வியாழன், 17 நவம்பர், 2016

அமானுஷ்யக் கேள்விகள்



எங்கள் தளத்தில் வெளியான கனவுகள் பற்றிய பதிவும் அதன் சுவாரஸ்யமான பின்னூட்டங்களும் நீங்கள் அறிந்ததே! 
 
அதனைத் தொடர்ந்து கீதாக்கா தனது எண்ணங்கள் பதிவில் இதே பதிவின் தொடர்ச்சியாக சில கருத்துகளைக் கூறி இருந்தார்.  கனவில் அவர் வீட்டு சில மூத்தவர்கள் வருவதாகவும், அது கனவா, நனவா என்று கூட உணர முடியாது என்றும் சொல்லியிருந்தார். அப்போது சிலர் கண்களுக்கு மட்டும் மறைந்தவர்கள் தென்படுவார்களோ என்கிற கேள்வி வருகிறது.  
 
எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு மிக மூத்த உறவு (104 வயது) பேசுவதைக் கேட்கும்போது சமயங்களில் இப்படித் தோன்றும்..
 
"வயதாகி விட்டது என்பதால் சம்பந்தமில்லாமல் பேசுகிறார் ...மனம் ஒரு நிலையில் அவருக்கு நிற்க மாட்டேன் என்கிறது..."
 
நமக்குப் புரியவில்லை, தெரியவில்லை என்றால் அர்த்தமில்லாமல் பேசுவதாக நினைப்பது சரியா?  இதெல்லாம் உலக விஷயங்களுக்கு ஒவ்வாததாக நமக்குத் தோன்றுகிறது.  அதனால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ..

 
"நாமெல்லாம் நாளைக்கு இந்த வயது வரை இருப்போமா என்பதே தெரியாது..  இருந்தாலும் இந்த அளவு உடல் நலமோ, மன நலமோ இருக்குமா, எப்படி இருப்போமோ?" என்றும் தோன்றும்.
 
செத்துப்போன தன் மகள், மற்றும் தனது தந்தை எதிரில் வந்து அமர்ந்திருப்பதாய் அடிக்கடி சொல்வார்.  ஏனோ மறைந்த கணவர் அவரைத் தேடி வந்ததாய் இதுவரைச் சொல்லவில்லை.  அதே போல மறைந்த இன்னொரு மகள், மருமகள்  உட்பட வேறு சில உறவுகளும் இப்போது வருவதாய்ச் சொல்லவில்லை.   ஆனால் வாழும்வரை கணவர் மனைவியிடம் மிகவும் பிரியமும், பாசமும் வைத்திருந்தார். 

 
வயதாவதால் அப்படித் தோன்றுகிறது என்கிற சிந்தனைதான் எல்லோருக்கும் தோன்றும்.  ஆனால் யோசித்துப் பார்க்கும்போது சில கேள்விகள் வருகின்றன.


அவர்கள் (மறைந்தவர்கள்) இருந்த காலத்தில் நமக்குத் தெரிந்து இவர் மீது யார் நிறைய பிரியம் வைத்திருந்தார்களோ அவர்கள்தான் வந்து அந்த அறையில், எதிரே (சமயத்தில் அங்கிருக்கும் ஜன்னல்களில் தொற்றிக்கொண்டு) அமர்ந்திருப்பதாய் இவர் சொல்வார்.   அப்படியானால் இதுவரை வராதவர்களுக்கெல்லாம் இவர் மீது ப்ரியம் இல்லை என்று அர்த்தமா என்று கேட்கக் கூடாது!  அதிக அபிமானம்.
 
அவர்களுக்கெல்லாம் மறுபிறவி கிடையாதா?  தனது ப்ரியத்துக்குரியவர்கள் தங்களுடன் சேர்ந்துக் கொள்ளும்வரை வந்து பார்த்துக் கொண்டிருப்பார்களோ..  பரமாத்மாவின் ஒரு துளி ஜீவாத்மா என்பது போல, ஒருவேளை அவர்கள் ஆத்மாவின் ஒரு பகுதி மறுபிறவிக்கும், ஒரு பகுதி இந்தப் பிறவியின் நினைவுக்கும் உருவமாக (?) தங்கி விடுமோ?
 
வயதாகி இந்த நிலையில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் 'அவர்கள்' கண்ணுக்குத் தெரிவார்களோ?  

 
"அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.." என்பார்.  எங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்போம் நாங்கள்.  ஆனால் அவர்கள் பேசுவது அவர் காதுக்கு மட்டும் விழுகிறது என்கிறார்.  'நீ அப்படிச் சொன்னதும் உன்னைப் பார்க்கிறார்' என்பார்.  நமக்கு காதிலும் எதுவும் விழுவதில்லை, கண்களிலும் எதுவும் தெரிவதில்லை.  ஆனால் தினமும் இவரின் திடீர்ப் பரிச்சயப் பார்வையையும், கண்களால் அவர்களைத் தொடர்வதையும் பார்க்கும்போது சந்தேகமாகத்தான் இருக்கிறது. 
 
வந்திருந்த தந்தை (இவருக்கே வயது 103க்கு மேல்..  இவரின் தந்தைக்கு என்ன வயதிருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்) 'படுக்க இடமில்லை' என்றாராம் இவரிடம். 
 
அப்படிச் சொன்னதும் அங்கு அதே அறையில் அவரைப் பார்த்துக் கொள்வதற்காகத் தங்கியிருந்த அவர் மகன் சாதாரணமாக (இவரைச் சமாதானப்படுத்த)  'அதனாலென்ன, என் பக்கத்தில் படுத்துக்க கொள்ளச் சொல்லு" என்றாராம்.  சற்றே நேரம் பொறுத்து இவர் மகனிடம்  'அவர் காத்திருக்கார் பாரு... தள்ளிப்படு' என்றாராம்.  இவரும் சற்று இடம் விட்டுத் தள்ளிப் படுத்துக் கொண்டாராம்.

அருகில் யாராவது படுத்தார்களா இல்லையா, தனக்குத் தெரியாது என்றார் அவர்.

 
நியூரான்களின் பலவீனத்தால் சமீப நினைவுகள் மறந்தும், பழைய நினைவுகள் தெளிவாகவும் நினைவில் இருக்கின்றன.  இதுவும் வயதாவதன் கோளாறுதான். திடீரென தஞ்சாவூரிலும், திடீரென பட்டுக் கோட்டையிலும், திடீரென சென்னையிலும் இருக்க முடிகிறது  அவரால்.  அவர் வர்ணனைகள்  'அந்தக் காலத்து அந்த நாளின்' காட்சியை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.  ஸ்தூல சரீரம், சூக்ஷும சரீரம் போல அவரால் சூக்ஷும சரீரத்தின் உதவியுடன் அங்கங்கு போய்வருகிறாரோ என்னவோ - அதுவும் கால இயந்திரத்தில் பின்னோக்கி!
 
கேள்விகள்... சந்தேகங்கள்!

56 கருத்துகள்:

  1. இதில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் நேரில் பார்த்ததில்லை. அம்மா அப்பா எப்போதாவது கனவில் வருவார்கள் .பேச மட்டார்கள். தம்பி ,சிங்கம் இவர்களும் தான்.
    நான் யாரையெல்லாம் பார்த்து பயப் படுவேனோ அவர்கள் கட்டாயம் வந்து அதே போல இருந்துவிட்டுப் போவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. என் கருத்து.... இது சாத்தியமே... வயதும் அனுபவமும் ஏற,ஏற அவர்களின் நடமாட்டம் ஒரு குறுகிய வரையறைக்குள் என்னும்போது அந்த மறைந்த ஆன்மாக்கள் இவர்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கலாம். கடவுள் ஒரு கதவை மூடும்போது வேறொரு கதவைத் திறக்கிறார் என நம்புகிறோம்.அதனால் இந்த சாத்தியக்கூறை மறுப்பதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  3. நினைவுகளில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.உறக்கத்தின் இடையே வரும் கனவுகளிலும் சரி
    கனவுகளிலிருந்து விழித்துக்கொண்டபின் மீண்டும் உறக்கம் வரும் வரை கனவுகள் தொடருகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை. ஏனெனில் அப்போது நினைவுகள் செயலற்று உள்ளது.
    நாம் எதை பற்றி அதிகமாக தீவிரமாக சிந்திக்கிறோமோ அதுதான் கனவாக நினைப்பவர்களுக்கு மட்டும் வருகிறது.
    நினைவுகள் இல்லை என்றால் கனவுகளும் இல்லை. கவலைகளும் இல்லை. வெறும் அமைதிதான். இன்ப துன்பமற்ற ஆனந்தம்தான். அந்த நிலையை அடைந்துவிட்டால் எந்த சூழ்நிலையும், சம்பவங்களும் நம்மை பாதிக்காது.
    மரம் எங்கேயும் போவதில்லை. .அதற்க்கு வேண்டிய எல்லாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்கிறது. அது வளர்கிறது.பூக்கிறது.காய்க்கிறது. அதன் வாழ்வை தொடர விதைகளை விட்டு செல்கிறது. எல்லோரும் பயன் பெற தன்னை அர்ப்பணித்து உதவுகிறது
    நம் மனம் அங்குமிககும் ஓடிக்கொண்டிருக்கிறதை. எதிலும் நிலைத்து நிற்பதில்லை. விதை முளைக்கும் வரை பொறுமை காக்கிறது. நமக்கு எதற்கும் பொறுமை இல்லை. எல்லாம் அவசர கதி அதனால் மனதில் எப்போதும் வெறுமை.

    பதிலளிநீக்கு
  4. எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அல்லது கேட்கிறோமோ அது அன்றைய கனவில் வருவதுண்டு. சாத்யம் இருக்கு. நான் இதை எல்லாம் நம்புகிறேன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. பிரியமாக வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல பிரியமில்லாமல் வாழ்ந்தவர்கள்கூட வாழாமல் விட்டு விட்டோமே என ஏங்கி கனவிலும் நினைவிலும் வருவார்கள் என்பது உண்மையே... (எனது அனுபவத்தில்)

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்லியிருப்பது கனவைப் பற்றியல்ல. நனவில் ஒருவர், இறந்துபோன மற்றவர்கள் அந்த இடத்தில் இருப்பதாகவும், வருவதாகவும் எழுதியிருக்கிறீர்கள். நினைவில் அல்ல, நனவில். சிலரால் (இந்த இடத்தில் வயதான ஒருவர்) பார்க்கமுடிகிறது. மற்றவர்களால் காண இயலவில்லை. அதனால் அந்த முதியவர் பிதற்றுவதுபோல் தோன்றுகிறது. இதற்குக் காரணம் நம்மால் அதனை நம்ப இயலுவதில்லை. ஆன்மீகம் என்பது ஒருவரின் அனுபவம். அதை அடுத்தவர்களுக்குக் கடத்துதல் பெரும்பாலும் இயலாது (ஒரு உதாரணம்: நரேந்திரன் ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கேட்கிறான். உங்களுக்குக் கடவுள் தெரிகிறது என்றால், எனக்குக் காட்ட இயலுமா என்று. கடவுளைக் காணும் அனுபவத்தை நரேந்திரனுக்குக் கொடுத்ததால், அவர் துறவறம் பூண்டு விவேகானந்தராகிரார். இது நாம் அனைவரும் படித்திருக்கிறோம். ஒருவேளை, நானும் அங்கிருந்து, ராமகிருஷ்ணர் எனக்குக் காண்பிக்க முடியுமா என்று நீங்கள் கேட்டால்-முடிந்திருக்காது. அதற்குரிய பக்குவம் எனக்கு இருந்தால் ஒழிய கடவுளைக், அந்த அனுபவத்தைத் தந்திருக்கமுடியாது)

    சில வருடங்களுக்கு முன்பு ஒரு யோகா மாஸ்டரிடம் நான் தொடர்பில் இருந்தேன். அவர் வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து யோகா சொல்லிக்கொடுப்பார். அவர் பல வருடங்களாகத் தினமும் தியானத்தில் ஈடுபட்டுவருகிறார். அவர் என்னிடம் ஒருமுறை, என் வீட்டில் என்னுடைய நாலு பிம்பங்களைப் (முன் ஜென்மங்களை?) பார்த்துள்ளதாகச் சொன்னார். சில வீடுகளில் யோகா சொல்லிக்கொடுக்கும்போது, அவர்களுடைய இறந்துபோன பெற்றோர்கள் யோகா செய்பவருக்குப் பின்பு இருந்ததாகச் சொல்லியுள்ளார். அவர் என்னிடம் பொய் சொல்ல அவசியமில்லை.

    ஸ்ரீராமின்(?) கேள்வி, அவர்களுக்கெல்லாம் மறுபிறவி கிடையாதா? பல புத்தகங்களில் யோகா குருக்கள் எழுதியுள்ளதைப் படித்துள்ளேன். பொதுவாக உள்ள கருத்து, பூமிக்கு மேலே, ஏழு அடுக்குகளில் இறந்தவர்களின் ஆன்மா இருக்கிறது. அடுக்குகளைப் பொருத்து ஆன்மாக்களின் தரம். ஆயுள் சரியாக முடியாமல் இறந்தவர்கள் அந்த ஆரம்ப அடுக்குக்கே செல்ல இயலாமல் கீழே உலவிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் இயல்பான ஆயுள் முடுவு வரை இங்கேயே இருக்கவேண்டும் (பூமிப்பிரதேசத்தில்). (முதியவர் சொல்வது இவர்களை அல்ல). ஒரு அடுக்கில் உள்ளவர், அதற்குக் கீழுள்ள அடுக்குக்கு, இயற்கையின் விதிகளை மாற்றாமல் சென்றுவர முடியும். (ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது... நானும் நம்புவது... இறையின் கீழடுக்கில் (ஏழாவது), நாம் ஆன்மீகத்தின் பெரியவர்கள் என்று நம்புகின்றவர்கள் இருக்கின்றனர். அவர் எழுதியது, பல மதத் தலைவர்களும் இந்த அடுக்கில்தான் இருக்கிறார்கள். உலகில் நல்வழிப்படுத்த, இறையின் அறிவுரையோடு, இவர்கள் மீண்டும் பிறப்பெடுத்து உலகில் உள்ள மக்களை நல்வழிப்படுத்த அவதரிக்கிறார்கள்.. சரி.. சரி..இது சம்பந்தமில்லாத இடத்தை நோக்கிப் பயணிக்கவில்லை.. இறப்பவர்கள் பொதுவாக 300லிருந்து 500 ஆண்டுகள் வரை அவர்களுக்குள்ள அடுக்கில் காத்திருந்து, அவர்களின் வினைக்குப் பொருத்தமான இடத்தில்/சூழலில் மீண்டும் பிறப்பெடுக்கிறார்கள். இது பொது விதிதான். 5 வருடத்திலிருந்து 300 வருடங்களுக்கும் குறைவாக, மீண்டும் பலர் பிறந்திருக்கின்றனர். இறந்தவர்கள் தகுதிபெற்றவர்களாக இருப்பின், அவர்களால், அவர்கள் பிறந்த சூழலுக்கு, இடத்துக்கு வந்துபோக முடியும். அதீத ஆர்வத்தால், கனவில், வரும் பொருள் உரைக்க முடியும், ஆனால் இது இறைவிதியை மீறிய செயல். இவர்களைத்தான் முதியவர் பார்த்திருக்கலாம்.

    இந்த அடுக்குகள் தியரியில் ஒரு லாஜிக் இருக்கிறது. மனித உயிர்கள் எல்லாம் சமமல்ல. (யப்பா சாமிகளா.. நான் சாதி, மதத்தைச் சொல்லவில்லை). ஒவ்வொரு உயிரின் (ஆன்மாவின்) குவாலிட்டி அவர்கள் செய்யும் நற்செயல்களால் (பிறப்பால் அல்லவே அல்ல) எடைபோடப்படுகிறது. அதைப் பொருத்துத்தான் இந்த ஏழடுக்கு குவாலிபிகேஷன். (எவனெதைச் செய்தாலும் அவன் அதை அறிவான். அந்த எண்ணத்தின் தரம் கண்டு பலன் பெறுவான்-கீதை)

    பொதுவாக இந்துக்களில் (கேள்விப்பட்டபடி) ஒரு நம்பிக்கை. உயிர் பிரியும்போது, இவருடைய உயிருக்குச் சம்பந்தமானவர்கள், முன்னரே இறந்தவர்கள், அவரை (அவரது உயிரை) வரவேற்று வழிப்படுத்துகிறார்கள் என்பது (like making him-? comfortable in a new zone)

    இவை அனைத்தும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, எழுதுபவர்கள் ஆதாயத்துக்காக எழுதுபவர்கள் அல்லர் என்ற தெளிவினாலும் பலர் எழுதியுள்ள புத்தகங்களின் அறிவின் மூலமும் நான் நம்புகிறேன்.

    கௌதமன் சார் Proof கேட்டால், புத்தகங்களைத்தான் அனுப்ப இயலும். இல்லாட்ட ரெண்டுபேரும் சேர்ந்துபோய்ப் பார்த்து முடிந்தால் உங்களுக்குச் சொல்லுகிறோம். அல்லது எங்கள் பிளாக்கில் எழுதுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன புத்தகங்கள் என்று சொல்லுங்கள்.... நன்றி!

      நீக்கு
  7. என்னால் மறக்க முடியாத ஒரு கனவு உண்டு .
    முடிந்த வரை சோகப் பதிவுகளை நான் தவிர்த்து வருகிறேன் . எனவே விவரிக்கவில்லை . 1௦௦% உண்மையாக நடந்தது

    பதிலளிநீக்கு
  8. எனக்கு அடிக்கடி கனவு வரும். அப்பா, அம்மாவிடம் பேசுவேன் . அன்புக்குரியவர்கள் நினைவு கனவாக வருகிறது என்றாலும் உண்மைதான்.
    முன்னோர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றால் கனவில் வருவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் நினைவு தினத்தில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை வைத்து கும்பிடுகிறேன். எனக்கு அவர்கள் வருவது மகிழ்ச்சியே. திங்கள் அன்று இறந்தால் மறுபிறவி கிடையாது என்கிறார்கள், என் அப்பாவும், அம்மாவும் கார்த்திகை மாதம் திங்கள் கிழமை இறைவனடி சென்றார்கள்.


    //பொதுவாக இந்துக்களில் (கேள்விப்பட்டபடி) ஒரு நம்பிக்கை. உயிர் பிரியும்போது, இவருடைய உயிருக்குச் சம்பந்தமானவர்கள், முன்னரே இறந்தவர்கள், அவரை (அவரது உயிரை) வரவேற்று வழிப்படுத்துகிறார்கள் என்பது (like making him-? comfortable in a new zone)//

    நெல்லை தமிழன் சொல்வது போல் என் அம்மா அப்பா, தாத்தா, ஆச்சிபடத்தைப் பார்த்து பேசிக் கொண்டே இருப்பார்கள், உடம்பு சரியில்லாத போது. அப்பாவிடம் கடமையை முடித்துவிட்டு வா என்றீர்களே ! கடமை முடிந்து விட்டது அழைத்து செல்லுங்கள் என்று பேசுவார்கள். அப்பா இறந்த மாதமே அதே நாளில் இறந்து போனார்கள்.

    ஸ்ரீராம் சொன்னது போல் அப்பாவே வந்து அழைத்து சென்று விட்டார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  9. நெல்லைத் தமிழன் சொன்னது போல் இந்தப் பதிவு வாழ்வில் வரும் அமானுஷ்யர்களைப் பற்றியே. இதுவும் விடை தெரியாத கேள்வியே - கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். இது எனது அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
  10. இதைதான் a common symptom of severe mental disorder என்று மன நல மருத்துவர்கள் சொல்வார்கள் :)

    பதிலளிநீக்கு
  11. பகவான் ஜியின் கருத்தோடு ஒத்துப் போகிறேன்

    பதிலளிநீக்கு
  12. I think the medical terms referred to above are senility, dementia etc related to old age....

    பதிலளிநீக்கு
  13. நெல்லை தமிழன் கூறியிருப்பதைப் போல உங்கள் உறவினருக்கு வந்தது கனவு அல்ல, நிஜமாகவே அவருக்கு தெரியும் தோற்றங்கள்தான். பலருக்கு இது போல நடந்து இருக்கிறது/நடக்கிறது. எங்கள் ஊரில் 100 வயது ஆன ஒருவர் சமீபத்தில் இறந்து போனார். இறப்பதற்கு முன்பு தன் இளைய மகனிடம்,"சேதுவை (அவருடைய மூத்த மகன்) வரச் சொல், என் அம்மா என்னை நான் பிறக்கும் பொழுது எப்படி இருந்தேனோ, அப்படி வரச் சொல்கிறாள்" என்று கூறி விட்டு தன் பூணூலை அறுத்து எறிந்தாராம், அவர் படுத்துக் கொள்ளும் கட்டிலில் தன உடைகளை களைந்து விட்டு படுத்துக் கொண்டாராம், உயிர் பிரிந்ததாம்... ஊரில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சம்பவம். இது. இவை எல்லாம் உண்மைதான்!

    உடனே இந்தியர்களுக்கு பகுத்தறிவு கிடையாது என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள். இளவரசி டயானா இறப்பதற்கு பிரிட்டனில் அவர் கார் விபத்தில் இறப்பதாக கனவு, மற்றும் உருவெளி காட்சியில் கண்டவர்கள் அதற்குப் பிறகு தெரிவித்திருந்தார்கள். அதில் லண்டனின் புற நகர்ப் பகுதியில் வசித்த ஒரு பெண், டயானா பயணம் செய்த அந்த கார் (எண் உள்பட), விபத்து நடக்கப் போகும் அந்த டன்னல் எல்லாவற்றையும் உருவெளித்த தோற்றமாக கண்டாராம்.
    எல்லாம் உண்மைதான்.

    பாலகுமாரனின் 'சொர்கம் நடுவிலே' படித்து பாருங்கள். அதில் இறப்புக்கும், பிறப்புக்கும் இடை பட்ட விஷயங்களை எழுதியுள்ளார். இதை அறிமுகமாக கொண்டு, அரபிந்தோ இது குறித்து ஆழமான விஷயங்களை எழுதி உள்ள நூல்களை படிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. முந்தைய பதிவில் சொன்னது போலவே என் பிசினஸில் ஒரு ஆர்டர் விடயமான சங்கடங்களால் சோர்ந்து போயிருந்த அந்த இரவில் என் அத்தை... அப்பாவின் தங்கை.. கனவில் வந்து நான் இருக்கின்றேன் கவலைப்படாதே என்றிருக்கின்றார். அதே போல் கடந்த வருடம் பயங்கரமான ஒரு கனவு. அடுத்த நாள் காலை என் தங்கை கணவர் மரித்து விட்டதாக செய்தி. கனவுகள் பின் நடப்பதி முன் உணர்த்துகின்றதோ எனவும்நினைப்பதுண்டு.

    வாழும் காலத்தில் நாம் பாசம் வைத்தவர்கள் இறந்த பின் நம்மை வழி நடத்துவார்களாமே? நிஜமாக இருக்குமோ என்னமோ?

    பதிலளிநீக்கு
  15. வாங்க வல்லிமா..

    //நான் யாரையெல்லாம் பார்த்து பயப் படுவேனோ அவர்கள் கட்டாயம் வந்து அதே போல இருந்துவிட்டுப் போவார்கள். //

    ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. வாங்க பாரதி.. உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க பட்டாபிராமன் ஸார். நான் இந்தப் பதிவில் சொல்லியிருப்பது கனவுகள் பற்றி அல்ல. நிஜத்தில் காட்சிகளில் தெரியும் இறந்தோர் பற்றி. எனினும் கனவுகள் பற்றிய கருத்துகள் அருமை.

    பதிலளிநீக்கு
  18. நன்றி தேனம்மை. இந்தப் பதிவு கனவுகள் பற்றி அல்ல.

    பதிலளிநீக்கு
  19. நன்றி நண்பர் கில்லர்ஜி. உங்கள் அனுபவத்தை எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க நெல்லைத்தமிழன். நீண்ட அருமையான விளக்கம்.

    //ஆன்மீகம் என்பது ஒருவரின் அனுபவம். அதை அடுத்தவர்களுக்குக் கடத்துதல் பெரும்பாலும் இயலாது//

    ஆம். உண்மை.

    யோகா மாஸ்டர் சொன்னதாகச் சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. மனைவியைக் கொன்ற கணவன் குழந்தையிடம் பேசிய ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது!!! (ஜோக்குக்கு)

    என் கேள்விக்கான பதிலாக நீங்கள் சொல்லியிருப்பதை பற்றி நான் கூட ஒரு யோகியின் சுயசரிதம் மாதிரி புத்தகங்களில் படித்துள்ளேன்.

    //கௌதமன் சார் Proof கேட்டால், புத்தகங்களைத்தான் அனுப்ப இயலும். இல்லாட்ட ரெண்டுபேரும் சேர்ந்துபோய்ப் பார்த்து முடிந்தால் உங்களுக்குச் சொல்லுகிறோம். . //

    புத்தகங்கள் அனுப்புங்கள். அது சரி, ஏன் கௌதமன் ஸார் கேட்டால்?

    //அல்லது எங்கள் பிளாக்கில் எழுதுகிறோம்//

    எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  21. நன்றி அபயா அருணா. எழுதுங்களேன் படிப்போம். உங்கள் தளத்தில் எழுதினாலும் சரி. எங்களுக்கு அனுப்பினாலும் வெளியிடுகிறோம்! :))

    பதிலளிநீக்கு
  22. வாங்க கோமதி அரசு மேடம்..

    //முன்னோர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றால் கனவில் வருவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.//

    இது மக்களை அப்படிச் செய்ய வைப்பதற்காக இருக்கலாம். அப்படி கடனை வசூல் செய்பவர்களாக எனக்கு நினைக்காத தோன்றவில்லை! :))

    ////பொதுவாக இந்துக்களில் (கேள்விப்பட்டபடி) ஒரு நம்பிக்கை//

    இருக்கலாம். இறுதி நாளில் நம் வாழ்க்கை ஒரு படம் போல மனத்திரையில் என்ன முடியாத வேகத்தில் ஓடும் என்று படித்த நினைவு. வேகமாக என்று ஏன் சொல்கிறேன் என்றால் காட்சிப் படிமங்களாக வருபவற்றை எழுத்தில் எழுதினால் மிக நீளமாகி இதை எப்படி நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி வரும்!

    //அப்பா இறந்த மாதமே அதே நாளில் இறந்து போனார்கள். //

    இப்போதைய நிலையில் என் அம்மா திதியும், அப்பாவின் திதியும் அடுத்தடுத்த நாளில் வருகின்றன. எப்படி அமைகிறது என்று நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி மிடில்க்ளாஸ்மாதவி. நீங்கள் சொல்வது உண்மை. புரியாத நாம் அவர்கள் உளறுவதாகவும், மனோநோய் என்றும் நினைத்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க பகவான் ஜி. மாறுபட்ட கருத்துகள் எல்லாவற்றுக்கும் உண்டுதானே?

    பதிலளிநீக்கு
  25. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க பானுமதி மேடம்.. பாலகுமாரனை வாசிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்களாச்சு. நீங்கள் சொல்லி இருக்கும் புத்தகம் வாங்கிப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. பானுமதி மேடம்... வானொலி, தொலைக்காட்சியில் முன்னோட்டம் போல வரும் உங்கள் கனவுகளே ஆச்சர்யம். நீங்கள் சொல்லி இருக்கும் சம்பவமும் அப்படியே. ஈ எஸ் பி பவர் என்று சொல்வார்களே.. அது போல சிலருக்கு இந்த மாதிரித் தோற்றங்கள் வருவதுண்டு போலும்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க நிஷா. நீங்கள் சொல்லி இருக்கும் கனவு சம்பவம் ஆச்சர்யம். ஆனால் இந்தப் பதிவு கனவு பற்றியதல்ல. அதே சமயம் எனக்குள் ஒரு கேள்வி. இந்த 'கனவுகள் பலிக்கும் விஷயம்' பெண்களுக்குத்தான் அதிகமோ?

    பதிலளிநீக்கு
  29. நாம் காண்பது எல்லாம் கனவுகள்தான்.
    அதற்குள்தான் அனைத்தும் நடைபெறுகின்றன.
    கனவு எது நனவு எது என்பதை அறிய மனத்தைக் கடக்க வேண்டும்.
    மனதில் நுழையாமல் அதற்கு வெளியே நின்று
    அதன் செயல்பாடுகளை உற்று நோக்கினால்தான் உண்மை புலப்படும்
    தியானத்தின் மூலம்தான் அதை செய்ய முடியும்.

    அவசர கதியில் துரித உணவு சாப்பிடும் நம் போன்றவர்களால்
    அந்த நிலை அடைவது கடினம்,
    நமக்கு எதற்கும் பொறுமை கிடையாது.
    அதுவரை எல்லோரும் கதை விட்டுக்கொண்டு காலத்தை தள்ளுவோம்.
    we know only to act and react.

    பதிலளிநீக்கு
  30. மீள் வருகைக்கும் விளக்கத்துக்கு நன்றி பட்டாபிராமன் ஸார். நீங்கள் சொல்லும் பயிற்சியில் முதுகலை முடித்தவர்களைத்தான் நாம் சித்தர்கள் என்று அழைக்கிறோம் போலும். அவ்வப்போது எனக்கு ஒரு எண்ணம் வரும். திடீரென ஒரு நாள் தூக்கத்திலிருந்து விழித்து பள்ளி புறப்படுவேன் என்று!

    பதிலளிநீக்கு
  31. பயிற்சி எதுவும் தேவையில்லை
    முயற்சிதான் தேவை.
    அது இல்லாமல் எல்லாம் வீண்
    பகவான் ரமணர் கூறியது போல்.
    எதையும் வெளியில் தேடாதே
    உனக்குள் சென்று தேடு என்கிறார்.
    யார் கேட்கிறார்கள்?

    எல்லாம் வெளியேதான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
    பலர் நம் காதில்
    பூ சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்

    நம்மை அறிய வேண்டுமென்றால்
    நாம்தான் முயற்சி செய்ய வேண்டும்.

    இதில் மற்றவர்களின் பங்கு ஒன்றும் வேலை செய்யாது

    இந்த உலகம் உங்களை முயற்சி செய்ய விடாது.

    ஆனாலும் நாம் தினமும் சிறிது நேரமாவது
    சிறிது சிறிதாக முயற்சி செய்தால்
    சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல்
    ஒருநாள். அது நிச்சயமாக நமக்கு வேண்டியதை தரும்.

    இது என் அனுபவ உண்மை.

    பதிலளிநீக்கு
  32. உண்மை என்றே சொல்வேன்..... நான் பார்த்ததில்லை, பேசியிருக்கிறேன், Ouija board மூலியமாக

    பதிலளிநீக்கு

  33. கனவு
    அதெப்படி நிகழும்!
    நாம் ஓய்வாக உள்ள போதும்
    நாம் தூங்கிக் கொள்ளும் போதும்
    மூளை மீளத் தொடக்கத்திலிருந்து இயங்கும்
    (அதாவது, கசற்றை ரிவைன் செய்த பின் பிழே பண்ணுவது போன்று)
    எமது உள்ளத்தில் பதிந்தவை
    மீள வாசிக்கப்படும் போது
    உணர்ச்சி வசப்பட்டவை வரும் வேளை
    நாம் உணர்ச்சி வசப்படுவோம் - பின்
    விழித்துக் கொள்வோம் - இதனை
    கனவு எனலாம்.

    கனவில்
    அது, இது, உது
    அவர், இவர், உவர்
    வந்ததென்றால்
    ??????????

    பதிலளிநீக்கு
  34. மீள் வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி பட்டாபிராமன் ஸார்.

    பதிலளிநீக்கு
  35. நன்றி ஹேமா. உங்கள் அமானுஷ்யத் தொடரை ஏன் நடுவிலேயே நிறுத்தி விட்டீர்கள்? தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  36. மீள் வருகைக்கு நன்றி ஹேமா. உங்கள் கேள்வி நெல்லைத்தமிழனுக்குத்தானே?

    பதிலளிநீக்கு
  37. எங்கள் வீட்டிலும் இதுபோல ஒரு வயதானவர் உண்டு. எப்போதுமே 35 ஆம் வருடம், 44ஆம் வருடம் என்று தான் பேசிக்கொண்டிருப்பார். இது 2017 என்பது அவருக்கு நினைவிருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கும். உங்கள் வீட்டிலிருப்பவர் இன்னும் கொஞ்சம் முன்னேறி அந்தக் காலத்தில் இருந்தவர்கள் எப்போது தன்னுடன் வந்து பேசுவதாகக் கூறுகிறார் போலிருக்கிறது.

    ஒருகாலகட்டத்தில் இந்த முதியவர்களை வீட்டிலிருப்பவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள். அதனால் அவர்கள் தங்களது பழைய நினைவுகளில் வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. பாவம்! மற்றபடி இது உண்மையா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  38. ஒரு சின்ன திருத்தம் //இப்போது வந்து தன்னுடன் பேசுவதாகக் கூறுகிறார்// என்று இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ரஞ்சனி மேடம்..

    //ஒருகாலகட்டத்தில் இந்த முதியவர்களை வீட்டிலிருப்பவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள். அதனால் அவர்கள் தங்களது பழைய நினைவுகளில் வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.//

    இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் அப்படி அல்ல. ஒவ்வொரு கணமும் அவரோடு யாராவது இருந்துகொண்டே இருப்பார்கள். பேசிக் கொண்டே இருப்பார்கள். சாப்பிடும்போது எல்லோருடனும் சேர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்துதான் சாப்பிடுவார்.

    பதிலளிநீக்கு
  40. @ஹேமா(HVL)
    இமய குருவின் இதய சீடன் - ஒரு யோகியின் சுய சரிதம் - ஶ்ரீ எம் - தமிழாக்கம் டாக்டர் பி.உமேஷ் சந்தர் பால் - மஜன்டா பதிப்பகம் - ரூ 360 - தவற விடக் கூடாத புத்தகம். என்னிடம் உள்ள புத்தகங்களிலே ரொம்பப் பிடித்த புத்தகம். தியானம் ஆன்மீகம் போன்றவற்றைத் தொடுகின்ற, அதில் தேர்ச்சிபெற்ற வாழும் யோகியின் தன் வரலாறு. ஒரிஜனல் ஆங்கிலப் புத்தகம் 500 ரூ - ஆன்மீகம் யொகா தியானம் சமய எண்ணத்தை மீறிய கடவுள் இவைகள் பிடித்தவர்கள் கண்டிப்பாகப் படிக்கலாம்
    இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா- கண்ணதாசன் பதிப்பகம் - தமிழில் புவனா பாலு - 280 ரூ- இதுவும் சிறப்பான புத்தகம்
    ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் - யோகசுதா சத்சங்க சொசைட்டி வெளியீடு- 175 ரூ - இந்தமாதிரிப் புத்தகங்களின் ஆரம்ப நூல் - கொஞ்சம் அந்நியமாகத் தெரிந்தாலும் நிறைய தெரிந்துகொள்ளலாம்.
    இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்- ஹோல்கர் கெர்ஸ்டன் - தமிழில் உதயகுமார்- கண்ணதாசன் பதிப்பகம் - 200 ரூ - இமயமலை காஷ்மீர் சம்பந்தமாகவும் தெரிந்துகொள்ளலாம்
    மேற்கூறிய எல்லாப் புத்தகங்களும் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டாலும் consistencyஐ maintain செய்கின்றன. இதுவே இவைகளின், உண்மைத் தன்மைக்குச் சாட்சி. மூன்று சமயத்தையும் இப்புத்தகங்கள் தொடுகின்றன. சமயமற்ற இறைவனை அறிய ஏதுவாகும். புத்தகங்களை என்னுடைய விருப்பத்தேர்வின் வரிசையில் எழுதியுள்ளேன்.
    இதைத் தவிர லிட்டில் ஃப்ளவர் கம்பெனியின் ஶ்ரீமகா பக்த விஜயம் - தொகுத்தவர் குகப்ரியை- 11 வயதில் படித்த புத்தகம்- இப்போதும் படிப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  41. ஆப்பிள் நிறுவனர் தன்னுடைய நல்லடக்கத்திற்கு நேரில் வந்தவர்களுக்கு ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தைப் பரிசளிக்குமாறு ஏற்பாடு செய்திருந்தார். அவர் தினமும் இந்தப் புத்தகத்தைப் படிப்பாராம்.
    முதல் புத்தகம் தமிழக கேரள யோகிகளைப் பற்றியும் சொல்கிறது. அதில் ஒருவரான குமரியைச் சேர்ந்த மாயி மா என்னும் பெண் துறவியைப் பற்றி, இளையராஜா வீட்டிற்கு (சென்னை) பலமுறை வந்திருந்ததைப் பற்றியும், முயற்சி எடுத்து அவர் வீட்டுக்கு எம்ஜயார் ஜானகி இருவரும் மாயிமாவைத் தரிசிக்க வந்தபோது தரிசனம் பெறும் விதியில்லாத்தால் சிறிது நேரம் முன் இளையராஜா வீட்டிலிருந்து சென்றுவிட்டதையும் பிறிதொரு புத்தகத்தில் (வணக்கம்-வலம்புரி ஜான்-நக்கீரன் பதிப்பு) படித்த ஞாபகம்

    பதிலளிநீக்கு
  42. Vedios of Swami Rama available on internet on meditation.
    wonderul simple explanation,practical tips.
    those who are interested can see and practice his teachings.

    பதிலளிநீக்கு
  43. சுவாரஸ்யமான பதிவு! பொதுவாக இறந்தபின்பு ஆன்மாக்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் வரும் என்பது நம்பிக்கை! இறப்புக்கு பின் உயிர் என்ன ஆகிறது என்பதை பற்றி சொல்லும் நம் ஜீவனது கதாகதி என்றதொரு நூலில் ஸ்தூல சரீரம் நெருப்பு பற்றி எரியும் போது ஆன்மாக்கள் அழுது புலம்பும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உயிரோடு இருக்கையில் பிரியமாக இருந்த வஸ்துக்களை இறந்த பின்பும் ஆன்மாக்கள் விரும்பும். இதை நம்புகின்றேன். நேரில் சந்திக்கையில் விரிவாக பேசுவோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  44. ஸ்வாரஸ்யம்..... சில விஷயங்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை. இவையும் அதே விதத்தில்....

    பதிலளிநீக்கு
  45. தளிர் சுரேஷ்-சாப்பிட்டபின்பும் நம் நாசியில் உணவின் மணமும் தன்மையும் கொஞ்ச நேரம் மிஞ்சி இருப்பதப் போல, ஒரு உறவினரை நெடு'நாள் கழித்துச் சந்தித்தபின், அவர்களைப் பற்றிய எண்ணம் மனதில் தளும்புவதைப் போல, இறந்தபின்னும் ஆன்மா, தான் பழகிய வசித்த இடங்களை விட்டுப் பிரிய கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்கிறது. அதனால்தான் அந்த ஆன்மாவுக்கு நம்முடைய கடனைச் செலுத்துகிறோம் (இறந்த உடனே.. அப்புறம் சில சமூகங்கள் நிறைய காலத்துக்கு). ஆன்மாவை உலகியலிலிருந்து முற்றிலும் விலக்கிவிடத்தான் எரித்தல் என்ற ஏற்பாடு பல இந்திய சமூகங்களில் இருக்கிறது. (based on belief). ஆனால் நியதி (ஆன்மாவின்), அது உடலை நீங்கியவுடன், அதனோடு தொடர்பு உள்ள எல்லாவற்றையும் நீக்குதல்வேண்டும். (இதைத்தான் தாமரை இலைத் தண்ணீர் மாதிரி உலகில் ஒழுகவேண்டும் என்றது கீதை).

    இந்த டாபிக் நிறைய சந்தேகங்களையும், நிறைய ஆச்சர்யங்களையும் உள்ளடக்கியது.

    பதிலளிநீக்கு
  46. சுவாரசியமான பதிவு. கனவா, நனவா என்று புரியாத குழப்பமான மனோநிலைகள் எனக்கு அதிகம் ஏற்பட்டதில்லை! ஏனெனில் காணும் கனவுகளே நினைவில் தங்குவதில்லை. போன ஜன்மத்து ஞாபகங்கள் மட்டும் தான் வருகின்றன. (ஹிஹிஹிஹி, இது நம்ம ரங்க்ஸ் அடிக்கடி சொல்வது) :)))))

    பதிலளிநீக்கு
  47. எங்க பொண்ணு கல்யாணம் ஆகிப் போனப்புறமா எனக்கு அடிக்கடி அவள் கூப்பிடறாப்போலேயே குரல் காதில் விழும்! :) அதே போல் பையர் குரலும்! வெளியே சொல்லி இருந்திருந்தேன் என்றால் எனக்கு schizophrenia அப்படினு சொல்லி இருப்பாங்களோ! :)))))

    பதிலளிநீக்கு
  48. எல்லாம் அவன் செயல் என்பது போல் எல்லாம் நம் மண்டையோட்டிற்குள் இருக்கும் கையளவு மூளையின் இயக்கமே! அதில் உள்ள நியூரான்களின் இயக்கமே....ஹாலுசினேஷன்ஸ், இல்லுஷன்ஸ் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!