செவ்வாய், 30 ஜனவரி, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : அப்பா மனசு - ரிஷபன்





அப்பா மனசு

கைபேசி மின்னியது. தங்கை. பங்களூரிலிருந்து.  சத்தம் தொல்லை என்பதால் ஒலியெழுப்பா வண்ணம் வைத்திருந்தேன். எதிர்க் கட்டிலில் அப்பா. தலைகீழாய்க் கவிழ்த்திருந்த பாட்டில் திரவம் சொட்டு சொட்டாய் இறங்கிக் கொண்டிருந்தது.

ஓசையெழுப்பாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.

" ம்ம்.. சொல்லு"

" தூங்கறாரா.."

" ஆமா"

" நான் கிளம்பி வரட்டுமா"

"வேணாம். நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்க"

" எனக்குப் பார்க்கணும் போல் இருக்கு"

" அப்புறம் வீடியோ கால் பண்றேன்.. ரகு எப்படி இருக்கார்.. "

" இப்போ ரெண்டு வாரம் கனடா.. நானும் அஜித்தும் தான் இங்கே"

" உன் மாமியார் வரலியா"

" இவர் எப்ப பார் டூர்.. அவங்களை எவ்வளவு தான் தொந்திரவு பண்றது"

"ம்ம்"

" நீதான் கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்துட்ட"

" சரி.. நான் ரூமுக்கு போறேன்.. அப்பா தனியா இருக்கார்"

"இப்போ கூட ஒருத்தர் கேட்டார்.. 35 வயசாம்.. பார்த்தா தெரியாதாம்.. முகம் அவ்ளோ லட்சணமாம்.. போட்டோ அனுப்படுமான்னு கேட்டார்"

" இந்தப் பேச்சே வேணாம்"

கட் செய்து விட்டேன்.

கதவைத் திறந்ததும் ' யாருடா ஃபோன்'
என்றார்.

"வசந்தி"

"வர வேண்டாம்னு சொல்லிட்டியா"

"ம்ம்"

"தனியா வந்துட்டு போகணும்.. அவஸ்தை"

" பாத் ரூம் போகணுமா"

" இல்ல.. வரல.."

" சரி.. தூங்கு"

" என்னால உனக்கு கஷ்டம்"

தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். உதட்டைக் கடித்துக் கொண்டேன். வேண்டாம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை வாழ்க்கையில். தூறலோ.. பெரு மழையோ.. வானத்தின் இயல்பு அது. வாழ்க்கைக்கு சக மனிதரின் கேள்விகள்.
குடையைப் பிரித்தும் போகலாம். நனைந்தும் நடக்கலாம். ஏன் பெய்கிறது என்கிற கேள்வி இல்லாமல்.

நர்ஸ் எட்டிப் பார்த்தார்.  இன்னும் அரை பாட்டில் இருந்தது.

" முடியும் போது சொல்லுங்க"

போய்விட்டார். அப்பாவைத் திரும்பிப் பார்த்தேன். முகத்தில் தெளிவு வந்திருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு நம்பிக்கை ஊசலாடிக் கொண்டு.

'நல்ல வேளை.. லேட் பண்ணாம வந்துட்டீங்க'

அப்பாவைப் பார்த்தார்.

' என்ன ஸார்.. யூரினே போகலைன்னா.. சொல்லக் கூடாதா.. உங்க பையனுக்கு டவுட் வந்தது நல்லதாப் போச்சு'

உடனே அட்மிஷன். அன்று மாலையே குணம் தெரிய ஆரம்பித்து.. 

வசந்திக்கு சொல்லிட்டியா 

'இதோ'

சொன்னேன். இப்போ எப்படிரா உடனே கிளம்ப.. எங்கே இருக்கீங்க..

அட்மிட் பண்ணியாச்சு

சரி பார்த்துக்கோ.. ரகு ஊர்ல இல்ல

அப்பா முனகிக் கொண்டிருந்தார். எனக்கும் சேர்த்து இட்லி பொட்டலம் வாங்கி வந்திருந்த அட்டெண்டர் சிநேகமாய் சிரித்து விட்டுப் போனார்.

மூன்று நாட்களாய் இதே பக்கத்து கட்டில். ஆபிசுக்கு லீவு. ஒரு சகா வந்து பார்த்து விட்டு போனார். 

நாளைக்கு டிஸ்சார்ஜ் என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்பாவைக் கை பற்றி குலுக்கினார். அப்பாவும் அவரும் ப்ரெண்ட்ஸ் போல பேசிக் கொண்டார்கள்.

கார் சொல்லியிருந்தேன்.  

தரைத்தளம் தான்.  கதவைத் திறந்ததும் குப்பென்று ஒரு உஷ்ணக் காற்று.

" கஞ்சி போடட்டுமா" என்றேன்.

" நாக்கு செத்துப் போச்சுரா.. ஒரு ரசமாவது வையேன்"

கிச்சனுக்குள் போனேன். நேரம் ஓடியது தெரியவில்லை. சமைத்த அலுப்பில் குளிக்கப் போனேன். தலையைத் துவட்டிக் கொண்டு வந்தபோது.. அப்பாவின் குரல் மெலிதாய்க் கேட்டது.

ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்.

" நீ கிளம்பி வரேன்னு சொல்லியிருப்ப.. எனக்குத் தெரியும். பாவம்.. சின்னப் பிள்ளையோட நீ பதறிண்டு வரக் கூடாதுன்னுதான் வர வேணாம்னு சொல்லச் சொன்னேன்.. உன் மனசு எப்படித் தவிச்சுருக்கும்னு தெரியும்.. இவன் மாதிரியா.. எதுக்கும் அலட்டிக்காம இருக்க.. உன் சமையல் சாப்ட்டு ரொம்ப நாளாச்சு.. வாய்க்கு இப்பல்லாம் ருசியே போச்சு.."

அடுத்த அறைக்குள் சத்தம் எழுப்பாமல் போய் விட்டேன். அரை மணி கழித்து எட்டிப் பார்த்தேன்

"சாப்பிடலாமா"

"ம்ம்"

தட்டில் சாதம். டம்ளரில் ரசம். தணலில் வாட்டிய இலைவடாம். நார்த்தங்காய் துண்டு.
ஸ்டூலில் வைத்தேன் எடுக்க வசதியாக. கை கழுவ மக்கில் நீர்.

"ஹப்பா.. எவ்ளோ ஒணக்கையா இருக்கு நாக்குக்கு.. உன் அம்மா கைப்பக்குவம் உன்கிட்டேயும் வந்தாச்சுடா"

ரசித்து விழுங்கினார்.

எனக்குத்தான் அவர் உருவம் அப்போது தெரியவில்லை.


****

72 கருத்துகள்:

  1. என்ன அநியாயம், உள்ளே தான் வரவிடலைனா கருத்துச் சொல்லவும் நீ யாருனு கேட்குதே!

    பதிலளிநீக்கு
  2. படிச்சுட்டு வரேன். ஏற்கெனவே நேரம் ஆயிடுச்சு இதோட போராடினதிலே! தேர் கிளம்புது, வேட்டுப் போட்டுட்டாங்க! போக முடியாது! :(

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  5. கண்ணீர்! மிக அருமை! மனிதர்கள், மனிதர்கள்!

    பதிலளிநீக்கு
  6. அப்பா மனசு அல்லது பிள்ளை மனசு! எது சரி!

    பதிலளிநீக்கு
  7. அப்பாவும் குழந்தை தான் - ஒரு கட்டத்தில்...

    மனம் நெகிழ்கின்றது..

    ரிஷபன் ஐயா அவர்களின் கைவண்ணம் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றது பல விஷயங்களை...

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம்... ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா....
    நெட் போச் ....அதான் தாமதம்....ஆஜர்..அப்புறம் வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. என்ன அநியாயம்???.../ கீதா...

    சமயத்தில் இது என்னடா கருத்து?... ந்னு அலசிப் பாத்துட்டு குப்பையில போட்டுடுது... யார்கிட்ட சொல்றது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு அண்ணா...ஹா ஹா ஹா...இன்னும் நெட் வரலை...மொபைலில் இருந்து...

      .ஆமாம் சரியா சொன்னீங்க....

      கீதா

      நீக்கு
  10. நானும் இந்தக் கதையைப் படித்ததுமே கலங்கி விட்டேன். சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. அல்லது எல்லோருக்குமே அப்படித்தான் தோன்றுமோ என்னமோ.. எல்லோருக்குள்ளும் ஒரு சுயபரிதாபம் இருக்கிறது. அதையும் மீறி சில உண்மைகளும் இருக்கின்றன. கதை வந்ததுமே ரிஷபன் ஸாரிடம் இது பற்றிக் கொஞ்சம் CHAT-இல் பேசிக்கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. பானு அக்காவிடம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேசிக்கொண்டிருந்தபோது வரப்போகும் இந்தக்கதை பற்றிச் சொல்லி இருந்தேன். நினைவிருக்கிறதா பானுக்கா?

    பதிலளிநீக்கு
  12. மனசெல்லாம்... எங்கெங்கோ போகிறது...!!!

    பதிலளிநீக்கு
  13. பாரதி.... ஆம்.... நம்மால் உணரமுடியும். இல்லையா?

    பதிலளிநீக்கு
  14. என்ன என்று சொல்வது.
    அப்பா வின் மனசு இப்படிபோக வேண்டாம்
    அப்பா மனசு கல்லு. பிள்ளை மனசு பித்து.
    பாவம் அந்த சாதுப் பிள்ளை.
    அக்கரைக்குப் போக நினைக்கும் அப்பா.
    அநேக குடும்பங்களில் இதுதான் கதை,.

    பதிலளிநீக்கு
  15. //சமயத்தில் இது என்னடா கருத்து?... ந்னு அலசிப் பாத்துட்டு குப்பையில போட்டுடுது... யார்கிட்ட சொல்றது!...// அதானே! என்னத்தைச் சொல்லறது போங்க! :))))

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம்! பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. அருமை
    மனம் நெகிழ்ந்துபோய்விட்டது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  20. ரிஷபன் கதைகளைப் படித்துள்ளேன். இன்று இத்தளத்தில் கண்டதில் மகிழ்ச்சி. சற்றே கனக்கவைத்துவிட்ட கதை.

    பதிலளிநீக்கு
  21. மனம் கனத்து விட்டது அருமை ரிஷபன் ஸார்

    பதிலளிநீக்கு
  22. மனசு கலங்கிவிட்டது.....என்னென்னவோ எண்ணங்கள் மனதில்....ஏதோ ஒன்று நெஞ்சை அடைக்கிறது...என்னவன்று சொல்லத்தெரியாத ஓர் உணர்வு..பாவம் அந்தப் பிள்ளை...என்ன வெறுமையா அவன் மனதில்..ம்ம்ம்..அருமை ரிஷபன் அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. பதிவு என்ன அழகான நடை! இயல்பு! அட டா !உம்மைப் பாராட்ட சொற்களைத் தேடுகிறேன்

    பதிலளிநீக்கு
  24. சொற்சிக்கனம். சுகமான நடை. சொல்லமுடியாத உணர்வாய் ஒரு முடிவு.. நன்றாக சமைக்கப்பட்ட படைப்பு.

    ரிஷபன் ஸ்ரீனிவாசன்தானே இவர்? இவருடைய ’கண்ணாடி’ சிறுகதையைப் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. ரிஷபன் சார்.. நேற்றுத்தான் உங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியிருக்கிறீர்கள், மிகுந்த புகழ் பெற்றவர் ஆயினும், மற்றவர்களை ஊக்குவிக்கும் இயல்புடையவர், பத்திரிகைகளில் உங்கள் படம் வந்திருந்தாலும், இணையத்தில் invisibleஆக இருக்க நினைப்பவர் என்றெல்லாம் உங்களைப் பற்றி அவர் (?) சொன்னார். இன்று காலையில் உங்கள் கதை, 'எங்கள் பிளாக்'கில்.

    பொதுவா கதையைப் படித்துவிட்டு, இது கதாசிரியர் அனுபவமோ என்றுதான் தோன்றும். கேள்விப்படும் சம்பவங்களையும் சிறிது மசாலா தெளித்து கதை எழுதுவாங்க.

    இந்தக் கதை எனக்கு மிகவும் நெருக்கமானவரைப் பற்றியதுபோல் தோன்றியது. இதைப்போன்ற குணங்கள் உடையவர்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு செய்திகள்தான் கதை சொல்கிறது.

    1. அருகில் இருப்பவர் செய்யும் உதவிகள், தியாகங்களை யாரும் அறிந்திருப்பதில்லை. அவர்களிடம் குறைகளையே காண்கிறார்கள். நல்ல வார்த்தைகள் சொன்னால், சிறிது நன்றி பாராட்டினால், அது பன் மடங்காகத் திரும்பி வரும் என்பதை வயதானபோது மறந்துவிடுகின்றனர். 2. பெற்றோரே ஆனாலும், எல்லாக் குழந்தைகளிடமும் ஒரேவிதமாக அன்பு வைப்பதில்லை. ஒருவர் அப்பாவுக்கு முக்கியமாகவும், இன்னொருவர் அம்மாவுக்கு முக்கியமாகவும், சிலர் இரண்டும் கெட்டானாகவும் ஆகிவிடுகின்றனர். அவர்கள் தங்கள் POSITIONஐவிட, மனித மனம், சுயநலமானது என்பதையே பிரதானமாகக் காட்டிவிடுகின்றனர்.

    மனத்தைப் பாதித்த கதை. சிறிய சொல்லாடல்கள் மூலம், கதை தொட நினைப்பது பெரிய விஷயத்தை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  26. அருமையான கதை.
    கதை படித்து என்ன மனிதர்கள் என்று மனம் கனத்து போகிறது.

    அப்பாவிற்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லையா மகன்?
    அம்மாவின் கை பக்குவத்தை மகனிடம் கண்டு பாராட்டி விட்டதால் கண் குளமாகி அப்பாவின் உருவம் தெரியவில்லையோ மகனுக்கு. அல்லதுபாராட்டு முதன் முதலோ! அல்லது மகளிடம் ஒரு மாதிரி, மகனிடம் வேறு மாதிரி பேசுவாதால் ஏற்பட்ட வருத்த்மோ! மனதில் நிறைய கேள்விகள்.
    நெல்லைத் தமிழன் பின்னூட்டத்தில் சொன்னது போல் சுயந்லம்தான் மிச்சமோ?

    பதிலளிநீக்கு
  27. இருப்பதை விட இல்லாததற்கே ஏங்கும் மனம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  28. ஆஹா படிச்சதும் என்னவோ பண்ணுது மனதை, கதை...

    எனக்கு ஒருதரம் படிச்சுப் புரியவில்லை, ஏதோ கதை பாதியில் நிற்பதுபோல ஒரு ஃபீலிங்காக இருந்துது, மீண்டும் படிச்சே புரிந்து கொண்டேன்.. அத்தோடு நெல்லைத்தமிழனும் விளக்கம் குடுத்திருப்பது இன்னும் புரிதலை உண்டுபண்ணி விட்டது.

    பதிலளிநீக்கு
  29. ////தலையைக் கவிழ்த்துக் கொண்டேன். உதட்டைக் கடித்துக் கொண்டேன். வேண்டாம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை வாழ்க்கையில். ///

    இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது... இப்படித்தான் சில சமயம் நானும் நடப்பதுண்டு, அனைத்துக்கும் பதில் சொல்லி கெட்ட பெயர் எடுத்து, சண்டை உருவாவதை விட, சிலவற்றுக்கு சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டால்... சற்று நேரத்தில் எல்லாம் நோர்மலாகிடும்:)..

    பதிலளிநீக்கு
  30. நம்மோடு கூட இருப்போரை விட, இடைக்கிடை சந்திப்போருக்கே முக்கியத்துவம் குடுப்பார்கள், ஆனா உள்ளே இருக்கும் அந்த நன்றியுணர்வு, வெளியே சொல்லத் தெரியாது..

    தந்தைக்காகவே தன்னைத்தியாகம் செய்து கொண்டிருக்கும் மகன், அது புரியாமல் அல்லது புரிந்தாலும் ... நான் உன்னை வளர்த்தேன் எல்லோ, இப்போ பதிலுக்கு நீ என்னைப் பார் என எண்ணுகிறாரோ என்னமோ... எதுவாயினும் குடுத்து வச்சவர்...

    மனதை டச்சூஊஊஊஊஉ பண்ணி விட்ட கதை.

    பதிலளிநீக்கு
  31. ///Geetha Sambasivam said...
    என்ன அநியாயம், உள்ளே தான் வரவிடலைனா கருத்துச் சொல்லவும் நீ யாருனு கேட்குதே!//

    ஹையோ இங்கின கீசாக்கா ... 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ இல்லயா?:)) ஹா..ஹா..ஹா... கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ.. அதிரா சிரிச்சுக் கொண்டு போகிறேன் என கீசாக்காவுக்கு ஜொள்ளி விடுங்கோ:))

    பதிலளிநீக்கு
  32. @அதிரா
    "சண்டை உருவாவதை விட, சிலவற்றுக்கு சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டால்... சற்று நேரத்தில் எல்லாம் நோர்மலாகிடும்"

    "கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ.. அதிரா சிரிச்சுக் கொண்டு போகிறேன் என கீசாக்காவுக்கு"

    இரண்டுக்கும் தொடர்பு இருக்கா? (பத்த வச்சுட்டயே பரட்டை)

    பதிலளிநீக்கு
  33. சிறு வயதில் தங்கள் குழந்தைகளுள் ஒன்று தவறு செய்தாலும், தவறு செய்யாத இன்னொரு குழந்தைக்கும் ரெண்டு போட்டு விட்டு அதனிடம் கண்ணை காண்பிக்கும் தாய் அல்லது தந்தை உண்டு. இந்த கதையில் வரும் தந்தையும் அதைத்தான் செய்கிறார்.

    உடல் நலமில்லாத தன்னைக் காண பெண் வரவில்லை என்ற வருத்தம், அதே நேரத்தில் அதை அவளிடம் சுட்டிக் காட்டாமல் மகனைப்பற்றி குறை கூறவது போல கூறி, பின்னர் அவனிடம் தன் உண்மை மனதை வெளி காட்டும் தந்தை மனது நெகிழ வைக்கிறது. நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்த ரிஷபன் அவர்களுக்கும், எங்கள் ப்ளாகிற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  34. ரிஷபன் சாரின் கதை வரப்போகிறது என்று கூறினீர்கள், இத்தனை சீக்கிரம் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  35. //உடல் நலமில்லாத தன்னைக் காண பெண் வரவில்லை என்ற வருத்தம், அதே நேரத்தில் அதை அவளிடம் சுட்டிக் காட்டாமல் மகனைப்பற்றி குறை கூறவது போல கூறி, பின்னர் அவனிடம் தன் உண்மை மனதை வெளி காட்டும் தந்தை மனது நெகிழ வைக்கிறது.// இதான் என்னோட புரிதலும்! ஆனால் எல்லோருடைய கருத்துக்களையும் பார்த்துவிட்டு நாம் பார்த்த கோணம் தவறோனு நினைச்சேன். என்னைப் போலவே இன்னொருவர் கருத்தும் இருப்பது சந்தோஷம்.

    என்ன இருந்தாலும் திருமணம் ஆகிப் போன பெண்ணால் அப்படி எல்லாம் குடும்பத்தை விட்டு உடனே வர முடியாது! ஆகவே பெரியவர் பெண்ணின் நிலை புரிந்து கொண்டு பெண்ணைத் தேற்றுகிறார். அதே சமயம் பிள்ளை சமைத்துப் போட்டதையும் ரசித்து உண்கிறார். அப்பாவின் இந்த சமாளிப்பைப் புரிந்து கொண்டே பிள்ளை கண்களின் கண்ணீர் அப்பாவின் உருவத்தை மறைக்கிறது. இங்கே அப்பா செய்தது சரியா? இல்லை பிள்ளை புரிந்து கொண்டது சரியா? இரண்டுமே அவரவர் கோணத்தில் சரியே!

    பதிலளிநீக்கு
  36. //"கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ.. அதிரா சிரிச்சுக் கொண்டு போகிறேன் என கீசாக்காவுக்கு"

    இரண்டுக்கும் தொடர்பு இருக்கா? (பத்த வச்சுட்டயே பரட்டை)//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))

    பதிலளிநீக்கு
  37. //பெற்றோரே ஆனாலும், எல்லாக் குழந்தைகளிடமும் ஒரேவிதமாக அன்பு வைப்பதில்லை. ஒருவர் அப்பாவுக்கு முக்கியமாகவும், இன்னொருவர் அம்மாவுக்கு முக்கியமாகவும், சிலர் இரண்டும் கெட்டானாகவும் ஆகிவிடுகின்றனர். அவர்கள் தங்கள் POSITIONஐவிட, மனித மனம், சுயநலமானது என்பதையே பிரதானமாகக் காட்டிவிடுகின்றனர்.// இதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கேன். ஆனால் இங்கே அப்பா அப்படி இல்லைனு நினைக்கிறேன். பெண் வரவில்லை என்பதைப் பிள்ளை தப்பாக நினைத்துவிடக் கூடாது என்னும் எண்ணம் இருந்தாலும், பிள்ளை சமைத்துப்போடுவதையும் தன்னைப் பார்த்துக் கொள்வதையும் உள்ளூரப் பெருமையாகவே நினைக்கிறார் என்றே தோன்றியது!

    ஆனால் தான் பெற்ற மூன்று பெண்களிலும் ஒரு பெண் கறுப்பாகப் பிறந்துவிட்டாள் என்பதால் அவளையே சாணி தட்டச் சொல்வதும், வெயிலில் காய்ந்து கொண்டு துணிகள் உலர்த்துதல், வடாம் பிழிதல் போன்ற வேலைகளைக் கொடுப்பதுமாக உள்ள அம்மாவைப் பார்த்திருக்கேன். இப்போ அந்த அம்மாவுக்கு வயதான காலத்தில் உதவியாக இருப்பது அந்தக் கறுப்புப் பெண் தான்! பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அம்மாவுக்கு உதவுகிறார் அந்தப் பெண். மற்றப் பெண்களால் முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  38. நெல்லைத் தமிழன் said...
    //இரண்டுக்கும் தொடர்பு இருக்கா? (பத்த வச்சுட்டயே பரட்டை)//

    ஹா ஹா ஹா கோத்து விடுவதிலேயே குறியா இருக்கிறாஅர் கர்ர்ர்ர்:))..

    அதுசரி நெல்லைத்தமிழன் எப்போ கமல் அங்கிளா மாறினார்?:))[பரட்டை எனும் பெயரில் அவர்தானே நடிச்சார்:)]..

    பதிலளிநீக்கு
  39. மிய்யாவுக்கு இன்னுமா தூக்கம் கலையவில்லை!!!...

    பரட்டையாய் நடித்தது ரஜினிகாந்த்...
    சப்பாணியாய் நடித்தது கமலஹாசன்..

    மயிலையாவது ஞாபகம் இருக்கா!...

    பதிலளிநீக்கு
  40. கீசா மேடம், பா.வெ மேடம் - நான் புரிந்துகொண்டது, அப்பா, தன் பையனுக்கு வேற்று முகம் காட்டுவதுபோல்தான். உங்க கருத்துக்கு அப்புறம் திருப்பியும் படித்தேன். நீங்கள் நினைத்ததுபோலும் புரிந்துகொள்ளலாம். (அப்போ, அவன் 'உதட்டைக் கடித்துக்கொண்டது' அழுகையை விழுங்கத்தான் என்று புரிஞ்சுக்கணும். அக்காட்ட பேசறது, அவளுக்கு ஆறுதலா இருக்கத்தான்னும் புரிஞ்சுக்கணும். ஆனா அக்காட்ட பையன் சமையலைக் குறை சொல்வது, அப்படிச் சொல்லி அவளது சமையலைப் பெருமைப்படுத்தவா? பையனுக்கு அவர் உருவம் தெரியாதது, தான் இவ்வளவு செய்தும் அதை RECOGNIZE செய்யாத அப்பாவை நினைத்து வந்த கண்ணீராலா அல்லது, அப்பாவின் குழந்தைத் தனமான நிலையை நினைத்து வந்த கண்ணீரா? ஒரு வேளை நம் அனுபவங்கள்தான் கதையை வெவ்வேறு மாதிரி புரிந்துகொள்ள வைக்கிறதோ?)

    ரிஷபன் சார்தான் வந்து சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  41. ///துரை செல்வராஜூ said...
    மிய்யாவுக்கு இன்னுமா தூக்கம் கலையவில்லை!!!...

    பரட்டையாய் நடித்தது ரஜினிகாந்த்...
    சப்பாணியாய் நடித்தது கமலஹாசன்..

    மயிலையாவது ஞாபகம் இருக்கா!...///

    ஹா ஹா ஹா இப்போ எல்லாமே பிரிஞ்சிடுச்சூஊஊஊஊஊஊஊஊ:))..

    பதிலளிநீக்கு
  42. // தூறலோ.. பெரு மழையோ.. வானத்தின் இயல்பு அது. // வாவ் என்னவொரு அற்புதமான வரிகள் ரிஷபன் சார்

    அன்பாய் தூறலாகவும் பொழியலாம் இல்லை வெள்ளப்பெருக்கோடவும் வைக்கலாம் அது வானத்தின் இயல்பு .

    //
    எனக்குத்தான் அவர் உருவம் அப்போது தெரியவில்லை.//

    அந்த முதிய உருவம் குழந்தையாய் தெரிந்திருக்கும் அந்த மகனுக்கு என்று நினைக்கிறேன் .
    அருமையான கதை சார் .பல இடங்களில் பார்த்து இருக்கிறேன் .எத்தனையோ மகன்கள் அம்மாவுக்காக இல்லை அப்பாவுக்காக திருமணம் செயாமலேயே இருந்திருக்காங்க ..இ இந்த கதையில் வரும் மகளையும் குற்றம் சொல்ல முடியாது அவருக்கு என்னென்ன பிரச்சினைகளோ தனி ஆளென்றால் சட்டென புறப்படலாம் குடும்பம் வேறாகிப்போனால் பலவற்றையும் யோசித்தே செய்யவேண்டிய சூழல் .அதனால்தானோ அந்த முதிய தந்தை மகளை ///ஆற்றுப்படுத்த/// (நோட் திஸ் ஸ்ரீராம் ) போனில் அப்படி பேசியிருக்கக்கூடும் .மகனும் புரிந்துகொண்டிருப்பார் அந்த குழந்தையான தந்தையை .இதை இல்லாததற்கு ஆசைப்படுவது என்று வரையறுக்காமல் சூழ்நிலையை சமன் செய்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம் ..நம் குழந்தைகளே கூட சில நேரம் அப்படி செய்வதுண்டு அமமா தான் பிடிக்கும்னு சொல்லிட்டு அப்பாவை தனியா கூட்டிட்டுபோய் அப்பா உங்களையும் பிடிக்கும் னு சொல்லுவாங்க :)
    அழகான கதையை வாசிக்க தந்ததற்கு நன்றி ரிஷபன் சார் மற்றும் எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  43. @துரை அண்ணா ..பாரதத்தை இராமாயணத்தோடு இணைத்த கம்பபாரதியாச்சே மியாவ் :) அதான் பரட்டையையும் சப்பாணியையும் fusion செஞ்சிட்டாங்க :)

    பதிலளிநீக்கு
  44. பானுக்கா, கீதா அக்கா...

    ஓ.... இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை. என் மனம் கோணல் போலும்! பாஸிட்டிவ் திங்கிங்! ஆனால் நெல்லைத்தமிழன் சொல்லி இருக்கும் கருத்துதான் சரி என்று எனக்கும் படுகிறது. ஒருவரை பெருமைப்படுத்த இன்னொருவரைக் குறை காணுதல் அப்பா (என்றால் அறிவு) செய்யும் செயலா என்ன!

    பதிலளிநீக்கு
  45. ஏஞ்சல்... என்னால் "ஆற்றுப்படுத்திக்கொள்ள" முடியவில்லை!! நெல்லை சொல்லி இருப்பதுபோல அவரவர் அனுபவங்கள் படைப்பின் பொருளை வரையறுத்ததுத் தருகின்றனவோ என்னவோ! ஆனாலும் ஒவ்வொருவர் பார்வையிலும்தான் எத்தனை கோணங்கள்!

    பதிலளிநீக்கு
  46. @நெ.த. & ஸ்ரீராம் : ஒரு வேளை ரிஷபன் சார் அந்த மகன் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்னும் காரணத்தை கூறியிருந்தால் நமக்கு இந்த குழப்பம் வந்திருக்காதோ? இப்போது எல்லோரும் யானையைப் பார்த்த குருடர்களைப் போல கருத்து கூறிக் கொண்டிருக்கிறோம்.
    நிறைய பேர்களிடம் ஒரு பழக்கம் உண்டு, ஒருவரை புகழ வேண்டுமென்றால், இன்னொருவரை இகழ்வார்கள். "ராமுவோடு வெளியில் சென்றால் பொறுமையாக கூட்டிக் கொண்டு போவான், ராஜுக்கு பொறுமை கிடையாது வள் வள் என்று சிடுசிடுப்பான்" என்பார்கள். இதனால் ராஜு மீது அவர்களுக்கு கோபம், வருத்தம் என்று பொருள் கிடையாது. அப்படி பேசுவது ஒரு பழக்கம். அதைப் போல இந்த கதையில் வரும் தந்தையும் பேசியிருக்கிறார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  47. நெகிழ்வான பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  48. நோவ் !! ஸ்ரீராம் ,,யாரும் அப்பாக்களை குற்றம் சொல்ல விட மாட்டேன் மாட்டோம் :) அன்புமகள்கள் சங்கத்தலைவி அதிரா அதன் செயலாளர் நான்தான் அஞ்சு நிமிஷம்முன்னாடிதான் லெட்டர்பேடெல்லாம் அடிச்சோம் :)

    நான் எப்பவுமே தலவீ அதிரா மியாவை முன்னாடி நிக்க வச்சிட்டு (எல்லாம் ஒரு மரியாதைதான் )பின்னாடி தான் நிப்பேன் :)

    சரி பாயிண்டுக்கு வரேன் // அப்பாவின் குரல் மெலிதாய்க் கேட்டது //
    மகனை வருத்தப்படுத்தணும்னு நினைச்சிருந்தா அவர் உரக்க பேசியிருப்பார் ஸ்ரீராம் .// உன் அம்மா கைப்பக்குவம் உன்கிட்டேயும் வந்தாச்சுடா" // மறைந்த மனைவியை மகனில் பார்ப்பவருக்கு மகன்மேல்தான் பிரியம் அதிகமாக இருந்திருக்கும் ..அதோட மகனுக்கு தொல்லைதறாமல் போகணும்னு நினைச்சோ தனக்கு பிரச்சினை (சிறுநீர் வராததை ) கூட சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்
    // உன் சமையல் சாப்ட்டு ரொம்ப நாளாச்சு.. வாய்க்கு இப்பல்லாம் ருசியே போச்சு.."//
    இப்படி சொன்னாலாவது அந்த மகள் வந்து பார்ப்பாள் என்றும் நினைத்திருக்கலாம் அந்த முதிய குழந்தை

    .எனக்கென்னமோ அந்த அப்பா செகண்ட் INFANCY என்ற பிராயம் நிலையில் இருப்பார் அதை மகனும் புரிந்துகொண்டதால்தான் தந்தையை குழந்தையாக பார்த்திருப்பார்னு நினைக்க தோணுது .



    ரிஷபன் சாரின் கருத்தை கேட்டு வாங்கியாவது போடுங்களேன் இங்கே எனக்கு அந்த அப்பாவின் மனநிலை தெரிஞ்சே ஆகணும் :)

    பதிலளிநீக்கு
  49. காலையிலிருந்து பதிவு கண்ணாம்பூச்சி காண்பிக்கிறது. உள் நுழைய பதிவு திறக்க வேண்டுமே! ரிஷபன் அவர்களின் கதை இக்கால வயோதிகர்களின் ஒரு உண்மைப் பக்கம்தான். யார் எப்படிவேண்டுமானாலும் சிந்தித்துக் கொள்ளலாம். பொய் சொல்லவேண்டும் என்று சொல்லியிருக்க மாட்டார். எல்லோரையும் திருப்தி செய்ய, இருக்கும் பிடிப்பையும் நழுவவிட புத்திமட்டமாக இருக்காது. ருசி அம்மாதிரி பேசவைத்திருக்கலாம். ஸொத்திற்கு ஸமபங்கு கோரும்போது பொருப்பிற்கும் ஏன் ஸம பங்கில்லை எனக் கேட்பவர்களும் ஏராளம். தாய்க்குத் தாயாக தொண்டு செய்யும் தனயர்களும் உண்டு. இந்த உணர்ச்சிகள் பேசுவது எளிது. பாக்யம் வேண்டும் முதுமையில்ச் செம்மையாக இருக்க. பேப்பர்களில் எத்தனை விதமான செய்திகளைப் படிக்கிறோம்? இதைப் பலவிதமாகக் கற்பனை செய்து கொள்ளலாம். மனதை வருடும்,பலவித கற்பனைகளைத் தூண்டிவிடும், உண்மையாக நடக்கக்கூடிய, வயோதிகர்களின் தசாவதாரக்கதை. ரிஷபன் அவர்களே வயோதிகர்களின் பாராட்டுகள். அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  50. /எனக்குத்தான் அவர் உருவம் அப்போது தெரியவில்லை/
    நெகிழ்ச்சி . கதை ஒட்டம் சிறப்பாய் உள்ளது. கண்கள் குளமாகி விட்டது.
    அருமையான படைப்பு

    பதிலளிநீக்கு
  51. //அருகில் இருப்பவர் செய்யும் உதவிகள், தியாகங்களை யாரும் அறிந்திருப்பதில்லை. அவர்களிடம் குறைகளையே காண்கிறார்கள். நல்ல வார்த்தைகள் சொன்னால், சிறிது நன்றி பாராட்டினால், அது பன் மடங்காகத் திரும்பி வரும் என்பதை வயதானபோது மறந்துவிடுகின்றனர். //

    \\ பெற்றோரே ஆனாலும், எல்லாக் குழந்தைகளிடமும் ஒரேவிதமாக அன்பு வைப்பதில்லை. ஒருவர் அப்பாவுக்கு முக்கியமாகவும், இன்னொருவர் அம்மாவுக்கு முக்கியமாகவும், சிலர் இரண்டும் கெட்டானாகவும் ஆகிவிடுகின்றனர். அவர்கள் தங்கள் POSITIONஐவிட, மனித மனம், சுயநலமானது என்பதை பிரதானமாக காட்டி விடுகின்றனர்//

    Nz... கண் கூடான உண்மை...ஆனால் மனசுக்கு பிரியமானவர்கள் இப்படி கள்ளம் பண்ணும் போது...

    அன்பு மனங்கள் விட்டுக்கொடுபதில்லை...

    சென்டிமெண்ட்ஸ் மட்டுமே உலகம் சக்கரத்தின் அச்சாணிகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  52. வாழ்த்திய அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

    அப்பா உண்மையில் என்ன நினைத்தார் என்று எனக்கும் தெரிந்து கொள்ள ஆர்வம்தான்.. உங்களைப் போலவே.

    இதுவா, அதுவா என்று குழப்பிக் கொண்டு கதையாய் வடித்து விட்டேன். வாசிப்பவர் யாரேனும் விடை வைத்திருக்கக் கூடும் என்று.

    வாழ்க்கையில் எல்லாப் புதிர்களுக்கும் விடை கிடைப்பதில்லை. அதில் எந்தத் தவறுமில்லை. மனிதரை, அவர்கள் போக்கில் பார்க்கப் பழகிக் கொண்டுதான் நம்மில் பலர். அதுவும் சுவாரசியம் தானே ?!

    நெஞ்சார்ந்த நன்றி அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  53. திருமிகு ரிஷபன் ஐயா அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  54. அம்மாடி! மனசை அப்படி ஒரு உலுக்கு!

    பதிலளிநீக்கு
  55. //தூறலோ.. பெரு மழையோ.. வானத்தின் இயல்பு அது. வாழ்க்கைக்கு சக மனிதரின் கேள்விகள்.//

    இந்த மாதிரி யதேச்சையாய் வந்து விழும் வரிகளின் நேர்த்தி சொல்லி மாளாது.

    //" நீ கிளம்பி வரேன்னு சொல்லியிருப்ப.. எனக்குத் தெரியும். பாவம்.. சின்னப் பிள்ளையோட நீ பதறிண்டு வரக் கூடாதுன்னுதான் வர வேணாம்னு சொல்லச் சொன்னேன்.. உன் மனசு எப்படித் தவிச்சுருக்கும்னு தெரியும்.. இவன் மாதிரியா.. எதுக்கும் அலட்டிக்காம இருக்க.. உன் சமையல் சாப்ட்டு ரொம்ப நாளாச்சு.. வாய்க்கு இப்பல்லாம் ருசியே போச்சு.."//

    அப்பா போனில் பேசியது வசந்தியிடம் இல்லை என்றால் இன்னும் அழகு. ( திஜா சாயல்.)

    ருசி அறியாத மகன் பாவம்.

    பதிலளிநீக்கு
  56. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  57. ஒரு கதை. பின்னூட்டம் எனும் பெயரில் பல கதைகள்.

    பதிலளிநீக்கு
  58. புதன் கிழமையை இனிப் பொதுக்கிழமை:) ஆக்கிட்டால் நல்லது:)) நாம் என்ன எழுதி அனுப்பினாலும் போட்டிடலாம்.. இன்குளூடிங் ஸ்ரீராமின் சுயசரிதம்:).. ஹையோ சுயசரிதம் என்பது.. அவருக்கு ஒருநாள்தான் இருக்குது எழுதுவதற்கு என்கிறாரெல்லோ அதை ஜொன்னேன்:))

    பதிலளிநீக்கு
  59. இப்போதைய செய்தி! எங்கள் ப்ளாக் எளிதாகத் திறக்கும் அதே நேரம் ஜிஎம்பி சாரின் ப்ளாக் திறக்க அடம்! ஹெஹெஹெஹெ! புதன்கிழமைக்கு இப்போ இதான் புதிர்! ஏன் இப்படிப் பண்ணுது? சரியான விடை அளிப்பவர்களின் வலைப்பக்கம் திறக்க முடியாமல் போகக் கடவது! சேச்சே, திறக்கக் கடவது!

    பதிலளிநீக்கு
  60. அதிரா... நானும் நினைச்சேன்... புதன் டாபிக்கை மாத்திடச் சொல்லணும்னு. ஒருவேளை 'படித்ததில் பிடித்தது', 'எனக்குப் பிடித்த புத்தகம்', 'புத்தக அறிமுகம்', 'அனுபவம்' போன்று போடச்சொல்லலாமா? ஆனா, இதுல 'விளம்பர சேவை' கூடாது (அதாவது பதிவர்கள் புத்தகத்தையே விமர்சனமா போட்டாங்கன்னா, என்னுடைய புத்தகத்தை விமர்சிக்கலை, இது நல்லா விமர்சனம் பண்ணலை'னு அக்கப்போராயிடும்.

    கீசா மேடம்... இன்னைக்கு ஜி.எம்.பி சார் 'மரணம்' பற்றிய சிந்தனை எழுதியிருக்கார். அதுனாலதான் உங்க நல்ல நேரம், அந்தத் தளத்தைத் திறக்கமுடியாமல் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  61. நெ.த. முகநூல் வழியாத் திறந்தது. போய்ப் பார்த்துவிட்டு வந்துட்டேன். :)

    பதிலளிநீக்கு
  62. ஸ்ஸ்ஸ்ஸ் கீசாக்கா கொஞ்சம் பேசாமல் இருங்கோ:).. நான் நெல்லைத் தமிழனோடு பேசப்போறேன்:).. கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    கொமெடி டே:) கவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இஸ் இட் நெல்லத் தமிழன்? :) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  63. மனதைத் தொட்ட அருமையான கதை.

    /எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை வாழ்க்கையில். தூறலோ.. பெரு மழையோ.. வானத்தின் இயல்பு அது. வாழ்க்கைக்கு சக மனிதரின் கேள்விகள்.
    குடையைப் பிரித்தும் போகலாம். நனைந்தும் நடக்கலாம். ஏன் பெய்கிறது என்கிற கேள்வி இல்லாமல்./

    அழகான வரிகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!