திங்கள், 21 ஆகஸ்ட், 2017

"திங்க"க்கிழமை : சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு 

     நான் 'திங்க'க் கிழமைக்குப் பகிர்ந்துகொள்வது எல்லாம் எனக்குப் பிடித்த ஐட்டங்கள்தான். அனேகமாக ஒரு தடவை செய்து எனக்குப் பிடித்திருந்தால், உடனேயே அடுத்த நாளும் திரும்பிச் செய்துவிடுவேன். ரெண்டு மூணு முறை பண்ணியாச்சுன்னா எனக்கு அதுல விருப்பம் போயிடும். [ பயங்கர வன்முறையா இருக்கே...! - ஸ்ரீராம் ]  அதற்கப்புறம் எப்போ திரும்ப பண்ணுவேன் என்பதே தெரியாது. இப்போ அடை பண்ணி, 3-4 மாதத்துக்கு மேல ஆயிடுச்சு. இந்தமுறை, சேப்பங்கிழங்கு வைத்துப் பண்ணும் மோர்க்கூட்டு எப்படிப் பண்ணறதுன்னு சொல்றேன்.  [ ஒருகாலத்தில் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் எனக்கு இஷ்டம்! - ஸ்ரீராம் ]

     சேப்பங்கிழங்கு என்றாலே எனக்கு என் அப்பா ஞாபகம்தான் வரும். அவர், பொங்கல் சமயம் அவருடைய அப்பா ஸ்ராத்தத்துக்கு திருனெவேலி போகும்போது, அங்கிருந்த நல்லதா ஒரே சைஸ்ல சேப்பங்கிழங்கு வாங்கிவருவார். (அதுதான் சீசன்). அவர் காய்கறி தேர்ந்தெடுப்பதைப் பார்த்து, நான் கற்றுக்கொண்டு, அதையே என் குழந்தைகளுக்கும் காண்பித்துக் கொடுத்திருக்கிறேன். நெல்லைல, சேப்பங்கிழங்கு முத்தலாக பூமியிலேயே விட்டுவைத்து, ‘முட்டான்’ என்ற பெயரில் விற்பார்கள். அது அவ்வளவு எனக்குப் பிடிக்காது. அதேமாதிரி ‘சிறுகிழங்கு’ம் நெல்லைல நாங்க அடிக்கடி உபயோகப்படுத்துவோம். அதன் வாசனை ரொம்ப நல்லாயிருக்கும். இங்கேயும் ‘கூர்க்’ என்ற பெயரில் கடையில் கிடைக்கும். (கேரளத்தவர்கள் விரும்பி சாப்பிடுவது)



     எனக்கு ஒரு சந்தேகம். இந்த மோர்க்கூட்டை யாராவது இதற்கு முன்னால் செய்து சாப்பிட்டிருப்பீர்களா என்று.  [ யெஸ்ஸு ...!  - ஸ்ரீராம் ] இப்போ செய்முறை.



     முதல்ல 6-7 சேப்பங்கிழங்கை வேகவைத்துக்கொண்டு, தோல் எடுத்துட்டு, ஆறினவுடன், மீடியம் சைஸ் துண்டங்களாக செய்துகொள்ளுங்கள். ஒரு சேப்பங்கிழங்கில் 3-4 துண்டம்தான் போடணும். ரொம்பப் பெரிசா இருந்தால் குறுக்குவாட்டிலும் துண்டாக்கலாம்.



     2 மேசைக்கரண்டி தேங்காய், 2 பச்சை மிளகாய் (காரம் கம்மியாக இருக்கணும்னா 1 போதும்) சேர்த்து வழுமூன மிக்சில அரைத்துக்கொள்ளுங்கள். நான் தண்ணீருக்குப் பதிலா, மோர் சேர்த்து அரைப்பேன்.  அரைக்கும்போதே, தேவையான உப்பையும் இதோட சேர்த்துக்குங்க.



     இப்போ, ஒரு பாத்திரத்துல கூழான மோர், மஞ்சத் தூள், தேங்காய் பேஸ்ட், கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து நல்லா கலக்குங்க. அதோட திருத்தி வைத்திருக்கிற [ ஏன்? தப்புத் தப்பா இருக்குமா நெல்லை?  ஹிஹிஹி..... - ஸ்ரீராம் ] சேப்பங்கிழங்கையும் (வேகவைத்து, தோலுரித்துத் திருத்திவைத்திருப்பது) சேர்த்துக்கோங்க.. இப்போ தேவைனா கொஞ்சம் உப்பு சேர்த்துக்குங்க. இதை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூனால் கலக்கிக்கொண்டே சுட வைக்கவும். இல்லைனா, ஒரு இடத்துலமட்டும் சூடு அதிகமாகி மோர் திரிஞ்சமாதிரி ஆயிடும். ‘பதைக்கற’ அளவுவரை [ அப்படீன்னா?! - ஸ்ரீராம் ] சூடாக்கணும். நான் என்னோட விரலை (சுத்தமாத்தான்) விட்டுப் பார்ப்பேன். நல்ல பொறுக்கும் சூடுவரை சுடவைக்கலாம். அப்புறம் அடுப்பை அணைத்துவிட்டு, ஸ்பூனால இதைக் கிளறிக்கோங்க. (சூடு எல்லா இடத்துக்கும் பரவணும் என்பதற்காக).



     இனிமே திருவமாறறதுதான். தேங்காய் எண்ணெயில், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து திருவமாறவேண்டியதுதான். [ஸ்ஸ்ஸ்ஸ்....  சுவை! - ஸ்ரீராம் ]



     இந்த சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டுக்கு எனக்கு எதுவுமே தொட்டுக்கவேண்டாம். சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுடுவேன். ரெண்டு மூணு வருஷம் கழித்து இதனைச் செய்ததால் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. மறு நாளும் திரும்பவும் செய்தேன். ஆனால் அன்று, உருளை காரக்கறியும் செய்தேன். ஹெல்த் பார்வைல, உருளை காரக்கறி இதற்கு நல்ல காம்பினேஷன் இல்லை. சாதாரண பீன்ஸ், கத்தரி, வெண்டை போன்ற கறிகளே நல்லா இருக்கும்.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.




53 கருத்துகள்:

  1. இதையே என்னோட அம்மா மி.வத்தல், வெந்தயம், தேங்காய்த் துருவல், கொஞ்சம் போல் அரிசி வறுத்து அரைத்துச் செய்வார்கள். எனக்கு அவ்வளவாப் பிடிக்காது! இங்கே நம்ம ரங்க்ஸ் வேண்டாம்னு ஓட்டமா ஓடிடுவார்.

    பதிலளிநீக்கு
  2. போணி ஆகாது என்பதால் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் இந்த முறையில் செய்வது பிடிக்கும்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  4. ஸேம் ஸேம் ரெசிப்பி நெல்லை!!! ரொம்பப் பிடிக்கும்...

    ஸ்ரீராம் பதைத்தல் என்றால் கொதிக்காமல், கொஞ்சமாக நுரைத்து - நுரையை பதை என்று அந்தப் பக்கத்தில் சொல்லுவது வழக்கம். சோப்பிலு பதை வருவோ (சோப்பில் நுரை வருமோ) என்று எங்கள் ஊரிலும் கேட்பதுண்டு...பதை என்றால் நுரை

    //அதேமாதிரி ‘சிறுகிழங்கு’ம் நெல்லைல நாங்க அடிக்கடி உபயோகப்படுத்துவோம். அதன் வாசனை ரொம்ப நல்லாயிருக்கும். இங்கேயும் ‘கூர்க்’ என்ற பெயரில் கடையில் கிடைக்கும். (கேரளத்தவர்கள் விரும்பி சாப்பிடுவது)// ஆம் நான் ஊரில் இருந்தவரை நிறைய சாப்பிட்டிருக்கேன்...இங்கு வந்த பிறதுதான் அதைக் காண்பதே அரிது...பொங்கல் சமயம் மட்டும் கண்ணில் தென்படும்....கேரளத்தில் இதனை கூர்க்கங்கிழங்குனு சொல்லுவாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு பிடித்தமான ஒன்று..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. கீதாக்கா அந்த மெத்தடில் செய்வதை நாங்கள் தேங்காய் அரைச்ச குழம்புனு எங்கள் வீட்டில் சொல்லுவார்கள். இதில் உளுத்தம்பருப்பும் வறுத்து தயிர் சேர்த்துச் செய்வதை எரிகொள்ளி என்றும் ஒரு டைப் மோர்க்குழம்பு என்றும் சொல்லுவார்கள்...நெல்லை கூட இங்கு ஒரு முறை சொன்ன நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சேம்பு மிகவும் பெரிதாக முளைக்கும்...வெங்கட்ஜி கூட அதைப் பற்றிப் பதிவு போட்டிருந்தாரே...மற்றபடி சிறிய சேம்பும் கிடைக்கும். ஆனால் எங்கள் வீட்டில் தோட்டத்தில் முளைப்பதையே வெங்கட்ஜி போட்டிருந்த மெத்தடில் செய்வார்கள். நாங்கள் மோர், தயிர் பயன்படுத்தும் பழக்கம் இல்லாததால் வீட்டில் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  8. நெல்லை உங்கள் செய்முறையும் படங்களும் செமையா இருக்கு...நாவில் நீர்....பார்க்கும் போது அப்படியே எடுத்துச் சாப்பிடணும் போல இருக்கு...யும்மி!!!! ஹும் இப்படிப் படம் போட்டு ஜொள்ளு விட வைக்கறீங்களே!!!ஹாஹாஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இனொன்னு சொல்ல விட்டுப் போச்சு நானும் உங்களைப் போல தயிர் விட்டு அரைப்பேன்...தண்ணீர் விட்டு அரைப்பதில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. என்னது மோர் குழம்பைத்தான் இங்கே மோர் கூட்டு என்று சொல்லுறீங்களா?

    பதிலளிநீக்கு
  11. மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  12. சேப்பங்கிழங்கு மகாத்மியம் நன்றாக இருக்கிறது. மோர்க்கூட்டு சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கும், அல்லடு தொட்டுக்கொள்ளவும் பொதுவாகவே ருசியான சங்கதிதான். கடந்த வாரம்கூட எங்கள் வீட்டில் பூசணிக்காய் மோர்க்கூட்டு. நெல்லை, உங்கள் அப்பாவுக்கு சேப்பங்கிழங்கு பிடிக்கும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கும் அப்பாவின் நினைவு வந்தது.அவரும் ஒரு சேப்பங்கிழங்குப் ப்ரியர். சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ஆசையாகச் சாப்பிடுவார். சேப்பங்கிழங்கை பொறுக்கி வாங்குவதும் ஒரு கலைதான். எந்தெந்தக் காய்கறியை எப்படி செலக்ட் செய்யவேண்டும் என்பது எல்லோருக்கும் கூடிவரும் விஷயமல்ல!

    மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு இரண்டும் ஒன்றுதானோ என்கிற குழப்பம் சிலரில் தெரிகிறது. ஆதலால், மோர்க்குழம்பு ரெசிப்பி ஒன்று போட்டுவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. * கரெக்‌ஷன்: ‘ சாதத்தோடு சேர்த்துச்சாப்பிடுவதற்கும் அல்லது தொட்டுக்கொள்ளவும்....’

    பதிலளிநீக்கு
  14. வரவர நெல்லைத் தமிழன்கொடுக்கும் ரெசிப்பிகள் பொதுவாக வெகு சாதாரணமானதாய் இருக்கிறது அதுவும் எனக்குப் பிடிக்காததாய் இருக்கிறது என்ன செய்ய அவர்செய்வதைத்தானே பதிவிடுகிறார்

    பதிலளிநீக்கு
  15. கூர்க்கங்கிழங்கு எனக்கு பிடித்தமானது..மோர்கூட்டு பிரமாதம்..

    பதிலளிநீக்கு
  16. அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  17. இந்தச் சிறுகிழங்கு இல்லாமல் என்னோட அம்மா திருவாதிரைக்கான ஏழுதான் குழம்பு செய்ததில்லை. வாங்கி வந்து ஊற வைத்துச் சாக்கில் போட்டுத் தேய்த்துச் சேர்ப்பார். மிகுந்திருக்கும் கிழங்குகளை நாங்க அம்மாதிரிச் சுத்தம் செய்து தருவோம். அதை ஒரு நாள் உருளைக்கிழங்கு காரக்கறி மாதிரி பண்ணிப் போடுவார். பெரு கிழங்கு என்றும் ஒன்று உண்டு. தஞ்சை ஜில்லாவில் கீரிப்பிள்ளைக் கிழங்கு என்னும் ஒன்று உண்டு! அதை எப்படி நடுகிறோமோ அப்படியே வளரும் என்பார்கள்! நெட்டுக்குத்தாக நெட்டுக்குத்தாகவும், படுக்கை வசம் வைத்தால் அப்படியேயும் வரும் என்பார்கள். அதில் வற்றல், வறுவல் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. நாங்கள் செய்வோம். குழம்பை மட்டும் எடுத்துக் கொள்வேன், அதில் இருக்கும் சேப்பங்கிழங்கு பிடிக்காது.
    சேப்பங்கிழங்கு ரோஸ்ட் மிகவும் பிடிக்கும். என் அப்பாவிற்கும் மிகவும் பிடிக்கும்.
    படங்களுடன் பொறுமையாக செய்முறையும் கொடுத்து இருப்பது அருமை.

    //அனேகமாக ஒரு தடவை செய்து எனக்குப் பிடித்திருந்தால், உடனேயே அடுத்த நாளும் திரும்பிச் செய்துவிடுவேன். //
    விருப்பம் போவதற்கு நல்ல வழியாக இருக்கே!

    பதிலளிநீக்கு
  19. // ரெண்டு மூணு முறை பண்ணியாச்சுன்னா எனக்கு அதுல விருப்பம் போயிடும்.// சிறு வயதில் படித்த ஒரு கதை ஞாபகம் வந்தது - ஸ்வீட்ஸ் சாப்பிடறதை நிறுத்த காந்திஜி கொடுத்த அட்வைஸ் கதை!!
    சேப்பங்கிழங்கு மோர்குழம்பு எங்கள் வீட்டில் பிடிக்கும்! கூட பருப்புசிலி ஏதேனும் தொட்டுக்க டாப்!! :-))

    பதிலளிநீக்கு
  20. பார்க்கும் பாக்கியம் கிடைத்தது,உண்ணும் பாக்கியம் வரவில்லை :)

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஸ்ரீராம், எங்கள்பிளாக் - இதை வெளியிட்டமைக்கு. இன்று இரவு அல்லது நாளை பதில் எழுதறேன். இதுக்கும் சேப்பங்கிழங்கு தான் போட்ட மோர்க்குழம்புக்கும், எனக்குத் தெரிந்து 4 வித்தியாசமாவது உண்டு.

    எனக்கு இப்போவும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பிடிக்கும். ஆனால் நான் சரியாகச் செய்யமாட்டேன். காரணம் எண்ணெய் விடறது - எனக்குப் பிடிக்காது, இவ்வளவு எண்ணெயான்னு தோன்றும், அடுப்பிலேயே நல்ல ரோஸ்ட் பண்ணுவது - அவ்வளவு நேரம் பொறுமை கிடையாது.

    எனக்குமே, நான் (ங்கள்) உபயோகப்படுத்துகிற வார்த்தைகளைத்தான் எழுதவேணும்னு எண்ணம். 'பதைக்கறது'-இதுக்கு கீதா ரங்கன் சொன்ன பதிலைப்பார்த்தேன். எங்க ஊரு தொடர்பு உள்ள ஆள். அதுனால கரெக்டா சொல்லிட்டாங்க.

    பதிலளிநீக்கு
  22. மோர்க்குழம்பு எனக்கு ஒத்து கொள்ளாது

    பதிலளிநீக்கு
  23. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். எல்லோருக்கும் சேப்பங்கிழங்கு, அதுவும் குழம்புலயோ அல்லது கூட்டிலயோ இருந்தா பிடிக்காது. கொச கொசன்னு இருக்கறதுனால. எனக்கு சாம்பார்ல போட்டாலும் பிடிக்கும். (எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சுன்னா, அதுவும் தக்காளி விலைக்கு ஏறிடாது?)

    பதிலளிநீக்கு
  24. வாங்க வெங்கட். ரொம்ப வருஷமா தில்லியிலேயே இருந்தா, நம்ம ஊர் சாப்பாடு பிடிக்குமா, அல்லது சமையல் முறையே மாறிடுமா (ராத்திரின்னா சப்பாத்தி சப்ஜி, மதியம் எப்பவாச்சும் ரசம் போன்று).

    பதிலளிநீக்கு
  25. கீ.சா - போணியாகாது என்பதை வாசிக்க வருத்தமாத்தான் இருக்கு. பெண்கள்தான், மற்றவர்களைப் பொருத்து அவங்க சமையலை மாத்திக்கறாங்க. ஒரு சமயம் கணவருக்கு, அப்புறம் குழந்தைகளுக்கு, அப்புறம் மீண்டும் கணவருக்காகன்னு....

    பதிலளிநீக்கு
  26. வருகைக்கு நன்றி தில்லையகத்து கீதா. சிறு கிழங்கை, ரோஸ்டாகவோ, கீரை தேங்காய் அரைச்ச அல்லது பாசிப்பருப்பு கூட்டில் சேர்த்தோ சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். அதுவும் சாத்துமது சாதத்துக்கு, சிறுகிழங்கு ரோஸ்ட் ரொம்பவே நல்லாருக்கும். நான் சிறுவனாக இருந்தபோது, கிழங்கை, சாக்குக்குள் போட்டுத் தேய்த்து தோலை எடுப்பார்கள்.

    உங்கள் மீள் வருகையில் எல்லாக் கருத்துக்களையும் பார்த்தேன். இனிப்பை விட்ட நீங்கள், கிழங்கையும் விட்டுத்தானே ஆகவேண்டும்.

    சேப்பங்கிழங்கில் என் மாமி (தாய்மாமனின் மனைவி), தளிகைபண்ணி, தோலெடுத்துவிட்டு, அதை எண்ணெயில் பொரித்தெடுத்து, அதன்மேல் காரப்பொடி/பெருங்காயம் தூவுவார்கள், இல்லைனா, அதோடயே பொரிப்பார்கள். ரொம்ப நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  27. வாங்க துரை செல்வராஜு சார்.. குவைத்ல செய்து சாப்பிடுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  28. வாங்க அவர்கள்உண்மைகள் மதுரைத்தமிழன். வெகேஷன்ல போனதுனால கிச்சன் சைடுல இன்னும் போக ஆரம்பிக்கலையா? செய்முறைலதான் சந்தேகம் வரலாம், தலைப்புலயே உங்களுக்கு சந்தேகம் வருதே. மோர்க்குழம்புலயே நான் 4-5 வகை செய்வேன். இது குழம்பில்லை, கூட்டு. ஆனா, உங்க ஊர்ல சேப்பங்கிழங்குக்கு எங்க போவீங்க.

    பதிலளிநீக்கு
  29. நன்றி கில்லர்ஜி. சில உணவு வகைகள் எல்லாருக்கும் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
  30. வருகைக்கு நன்றி ஏகாந்தன். (இந்தப் பெயரே வித்தியாசமானது. இதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமோ?)

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஜி.எம்.பி சார். உண்மையைச் சொன்னா, நான் எழுதுவது உங்களுக்குப் பிடித்தாகவேண்டும். ஏன்னா, உங்கள் துணைவியார் கேரளாவைச் சேர்ந்தவர். எங்கள் வீட்டுச் சமையலில் (அம்மாவின் முன்னோர்கள் திருவனந்தபுரம்), கேரள வழக்கம் நிறைய இருக்கும். ஒருவேளை, ரொம்ப வருடங்களாக பெங்களூரில் இருப்பதால், கன்னடிக சமையலாக மாறிவிட்டதா? (சென்னைக்கு வந்திருந்தபோதுகூட, உங்கள் வீட்டில் விருந்தினர்களுக்கு பிஸிபெளபாத் செய்திருந்ததாகப் படித்த ஞாபகம்).

    பதிலளிநீக்கு
  32. வருகைக்கு நன்றி ஆதி வெங்கட். அங்கேயே கேட்க நினைத்தேன். பூண்டு/வெங்காயக் குழம்பு எப்படி வெளிர் நிறத்தில் இருக்கிறது? (இதுபோல்தான் சரவணபவன் வத்தக்குழம்பு இருக்கும். எப்படி அவங்களுக்கு அந்த நிறம் வருதுன்னு யோசிச்சிருக்கேன்).

    பதிலளிநீக்கு
  33. மீள் வருகைக்கு நன்றி கீ.சா. பெருகிழங்கு-கேள்விப்பட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
  34. வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம். இதில், நிறைய சேப்பங்கிழங்கு சேர்ப்போம். 'தான் மாதிரி இல்லை'. அதாவது குழம்பிலிருந்து சேப்பங்கிழங்கை எடுத்துவிட்டு சாப்பிடும்படியாக இல்லை. அந்த 'கொச கொசப்பு' கூட்டில் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  35. வருகைக்கு நன்றி மி.கி.மாதவி. எனக்கு ஒன்று பிடிக்கும்னா, அதைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிடுவேன். சில சமயம், வெண் பொங்கல் சாப்பிடணும்னு தோணும். ஒரே வாரத்தில் இரண்டு மூன்று தடவை செய்திடுவேன். அப்புறம் ஆறு மாசத்துக்கு 'வெண் பொங்கல்' பக்கமே போகமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  36. நன்றி பகவான்'ஜி. பார்த்தீர்கள் சரி.. நீங்களே உண்ணலாமே. அதுக்கு ஏன் 'பாக்கியத்தை' அழைக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்தவரா 'பாக்கியம்' (பாக்கியலட்சுமி)?

    பதிலளிநீக்கு
  37. வாங்க அசோகன் குப்புசாமி. பால் பொருட்கள் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதா?

    பதிலளிநீக்கு
  38. குளிர் காலங்களில் பெரும்பாலான நாட்கள் சப்பாத்தி-பராட்டா வகைகள் தான். விடுமுறை நாட்களில் மதிய நேரத்தில் சாதம், ரசம் இன்னபிற! வெயில் காலங்களில் மதியம் சப்பாத்தி, காலையும் மாலையும் சாதம். வடக்கே வந்த பிறகு மூன்று வேளை ரொட்டி - சப்ஜி என்றாலும் கூட எனக்கு ஓகே தான் நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  39. ithula sinna seeragam serthu araichu seivom. athukku morkuzhambunu solvom. appuram ithukku thottukka usili type la kolannu seyvom. vazhaipoo kola, beetroot kola , muttaikose kola, beans usili, kothavarai usili ithellaam nalla irukkum. photos super. :)

    பதிலளிநீக்கு

  40. நெல்லைத்தமிழன்சேப்பங்கிழங்கு இங்கே எப்போதும் கிடைக்கும் வீட்டிலும் எப்போது ஸ்டாக் இருக்கும் சேப்பங்கிழங்கு ரோஸ்ட் மிக பிடித்தமானது மோர் குழம்புக்கு மிக நன்றாக இருக்கும்... இங்கே கிடைக்காதது ஒண்ணே ஒன்றுதான் அது கருணைக்கிழங்கு மட்டுமே அதனால கருணைக்கிழங்கு கூட்டு ஊர் வந்தால் செய்ய சொல்லி கண்டிப்பாக சாப்பிடுவோம்

    பதிலளிநீக்கு
  41. மீள்வருகைக்கு நன்றி வெங்கட். பொதுவா உணவுமுறை மாறும்போது, தலைமுறையின் உணவுப் பழக்கங்களும் மாறிவிடும்.

    பதிலளிநீக்கு
  42. வருக தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள். முதல் முதலா உங்களை இங்க நான் பார்க்கிறேன். உசிலி மோர்க்குழம்புக்கும் இதற்கும் நன்றாக இருக்கும். அதுவும் கொஞ்சம் காரம் (கூட 1 சிவப்பு மிளகாய்) உசிலில சேர்த்தால் அட்டஹாசமாக இருக்கும். தங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. மீள்வருகைக்கு நன்றி மதுரைத்தமிழன். நான் இருக்கும் இடத்திலும் கருணைக்கிழங்கு கிடைக்காது. என் ஹஸ்பண்ட் இங்கு வந்திருந்தபோது இரண்டு கிழங்கு கொடுத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைவைத்து ஒரு உணவு செய்து விரைவில் அனுப்பப்பார்க்கிறேன். அங்கு கிடைக்கும் சேப்பங்கிழங்கு நிச்சயமா சைனாவிலிருந்து வந்ததாகத்தான் இருக்கணும். (இங்கே, இந்தியாவிலிருந்து வருவதும், பெரும்பாலும் சைனா சேப்பங்கிழங்கும் எப்போதும் கிடைக்கும்).

    பதிலளிநீக்கு
  44. //அங்கேயே கேட்க நினைத்தேன். பூண்டு/வெங்காயக் குழம்பு எப்படி வெளிர் நிறத்தில் இருக்கிறது? (இதுபோல்தான் சரவணபவன் வத்தக்குழம்பு இருக்கும். எப்படி அவங்களுக்கு அந்த நிறம் வருதுன்னு யோசிச்சிருக்கேன்).//

    நெல்லை சார்... புளியின் நிறத்தைப் பொறுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  45. நன்றி ஆதிவெங்கட் அவர்கள்.

    இல்லை. புளியின் நிறம் இல்லை. என்னுடைய அனுமானம் (உங்கள் செய்முறையிலும்தான்), தேங்காயும் சேர்த்து அரைக்கிறாங்களோன்னு. அப்போதான் புளியின் பிரௌன் நிறம் கொஞ்சம் மஞ்சள் கலந்தாப்போல (உங்க பதிவில் உள்ள குழம்பு படம்) இருக்கும். பதில் சொன்னமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. நன்றி நெ.தமிழன்.

    கூர்க்கங்கிழங்கு. வெற. கொஞ்சம் காரல் இருக்கும்.
    சிறுகிழங்கும் அப்படியே.
    எங்கள் வீட்டில் சேப்பங்கிழங்கு வேகவைத்து அம்மா தட்டில் கொட்டியதும் பாதி காலி ஆகிவிடும்.
    உங்கள் செய்முறையும், மொழியும்,படங்களும் மிக மிக அருமை.
    அப்பா சேப்பங்கிழங்கை ருசித்து சாப்பிடுவார். அம்மவுக்குஅதைச் சாப்பிட்டால்
    ஏப்பம் வந்துவிடும்.
    நானும் அளவாகத்தான் ருசிப்பேன். வயசாகிட்டது இல்லையா.
    மிக அருமையான கூட்டு. பெண்ணிடம் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. வருகைக்கு நன்றி வல்லிம்மா. அப்போல்லாம், எங்க வீட்டில் (கீழநத்தத்தில்) உருளைக்கிழங்கு, தக்காளி, கோஸ் போன்ற எந்த ஆங்கிலக் கறிகாயும் உபயோகிப்பதில்லை. ஒரு விதிவிலக்கு மிளகாய். கிழங்கு வகைகளில் சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, 'முட்டான்' எனப்படும் முத்திய சேப்பங்கிழங்கு (ன்னு நினைக்கறேன்) முதலியவை செய்வார்கள். சிறுவயதில், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் பிடிக்காதவர் யார் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  48. நான் தேங்காய் ஏதும் அரைத்து சேர்க்கவில்லை..சாம்பார்ப் பொடியும், மஞ்சப்பொடியும் தான் நெல்லை சார்..

    பதிலளிநீக்கு
  49. அதிகமாக மோர்க்குழம்புதான் செய்வது. கூட்டு என்பதே சேப்பங்கிழங்கில் புதுசுதான் எனக்கு. நிறைய தான்,
    தயிரும்,தேங்காய், ப மிளகாய் தாளிப்பு கூட்டாகி ருசியாகி விட்டது. யாருடைய ப்ளாக் பக்கமும் போகலே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  50. வருகைக்கு நன்றி காமாட்சியம்மா. உடம்பு நலமாகி, எல்லா பிளாக்குகளுக்கும் வருகைதாருங்கள், உங்கள் பிளாக்கிலும் நிறைய எழுதுங்கள் (உணவு செய்முறை).

    பதிலளிநீக்கு
  51. மோர்க்குழம்புக்கும் இதற்கும் ஆறு வித்தியாசம் உண்டா?

    பதிலளிநீக்கு
  52. அப்பாதுரை சார், எனக்குத் தெரிந்து மோர்க்குழம்புக்கும் சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டுக்கும் நிச்சயம் நாலு வித்யாசம் தெரியும். ஆறு வித்தியாசம் வேணும்னா, கூட ரெண்டு சேப்பங்கிழங்கு போட்டால் வந்துடும். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!