வியாழன், 5 ஜனவரி, 2017

ஜனவரி எதிர்பார்ப்புகள் - சக பதிவர்களின் கருத்துகள்.


     இப்போது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  அதுதான் வழக்கமும் கூட.  எதிர்பாரா குறுகிய நேரத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன.

     ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 


     இந்தக் கேள்வியை நம்முடைய பதிவுலகத் தோழர்களிடம் கேட்டபோது அவர்களிடமிருந்து வந்த கருத்துகள்...  இந்தப் பகுதிக்கு மேலும் சில நண்பர்களிடமிருந்து வந்திருக்கும் கருத்துகள் தொடர்ந்து அவ்வப்போது இடம்பெறும்.  முதலில் வந்த பதில் முதலில் என்கிற வகையில் இந்த வாரம் இரண்டு மூத்த பதிவர்களின்கருத்துகள். 



     எங்கள் கேள்விகளை மதித்து அன்புடன் பதில் அளித்தமைக்கு நன்றி வல்லிம்மா...  நன்றி வைகோ ஸார்.



ரேவதி நரசிம்மன் :







   என்னென்ன மாற்றங்களை விரும்புகிறேன் என்று மட்டும் சொல்கிறேன். எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை.
 

   பொருளாதாரத்தில் இப்பொழுது எல்லோரையும் வதைத்துக் கொமண்டிருக்கும் 500, ஆயிரம்  தொந்தரவுகள் ஒழிய வேண்டும் . ஒரே நாட்டில் ஏழைகளும் மத்திமர்களும் மட்டும் துயரம் அடைய அரசியல் வாதிகளும்,பண முதலைகளும் செழிக்கும் நிலை மாறவேண்டும்.
 

   அரசியலில்  அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் கையில் அதிகாரம் போகக்கூடாது.
 
 
   தட்டிக் கேட்டு சண்டப் பிரசண்டர்களை விலக்க வேண்டும். பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து மன சாட்சி சொல் கேட்டு நடக்கும் தலைவர்கள் வரவேண்டும். மிகப் பெரிய ஆசை. விருப்பப் படுவதில் தப்பில்லையே.
 

   விஞ்ஞான  வளர்ச்சிக்கு ஏதுவாக சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்முறைப் பயிற்சிகள் கொடுத்து, அந்த வகுப்பை மகிழ்ச்சிக்குரிய படிப்பாக மாற்றவேண்டும்.
 
 
  எத்தனையோ இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் பல சமயம் ஆரம்ப நாட்களிலேயே முடக்கப் பட்டுவிடுகின்றன. உரியவர்கள் அவர்களை ஊக்குவித்து முன்னேற வைக்க வேண்டும்.
 
 
   கலை ,இலக்கியம்  பற்றி எனக்குச் சொல்லக் கூடிய அளவுக்கு  தெளிவு போதாது. இரண்டிலும் வன்மை இல்லாமல் இனிமை ஓங்கவேண்டும் என்பதே ஆசை.
 
 

==================================================================
 


வை. கோபாலகிருஷ்ணன்   ::





//ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?//

பொதுவான முன்னுரை:

மாற்றங்கள் மட்டுமே எப்போதுமே மாறாதவை. அது உலக நியதியாகும். இதில் யாரும் எந்த மாற்றங்களையும் கொண்டுவந்து எதையும் நிரந்தரமாக ஆக்கிக்கொள்ளவே முடியாது. 

பஞ்ச பூதங்களான காற்று, நீர், நெருப்பு, ஆகாசம், பூமி ஆகிய இவை ஐந்து மட்டுமே என்றும் மாறாதவை. இதெல்லாம் இயற்கையின் (ஆண்டவனின்) படைப்புகள். 

இவைகளில் எப்போதுமே மாற்றங்கள் நிகழாது. அவ்வப்போது இவை எச்சரிக்கும் சீற்றங்களை மட்டுமே நாம் உணர முடியும். 

[உதாரணம்: (1) தென்றல் காற்று, புயல் காற்று; (2) பலத்த மழை, வெள்ளம், சுனாமி, கடலின் கொந்தளிப்பு, கடல் அலைகளின் சீற்றம்; (3) தீ விபத்துகள், காடு தீப்பற்றி எரிவது, எரிமலை வெடித்து குழம்பாக ஓடுவது; (4) இடி, மின்னல்; (5) பூகம்பம், நில நடுக்கம் ..... ஆகியவை]. 

இவற்றுக்கு மட்டும் எப்போதுமே முற்றிலுமான அழிவு என்பது கிடையாது. 

மற்றபடி மனிதனால் கண்டு பிடிக்கப்படும் அல்லது ஆக்கப்படும் அனைத்துக்குமே மாற்றங்களும், ஒருநாள் அழிவும் நிச்சயம் உண்டு. மாடல்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்றைய புதுக் கண்டுபிடிப்பு நாளைக்கு பழசாகவும் அவுட்-ஆஃப்-பேஷனாகவும் ஆகிவிடும். அவற்றின் ஆயுளும் கம்மிதான். தூக்கிக் குப்பையில் போட வேண்டியதுதான்.

கலை:

கலைகள் எப்போதும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். புதுப்புது கலைஞர்கள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள். பழைமையான கலைகள் சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும். புத்தம் புதிய கலைகள் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் ரஸனைக்கு ஏற்ப புதுப்பரிமாணத்தில் கொடுக்கப்பட்டு, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும்.

இலக்கியம்:

இனி, இலக்கியம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கக்கூடும். இதிலெல்லாம் ஆர்வம் காட்டிப் படித்து வந்தவர்களும், எழுதி வந்தவர்களும், பகிர்ந்து கொண்டவர்களும் இப்போது மிகக் குறைவாகவே உள்ளனர். 

இவையெல்லாம் பழைய பஞ்சாங்கம் போன்றவைகளாக தோன்ற ஆரம்பித்து வெகுநாட்கள் ஆகி விட்டன. இன்று யாருக்கும், எதற்கும், இதிலெல்லாம் (பழைய பஞ்சாங்கங்களைப் பார்ப்பதில்) நேரமோ ஆர்வமோ ரஸனையோ இருப்பது இல்லை.  

சமீபத்திய நவீன இலக்கியமாகத் திகழ்ந்து வந்த வலைப்பதிவுகளின் நிலைமையும் இதிலிருந்து தப்பவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வலையுலக ஆக்கங்களின் தரமும், அதற்கான வாசகர்களின் பின்னூட்ட வரவேற்பும் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.  

இந்த மகத்தான மாற்றத்திற்கு நல்லதொரு புத்துயிர் கொடுக்க வேண்டி ‘எங்கள் ப்ளாக்’ செய்துவரும் ’கேட்டு வாங்கிப் போடும் கதைகள்’ + ‘நெல்லைத்தமிழன் அவர்களின் சமையல் குறிப்புகள்’ போன்றவற்றை நாம் இங்கு சற்றே நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்ளலாம்.

மிகச் சுருக்கமாகவும், சுவையாகவும், படத்துடனும், காணொளிகளுடனும் பகிரப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றைப் பார்ப்பதும், படிப்பதும், லைக் போடுவதும், ஷேர் செய்துகொள்வதும், உடனே அவற்றை டிலீட் போட்டு விடுவதிலும்தான் இன்று பலருக்கும் நேரம் போய்க்கொண்டிருக்கிறது.  இலக்கியமாவது ...... வெங்காயமாவது ?

பொருளாதாரம்:

வரும் ஓராண்டில் நம் நாட்டின் பொருளாதாரத்தில் மாபெரும் மாற்றத்தினை நாம் ஒவ்வொருவரும் உணர முடியும். 

[இப்போதே உணர ஆரம்பித்துள்ளோம் என ஆங்காங்கே பலரும் முணுமுணுப்பது என் காதிலும் விழத்தான் செய்கிறது]. 

இந்த மாபெரும் பொருளாதார மாற்றம் நம்மை எங்கு கொண்டுபோய் விடக்கூடும் என்பதை இப்போது நம்மால் யூகித்துச் சொல்ல இயலாமல்தான் உள்ளது.  

நல்லதே நினைப்போம் ..... நல்லதே நடக்கட்டும் என்பதே என்னைப்போன்ற சாதாரண (ஏழை மற்றும் நடுத்தர வர்க்க) மக்களின் கருத்தும், எண்ணமும், எதிர்பார்ப்பும் ஆகும்.

விஞ்ஞானம்:

அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்தே ஆக வேண்டியவைகள் என்பதை யாருமே மறுக்க முடியாது. இவற்றின் வளர்ச்சி மனித சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் ஒருபோதும்  அச்சுறுத்தலாக இல்லாமல், ஆக்க பூர்வமாக மட்டுமே இருக்க வேண்டும்.   

சமீபத்தில் சென்னையை கலங்க வைத்த வர்தா புயலின் வருகையை முன்கூட்டியே அறிவித்து, எச்சரிக்கை செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவும் மேற்கொண்டு, பெரும்பாலும் உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவியுள்ளது, மனிதனின் அறிவியல் + விஞ்ஞான சாதனைகள் மட்டுமே என்பதை நாம் யாரும் மறுப்பதற்கு இல்லை. 

இதுபோன்ற ஆக்க பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிகளும், ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாமும் ஒத்துழைப்பினை நல்கி, நம் அரசாங்கமும் நிறைய பண ஒதிக்கீடுகள் செய்யத்தான் வேண்டும்.

அரசியல்:

வரும் ஓராண்டுக்குள் அரசியலில் மாபெரும் மாற்றங்கள் நிகழக்கூடும் என்பது என் கணிப்பு.

மத்திய அரசு மேலும் ஸ்திரத்தன்மையை அடையக்கூடும். மாநில அரசாங்கத்தில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழக்கூடும். 

மக்களுக்கு இதுவரை இல்லாத மாபெரும் விழிப்புணர்வு ஏற்படக்கூடும். 

யார் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஆட்சி செய்தாலும், ஏழை எளிய மக்களின் நலனே கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கும். அப்போதுதான் யாரும் வலிமையுடன் தொடர்ச்சியாக ஆட்சியே செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாக மாற்றங்கள் இருக்கும்.  

-oOo-

என் மனதில் பட்ட கருத்துக்களை இங்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்திற்கும், குறிப்பாக என் அருமை நண்பர் ‘ஸ்ரீராம்’ ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் ......
வை. கோபாலகிருஷ்ணன்


=====================================================

25 கருத்துகள்:

  1. நல்ல எதிர்பார்ப்புகளோடு 2018க்கு வரவேற்பு தருவோம். மூத்த வலைப்பதிவர்களின் கருத்து உற்று நோக்கத்தக்கனவாகும். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புத்தாண்டில் மனிதம் தழைக்கட்டும்
    தம +1

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்துகள்.... அடுத்து வரப் போகும் கருத்துகளையும் படிக்க ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  4. மூத்தவர்களின் கருத்துகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. மூத்த பதிவர்களின் கருத்தை வாங்கிப் பிரசுரித்தமைக்குப் பாராட்டுக்கள் எங்கள் பிளாக் ஸ்ரீராம்.

    ரேவதி நரசிம்ஹன் அவர்களின் ஆசை, எங்கள் எல்லோருடையதும். இது நிறைவேறுவது மிகவும் கடினம்.

    கோபு சார், சுருக்கமாக 'மாற்றம் ஒன்றே மாறாதது', 'மாற்றம் என்பது மானிடத் தத்துவம்' என்பதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார். என்னைப் பொருத்தவரையில், பிளாக் எழுத்துக்கள் ஒரு காலத்தில் குறைந்த அளவில் பத்திரிகைகள் செய்துகொண்டிருந்ததை விரிவாகச் செய்கின்றன. நிறைய பல்சுவை இடுகைகள், பயணங்கள், இலக்கியச் சுவை, கதைகள், அனுபவங்கள் என்று பரந்துபட்ட தளங்களில் பயணிக்கின்றன. உடனுக்குடன் அவற்றுக்கு வரும் நல்ல பின்னூட்டங்களும், இடுகைகளின் தரத்தை உயர்த்துகின்றன. படிப்பதற்கும் நன்றாக இருக்கின்றன. மற்றபடி, நீங்கள் சொல்லியபடி, மற்ற சமூக ஊடகங்கள், வெறும் 'லைக்ஸ்'ஸிலேயே காலத்தை ஓட்டுகின்றன.

    ஒரு பானைச் சோற்றுக்கு இரு சோறு பதம் என்பதோடு நிறுத்திவிடாமல், இன்னும் பல மூத்த பதிவர்களிடம், வித்தியாசமான தலைப்புகளில் அவர்கள் கருத்தை வாங்கிப் பிரசுரியுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஹை.. வல்லிம்மா ..
    வல்லிம்மா எதை சொன்னாலும் அதில் அன்பு அன்பு அன்பு மேலும் அனைவரின் பொது நலம் மட்டுமே நிறைந்திருக்கும் அவர்களின் விருப்பம் நிறைவேறணும் என்பதே எனது ஆசையும்

    பதிலளிநீக்கு
  7. கோபு சாரின் சீரிய காலத்துக்கேற்ற கருத்துக்கள் அட்டகாசமான முன்னுரையுடன் மிக அருமை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு அண்ணன் யதார்த்தத்தை அழகா தெளிவா சொல்லியிருக்கிறீங்க.

      நீக்கு
  8. மூத்த பதிவர்கள் எதிர்காலம் குறித்து சிறப்பாகவே சிந்தித்து பதில் அளித்துள்ளனர்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து மன சாட்சி சொல் கேட்டு நடக்கும் தலைவர்கள் வரவேண்டும். மிகப் பெரிய ஆசை. //

    -- வல்லிம்மா

    //யார் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஆட்சி செய்தாலும், ஏழை எளிய மக்களின் நலனே கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கும்.//

    -- கோபு சார்.

    நல்ல மனங்கள் வாழ்க்!

    இதெல்லாம் நடந்தால் பொற்காலம் தான்!

    பதிலளிநீக்கு
  10. என்னையும் கேட்டிருந்தீங்க! :( மறந்தே போயிட்டேன். ஆனாலும் இங்கே வல்லி சிம்ஹனும், வைகோவும் சொல்லி இருப்பவை தான் என் கருத்துகளும். கலை, இலக்கியம் குறித்து எனக்கும் ஒன்றும் தெரியாது.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளார்கள். நம் எல்லோர் மனதிலும் ஓடும் எண்ணங்களின் பிரதிபலிப்பு. என்னால் எழுத இயலாத நிலை அப்போது. அதனால் மன்னிக்கவும் ஸ்ரீராம்.

    கீதா: ஸ்ரீராம் நான் உங்களுக்கு அனுப்பிவிட்டு இதோ வந்துவிட்டேன் வாசிக்க...கிட்டத்தட்ட வல்லிம்மா சொல்லியிருப்பதை நான் நீட்டி முழக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வைகோ சார் ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்துகள்!!! அதிலும் சில நான் சொல்லியிருப்பது போலத்தான்.....இன்னும் பலரது கருத்துகளையும் அறிய ஆவலுடன் தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு

  12. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  13. //பணபலம் மட்டும் பேசும் காலம் ஒழிந்து, மனசாட்சி சொல் கேட்டு நடக்கும் தலைவர்கள் வரவேண்டும். - வல்லிம்மா என்கிற திருமதி. ரேவதி நரசிம்மன் ://

    நல்லதொரு விருப்பம்தான்.

    இருப்பினும் என் கண்களுக்கு எட்டியவரை மனசாட்சிக்கு பயந்து நடப்பவர்கள் அரசியலில் யாரும் இருப்பதாகவே தெரியவில்லை. :(

    பதிலளிநீக்கு
  14. என்னுடைய நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் கேட்டு வாங்கி பதிவாக இங்கு வெளியிட்டுள்ள ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள்.

    இங்கு வருகை தந்து கருத்திட்டுள்ள அனைவருக்கும் என் நன்றிகள்.

    திரு. நெல்லைத்தமிழன், திரு. ஜீவி ஸார் மற்றும் சகோதரி திருமதி. ஏஞ்சலின் மேடம் ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. Thulasidharan V Thillaiakathu said...

    கீதா: வைகோ சார் ஒவ்வொன்றையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்துகள்!!! //

    தங்களுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. //athira said...
    கோபு அண்ணன் யதார்த்தத்தை அழகா தெளிவா சொல்லியிருக்கிறீங்க.//

    ஏற்கனவே ஒருமுறை எங்கோ காணாமல் போய் பிறகு என்னால் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவரும், ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானவருமான http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    எங்கட

    அதிரடி,
    அலம்பல்,
    அட்டகாச,
    அழும்பு,
    ஸ்வீட் சிக்ஸ்டீன் +++++
    பிரித்தானிய மஹாராணியாரின் ஒரே செல்லப்பேத்தி
    ’அதிரா’வின் அபூர்வ + அதிசய வருகைக்கும்
    கருத்துக்களுக்கும் என் நன்றிகள். :)

    அன்புடன் கோபு அண்ணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //////பிறகு என்னால் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவரும், ////// அஞ்சூஊஊஊ கொஞ்சம் கெதியா ஓடி கம்:), பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டுபோய் சொல்லிச்சுதாம் நான் தான் கிணறு வெட்டினேன் என:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை :) ஹாஅ ஹா ஹா.

      நீக்கு
  17. //athira said...
    அஞ்சூஊஊஊ கொஞ்சம் கெதியா ஓடி கம்:), பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டுபோய் சொல்லிச்சுதாம் நான் தான் கிணறு வெட்டினேன் என:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை :) ஹாஅ ஹா ஹா.//

    அஞ்சூஊஊஊஊ, நீங்க அதிரஸம் ஆஃபர் செய்திருந்தீர்களே .... அந்த அதிரடி அதிரஸ அதிரா உங்களைப்போய் ’பூதம்’ எனச்சொல்லி, பூசாராகிய தன்னை அணில் என்று சொல்லி, உடம்பெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு வம்பு இழுத்திருக்கிறாள்.

    அதனால் கெதியாக ஓடியாந்து, என்னான்னு கேட்டு, தேம்ஸ் இல் ஒரே அமுக்கா அமுக்குங்கோ .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)))))

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... எங்கிட்டயேவா !

    பதிலளிநீக்கு
  18. @ATHIRA எவ்ளோ நாளா சான்ஸ் பார்த்திட்டிருந்திங்க மியாவ் ..இதான் சாக்குன்னு என்னை பூதம் என்று சொன்னதற்கு உங்களை தேம்ஸ் ரிவர்ல முக்கி எடுத்துட்டு பார்ட்டி கொடுப்பேன் எல்லாருக்கும்

    இது கோபு அண்ணா வச்சிருக்க தங்க வெள்ளி நாணயங்கள் நீங்க போட்டிருக்க வைர நெக்லஸ் மேலே சத்தியம் :))

    பதிலளிநீக்கு
  19. நோஓஓஓஓஒ நா மாட்டேன்ன், மாட்டேன்ன் இப்போ தேம்ஸ் ரொம்ப குளிருது:),

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!