக்காக ஒரு மாளிகையையே
    சென்னையில் எழுப்பலாம். பாண்டிபஜார் சரியான இடம். எல்லாவித புத்தகங்களும் கிடைக்கும் இடம் அதுவாக ஆகிப்போனால் விற்பனை கொடி கட்டிப் பறக்கும். 20% தள்ளுபடி தாராளமாக கொடுக்கலாம்.

    பழைய மூர்மார்க்கெட் மாதிரி அங்கு பழைய புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைத்தால் இன்னும் சிறப்பு கூடும். வாடகை நூல் நிலையங்களையும் அங்கு அமைக்கலாம். ஒரு நூறு பேர் அமரக்கூடிய அளவிற்கு அரங்கமும் இருந்தால் புத்தக வெளியீடுகளுக்கும், புத்தக உரையாடல்களுக்கும் செளகரியம். மொத்தத்தில் அந்த மாளிகை வாசிப்பு உலகமாக மாறிவிடும்.

    இந்த மாதிரி வருஷத்திற்கு ஒரு தடவை என்று இல்லாமல் நிரந்தர விற்பனை எற்றானால் எத்தனையோ செளகரியங்கள். முக்கியமாக புத்தகங்களின் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க
    அவற்றின் அடக்க விலை குறைவதற்கு நிறைய வாய்ப்புகள்..

    வாசிப்பு உலகத்தினருக்கு இப்படி கடை விரித்தால் நாள் தோறும் தீபாவளி தான்!

    பதிலளிநீக்கு
  23. புத்தகங்களை வாங்கிவிடுவது சுலபம்! பராமரிப்பதுதான் கடினம். என்னிடமும் பல புத்தகங்கள் மூட்டைகளில் கட்டி தூங்குகின்றன. அதை நினைக்கையில் வருத்தம் மேலிடும்.

    பதிலளிநீக்கு
  24. அதுவும் சரிதான். படிக்கவேண்டிய, வீட்டு நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்துமுடித்துவிட்டு புதிய நூல்கள் வாங்குவது பற்றி சிந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  25. படிக்க வேண்டிய புத்தகங்கள், படித்து முடித்த புத்தகங்கள் என என்னிடமும் நிறைய உண்டு. பரிமாறிக் கொள்ளலாம் என்றால் இங்கே இருக்கும் நண்பர்களுக்கு புத்தகங்களில் அத்தனை ஆர்வம் இல்லை. சிலர் நம்மிடம் மட்டும் வாங்க விரும்புகிறார்கள் - அவர்களிடம் கொடுப்பதற்கு புத்தகம் இல்லையே!

    புதிதாக வாங்க விருப்பம் இருந்தாலும் இப்போதெல்லாம் வாங்குவதில்லை....

    பதிலளிநீக்கு
  26. புத்தகக் கண்காட்சி சென்று வந்தேன். ஆனால் எந்த புத்தகமும் வாங்கவில்லை.

    பதிலளிநீக்கு
  27. இங்கேயும் வருடா வருடம் புத்தகக் கண்காட்சி நடக்கும். ஆரம்ப வருடங்களில் போய் அள்ளி வந்ததுண்டு. பின்னர், போகப்போக, இருக்கிறதப் படிச்சு முடிப்போம் என்கிற ஞானோதயம் வந்ததில், இப்பல்லாம் மிகவும் குறைத்துவிட்டேன். ஆனாலும், கண்காட்சிக்குப் போகாமல் இருக்க முடிவதில்லை. போனால், ஒன்றிரண்டாவது வாங்கித்தான் ஆக வேண்டியிருக்கு - படிக்க மாட்டேன் என்று தெரிந்தாலும், ஒரு நப்பாசை. :-) (ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே இங்கு).

    பதிலளிநீக்கு
  28. ஹுசைனம்மாவின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். வாரிசுகளுக்கு தமிழ் தெரியாது என்பதால் தமிழ் புத்தகங்கள் வாங்கி என்ன செய்ய? என்று தோன்றுகிறது. சிலவற்றை தகுதியானவர்களுக்கு கொடுத்து விட்டேன். புத்தகம் வாங்கியவுடன் அதை படித்து முடித்த காலங்கள் மலை ஏறி விட்டன. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிக்க முடிகிறது. எல்லா புத்தகங்களிலும் பேஜ் மார்க் இருக்கும். புது புத்தக வாசனையை நுகர்ந்தபடி நடப்பது ஒரு தனி அனுபவம்தான்!

    பதிலளிநீக்கு
  29. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். பார்த்து விட்டு சும்மா வரமுடியுமா என்ன!

    பதிலளிநீக்கு
  30. நன்றி கீதா மேடம். அப்பாவோட கலெக்ஷனை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றி வைத்திருக்கிறேன். அதை அப்பா வேறு யாருக்காவது கொடுத்துவிடப் போகிறாரே என்றுதான் அந்த நடவடிக்கை. ஆனால் என்ன, எல்லாம் அட்டைப் பெட்டியில் பரணில். :)))

    பதிலளிநீக்கு
  31. நன்றி ஸ்ரீராம். இப்போ நாம் ஃபேஸ்புக்கிலும் Friends!

    பதிலளிநீக்கு
  32. நன்றி சுப்பு தாத்தா. தனது புத்தகங்களை வெளியிட்ட, விற்பனையில் வைத்திருக்கும் பல எழுத்தாளர்கள் கண்காட்சியைச் சுற்றி வந்ததாக அறிகிறேன். புஹ்த்தகக் கண்காட்சிக்கு இன்னும் நிறைய திட்டமிடல் தேவை என்றுதான் எல்லோருமே சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  33. நல்ல ஐடியா மதுரைத்தமிழன். ஆனால் முதலீடு செய்ய காசும், பொறுமையும் இல்லையே...

    :)))

    பதிலளிநீக்கு
  34. மிகச் சரியாகச் சொன்னீர்கள் ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். பொழுதுபோக்க ஒரு இடம் வேண்டும். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  35. நன்றி நண்பர் வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
  36. ஆஹா ஆவி.. காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி கோமதி அரசு மேடம். நீங்கள் சொல்லி இருப்பது சரிதான். இப்போது வரும் தலைமுறைக்கும் புத்தகங்கள் படிப்பதில் இஷ்டமில்லை. வைக்கவும் இடமில்லை. பின்னணியில் சோகமான பின்னணி இசை கேட்கிறது!

    பதிலளிநீக்கு
  38. வாழ்த்துகள் ஹேமா(HVL).. நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  39. நன்றி வல்லிம்மா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி. மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கண்காட்சிப் பக்கமே போகவில்லை.

    பதிலளிநீக்கு
  40. நன்றி நண்பர் தமிழ் இளங்கோ. எழுத நிறையவே விஷயம் இருக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
  41. நன்றி ஜி எம் பி ஸார்.

    //இருக்கும் புத்தகங்களையே படிக்க முடியவில்லை. மேலும் வாங்கிச் சேர்த்து என்னதான் செய்வது//

    அதேதான்.

    பதிலளிநீக்கு
  42. நன்றி 'தளிர்' சுரேஷ். இப்போதே யோசித்து புத்தகங்கள் நிறையச் சேர்க்காமல் இருப்பது நலம்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  44. நன்றி வெங்கட். //சிலர் நம்மிடம் வாங்க மட்டும் விரும்புகிறார்கள்// உண்மை. உண்மை!

    பதிலளிநீக்கு
  45. நன்றி டி என் முரளிதரன். உங்களுக்கு மனவுறுதி அதிகம்தான்!

    பதிலளிநீக்கு
  46. நன்றி ஹுஸைனம்மா. எனக்கும் அந்த ஞானம் இப்போதான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  47. நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். நமக்குப் பின் படிக்க ஆளுமில்லாமல், வைக்க இடமுமில்லாமல்.. கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
  48. பலர் புத்தகங்கள் படிப்பதற்காக மட்டுமே என்று சொல்வது எனக்கு வியப்பாய் இருக்கிறது. வாசித்து முடித்த பின் வேறு உபயோகங்கள் அவற்றால் இல்லை என்று அர்த்தப்படுவதாய் தெரிகிறது.

    புத்தகங்கள் நம் கூடவே இருப்பது எவ்வ்ளவு பாக்கியம்?.. பல தலைப்புகளில் நான் வாங்கிச் சேர்த்திருக்கும் புத்தகங்களை வேண்டும் பொழுது எடுத்து வாசித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தில் இந்தச் செய்தி இருக்கிறது என்று எனக்கு நன்கு தெரிந்திருப்பதால் எடுத்துக்காட்டுகள், குறிப்புகளுக்கு அவை பேருதவியாய் இருக்கிறது. இந்த மாதிரி குறிப்புகள் கைவசம் இல்லை என்றால் என்னால் எதையுமே எழுத முடியாது என்கிற மாதிரி நான் அவற்றைச் சார்ந்த இருக்கிறேன்.

    சில நாட்களுக்கு முன், சமீபத்தில் வெளிவந்த என் நூள் பற்றிக் குறிப்பிடும் பொழ்து வாஸந்தி பற்றி எழுதவில்லையா என்று சகோ பானுமதி வெங்கடேஸ்வரன் கேட்டார்கள். உடனே கல்கி பைண்டிங்கை தேடி எடுத்து 'நிற்க நிழல் வேண்டும்' என்ற அவரது குறிப்பிடத்தக்க ஒரு நாவலைப் பற்றியும் அதற்கு குறிப்புகள் எடுத்து வைத்திருப்பது பற்றியும் அவருக்குச் சொன்னேன்.

    பத்திரிகை பைண்டிங்குகள் நிறைய என்னிடம் இருக்கின்றன. நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னான அந்த பைண்டிங்குகளை எடுத்து இப்பொழுது வாசித்து பார்ப்பது எவ்வலவு சுகமான காரியம்!.. அந்த கலெக்ஷ்ன்கள் எல்லாம் எவ்வளவு உற்சாகத்தையும், தேவைப்படும் பொழுது உடுக்கை இழந்தவன் கைபோல உதவுவதையும் எப்படி என்னால் மறக்க முடியும்.

    புத்தகங்கள் வாங்கி விட்டால் வாங்கினது தான். எப்பொழுது எந்த சமயத்தில் அவை பேருதவியாய் இருக்கும் என்கிற நன்றிக்கட்னைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை!

    பதிலளிநீக்கு
  49. அருமையான பதிவு

    இதோ மின்நூல் களஞ்சியம்
    http://ypvn.myartsonline.com/

    பதிலளிநீக்கு
  50. /எழுத்துகள் புத்தகங்கள் விட்டுப் பறந்து போய்விடக் கூடாதல்லவா... / நீங்கள் கல்கியில் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. உண்மைதான். வாங்கியவற்றை முதலில் வாசித்து முடிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க ஜீவி ஸார்.. நீங்கள் சொல்லும் அனுபவங்கள் எனக்கும் உண்டு. நினைக்கும்போதெல்லாம் எடுத்துப் புரட்ட நிறையப் புத்தகங்கள் நானும் வைத்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் எத்தனை தரம் படித்திருப்பேன்? பழைய புத்தகங்களில் எத்தனை தரம் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.. அதனால்தான் புத்தகங்களை இழக்க மனம் இல்லாமல் அப்பாவிடமிருந்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். அப்பா வெளியில் யாருக்காவது கொடுத்து விட முடிவு செய்திருந்ததற்கு என்மேல் ஏதேனும் அதிருப்தியா, தெரியாது. நான் விடவில்லை. எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்து விட்டேன். பார்க்க நேரமில்லை, வைக்க இடமில்லை என்பதுதான் புலம்பல். இழக்க மனமில்லை.

    பதிலளிநீக்கு
  52. நன்றி ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  53. நன்றி ராமலக்ஷ்மி. மனதில் தங்கிய எண்ணம். அதனால்தான் மறுவெளிப்பாடு போல!!! ஹிஹிஹி... ஒவ்வொன்றாக முன்பு வாங்கிய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் ஒன்றிரண்டு புதிதாக வாங்கி இருக்கிறேன் -பு.க க போகாமலேயே. நண்பர் ஆவி உதவியுடன் கர்ணபரம்பரை அதில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  54. ஸ்ரீராம் எனக்கும் ஒரு சில இதே காரணங்கள் ஆனால்இம்முறை செல்லவில்லை. வேலைப்பளுவினால்...புத்தகக் கண்காட்சி இல்லை என்றால் புத்தகக் கடைகள் இருக்கின்றனவே போய்விட்டால் போச்சு..என்ன... தீனிக் கடைகள் இருக்காது...ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!