செவ்வாய், 31 ஜனவரி, 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: நட்பு....


     மஞ்சுபாஷிணி சம்பத்குமார்.  இவர்தான் இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை"யின் படைப்பாளி.


     அவருடைய தளம்  கதம்ப உணர்வுகள்.



     இருமுறை இந்தியா வந்திருந்தபோது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு மாறிப்போனது.  உற்சாக ஊற்று.  இவருடன் அலைபேசியில் உரையாடியிருக்கிறேன்.  செமையாய்க் கலாய்ப்பார்.  இவர் எனக்கு ஒரு உதவியும் செய்து தந்திருக்கிறார்.


     ஏனோ இப்போதெல்லாம் வலைத்தளம் பக்கம் வருவதில்லை. 

     அவருடைய உடல்நிலையும், பணி அழுத்தமும் அதற்கு நேரம் தரவில்லை என்று நினைக்கிறேன்.  நீள, நீளமான பின்னூட்டங்களுக்குப் பெயர் போனவர்.


     வீ  மிஸ் யூ மஞ்சு!


     உங்கள் முன்னுரையைக் கீழே வெளியிட்டிருக்கிறேன்.  தொடர்ந்து உங்கள் படைப்பு வழக்கம்போல...


===========================================================


ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் இருந்தால் அது காதலாகவோ அல்லது கல்யாணமாகவோ தான் முடியவேன்டுமா? என்று ஒரு நாள் நான் சிந்தித்ததின் விளைவு தான் இந்த கதை.

காதலில் நட்பு இருக்கலாம். ஆனால் நட்பில் காதல் புகுந்துவிட்டால், அது கல்யாணத்தில் முடிந்தால் சிறப்பு. அதுவே இருவரில் ஒருவருக்கு இது இஷ்டமில்லையென்று ஆகிவிட்டால், இழப்பது காதல் மட்டுமல்லாது நட்பையும் சேர்ந்தே இழக்கவேண்டி வரலாம்.

நட்பில் காதல் அசௌகர்யம். நட்பு அற்புதமான விஷயம். பலம் தரும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உறவுகளை விட உதவிட கை நீட்ட முன்னால் ஓடிவருவது நட்பாய் இருக்கும்.

இந்த கதையின் முடிவு நிறைய பேருக்கு இஷ்டமில்லாது போகலாம். ஆனால் ஸ்ரீ சொன்னது போல் இப்போது பார்க்கவிக்கு வலி கொடுப்பதாக இருந்தாலும், பின்னாளில் ஸ்ரீ செய்தது சரி தான் என்று உணர்ந்து ஆசுவாசம் கொள்வாள் பார்க்கவி.

அன்புடன்
மஞ்சு சம்பத்குமார்




======================================================================

நட்பு....
மஞ்சுபாஷிணி சம்பத்குமார்

” உன்னை தினமும் பாக்கணும் “

ம்ம்…

” உன்கிட்ட தினமும் பேசணும் “

சரி…

” எனக்காக ஒரு பாட்டு பாடணும் தினமும் “

சகிச்சுப்பியா?

உன்னை ரொம்ப பிடிச்சதால தானே கேட்கிறேன்.

சரி சரி.. அது ஏன் ஒரு பாட்டு?

சரி உன்னிஷ்டம்… என்னை தினமும் காலைல எழுப்பறச்சே பாட்டுப்பாடி எழுப்புவேன்னு சொன்னேன்.

அதுல எதுக்கு கஞ்சத்தனம்? நைட் தூங்கும்போது ஒரு தாலாட்டு?

” இதுவும் நல்லாத்தான் இருக்கு..”

ஸ்ரீ… என்னைப்பாரேன்…

” உன்னைப்பாக்கலன்னாலும் நீ சொல்றதை காதுக்கொடுத்து கேட்டுட்டு தானே இருக்கேன். இந்த கடல் அலைகளுக்கு மட்டும் ஓய்வே கிடையாதா? பாரேன் ஓய்வே இல்லாம அலை வந்து வந்து வந்து நம்பிக்கையோடு என் அழகைப்பார்னு நம்ம காலைத்தொட்டு கூப்பிட்டு கிச்சுக்கிச்சு மூட்டுதுல்ல? “

” நான் உன்கிட்ட பேசறதுக்கு தான் பீச்சுக்கு வரச்சொன்னேன். நீ கடல் அலைய ரசிச்சுக்கிட்டு இருக்கே.. என் மனசு உனக்கு புரியவே மாட்டேங்குது.. இந்த கடலும் அலையும் எப்பவும் இருக்கத்தான் செய்யும்… “

” அதேப் போல் நீயும் நானும் நம் நட்பும் எப்பவும் இருக்கும் பார்க்கவி..”

“ ஸ்ரீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. “

“ நல்ல விஷயம் தானே பார்க்கவி? இதை சந்தோஷமா தான் சொல்லேன்? “

” ஸ்ரீ நீ நிஜமா தான் சொல்றியா? இல்ல என் மனசு உனக்கு புரியலையா? “

பார்க்கவியின் கண்கள் கண்ணீர் கொட்ட தயாராக இருந்தது.. மூக்கு விடைத்து உதடு துடித்து.. வந்தே விட்டது கண்ணீர் கன்னத்தில் உருண்டு…

ஸ்ரீ முன் தான் இப்படி தலைக்குனிந்து காதலுக்கு யாசிப்பதை தன் ஈகோ விரும்பவில்லை என்பது அவள் தலையை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதில் உணரமுடிந்தது..

ஸ்ரீ அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை சிமிட்டாமல் உற்று நோக்கினான்.

அவன் பார்வையின் தீக்ஷண்யம் தாங்காமல் தலை குனிந்துக்கொண்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நாம எப்ப முதன் முதலா சந்திச்சோம்னு நினைவிருக்கா உனக்கு? “

“ ஏன் இல்ல? ரெண்டு பேரும் ஒன்னா இந்த கம்பனிக்கு இண்டர்வ்யூக்கு வந்திருந்தோம். ஒன்னாவே செலக்ட் ஆனோம்.. ஒன்னாவே ட்ரெயினிங் முடிச்சோம். சீட்டும் பக்கத்து பக்கத்துல… இன்னியோட 5 வருஷம் முடியப்போறது “

“ இந்த 5 வருஷத்துல உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யார் பார்க்கவி? “

“ சொல்லனுமா? சிடுமூஞ்சியா இருந்த என்னை சிரிக்கவெச்சே.. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் அழகை ரசிக்க வெச்சே… ரோட்டில் நடக்கும்போது யாராவது பிச்சை எடுத்து வந்தால் அவங்கக்கிட்ட கூட சிநேகமா தோளில் கைப்போட்டு பேசி என்னையே திகைக்க வெச்சே இப்படி நிறைய…  தினமும் ஒரு அற்புதம் நடத்துவே.. பார்க்கிறவங்களுக்கெல்லாம் அது சாதாரணமா இருந்தாலும் எனக்கு மட்டும் அது ஆச்சர்யமா இருக்கும் நீ நீயே தான்பா என் பெஸ்ட் ஃப்ரெண்ட் “

பார்க்கவி கண்களை மூடிக்கொண்டு எங்கோ சஞ்சரிப்பதை ஸ்ரீ உணர்ந்தான்.

பார்க்கவியின் தோளைத்தட்டி…. “ உனக்கு இப்ப என்ன ப்ரச்சனை பார்க்கவி சொல்லு “ என்று கேட்டுக்கொண்டே மணலை அளைந்தான்.

மறுபடியும் ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்க சொல்றியா ஸ்ரீ?  அதான் சொன்னேனே… தினமும் உன்னை பாக்கணும் உன்னிடம் பேசணும்.

இதைக்கேட்டதும் ஸ்ரீ சிரித்தான்.. “ லூசு தினமும் அதானே பண்றோம் ஆபிசுல? “ என்றான்.

“ நீ புரிஞ்சுக்கலையா ஸ்ரீ என் காதலை?  நான் இப்படி வெட்கத்தை விட்டு என் காதலை சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறியா ஸ்ரீ ? சோகத்துடன் கேட்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அந்த எல்லையை நான் என்னிக்குமே தாண்டினதில்லை… தாண்ட முயற்சித்ததும் இல்லை… அதைத்தாண்டி உன்னை வேறவிதமா என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியலை உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது பார்க்கவி?

” ஸ்ரீ உன்னோட ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் என்னை உன்னிடம் ஈர்க்க வெச்சுட்டுது.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணித்து. “

“ பார்க்கவி…. காதலுக்குள் நட்பு இருக்கணும்… அப்ப தான் இருவருக்குள் நல்ல புரிதல் இருக்கும்… ஆனால் நட்புக்குள் காதல் வந்தால்… காதலும் நிலைக்காது…. நட்பையும் இழக்கும் அபாயம் இருக்கு பார்க்கவி…சப்போஸ் நீ சொன்னது போல நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்னே வெச்சுக்கோ…. ஏதாவது நமக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரலாம் இல்ல ப்ரச்சனை வரலாம். அப்ப உன்னால என்னை நண்பனாவும் பார்க்க முடியாது காதலனாவும் பார்க்க முடியாது கணவனா உன் கண்முன்னாடி நிப்பேன்   உன் ஈகோ என் மேல் ஈட்டி எறியும்… பதிலுக்கு என் ஈகோ தடுக்கவோ உன்னை சமாதானப்படுத்தவோ முயலாமல் உன்னை மட்டம் தட்ட முயலும்..  என் மேல் உனக்கு கோபம் வெறுப்பு ஆயாசம்… ச்சே இவனைப்போய் கட்டினோமே.. இப்படி எல்லாம் எண்ண வைக்கும்…” எனக்கு நட்பு ரொம்ப நல்லாருக்கு பார்க்கவி… நாம நட்புடனே இருப்போமே அவள் கண்களைப்பார்த்து சொன்னான் ஸ்ரீ.

” நான் அழகா இல்லையா ஸ்ரீ? என்னை பிடிக்கலையா உனக்கு?  நீ வேண்டாம்னு சொன்னா இப்பவே இந்த கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிப்பேன் “ மூக்கு சிவக்க உதடுகள் துடிக்க கண்ணீர் கண்களுடன் கெஞ்சினாள் பார்க்கவி.

ஸ்ரீக்கு தர்மசங்கடமானது…. நீ ஒரு தேவதை பார்க்கவி. என்று சொல்லும்போது ஒரு பந்து வந்து அவன் முகத்தை உரசி கீழே விழுந்தது. “ அங்கிள் பால் தாங்க “ என்று கேட்டபடி 5 வயது குழந்தை ஓடி வந்து பூவாய் சிரித்து பாலை ஸ்ரீயிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றது.

” பார்க்கவி…. எப்பவும் நாம நட்புடனே இருக்க முடியாதா? “

“ நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிருக்கோமே நண்பர்களா இருந்தோம் இதுவரை இனி காதலித்தால் என்னவாம்? முனகினாள் பார்க்கவி.

“ என் மனசுல உன்னை அப்படி ஒரு தடவை கூட நினைச்சு பார்க்கல பார்க்கவி.. இனியும் என்னால அப்படி முடியும்னு தோணலை… நட்பை நான் மதிப்பவன்… நட்புக்குள் ஆண் பெண் என்ற பேதம் வயசு அழகு நிறம் படிப்பு இதெல்லாம் அவசியமற்றது… நட்பு நட்பாகவே இருந்தால்... அது நிலைத்து இருக்கும் பார்க்கவி...  அதே நட்புக்குள் காதல் நுழைந்தால் இவள் எனக்கு மட்டும் தான். இவன் எனக்கு மட்டும் தான் என்ற பொசசிவ்நெஸ் வரும். அது கொஞ்சம் கொஞ்சமா சந்தேகத்துக்கு வழி விடும்.. இப்படியே பிரிவு வரைக்கும் கொண்டு போயிரும்… அப்படி ஆகும் நிலை வந்தால் காதலும் நிலைக்காது… நட்பும் நிலைக்காது…. “ அதை விட இப்படி நட்புடனே இருந்துப்பார் ..என்ன சிரமம் உனக்கு?

ஸ்ரீயின் எந்த பதிலும் பார்க்கவியை சமாதானப்படுத்தவில்லை.

ஸ்ரீயின் முதுகில் படார்னு ஒரு அறை விழுந்தது… அதோடு குரல் வேறு…”ஹே பாஸ் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு… அட பார்க்கவி.. என்ன ரெண்டு பேரும் இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு கடலை விலைக்கு வாங்க பலமான யோசனை நடக்குது போல? என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தாள் மீனலோசனி இருவருடன் ஆபிசில் பணிபுரிபுவள்.

மீனலோசனி ஸ்ரீயிடம் காட்டும் நெருக்கம் பார்க்கவிக்கு சந்தோஷம் தரவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு அலைகளை வேடிக்கைப்பார்ப்பது போல் பார்த்தாள்.

“ என்ன பார்க்கவி என்ன விஷயம் உன் முகம் சோகமா இருக்கு?  ஐஸ்க்ரீம் கேட்டால் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டானா? கஞ்சன் என்று சொல்லி ஸ்ரீயின் தலையில் குட்டினாள் மீனலோசனி.

இவற்றுக்கெல்லாம் அமைதியாக சிரித்துக்கொண்டே இருந்தான் ஸ்ரீ.

பார்க்கவிக்கு கோபம் தலைக்கேறியது.  தன் கண்ணெதிரே தன் மனம் விரும்பியவனிடம் இத்தனை நெருக்கமாய் முதுகில் அடிப்பதும் தலையில் குட்டுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை.. இவன் இப்படித்தானோ? எல்லா பெண்களிடமும்..  மனம் முதல் முறையாக சந்தேகப்பட்டு அவனிடம் கொண்ட காதல் சரியா என்று யோசித்தது…. சடுதியில் மனித மனம் குரங்குப்போல் தாவுகிறதே என்று தலையில் அடித்துக்கொண்டாள் பார்க்கவி…

பார்க்கவின் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் அவள் முக குறிப்புகள் உணர்த்தியது.

ஸ்ரீ அமைதியாக பார்க்கவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பார்க்கவியின் கவனமோ மீனலோசனி இன்னும் ஸ்ரீயை என்னென்ன தொந்திரவு செய்வாளோ என்ற பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததை ஸ்ரீ கவனித்துக்கொண்டிருந்தான்.

பார்க்கவியின் மனம் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தான் ஸ்ரீ…

பார்க்கவின் மனம் இனி தன் வசப்படாமல் இருக்க என்ன செய்வது என்ற யோசனையுடன் உடையில் ஒட்டி இருந்த மணற்துகளை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான்.

“ இருட்டிடுத்து மீனலோசனி. நாளை ஆபிசில் பார்ப்போம்.

பார்க்கவி உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன் எழுந்து வா என்று பார்க்கவி எழ கைக்கொடுத்தான் ஸ்ரீ..

“ நான் டி நகர் ரூட்ல தான்பா போறேன்.  நானே ட்ராப் பண்ணிடவா?   நீ அவளை விட்டுட்டு திரும்ப தாம்பரம் போகணும் “ என்று சொன்ன மீனலோசனியை அனல் தெறிக்க பார்த்துவிட்டு ஸ்ரீயிடம் “வேண்டாம் ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கறேன் “ முறைப்பாய் சொல்லிவிட்டு மீனலோசனி பக்கம் திரும்பாமல் ஆட்டோ என்று அழைத்து ஏறி அமர்ந்து போய்விட்டாள் காற்றாய்.

“ என்னாச்சு பாஸ் எனிதிங் ராங்?  பார்க்கவி கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கலந்தமாதிரி இருப்பது போல தோணுதே? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? “ தர்மசங்கடத்துடன் மீனலோசனி கேட்க

“ ச்சே ச்சே அப்டி எல்லாம் ஒன்னுமில்லப்பா.. கொஞ்சம் டயர்ட் அவ்ளோ தான்.. நாளை சரியாயிருவா சரி நான் கிளம்பட்டுமா “ என்று சொல்லிக்கொண்டே செருப்பணிந்து நடக்க ஆரம்பித்தான் தன் வண்டி பார்க் செய்த இடம் நோக்கி ஸ்ரீ..

” பார்க்கவி மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்பட நான் காரணமா இருந்துட்டேனே.. இனியும் அவளுடன் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்வது இன்னும் அவளை துன்புறுத்துவதற்கு சமம்…

வேண்டாம். கொஞ்ச நாட்கள் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொள்ளவேண்டும்…

மும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ

திங்கள், 30 ஜனவரி, 2017

"திங்க"க்கிழமை 170130 - ஹோட்டல் பாணியில் பூரி மசால் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி




சமீபத்துல ஸ்ரீராம், மசால் தோசை என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார் (தோசை மாவுலேயே, சில பலவற்றை அரைத்துச் சேர்ப்பது). அதற்கு கேஜிஜி அவர்கள் பின்னூட்டமிட்டதில், டிரெடிஷனல் மசால் தோசைதான் தன் விருப்பம் எனவும், தோசை நல்லா இல்லைனா, மசாலாவை மட்டும் சாப்பிடமுடியும், மசாலா நல்லா இல்லைனா தோசையைச் சாப்பிடலாம் எனவும் சொல்லியிருந்தார். அப்போதான், நான் செய்கின்ற, ஹோட்டல் பானி பூரி மசாலை எழுதி அனுப்பலாமே என்று தோன்றியது.

நான் பல இடங்களில் பயணிப்பவன். முடிந்தமட்டும், தென்னிந்திய சைவ உணவுவிடுதிகளில் மட்டும் உண்பவன். என்னைப் பொறுத்தமட்டில், ஒரு உணவகத்தின் உணவுத் தரம், அதன் சாம்பாரிலும், பூரி மசாலிலும் (பூரியைக் குறிப்பிடவில்லை), மதிய உணவிலும் தெரிந்துவிடும். இந்த மூன்றும் ஒரு உணவகத்தில் நன்றாக இருந்தால், அந்த உணவகத்தின் செஃப் ரொம்பத் திறமை மிக்கவர் என்று நம்பலாம். எனக்கு திருநெல்வேலியில் ஒரு காலத்தில் கிடைத்த பூரி மசால்தான் சிறந்தது என்று எண்ணம். சில வருடங்களுக்கு முன்னால் தென்காசியில் அந்த குவாலிட்டியில் சாப்பிட்டிருக்கிறேன். பாரம்பரிய பூரி மசாலில், கேரட், பட்டாணி, பூண்டுலாம் வரவே வராது. எங்க திருநெல்வேலில 80கள்ல, சமோசா சாப்பிட்டதுக்கும் இப்போ கிடைக்கற சமோசாவுக்குமே ரொம்ப வித்தியாசத்தைப் (நெல்லைல) பார்க்கிறேன் (இப்போ பட்டாணி சேர்ந்துடுத்து). நான் பண்ணற பூரி மசால், திருனெல்வேலில சாப்பிட்ட மாதிரியே அதே தரத்தில் வரும்.





தேவையானவை, உருளைக் கிழங்கு 4, வெங்காயம் 3-4, பச்சை மிளகாய் 3, இஞ்சி திருவினா 2 ஸ்பூன்.  இதைத் தவிர, கடலை மாவு 2 ஸ்பூன், கருவேப்பிலை 2 ஆர்க், தாளிக்க  கடலைப் பருப்பு 1 பெரிய ஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன், கடுகு ½ ஸ்பூன். 




உருளைக்கிழங்கை மஞ்சள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, தோலை உரித்துக்கொள்ளவும். அப்புறம், ஓரளவு பிசைந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்குத் துண்டமும் மாவுமா இருக்கணும்.




பச்சை மிளகாயை நெடுவாக்கில் கட் பண்ணிக்கோங்க. 4 வெங்காயத்தையும் நீள் வாக்கில் வெட்டிக்கோங்க. இஞ்சியின் தோல் நீக்கி, துருவிக்கோங்க.





கடாயில, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, அப்புறம் கருவேப்பிலை போட்டு திருவமாறிக்கொள்ளவும். அதுலயே, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிவிட்டு, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கொஞ்சம் கண்ணாடி மாதிரி வதக்கவும். ரொம்ப வதங்கினா டேஸ்ட் போயிடும். அதுல 2 ½ கப் தண்ணீர், மஞ்சப் பொடி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நல்லாக் கொதிச்ச உடனே பிசைந்து வைத்திருக்கிற உருளைக்கிழங்கைச் சேர்த்து குறைந்த தணல்ல கொதிக்க வைங்க. கடைசில கடலை மாவைத் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்துச் சிறிது கொதிக்கவைக்கவும். மசாலா ரெடி.




இஞ்சி போட்டு வதக்கும்போதே, விருப்பப்படுகிறவர்கள் கேரட் துருவலைச் சேர்க்கலாம். கொஞ்சம் வேகவைத்த பட்டாணியும் சேர்க்கலாம். எனக்கு இந்த இரண்டும் சேர்ப்பது பிடிப்பதில்லை. வெங்காயத்தையும் ரொம்ப வதக்கி வேகவைப்பதும் எனக்குப் பிடிக்காது.




மசால் தோசைக்குத் தேவையான மசாலாவுக்கு, தண்ணீர் ரொம்பக் குறைவாக விட்டால் போதும். ஒரு பெரிய ஹோட்டலில், உருளைக்கிழங்கைத் தனியே வேகவைத்து mash பண்ணி ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள்.  கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், இஞ்சி, கொஞ்சம் அதிக வெங்காயம் நன்கு வதக்கின பின், அதை இந்தப் பாத்திரத்தில் கொட்டிக் கலந்துவிட்டார்கள். தனியா தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவில்லை. (எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சமையலறையை ஒரு எட்டு பார்த்துவிட்டு செஃப் உடன் பேசுவேன்) அதுவும் நல்லாத்தான் இருந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோமோ (தாளிக்கும்போது) அவ்வளவுக்கு அவ்வளவு ஹோட்டல் டேஸ்ட் வரும்.




அன்றைக்கு பூரி செய்தேன். கோதுமை மாவு, கொஞ்சம் மைதா, கொஞ்சம் ரவை போட்டு, சூடான தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு மாவு தயார் செய்து, கொஞ்சம் நேரம் கழித்து, பூரி இட்டேன்.  பூரி மசாலா நல்லா இருந்தது. நீங்களும் செய்துபாருங்கள்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஞாயிறு 170129 :: டார்ஜீலிங்கில் தங்குமிடம்


தங்குமிடத்தை அடைந்தோம்.  யாஷ்ஸ்ரீ ஹோட்டல்ஸ் & ரிஸார்ட்ஸ் 


  

அங்கிருந்த ஓவியங்கள்....




சனி, 28 ஜனவரி, 2017

ஷாலினி விசாகன்




1)  ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம்லால் குப்தாவின் சேவை.






2)  மாற்றுத்திறனாளிகள் பேருந்து ஏறுவதிலிருந்து பொது இடங்களில் புழங்குவது வரை பலப்பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.  அவர்களின் இன்னல்களில் நாம் அறியாத ஒன்று அவர்களின் ஆடை அணியும் சிரமம்.  அதை நீக்க வந்திருக்கும் ஷாலினி விசாகன்.


3)  தங்கள்  கைகளே தங்களுக்குதவி.  அரசை எதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே பள்ளியைக் கட்டிக்கொண்ட கிராம மக்கள்.

4)  தலைமை ஆசிரியரை வருடங்கள் பல கழித்தும் கௌரவித்த மாணவர்கள்.  அவர்கள் நினைவில் என்றும் இமயமாய் நிற்கும் கோ. பாஸ்கரன் .

வெள்ளி, 27 ஜனவரி, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170127







அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

     இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன். 

     இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

     உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

     என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

     எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
          இறுதியிலே கடலில் சென்று
     சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
          பின்பற்றும் தன்மை யாலே
     துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
          வளைவாயும் தோன்றி னாலும்
     அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
     அடைகின்ற ஆறே யன்றோ!

     இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

     பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

     அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.


செப்டம்பர் 15, 1893 உரை : 

     ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

     ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

     ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

     'நீ எங்கிருந்து வருகிறாய்?'

     'கடலிலிருந்து'

     'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

     'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை. 

     கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

     'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

     'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

     காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்ட உரை : 

     வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.

     யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். 

     இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.

     அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.

     தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

     இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

     இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

     இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.

     இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.

     சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.

     அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?

     ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?

     வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.

     பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.

     இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.

     இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'

     தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.

     சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?

     இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.

     ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும். 

     இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, 'ஆ' வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?

     இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து 'நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா' என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: 'ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.'

     'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!' ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல. 

     இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். 'அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது' என்றுகூறுகின்றன.

     அவனது இயல்புதான் என்ன?      அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!'- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம். 

     மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் - இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.

     இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. 'எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்' என்கிறது ஒரு பிரர்த்தனை.

     ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், 'அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?' என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், 'தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது' என்றார்.

     ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.

     கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை. 

     இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.

     இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, 'நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்' என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.

     இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.

     இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். 'காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்'.

     நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.

     எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.

     ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

     அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.

     தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் - இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. 'ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்'. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

     நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், 'நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?' என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், 'உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?' என்றுகேட்டார், 'இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்' என்று பதிலளித்தார் பாதிரி. 'அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!

     பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, 'பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

     மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?

     என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். 'எங்கும் நிறைந்தது' என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? 'எங்கும் நிறைந்தவர்' என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.

     எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.

     அவன் எங்குமே நின்று விடக்கூடாது. 'புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை'. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : 'அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.'

     இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். 'குழந்தை, மனிதனின் தந்தை.' குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

     ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.

     வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.

     சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.

     ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.

     இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன. 

     ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், 'முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி' என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். 'நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்' என்கிறார் வியாசர்.

     இன்னொன்று: 'அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?' பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

     அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.

     இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது. 

     சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது. 

செப்டம்பர் 20, 1893 உரை : 

     நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.

     இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனைசெய்வது அவனை அவமதிப்பதாகும்.

     இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன். 

செப்டம்பர் 26, 1893 உரை :  

     நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.

     ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.

     ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.

     இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.

     மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.

     எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் உபதேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.

     தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.

     தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.

     அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப்பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார்.

     புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக! 


செப்டம்பர் 27, 1893   உரை

     சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.

     இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.

     சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், 'சகோதரா! உனது நம்பிக்கை வீண்' என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!

     விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.

     இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், 'உதவி செய், சண்டை போடாதே', 'ஒன்றுபடுத்து, அழிக்காதே', 'சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்' என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 
      

வியாழன், 26 ஜனவரி, 2017

சின்னச்சின்ன ஆசைகள் - ஜனவரி எதிர்பார்ப்புகள் 4 - பதிவுலக நண்பர்களின் கருத்துகள்


"ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?"


     இந்த எங்களின் கேள்விக்கு வலையுலக பதிவர் நண்பர்கள் பதிலளித்து வருகிறார்கள்.   
     தொடரும் இன்றைய பதிவில் நண்பர் மனசு குமார்,  வெங்கட் நாகராஜ், ரஞ்சனி நாராயணன் மேடம் ஆகியோரின் கருத்துகள் இடம் பெறுகின்றன.


===========================================================

 

2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 

கலை : நடிப்பு (சினிமா) மட்டுமின்றி எழுத்து, ஒவியம் என எல்லாமே கலைதான் ஆனாலும் கலை என்னும் போது நாம் நடிப்பு சம்பந்தப்பட்டவற்றை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில் கலை என்பது பணம் பார்க்கும் கருவியாக மட்டுமே இருக்கிறது.

அதில் வளர்ச்சி என்பதைவிட அதை வைத்து வளர நினைப்பவர்களே அதிகம். கலைக்கான மதிப்பும் மரியாதையும் வளரும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : கலையின் மூலம் நம் கலாச்சாரம் பண்பாடு முதலியவற்றைப் பாதுகாக்கும் விதமான நாடகங்கள் நிறையத் தயாரிக்க வேண்டும். பண்டைய தமிழரின் வீரத்தையும் வாழ்க்கை நெறிகளையும் உலகுக்கு எடுத்துச் சொல்ல அதன் மூலம் வழிவகை செய்ய வேண்டும்.

இலக்கியம்: இன்றைய இலக்கிய உலகம் ஆள் சார்ந்துதான் இருக்கிறது. அரசியலைவிட இலக்கிய உலக அரசியல் ரொம்ப மோசமா இருக்கு... நல்ல எழுத்துக்கு வரவேற்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆள் பார்த்து புகழும் நிலையே இருக்கு, அதெல்லாம் 2017-ல் மாறி துதிபாடுவதைவிட நல்ல இலக்கியத்துக்கு நல்ல எழுத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க முன்னணி எழுத்தாளர்கள் முன் வருவார்கள்... புதிய இலக்கிய படைப்பாளிகள் வேர் விடுவார்கள் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : வரலாறுகளை புனைவு என்ற பெயரில் ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கிறார்கள். நம் பண்டைய வரலாற்றை, வீர மறவர்களின் வாழ்க்கைக் கதையை முடிந்தளவுக்கு உண்மை சேர்த்து எழுத வேண்டும். எத்தனையோ இளம் படைப்பாளிகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.

பொருளாதாரம் : நம் நாட்டின் பொருளாதரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சில பல நல்ல திட்டங்கள் அதற்கான வேர்தான்... அது மெல்ல மெல்ல கிளை விட்டு இந்தாண்டில் இன்னும் சிறப்பான வளர்ச்சியை அடையும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : நாட்டோட பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் உயர்ந்தவர்களுக்கு ஒரு நியாயம் சாமானியர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் நிலை ஒழிய வேண்டும். எல்லாரையும் இந்தியராய் பார்க்க வேண்டும். மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தினை முன்னெடுக்கும் போது விருப்பு வெறுப்பு துறந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

விஞ்ஞானம் : இன்றைய நிலையில் விஞ்ஞான வளர்ச்சி நல்லாத்தான் இருக்கு. இன்னும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

என் விருப்பம் : உறவுகளைக் கொன்று, குழந்தைகள் உலகத்தை வேரோடு அளித்து எப்படிக் கெட்டுப் போகலாமோ அதற்கெல்லாம் வழி செய்யும் விஞ்ஞான வளர்ச்சியை முற்றிலும் ஒழிக்க முடியாது, ஏன்னா விஞ்ஞான வளர்ச்சி என்பது இப்போது வளர்ச்சியின் முதுகெலும்பாய்... தேவையற்றவற்றின் வளர்ச்சியை, அதன் பயன்பாட்டை முடிந்தளவு குறைக்க வேண்டும்.

அரசியல் : இப்போ கோடிகளில் பணம் சம்பாரிக்கும் இடம் இது மட்டும்தான். இதில் அப்படி வரும் இப்படி வரும் என்ற நம்பிக்கை எல்லாம் இல்லை... ஊழலில் ஊறி வருடங்கள் ஆயிருச்சு...

இனி மாற்றம் வரும் என்றெல்லாம் இல்லை என்றாலும் தற்போதைய சூழலில் நல்ல மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

என் விருப்பம் : அரசியல்ல நம்ம விருப்பம் எல்லாம் ஒண்ணுமில்லை... படித்தவர்களும் பண்பாளர்களும் அரசியலுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே குறிக்கோளின்றி மக்கள் நலன் காக்கும் மனிதர்கள் வரவேண்டும்.

-‘பரிவை’ சே.குமார்.


============================================================================
 

2017 எப்படி இருக்க வேண்டும்…..

2016 வருடம் முடிவுக்கு வந்து விட்டது. 2017-ஆம் வருடம் பிறந்து விட்டது.  இந்த வருடம் எப்படி எல்லாம் இருக்கப் போகிறது, எப்படி இருந்தால் நன்றாக இருக்கும், அடுத்த வருடத்தின் ஆரம்பம் வரை என்ன நடக்கப் போகிறது என்ற யூகமும், ஆசையும் இங்கே சொல்ல வேண்டும்.

என்னையும் இந்த ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட “எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கு முதலில் நன்றி.

2017 – எப்படி இருக்கப் போகிறது! ஜோசியம் சொல்ல எனக்கு தகுதி இல்லை. எனக்கு ஜோசியம் பிடிக்கவும் பிடிக்காது! எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மட்டுமே சொல்லட்டா….

அரசியல்: 2016 பல குழப்பங்களையும், அரசியல் தகிடுதத்தங்களையும், சினிமாவினை விட அதிகமான நாடகங்களும் நடந்தேறிய வருடம். ஒரு பெரிய கட்சி தனது தலைவியை இழந்த பிறகு நடந்த அரசியல் நாடகங்கள் கேவலம். இந்த வருடத்திலாவது நம் அரசியல்வாதிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. திருந்த முயற்சியாவது
செய்வார்கள் என்ற ஆசை உண்டு. நாடு முழுவதுமே நல்ல அரசியல்வாதிகள் இல்லை! ஹிந்தியில் சொல்வார்கள் – Kissa kursi kaa!
என்று நாற்காலி அரசியல் எங்கும்…. தமிழகம் பொறுத்தவரை எனது ஆசை,

நமது மக்கள் சினிமா மோகத்தினை இனிமேலாவது விட்டு, மெத்தப் படித்தவர்களை, பதவியில் அமர்த்தட்டும்…..

இந்தியா வல்லரசு ஆகும் என்ற கனவுகளோடு இருக்கும் கோடான கோடி
மக்களில் ஒரு கடைக்கோடியில் நானும் இருக்கிறேன். வருடத்தின் கடைசி பகுதியில் செல்லாக் காசு விவகாரத்தினால் நாடு முழுவதுமே பிரச்சனைகள், குழப்பங்கள். அது நல்லதா, கெட்டதா என்பதை விட அந்த
நடவடிக்கை மூலம் பல விஷயங்கள் வெளியே வந்தன. பதுக்கல்
கும்பல்கள் சில பிடிபட்டாலும், Common Man என அழைக்கப்படும்
பொதுஜனமும் கஷ்டங்களை அனுபவித்தார்கள். இந்த மாதிரி கஷ்டங்கள்
அனுபவித்தாலும் அவை நல்ல மாற்றத்தை உருவாக்கினால், அதன்
மூலம் நாட்டுக்கு நலம் உண்டானால் நல்லது….

அடுத்த வருட ஆரம்பத்திற்குள் நாட்டின் நிதிநிலை சரியாகி, உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் நல்ல இடத்தினை இந்தியா பெறட்டும்…..

அனைவருக்கும் கல்வி, நல்ல மருத்துவ வசதி, சீரான சாலைகள், கடைசி
கிராமங்கள் வரை போக்குவரத்து வசதிகள், மின்சார வசதி என அனைத்தும் கிடைக்க இந்த வருடமாவது வேலையைத் துவங்க
வேண்டும். இவை அனைத்தும் ஒரு வருடத்தில் செய்து முடிக்கக் கூடிய
வேலை அல்ல – ஆனால் நல்லதொரு தொடக்கமாவது இருந்தால்
பணிகளைச் செவ்வனே செய்து முடிக்கலாம். தன் வீடு, தன் குடும்பம்,
தனது வசதி என்ற சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் அகன்று,
நல்லெண்ணெம் கொண்டவர்கள் அரசாளும் அரியணையில் அமர்ந்து சீரிய
பணிகளைச் செய்யட்டும்……

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட
வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தால், நிச்சயம் நல்லதே நடக்கும்.

நல்லதே நடக்கட்டும்…..

அன்புடன்

வெங்கட்

புது தில்லி.



==============================================================================

ரஞ்சனி நாராயணன்  :


மாற்றங்கள் 2018

என்னிடம் கருத்துக் கேட்டதற்கு முதலில் நன்றி.

நீங்கள் கேட்காத ஒரு துறையில் ஏற்படக்கூடும் என்று நான் நினைக்கும் ஒரு மாற்றத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

சமீபத்தில் ஒரு இளம்பெண் எங்கள் குடியிருப்பிற்கு வந்து இரண்டு வீடுகள் வேண்டும் என்று கேட்டார் – வாடகைக்குத்தான். ஒரு வீட்டில் இவரும் இவர் கணவர், குழந்தை இருப்பார்கள்;

இரண்டாவது வீட்டில் இவரது மாமியார், மாமனார், திருமணம் ஆகாத மைத்துனர் இருப்பார்கள்.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு கசந்து முகர்ந்து கொள்வதைவிட இது தேவலை என்று எனக்குத் தோன்றியது. ரொம்பவும் அருகில் இருக்காமல், ரொம்பவும் தூரத்தில் இல்லாமல் பக்கத்திலேயே ஆனால் போதிய இடைவெளியுடன். அதாவது இடைவெளியுடன் கூடிய கூட்டுக் குடும்பம்.

வியப்பாக இருந்தாலும், இந்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது என்றே நினைக்கிறேன்.

‘தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு இல்லையா? ஆரம்பத்திலிருந்தே இந்த ஏற்பாடு தான். பெரிய பிள்ளைக்குத் திருமணம் ஆனவுடனேயே தனி வீடு – எங்களுக்கு அருகிலேயே – பார்த்து குடித்தனம் வைத்துவிட்டேன்’ என்று அந்த மாமி சாதாரணக் குரலில் சொன்னார்.

‘Gated Community’ என்று சொல்வார்கள். மொத்தக் குடும்பமும் ஒரே வளாகத்திற்குள் – தனித்தனியாக. இளம் வயதினருக்கு வேண்டிய சுதந்திரம். பெரியவர்களுக்கு பிள்ளைகள் அருகில் இருக்கும் தைரியம். வரவேற்கத்தக்க மாற்றம் என்று தோன்றுகிறது.

இனி நீங்கள் கேட்டிருக்கும் துறைகளில் நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள்:

கலை: இப்போதைய சினிமாக்களில் இருக்கும் அரைக் கிழங்கள், முக்கால் கிழங்கள், முழுக்கிழங்கள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்.

தொலைக்காட்சி சானல்கள் பெரியவர்களின் மனதை விஷமாக்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறுவர்களையும் குறி வைக்கின்றன. மனது பதறுகிறது. ஒரு சானலில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை சூர்யாவைப் பார்த்து ‘நான் உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். உங்களுடனேயே இருக்க வேண்டும்’ என்று சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.

கூடியிருக்கும் பெரியவர்கள், அந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் எல்லோரும் வெட்கம் என்பதே இல்லாமல் ரசித்துக் கைதட்டுகிறார்கள். நிச்சயம் இது அந்தக் குழந்தையின் தவறு அல்ல.

பெரியவர்களின் விஷமத்தனமான வேலை இது. இந்த மாதிரி சிறுவர்களின் மனதில் விஷத்தை விதைப்பவர்களை பொதுவிடத்தில் தூக்கில் தொங்க விடவேண்டும். அல்லது பொதுமக்களின் கைகளால் அடித்துக் கொல்லப்பட விட்டுவிட வேண்டும்.

விஜய் மற்றும் ஜீ (ZEE) தொலைக்காட்சி சானல்கள் இந்த மாதிரி கேவலமான விஷயங்களை போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இரு சானல்களின் உரிமையையும் ரத்து செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.

நான் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சில:

 குழந்தைகள் பங்கு கொள்ளும் போட்டிகளான சூப்பர் சிங்கர் போட்டிகளின் பெயர்களை இனி ‘சூப்பர் ஒப்பாரி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படும். தோல்வியும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்காமல் பெற்றோர்களும் மேடை ஏறி ஒப்பாரி வைப்பதுதான் ‘ரியாலிட்டி ஷோ’ என்ற மாயப்போர்வை இப்போதைக்கு அகலும் என்று தோன்றவில்லை. ரியாலிட்டி ஷோ என்பதை அழுவாச்சி ஷோ என்றும் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.

 லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், குஷ்புவும் இனி நம் வீடுகளுக்கு வந்து நம் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள். இதுவரை அமெச்சூர் நடிகர்களை வைத்து நடத்திய இந்த ஷோவில் நடிக்க எதிர்காலத்தில் பிரபல நடிகர்கள் ‘க்யூ’வில் நிற்பார்கள்.

அரசியல்:

தமிழ்நாட்டின் தலைவிதி என்ன என்பதுதான் பெரிய கேள்வி இப்போது.

முதல் மாற்றம்: ‘அம்மா’வின் ஆட்சியில் பாலும் தேனும் ஓடியது என்றால் ‘சின்னம்மா’வின் ஆட்சியில் பாலும், தேனும், பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து ஓடும் என்று எதிர்பார்க்கலாம்.

நாட்டின் பிரதமர் உரையைக் கூட ஒளிபரப்பாமல் ‘சின்னம்மா’ வின் கண்ணீர் மல்கும் உரையை ஒளிபரப்பும் தமிழ் சானல்கள்! என்றைக்கு தமிழ்நாடு தேசீய நீரோட்டத்தில் சேரப்போகிறது?

சமீபத்திய மிகபெரிய மாற்றமான ‘ரூபாய் நோட்டு வாபஸ்’ பற்றிப் பேசாமல் இந்த கருத்துரையை முடிக்க முடியாது.

பலர் (படித்தவர்கள் உட்பட) பல கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். புழக்கத்தில் இருக்கும் பண நோட்டுக்களை வாபஸ் வாங்குவதில் பிரதமர் மோதிக்கு எந்த சுயலாபமும் இல்லை. இதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டால் போதும்.

பிரதமர் மோடியின் துணிச்சல் பாராட்டத் தக்கது. மக்கள் கஷ்டப் பட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில்அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் என்ன முன்னேற்றம் கண்டோம்?

50 சதவீத கிராமங்களில் மின் வசதி இல்லை..

சாமான்யர்களை வங்கி கணக்கை துவக்க வைக்க முயலவில்லை.

பிரதமரே சொன்னது போல இருபத்து நாலு சதவிகிதம் மக்கள் மட்டுமே வருமானத்தைக் காட்டுகிறார்கள்.

அதைப்பற்றி இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே கவலைப்படவில்லை.

ஒரு ஒழுங்கு முறைக்குள் செயல் பட வேண்டுமென்றால் எல்லோர்க்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

பலர் தங்கள் பணத்தை ஏழை மக்களிடம் கொடுத்து கமிஷன் அடிப்படையில் மாற்ற முயலும்போதே தேங்கி கிடந்த பணம் வெளியில் வரத் தொடங்கி விட்டது என்பது புரியவில்லையா? இவ்வளவு பெரிய திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது பல இன்னல்கள், எதிர்பார்க்காத சிக்கல்கள் வரத்தான் செய்யும்..

மிக தைரியமான முடிவை நாட்டிற்காக எடுத்த மோடியும், அவருக்கு உதவி செய்தவர்களும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

இந்த 50 நாட்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது?  எத்தனை கறுப்புப்பணம் வெளியே வந்தது? என்று கேட்பவர்கள் அறிவிலிகள். இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி வந்தவர்களைக் கேள்வி கேட்டார்களா இந்த அறிவாளிகள்? நல்ல பலன் கிடைப்பதற்கு சில பல கஷ்டங்களை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

நல்லது செய்ய எண்ணும் ஒரு பிரதமர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நமக்குக் கிடைத்திருக்கிறார். அவருக்குக் கை கொடுப்போம்.



==============================
===================================

புதன், 25 ஜனவரி, 2017

170125:: புதனும் புதிரும்



சென்ற  வாரக் கேள்விகளுக்கு விடைகளைப்  பார்ப்போம். 

முதல்  கேள்விக்கு  நான்  நினைத்திருந்த  பதில், ஆறு. 

பாபு  முதலில்  திகைக்க வைத்துவிட்டார்! கணக்கு  சரியாத்தான்  போட்டிருக்கார்.  ஆனா  மைனஸ்  இருபத்தெட்டு  மைனஸ்  இருபத்தொன்பது  எல்லாம் எந்த  மைனா (பட்சி ) சொல்லியது  என்று எனக்குத்  தெரியவில்லை. அப்புறம்  மறுபடியும்  வந்து  மைனஸ் முப்பத்தொன்று, மைனஸ்  முப்பத்தொன்று ...   ஈஸ்வரா ! இது  என்ன  சோதனை!!! 

மாதவன்  சரியான பதில்  சொல்லியிருக்கார். பிறகு, பானுமதி. 

இரண்டாவது  கேள்விக்கு, ஒன்றே  ஒன்று மட்டும்  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன  என்றால், ...............   எனக்கும்  பதில்  தெரியாது. திட்டுபவர்கள்  எல்லோரும்  கெட்ட  வார்த்தைகள்  இல்லாமல்,  நல்ல வார்த்தைகள்  கூறித் திட்டலாம்!  யாராவது  பதில்  சொன்னால்  சரியாக  இருக்குதா  என்று  பார்க்க்கலாம்  என்று  நினைத்தால் ..........   ஹூம்!  


மூன்றாவது  கேள்விக்கு  பிரேம் நசீர்  என்று  கூறியவர்களுக்கு, நூற்றுக்கு  நூறு!  முதலில்  கூறிய  நெல்லைத் தமிழனுக்கு, சிறப்புப் பாராட்டுகள். 


நெல்லைத்  தமிழனுக்கு  அளிக்கப்பட்ட  பாராட்டுப்  பத்திரத்தில்  பாதியை  மைனஸ்  செய்கிறேன்.  --- யானை வரும்  பின்னே ; மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியை அவர்  தவறாக  கூறியதால்!  


சென்ற  வாரப்  புதிர்களுக்கு, ஆர்வத்தோடு  பங்கேற்று, எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன்  பதில்கள் அளித்திருந்த  அதிரா (உச்சரிப்பு சரிதானே?)  அவர்களுக்கு எங்கள்  சிறப்புப்  பாராட்டுகள். பிரேம் 'நசீராம்' ....  என்று  அவர்  எழுதிய  உடனேயே  அவர்  கூகிள் தேடல்  / மற்ற தேடல்கள் எதுவும்  செய்யவில்லை என்று  தெரிந்துகொண்டோம். !!!!  

13 X 13 = 139 என்று  எழுதிய பிருகஸ்பதிகள்  எல்லோரும் பத்து நிமிடங்கள் பெஞ்சு  மேல  ஏறி  நில்லுங்கோ. 

============================================


இந்த  வாரக்  கேள்விகள்:  

1) If yesterday becomes tomorrow, what will be the day after tomorrow?  


2)    What is {(circle - triangle) - right angle} ?   

3)  இயற்பெயர் ஐந்தெழுத்து,
     ஏற்ற பெயர் நான்கெழுத்து, 
     செல்லப்பெயர் மூன்றெழுத்து. 
     கின்னஸ் சாதனையாளர்.  
     யாரிந்த சினிமா பிரபலம்?  




செவ்வாய், 24 ஜனவரி, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: அதிர்ஷ்டக்காரி


     கேட்டு வாங்கிப்போடும் கதை பகுதியில் இந்த வாரம் பதிவர் ஸாதிகாவின் கதை இடம் பெறுகிறது.
     அவரின் தளம் எல்லாப்புகழும் இறைவனுக்கே.
      சமீப காலமாக பதிவுகள் எதுவும் எழுதுவதில்லை.  கணினி சரியில்லை என்பது அவர் மெயிலிலிருந்து தெரிகிறது.  அவ்வப்போது ஃபேஸ்புக் பக்கம் வருகிறார்!  அவர் முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு தொடர்கிறது. 





==================================================================


சிறுகதை பெயர் அதிர்ஷ்டசாலி

இவள் புதியவள் மாத இதழில் வெளிவந்தது.

கதை பிறந்த கதை.

இது உண்மையில் நடந்த சம்பவம்.சில பல கற்பனைகளையும் கோர்த்து எழுதினேன்.  



=====================================================================================


அதிர்ஷ்டக்காரி
ஸாதிகா  


கையில் வைத்திருந்த புகைப்படத்தில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை அலமேலுவால்.தன் நாத்தனார் விசாலம் பெண் ஜானகிக்கா இந்த வரன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக சற்று பொறாமையாக இருந்தது.
ஜானகி மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்.மரப்பாச்சி பொம்மைப்போன்று குச்சி குச்சிகளாக கைகளும் கால்களும்,கூந்தல் கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு இருப்பது போன்று புஸு புஸு வென்று காற்றில் அலை அலையாக பறக்கும் படி இல்லாமல் ..மொத்தத்தில் ரசிக்கும் படியான தோற்றம் இல்லை.
உடன் பிறப்புகள் “ஏடி குள்ளப்பட்டா ஜானகி..கருப்பி”என்று சண்டை பிடிக்கும் பொழுது கூறும் வார்த்தைகளைப்பார்த்து தன் நாத்தனார் மகளின் முடியை கோதியபடி ”இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் கட்டி வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும் போலிருக்கு மன்னி”கேலியும் சீரியஸும் கலந்த குரலில் கூறி பெருமூச்சு விடுவதை அலமேலு பல முறை கேட்டு இருக்கின்றாள்.அவளுக்கு அமைந்த வரனை பார்த்து உள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி பிரவாகம் எடுக்காமல் அதிர்ச்சி கலந்த பொறாமை உணர்வு தலை தூக்கியதை அலமேலுவால் கட்டுப்படுத்த இயலவில்லை.
”எப்படி அண்ணி இந்த வரன் அமைந்தது..?”
“வக்கீல் வீட்டம்மாதான் சொல்லி அனுப்பினா.அவள் பையனுடைய பிரண்டாம்.”
“பையன் இப்ப யு எஸ்ஸில் என்ன பண்ணுறான்.?”
“இங்கே ஐ ஐ டி யில் டிகிரி முடிச்சுட்டு,அங்கே போய் எம் எஸ் பண்ணி அங்கே ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்”
“அப்ப..இனி நம்ம ஜானகி யு எஸ் பறந்துடுவா?”
“கொழந்தே..எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்.நல்ல வரனா அமைய வேண்டும் என்று நான் கோயில் கோயிலாக போன முகூர்த்தம் கடவுள் கண்ணை திறந்துட்டார்.”
“அப்ப அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம்..ஜானகி கொடுத்து வச்சவதான்.”
அலமேலு மட்டுமல்ல கேட்பவர் அனைவருக்கும் ஆச்சரியமாக விழி விரித்ததென்னவோ உண்மைதான்.
முகூர்த்த மேடையில் புகை மண்டலத்துக்கிடையே முகம் களைப்புடன் ஆனாலும் களைப்புக்கிடையிலும் சந்தோஷம் தாண்டவமாட ஐயர் கூறிய மந்திரங்களை மெல்லிய குரலில் திரும்ப உச்சரித்துக்கொண்டிருந்தான்.
“ஜானகிக்கு வந்த லக்கை பாரேன்”
“பையனோட பர்சனாலிடிக்கும் ஜானகிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.”
“எப்படி இவளை பண்ணிக்க சம்மதித்தான்”
”சிலருக்கு அழகு பெரிசா தெரியாது.அந்த ரகத்தை சேர்ந்தவனா இருப்பானாக்கும் பையன்.”
“ஐயோ நானெல்லாம் என் பையனாக இருந்தால் இப்படி பொருத்தமில்லாத பெண்ணை எல்லாம் கட்டி வைக்க மாட்டேன்.”
“சரி சரி இப்ப என்ன ஆகிப்போச்சு.மனப்பொருத்தம் தான் முக்கியம்.எப்படியோ அமோகமா வாழட்டும் என்று வாழ்த்துறதை விட்டு விட்டு இதென்ன பேச்சு”இடையில் வந்த ஒரு மடிசார் மாமியின் குரலுக்கு அடிபணிந்து அந்த இடத்தில் பேச்சு நின்றாலும் ஆங்காங்கே இப்படி பேச்சுக்கள் அரங்கேறிய வண்ணம் இருந்ததென்னவோ உண்மை.
ஆயிற்று
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம்.
பெரிய டிராலி பேக்குகள் சகிதம் பயணத்துக்கு தயாராக ஜானகி நின்றிருந்தாள்.விசாலம் கலங்கிய கண்களுடன்.
அலமேலுதான் தன் நாத்தனார் பெண்ணிடம் மெதுவான குரலில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தாள்.
“என்னவோடி ஜானகி,இப்படி வரன் உனக்கு அமையும் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.உன் அம்மாகிட்டே உனக்கு திருஷ்டி சுற்றி போடுன்னேன்.போட்டாளா?”
“எதுக்கு அத்தே திருஷ்டி..”
“ஜானகிக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாருன்னு விழி விரிக்காதவ இல்லை.அத்தனை பேரும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்”
“ஏன் அத்தே..நீங்கள் எல்லோரும் நான் ரொம்ப அதிர்ஷ்ட காரின்னா நினைச்சுட்டு இருக்கீங்க”
“பின்னே”ஒரு வினாடி மவுனமாக இருந்த ஜானகி பெருமூச்சு விட்டதில் கண்கள் கலங்கியது.
ஏண்டி ஏன் கண்ணெல்லாம் கலங்குது சந்தோஷமாகத்தானே இருக்கே.மாப்பிள்ளை உன்னை நல்லா வச்சிருக்காருதானே”
“அவரு நல்லாத்தான் வச்சி இருக்காரு அத்தே.ஆனால் நீங்கள் எல்லாம் சொல்லுறாப்போல் நான் கொடுத்து வச்சவள் இல்லை”
“என்னடி இப்படி புறப்படும்பொழுது குண்டை தூக்கிப்போடுறே?”
“இல்லே அத்தே.அவரு தங்கமான மனுஷர்தான்.என்னை தங்கமாய் தாங்கறார்தான்.ஆனால் இத்தனைக்கும் நான் தகுதிதானா? அவருக்கு பொருத்தம் இல்லாத அழகில் இருக்கேனே
நாலு பேர் நக்கலா பேசும் பொழுது கூனி குறுகி போய்டுறேனே.அவர் பக்கத்திலே நிக்கறச்சே வர்ற தாழ்வு மனப்பான்மையை கட்டுப்படுத்த முடியலே அத்தே.உண்மையில் நீங்கள்ளாம் நினைக்கறாப்போல் நான் அதிர்ஷ்ட காரி இல்லேத்தே.”
அலமேலு வாயடைத்து நின்றாள்.