செவ்வாய், 14 நவம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : அவளும் நோக்கினாள் - ராமலக்ஷ்மி - சீதை 27



​​
     இந்த வாரம் திருமதி ராமலக்ஷ்மியின் கற்பனையில் ஒரு சீதை தன் ராமனை ஏன், எதற்கு, எப்படி மன்னிக்கிறாள் என்று பார்ப்போம்.  

     நீண்ட நாட்களாய் கதைகள் எழுதா விரதம் இருந்த ராமலக்ஷ்மி அவர்கள் தன் விரதம் உடைக்க நினைத்தபோது 'எங்களுக்கு' இரண்டு கதைகள் என்று வேண்டுகோள் வைத்திருந்தேன்.   காலத்தே அனுப்பிய அந்தக் கதைகளில் ஒன்று இங்கே.... 

     நன்றி ராமலக்ஷ்மி.



=======================================================================


அவளும் நோக்கினாள்

ராமலக்ஷ்மி

 சிலுசிலு என்று வீசிய வேப்பமரக் காற்று உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆறுதலாய் இருக்க, வாசற்படியில் சாய்ந்து அமர்ந்திருந்த மைதிலி அப்படியே அதில் லயித்துக் கண் அசந்து விட்டாள்.

‘பாம்.. பாம்’

‘ஆஆ.. அவர் கார்..  ஆ.. வந்துட்டார்..’

‘பேரன் பேத்தி எடுத்த பிறகும் இப்படி வாசப்படியில ஒக்காந்து... வேடிக்கைப் பார்க்கிறேங்கற பேர்ல... வெட்கமாயில்ல...’ ஈட்டிப் பார்வையில் ஒலிக்காமல் ஒலித்த வார்த்தைகள் உள்ளத்தைத் துளைக்க விதிர்விதிர்த்து எழுந்து நின்றாள் மைதிலி.

எதிரில் எவருமில்லை. அவளையறியாமல் கராஜைப் பார்த்தாள். அவருடைய கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது அதன் வண்ணமே தெரியாத அளவுக்குத் தூசு படிந்து.

இரு தெருக்கள் சந்திக்கும் முனையில் இருக்கிறது அவர்களது வீடு. வளைவில் திரும்பும் போது ஒலியெழுப்பியிருக்கிறது ஏதோ ஒரு வாகனம். அது அவரது காரின் அதே  ஹாரன் சத்தம்.

வேகமாக வீசிக் கொண்டிருந்த ஆடிக் காற்றிலும் அப்படி வியர்த்து விட்டிருந்தது. ஒரு நொடிதான். தெளிந்து விட்டாள். ஆனாலும் வெட்கமாக இருந்தது. எல்லாவற்றையும் கடந்து, தீர்க்கமான முடிவுடன் எப்படிக் கம்பீரமாகச் சென்று கொண்டிருக்கிறோம் நாம்.. என்றிருந்த பெருமிதம், அது கொடுத்து வந்த தைரியம் இரண்டுமே சற்றே ஆட்டம் கண்டு விட்டதில் வந்த வெட்கம். அடிமன வேதனைகள் ஆறாத ரணமாகதான் இருக்கிறது என்றே தோன்றியது. இன்று காலை நடந்த சம்பவம் கூட அந்த ரணத்தை சற்றே கிளறி விட்டிருக்கலாம்.

தவைச் சாத்தி விட்டு உள்ளே வந்தவள் ஹாலை அடுத்து மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன். நெஞ்சின் மேல் நேற்று கொரியரில் வந்திருந்த புத்தகங்களில் ஒன்று. சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளில் சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்துத் தரக் கோரி அனுப்பிருந்தது ஒரு இலக்கிய அமைப்பு. படுக்கையைச் சுற்றி சிதறிக் கிடந்த மற்ற நூல்களை அடுக்கி அருகிலிருந்த  முக்காலியில் வைத்தவள் காலையில் அவர் வாசிக்க வற்புறுத்திக் கையில் தந்த அந்தப் புத்தகத்தை, அவசரமாக வாசித்து விட்டுத் திருப்பி வைத்ததை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அட்டையில், சுதந்திரமாக வானில் சிறகடித்துப் பறக்கும் புறாக்கள்! அப்பொழுதே கவனத்தை ஈர்த்த படம் மனதிலே பதிந்து போனதால் நூலை எளிதாக அடையாளம் காண முடிந்தது. பெண் கவிஞர் எழுதியது.  ‘இலைகள் பழுக்காத உலகம்”! கவிதையின் பெயர் நினைவில் இருந்தது. ‘அவள்’! புரட்டி மீண்டும் வாசிக்கலானாள்:

நிறைய மன்னிப்புகள் தேவையாக இருந்தன
குறிப்பாக அவளிடமிருந்து

அவளுள் இருந்தார்கள்
மகள் தாய் மனைவி தங்கை தோழி
அத்தனை பேரும்

மிகப் பெரிய குற்றங்களையோ
மறக்க முடியாத துரோகங்களையோ
எவருக்கும் செய்துவிடவில்லை

சில தற்செயலாக நிகழ்ந்தவை
பல காலகாலமாக எல்லோரும் செய்தவை
அவசர உலகில் நிதானித்து திட்டமிட்டு
வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை

நிறைய நோகச் செய்திருக்கிறேன்
அது குறித்துக்
கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன்
இப்போது
மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன..
மன அமைதிக்காக

காலம் கடந்து விட்டது
எதையும் சரிசெய்ய இயலாத புள்ளியில்
கசிந்துருகி நிற்கும் எனக்குக்
காட்டப்படுகிற கருணையில்
உயிர்களிடத்தான அன்பு தெரிகிறது
நான் யாசிக்கிற மன்னிப்பு
மறுக்கப்படுகிறது

கையில் அள்ளி வீசும் நீராக
அலைக்கழித்த என்னை
ஆழ்கடலின் பேரமைதியுடன்
அச்சுறுத்துகிறாள் இன்று.

பெரிய புன்னகை படர்ந்தது. ‘ஆம், நானே அவள்!’

புத்தகத்தை எடுத்த இடத்தில் திருப்பி வைத்தாள்.  பகல் வெளிச்சம் அவர் தூக்கத்தைக் கலைந்து விடாதிருக்க சன்னலின் திரைச்சீலைகளை இழுத்து மூடியவள் அவர் முகத்தை உற்று ஒரு கணம் பார்த்தாள். உலகம் கொண்டாடும் கவிஞர். ஊர் மெச்சும் ஆடிட்டர். இந்த சாந்தமான முகத்துக்குள் இருக்கும் இன்னொரு முகத்தை அறிந்தவள் அவள் மட்டுமே. பாவமாகதான் இருந்தது. கடந்த இரண்டு வருடமாகப் படுத்த படுக்கையாக இருக்கிறார்.  பரணில் எதையோ எடுக்க ஏணியில் ஏறியவர் கீழே விழுந்ததில் தண்டு வடத்தில் அடிபட்டுக் கால்கள் செயலிழந்து போயின. அன்றிலிருந்து தாய்க்கு மேலாக அவளேதான் எல்லாமும் பார்க்கிறாள். எத்தனையோ முறை மகன்களும் சரி, அவரும் சரி கெஞ்சிப் பார்த்து விட்டார்கள், ‘ஒரு ஆண் அட்டெண்டர் போட்டுக்கலாம்’ என. இவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். காலையில் கூட இப்படிதான் பேச்சை ஆரம்பித்தார்.

‘மைதிலி எனக்கு நீ செய்யற ஒவ்வொரு பணிவிடையும் மனசுல பாரமா ஏறி உட்காருதும்மா. இதுக்குல்லாம் நான் அருகதையே கிடையாது. நீ சம்மதிக்காம அட்டெண்டரை வைக்கவும் எனக்குத் தைரியமில்லை. எங்கே ஒம்மனசை திரும்பவும் நோகடிச்சிருவனோன்னு ஒரு பயம். அப்புறம் உன்னோட இந்த அருகாமை கிடைக்காமப் போயிடுமோங்றது அதை விடப் பெரிய பயம். தேவைக்கு மிஞ்சி ஒரு வார்த்தை எங்கிட்ட நீ பேசறதில்ல. அட்லீஸ்ட் தகவலோ கேள்வியோ பதிலோ அவசியத்துக்காவது பேசறியேங்கறது ஒரு ஆறுதல். ஆனா என் முகத்தைப் பார்த்து நீ பேசி எத்தனை வருஷம் ஆச்சுன்னு எனக்கே தெரியலை.”

சொல்லும் போதே தழுத்தழுத்து விட்டார் ராமச்சந்திரன். “ஆரம்பத்துல நீ அப்படி நடந்தப்போ எனக்கு மிதப்பா இருந்தது.  ஆனா இப்போ என்னால தாங்க முடியலை”  ஏறக்குறைய அழுது விட்டார்.  அவர் உடலைத் துடைத்து விட்டு, பவுடர் தூவி, உடைமாற்றி, புத்தகம் வாசிக்கத் தோதாக தலையணையில் சாய்வாகப் படுக்க வைத்தவள் வழக்கம் போலவே அமைதி காத்தாள். கவிதைப் புத்தகங்களையும் கூடவே மூக்குக் கண்ணாடியையும் கையில் கொடுத்தாள். ‘ஒரு நிமிஷம்’ என்றவர் அப்போதுதான் அந்தத் தொகுப்பைத் திறந்து ‘நானே எழுதிய மாதிரி இருக்கு’ என்றந்தக் கவிதையைப் படிக்கக் கொடுத்தார்.

இவள் புத்தகங்களைத் தொட்டாலே பிடிக்காது. ‘இதென்ன அதிசயமாய்!’ ஆனால் மறுக்கவில்லை. வேகமாக வாசித்தவளுக்கு தொடர்ந்து என்ன சொல்லப் போகிறார் எனப் புரிந்து போயிற்று. எழுந்த எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல் நூலை மூடி மேசை மேல் ‘பட்’ எனும் சத்தத்துடன் வைத்து விட்டுத் திரும்பி நடந்தாள். அவர் விடுவதாயில்லை..

 “நில்லு மைதிலிம்மா, நானும் இப்படியேதான்..  உன்னோட மன்னிப்புக்காகதான்..  மருகிட்டிருக்கேன்.  அது கிடைக்க வாய்ப்பேயில்லையா? தப்பு செஞ்சவங்க திருந்தவே மாட்டாங்களா? ஒரு வேளை இந்தப் பாராமுகம்தான் நீ எனக்குக் கொடுக்கும் தண்டனையா? அப்படின்னா அதையாவது சொல்லிட்டுப் போ. சந்தோஷமா ஏத்துக்கறேன்.”

எந்தப் பதிலும் சொல்லாமல் மேலே நடந்தவளைப் பார்த்து “அத்தனை வெறுப்பா மைதிலி என் மேல..” என்றார் பரிதாபமாக.

‘வெறுப்பா...’

கதவை ஒருக்களித்து மூடி விட்டு வெளியே வந்தவள்,  ‘இது வைராக்கியம்’ மெல்ல சொல்லிக் கொண்டாள்.

‘இந்த வைராக்கியம் கூட இல்லா விட்டால் நான் என்ன மனுஷி? ஒவ்வொரு தடவையும் அடி வாங்கியது என் சுய மரியாதை ஆச்சே’

மையலை ஆரம்பித்தாள். கைகள் தன்னிச்சையாக வேலைகளைச் செய்ய, மனதுள் வேகவேகமாய் ஓடியது நாற்பது வருட வாழ்க்கையும். அழகும் வனப்பும் அறிவும் திறனும் ஆண்டவன் தந்தது. அவள் அப்பா அம்மா கொடுத்தது. அதில் அவள் பிழை என்ன?  சற்றே தன் அறிவைக் காட்டி விடக் கூடாது.  நான்கு பேர் முன் பளிச் எனத் தானாக வந்து விடக் கூடாது.  அந்த சின்ன ஊரின் அத்தனை பெரிய புள்ளிகளுக்கும் இவரே ஆடிட்டர். அந்நாளில் இவர் கவிதைகளும், கட்டுரைகளும் வெளியாகாத பிரபல பத்திரிகைகளே இல்லையெனலாம். தினம் தேடி வந்து போவோர் கூட்டம் அதிகம். அவர்களில் யார் முன் வரலாம், யார் முன் வரக் கூடாதென்பதும் அவர் முடிவே. எல்லாம் கண்கள் கக்கும் கனலில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், விசேஷம் விழாக்களுக்கு பெருமை காட்ட மனைவி வேண்டும். அவர் சொல்லும் உடையை, காட்டும் நகையை அணிய வேண்டும். இலக்கிய விழாக்கள் என்றால் காட்டன் புடவைகள், முத்து மாலைகள். ஊர் பெரியவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அவளுக்குப் பிடிக்காத வண்ணங்களில் சாண் உயர சரிகை போட்டப் பட்டுப் புடவைகள், தங்க வைர நகைகள். அவளின் ரசனை அவளுக்கே மறந்து போனது.

கல்லூரி காலத்தில்  எம்.எஸ். அம்மாவின் பாடல்களை, குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்.., குறையொன்றும் இல்லை..’ பாடல்களை மேடையில் இவள் உருகிப் பாடும் போது அரங்கமே அமைதியில் உறைந்து போகும். பாடி முடிக்கையில் கண்கள் கசிய அரங்கிலுள்ளோர் எழுப்புகிற கரகோஷம் பல நிமிடங்கள் நீடிக்கும். தன் ஆத்ம நண்பன் என அத்தனை பேரிடமும் இவர் மார் தட்டிச் சொல்லும் வக்கீலின் வீட்டுக் கொலுவில் இவள் பாடிய தினத்தோடு அந்த சங்கீதம் முடக்கப் பட்டது. இவரின் எழுத்துக்கள் வெளியாவதாலேயே  பத்திரிகைகள் மறுக்கப் பட்டன. இதெயெல்லாம் கூட அவளால் சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் ஈட்டிப் பார்வையால் எத்தனை சந்தர்ப்பங்களில் இவளை நோகடித்திருக்கிறார் என்பதற்குக் கணக்கே இல்லை. மற்றவர் முன் பார்வையால் என்றால் தனிமையில்... நினைக்கவே கூசும் சொல்லடிகள்.

‘உங்களோடயே வந்திடறம்மா..’ பெரியவன் அருணைக் கருவுற்றிருந்த புதிதில், பார்க்க வந்திருந்த அம்மாவின் மடியில் படுத்துத் தாங்க மாட்டாமல் ஒரு முறை கதறித் தீர்த்து விட்டாள்.  ஆறுதல் எதிர்பார்த்த இடத்தில் ஏமாற்றமே எஞ்சியது.  ‘என்ன பேசற நீ.. மாப்பிள குடிக்கிறாரா, போட்டு அடிக்கறாரா இல்ல வேற கெட்ட சகவாசம் உண்டா? ஊரே கண்ணு போடுது, எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை கெடச்சிருக்கு உங்களுக்குன்னு. இதெல்லாம் காலப்போக்கில சரியாப் போகும். நீ வீட்டோட வந்துட்டா தம்பிங்களுக்கு எப்படிக் கல்யாணமாகும்?’ ஓங்கி மூடிக் கொண்ட அந்தக் கதவுகளை அதற்காக மீண்டும் அவள் தட்டவேயில்லை. இந்தக் காலத்தைப் போல பிரச்சனை என்றால் பொசுக் என விட்டு விலகி தனியாக வாழ முடிந்த காலமும் இல்லை அது.

அடுத்தடுத்து ராகவ், பிரணவ் பிறக்க மகன்களின் மழலையிலும், ஒவ்வொரு வளர்ச்சியிலும் கிடைத்த மகிழ்ச்சி மற்றதைப் பின்னுக்குத் தள்ளியது. ராமச்சந்திரன் அப்படியேதான் இருந்தார். மன உளைச்சல்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆனால் அதில் அவள் தொலைந்து போய் விடாமல் குழந்தைகள் காப்பாற்றி விட்டார்கள். எது எப்படியோ, தாய்மையை அவளுக்குக் கொடுத்ததற்காகவும், அந்த இன்பத்தைப் பரிபூரணமாக அனுபவிக்க விட்டதற்காகவும் மட்டுமே அவருக்குத் தான் கடமைப் பட்டிருப்பதாகப் பல சமயங்களில் நினைத்திருக்கிறாள்.  அவர் படுத்த படுக்கையானதும் அதே தாய்மையை நன்றியாக அவருக்குத் திருப்பிக் கொடுக்கவும் முடிந்திருக்கிறது.

பிள்ளைகள் எங்கே படித்து எப்படி ஆளானர்கள் என்பது கூடத் தெரியாமலிருந்தவர் ராமச்சந்திரன். நேரமின்மையோ, அலட்சியமோ அல்லது இவள் பார்க்கட்டுமே என்கிற எண்ணமோ எதுவானாலும் அதற்காகச் சின்ன சலிப்புக் கூட அவள் அடைந்ததில்லை. பிள்ளைகள் அவளைக் கூடுதலாக நேசித்ததற்கு அதுவே ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  சின்ன வயதிலிருந்து அவர்களது எல்லாத் திறமைகளுக்கும் ஊக்கம் கொடுத்தாள். படிப்பிலும் அதிபுத்திசாலிகளாய் இருந்தார்கள். பண்பட்டவர்களாய் அவர்கள் வளர வேண்டுமென்பதில் கூடுதல் கவனம் வைத்திருந்தாள்.

என்றைக்கும் கணவரைப் பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்ததேயில்லை. வளர வளர இளையவர்களுக்கு அவள் நிலைமை சொல்லாமலே புரியத் தொடங்கியது. ஆனால் ஊருக்குள் ராமச்சந்திரனுக்கு இருந்த செல்வாக்கு, இலக்கியவாதியாக அவர் பெற்றிருந்த புகழ் இதெல்லாம் ஒரு கட்டத்தில் அருணை அதிகமாக ஈர்க்க அப்பாவை ஆதர்சமாகக் கொள்ள ஆரம்பித்து விட்டான். மைதிலியிடம் மரியாதைக் குறைவாக நடக்கவில்லை என்றாலும் மெல்ல அவளை விட்டு விலகி விட்டானென்றே சொல்ல வேண்டும்.

மைதிலியின் பாராமுகம்  மனதில் பாரமாக இறங்குவதாக இப்போது இறைஞ்சும் ராமச்சந்திரனே இந்தச் சூழலுக்கு முழுக் காரணம். இன்றைக்கு அவரை மட்டும்தான் ஏறெடுத்துப் பார்க்காதிருக்கிறாள். ஆனால் அவரின் குத்தல் பார்வைகளால் ஒரு காலக் கட்டத்தில் எவரையும் ஏறெடுத்துப் பாராமல் எங்கோ பார்த்துப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டாள் ஒரு கவசமாக. முதலில் அவரது நண்பர்கள் முன் ஆரம்பித்துப் போகப் போக ஆண் பெண் பேதமின்றி யாரோடு பேசினாலும் எங்கோ பார்த்தோ அல்லது தரையைப் பார்த்தோ பேசும் வழக்கம் தொற்றிக் கொண்டது. பலரும் கேலி பேசும் நிலைக்கும் போனது.

அதையெல்லாம் மாற்றியது இளையவர்கள்தான். “இப்படி இருக்காதம்மா.. எங்க மூணு பேரையும் இவ்வளவு உயரத்துக்குக் கொண்டு வந்த நீ எப்படித் தலை நிமிர்ந்து வாழணும்! யாருக்காகவும் உன்னை நீ குறைச்சுக்காதே. உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம்” சொல்லிச் சொல்லி தைரியம் தந்து அவளைத் தேற்றி விட்டார்கள். ஆனாலும் ஒரு சில பேரைச் சந்திக்கும் போது பழைய அனுபவங்களால் அவளையறியாமல் எங்கோ பார்த்துப் பேசும் பழக்கம் போக மாட்டேன்கிறதே. ஏன், ராமச்சந்திரனே மாறிய பிறகும் கூட. ஆம், பிள்ளைகள் தலையெடுத்ததும் இவளிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க ஆரம்பித்து விட்டார். முறைப்பும் விறைப்பும் அப்படியேத் தொடர்ந்தாலும் கொடுக்குகளை மடக்கிக் கொண்டார்.

இன்றைய நிலையில் எல்லாம் உணர்ந்து உத்தமராகி என்னவோ இவள்தான் கொடுமைப் படுத்துவது போல அவ்வப்போது இப்படியொரு நச்சரிப்பு. இவளும் வேண்டுமென்றா இருக்கிறாள்? முடியவில்லை, இயல்பாக இருக்க, பழக முடியவில்லை. உண்மையிலேயே மனிதர் திருந்தி விட்டாரா என்றெல்லாம் ஆராயக் கூட விருப்பமில்லை. மன்னிப்புக்கு மருகுவதாக இன்று சொல்வது தனிமை தந்த ஞானத்தாலும் இருக்கலாம்.

ஆரம்பத்தில் அடிக்கடி வந்து பார்த்த நண்பர்கள்  கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனார்கள். மொபைலில் அழைத்து இவர் மணிக்கணக்கில் பேசத் தொடங்க அழைப்புகளை ஒதுக்கினார்கள். ஒரு அறைக்குள் டிவி, டேப்லட்டில் இணையம், கொஞ்சம் எழுத்து, பின் வாசிப்பு என ஒரு மனிதன் வெளியுலகம் பாராமல் வாழ்வது கொடுமைதான். இப்படி ஒரு கட்டத்தில் வேறு வழியற்றுப் போனபின்னர்தானே இவள் துணை முக்கியமாகப் படுகிறது? இவளைப் பொறுத்தவரை பட்ட வேதனைகளை இந்த வைராக்கியம் ஒன்றே மறக்கடிக்கிறது. தனக்கும் சுய மரியாதை உண்டென்பதை உரக்கச் சொல்கிறது. அவள் கடன் பணி செய்து கிடப்பதே என்றுதானே அதுகாலமும் நடத்தினார். எல்லாப் பணிகளையும் செவ்வனே ஆற்றியதைப் போல அவரையும் ஆயுளுக்கும் இப்படியே பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மேல் என்ன வேண்டுமாம்?

ணி என்றதும் வெறொன்று அவளுக்குள் ஓடியது. எல்லாக் கடமைகளையும் சரிவர ஆற்றி விட்டோமா என்பது. அருண் மட்டும் உள்ளூரில் சற்றுத் தள்ளி அவன் கட்டிக் கொண்ட வீட்டில் இருக்க, ராகவ் டெல்லியிலும், பிரணவ் வெளிநாட்டிலுமாய் பெரிய பதவிகளில்! பிரணவ்வுக்கு அவன் விரும்பிய ஜெர்மன் பெண்ணையே உறுதியாய் நின்று கட்டி வைத்தாள். பாசமான மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என எந்தக் குறையுமில்லை. ஆனால்.. திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகியும் மூத்த மருமகள் அனுவின் கண்களில் ஒரு மலர்ச்சி இல்லை.

அருண் அப்பாவைப் போல அத்தனைக் குரூரமானவன் இல்லை. அவள் வளர்த்த பிள்ளை ஆயிற்றே. ஆனால் அப்பாவின் குணங்களில் பாதியைக் கொண்டிருந்தான். தான் என்ற கர்வம், அனுவை அடக்கி வைக்கும் போக்கு இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். இது குறித்துப் பேச முற்படும் போதெல்லாம், எதையாவது சொல்லி நழுவி விடுகிறான். அப்பாவோடு அவனுக்கு ஒட்டதல் ஏற்பட்டதும் விழுந்த இடைவெளியை நிரப்ப முடியாததால் அவன் மனதை நெருங்கப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அனுவின் முகத்தில் உண்மையான மலர்ச்சியைக் கொண்டு வந்தால்தான் இந்த ஜென்மம் சாபல்யம் அடையும்.

ப்படி எதை எதையோ நினைத்தபடி வாசலில் வந்தமர்ந்தவள் தன்னை மறந்து அயர்ந்து போயிருந்திருக்கிறாள், பகலில். அந்த நினைவுகள் தந்த அழுத்தத்தில்தான் ஹாரன் சத்தம் கேட்டதும் தான் வெலவெலத்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி நிகழும்? மீண்டு வா, நேசக் கரம் நீட்டு என எப்படி இவரால் எளிதாகக் கேட்க முடிகிறது?

அன்று வெள்ளிக் கிழமை.

மாலை நேராக ஆபிஸிலிருந்து வந்து விடுவான் அருண். அதே வண்டியில் டிரைவரோடு அவளை கோவிலுக்கு அனுப்பி விட்டு அவள் திரும்பும் வரை அப்பாவைப் பார்த்துக் கொள்வான்.

அன்று நுழையும் போதே, “அம்மா இன்னிக்கு டின்னர் இங்கதான். அவசரம் ஒண்ணுமில்ல. நீங்க கோயிலுக்குப் போய்ட்டு வந்து மெதுவா செய்யுங்க”

“அதுக்கென்னப்பா. செஞ்சிட்டாப் போச்சு. அனுவுக்கு ஒடம்பு ஏதும் முடியலையா என்ன? போகும் போது அவளுக்கும் ஆர்த்திக்கும் பேக் பண்ணித் தரட்டுமா?”

“இல்லம்மா அவங்க ரெண்டு பேரையும் இப்பதான் பஸ் ஏத்தி விட்டுட்டு வர்றேன். அனு அப்பாக்கு ஒடம்பு முடியாம ஆஸ்பத்திரில சேத்திருக்காங்களாம். சன் டே வந்திருவா.”

“நீ கூடப் போகலியா..” வாய் வரை வந்த கேள்வியை விழுங்கினாள் அவன் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவளாய். நிதானமாகப் பேச வேண்டும். சாப்பிடும் போது பார்க்கலாம் என முடிவெடுத்தவளாய் “நல்ல மனுஷர். அவருக்கும் சேத்து வேண்டிக்கறேன். சீக்கிரம் நல்லாகி வரட்டும்”  என்றாள். வேகமாக மாடிக்குச் சென்று புடவையை மாற்றிக் கொண்டாள். அன்று சற்று சீக்கிரமாகவே வந்து விட்டவனுக்கு ஒரு வாய் காஃபியைக் கொடுத்து விடலாமெனத் தோன்றியது.

நாளைக்கு ஒனக்கு ஆஃப்தானே? நீயும் கூடப் போயிருக்கலாமே.”

“நா எதுக்குப்பா? அப்படி பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல. ஜஸ்ட் எ மைல்ட் ஹார்ட் அட்டாக்.”

“மரியாதைக்காகவாவது ஒரு எட்டு நீ போக வேண்டாமா?”

வியப்பு மேலிட அறைக்குள் நுழையாமல் வெளியிலேயே நின்று விட்டாள் மைதிலி. 

ராமச்சந்திரன் தொடர்ந்தார், “இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. நாளைக்குப் போலாமே. ஞாயித்துக் கெழம ஆர்த்திய மட்டும் அழைச்சுட்டு வந்திரு. அவ இங்கிருந்து ஸ்கூலுக்குப் போட்டும். அனு, சம்பந்தி ஆஸ்பத்திரில இருந்து வர்ற வரைக்கும் அங்க  இருக்கட்டுமே”

“இவ எதுக்கு சும்மா? அவ அண்ணன் இருக்கான். பெரிய கூட்டமே இருக்கு அங்க. மாமாவோட தம்பி தங்கச்சிங்க எல்லாம் கூட வந்திருக்காங்களாம். இவ போய் டேரா போடறதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. இந்த சாக்குல சொந்தக்காரக் கூட்டத்தோட அரட்டை அடிச்சு ஊரச் சுத்திட்டு வருவா.”

“வாய்க்கு வந்தபடி பேசாத அருண். எத்தனை பேரு இருந்தாலும் பெத்த பொண்ணு கூட இருந்தா ஒரு பலம்தானே அவருக்கு.” எனக் குரலை உயர்த்தியவர் சற்று நிதானித்து “உங்கிட்டக் கொஞ்சம் சீரியஸாவே பேசணும் எனக்கு” 

“அப்படியென்னப்பா! சரி, சொல்லுங்க”

“அருண், ஒன்னோட இந்த வசதி, வளர்ச்சி எல்லாத்தையும் நினைச்சாலே பெருமிதமாதான் இருக்கு. அதே நேரம் ஒரு வருத்தமும் இருக்கு.”

“வருத்தமா?”

“கவலைன்னு கூட வச்சுக்கலாம். அனு சந்தோஷமாதான் இருக்கிறாளா?”

“ஒண்ணும் புரியலை. அவளுக்கு என்ன நா குறை வச்சிருக்கேன்?”

“முதல்ல, நீ நிறைன்னு நினைக்கிற எதுவுமே அவ பார்வையில ஒரு பொருட்டா கூட இருக்க வாய்ப்பில்லைங்கறத புரிஞ்சுக்கோ. அதுவுமில்லாம நாம என்ன சாதிச்சு என்ன? என்ன சம்பாதிச்சு என்ன? நம்ம கூடவே நமக்காகவே இருக்கிற ஜீவனோட மனசுல இடம் பிடிக்க முடியலைன்னா வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்டுதான். ஏதோ ஒரு அகங்காரம்.. நமக்கே தெரியாமன்னு சொல்ல மாட்டேன். தெரிஞ்சேதான்.. விரும்பி வேணும்னேதான்.. அதுக்குப் பால் வார்த்துட்டிருக்கோம். எப்பவும் நமக்குக் கீழேயே வந்தவள இருத்தி வைக்கணும்னு! வச்சா நம்ம லைஃப் சேஃப்ன்னோ.. இல்ல அதுல கிடைக்கிற அந்த அல்ப சந்தோஷமோ தெரியலை, வெறியா ஆட்டி வைக்குது நம்மளை. காலங்கடந்த பிறகு எதையும் சரி செய்ய முடியாது.

எனக்கொரு உறுத்தலும் இருந்துட்டே இருக்கு. என்னன்னு கேளு. ஒன் தம்பிங்க கல்யாணம் உங்கம்மாவோட சாய்ஸ். ஆனா உன்னுது முழுக்க முழுக்க என் சாய்ஸ். ‘ஸ்கூல் பிரின்ஸ்பால் பொண்ணு, ரொம்ப பிரில்லியண்ட். அப்பா ஸ்கூல்லியே மேக்ஸ் டீச்சரா இருக்கா. அழகு. அடக்கம்.’னு என் ஃப்ரெண்ட் சொன்னப்போ உடனேயே போய் பேசி முடிச்சவன் நான். நாம சொன்ன சொல்லுக்காக வேலைய விட்டுட்டு வந்தா. அப்பா மாதிரியே திறமைசாலி. ஆனா அந்த திறமைக்கும் நாம என்ன மரியாதை செஞ்சோம்னு கொஞ்ச காலமாவே யோசிச்சிட்டு இருக்கேன். ஆர்த்தி இப்ப வளர்ந்திட்டா. அனுவோட படிப்பு வீட்டப் பாத்துக்கவும் ஆர்த்திய வளர்க்கவும் மட்டுமே பயன்படணுமா? மேக்ஸ் அத்தனை ஈஸியா எல்லோருக்கும் நல்லா வந்திராது.  அவ விருப்பப்பட்டா திரும்பவும் வேலைக்குப் போகட்டுமே? வேலையப் பத்தி நா சொல்றது ஒரு உதாரணத்துக்குதான். அதில்ல முக்கியம். பளிச்சுன்னு சொல்றனே.. அவ விருப்பங்களுக்கு மதிப்பு குடுக்க ஆரம்பி. அவளை மரியாதயா நடத்து. உண்மையான சந்தோஷம் எதுல இருக்குங்கறத அப்ப புரிஞ்சுப்ப”

கனத்த அமைதியில் கழிந்தன அடுத்த சில கணங்கள்.

உள்ளே நுழைந்தாள் மைதிலி.

குழப்பத்துடன் அமர்ந்திருந்த அருணின் ஒரு கையைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டிருந்த ராமச்சந்திரன், அவளைப் பார்த்ததும் அவசரமாகக் கைகளை விலக்கிக் கொண்டார்.

கொண்டு வந்த காஃபியை அருணிடம் கொடுத்தவள், உக்கிரமான மேற்கு வெயிலைத் தடுக்க மதியம் இழுத்து விட்டிருந்த  சன்னல் திரைச்சீலைகளை நன்றாகத் திறந்து விட்டாள். அந்திச் சூரியன் வேக வேகமாக இறங்கிக் கொண்டிருந்தாலும் அதன் மிதமான பொன் மஞ்சள் வெயில் அறையை நிறைத்தது.

“நா கெளம்பறேன்,  அருண். ஏழரை மணிக்குள்ள வந்திருவேன்” என்றவள் நேராக ராமச்சந்திரன் எதிரில் போய் நின்றாள்.

“அருணுக்கு பூரி மசால் செய்யலாம்னு இருக்கேன். கஞ்சிக்குப் பதிலா உங்களுக்கும் அதையே தரட்டுமா?” அவரது கண்களுக்குள் பார்த்து மென்மையாகக் கேட்டாள்.

மைதிலி சீதை, ராமச்சந்திர ராமனை மன்னித்து விட்டாள்.
**




52 கருத்துகள்:

  1. செய்யவள் கதையுடன் செவ்வாய் மலர்ந்தது..

    பதிலளிநீக்கு
  2. இளங்காலைப் பொழுது இனிதாகட்டும்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கை வண்ணம் - கலை வண்ணம் - கதை வண்ணம்.. அருமை...

    வேலை ஆரம்பமாகி விட்டது..
    பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை. இப்படியும் ஆண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்றாலும் காலம் கடந்தாவது தப்பைப் புரிந்து கொண்டாரே! இதைப் படிக்கையில் "லக்ஷ்மி" குறும்படம் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியலை! படம் இன்னும் பார்க்கலை! முடிஞ்சாப் பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
  6. கீதாக்கா.... போனாப்போகுது! லக்ஷ்மி குறும்படத்தை விட்டு வெளில வாங்க....

    :))))

    பதிலளிநீக்கு
  7. வாவ்... நல்ல கதை. பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. ராமலக்ஷ்மி... கதை உங்கள் புகைப்படங்கள் போலவே.. நேரில் பார்ப்பது போல் இருந்தது!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதுவதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. அன்பு ராமலக்ஷ்மி,
    பொறுமைக்கு மைதிலி அவதாரம் எடுத்துவிட்டாள். எத்தனை மன வக்கிரங்களிடமிருந்து மீண்டு வந்து குழந்தைகளுக்கும் நன்மை செய்துவிட்டாள்.
    ராமச்சந்திரன் உண்மையாக வருத்தப் பட்டதும், அவளும் தயையுடன் மன்னிக்கிறாள்.
    அற்புதம். நல்ல உள்ளங்கள் வாழ்க. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் தொடக்கம் முதலே ஈடுபாட்டோடு படித்தேன் ஒவ்வொரு வரிகளையும்...
    காரணம் எழுத்துக்கள் தந்த அழுத்தமான இனம் புரியாத மனதின் கனம்.

    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  13. >>> மன்னிப்புக்கு மருகுவதாக இன்று சொல்வது தனிமை தந்த ஞானத்தாலும் இருக்கலாம்..<<<

    தனிமையில் ஞானம் விளைவதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

    நலம் என்றென்றும் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  14. அட்டகாசமான கதை....சகோதரி. இப்படியும் ஆண்கள் இருக்கத்தான் செயகிறார்கள். இப்போதாவது புத்தி தெளிந்ததே!

    வாழ்த்துகள் பாராட்டுகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  15. முதலில் ஒரு பொக்கே ராமலஷ்மி! அருமை! அருமை! அப்படியே ஒன்ற வைத்த கதை!
    எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் கதை கிட்டத்தட்ட இது போன்றுதான்....ஆனால் வேறு விதமாக...

    அவளும் வைராக்கியத்துடன் தான் ஆனால் கடமையில் தவறாமல்.. வாழ்ந்து வருகிறாள்...ஆனால் அவள் கணவன் இது போன்று உணர்வானா என்பது தெரியவில்ல்அ...அவன் உணரும் காலம் வரும் போது காலம் தவறியும் போகக் கூடும். பல வரிகள் அவளை நினைவுறுத்தியது.
    உணர்வு பூர்வமான கதை படைப்பு. இயல்பான கண்ணில் விரியும் காட்சிகள்...பாராட்டுகள்.
    மொபைலில் அடிப்பதால் அதிகம் முடியவில்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. காலையிலேயே படித்து விட்டேன்.
    அருமையான கதை...
    மகனுக்கு தான் அறிவுரை சொல்ல வேண்டுமெனத் தோன்றும் போது தன்னை அடிமைபோல் நடத்தியவரே அறிவுரை சொல்வது சிறப்பு...
    அருமையான கதை அக்கா.
    பகிர்வுக்கு நன்றி அண்ணா...

    பதிலளிநீக்கு
  17. கதை நன்றாக இருக்கிறது. ஆண்கள் எல்லாருமே இப்படிதான் இருப்பார்கள் என்ற ஒரு காலம் இருந்தது. வியாதிப் படுக்கையிலோ,இம்மாதிரி முடியாமற்போய்விட்ட காலங்களிலோதான் சிந்திக்க அவர்களால் முடிகிறது. பிள்ளைகளுக்குவழிவழி குணங்கள் சாயலாவது இருக்குமே தவிர அது பிள்ளைகளின் குற்றமில்லை. இக்காலத்தில் அதனை மாற்றுவது பெண்களின் படிப்பும், வருமானமும்தான். அதையும் மீறி நடப்புகள் இருந்தால் சொல்லாமல் போய்விடுவார்கள். இப்படியும் ஒரே இடத்தில், இரண்டு மூன்று வாக் அவுட்டுகளும் நடந்து விடுகிறது. இதுவும் எங்கோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. நல்ல வைராக்கியமும் பெண்ணின் தன்மையால் மன்னிக்கப்படுகிறது. விசேஷமான கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. /// இந்த வாரம் திருமதி ராமலக்ஷ்மியின் கற்பனையில் ஒரு சீதை தன் ராமனை ஏன், எதற்கு, எப்படி மன்னிக்கிறாள் என்று பார்ப்போம். //

    எங்கட பிஸிக்ஸ் மாஸ்டரும்.. இப்பூடித்தான் பாடத்தை ஆரம்பிப்பார்ர்.. அந்த ஃபீலிங்ஸ் வந்திட்டுதெனக்கு... அவரின் பெயர் ஸ்ரீதரன் மாஸ்டர்:).. ஹா ஹா ஹா ..(சத்தியமா).

    பதிலளிநீக்கு
  19. கதை, சுற்றி வளைப்பில்லாமல் மிக அருமையாக நகர்த்தப்பட்டிருக்கு.. வாழ்த்துக்கள். மிக நல்ல மன்னிப்பு.. ஆள் முடியும் வரை காத்திருந்து மன்னிக்காமல் போனாப்போகுதென.. ராமச்சந்திரன் சுகயீனமாக இருக்கும் போதே.. மைதிலி மன்னிச்சு விட்டா.. இது அவவின் பெருந்தன்மை.

    ஆனா கதையின் கருத்தை வைத்துப் பார்க்கும்போது.. இனி மன்னிப்புக் கேட்டென்ன மன்னிச்சென்ன..
    “கண்போனபின் சூரிய நமஸ்காரம்”.. வாழ்க்கைதான் முடிஞ்சு விட்டதே... போய் விட்ட இளமைக்காலத்தை இனித் திரும்பக் கொண்டு வந்திட முடியுமோ?.. அனுபவிச்ச கொடுமைகள் இல்லை என்றாகிடுமோ.. இந்த வயதிலும் கார் கோன் கேட்டதும், நடுங்குகிறா எனில்... எவ்வளவு கொடுமையான வாழ்க்கையில் அவ இருந்திருக்கிறா என்பது புரியுது.

    நல்லவரோ கெட்டவரோ கணவனுக்கு முடியவில்லை எனில், அவரைக் கவனிக்க வேண்டியது மனைவியின் கடமை.. அது வேறு. ஆனா இளமையில் வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்து, இப்போ ஊரார் உலகமெல்லாம் மைதிலிக்கு சிலை வைத்து பால் ஊத்தினாலும்..
    “இழந்தவை யாவும் இழந்தவைதானே”..

    மைதிலியின் காலம் நாசமாகி விட்டதே. இப்போ ராமச்சந்திரனுக்கு உடம்பு முடியாமல் படுத்திருப்பதனல்.. என்னை மன்னி.. மன்னி என க் கேட்கிறார்.. ஒருவேளை இப்பவும் நல்ல உசாராக கார் ஓடிக்கொண்டிருந்தால்.. இப்படி மனம் மாறியிருப்பாரா?.. சொல்ல முடியாது...

    இன்னொன்றும் புரியுது, கணவருக்கு ஆள் வைத்து வேலை பார்ப்பதை விட, தானே பணிவிடை செய்வதுதான்.. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”.. என அவ நினைச்சிருப்பாவோ என்னவோ. அப்போதானே அவருக்கு கூச்சம் வரும்.. ஹையோ இவ்ளோ கொடுமைப்படுத்தியும் நம்மைப் பார்க்கிறாவே என...

    ஆஆஆங்ங்ங் என் தொண்டை வறண்டு விட்டது.. போய் ஒரு ஸ்ரோங் ரீ குடிச்சு... நேராக்கப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. கதையைப் படித்தேன். ஆரம்பத்துல (படிப்பதற்கு முன்), முடிவு வரிதான் தெரியுமே என்ற அசிரத்தை. ஆனால் சொல்லவந்த எண்ணங்கள் (கதாசிரியர்), கதையைப் படிக்கும்போது நெகிழவைத்தது. நல்ல கதாசிரியை, நல்ல தளத்தை-கருவை அருமையாக உபயோகப்படுத்துவார் என்று காண்பித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. @அதிரா- இனி மன்னிப்புக் கேட்டென்ன மன்னிச்சென்ன.. - இப்படி நீங்கள் எழுதியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தவறு செய்யும் ஒருவன், இப்போதுதான் திருந்தணும்னு ஒரு காலக்கெடு இருக்கா என்ன? ராமசந்திரன், 'என் மனைவி, எனக்குச் செய்வது அவள் கடமை, நான் வீட்டிற்கு சம்பாதித்ததுபோல' என்று இன்னமும் தன் குணத்திலிருந்து விடுபடாமல் இருந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? அவர், தான் உணர்ந்ததை, தன் மகனும் இப்போவே உணரணும் என்று நினைத்து அவனுக்குப் புரியவைத்தாரா இல்லையா?

    அவர், நேரடியாக தன் மனைவியிடம் மன்னிப்புக் கோரவில்லை. (மன்னி, மன்னி என்று அவர் சொல்லவில்லை) ஆனால், அவர் உணர்ந்துவிட்டார் என்பதை மைதிலி புரியும்படியான நிகழ்ச்சியை கதாசிரியர் கொண்டுவந்திருக்கிறார்.


    "அப்போதானே அவருக்கு கூச்சம் வரும்.." - இதுவும் தவறான எண்ணம்னு தோணுது. இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தபோது, 16 வருடம் அவர் மனைவி தேவசேனா அவர்கள் அவருக்கு முழுப் பணிவிடையும் செய்தார். ரொம்ப பிஸியாகவே காலம் தள்ளிய இயக்குனர், நிச்சயம் அவருடைய மனைவிக்குத் தேவையான அளவு நேரம் ஒதுக்கியிருக்கமாட்டார். தனக்குக் கெடுதல் நேர்ந்ததற்காக தன் கடமையைச் செய்யாமல் மைதிலியும் இருக்கவேண்டும் என்பது உங்கள் எண்ணமா? அவளுடைய கேரக்டர் நல்லவிதமாகத்தான் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

    எப்போதுமே, தவறு செய்பவர்களுக்கு, நிறுத்தி நிதானிக்கும் காலத்தில்தான் கடந்த காலங்களை அசைபோட இயலும். அப்போதுதான் தாங்கள் செய்த தவறுகள் எல்லாம் புரிபடும். எல்லாத் தவறுகளையும் திருத்தி எழுதிவிட முடியாது. முடிந்த தவறுகளைத்தான் சரி செய்ய இயலும்.

    உங்களுக்கு எழுதுவதுபோல், கதை எனக்குத் தரும் உணர்வுகளை எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. "நிறைய நோகச் செய்திருக்கிறேன் அது குறித்துக் கவலையும் கொள்ளாதிருந்திருக்கிறேன் இப்போது
    மன்னிப்புகள் வேண்டியிருக்கின்றன.. மன அமைதிக்காக"

    முழுக் கவிதையும் ரசித்தேன்... மனதிற்கு ஏதோ செய்தி சொல்வதாகவே உணர்கிறேன். நல்லா எழுதியிருக்கீங்க கதாசிரியை ராமலக்ஷ்மி அவர்களே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல படைப்புக்கு நன்றி பாராட்டுகள் த.ம வாக்குடன்

    பதிலளிநீக்கு
  24. தியாக சுடராய் இருப்பதற்கு இறப்பதற்கு முன் வரும் கிளைமாக்ஸ் சீனில் வாழாமல் வாழ்ந்த மாமணி என்ற பெயர் கிடைக்குமா வீட்டில்,வெளியில் வைத்து ??............நல்ல புரியும் படி எடுத்து காட்டி இருக்கீங்க ,கதையில் வரும் கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் தோழி......

    பதிலளிநீக்கு
  25. ஹையோ ஜாமீஈஈஈஈஈஈ நான் தனியே மாட்டிவிட்டேனாஆஆஆ ஆவ்வ்வ்வ்வ் எங்கே போயிட்டீங்க எல்லோரும்.. இங்கே நெல்லைத்தமிழன் ஒரு அப்பாவியை போட்டுத் துவைச்செடுக்கிறார்ர்:).. பொயிங்காமல் புறுணம் பார்க்கிறீங்களே.. இது ஞாயமா?:) தகுமா?:) அடுக்குமா?:)... ஹா ஹா ஹா:)..


    ///நெல்லைத் தமிழன் said...
    @அதிரா- இனி மன்னிப்புக் கேட்டென்ன மன்னிச்சென்ன.. - இப்படி நீங்கள் எழுதியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தவறு செய்யும் ஒருவன், இப்போதுதான் திருந்தணும்னு ஒரு காலக்கெடு இருக்கா என்ன? ..//

    கரீட்டு.. “திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்”..
    ஆனா காலத்தோடு திருந்தியிருந்தால் அவர் உயர்ந்தவர்... இளமையிலேயெ திருந்தியிருந்தால், மனைவி நல்ல வாழ்க்கை வாழ்ந்திருப்பா எல்லோ... அதிலயும் இப்போ உடல் தளர்ந்து, படுக்கையில் இருக்கும்போதுதானே மன்னிப்பை நினைக்கும்போது.. இதில் அவரின் சுயநலமும் கலந்திருக்கிறதுபோலாகிறது.. இப்பவும் அவர் நல்ல உடல் நலத்தோடு இருந்து திருந்தியிருப்பின் அது வேறு விதமாக எண்ண வைத்திருக்கலாம்..

    /// அவர், தான் உணர்ந்ததை, தன் மகனும் இப்போவே உணரணும் என்று நினைத்து அவனுக்குப் புரியவைத்தாரா இல்லையா?///

    இப்போகூட நீங்கள் அந்த மனைவியின் இழப்புக்களை கொஞ்சம்கூட எண்ணவில்லையே... திருமணமாகி வரும்போது ஒரு பெண் எவ்வளவு ஆசைகள் கனவுகளோடு வந்திருப்பா.. அது அவவுக்கு கிடைத்ததா.. இந்த வயதிலும் கோன் சத்தம் கேட்டு நடுங்குகிறா எனில், அவவின் ஒவ்வொரு உடல் அணுவிலும் பயம் இருக்கிறது .. அவ்ளோ ஆழமாக நோகடிக்கப் பட்டிருக்கிறா என்றுதானே அர்த்தம்.. அதை ஏன் நினைக்கத் தவறுறீங்க?.. நீதி ஞாயம் எனில் இருவரையும் நினைத்துத்தானே பேசோணும்..

    //அவர், நேரடியாக தன் மனைவியிடம் மன்னிப்புக் கோரவில்லை. (மன்னி, மன்னி என்று அவர் சொல்லவில்லை) ஆனால், அவர் உணர்ந்துவிட்டார் //

    இதில்கூட பாருங்கள்... அவர் ஒரு ஆண்.. எதுக்கு மன்னிப்புக் கேட்கோணும் எனும் விதத்திலேயே நினைக்கிறீங்கபோல இருக்கே...

    அவரின் புத்தகத்தை, மனைவி தொடக்கூட விடமாட்டாராம் முன்பு, இப்போ படிச்சுப் பார் எனக் கொடுக்கிறார்.. அப்போ எவ்வளவு கொடுமைக்காரராக இருந்திருக்கிறார்ர்??..

    பதிலளிநீக்கு
  26. @அதிரா - என் ஹஸ்பண்ட் உங்க VIEW சரி என்று சொல்கிறார். வாழ்க்கைல எல்லாத் தவறையும் செய்துவிட்டு, அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதில் அந்த பிம்பம் பதிந்திருக்கும்போது, கடைசி காலத்தில் மன்னிப்புக் கேட்பதால் அது மாறிவிடப்போகிறதா என்றாள். நான் 'அது பெண்ணின் பார்வையா இருக்கும், ஆணின் பார்வையில் நான் எழுதியது சரி என்று தோன்றுகிறது' என்றால், அதற்கு அவள், 'மன்னிப்புக் கேட்பதே பெரிய தகுதியா அந்த கேரக்டர் நினைச்சால், இன்னும் கொஞ்சம் அகங்காரம் பாக்கி இருக்குன்னுதானே அர்த்தம்' என்று சொல்கிறாள். (இந்தப் பெண்களே நம்மை குழப்பியடிப்பார்கள் போலிருக்கிறது :-) )

    பதிலளிநீக்கு
  27. ராமச்சந்திரன் என்னமாதிரி மனைவியின் அன்பை மறுத்தார் என்பதை கோடி காட்டி இருக்கலாம் எப்பவுமே ஆண்களே தவறு செய்ய பெண்களே மன்னிக்க வேண்டுமா

    பதிலளிநீக்கு
  28. அந்தக் கதைகளில் ஒன்று இங்கே
    அந்த இன்னொன்று
    அதுதான் இது

    பதிலளிநீக்கு
  29. //நெல்லைத் தமிழன் said.
    //இதுவும் தவறான எண்ணம்னு தோணுது. இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தபோது, 16 வருடம் அவர் மனைவி தேவசேனா அவர்கள் அவருக்கு முழுப் பணிவிடையும் செய்தார்.///

    அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேனே.. கணவனோ மனைவியோ நோய் வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது உடல் தளர்ந்திருக்கும்போது பக்குவமாகப் பார்க்க வேண்டியது கடமை...

    ஆனா ஒரு அன்பான கணவன் நோய் வாய்ப்பட்டிருக்கும்போது மனைவியின் கவனிப்புக்கும், பாசமே இல்லாத ஒரு கொடுமையான கணவன் நோய் வாய்ப்பட்டிருக்கும் ஒரு கணவனை மனைவி கவனிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.... கடமை எனச் செய்வது ஒன்று, அன்பு பாசம் கொட்டி விழுந்து விழுந்து கவனிப்பதென்பது இன்னொன்று.

    ஒவ்வொரு பெண்ணும் [சில விதிவிலக்குகள் அனைத்திலும் இருப்பார்கள் அதனை விடுங்கோ:)].. மற்றும்படி பெண்களுக்கு கணவன் எதுவும் செய்ய வேண்டாம்ம்.. உடல் தளர்ந்து நடக்க முடியாமல் இருந்தால்கூட ஓகே.. ஆனா உள்ளத்தால் அன்பாக, பாசமாக தம்மோடு இருக்கோணும் எனத்தான் மனைவி எதிர்ப்பார்ப்பார்... முதலாவது கணவன் மனைவிக்கு இடையில் ஒருவருக்கொருவர் பயம் இருக்கக்கூடாது... அன்பு பாசம் அதிகமாகும்போது பயம் போய்விடும்..

    கணவன் மனைவி உறவில்.. 80 வீதமும் தேவையானது அன்பு, அணைப்பு.. மனம் விட்டுப் பேசுதல், ஆதரவாக இருத்தல்... ஏனைய விசயங்கள் எல்லாம் மிகுதி 20 வீதத்துள்தான் அடங்கும்..

    ///எப்போதுமே, தவறு செய்பவர்களுக்கு, நிறுத்தி நிதானிக்கும் காலத்தில்தான் கடந்த காலங்களை அசைபோட இயலும். அப்போதுதான் தாங்கள் செய்த தவறுகள் எல்லாம் புரிபடும்.////
    இது உண்மைதான்.. இதில் எந்தக் குறையும் சொல்லவில்லை... ஆனா அந்தப் பெண்ணையும் கொஞ்சம் யோசிக்கலாமெல்லோ.. ஆண் செய்தது சரி என்றே வாதாடக்கூடாதெல்லோ.. பெண்ணின் முடிந்து போய் விட்ட இளமைக் காலத்தையும், சந்தோசங்களையும் இனித் திருப்பிக் கொடுக்க முடியாதெல்லோ... இப்படித் தம் வாழ்க்கையைத் தியாகம் செய்து எத்தனையோ பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறோம்... ஆனா அப்பெண்ணின் மனதில் எவ்வளவு . சோகம், கவலை குமுறல் இருந்திருக்கும் என்பதனை நாம் எல்லோருமே எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறோம்....

    ஆங் ..அங்... ஹையோ நா வறண்டு போச்சூ.. கை கால் ரைப் அடிக்குது.. எனக்கொரு யானை மார்க் சோடா ஆராவது குடுங்கோ பிளீஸ்ஸ்:)..

    பதிலளிநீக்கு
  30. ///நெல்லைத் தமிழன் said...
    @அதிரா - என் ஹஸ்பண்ட் உங்க VIEW சரி என்று சொல்கிறார். வாழ்க்கைல எல்லாத் தவறையும் செய்துவிட்டு, அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதில் அந்த பிம்பம் பதிந்திருக்கும்போது, கடைசி காலத்தில் மன்னிப்புக் கேட்பதால் அது மாறிவிடப்போகிறதா என்றாள்.//

    ஹா ஹா ஹா... மூச்சைப் பிடிச்சுக் கொண்டு முழுவதுக்கும் பதில் கொடுத்துவிட்டு சோடாக்குடிக்கும்போதுதானே இதைப் பார்க்கிறேன்ன்:).. ஹா ஹா ஹா பார்த்தீங்களோ.. எப்பவும் ஒரு பக்கத்தில் இருந்து மட்டும் நாம் சிந்திக்கக்கூடாது.. இரண்டுபக்கமும் சிந்திக்க வேண்டும்.

    எனக்கு ஒரு அண்ணா சின்ன வயதில் சொல்லித்தந்தார்... ஒரு கடிதம் எழுதும்போது... எழுதுபவராக மட்டும் இருக்காதே.. அதை உடைத்துப் படிப்பவராகவும் இரு.. அப்போதுதான் பக்குவமாக எழுதப் பழகிக்கொள்வாய் என.. ஹையோ எனக்கிண்டைக்குத் தத்துவமா வருதேஏஏஏஏ:))

    பதிலளிநீக்கு
  31. //நம்ம கூடவே நமக்காகவே இருக்கிற ஜீவனோட மனசுல இடம் பிடிக்க முடியலைன்னா வாழ்ந்த வாழ்க்கையே வேஸ்டுதான். //
    செம அட்டகாசமான வரிகள் ...நான் நாலு கால் பீலிங்சோடையே சொல்றேன் நாம வெளில போயிட்டு வீட்டுக்குள் வரும்போது வளர்ப்பு பிராணிகள் ஓடி வரும் நம்மைப்பார்த்து அதை லேசா தட்டி கொடுத்தா அதுங்களுக்கு எவ்ளோ சந்தோசம் வரும் அந்த ம்,மாதிரி ஒரு சின்ன ஸ்மைல் கொஞ்சம் p's and q's இதெல்லாம் சேர்ந்தா எவ்ளோ இனிமையா இருக்கும் வாழ்க்கை. சில பேர்களின் பொசெசிவ்னெஸ் ஈகோ இதெல்லாம் தான் வாழ்க்கை நாசமாக காரணிகள் :(

    பதிலளிநீக்கு
  32. @ATHIRAAAV MITYAAV //ரு கடிதம் எழுதும்போது... எழுதுபவராக மட்டும் இருக்காதே.. அதை உடைத்துப் படிப்பவராகவும் இரு.. அப்போதுதான் பக்குவமாக எழுதப் பழகிக்கொள்வாய் //

    ஹாஹா :) நாங்கள்லாம் கேரக்டேர்சாவே மாறிடறோமோன்னு தோனு இப்போல்லாம் :)

    பதிலளிநீக்கு
  33. @நெல்லைத்தமிழன் உங்க ஹஸ்பண்ட் சொன்னது 100 % நானும் ஒப்புக்கறேன் ..
    தொலைத்த சந்தோஷத்தை எங்கே தேடறது சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  34. சமைச்சிட்டு வரேன் கொஞ்சம் நேரத்தில் :)

    பதிலளிநீக்கு
  35. @ //முதலாவது கணவன் மனைவிக்கு இடையில் ஒருவருக்கொருவர் பயம் இருக்கக்கூடாது... அன்பு பாசம் அதிகமாகும்போது பயம் போய்விடும்..

    கணவன் மனைவி உறவில்.. 80 வீதமும் தேவையானது அன்பு, அணைப்பு.. மனம் விட்டுப் பேசுதல், ஆதரவாக இருத்தல்//

    மிகவும் அற்புதமான அருமையான வார்த்தைகள் .எல்லா மனைவிகளுக்கும் தேவைப்படுவது அன்பு கனிவான பார்வை ஒரு நெசமான புன்னகை வ்ளோதான் ..இந்த அன்பும் பாசமும் கிடைச்சா முழு நாளும் கூட இயந்திரமாக உழைக்க தயார் பெண்கள் /மனைவிமார்கள்

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ராமலக்ஷ்மி அக்கா

    பதிலளிநீக்கு
  37. மனைவியைப் பார்த்துக்கும் ஆணும் இருக்கத்தான் செய்கின்றனர். இதை நேரிலேயே தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! அலுத்துக் கொள்வதில்லை. முக வாட்டம் காட்டுவதில்லை! இன்னும் எத்தனை நாளைக்கு என்றெல்லாம் சொல்லுவதில்லை! கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வாய்த்திருக்கும் மருமகள்கள், சம்பந்தி எல்லோருமே அப்படியே பார்த்துக்கறாங்க! ஆகவே இதெல்லாம் அவரவர் வளர்ப்பு, மனைவியிடம் கொண்டிருக்கும் பாசம், மன உறுதி, எல்லாவற்றையும் கொண்டது! தானாக இயல்பாக வரணும். இந்தக் கதையின் நாயகருக்குக் காலம் கடந்து ஞானம்! இப்போதாவது வந்ததே என நினைக்கணும்! மற்றபடி மைதிலிக்கு வாழ்க்கை போனது போனது தான்! சந்தோஷம் திரும்பவா வரப் போகிறது! :( இதிலே அதிராவின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  38. பெண் படும் வேதனைச் சுழலில் ஆரம்பித்து அலையலையாக தடதடக்கிறது கதை. சீரான கதைநடை. கடைசியில், பிள்ளைக்கு புத்தி சொல்லும் அப்பாவுக்கும் ஸ்ரீராமின் கடைசிவரி பூரிமசால் வடிவில் வந்து சேர்ந்தது. நன்று

    ஆடிட்டர் + கவிஞரா ? இடிக்கிறதே.. சரி, நிகழக்கூடாதது என உலகில் ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு

  39. @ அப்பாவி Athira :

    //.... 80 வீதமும் தேவையானது அன்பு, அணைப்பு.. மனம் …. ஏனைய விசயங்கள் எல்லாம் மிகுதி 20 வீதத்துள்தான்....//

    அதென்ன..80%, 20% ? இந்தியாவில் கிடைக்கும் Coffee + Chicory Blend ஞாபகம் வருதே..! ஸ்ட்ராங் காப்பிதான் நல்லதுங்கிறீங்களா ?

    பதிலளிநீக்கு
  40. ////அதென்ன..80%, 20% ? இந்தியாவில் கிடைக்கும் Coffee + Chicory Blend ஞாபகம் வருதே..! ஸ்ட்ராங் காப்பிதான் நல்லதுங்கிறீங்களா ?/////

    ஹா ஹா ஹா நல்ல ஸ்ரோங்கான கோப்பிதானே தென்பைக் கொடுக்கும்:)

    பதிலளிநீக்கு
  41. @angel
    //மிகவும் அற்புதமான அருமையான வார்த்தைகள் .எல்லா மனைவிகளுக்கும் தேவைப்படுவது அன்பு கனிவான பார்வை ஒரு நெசமான புன்னகை வ்ளோதான் ..இந்த அன்பும் பாசமும் கிடைச்சா முழு நாளும் கூட இயந்திரமாக உழைக்க தயார் பெண்கள் /மனைவிமார்கள்///

    ஆஆஆஆவ் என் செக்:) உம் கிட்டத்தட்ட ஞானியாகிட்டா:)... இதைச் சொல்லியே காசிக்குக் கூட்டிப்போய் விட்டிட்டு வந்திடலாம்:)... காசிக்குப் போனால் எதையாவது விட்டிட்டெல்லோ வரோணுமாம்ம்ம்:).. இந்தப் பிரச்சனையாலதானே என் காசி ட்றிப் லேட்டாகிட்டெ போகுதூஊஊ:)..

    பதிலளிநீக்கு
  42. ஆஆஆவ்வ்வ் கீதாக்காவும் என் ட் ரக் கிலேயே ரெயினைத் திருப்பிட்டா... ஹா ஹா ஹா கூட்டுச் சேர்ந்திட்டமையா கூட்டுச் சேர்ந்திட்டோம்ம்ம்ம்:)...

    அடுத்து "ராமன் சீதையை மன்னித்தார்" எனவும் ஒரு தொடர் தொடங்கி, ஜி எம் பி ஐயாவின் ஆசையையும் நிறைவேத்திடலாமே:)...

    அங்கு வந்து சீதைகளைப் புரட்டி எடுப்போம்ம் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  43. ஹலோ மியாவ் :) என்னை காசியில் விடுமுன் ஒரே அதை நிறைவேற்றிட்டு முடிச்சிட்டு வரேன் :) அது !"$& ஒரு இடத்தில இடத்தில உங்கள் சில பெண்ணிய கருத்துக்களை கவ்விக்கொண்டு நோனோ நோநோ :) காவிக்கொண்டு போய் வச்சிட்டு வரேன் :) அதுக்கப்புறம் பதிவுலக கோவை சரளா லாலாலா :) காலா :) ஹ்ஹஹ்ஹாஆ

    பதிலளிநீக்கு
  44. //ஒரே ஒரு இறுதி ஆசை என்னை காசியில் விடுமுன் ஒரே அதை நிறைவேற்றிட்டு வரேன் என்று வாசிக்கவும் :)

    பதிலளிநீக்கு
  45. ///ன் :) அது !"$& ஒரு இடத்தில இடத்தில உங்கள் சில பெண்ணிய கருத்துக்களை ////

    ஹையோ ஜாமீ நான் சொன்னனே எனக்கு எதிரி வெளில இல்ல:) வீட்டுக்குள்ளயேதான்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்:)... நான் பெண்ணினவாதியுமில்லை எதிர்ப்பால்வாதியுமில்லை:)....
    நேக்குத் தேவை.. நீதி நியாயம்... கடமை நேர்மை எருமை:)... இன்னொண்ணையும் சேர்த்திடுறேனே பீஸ்ஸ்ஸ்:)).. கொடுத்த வாக்கையும் மீறாமை:)....
    ஹையோ ஹையோ... வழிவிடுங்கோ... மீ ஒரு அப்பாவீஈஈ.. ஸ்நேகிதியை... ஸ்நேகிதியை.... :).. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  46. @ ஸ்ரீராம்,

    கதை எழுதுவதில் நீண்ட இடைவெளி விட்டிருந்த என்னை எழுத வைத்ததற்கும் இங்கே பகிர்ந்திருப்பதற்கும் நன்றி. அந்த இன்னொரு கதையையும் தரப் பார்க்கிறேன் :).

    @ Geetha Sambasivam,

    நன்றி கீதாம்மா.

    @ வெங்கட் நாகராஜ்,

    நன்றி வெங்கட்

    @ bandhu,

    மகிழ்ச்சி. நன்றி.

    @ கவிஞர்.த.ரூபன்

    நன்றி.

    @ Dr B Jambulingam,

    நன்றி.

    @ வல்லிசிம்ஹன்

    நன்றி வல்லிம்மா.

    @ KILLERGEE,

    மிக்க நன்றி.

    @ துரை செல்வராஜூ,

    கருத்துக்கு நன்றி.

    @ Thulasidharan V Thillaiakathu,

    பலரது வாழ்வில் நாம் பார்க்கும் நிகழ்வுகளே.
    மிக்க நன்றி, கருத்துக்கும் பூங்கொத்துக்கும்.

    @ middleclassmadhavi

    நன்றி மாதவி.

    @ பரிவை சே.குமார்

    நன்றி குமார்.

    @ காமாட்சி,

    உண்மைதான். நன்றிம்மா.

    @ அப்பாவி athira ,

    கதை மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகள் குறித்த தங்கள் பார்வைக்கும் அலசலுக்கும் நன்றி ஆதிரா.

    @ நெல்லைத் தமிழன்,

    கதையோடு கவிதையும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றி.

    @ G.M Balasubramaniam

    கோடி காட்டியிருக்கிறேனே, குறிப்பாகத் தன் மகனோடு பேசும் இடத்தில். பெண்கள் தவறு செய்ய ஆண்கள் மன்னிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இங்கே சீதை ராமனை மன்னிப்பதுதானே கதை. நன்றி GMB sir.

    @ Angelin,

    மிக்க நன்றி.

    @ Geetha Sambasivam,

    ஆம். மைதிலி இழந்த வாழ்வு இழந்ததே. அந்த வகையில் அவரது வைராக்கியமும் சரியானதே. என் பார்வையில் ராமச்சந்திரன் திருந்தி விட்டதற்காக அன்றி மருமகளின் வாழ்வில் மலர்ச்சியைக் கொண்டு வர நினைத்ததற்காகவே மைதிலி அவரை மன்னித்திருக்க வேண்டும்.

    @ ஏகாந்தன் Aekaanthan !

    மிக்க நன்றி. ஏன், ஆடிட்டர் ஆனால் கவிதை வராதா:)?

    @ கரந்தை ஜெயக்குமார்

    மிக்க நன்றி.


    பதிலளிநீக்கு
  47. இன்னொரு ராமசந்திரன் உருவாகாமல் தடுத்து விட்டார் அருணை.இனி அனுவுக்கு கொடுக்க வேண்டிய அன்பும் , மதிப்பும் கிடைக்கும்.
    தான் செய்த தவறை உணர்ந்து விட்டாலே மன்னிப்பு கிடைத்து விடும். மகனையும் நல்வழி படுத்தியது அறிந்து அன்பான மன்னிப்பு ராமசந்திரனுக்கு மைதிலியிடமிருந்து.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி நல்ல கதைக்கு.
    நல்லகதையை கேட்டு வாங்கி போட்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  48. கவிதை நன்று.

    தொய்வில்லாத எழுத்து - பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  49. @ கோமதி அரசு,

    வாழ்த்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

    @ Durai A,

    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!