வியாழன், 16 நவம்பர், 2017

ரசித்த வரிகள் - இறந்த பின்னும் நினைவு கொள்ள...


​     ரசித்த வரிகள் என்பது சிலசமயம் ஒருவரி மட்டுமாய் இருந்துவிடும். 
சில சமயங்களில் அடுத்தடுத்த வரிகளைத் தொடர்ந்து ரசிக்க முடியும்.  அப்படி ரசிக்கும்போது அவைகளை யாருக்காவது வாசித்துக் காட்டத் தோன்றும்.  கேட்க யாரும் இல்லாவிட்டால்?  இப்படித்தான் இவைகளை  இங்கு பகிரத் தோன்றியது.



     சென்றமுறை ஜெமோவின் அறம் புத்தகத்திலிருந்து மட்டும் எடுக்கப்பட்ட வரிகளை பகிர்ந்திருந்தேன்.  அதனுடனேயே அவ்வப்போது குறித்து வைத்த வரிகள்தாம் இவை. 

     லா ச ரா மட்டும் சமீபத்தில்...



​     ஒளி ஓவியர் ஜீவாவின் அந்த வர்ணனையை ரொம்பவே ரசித்தேன்.



     உங்களால் எவ்வெவற்றை ரசிக்க முடிகிறது என்று சொல்லுங்கள்.  லா ச ரா கதையில்,  மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆசைப்பட்டு மணந்து கொண்ட பெண், அளவுக்கதிகமாகவே அமைதியான சுபாவமாய் இருப்பது நாயகனைப் படுத்துகிறது.   ஆனாலும் அவனால் பிரியத்தை விடமுடியவில்லை.​


     சரி,  வரிகளுக்குச் செல்வோமா......



=================================================================================================================







நிழல் எனக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும் உச்சி வெய்யில் நேரம்....  -


​ ​(நானும் இந்த நூற்றாண்டும் - வாலி
)​




=========================================================================================================================








தாத்தாவின் முகத்தில் அவஸ்தை,​  ஒரு மூக்குக் கண்ணாடி போல் பொருந்தியிருக்கிறது. -- 


​(​திரைச்சீலை  -  ஒளி ஓவியர் ஜீவா.
)​


======================================================================================================================







ஒரு ஸ்திரீ, தான் புருஷனுக்குப் பணிய வேண்டியவள் என்பதை உணராது போனால், சம்சார சுகம் குப்பைமே​ட்டைப்போய் அடைந்துவிடும் அல்லவா? 

(​பெரிய வீழ்ச்சி - தேவன்
)​

அவளை அழைத்துக்கொண்டு குற்றாலம் அருவியைக் காண்பித்து விட்டுவா!  அங்கே அதன் உயரத்தையும் அளவையும் பார்க்கும்போது யாராயிருந்தாலும், "அடே!  இது எவ்வளவு பெரிது, எவ்வளவு கம்பீரம்!  நாம் எவ்வளவு அற்பம்!" என்ற உணர்ச்சி கட்டாயமாக உண்டாகாமலிருக்காது. -

(​பெரிய வீழ்ச்சி - தேவன்
)​


============================================================================================================================








சில பேரைப் பார்த்த கணமே வெறுக்கத் தோன்றும்.  இதற்குத் தோற்றம் காரணமல்ல.  பழகும் விதம், உடலசைவுகளிலும், பேச்சின் தொனியிலும் பாணியிலும் உள்ள அராஜகம், சில சமயம் உடலமைப்பு, வாசனை - இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கும்.  -  

​(​யவனிகா - சுஜாதா

)​





===========================================================================================================================







 

​​இறந்த பின்னும் நினைவு கொள்ள வள்ளுவர்சொன்னது போல எச்சத்தால் அறியப்பட,  ஒருவர் வாழும் காலத்தில் பெரிய இழப்புகள் தேவைப்படுகின்றன.  இல்லையெனில் இறந்த பின்னர் மறந்து போய்விடுவோம்.  - (எழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா) ​


==========================================================================================================================








​ஒரு தடவை சமயலறையில் மாடப் புரையில்  எதையோ தேடுகையில் அவளைத் தேள் கொட்டி விட்டது.  வலியினால் வாய் வீட்டுக் கத்த மாட்டாளா !  கொட்டிய இடத்தைக் கெட்டியாய் அழுத்திப் பிடித்துக் கொண்டு சுவரில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.  நெறி தோளைக் குடைகிறது.  நெற்றியில் வியர்வை முத்து முத்தாய் அரும்புகிறது.  துடிக்கும் வலியில் புருவங்கள் நெரிகின்றன.    ஆயினும் வாயினின்று  "அம்மாடி பொறுக்க முடியவில்லையே!"  என்றஒரு அரற்றல் கூடக் கிளம்ப மாட்டேனென்கிறது.  அவளை நான் என் தோளில் சாய்த்துக் கொள்கிறேனென்றாலும் என் ஆறுதலுக்குச் சாய்ந்து கொள்கிறாளேயொழிய, அவள் வேதனைக்குத் தணிப்பாய் இருப்பதாய்த் தெரியவில்லை.  அவளுக்காக நான் தவிப்பது என் தவிப்பே;  அவள் தவிப்பில் ஒரு  பங்கு அல்ல.  அவள்தான் எனக்குத் தன்னில் பங்கு தரமாட்டேனென்கிறாளே !  "இவள் மனித ஜென்மந்தானா அல்லது மிருகமா !" என்று கூட நான் வியப்புறுகிறேன். வேதனையை அவ்வளவு மௌனமாய் அவைகள்தாம் சகித்துக்கொள்ளும்..................



.............................பாவம், தன்னுடன் போகாது என் வித்தையும் தாங்குகிறாள்.  ஏற்கெனவே சற்று நலிந்த உடல் இன்னும் நாளாக நாளாக என்னவோ!  என் மனத்தை அலசிப் பார்த்துக் கொள்கிறேன்.  நான் இன்னமும் சில நாட்களுக்குள் தந்தையாவதைப்  பற்றி எனது மனத்தில் சந்தோஷமா ! பெருமிதமா?  ஒரு தினுசில் சிறு அசடு தட்டுகிறது - ஏதோ ஏமாந்து போன மாதிரி;  ஆனால் மனத்தில் ஒரு நிம்மதியும் படுகிறது.  அக்குழந்தையின் மூலம் அவளிடத்தில் எனது அம்சத்தில் ஒரு பங்காவது பெற்று விடுவேன் என்று நினைக்கிறேன்.  பிறப்பது பெண்ணாய்ப் பிறந்தால் தேவலை.  தன் தாயை விட என்னிடம் இன்னும் கொஞ்சம் பட்சம் காட்டாதா?  ...................................

...................அவள் மௌனம் வெறும் மௌனமாய் இப்போது இல்லை.  அர்த்தமும் காரியமும் நிறைந்த மௌனம்.  இரண்டுபேர் ஓர் அறையில் ரகசியம் பேசிக் கொண்டிருந்தால், அதைச் சுவரில் காதை வைத்துக் கொண்டு வெளிப்புறமாக ஒட்டுக் கேட்பவனின் மௌனம்;  நாடி பிடித்துப் பார்க்கும் வைத்தியனின் மௌனம்.  அவள் எதை அப்படி ஒட்டுக் கேட்கிறாள்?  பூமாதேவிக்கு நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாளா?  இவள் கவலைகளை பட்டுப் பட்டு எனக்கு மண்டை கூட நரைத்துவிடும் போல் இருக்கிறது...................................................

..............................என் பிரிவுத் தன்மையால் அவளுக்கு என்ன பிரயோஜனம்?  நானும் தவிக்கிறேன். அவளும் தவிக்கிறாள்.  இந்நிலையில் நானும் தனியன், அவளும் தனியள்தான்;  அவள் படும் கஷ்டத்தை நான் வாங்கிக் கொள்ள முடிகிறதா?  அவளால்தான் கொடுக்க முடிகிறதா?  இப்படியேதான் சந்ததி உண்டாகிறது; மடிகிற்து.  பார்க்கப் போனால் யாரால் யாருக்கு என்ன பயன்?...............................

......................................"என் வயிற்றில் நான் எப்பொழுதும் ஒரு குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஒரு குரலாய் இல்லை. வெவ்வேறு குரலாய் இருக்கிறது.  சுவாமி எந்த ஜென்மாவை என் வயிற்றுக்குள் வைக்கலாம் என்று இன்னும் ஒவ்வொன்றாய் வைத்து வைத்துப் பார்த்து எடுக்கிறாரா?  எந்தக் கணக்கில் வைப்பார்?  என் வயிறு எவ்வளவு கொள்ளுமோ அந்தக் கணக்கிலையா?".........................

இவள் பேசுவது வேதாந்தமா?  விபரீதமா?


அப்பாடா! இதோ ஆஸ்பத்திரி வந்து விட்டது............

பரபரக்க வாசலில் உலாவினேன்.  இவர்களுக்கெல்லாம் கேலியாகத்தான் இருக்கும். இப்பொழுது என் தவிப்பு அதிகமா?  அவள் தவிப்பு அதிகமா?


பூர்வா -  லா ச ரா. (அநியாயமாய் முடிக்கப்பட்ட ஒரு கதை)


===================================================================================================================



52 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. லா.ச.ரா. அவர்களின் எழுத்துக்கள் கனக்கின்றன...

    பதிலளிநீக்கு
  3. ரசித்த வரிகள்..... நானும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. லா ச ரா. தனக்குள் ஆழ்ந்து எழுதுபவர்.
    அவருக்கு தவிப்பு அதிகமோ! அவளுக்கு அதிகமோ!
    நமக்கு தான் தவிப்பு அதிகம்.
    என்ன குழந்தை பிறந்தது என்று.

    வாலி, ஒளி ஓவியர் ஜீவா.சுஜாதா , தேவன்



    பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான சிந்தனைக்குறிய வார்த்தைகள்.
    நானும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் ரசித்ததை நாங்களும் ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
  7. லா ச ரா வாசித்ததில்லை. வரிகள் ஆழமாக இருக்கிறது.... சிந்திக்கவும் வைக்கிறது...ரசித்தேன். மற்ற எல்லா வரிகளும் நன்றாக இருக்கிறது.

    கீதா: நான் அப்பாலைக்கு வாரேன்.மொபைலில் அடிப்பதால் ..... இப்ப துளசியின் கருத்து மட்டும்....அட்டெண்டன்ஸ்....

    பதிலளிநீக்கு
  8. வரிகளை ரசித்தேன். பிறகு வருகிறேன். "மொபைலில் அடிப்பதால்"- இதுவே கதை சொல்லும் வரியைப்போல் இருக்கிறதே......

    பதிலளிநீக்கு
  9. அனைவரின் வரிகளும் மனதை ஈர்க்கின்றன. அந்தக் காலத்தில் நா.பார்த்தசாரதியின் எழுத்தில் இப்படித்தான் பல வரிகள் மனதின் அடியில் போய் படிந்து போய் விடும். அவரின் எழுத்துக்களை விழுந்து விழுந்து படித்த இளமைக்காலம் நினைவிற்கு வருகிறது.

    என்றும் மறக்க முடியாத அவரின் 'பொன் விலங்கு' என்னும் நாவலிலிருந்து:

    'இந்த உலகிலுள்ள மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அன்பு நிறைந்தவர்களை எங்கே எப்போது சந்திக்க போகிறோம் என்பது தான். வருத்தம் என்னவென்றால் எப்போது பிரியப் போகிறோம் என முன்கூட்டியே தெரியாமலிருப்பது தான்,'

    பதிலளிநீக்கு
  10. இதுமாதிரி வலைகளில் படித்தஏதும் நினைவுக்கு வரவில்லையா உஇல்லை வலையில் எழுத்துகள் நினைவில் வைக்கத் தகுதி இல்லையா

    பதிலளிநீக்கு
  11. பகிர்ந்ததில் நான்ரசித்தது வாலியின் எழுத்துகளே

    பதிலளிநீக்கு
  12. ///நிழல் எனக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும் உச்சி வெய்யில் நேரம்.... -//

    மிக அருமையான ஹைக்கூ... ஆழ்ந்து ரசிக்க வைக்கிறது..

    //தாத்தாவின் முகத்தில் அவஸ்தை,​ ஒரு மூக்குக் கண்ணாடி போல் பொருந்தியிருக்கிறது. -- //
    சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. சில பேரைப் பார்த்த கணமே வெறுக்கத் தோன்றும். இதற்குத் தோற்றம் காரணமல்ல. பழகும் விதம், உடலசைவுகளிலும், பேச்சின் தொனியிலும் பாணியிலும் உள்ள அராஜகம், சில சமயம் உடலமைப்பு, வாசனை - இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கும். - சுஜாதா

    எச்சத்தால் அறியப்பட, ஒருவர் வாழும் காலத்தில் பெரிய இழப்புகள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் இறந்த பின்னர் மறந்து போய்விடுவோம் - நானும் யோசித்துப் பார்க்கிறேன், இழப்புகளைச் சந்திக்காதவர்களை, நாம் இறந்தபின்பு மனதில் வைத்திருக்கிறோமா என்று... இல்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் நமக்குச் சொல்லாவிட்டாலும், அவர்கள், தங்கள் புகழுக்கு நிறைய விலை கொடுத்திருப்பார்கள். 'இறந்தபின்பு அறியப்பட மட்டுமல்ல, வாழும்போது புகழ் வெளிச்சத்தில் இருக்கவும் நிறைய விலை கொடுக்கவேண்டும்'.

    நிழல் எனக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும் உச்சி வெய்யில் நேரம்... - நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. //சில பேரைப் பார்த்த கணமே வெறுக்கத் தோன்றும்.//
    200 வீதம் உண்மை.. இதை நான் உணர்ந்திருக்கிறேன்..

    // "இவள் மனித ஜென்மந்தானா அல்லது மிருகமா !" //
    ஹா ஹா ஹா இக்கதை ராமன் சீதையை மன்னித்த கதைபோல முடிக்கலாம் போல இருக்கிறது...

    உண்மையில் எல்லாம் பெண்களுமே மென்மையானவர்கள் அல்ல, மிகக் குறுகிய “சிலர்” இருக்கிறார்கள்.. மிகுந்த வைராக்கியம்.. எதுக்கும் அஞ்ச மாட்டார்கள், அழவே மாட்டார்கள்.. அழக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்... ஆனா அதற்குப் பின்னால் ஏதும் பின்னணிக் கதை இருக்கலாம், தம் மனதை ஏதோ ஒன்று அப்படிக் கல்லாக்கியிருக்கலாம்...

    கடசியில் சொன்ன கதை வசனங்கள் .. புத்தகம் படிக்கோணும் எனும் ஆவலைத் தூண்டுது.

    பதிலளிநீக்கு
  15. //நிழல் எனக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும் உச்சி வெய்யில் நேரம்.... -// இந்த வரிகளைப் படித்ததும் 'தன்னிழல் தன்னடி ஆவதுண்டு- சுடர் தானும் தலைநேர் எழுவதுண்டு; இன்னமுதே, பகல் உச்சியிதென்றிட ஏதும் கடிகாரம் வேண்டுமோடி?' என்ற கவிமணி தேசிகவிநாயகம் அவர்களின் 'கடிகாரம்' பாடல் வரிக்கள் நினைவுக்கு வந்தன...
    மற்ற ரசித்த வரிகளையும் படித்து ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  16. சிறப்பு சிறப்பு சிறப்பு ஹைக்கூ மனதை அள்ளியது இங்கு திரு ஜீவா பற்றி மட்டும் படித்ததில்லை தெரியாது நன்றி பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு

  17. நிழல் எனக்குள்ளேயே…. –வாலியின் அவதானிப்பு interesting..

    தாத்தாவின் முகத்தில் மூக்குக்கண்ணாடி – ஜீவா.
    இதேபோல் சிலருடைய முகத்தைப் பார்த்தாலே குள்ளநரி ஒன்று குடிகொண்டிருப்பது தெரியும்.

    ஒரு ஸ்த்ரீ தான் புருஷனுக்கு… - தேவன்.
    சம்சார சாகரத்துக்கான இந்தப் படகை கரையிலேயே விட்டுவிட்டு இந்தக்காலப் பெண்கள் கடலுக்குள் குதித்துவிடுகிறார்கள். நீச்சலும் தெரியாமல் படகும் இல்லாமல் அவர்கள் படும்பாடு…

    சிலபேரை பார்த்த கணமே,,..உடலமைப்பு, வாசனை இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கும் -சுஜாதா.
    அதனால்தான் சிலர் ‘அவனோட வாடையே இந்தப்பக்கம் அடிக்கப்படாது..சொல்லிப்புட்டேன்’ என்கிறார்களோ !

    லாசரா-வை கொஞ்சமாகத்தான் படித்திருக்கிறேன். அவருடைய பெண் பாத்திரங்கள் காத்திரமானவர்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழுத்தமானவர்களா, அசைந்துகொடுக்காதவர்களா அல்லது அதில் வரும் ஆண்கள்தான் அவர்களது ஜோடியின் மனதினுள் உள்ளே உள்ளே நுழைந்து ஏதும் அறியாத இருட்டில் முழித்துக்கொண்டிருக்கிறார்களா - தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  18. //சில பேரைப் பார்த்த கணமே வெறுக்கத் தோன்றும். இதற்குத் தோற்றம் காரணமல்ல. பழகும் விதம், உடலசைவுகளிலும், பேச்சின் தொனியிலும் பாணியிலும் உள்ள அராஜகம், சில சமயம் உடலமைப்பு, வாசனை - இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கும். - சுஜாதா//

    ம்ம்ம்ம் இதைத் தான் நான் ஜிஎம்பி சாரின் ஒரு பதிவிலும் குறிப்பிட்டிருதேன். :) லா.ச.ரா. அனுபவிச்சுப் படிக்க வேண்டிய பல கதைகளை எழுதி இருக்கார். அநேகமா எல்லாமே படிச்சிருக்கேன். பெண்கள் தைரியமானவர்களாக, குடும்பத்தைக் கட்டிக் காப்பவர்களாக, நிர்வாகத்தில் சிறந்தவர்களாகக் காட்டப் படுவார்கள்.

    பதிலளிநீக்கு
  19. "என் வயிற்றில் நான் எப்பொழுதும் ஒரு குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு குரலாய் இல்லை. வெவ்வேறு குரலாய் இருக்கிறது. சுவாமி எந்த ஜென்மாவை என் வயிற்றுக்குள் வைக்கலாம் என்று இன்னும் ஒவ்வொன்றாய் வைத்து வைத்துப் பார்த்து எடுக்கிறாரா? எந்தக் கணக்கில் வைப்பார்? என் வயிறு எவ்வளவு கொள்ளுமோ அந்தக் கணக்கிலையா?"......// என்ன கனமான வரிகள்! லாசர வின் எழுத்து கொஞ்சம் கனமானதுதான். நா பா கூட அப்படித்தான். கதையை விட இப்படியான எண்ண ஓட்டங்கள் கதையினிடையே நிறைய இருக்கும்.

    தலைவர் சுஜாதாவின் வரிகள் வழக்கம் போல ரசித்தேன்...

    தேவனின் முதல் நீலக்கலரில் இருக்கும் வரிகள் அவர் எந்த இடத்தில் சொல்லுகிறார் என்று தெரியவில்லை!! அதன் அர்த்தமும்...

    இரண்டாவது சிவப்புக் கலர் ரசித்தேன்.

    வாலியின் வரிகளும் சூப்பர்! என்றாலும்

    தாத்தாவின் மூக்குக்கண்ணாடி ஆஹா!!! மிகவும் ரசிக்க வைத்தது!

    இப்ப அனைத்துமே முழுவதும் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குறித்து வைத்துக் கொண்டேன். மிக்க நன்றி ஸ்ரீராம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. லாசரா ஒரே ஒரு கதைதான் வாசித்தேன் அதுவும் மாமனார் பைன்ட் பண்ணியிருந்த ஒரு தொடர் இடையில்....ஆஷ் கொலை வழக்கு-ரகமி. அதன் இடையில்....அதுவே கனமான ஆழ்ந்து வாசிக்க வைத்தது. இன்னும் வாசிக்கணும் என்று தோன்றியது. நெட்டில் தேடிக் கொண்டிருக்கேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. லா ச ராவின் பூர்வா படிக்கும் ஆர்வத்தை தூண்டுதே

    ரசித்த வரிகள் அனைத்துமே சூப்பர்ப்
    யவனிகா :) என்றால் ஏஞ்சல்னு மீனிங் @ அதிராவ்

    பதிலளிநீக்கு
  22. நான் லா.ச ரா.வின் பக்தை. எனவே முதலிடம் அவரின் எழுத்துக்குத்தான். அவரின் வர்ணனைகளின் அழகு அலாதி! மௌனத்தை யாராவது இப்[படி வர்ணித்திருக்கிறார்களா?

    //அவள் மௌனம் வெறும் மௌனமாய் இப்போது இல்லை. அர்த்தமும் காரியமும் நிறைந்த மௌனம். இரண்டுபேர் ஓர் அறையில் ரகசியம் பேசிக் கொண்டிருந்தால், அதைச் சுவரில் காதை வைத்துக் கொண்டு வெளிப்புறமாக ஒட்டுக் கேட்பவனின் மௌனம்; நாடி பிடித்துப் பார்க்கும் வைத்தியனின் மௌனம். அவள் எதை அப்படி ஒட்டுக் கேட்கிறாள்? //

    பின்னர் சுஜாதா. //இறந்த பின்னும் நினைவு கொள்ள வள்ளுவர்சொன்னது போல எச்சத்தால் அறியப்பட, ஒருவர் வாழும் காலத்தில் பெரிய இழப்புகள் தேவைப்படுகின்றன. இல்லையெனில் இறந்த பின்னர் மறந்து போய்விடுவோம்.// எவ்வளவு உண்மை!

    //தாத்தாவின் முகத்தில் அவஸ்தை,​ ஒரு மூக்குக் கண்ணாடி போல் பொருந்தியிருக்கிறது.// --

    ஒளி ஓவியர் ஜீவாவின் புன்னகைக்க வைக்கும் comparison, கொஞ்சம் சுஜாதா சாயல் இருந்தாலும்..(யாருக்குத்தான் சுஜாதா சாயல் இல்லை?)

    //நிழல் எனக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும் உச்சி வெய்யில் நேரம்// -
    வாலி ஒரு வார்த்தை சித்தர்.

    //அவளை அழைத்துக்கொண்டு குற்றாலம் அருவியைக் காண்பித்து விட்டுவா! அங்கே அதன் உயரத்தையும் அளவையும் பார்க்கும்போது யாராயிருந்தாலும், "அடே! இது எவ்வளவு பெரிது, எவ்வளவு கம்பீரம்! நாம் எவ்வளவு அற்பம்!"// என்ற உணர்ச்சி கட்டாயமாக உண்டாகாமலிருக்காது. -


    இயற்கையின் ப்ரும்மாண்டத்தை உணரும் பொழுதெல்லாம் அது, அருவியோ, மலைவாச ஸ்தலங்களோ, கடற்கரையோ எனக்கு இப்படித்தான் தோன்றும், இயற்கை எவ்வளவு பெரிது! நாம் எத்தனை அற்பம்!
    தேவனின் எழுத்துக்களில் துப்பறியும் சாம்புவைத் தவிர அதிகம் படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    நல்ல பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  23. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி மனோ சாமிநாதன் மேடம். சட்டென நா பாவின் 'பொன்விலங்கு' நாவலிலிருந்து வரிகளை எடுத்துக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஜி எம் பி ஸார். வலையில் படிப்பதிலிருந்தும் எடுத்துக் கொடுக்க எண்ணம் ஏற்கெனவே இருக்கிறது. முன்னரே சேர்த்திருந்தால் பகிர்ந்திருக்கலாம். இனிதான் சேர்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  26. மீள் வருகையில் வரிவரியாய் எடுத்து ரசித்திருக்கும் நெல்லைத் தமிழனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. மீள் வருகையில் சீதை ராமனை மன்னிப்பதை நினைவு கூர்ந்திருக்கும் அப்பாவி அதிராவுக்கு நன்றி. //கடைசியில் சொன்ன கதை வசனங்கள் // லா ச ரா படிக்க சற்றுப் பொறுமையும் வேண்டும்!

    :))

    பதிலளிநீக்கு
  28. நன்றி மிடில்க்ளாஸ்மாதவி. பொருத்தமாய் கவிமணி பாடலை நினைவு கூர்ந்திருப்பது நன்று. கண்ணதாசனோ, வாலியோ பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்தாள்வது வழக்கம்தானே?

    பதிலளிநீக்கு
  29. நன்றி ஏகாந்தன் ஸார். பகிர்ந்திருக்கும் ஒவ்வொரு வரியையும் எடுத்து ரசித்து, கருத்துப்பகிர்வு செய்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  30. நன்றி கீதாக்கா... லா ச ரா நான் அதிகம் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  31. நன்றி கீதா ரெங்கன். தாத்தாவின் மூக்கு கண்ணாடிதான் இந்தப் பகிர்வில் எனக்கும் மிகவும் பிடித்த வரி! இப்படி வரிகளாய்ச் சுருக்கித் தருபவற்றை முழுவதும் படிக்க நினைக்கும் பேராசை சாத்தியமா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  32. நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். லா ச ரா விரும்பிப் படித்திருக்கிறீர்கள் என்பது சிறப்பு. ரசித்த அனைத்தையும் எடுத்துச் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. அண்மையில்தான் நண்பர் ஒருவர் மூலமாக கேள்வி பட்டேன். லா.ச.ரா ஒரு கதையை ஒவ்வொரு பத்தியாக எழுதுவாராம். முதல் நாள் எழுதிய பத்தியை மாற்றி இரண்டாவது நாள் எழுதுவாராம். இப்படி மாற்றி மாற்றி எழுதி திருப்தியாக வராதவரையில் கதை வெளியே போகாதாம். அப்படி ஒரு படைப்பாளியாம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  34. லா ச ரா பற்றி புதிய தகவல். நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  35. லாசரா என்றைக்குமே வார்த்தைகளுக்கு யோசித்து வரிவரியாக கதைகள் எழுதியதில்லை. அவர் அனுபவிப்பின் அவஸ்தைகளும் ஆனந்தங்களும் தான் அவரது கதைகளாகியிருக்கின்றன.

    'நிழல் எனக்குள்ளேயே ஒளிந்து கொள்ளும் உச்சி வெய்யில் நேரம்....'

    -- வாலி

    என்னுள் ஒளிந்து கொண்டது வெயிலா, நிழலா என்பது வாசிப்பவரின் யோசனைக்கு. -

    பதிலளிநீக்கு
  36. அற்புதமான வரிகள் பதிவு. லாசரா அவர்களின் அந்தப் பெண் தேள் கொட்டித் துடித்தது நமக்கே கொட்டியது போல இருக்கிறது. எவ்வளவு எழுத்து வல்லமை.
    தேவன் அவர்களின் வாசகங்களை இப்போதைய பெண்களுக்குப்
    பொருத்திப் பார்க்க முடியாது. எல்லாம் மாறிய காலம்.
    சுஜாதா சொல்வது பூர்வ ஜன்ம வாசனை. உண்மைதான்.
    தாத்தாவுக்கு எத்தனை அவஸ்தை. அதை எழுதியவரே
    வேதனைப் படுவது போல உணர்ந்தேன்.

    வாலி சார் வார்த்தைகள் நுண்ணிய உணர்வு.
    இத்தனையும் தொகுத்த உங்களுக்கு என் வாழ்த்துகள் ஸ்ரீராம். நன்றி.

    பதிலளிநீக்கு
  37. லாசரா வின் கதைகளை ஆழந்து படித்தால்தான் புரியும்!

    பதிலளிநீக்கு
  38. உச்சிவெயிலில் நிழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால் நிழல் என்னுள் ஒளிந்திருக்கும் என்பது கற்பனையான ஒன்று.

    நிழல் என்பது உச்சி வெயில் தாண்டிய அடுத்த Process-க்கானது.

    அந்த அடுத்த ப்ராஸ்ஸின் உயிர்ப்பு தொடங்கும் முன்னரே நிழல் தன்னில் ஒளிந்திருக்கிறது என்று கற்பனையாகக் கொள்வது சாத்தியமில்லாத ஒன்று.

    பால் பாக்கெட்டைப் பார்த்தவுடனேயே---

    பொங்கலைத் தன்னுள் சுமந்திருக்கும் பால் -- என்று சொல்லலாமா?.. அது போலத் தான் இதுவும்.

    பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். தீ ஜ்வாலையில் பால் காய வேண்டும். அதற்கு அப்புறம் தான் பால் பொங்கல்.

    பதிலளிநீக்கு
  39. நகுலன் என்றொரு அற்புதமான தமிழ் எழுத்தாளர் இருந்தார். வாக்கியங்களில் நாம் நினைத்தும் பார்த்திராத அர்த்தங்களைப் பொதித்துத் தருவதில் மனிதர் மன்னன். நிறைய நிறைய எழுதி எழுதி எழுத வேண்டுவதை எழுதாமல் விட்டு விட வேண்டும் என்பார் அவர். எழுதுவது பாதி, அந்த எழுத்திலிருந்து வாசிப்போர் புரிந்து கொள்வதான பகுதியும் மீதி என்று இவரைப் போல எழுதியவர்கள் இது வரை யாருமில்லை. அவர் நினைவு தான் இப்பொழுது வந்தது.

    பதிலளிநீக்கு
  40. சுஜாதா, வாலியும் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!