செவ்வாய், 29 நவம்பர், 2016

கேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம்


     எங்களின் இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை'ப் பகுதியில்  வயதிலும் பதிவுலகிலும் மூத்த பதிவர்களில் ஒருவரான திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் கதை இடம் பெறுகிறது.

     அவர்கள் தளம் எண்ணங்கள்.

     கண்ணனுக்காக, சாப்பிடலாம் வாங்க, பேசும்பொற் சித்திரமே, என் பயணங்களில், ஆன்மீகப் பயணம் என்று பல்வேறு தளங்களுக்குச் சொந்தக் காரர்.  நகைச்சுவை உணர்வு மிக்கவர்.  ஆன்மீக விஷயங்களில் கில்லாடி.  அதில் மட்டுமா?  சமையல் விஷயத்திலும் இவரை அடித்துக் கொள்ள முடியாது!  பெருமையும், நட்புணர்வும் மிக்க எங்கள் வாசகிகளில் ஒருவர்.  எங்களின் எல்லாப் பதிவுகளையும், எதையும் மிஸ் செய்யாமல் இவர் எங்களை ஊக்குவிப்பதில் முதலிடத்தில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

     இவர் கதை எதுவும் எழுதியதாய் எனக்கு நினைவில்லை.  எனினும், இவரிடமிருந்து கதை எழுதி  வாங்காவிட்டால் எப்படி என்று விடாமல் அவரை நச்சரித்ததில், பார்த்தால் ஏற்கெனவே ஒன்று எழுதி இருக்கிறார்!

     கேட்டு வாங்கிட்டோம்ல....!

     அவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவர் எழுதிய கதை...


===================================================================


எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் நம்மளைப் பத்தித் தெரிஞ்சுதான் கதை கொடுங்கனு கேட்கலைனு நினைச்சால்!  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விடலை! விடாக்கண்டன் கொடாக்கண்டனாகக் கதை, கதைனு புலம்பல்.  நமக்கோ மேல் மாடி காலி!  என்னத்தை எழுதறது!


இது ஏற்கெனவே முன்னர் ஒரு பதிவாக எழுதி ஜீவி சார் கூடப் பாராட்டி இருந்தார்.  'ஆஹா'னு இதைப் பத்தி நினைவில் வரவே ஒரு சில திருத்தங்களுடன் ஶ்ரீராமுக்கு அனுப்பி  வைச்சிருக்கேன்.  இனி அவர் பாடு, உங்க பாடு!  பெரிசாக் கருத்துகள் எதையும் எதிர்பார்க்கலை.  சட்டியில் ஏதும் இல்லாதபோது அகப்பையில் என்ன வரும்?  ஆகவே யாரும் எதுவும் சொல்லலைனாக் கூட வருத்தம் இல்லை!


================================================================

டிஸ்கி:  சில பல பழைய விஷயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தப்போ கிடைச்ச ஒரு விஷயத்தைக் கதை மாதிரி, கவனிக்கவும், கதை மாதிரிதான். ஆக்கி இருக்கேன்.


பெரிய டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கி:  ஹிஹிஹி, இது மலரும் நினைவுகள் இல்லை.


================================================================



அப்பாவின் கம்பீரம்!
கீதா சாம்பசிவம்


அப்பாவைப் பார்த்தாலே எங்களுக்கு நடுக்கம் தான்.  தொலைவில் வரும்போதே தெரிந்து விடும்.  இன்னிக்கு என்ன மூடில் வராரோனு பயமாவும் இருக்கும்.  யார் மாட்டிப்பாங்களோனு நினைப்போம்.  அநேகமா அம்மா தான் மாட்டிப்பா.  அம்மாவை அப்பா உண்டு, இல்லைனு பண்ணிடுவார்.  அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு தூசி கூட அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது;  நகரவும் கூடாது.  சமையலறையில் கூட அம்மா ஒரு பாத்திரத்தைத் தன் செளகரியத்துக்கு ஏற்ப இடம் மாற்ற முடியாது.  அப்பா கத்துவார்.  அந்தப் பாத்திரம் முன்னிருந்த இடத்துக்கு வரும் வரையிலும் விட மாட்டார்.  ஒரு விதத்தில் பிடிவாதம்னு தோன்றும் இது இன்னொரு விதத்தில் சாமான்களை வைச்ச இடத்தில் வைக்கத் தானே சொல்கிறார்னும் தோணும்.  அம்மா என்ன இதுக்குப் போய் அலட்டிக்கிறானும் நினைச்சுப்பேன்.

எங்கள் அனைவரையும் அடக்கி ஆளும் அப்பாவின் சாமர்த்தியத்தையும், கம்பீரத்தையும் நினைச்சால் கொஞ்சம் பெருமிதமாக இருக்கும்.  அவருக்கு அடங்கிப் போகும் அம்மாவை நினைச்சால் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும்.  அப்பா சொல்வது தான் சரி; செய்வது தான் சரி;  இந்த எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததுனு சொல்லலாம்.  அம்மாவிடம் அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு அடங்கித் தானே போறா என்ற அலக்ஷியமும் இருந்தது.  ஒரு தரம் அம்மா கிட்டேக் கேட்டேன். "நீ பெரியவளா? அப்பா பெரியவரா?

"சந்தேகமே இல்லாமல் அப்பாதான் பெரியவர். என்னை விட வயசிலேயும் பெரியவர்! இந்தக் குடும்பத்தை அவர் தானே கவனிச்சுக்கிறார்!" 

"அப்போ நீ?"

"அப்பாவுக்கு அப்புறம் தானே நான்!" சகஜமான குரலில் தான் அம்மா சொன்னாள்.

"ஆனால்..... மாதா, பிதா,குரு, தெய்வம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னும் படிக்கிறேனே.  என்னோட படிக்கிற எல்லாருமே அவங்க அவங்க அம்மாவைப் பத்தித் தான் பேசறாங்க.  இங்கே சமையல் கூட அப்பா சொல்றது தான் நீ செய்யறே. எங்களுக்கும் செய்து கொடுக்கிறே!  ஏன் அப்படி?"

"ஏன்னா, அப்பா ஒருத்தர் தானே நம்ம வீட்டிலே சம்பாதிக்கிறார்.  அதான்."

"என்னோட நண்பர்கள் வீட்டிலேயும் அவங்க அவங்க அம்மா சும்மாத் தான் வீட்டிலே இருக்காங்க.  எல்லாரும் வேலைக்குப் போகறதில்லை."

"என் கண்ணே," என அணைத்துக் கொண்ட அம்மா, பதிலே சொல்லவில்லை. எனக்கு என்னமோ எதுவும் புரியவில்லை. ஆனாலும் அம்மா மேற்கொண்டு விளக்கவில்லை! அக்கம்பக்கம் உள்ளவர்கள் கூட எல்லாம் சகஜமாக சந்தோஷமாகச் சிரித்துக் கொண்டு பேசும் அப்பா வீட்டில் மட்டும் ஏன் இப்படி இருக்கணும்! அதான் எனக்குப் புரியாத புதிர்! அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் எங்க அப்பா இப்படினு சொன்னால் நம்பக் கூட மாட்டாங்க! ஆனால் அம்மா சொல்வதை மட்டும் கேட்கும் அப்பாவாக அவரை நினைத்தும் பார்க்க முடியவில்லையே! எதுவானாலும் அப்பாதான் முடிவு செய்யணும்! நாங்கல்லாம் லீவுக்குத் தாத்தா வீட்டுக்குப் போறதுனாலும், சரி, தீபாவளிக்குப் பண்ணின பக்ஷணத்தைத் தின்பதாக இருந்தாலும் சரி, அப்பாவின் உத்தரவு இல்லாமல் முடியாது! சர்வ வல்லமை படைத்தவர் நம்ம அப்பா! இவரை மாதிரி மத்த அப்பாக்களெல்லாம் இல்லை! அவங்கல்லாம் அசடுனு நினைச்சுப்பேன். 

அன்று சாயங்காலமாக அலுவலில் இருந்து வந்த அப்பா காபி சரியில்லை என ஒரு பாட்டம் அம்மாவோடு சண்டை போட்டார்.  இது கூடத் தெரியாமல் என்ன பொம்மனாட்டி! என்ற வழக்கமான கத்தல்.  பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார்.  வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார்.  அம்மாதான் அழுது கொண்டிருப்பாள்.  அப்பா அதையும் லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை.  அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் "எங்க அப்பா தான்!" என்று அடித்துச் சொன்னேன்.  அதற்கான காரணங்களையும் கூறினேன்.  பக்கத்து வீட்டு கோபு சிரித்தான்.  "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!" எனச் சீண்டினான்.  எனக்கு வந்த கோபத்தில் அவனோடு "டூ" விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

ராத்திரி ஏழு மணி இருக்கும்.  அம்மா கொல்லையிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  திடீர்னு ஒரு அலறல்.  "என்னம்மா, என்ன கொஞ்சறியா?  என்ன அங்கே சப்தம்?" அப்பா கடுமையாகக் கேட்க, அம்மா, "ஒரு பெருச்சாளி, எப்படியோ சமையலறையில் புகுந்திருக்கு.  அது காலில் ஏறிடுத்து.  கத்தவே எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டிருக்கு."  என்றாள்.

அப்பா திடுக்கிட்ட குரலில், "என்ன பெருச்சாளியா?" என்றார்.

"ஆமாம், அப்படித் தான் இருந்தது."

"சரியாச் சொல்லித் தொலை;  நிஜம்மா பெருச்சாளியா?"

"ஆமாம், ஆமாம், இதோ மறுபடி வெளியே வரப் பார்க்கிறது.  அடுப்பு மேடைக்குக் கீழே போய் ஒளிஞ்சிட்டு இருக்கு."

அப்பா படபடவென எங்களை எல்லாரையும் அழைத்தார்.  நாங்க வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள், அப்பா இப்போ அதை அடிக்கப் போகிறார்;  குறைந்த பக்ஷமாக அதை விரட்டவாவது முயற்சி செய்வார் என நினைத்துக் கொண்டு, "என்ன அப்பா, உனக்கு நாங்களும் உதவி செய்யட்டுமா?" எனக் கேட்டோம்.  அப்பா எவ்வளவு கம்பீரமானவர்!   அம்மாவையும் அடக்கி ஆள்பவர்.  இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்காது.  அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம்!  விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார். அவரைக் கேட்காமல் இந்தப் பெருச்சாளி உள்ளே வந்ததற்கு இன்னிக்கு அதுக்கு இருக்கு மண்டகப்படி! இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டு தம்பியிடமும் மெதுவாகச் சொன்னேன். 

"பார், இப்போ வேடிக்கையை! அப்பா அந்தப் பெருச்சாளியை ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் பார்க்கப் போகிறார்!" என்றேன் பெருமையுடன். அப்பா மறுபடியும் எங்களை எல்லாம் அழைக்கவே எங்களையும் அம்மாவையும் உள்ளே உட்கார்த்தி வைத்துவிட்டுப் பெருச்சாளியோடு யுத்தம் செய்யப் போகிறார் என்று மகிழ்ச்சியுடன் சென்றேன். கூடவே அண்ணாவும், தம்பியும். 

நாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார்.  எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன்.  கிட்டத்தட்ட நடந்ததும் அதுவே.  ஆனால் அப்பாவும் கூடச் சேர்ந்து எங்களோடு உள்ளே வந்துவிட்டார்.  கம்பு ஏதானும் தேடறாரோனு நினைச்சேன்.  இல்லை; கம்பெல்லாம் தேடலை. கதவை அழுத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுக் கீழே சுவர் ஓரத்தில் ஓட்டைகள் ஏதும் இல்லையேனு பார்த்துக் கொண்டார். பாதுகாப்பாக ஓர் மூலையில் போய் நின்று கொண்டார். எங்களையும் ஓரமாக உட்காரச் சொல்லிக்  கட்டளை இட்டார்.  பின்னர்  இங்கிருந்தே அம்மாவுக்குக் குரல் கொடுக்கிறார். 

"மெதுவா அந்தப் பெருச்சாளியை விரட்டப் பாரு.  உன்னால் முடியலைனா அக்கம்பக்கம் யாரையானும் அழைச்சுக்கோ.  நான் இங்கே குழந்தைங்களை பத்திரமாப் பார்த்துக்கறேன்."

கடவுளே, இதுவா என் அப்பா? இதையா நான் எதிர்பார்த்தேன், ஜன்னல் வழியாக அம்மா என்ன செய்கிறாளோ என்று கவலையுடன் பார்த்தேன். அங்கே அம்மா எதுக்கும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால்........

அம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான (?) சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.

அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.

44 கருத்துகள்:

  1. ஹாஹா.... ஒரு பெருச்சாளி அப்பாவின் கம்பீரத்தை பிசுபிசுக்க வைத்துவிட்டதே....

    பதிலளிநீக்கு
  2. சூப்பர். அம்மாவின் புன்னகை ரொம்பப் பிடிச்சது. கீதா ஹாட்ஸ் ஆஃப்.

    பதிலளிநீக்கு
  3. மேல் மாடி காலியானவர் எழுதிய கதையா இது
    அருமை
    அருமை
    தம+1

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை. நல்ல நடை. மேல்மாடி காலியில்லை.
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. அம்மாவின் முகத்த்தில் பூத்த புன்னகை, மிக சிறப்பு.

    பாராட்டுக்கள் கீதா மேடம். கதையைப் பகிர்ந்த திரு ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றிகள்.












    பதிலளிநீக்கு
  6. வயதில் மூத்த பதிவர் என்று என்னைக் குறிப்பிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :))))) ஹூம், இணைய உலகிலேயே ஒரே குழந்தை நான் தான் என்பதை மறந்து விட்டீர்களோ? :)

    பதிலளிநீக்கு
  7. கீதா மேடம்.. கதை நல்லாருந்தது. அம்மாவை அடக்குவதால் அப்பா வீரமிக்கவர் என்று நினைத்தது குழந்தையின் தவறுதானே.

    பொதுவாக கோபம் என்பது நேர்மையின், பயத்தின், கையாலாகாத்தனத்தின் விளைவாகத்தான் இருக்கும். Confidence இருக்கும் இடத்தில் தேவையில்லாத கோபம் இருக்காது. Gas Leak, Cylinder மாத்தறது எத்தனை ஆண்பிள்ளைகளால் செய்யமுடியும் (Comparitively). பெண்கள்தான் தைரியம் மிக்கவர்கள். அவர்கள் மிகச் சிறிய விஷயங்களுக்குத்தான் (பல்லி, கரப்பான், எலி போன்றவை) பயப்படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை...

    இவ்வளோ அருமையான கதை எழுத்திய நீங்களே மேல் மாடி காலி னு சொன்ன...அப்போ நாங்க..?????

    பதிலளிநீக்கு
  9. அம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான (?) சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.

    அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.//

    அருமை.

    பதிலளிநீக்கு
  10. என்னுடைய முன்தலைமுறை, வீட்டு எஜமானர்கள் இப்படித்தான் இருந்தார்கள். ஏன் என் அப்பாவும் இப்படிதான் இருந்தார். உறவினர்கள் வீட்டுக்குப்,போக,பேசக் கூட பர்மிஷன் இல்லாது முடியாது. காசு என்பது மனைவிக்கு என்னவென்றே தெரியாது.
    என்னசெய்வதனாலும் கேட்டுச் செய்யவேண்டும். பதில் பேசியேப் பார்த்ததில்லை.ஆனால் அதையும் ஸகஜமாக ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட அம்மாக்கள்தான் அனைவரும். மற்றபடி வீரதீரத்தில் கோழையாகப் பார்க்கவில்லை. எல்லாம் கலந்த மனிதர்கள்தானே. அந்தக்கால வீட்டுத் தலைவர்கள்,ஏன் அப்பாவின் ஞாபகமும் வந்தது. நீங்கள் கதையாக எழுதியிருக்கலாம். அந்தக்கால அப்பாக்கள் ஞாபகம் படிக்கும்போதே மனதில் வந்து விட்டார்கள். இந்தக்காலத்திலும் அதிகாரம் தன்கையில்தான் என்று சொல்லும் மனிதர்களையும் பார்க்க முடிகிறது. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. இப்பவும் பாராட்டுகிறேன். முன்னே படித்தது இப்போ நினைவில்லாததும் நல்லதுக்குத் தான். இப்போ படிச்ச சூட்டில் மனசில் தோன்றுவதை எழுதலாம் இல்லையா?..

    நிதானமா அப்பாவின் 'கம்பீரத்தை'ப் பத்தி சொன்ன கதை. அம்மாவிடம் போடும் சண்டைகளிலாகட்டும், அவருக்கே உரிய தாம்- தூம்களிலாகட்டும் துளிக்கூடக் குறையே வைக்காமல் வெகு நிதானமாக விவரித்திருக்கிறீர்கள். கடைசி வரை எந்த அவசரமும் படாமல், அப்பாவின் கம்பீரத்தைத் தான் சாய்க்கப் போகிறீர்கள் என்று வாசிக்கும் எங்கள் சிந்தனைக்கு லவலேசமும் இடம் கொடுக்காமல் தேர்ந்த எழுத்தாளர் லட்சணங்களோடு கதையை நகர்த்திச் சென்று தடாலடியாக ஒரு பெருச்சாளியைத் துணைக்கு அழைத்து
    அப்பாவின் கம்பீரத்தை துவம்சம் செய்தது, அம்மாவின் கம்பீரத்தை நிலைநாட்டியது எல்லாம் சும்மா சொல்லக்கூடாது, அழகாக இருந்தது. குழந்தைகளின் பார்வையில் கதை சொன்னதும் அழகு.

    முக்கியமாக நமக்குத் தெரிந்திருக்கும் கீதா சாம்பசிவம் என்பவர் எங்கே போனார் என்று மலைக்க வைக்கிற அளவுக்கு ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கதையில் அவர் தலைகாட்டவே இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று. இவ்வளவு திறம்யைடன் அவர் தன்னை தன் கதையில் மறைத்துக் கொண்டது நினைத்துப் பார்க்கவே நம்பமுடியாமல் இருக்கிறது. அடிக்கடி இப்படி கதைகள் எழுத மாட்டாரா என்று வாசிக்க ஏங்க வைக்கிறது. தம்மாதுண்டு சமாச்சாரம் தான். இருந்தும் கதையை எழுத்தில் நகர்த்திச் சென்ற விதம் தான் பிரமிப்பூட்டுகிறது.

    இவர் சித்தப்பா எழுதிய 'எலி' கதையை என்னால் மறக்கவே முடியாது. அது மாதிரி இப்போ இவர் எழுதியிருக்கிற 'அப்பாவின் கம்பீரம்'. வாழ்த்துக்கள், கீதாம்மா!

    பதிலளிநீக்கு
  12. //நாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார். எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன்.//

    இந்த இடத்தினைப் படிக்கும் போதே மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என என்னால் யூகித்துக் கொள்ள முடிந்தது.

    ” ‘எலி’ஸபத் டவர்ஸ் “ என்ற என்னுடைய முழுநீள நகைச்சுவைக் கதையின் ஆரம்பமே இந்தக்கதையின் முடிவு வரிகள் தானே :)))))

    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-36.html


    பலர் வீடுகளிலும் சர்வ சாதாரணமாக நடைபெறும் மிகவும் அருமையான + யதார்த்தமானதொரு சிறுகதை.

    எழுதியுள்ள கதாசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    வெளியிட்டுப் படிக்க உதவிய ‘எங்கள் ப்ளாக்’குக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மீதிக்கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களே

    பதிலளிநீக்கு
  14. http://sivamgss.blogspot.in/2012/09/blog-post_10.html
    இது நான்கு வருடங்கள் முன்னர் எழுதினது! :)))) அதிகம் மாற்றவில்லை. ஆங்காங்கே ஓரிரு வார்த்தைகள் மட்டும்!

    பதிலளிநீக்கு
  15. வாங்க வெங்கட், மிக்க நன்றிப்பா!

    பதிலளிநீக்கு
  16. கரந்தை ஜெயக்குமார், உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. செந்தில் குமார், பெருந்தன்மையுடனே நீங்களும் பாராட்டி இருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. ராஜலக்ஷ்மி, மிக்க நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  19. நெல்லைத் தமிழன், கோபம் குறித்த உங்கள் பார்வை பொதுவானது என்றே எண்ணுகிறேன். காரணமே இல்லாமல் கோபம் கொள்பவர்களையும், தான் ஒருத்தன் தான் வீட்டில் சம்பாதித்துப் போடும் ஆண்மகன், தனக்கே முதல் உரிமை என்று மனைவி முதல் குழந்தைகள் வரை அடக்கி ஆளும் ஆண்களை நீங்கள் பார்த்ததில்லை என எண்ணுகிறேன். :( நீங்கள் பார்க்கும் கோணத்தில் நான் பார்க்கவில்லை. என்றாலும் இப்படியும் கோவிக்கலாம் என்பது மட்டும் புரியும். :)

    பதிலளிநீக்கு
  20. அனுராதா ப்ரேம், ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கோமதி அரசு, ரொம்ப நன்றி ரசனைக்கு!

    பதிலளிநீக்கு
  22. காமாட்சி அம்மா, இப்படி ஒருவர் இருந்திருக்கிறார். :)

    பதிலளிநீக்கு
  23. ஜீவி சார், வ.வா.பி.ரி. ரொம்ப நன்றி மீண்டும் ரசித்தமைக்கும் பாராட்டுக்களுக்கும், ஊக்கம் கொடுப்பதற்கும்.

    பதிலளிநீக்கு
  24. வைகோ சார், விரிவான உங்கள் கருத்துரையை ரசித்தேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. //நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மீதிக்கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களே//

    புரியலையே ஜிஎம்பி சார், எப்போக் கேட்டீங்க? மீதிக்கதைனா கதையின் இன்னொரு பகுதி எங்கே? குழப்பம்! :))))

    பதிலளிநீக்கு
  26. அவ்வ்வ்... இங்கேயுமா பெருச்சாளி.....!!!! :-(

    நான்கைந்து வருடமாக இருக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில் அவ்வப்போது பல்லி தென்படுவதால், வாசற்கதவை மறந்துகூட திறந்து போட மாட்டேன்.... ஆனா, பேரதிர்ச்சியாக, முதன்முதலாக நேற்று ஒரு பெருச்சாளி தென்பட்டது.... அதுவும் என் சமையல் வாசத்தால் (ம்க்கும்...) ஈர்க்கப்பட்டோ என்னவோ, சமையலறை ஜன்னல் பக்கமே அதிகம் தென்பட்டது.... இப்பவும்கூட பயந்து நடுநடுங்கிப் போய் இருக்கிறேன்........ அதை அடிப்பதற்கு அந்நேரம் வீட்டில் யாருமே இல்லை... வந்தபிறகு அதைக் காணோம்... ஆனாலும், திரும்பி வருமோ (வாசம் பிடித்துகொண்டு போயிருக்கிறதே... மறுபடி மோப்பம் பிடித்துக் கொண்டு வராதா என்ன...) இப்படியெல்லாம் கண்டதையும் கற்பனைச் செய்துகொண்டு நடுங்கிக் கொண்டு இருந்தவள், இங்கே வந்தாவது அதை மறக்கலாம் என்றால்... இங்கேயும் அதே பெருச்சாளி கதை!!

    அதுலயும்.... //அவர்கள் மிகச் சிறிய விஷயங்களுக்குத்தான் (பல்லி, கரப்பான், எலி போன்றவை) பயப்படுவார்கள். // இப்படி ஒரு பாராட்டுரையும் கூட.... எலியெல்லாம் சின்ன விஷயமா....??? அவ்வ்வ்வ்....

    :-))))))

    இந்த ஆண்கள் எல்லாம் பல்லி, கரப்பான், எலி போன்றவைகளுக்குப் பயப்படாததற்கு அல்லது பயப்படாதது போல நடிப்பதற்குக் காரணமே, அதை வைத்து(தான்) பெண்களை மிரட்ட முடியும் என்பதாலேயே, இல்லையா?? :-))))))

    இந்தக் கதையிலும் கணவரை மிரட்ட, மனைவிக்கு ஒரு வழி கிடைத்ததே என்று ஒரு நிம்மதி!!

    பதிலளிநீக்கு
  27. ஒரு வேளை,இதுவும் "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!"என்று சொன்ன கோபுவின் வேலையாய் இருக்குமோ :)

    பதிலளிநீக்கு
  28. நீங்கள் லிங்க் கொடுக்கவே, ஒரு ஆர்வத்தில் போய்ப் பார்த்தேன்

    அப்பொழுது நான் கொடுத்திருந்த பின்னூட்டம்:

    எழுத்தில் கூட ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். அந்த அரக்கப் பறத்தல் அவசரம் இல்லை. நிதானமாக, நேர்த்தியாக, அனுபவித்து.. சொல்லிக் கொண்டே போகையில்,நான் வெறும் கதை சொல்லி இல்லை, எழுத்தாளராக்கும் என்று தெரியப்படுத்துகிற, 'நேக்' தெரிஞ்சு அங்கங்கே புகுத்திய உரையாடல் வேறு. !
    =============
    செப்.1912-ல், நான்கு வருடங்களுக்கு முன் கூட கிட்டத்தட்ட இப்பொழுது கொடுத்திருக்கிற மாதிரியேயான
    காமெண்ட்டையே கொடுத்திருக்கிறேன் என்பது ஆச்சரியமான உண்மையாக இருந்தது. ரசனையில், அளவுகோல்களில் மாற்றமே இல்லை! :))

    பதிலளிநீக்கு
  29. அப்பாவின் கம்பீரம் ஒரு பெருச்சாளியின் முன் காணாமல் போய்விட்டதே!
    பலவருடங்களுக்கு முன் நான் படித்த ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது உங்கள் கதையைப் படித்தவுடன். ஒருவர் மேடையில் 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்று வீராவேசமாகப் பாடிக்கொண்டிருக்கிறார். மேடையில் ஓரத்திலிருந்து ஒரு எலி வருகிறது. பாடிக்கொண்டிருந்தவர் ஒரு துள்ளுதுள்ளி மேசையின் மேல் ஏறிக்கொண்டுவிடுகிறார். உடம்பெல்லாம் நடுங்குகிறது! வானிடிந்த போதும் கலங்காமல் இருக்கும் சிலர் எலிக்கு (உங்கள் கதையில் பெருச்சாளி!) பயப்படுவார்கள்.

    ஒரேஒரு கேள்வி மனதிற்குள் குடைகிறது. கேட்டுவிடுகிறேன்: பெண்டாட்டியை விரட்டுவது கம்பீரமா?

    பதிலளிநீக்கு
  30. தலைப்பென்னவோ 'அப்பாவின் கம்பீரம்' என்றாலும் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சுவாரஸ்யமான நடையில் அம்மாவின் கம்பீரத்தை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  31. ஒரு சிறு கதையில் எத்தனை பெரிய விஷயத்தை அனாயசமாக சொல்லி விட்டீர்கள்! பாராட்டுகள்.

    இந்த விஷயத்தில் எனக்கு நிஜ அனுபவம் உண்டு. மஸ்கட்டில் இருந்த பொழுது ஒரு முறை எங்கள் வீட்டு சமையல் அறைக்குள் எப்படியோ ஒரு பெருச்சாளி வந்து புகுந்து விட்டது. என் கணவர் ஹாலில் நின்று கொண்டு ஆ... ஊ... என்று சத்தம் போட, என் அண்ணா வேடிக்கை பார்க்க அந்த பெருச்சாளியை கொன்ற வீர தமிழ்ப் பெண் நான்! ஹும்! புலியை துரத்தத்தான் ஆசை, என்ன செய்வது எனக்கு வாய்த்தது எலிதான்.

    பதிலளிநீக்கு
  32. ஹூசைனம்மா, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. பலமுறை வியந்திருக்கிறேன். இப்போவும். :)

    பதிலளிநீக்கு
  33. பகவான் ஜி இருக்கும் இருக்கும்! :))))

    பதிலளிநீக்கு
  34. ஜீவி சார், அவசரம் எழுத்தில் தெரிகிறதா என்ன? ம்ம்ம்ம்ம்? நான் அநேகமாக எழுதுவது மத்தியான வேளையில்! ஹிஹிஹி, மீண்டும் பாராட்டுக்கு மிக்க நன்றி. உண்மையில் நெகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  35. ரஞ்சனி, பெண்டாட்டியை மிரட்டுவது தான் ஆண்களுக்கு அழகு என்று நினைத்திருக்கலாம். பலரும் இப்படித் தான் இருந்திருக்கிறார்கள்! இப்போதும் சிலர்! :(((( இன்னொரு கதை எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. நீங்க குறிப்பிட்ட ஜோக் கோபுலு வரைந்து வெளிவந்ததோனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. மனோ சாமிநாதன், உங்களிடமிருந்து பாராட்டுப் பெற்றதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  37. பானுமதி, கிட்டத்தட்ட எங்க வீட்டிலேயும் இதே கதை தான்! என் அண்ணா, தம்பி, அப்பா எல்லோரும் வேடிக்கை பார்க்க நானும், அம்மாவும் தான் கொஞ்சம் தைரியமாகக் கையாளுவோம். ஆனால் இங்கே புகுந்த வீட்டில் நிலைமை தலைகீழ். எங்க அம்பத்தூர் வீட்டில் சுப்புக்குட்டிங்க(பாம்புகள்) உள்ளே நுழைந்து குடித்தனம் செய்யறச்சே எல்லாம் எங்களை எல்லாம் ஒரு அறையில் அடைச்சுப் போட்டுட்டு நம்ம ரங்க்ஸ்தான் அதைக் கெஞ்சிக் கொஞ்சி தட்டிக் கொடுத்து சமாதானங்கள் பல சொல்லி வெளியேற்றுவார். :) அடிச்சதில்லை. அதுவும் வாழணுமே! :)))))

    பதிலளிநீக்கு
  38. கீதா மேடம் உங்கள் விட்டில் நான் பரிசாக அனுப்பி இருந்த கண்ணன் படம் எதையாவது நினைவுக்குக் கொண்டு வரவில்லையா அது நான் அறிவித்திருந்த மீதிக்கதை போட்டிக்கு பாலகணேஷ் உங்கள் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கானது.

    பதிலளிநீக்கு
  39. பெரும்பாலோர் வீட்டில் நடப்பதை படம்பிடித்துள்ளார் நன்று

    பதிலளிநீக்கு
  40. "பெண்டாட்டியை மிரட்டுவது தான் ஆண்களுக்கு அழகு என்று நினைத்திருக்கலாம்" - கீதா மேடம்... நான் நினைக்கும் காரணம்... மனைவியிடம்தான் கணவன் வேஷம் போடவேண்டிய அவசியம் இல்லை. அவன் மூடு சரியில்லாதபோது எரிந்து விழலாம். கோபப்படலாம்.இதுக்குப் பேர் சம்பாதிக்கும் ஆணவம்கறது இல்லை (பெரும்பாலும்). வேற எங்கயும் முகமூடி அணிந்துகொண்டாகவேண்டும்.'நம் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பிக்க இயலாது.

    ஆனால் வாழ்க்கை கற்றுக்கொடுப்பது என்னன்னா... ஓடம் ஒரு நாள் வண்டில ஏறும்கறதுதான். கொஞ்சம் வயதானபின் மனைவியிடம் இன்னும் அன்பாக நடந்திருக்கலாமே என்று நினைக்காத ஆணோ, பசங்க ஒவ்வொரு பருவத்தைத் தாண்டும்போதும், முந்தைய பருவத்தில் அவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டாமே என்று நினைக்காத அப்பாவோ எங்கிருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!