திங்கள், 29 பிப்ரவரி, 2016

திங்கக்கிழமை 160229 :: பனீர் க்ரேவி.


 நாங்க பனீர் கிரேவியை இதுவரை...
கல்யாண விருந்துல சாப்பிட்டிருக்கோம்..
நண்பர்கள் வீட்டுல சாப்பிட்டிருக்கோம்
ஆபீஸ் பார்ட்டிகளில் சாப்பிட்டிருக்கோம்..
ஏன்,
ஹோட்டலில் கூடச் சாப்பிட்டிருக்கோம்..
ஆனா எங்க வீட்டில் செய்ததில்லை..
(சிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வரும் அல்ப தேர்தல் விளம்பரங்களும் நினைவுக்கு வருகிறதா)

எனவே நண்பர்களே..
ஸ்ரீராம் வீட்டுச் சமையலறை வரலாற்றில் முதல் முறையாக
புழக்கத்துக்கு வந்து பல வருடங்கள் ஆகியும்
இதுவரை நாங்கள் செய்யாமலிருந்த
(வெங்கட் நாகராஜ் உள்ளிட்ட சக பதிவர்களின் ரெசிப்பிகளைக் குறித்து வைத்திருந்தும்)
பனீர் பட்டர் மசாலாவை நாங்கள் செய்து சாப்பிட்டு விட்டோம்...  செய்து சாப்பிட்டு விட்டோம்...செய்து சாப்பிட்டு விட்டோம்...
முதல் முறை இப்படி மிக எளிமையாகச் செய்து விட்டாலும், எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளை வைத்து ஒவ்வொரு முறையாக இனி முயற்சிக்க வேண்டும்!

5 பெரிய வெங்காயம், நாலு தக்காளி, ஒரு பூண்டுக் கொத்து, கொஞ்சம் இஞ்சி ஆகியவற்றை தனித்தனியே மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டோம்.
வாங்கி வந்திருந்த பனீரைத் துண்டுகள் போட்டுக் கொண்டோம்.  வாணலியில் கொஞ்சம் வெண்ணெய் வைத்து அதில் பனீரைப் போட்டுத் திருப்பி எடுத்து வைத்துக் கொண்டோம்.

கால்கிலோ பனீருக்கு 2 அல்லது இரண்டரை ஸ்பூன் காரப்பொடி போதும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம் தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக முறையே இஞ்சி, 


பூண்டு, 





வெங்காயம், 





தக்காளி


ஆகியவற்றைப் போட்டு
, காரம், உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டு,  புரட்டி நன்றாக எண்ணெய் / வெண்ணெய் பிரியுமளவு கொதிக்க வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பனீரை அதில் போட்டு,  ஒரு கொதி வந்தவுடன்,

ஃபிரெஷ் க்ரீம் அதில் சேர்த்து,  மீண்டும் ஒரு கொதி வந்ததும்
இறக்கிச்...





சப்பாத்தியுடன் சாப்பிட்டு விட்டோம்!


(இறக்கும்போது இதில் கஸூரி மேதி போடுவார்களாம்.  எங்களிடம் அது இல்லை.  எனவே போடவில்லை!)
படங்கள் முன்னே பின்னே மாறியிருப்பதற்கு மன்னித்துக் கொள்ளவும்!

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஞாயிறு 347 :: சல்யூட்


சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர்.

              
                                       

                                           

சனி, 27 பிப்ரவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  சுரேஷ்சந்திர பாண்டே.  "எனக்கு 5 குழந்தைகள்.  அதில் மூன்று பெண்கள்.  நாளை அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தால், அவர்களை யாரும் காப்பாற்றா விட்டால் எப்படி இருக்கும்?"
 


2) உபயோகமான சேவை. சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினர்கள்.
 

3)  பாராட்டுகள் வினோதன்.  (நன்றி மாணிக்கம் சட்டநாதன்)
 


4)  டாக்டர் பக்தி யாதவ்.
 


 




6)  "சென்னையை பொறுத்தவரை, உலகத்தரமான நகரமாக்கும் நோக்கில், அனுபவம் மிக்க சர்வதேச நகரமைப்பு வடிவமைப்பு நிபுணர்களை அமர்த்துவது மிகவும் கட்டாயம். சென்னையின் நீர்நிலைகளே சென்னையின் சொத்து. அதன் அடிப்படையில் சென்னையின் நகரமைப்பு பெருந்திட்டத்தினை, உடனடியாக சர்வதேச நிபுணத்துவம் மூலம் மறு ஆய்வு செய்ய வேண்டும். சிறிய, தெருச்சாலைகளில் கூட, சாலையோர வடிகால்கள் அமைக்கப்படவேண்டும். நீர்நிலைகளில் கட்டடமோ, சாலைகளோ கட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.தற்போதைய சென்னை யில், பல இடங்களில், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லை. சென்னையின் வெளிவட்ட சாலையின் ஓரங்களில், தற்போது, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தால் தான், அதனைச் சுற்றி உருவாகும் கட்டுமானங்கள், எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும்."  -  அறம் முருகேசன், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.
 


7)  அவினாஷ் தனது மனைவிக்குச் செய்யும் அஞ்சலி வித்தியாசமானது.  ஊருக்கே உபயோகமானது.
 



8) இது ஏற்க்கெனவே வந்த செய்தி. அப்போது அந்த ஆடோ டிரைவர் படம் கிடைக்கவில்லைஎன்று ஞாபகம்.  இப்போது படத்துடன் செய்தி.
 


"ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே?  இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?" என டாக்டர்கள் கேட்க, இவரு "யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான்", என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்."






புதன், 24 பிப்ரவரி, 2016

B P ஏறுமா இறங்குமா? அது ஒரு மெஸேஜ் காலம்!




 Image result for s m s images

ஒரு எஸ் எம் எஸ்....

பெரிய கார்ப்பொரேட் நிறுவனத்தில் வேலை செய்பவரிடமிருந்து... சின்னையா அவர் பெயர்.

'ரத்த அழுத்தம் குறைக்க உங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள்' என்று...

நான் எழுதினேன்.. 

'நாற்காலியில் உட்கார்ந்து, தலையைப் பின் புறம் தள்ளி இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் உருட்டுங்கள்.   மெதுவாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் திருப்பிய பின்,  மேலும் கொஞ்சம் திரும்ப முயற்சி செய்து வலிக்குமிடத்தில 15 வினாடிகள் நிறுத்தி, பின் எதிர் முனையிலும் அதே மாதிரி செய்யவும்' என்று அனுப்பினேன்.


Image result for s m s images

சற்று நேரம் கழித்து, "இன்னும்.. " என்று ஒரு மெஸேஜ்.

மறுபடியும் யோசித்து இன்னொரு யோசனை டைப்பி அனுப்பினேன்.

  மறுபடியும் அங்கிருந்து "வேறு...?" என்று கேட்டது மெசேஜ்.

'ராமாராவ் கிட்டே பேச்சு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என்று செய்தி அனுப்பிய பின் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. ராமாராவ் எங்களின் இன்னொரு நண்பர்.  அவர் குணம் அப்படி!

பிறகு கான்டீனில் மதிய உணவு அருந்தும் போது எதிரில் வருவது யார்?  வேறு யார்..  அதே ராமாராவ்!  


                                                                Image result for office canteen images

ராமராவ் கிட்டே வந்து "கேஜி!  உங்க கிட்டே ஒண்ணு கேட்கணும்.."  என்று ஆரம்பிக்க,

"சரி, சின்னையாவுக்கு நாம் அனுப்பிய செய்தியை இவரிடம் காட்டி நம்மைப் போட்டுக் கொடுத்து விட்டார் ..நம்ம கதை கந்தல்" என்று அவரைப் பார்க்க,

அவர் ஒரு மிளகாயைக் கடித்தது போல.. 

போல என்ன...?   மிளகாயைத்தான் கடித்திருந்தார்.  ஒரிரண்டு முறை விக்கி விட்டுக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்து விட்டு,
"எப்படிக் கண்டு பிடித்தீங்க?"  என்றார்.
"எதை?"  என்றேன்.

"என்னய்யா தெரியாத மாதிரி கேட்கறே?"

"புரியறமாதிரி சொல்லுங்க"  என்றேன்.  எப்போதுமே அவசரப்பட்டு வாய் விட்டு விடாமலிருப்பது என் சுபாவம்!

"அதான் B P க்கு மருந்து..."  என்றார்.

"அது நண்பர் ஒருவர் சொன்னார் செய்து பார்த்ததில் அழுத்தம் கொஞ்சம் குறைவது தெரிந்தது"  என்றேன்.

"நான் அதைக் கேட்க வில்லை.  ராமாராவிடமிருந்து.. "   என்று ஆரம்பிக்க  'சரி வகையாக மாட்டிக் கொண்டோம்'  என்றெண்ணி,  " இல்லை... அது வந்து.. "  என்று ஆரம்பித்த போது,

"இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம்.  என் ஃபோனில் சார்ஜ் இல்லை என்று நான் சின்னையா ஃபோனை உபயோகித்து sms  செய்ததை எப்படிக் கண்டு பிடித்தீர்?"  என்று கேட்க எனக்கு மயக்கம் வந்தது!

அவர் சுபாவம் 'அப்படி' இல்லை போலும்!


Image result for office canteen clip art  images

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: என்ன செய்யப் போகிறாய்?


          இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் இடம் பெறுவது மூங்கில் காற்று தளத்தின் சொந்தக் காரர் திரு T N முரளிதரன் அவர்களின் படைப்பு.  கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு முரளிதரன் பல்துறை வித்தகர்.  காதல் கடிதப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவார்.  கதைகள் எழுதுவார். கணிதம் சொல்லிக் கொடுப்பார்.  கணினியும் கற்றுக் கொடுப்பார்.  கவிதை எழுதுவார்.


          அவர் தள முகவரி : மூங்கில்காற்று.


          இந்தக் கதை பற்றி முரளிதரன் சொல்வது...

==========================================================


ஸ்ரீராம் அவர்களுக்கு,

'எங்கள் ப்ளாக்' கில் எனது கதையை வெளியிட  கேட்ட்டமைக்கு நன்றி. "என்ன செய்யப் போகிறாய்" என்ற கதையை இத்துடன் அனுப்பி இருக்கிறேன். இக்கதை 30.04.2014 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியானது. இந்தக்  கதை வெளியானதில் ஒரு சுவாரசியம் உண்டு. 

இதை நான் முதலில் என் வலைப் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அன்று மாலை திடீரென்று  இருந்து  போன் கால் . " முரளிதரன்தானே நீங்கள்?" என்று கேட்க   "ஆம்." என்றேன்,   "நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன்.என்னைத் தெரியுமா?"  என்று தொடர   "நன்றாகத் தெரியும் . குமுதம் ஆசிரியரை தெரியாமல் இருக்க முடியுமா?" என்றேன் இன்ப அதிர்ச்சியுடன். "உங்கள் கதையை படித்தேன். நன்றாக இருந்தது"  என்றார்.  

3 in 1 என்று சற்று  வித்தியாசமாக எழுதி இருந்தது  அவரைக் கவர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது சொந்தப் படைப்புதானா என்பதை உறுதிப் படுத்தியபின் "குமுதத்தில் வெளியிட சம்மதம்தானா "  என்றார். லட்சக் கணக்கான வாசகர்கள் உள்ள குமுதத்தில் வெளியாவதற்கு கசக்குமா என்ன?.  சம்மதம் தெரிவித்தேன். குமுதத்தில்  வெளியாகும் வரை உங்கள் வலைப் பக்கத்தில் இருந்து அதனை எடுத்து விடுங்கள். மூன்று வாரங்களுக்குப் பின் உங்கள் கதை வெளிவரும்" என்றார் . நான் வலைப் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கி விட்டு கதையை அனுப்பி வைத்தேன். 

புகைப்படம் அனுப்பும்படி கூற புகைப்படத்தை தனியாக அனுப்பினேன். 2 வாரங்களுக்குள்  கதை வெளியாகி விட்டது .  அவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைக்காததால் பார்க்காமல் விட்டுஎன்ற  விட்டேன். என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள் கதை  எனது புகைப்படத்துடன் வெளியாகி உள்ளதை முதலில் கூறி வாழ்த்து தெரிவித்தார்.  அதன் பிறகு வாங்கிப் பார்த்தேன். 3 in 1 கதை என்ற முத்திரையுடன் வெளியாகி இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது . 

வலை உலகை பதிவுகளை பத்திரிகைகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை 
இதன்மூலம் அறிய முடிந்தது. வடிவேலுவை கற்பனையாகக் கொண்டு கணிதப் புதிர்களை நகைச்சுவை கதைகளாக எழுதி இருந்ததையும் அவர்கள் ரசித்துள்ளனர் எனபதையும் தெரிந்து கொண்டேன். 

இதன் பிறகு இன்னொரு கதையும் குமுதத்தில் வெளியானது.  பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு எனது  நன்றிகள் . விகடன் அனுபவமும் உண்டு . 

வேறு ஏதேனும் தகவல் வேண்டுமெனில் தொடர்புக்கு  எனது மின்னஞ்சல் tnmdharanaeeo@gmail.com 

அலைபேசி 9445114895

==================================================================

          இனி அவர் படைப்பு...

======================================================================



என்ன செய்யப் போகிறாய்?


டி.என். முரளிதரன்



   வழக்கம் போல மின்சார ரயிலில் ஏகப்பட்ட கூட்டம். ரயிலின் ஒவ்வொரு பெட்டியின்  வாசல்களும் மனித தேன்கூடுகள் போல காட்சி அளித்தது. தேன்கூட்டை துளைத்து   உள்ளே நுழைந்தாயிற்று . அரைமணி நேரப் பயணம் என்றாலும் கசக்கிப் போட்டுவிடும். இந்த அரைமணி நேரம் இரண்டு மணிநேரம் ஆவதுபோல எரிச்சலை ஏற்படுத்தும். சாய்ந்து நெளிந்து கைப்பிடியை பிடித்துக் கொண்டேன். இந்த அவஸ்தையை எப்படி தாங்கப்போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்  வேளையில் அருகில் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். நான் இருந்த நிலையில் புத்தகத்தை படிக்க முடிந்தது. அது  அவதியிலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவருடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன்

" .........வண்டி மூன்று  மணிநேரம் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்தது. மதன்சேகர்  இருவரும் ரயிலை விட்டு கீழே இறங்கியபோது  நள்ளிரவைத் தாண்டிவிட்டது.அவர்கள் அங்கிருந்து கிட்டத்தட்ட 5கி.மீ தூரத்தில் உள்ள அவர்கள் இருப்பிடத்துக்கு செல்ல வேண்டும். நேரம் ஆகிவிட்டதால் பேருந்து இல்லை. ஆட்டோசைக்கிள் ரிக்.ஷாவில்தான் போகவேண்டும்.  ஆட்டோவில் போய் விடலாம் என்று முடிவு எடுத்தனர். ஆட்டோ நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.அப்போது ரிக்.ஷாக்காரர் ஒருவர் ஓடிவந்து, "ஐயா எனது வண்டியில் ஏறுங்கள்" என்றார். ஆட்டோக்காரர்கள் அவரை  துரத்தினர். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. சவாரிக்கு எவ்வளவு என்று கேட்டனர். அவர் சொன்ன தொகை குறைவாக இருந்ததால் ரிக்.ஷாவில் செல்ல சம்மதித்தனர். அவர்கள் ஏறி உட்கார   ரிக்.ஷா நகர்ந்தது....

  அடுத்த ஸ்டேஷன் வந்தவிட்டது . இன்னும் ஒரு கூட்டம் ஏறி முட்டித்  தள்ளியது.  "எவ்வளோ இடம் இருக்கு உள்ளே போங்க சார்" என்று என்னை தள்ளினர். நான் நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.
   நல்ல வேளை புத்தகம் வைத்துக் கொண்டிருந்தவரோ புத்தகத்தை திறந்து வைத்தபடியே  தூங்கிக் கொண்டிருந்தார். நான் எனக்கு  முன்னால் இருந்தவர்களை எப்படியோ பின்னே போக வழி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டு விட்ட இடத்தில்  இருந்து படிக்க தொடங்கினேன் 

  .......அது குளிர்காலமாதலால்  கடுங்குளிர் வாட்டி எடுத்தது . சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து  ஏதாவது டீக்கடையில் நிறுத்த சொன்னார்கள்.  கடைகள் மூடி இருந்தனஓரிடத்தில் திறந்திருந்த டீக்கடை வாசலில் நிறுத்தினார் . மதனும் சேகரும் ரிக்.ஷாவில் இருந்து இறங்கி, "நீயும் வா டீ சாப்பிடலாம்" என்று  ரிக்.ஷாக்கரரையும் அழைத்துவிட்டு டீக்கடைக்குள் நுழைந்து மூன்று டீ போடும்படி சொன்னார் மதன். இருவரும் டீ குடிக்க ஆரம்பித்தனர் ஆனால் ரிக்.ஷாக்காரர் வரவில்லை .......

   நான் சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தேன். அவர் இன்னும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார். அவ்வப்போது தலை மறைத்தாலும் நான் கஷ்டப்பட்டு அந்தப் பக்கத்தை படித்துவிட்டேன்.  தூக்கத்தில் இருந்ததால் அவர் அடுத்த பக்கத்தை புரட்டவில்லை.  இறங்கும் வரை எழுந்திருக்க மாட்டாரோ’ ஏமாற்றமடைந்தேன். அப்போது அவரது பாக்கெட்டிலிருந்து கர்ச்சீஃப் கீழே விழுந்தது. நான்அவரை எழுப்புவதற்கு அதை பயன்படுத்திக்கொண்டு  கர்ச்சீஃப் கீழேவிழுந்ததை சொன்னேன். தூக்கத்திலிருந்து விழித்த அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த பக்கத்தை திருப்பினார்

.......ஒரு வேளை காதில் விழவில்லையோ என்று நினைத்து வெளியே வந்து மீண்டும் அழைத்தார். ரிக்ஷாக்காரரோ மவுனமாக தலை அசைத்து டீ வேண்டாமென மறுத்து விட்டார். "சரி விடுப்பா இவனுங்க எல்லாம் சாயந்திரம் ஆனா தண்ணிதான் போடுவானுங்க. டீ எல்லாம் சாப்பிட மாட்டானுங்க என்றார் மதன்  கிண்டலாக
டீ குடித்தபின் மீண்டும்  ரிக்.ஷாவில் பயணத்தை தொடர்ந்தனர் . சேகர்  கோபத்துடன் கேட்டார் "என்னப்பா! எங்களுடன் சேர்ந்து டீ அருந்த மாட்டாயா? ,எங்களை மேல் தட்டு வர்க்கம்  என்று நினைத்து விட்டாயா? அல்லது உன்னுடன் சேர்ந்து டீ சாப்பிட எங்களுக்கு தகுதி இல்லையா?"

மிதிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி இருவரையும் பார்த்தார் ரிக்.ஷாக்காரர்.....

   அதற்குள் ஏதோ ஒரு கால் வர மொபைலை எடுத்து பேச ஆரம்பித்தார் புத்தகம் வைத்திருந்தவர்.  அதே நேரத்தில் இன்னொரு கையால் அனிச்சையாக  படிக்கும் பக்கத்தில் ஒரு விரலை வைத்துகொண்டே புத்தகத்தை மூடினார். எப்போது பேசி முடித்து புத்தகத்தை திறப்பார். என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். படிக்கும் சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாக மறந்திருந்த அசௌகிரியங்கள் மீண்டும் தெரிய ஆரம்பித்தன. நல்ல வேளையாக பேச்சை சீக்கிரம் முடித்துவிட்டு புத்தகத்தை திறந்தார். நானும் விட்டுப் போன சுவாரசியத்துடன் தொடர்ந்தேன்

......அவர் கண்கள் கலங்கிகண்ணீர் வந்து கொண்டிருந்தது அந்த இருட்டிலும் தெரிந்தது .
"ஐயா. என்னை மன்னியுங்கள். தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இன்று மதியம்  என் மகன் இறந்துவிட்டான். அவன் ஈமச் சடங்குகளுக்கு பணம் தேவை. போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அந்த தொகையை சம்பாதிக்கும்வரை நான் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால்தான் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை" என்று தயங்கித் தயங்கி சொன்னார்
வாயடைத்துப் போயினர் மதனும் சேகரும். அதிர்ச்சியும் வியப்பும் குற்ற உணர்வும் அவர்களை ஆட்கொண்டது .
இறங்கும் இடம் வந்ததும் ஒரு முழு நோட்டை எடுத்துக் கொடுத்தனர். அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக அதில் இருந்தது. "மிச்சம் வேண்டாம் அப்படியே வைத்துக் கொள்" என்றனர்.
ரிக்.ஷாக்காரரோ மீதித் தொகையை கட்டாயப் படுத்தி திருப்பிக் கொடுத்து விட்டு, மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி  ரிக்.ஷாவை செலுத்தினார்....

   கதையில் வரும் ரிக்.ஷாக்காரர் மேல்  எனக்கும் பரிதாபமும் அவர் சூழலை நினைத்து வருத்தமும் அவரது நேர்மையைக் கண்டு ஆச்சர்யமும் என்னை ஆக்ரமித்துக் கொண்டிருந்த  வேளையில் சட்டென்று வெளியே பார்க்க அப்போதுதான் தெரிந்தது. நான் இறங்க வேண்டிய நிலையம் கடந்து விட்டது என்பது.  வேறு வழியில்லை அடுத்த ஸ்டேஷனில் இறங்கித்தான் திரும்ப வேண்டும். கதை இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஒரு பத்தி இருந்தது. இறங்குவதற்குள் அதையும் படித்துவிடலாம் என்று தொடர்ந்தேன்.


 ......இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் இருக்கலாம். இதை பத்திரிகையாளனான என்னிடம் விவரித்தனர் மதனும் சேகரும்  ஆனால் இன்னும் இருவர் மனதிலும் அந்த சம்பவத்தின் தாக்கம் இருப்பதாக கூறினர். அந்த ரிக்.ஷாக்கரரின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வந்து தங்கள் மனதை உறுத்துவதாக வருந்தினர். "ஒரு வேலை உணவு கூட உண்ணமுடியாத நிலையிலும்உடுத்துவதற்கு ஒழுங்கான  உடையின்றி, இருக்க இடமின்றி வறுமையில் வாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்" என்று அந்த முகம் கேட்பது போல் தோன்றுகிறது. அதே கேள்வி எனக்கும் தோன்ற முதலில் இதை பத்திரிகையில் வெளியிடுகிறேன். இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும். நாமும் என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்கலாம் என்றேன். 

    கதை என்னவோ முடிந்துவிட்டது. ஆனால் அதன் பாதிப்பு மனதில் தொடர்ந்தது. கீழே அந்த பத்திரிகையாளரின் பெயர் போட்டிருந்தது. அதை படிக்குமுன் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டதால் படிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டே இறங்கி எதிர்ப்புறம் வரும் ரயிலை பிடித்து நான் இறங்க வேண்டிய எழும்பூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்தக் கதையை நினைத்துக் கொண்டே வெளியே வர ஆட்டோவில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு குடும்பம் இறங்கியது.
 வயதானவர் ஒருவர் ஓடி வந்து நான் பிளாட்பார்முக்கு லக்கேஜுகளை எடுத்து செல்கிறேன் என்று சொல்ல அதற்குள் போர்ட்டர்கள் சிலர் ஒடிவந்து அவரை விரட்டி அனுப்பிவிட்டனர். அவர் முகம் வாடிநிற்க நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன் 
  தலை லேசாக வலிக்க ஒரு டீ குடித்தால் தேவலை போல் இருந்தது.எதிரிலேயே டீக்கடை இருந்தது .
டீக்கடை வாசலில்  கிழிந்த சட்டையுடன்  சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள்.  பசியோடு இருப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது 
'டீ குடிக்கிறயாஎன்று கேட்டுவிட்டு  அந்தப் பெண்ணுக்கு டீயும் பண்ணும் கொடுக்க சொன்னேன். 
"வேணாம். எங்க தாத்தா  திட்டுவாரு . இப்ப வந்து எனக்கு வாங்கி தருவாரு" என்று மறுத்து விட்டாள்  
"உங்க தாத்தா  எங்கே?" என்றேன்
"அதோ" 
சிறுமி கை காட்டிய திசையில் பார்த்தேன். அவள் சுட்டிக் காட்டியது சற்று முன்பு போர்ட்டர்களால் விரட்டப்பட்ட அந்தப் பெரியவரை.
************************************************************


குறிப்பு
1.      இதில்  மூன்று கதைகள் உள்ளன . மொத்தமாக ஒரு கதையாக ரசிக்க முடியும் .
2.     ஊதா நிறத்தில் எழுதப்பட்டவை மட்டும் படித்தால்கூட ஒரு தனி கதையாகக் கொள்ள முடியும். 
               3.     கருப்பு வண்ணத்தில் உள்ளவற்றை படித்தாலும் தனி     
           கதையாக இருக்கும்.