செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : கோபம் பாபம் பழி - II - நெல்லைத்தமிழன் - சீதை 33


அன்புள்ள ஸ்ரீராம்,  




கதை முன்னுரை

முன்னால (ஆகஸ்ட் 2017) வெளிவந்த, நான் எழுதிய ‘சீதை ராமனை மன்னித்தாள்-கோபம் பாபம் பழி’ கதை, சில கேள்விகளையும் வாசகர்கள்ட உண்டாக்கியது. காலம் கடந்த மன்னிப்பால் என்ன பிரயோசனம், யாருக்கு உபயோகம் என்று சிலர் கேட்டிருந்தனர். அதுதான் எனக்கு அடுத்த பார்ட்டை எழுதுவதற்கு உத்வேகமாக இருந்தது. அந்தக் கதையின் தொடர்ச்சியாக இதனை வைத்துக்கொள்ளலாம். ஆனால், ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்ற வரியோட கதை முடியணும் என்ற விதிக்கேற்ப எழுதியிருக்கேன். ஒரு கதை எழுதிக்கொண்டிருந்தபோதே, கதையை வேறு மாதிரியாகவும் கொண்டுபோகலாமேன்னு தோணித்து. அதனால் இரண்டையும் கொடுத்திருக்கிறேன். (ஸ்ரீராமும் நீங்களும் என்ன, கதை வள வளவென்று நெடுக போகுதேன்னு நினைக்கக்கூடாது)

பொதுவா கதை எழுதறதுக்கு அதற்கென்று மூடு வரவேண்டும். கதையை எழுதி முடிக்கறவர அது நம் மனசுல அலைபாய்ந்துகொண்டே இருக்கணும். ஒவ்வொரு செயலையும், ஏன் இப்படிச் செய்கிறார் என்று நமக்குள்ளே கேட்டுக்கொண்டு எழுதணும். சோகக் கதை என்றாலோ அல்லது ஹாஸ்யக் கதை என்றாலோ, அதற்குரிய mood தொடரணும். இல்லைனா, ஒரே மூச்சுல கதை எழுதற ஜாம்பவான் மாதிரி இல்லாத என்னைப் போன்றவர்கள், திரும்ப பாதிக் கதையிலிருந்து தொடரும்போது எழுத்து, களம், நம் வசப்படாது. அதனால்தான் இந்தக் கதையை முடிக்க ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு ஹைப்புக்காக சொல்லலை. கதைல நடக்கற உரையாடல்கள்ல, உள்ளம் அமிழ்ந்து, அதே சோக, நிம்மதி உணர்ச்சிகள் எனக்கும் வந்தது. இப்படித்தானா Professional கதாசிரியர்களுக்கு இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா, நிறைய புத்தகங்களில், திரைப்படப் படைப்பாளிகள், இயக்குனர்கள், அந்த அந்தக் காட்சியைப் படம் பிடிக்கும்போதோ பார்க்கும்போது, சோகக்காட்சிகளின்போது கண்ணீர் விட்டு அழுதோம்னு எழுதியிருக்காங்க. இதைப் பற்றி பின்னூட்டங்களின்போது சொல்கிறேன்.

முன்பு எழுதின கதையை ஒரு எட்டு படித்துவிட்டு வந்தீங்கன்னா, கதைத் தளம் இன்னும் சுலபமா புரியும். 


கோபம் பாபம் பழி – II  
நெல்லைத்தமிழன்

சீதாவுக்குத் தன் வாழ்க்கை அர்த்தம் இல்லாததுபோல் தெரிந்தது. இன்னும் எத்தனை நாளைக்கோ இந்த உயிர் ஊசலாடப்போகிறது. எப்போதும்போல் வெறிச்சோடிக் கிடக்கும் வீடே கதியாகிவிட்டது. பையனிடம் தான் சரியாக நடந்துகொள்ளவில்லையோ?  கணவனை மட்டும் இத்தனை வருடங்கள் தவறு செய்துவிட்டார் என்று தான் கோபித்துக்கொண்டு பேசாமலேயே இருந்துவிட்டது சரிதானா? தனக்கு பையனின் வாழ்க்கையில் பொறுப்பு இல்லையா? தன்னிடம், கணவர் எப்போவாவது கோபித்துக்கொண்டாலும், வாசுவிடம் கூடுதல் கண்டிப்புடன் நடந்துகொண்டதைப் பார்த்து அவனுக்கு ஆதரவாக இருந்திருக்கவேண்டாமா? காலம் கடந்த ஞானத்தால் பயன் என்ன?

கணவனின் புகைப்படத்தில் இருந்த மாலையைச் சரிசெய்தாள் சீதா. வாழ்க்கை பாடங்களைக் கற்றுத் தரும்போது, அந்தப் பாடத்தினால் ஒரு பயனும் இல்லாதுபோவதை எண்ணி அவள் மனது வருந்தியது. ஒருவேளை, கணவனுக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கவேண்டுமோ? தான் சொன்னதையும் கேட்காது அவர் வாசுவிடம் அதீதக் கோபத்துடன் இருந்திருக்கலாம். அவன் நல்வாழ்வுக்குத்தானே அதனைச் செய்தார் என்று நான் நினைத்திருக்கவேண்டும்.  தவறு செய்வது மனித இயல்பல்லவா? தான் கடைசி வரை, அவருடன் பேசாமல் இருந்ததினால் என்ன பயன் விளைந்தது? இது இருவரும் தண்டனை அனுபவிக்கும் காலத்து, கூடுதல் தண்டனைக்கு வழிசெய்துகொண்டது போல் அல்லவா? அவருக்கும் தன்னைப் போலத்தானே உறவினர்கள் இல்லாத வாழ்க்கை. அம்மாவின் அரவணைப்பு இருவருக்கும் இல்லையல்லவா. தனக்குத்தானே, அவரைத் தாய்போல் பார்த்துக்கொள்ளும் கடமை இருந்தது. தவறவிட்ட காலத்தை எண்ணி மறுகினாள் சீதா.

எவ்வளவு வருஷங்கள் கடந்துபோய்விட்டன. தான் மட்டுமே தனியாளாக மிஞ்சியதுபோன்ற உணர்வில் இருந்தாள் சீதா.






******

“தாயீ”   குரல் கேட்டு வெளியே வந்தாள் சீதா. சடாமுடியும், உருத்திராட்ச மாலையும் தாடியுமாக சிவனடியார் கப்பரையை ஏந்தி வாசலில் நிற்பதைப் பார்த்ததும் சீதாவின் சோர்வான முகம், களை வந்ததுபோல் ஆனது. சிவனடியார் நெற்றி முழுதும் இருந்த திருநீறும், கண்களின் ஒளியும் அவளை என்னவோ செய்தன.

‘ஐயா.. இன்றைக்கு என் மகனின் நினைவு தினம். சமையல் இப்போதான் பண்ணி முடிக்கப்போறேன். ஒரு அரை மணி நேரம் பொறுத்திருக்கமுடியுமா? எங்க வீட்டுலயே பசி ஆறிட்டுப் போகலாம். இங்கேயே திண்ணைல உட்கார்ந்துகொள்ளுங்கள்’

‘சரி தாயி.. இன்னைக்கு செஞ்சடையன் உங்க வீட்டுலதான் உணவுன்னு எழுதியிருக்கிறான் போலிருக்கிறது’, சிவனடியார் திண்ணையில் அமர்ந்தார்.  குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்’.

சீதாவுக்கு வருடத்தில் நான்கு தினங்கள் மிகவும் முக்கியம், அவள் அப்பா இறந்த தினம், வெகுகாலம் கழித்து வாசு பிறந்த தினம், கணவர் மறைந்த நாள், வாசு வீட்டைவிட்டு ஓடிப்போன தினம். எதுவுமே அவளுக்கு சந்தோஷ நினைவுகளைத் தரும் தினமாகவே இல்லை. பையன் என்ன கஷ்டப்படுகிறானோ, சாப்பாட்டுக்கு அலைகிறானோ, உயிரோடு இருக்கிறானோ இல்லையோ என்று அவளை எண்ணச் சுழலில் வைக்கும் நாளாகவே எல்லா நாட்களும் அமைந்துவிடுகிறது. வாசு ஓடிப்போன தினத்தன்று மட்டும் அவள், யாருக்காவது சாப்பாடு போடுவது என்று விரதம் கொண்டிருந்தாள். இன்றைக்கு சிவனடியார் வந்தது அவளுக்கு நெகிழ்வைத் தந்தது.

***
உள்ள வாங்க. சீதா, சிவனடியாரை ஹாலுக்குள் வரச்சொன்னாள்.

‘இவனுக்கு எதுக்கு தாயி முழு இலைல சோறு. ஏதோ உருட்டி ரெண்டு வாய் போட்டீங்கன்னா சாப்டுட்டுப் போயிடுவான்’

சீதா, இலையில் சமைத்த எல்லாவற்றையும் பரிமாறினாள், வாசுவுக்குப் பிடித்த பால் பாயசம் உட்பட. இந்தத் தடவை அவளுக்கு முழு திருப்தி. சிவனடியார் ரூபத்துல தன் பையனே வந்து சாப்பிடுவதுபோல் நினைத்துக்கொண்டாள். 

‘தாயீ.ஆசையை அறுத்தோம்னுதான் பேரு. ஆனா மனசு, கல்யாணச் சாப்பாடு வேண்டாம்னு சொன்னாலும், நாக்குக்கு அதை இன்னும் கேட்கற பக்குவம் வரலை. அந்த முதிர்ச்சியை நோக்கித்தான் நானும் போய்க்கிட்டிருக்கேன். சாப்பாடு ரொம்ப நல்லா இருந்ததும்மா. எனக்கு, உங்க கையால சாப்பிடக் கொடுத்துவச்சிருக்கு தாயீ. கொஞ்சம் திண்ணைல ஓய்வெடுத்துட்டு கிளம்பவா தாயீ’

“அதுக்கென்ன… வெயிலும் ஜாஸ்தியாத்தானே இருக்கு. சாயந்தரம் ஏதாவது செஞ்சு தரேன். சாப்பிட்டுட்டே போங்க”

‘நீங்க சாப்டீங்களாம்மா’

‘இன்னைக்கு நான் விரதம். நாள் முழுதும் சாப்பிடமாட்டேன். நாளைக்கு கோவிலுக்குப் போய் தியாகேசரைக் கும்பிட்டபிறகுதான் விரதம் முடியும்’

“ஒருத்தர் சாப்புடறதுக்கா இப்படி சம்பிரமா பண்ணினீங்க”

‘ஆமாம் சாமீ. மகனோட நினைவுதினம் அன்னிக்கு யாரையாச்சும் கூப்பிட்டு விருந்து போடுவேன். இன்னைக்கு நான் செஞ்ச புண்ணியம் சிவனடியாரே வந்திருக்கீங்க’.

‘யாரு... ஹால்ல போட்டோ மாட்டியிருக்கீங்களே. அந்தப் பையனா? சின்ன வயசுலயே சிவன் திருவடிக்குப் போய்ட்டாரா’’

சீதா கண்ணீர் சிந்தினாள். “உங்க வாயால அப்படிச் சொல்லிடாதீங்க. அவன் சின்ன வயசுல வீட்டை விட்டுப் போயிட்டான். இப்போ எங்க இருக்கானோ, என்னவா இருக்கானோ. நான் கும்பிடுற தியாகேசருக்குத்தான் வெளிச்சம்”

“உங்க கணவர் எங்க தாயீ”

“அவர் போய் ரொம்ப வருஷமாகுது. அவன் இல்லாததை நினைச்சு மறுகி மறுகி அவர் போய்ச்சேர்ந்துட்டாரு. விதி, அவனை நினைச்சு காலமெல்லாம் கண்ணீர் சிந்தணும்னு என் தலைல எழுதியிருக்கு. அவனை என்னைக்காவது பார்ப்போமா, ஏதேனும் அதிசயம் நடக்காதான்னு காத்துக் காத்து என் கண்கள் பூத்ததுதான் மிச்சம். வயதான காலத்துல இன்னும் மறுகிக்கிட்டே இருக்கணும்கறதுதான் என் தலைவிதியோ என்னவோ. இன்னும் வாழ்க்கை எத்தனை நாளோ. என்ன பாவம் செய்தேனோ, எந்த ஜென்மத்துல யாரோட குடியைக் கெடுத்தேனோ தெரியலை. ம்ம்”

“வருத்தப்படாதீங்க தாயி. ஈசன் செயலை யாரே அறிவார்? அவனை நீங்க அப்புறம் தேடலயா?”

“தேடாம இருப்போமா. விளம்பரமும் கொடுத்தோம். வீட்டுக்காரரும் ஒவ்வொரு சமயம் ஒரு திக்கை நோக்கி பயணம் செஞ்சு தேடுவார். கோவிலுக்குச் சென்று கதறினோம். கடவுளுக்கு எங்க மேல் இரக்கமே வரலை. கடைசி வரைல கடவுள் அவனை எங்க கண்ணுல காட்டவேயில்லை”

‘ஏன் தாயீ அவன், அம்பிகையே பொறப்பெடுத்த மாதிரி இருக்கற உங்கள விட்டுப் போனான்’?”

“அவன் நல்லதுக்குன்னு நினைச்சு அவங்க அப்பா அவன்ட கண்டிப்பா இருந்துட்டாரு. அவன் வாழ்க்கை நல்லாருக்கணுமேன்னுதான் நினைச்சாரு. அதப் புரிஞ்சுக்கிட்ட நானும், அவர் கண்டிக்கும்போது அவனுக்கு ஆதரவா இருக்காமப் போயிட்டேன். நமக்கு இருக்கற அனுபவம், அந்தச் சின்னப் பையனுக்கு எங்க இருக்கும், அவன் மனசொடிஞ்சு போயிடுவானேன்னு எனக்கு எண்ணத் தோணலை. என்னவோ கோவம், ரோஷம்… எங்களையெல்லாம் விட்டுட்டு ஓடிப்போயிட்டான். அப்பாமேல கோவம் சரி.. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அவன் எனக்கு ஒரே ஒரு கருவேப்பிலைக் கன்னுன்னு அவனுக்குத் தெரியாம போயிடுச்சே.  உங்களைப் பார்க்கறச்சே, என் மனசு கேட்கலை. எல்லாம் சொல்லி அழணும்னு தோணுது. கடவுளே.. சாகறதுக்குள்ள அவனைக் காட்டுப்பான்னு கேட்கத் தோணுது”

புள்ள என்பது வரமில்லயா. இந்த அறிவை எனக்குக் கொடுக்காமப் போயிட்டானே நான் வணங்குற தியாகேசர்’ கண்ணீர் சிந்தினாள் சீதா.

இப்படி முடிக்கலாமா? – 1





டக் என்று சிவனடியார் எழுந்துகொண்டார். அவர் கண்களில் ஈரம். அப்படியே சீதாவின் கால்களில் விழுந்தார்.

‘அம்மா…. என்ன மன்னிச்சிருங்க. கோபத்துல ஓடிட்டேனே தவிர, எங்க போறது, யார்கிட்ட போறதுன்னு ஒண்ணுமே தெரியலை. அப்பா மேல தாங்கமுடியாத கோபம். அந்த வயசுல அவ்வளவு ரோஷம். அதைத் தட்டிக் கேக்கலைனு உங்க மேலயும் கோபம். இனி வாழ்க்கைல உங்க ரெண்டுபேர் கண்ணுலயும் முழிக்கக் கூடாதுன்னு ஆத்திரம். அப்படியே பக்கத்தூரு ஸ்டேஷனுக்குப் போனேன். எந்த ஊருக்காவது போயிடலாம்னு. நிக்காத வட நாட்டு ரெயில், அன்னைக்குன்னு பார்த்து நின்னது என் முன்வினைன்னுதான் சொல்லணும். அதுல ஏறிப் படுத்துக்கிட்டேன். எவ்வளவு நேரம் படுத்திருந்தேன்னு தெரியலை. ஆந்திரா பக்கம் போயிட்டோம்னு தெரிஞ்சது. வண்டி ஒரு பெரிய ஸ்டேஷனில் நின்றதும், இறங்கி சாப்பிட்டேன். டிக்கெட் வாங்காமல் பிரயாணம் பண்ணி தப்பிச்சுட்டோமேன்னு பயமும் இருந்தது. அடுத்து வந்த காசிக்குப் போகும் ரயிலில் டிக்கெட் வாங்கி அப்படியே காசிக்குப் போயிட்டேன். நிறைய கஷ்டங்களும் பட்டேன் தாயீ. பெற்றோர் செய்த புண்ணியம், ஒரு மடத்துல போய்ச் சேர்ந்தேன். காலம் என்னை சிவனடியாரா மாற்றிடுச்சு. அங்க இருந்த வயசான சிவனடியார் எனக்கு தேவாரமும் திருவாசகமும், எல்லாமும் கத்துக்கொடுத்தார். பக்தியிலே என்னை முழுவதுமாத் திருப்பிவிட்டார். எப்போவும் பிக்ஷை எடுத்துத்தான் சாப்பாடு. இரவானா மடத்துல தங்கறதுன்னு வாழ்க்கை மாறிடுச்சு. கோபம், ஆத்திரம் எல்லாம் மனசுலேர்ந்து அழிஞ்சு, இந்தப் பிறவி சிவனடியார்தான் என்று மனசுல பதிஞ்சுடுச்சு. அதுதான் ஈசன் விளையாட்டுன்னும் புரிஞ்சிடுச்சு’

ஒரு வருஷம் முன்னால காசி விஸ்வனாதர் சன்னிதில தியானம் பண்ணிக்கிட்டிருந்தப்போ, ‘அம்மாவைப் போய்ப் பார்’னு மனசுல ஒரு குரல் சொல்லிச்சு. எனக்கு திரும்பி உலக சொந்தத்துல மாட்டிக்கறதுக்கு இஷ்டமில்லை. ஆனா அந்தக் குரல் திரும்பத் திரும்ப என் மனசுல ஒலிச்சது. அது தெய்வத்தின் குரல்னு மனசுல தோன்ற ஆரம்பிச்சது. ஆனாலும், உலக பந்தத்துல எனக்கு விருப்பமில்லை. இதைக் காரணமா வச்சு தென்னாடுடைய சிவன் கோவில்களையும் தரிசிக்கலாமேன்னு மனசு சொல்லியது. அதனால காசிலேர்ந்து சென்னைக்கு போன மாசம் வந்தவன். ஒவ்வொரு இடத்திலும் பிக்ஷை எடுத்துத்தான் சாப்பிட்டு, நடந்து வந்தேன். தாழ் சடையும் நீள் முடியுமா இருக்கற என் கோலத்தில் யாருக்கும் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இந்த ஊருக்கு வந்தபோது என்னால உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியலை. தியாகேசர் சன்னிதிக்குப் போய் அழுது, என்னை மீண்டும் உலக பந்தத்துல கொண்டுவந்துடாதேன்னு வேண்டிக்கிட்டுதான் இங்க வந்தேன். என் பெற்றோர் இந்த ஊரை விட்டுப் போயிருக்கலாம்.. இல்லைனா என்னோட தாத்தா மாதிரி சீக்கிரமே இறைவனடிக்கும் போயிருக்கலாம். இருந்தாலும் வீடுவரை வந்து பார்த்துவிட்டுப் போவோமே என்று நினைச்சு வந்தேன்’

சீதா சிவனடியாரைப் பார்த்தாள். அவள் கண்களுக்கு வாசுதான் தெரிந்தான். எப்படி அவனை அடையாளம் கண்டுகொள்ளாமல் போனோம். அவ்வளவுதானா தன் மனத்தில் அவன் உருவம் பதிந்தது? மெலிந்த தேகம், முற்றிலும் திரு’நீறும் ருத்திராட்சமும். பார்வையின் ஒளி. சாதாரண வேஷதாரி இல்லை என்று பார்த்த உடனேயே தனக்குத் தோன்றியதை நினைத்தாள். தன் மகனா இப்படி மாறிவிட்டான். அப்பாவைப் போல் கோபம் கொண்டவனா இவ்வளவு தெளிவாக இருக்கிறான். தியாகேசா இதுவா உன் விளையாட்டு?

‘ஐயா… என்னவெல்லாம் கஷ்டப்பட்டயோ.. எப்படியெல்லாம் நினைச்சு உன்னை வளத்தோம். நீ எங்களுக்கு, காணாது கண்ட புதையலல்லவா. உலக பந்தங்களை விட்ட இந்த உருவத்துல பார்க்கறதுக்கா நான் உயிரோட மிஞ்சினேன்’, சேலைத் தலைப்பை வாயில் புதைத்துக்கொண்டு அழுதாள் சீதா.

‘அம்மா.. பழசை நெனைச்சு உன் சொல்லால கண்ணீர் வரச் செய்யாதே தாயீ. காலம் உன் மகனை கெட்டுப்போக விட்டிருக்கலாம். சேரக்கூடாத இடத்தில் சேர்த்திருக்கலாம். காலம் பூராவும் பிறருக்குத் தொல்லை தரும் வாழ்வைக் கொடுத்திருக்கலாம். ஆனா, நீங்க ரெண்டு பேரும் செஞ்ச புண்ணியம், என்னை நல்ல இடத்தில் கொண்டு கரை சேர்த்தது. இக வாழ்வின் பரிசு எதுவும் துன்பத்தைத்தான் கொடுக்கும் என்று அறிய வைத்தது. நான் வாழும் வாழ்க்கைல கஷ்டம்னு ஒண்ணும் இல்லை தாயீ. அவன் நினைப்போடயே எப்பவும் இருக்கேன். அவனையே தியானிக்கறேன். அவனையே சேரணும்னு நினைக்கறேன். உலக வாழ்க்கையே மீண்டும் மீண்டும் பந்தத்தில் சிக்கிக்கொள்ளும் கஷ்டம்தானே.”

நீங்க வச்ச பேரு ராமபத்ரன்.. ஆனா காலம் என்னை சிவனுக்கே அடியாரா ஆக்கிடுச்சு. இதுதான் எனக்கு அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கும். எல்லாம் அந்த நமச்சிவாயத்தின் விளையாட்டுதான்.’

‘நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!”
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க
!

சிவனடியார் கண்களை மூடிக்கொண்டார். கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

‘தாயீ.. ஆரம்ப காலத்துல ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன். அப்பா அம்மாவைப் பரிதவிக்கவிட்டுட்டோமேன்னு. அப்புறம் போகப் போக, இதுதான் நீலகண்டன் எனக்குக் கொடுத்த வாழ்க்கைனு புரிஞ்சுக்கிட்டேன். என்னதான் அடியாரா ஆனாலும், உலக வாழ்க்கைச் சுகங்களை வெறுத்தாலும், தாய்க்கும் தகப்பனுக்கும் வருத்தத்தைக் கொடுத்த பாவம் இருக்கே. அதைக் கழிக்காமல் பிறவிப்பேறு எப்படிக் கிடைக்கும் தாயீ. உங்களைப் பிரிஞ்சு உங்களுக்குக் கொடுத்த மனவருத்தத்துக்கு என்னை நீங்க முழு மனசோட மன்னிக்கணும் தாயீ. நான் இங்கு வரும்போது உன் காலமும் தகப்பன் காலத்தைப் போல் முடிந்து போயிருக்கலாம். நான் வணங்கும் ஈசன் எங்கிட்ட வச்சிருக்கற கருணையினால உன்னைத் தரிசிக்க வச்சிருக்கான். தந்தையார் கிட்ட என்னால மன்னிப்பு கேட்க முடியலை. உன் கிட்ட இப்போ மன்னிப்பு கேட்கறேன் தாயீ. தவறுதான் செஞ்சுட்டேன் தாயீ.. ஆனால் மாதொருபாகன் என்னை அவன் கிட்ட ஈர்த்துக்கிட்டான். ஒரே மகனைப் பெற்று அவன் ஈசன் சொன்ன வழில போகவிட்டுட்டேன்னு நினைச்சுக்கோ. என்னை மன்னிச்சுடும்மா’, உட்கார்ந்திருந்த அம்மாவின் காலில் திரும்பவும் விழுந்தார் சிவனடியார்.

சீதை அவனைப் பார்த்தபடியே கண்ணை மூடிச் சரிந்தாள். மனது அமைதியானது.

சீதாவின் கால்களைத் தொட்டார் சிவனடியார். சங்கரரைப் போன்று, அம்மாவின் கடைசி யாத்திரையை முடிக்கத்தான் தன்னை அந்தராத்மா இங்கு வரச் செய்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். தன்னைப் பெற்றவள் அநாதையைப் போன்று இறந்துவிடக்கூடாது என்பதுதான் ஈசனின் கட்டளை என்று அவருக்குத் தோன்றியது. கடமையை முடித்தபின்புதான் தன் வாழ்க்கைப் பயணம் தொடரும், வாழ்வின் பயனும் பூர்த்தியாகும் என்பதைப் புரிந்துகொண்டார். 

***
தனி மரம் போல் இருந்தவள், வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை கஷ்டத்தையே அனுபவித்தவள், புத்திரசோகத்தினால் அல்லும் பகலும் வாடியிருந்தவள், தன் மகன் கையால் தனக்குக் கொள்ளி கிடைத்த அந்த க்ஷணம்சீதை ராமனை மன்னித்தாள்.

இப்படி முடிக்கலாமா? – 2



   

டக் என்று சிவனடியார் எழுந்துகொண்டார். அவர் கண்களில் ஈரம். அப்படியே சீதாவின் கால்களில் விழுந்தார்.

‘அம்மா…. என்னையும் உங்க மகனா நினைச்சுக்குங்க. உங்களைப் பார்க்கும்போது அந்த காசி விசாலாட்சியே என் முன்னால் நிக்கற மாதிரி இருக்கு.’

நானும் ஒரு காலத்துல என்னோட வீட்டை விட்டுப் போனவன்தான். ‘நாங்க பரம்பரை பரம்பரையா வீர சைவர்கள். என்னோட அப்பாவும் அம்மையும் என்னை சைவ நெறில வளத்தாங்க. எங்க ஊர்ல ஆயிரம் காலப் பழமையான சிவன் கோவில் உண்டு. அங்கதான் நான் எப்போதும் இருப்பேன். உமையவளின் கருணையா இல்ல அந்த விடையேறு காபாலியின் கருணையான்னு சொல்லத்தெரியலை. எனக்கு படிப்பைவிட சிவமே பெரிதாகத் தெரிந்தார். என்னோட பெற்றோர் நான் நல்லாப் படிக்கணும், நல்ல வாழ்க்கை எல்லோரையும்போல வாழணும்னு கண்டிப்பையும் காட்டினாங்க. என்னவோ… உள் உந்துதல்ல வீட்டை விட்டு வெளியேறிட்டேன். காசிக்குப் போகணும்னு மனசுல தோணிடுச்சு.

என் நல்வினைப் பயனா இல்லை என் அம்மை அப்பனின் கருணையான்னு சொல்லத் தெரியலை. காசில நான் சிவ நெறில ஒழுகற பெரியவரைச் சந்தித்தேன். அவர் என்னை ஆட்கொண்டார். நிறைய கத்துத்தந்தார். தேவாரம், திருவாசகம், புராணங்கள் னு எல்லாம் கத்துக்கிட்டேன். அப்படியே காசில கோவில் கைங்கர்யம், ஊர் ஊரா சிவன் கோவில் தரிசனம், எப்போதும் பிக்ஷை எடுத்துச் சாப்பிடறதுன்னு என் வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன்.

ஒரு வருஷம் முன்னால, விசுவனாதர் ஆலயத்துல தியானத்துல இருந்தபோது, தென்னாட்டுக்குப் போய் கோவில் தரிசனம் செய் என்று மனசுல ஒரு குரல் ஒலிச்சது. ஆரம்பத்துல அப்படியே விட்டுட்டேன். ஆனால் தியானத்துக்கு உட்காரும்போதெல்லாம் அந்தக் குரல் எனக்கு தெளிவாக் கேட்டுது. அதனால ஆறு மாசம் முன்னால புறப்பட்டேன். ஒவ்வொரு ஊரா ஒவ்வொரு கோவிலா சுத்திக்கிட்டிருந்தவன் இன்னைக்கு இந்த ஊர் தியாகேசரைத் தரிசனம் செய்தேன். என்னவோ இந்தத் தெருவில் நடக்கும்போது உங்கள் வீட்டில் பிக்ஷை கேட்கவேண்டும் என்று தோன்றியது.

உங்க கதையைக் கேட்கும்போது, எனக்கு என்னைப் பெற்றவர்கள்தான் ஞாபகத்துக்கு வர்றாங்க. அவங்களுக்கும் நீங்க அனுபவிச்ச அதே துன்பம் இருக்கும்தானே. அது எனக்கு ஏன் தோணாமல் போயிட்டுது?

சிவனின் அடியாரா இருந்தாலும், எனக்குன்னு உள்ள பெற்றோர் கடனை நான் எப்படி உதாசீனப்படுத்திட்டேன். அவங்களுக்குக் கொடுத்த வருத்தமும், அவங்களை கரையேத்தாததும் என்னைப் பாவமாச் சூழ்ந்து, எப்படி என் பிறவிப் பெருங்கடலைக் கடக்க அனுமதிக்கும். உங்களைப் பார்க்கும்போது என் அம்மையையே பார்க்கிற மாதிரி இருக்கும்மா. அவள்ட சொல்ற மாதிரி உங்கள்ட சொல்றேன், ‘என்னை மன்னிச்சுடுங்கம்மா. அறியாத சிறுவன் தெரியாமல் செய்துவிட்டான்னு எனக்கு ஆசி கூறுங்கம்மா’

என்று சொல்லியபடியே சீதாவின் காலில் விழுந்தார் சிவனடியார்.

‘உங்க மகனையும் அந்தச் சிவன் கைவிட்டிருக்க மாட்டான் அம்மா. அவன் எங்கிருந்தாலும் நல்லாத்தான் இருப்பான். நிச்சயம் அவன் மனசுலயும் அந்தராத்மா எழுந்து அவனை உங்க கிட்ட அனுப்பிவைக்கும் தாயீ.. கவலை வேண்டாம். அவனுக்குத் தேவை உங்கள் மன்னிப்பும் ஆசியும்தான் தாயீ. அதுதான் அவனை நல்வழிப்படுத்தும்’.

நான் புறப்படறேன் தாயி….

“ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி

என்றவாரே சிவனடியார் நடக்க ஆரம்பித்தார்.

சீதை அவரைப் பார்த்தபடியே கண்ணை மூடினாள். மனது அமைதியானது. இதுதான் விதி என்றபோது யாரை நொந்துகொள்ளமுடியும். மகன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும். அந்த தியாகேசன் அவனை நல்வழியில் கொண்டு செல்லட்டும் என்று நினைத்த சீதை, ராமனை மன்னித்தாள்.



குறிப்பு: படங்களை வரைந்த ஓவியர்களுக்கு நன்றி. இவைகள் ‘சுட்ட’ படங்கள்.

59 கருத்துகள்:

  1. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நாள் இனிய நாள்...வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆகா.. இன்னைக்காவது லட்சியம் நிதைவேறியதே.... அப்பா... இனிமே பிரச்னை இல்லை...

    பதிலளிநீக்கு
  4. ஹை கீதாக்கா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉ...!!!அதிசயம் ஆச்சரியம்!!

    நெல்லையின் கதை ஆஹா!! படங்கள் எல்லாம் வாசிக்கத் தூண்டுது...நிதானமாக வாசிக்கணும்...வரேன்...அட 2 முடிவு!!!! வரேன் வரேன்...இப்படித்தான் எனக்கும் முடிவுகள் 2 3 என்று தோன்றும்....சில சமயம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் கீதா அக்கா... முதல் கமெண்ட்டே grrrrrrrrrrrrrrrrrr ஆ!

    பதிலளிநீக்கு
  6. துரை அண்ணா இன்று சிவராத்திரி உங்கள் வீட்டில் தரிசனம் இருக்குமே!!!! பார்க்கிறேன்..

    இங்கு கதை கூட சிவனடியார்/நாயன்மார் படம், பெரியவர் போன்ற படம் என்றெல்லாம் நாளுக்குப் பொருத்தமாக வருது போல...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இன்று அக்கா முதடத்தைப் பிடித்து விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா... ஆனையார் ஆனந்தக் குளியல்ல இருந்து வந்து இன்னும் சிவ பூசையை ஆரம்பிக்கல போல!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஹிஹிஹி, மீ த ஃபர்ஷ்டு! எங்கே அதிராமியாவ்? ஃபர்ஷ்டு வர அவசரத்திலே தொடரப் போட மறந்துட்டேன். இப்போத் தான் போட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  10. நெல்லை கதையை முடிவுகள் பார்க்கும் முன் வாசித்ததும்...எனக்கும் இப்படியான முடிவுகள் மனதில் வந்தது..நெல்லை முதலில் மகனாக முடித்திருக்கலாம்...அடுத்து அவர் தன்னை மகனைப் போல நினைத்துக் கொள்ளச் சொல்லிப் பேசியிருக்கலாம் என்று நினைத்த்டதுக் கொண்டே முடிவுகளை வாசித்தப்போ...அதே அதே...சூப்பர் நெல்லை...(நீங்கள் வைத்த முடிவுகள் என் மனதிலும் தோன்றியதால் அல்ல.....கதை ரொம்ப நல்லாருக்கு....இன்றைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது....

    இது ஏதச்சையாக அமைந்ததா அல்லது இன்று என்று ப்ளானா ஸ்ரீராம் அண்ட் நெல்லை?!!!!!!.

    இன்னும் வரேன் அப்புறம்.....என் மனதில் வேறொன்றும் தோன்றியது....

    கீதா

    பதிலளிநீக்கு
  11. நெ.த. முதல் முடிவு கொஞ்சம் நாடகத்தனமாக/சினிமாத்தனமாக இருந்தாலும் உங்கள் எழுதும் நடையால் சோபிக்கிறது. இரண்டாம் முடிவு கொஞ்சம் ஏத்துக்கலாம்! என்றாலும் மன்னிப்பு என்னமோ காலம் கடந்தது தான் இப்போவும், அப்போவும், எப்போவும். :)))))

    சிவராத்திரி அன்னிக்கு சிவனடியார் தரிசனமும் திருவாசகப் பாடலும் படிக்க வைச்சதுக்கு நன்னி ஹை!

    பதிலளிநீக்கு
  12. கீதக்கா மியாவ் இப்ப கர் என்று குறட்டை விட்டுக் கொண்டிருப்பார்...மிட் நைட்...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. என்னைப் பொறுத்தவரை கதைகளை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று நினைப்பதில்லைஅது கதாசிரியனின் விருப்பம் ஆனால் கதையைப் படிக்கும் போது சில எண்ணங்கள் தோன்றாமல் இல்லைத்ரீ இன் ஒன் கதை பிடித்தவாறு ஏற்றுக் கொள்ளலாம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. அன்பின் நெ.த அவர்களுக்கு ....

    தாங்கள் வழங்கிய முன் கதையைப் படித்த அப்போதே இந்த முதல் பகுதி மனதில் பளிச்சிட்டது..

    ஏனென்றால் - இருபது வயதில் நான் எழுதிய கதையின் பிரதிபலிப்பு...

    கண்ணீரும் கம்பலையுமாக கதையை முடிப்பதில் எப்போதுமே எனக்கு விருப்பம் இருந்ததில்லை...

    ஆனதால் அதை எழுதி கூட வைக்கவில்லை..

    ஆனால் - கதையின் போக்கு அப்படியே மனதில் உறைந்து கிடக்கின்றது...

    எதைப் பற்றிச் சொன்னாலும் ஆனந்தக் கண்ணீருடன் சந்தோஷச் சிரிப்புடன் நிறைவடைய வேண்டும்.. அப்படியே பழகிப் போய் விட்டது..

    அதுவும் இதுவும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்றாலும் -
    எல்லாருக்கும் சொல்லாலும் செயலாலும் மகிழ்ச்சியை மட்டுமே வழங்க வேண்டுமென்பது எனது விருப்பம்...

    ஆனாலும் இளமையில் சில உள்ளங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தேனா என்றால் - இல்லை..

    இன்றும் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கும் அவையெல்லாம் வாங்கி வந்த வரங்களாகி விட்டன...

    எப்படியோ எனது நெஞ்சக் கிடங்குக்குள் கிடந்த ஒன்று -
    ஈசன் எம்பெருமானுக்கு உகந்த இந்த நாளில் அவனது பெயரைச் சொல்லியவாறு வெளியானதில் மகிழ்ச்சி..

    வாழ்க நலம் - என்றென்றும்..

    பதிலளிநீக்கு
  15. 1.அவரைத் தாய்போல் பார்த்துக்கொள்ளும் கடமை இருந்தது. தவறவிட்ட காலத்தை எண்ணி மறுகினாள் சீதா.//
    இந்த நினைப்பு வந்த போதே சீதை ராமனை மனதால் மன்னித்து விட்டாள்.


    2. தனி மரம் போல் இருந்தவள், வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை கஷ்டத்தையே அனுபவித்தவள், புத்திரசோகத்தினால் அல்லும் பகலும் வாடியிருந்தவள், தன் மகன் கையால் தனக்குக் கொள்ளி கிடைத்த அந்த க்ஷணம், சீதை ராமனை மன்னித்தாள்.//

    மகன் வருவதற்கு முன்பே கணவரை மன்னித்து விட்டாள் அல்லவா?
    கடைசி வரிகளை படிக்கும் போது கண்ணீர் வந்தது.
    வந்தவர் மகனாக இருப்பர் என்று நினைத்தேன் அது போலவே மகன்தான் படித்தவுடன் மகிழ்வாய் இருந்தது ஆனால் அம்மாவை திடீர் என்று மறைய வைத்து விட்டீர்களே!
    பந்தங்களை பிரிந்தவர் சங்கரர் போல் வந்து விட்டதால் இப்படி முடிவு இல்லையா? தாய் உயிருடன் இருந்தாலும் அவர் உடன் இருக்க மாட்டார் என்றால் தாய் உயிருடன் இருந்து என்ன பயன் அதானல் முடிவு சரிதான்.
    எந்த தாய்க்குதான் மகன் சாமியாராக திரிவது பிடிக்கும்?

    இரண்டாவது முடிவு நன்றாக இருக்கிறது.

    3.

    உங்க மகனையும் அந்தச் சிவன் கைவிட்டிருக்க மாட்டான் அம்மா. அவன் எங்கிருந்தாலும் நல்லாத்தான் இருப்பான். நிச்சயம் அவன் மனசுலயும் அந்தராத்மா எழுந்து அவனை உங்க கிட்ட அனுப்பிவைக்கும் தாயீ.. கவலை வேண்டாம். அவனுக்குத் தேவை உங்கள் மன்னிப்பும் ஆசியும்தான் தாயீ. அதுதான் அவனை நல்வழிப்படுத்தும்’.//

    சிவனடியார் சொன்னது போல் வரட்டும் மகன் .வாழ்வின் இறுதி காலத்திலாவது மகனுடன் மகிழ்ந்து இருக்கட்டும் சீதை.

    சிவன்ராத்திரிக்கு இடம்பெற செய்த எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

    வாழ்த்துக்கள் நெல்லைத்தமிழன்.



    பதிலளிநீக்கு
  16. எல்லாருக்கும் சொல்லாலும் செயலாலும் மகிழ்ச்சியை மட்டுமே வழங்க வேண்டுமென்பது எனது விருப்பம்...//

    துரை அண்ணா செம!!! எனக்கும் இதே எண்ணம் தான்....இருந்தாலும் முழுமையாகச் செய்ய முடியலை...முழுமையை நோக்கி இன்னும் நகர்ந்து கொண்டிருக்கிறதாகச் சொல்லலாம்..கூடியவரை நம்மைச் சுற்றி உள்ளோரையும் எல்லோரையும் மனம் நோகாமல் மகழ்ச்சியாக வைத்திக்க முயற்சிதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கீதா @ Thulasidharan V Thillaiakathu said...

    >>> எனக்கும் இதே எண்ணம் தான்....இருந்தாலும் முழுமையாகச் செய்ய முடியலை...முழுமையை நோக்கி இன்னும் நகர்ந்து கொண்டிருக்கிறதாகச் சொல்லலாம்..<<<

    அருமை..

    முழுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்போம்...

    முழுமை - அதாவது பூரணம் பரிபூரணம் அதுவாக வந்து நம்மை ஆட்கொள்ளும்..
    நம்மிடம் குற்றங்குறை இருந்தாலும்!..

    அப்புறம் - சிவராத்திரிக்காக பதிவு இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும்..

    நீங்கள் எல்லாம் விழித்திருந்து வழிபடுதல் வேண்டும். சிவனருள் சித்திப்பதாக!...

    பதிலளிநீக்கு
  18. //முதல் கமெண்ட்டே grrrrrrrrrrrrrrrrrr ஆ!// துரை முதல்லே வந்துட்டார்னு நினைச்சுப் போட்ட கருத்து அது! ஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
  19. தப்பு என்பது தெரிந்தும் செய்து விட்டு மகனையும் சரியாப் புரிஞ்சுக்காமல் கணவனையும் ஒதுக்கிவிட்டுக் கடைசியில் தன்னந்தனியாக சீதா எதைக் கண்டாள்? வாழ்க்கையில் எதையுமே சரியா அனுபவிக்கலை என்பது தானே மிச்சம்! கணவன், மகன் இருவரையும் ஒருசேர வைத்துப் பேசிப் புரிந்து கொள்ள வைத்திருக்கலாமோ? ஆனால் அந்த நேரத்துக் கோப, தாபங்கள், ஆசாபாசங்கள் தன் மதிப்பை மட்டுமே எண்ணி விலக வைத்து விட்டது. குறைந்த பட்சம் அந்த மகனாவது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் கிடைத்த அனுபவங்களால் மனம் மாறி இருந்திருக்கலாம். அப்படியும் இல்லை. காலம் கடந்த மனமாற்றம்! குற்ற உணர்வில் உருகி விடும்!

    பதிலளிநீக்கு
  20. ஆஆஆஆஆஆவ் என்னாதூஊஊஊஊ இன்று கீசாக்காவா 1ஸ்ட்டூஊஊஊஊஊ எப்பூடி இந்த அசம்பாவிதம் நடந்துது?:) துரை அண்ணன் அனுக்கா குளியல்ல:) ஹையோ ஆரம்பமே டங்கு ச்லிப் ஆகுதே..:)) வெரி சோரி ஆனைக் குளியலில் பிசியா இருந்திட்டாரோ....:))..

    நான் நைட் முழிச்சிருந்து ஜம்ப் பண்ண நினைச்சேன் ஆனா முடியல்ல:)).

    ஓ நெல்லைத்தமிழன் கதையோ.. தெரிஞ்சிருந்தால் ஜாமமே ஜம்ப் ஆகியிருப்பேன் ஜஸ்ட்டு மிஸ்ட்டூ:))

    பதிலளிநீக்கு
  21. ///அன்புள்ள ஸ்ரீராம், //
    இதைப்போட்டு ஆரம்பிச்சுட்டூஊஊஊ முடிவில .. இப்படிக்கு....? எனப் போடாமலே விட்டிட்டாரே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

    சரி மட்டருக்கு வாறேன்..

    போன தடவையை விட, இம்முறை கதை அதிகம் மனதை டச்சு பண்ணுகிறது.... அழகாக யோசிச்சு நிதானமா சாதாரண குடும்பத்தில நடப்பதைப் போலவே எழுதி இருக்கிறீங்க..

    இதுக்கு இரு முடிவுகள் குடுத்திருக்கிறீங்க... ஆனா என்னைப் பொறுத்து இரு முடிவுகளுமே சீதையைப் பழி வாங்குவது போலவே இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ராமனை நீ மன்னிக்கவில்லையல்லவா?:) அதனால இருந்து அனுபவி என்பதுபோலவும் இருக்கு ஹா ஹா ஹா.

    இருப்பினும் இரண்டிலும் முதல் முடிவு கொஞ்சம் நல்லா இருக்கு, மகனைக் கண்ட திருப்தியோடு தாய் கண்ணை மூடியது நல்லது... இன்னும் அவவை தனியே இருந்து காக்க வைத்து தினம் தினம் கொல்வதைக் காட்டிலும் அது மேலானது எனவே படுது.

    ஆனா 3 வதாவும் ஒரு முடிவு குடுத்திருக்கலாமோ எனவும் எனக்கு ஒரு ஆசை.... அது மகிழ்வாகவும் இருந்திருக்கும். அதாவது மகன் தாயைத் தேடி வந்து, கண்டு பிடிச்சு, தன் மனைவி பிள்ளைகளோடு அழைச்சுப் போய் வைத்திருப்பதாகவும் முடிச்சிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  22. //பொதுவா கதை எழுதறதுக்கு அதற்கென்று மூடு வரவேண்டும்//
    ஹா ஹா ஹா கரீட்டூஊஊ:)

    ///ஒரு ஹைப்புக்காக சொல்லலை. கதைல நடக்கற உரையாடல்கள்ல, உள்ளம் அமிழ்ந்து, அதே சோக, நிம்மதி உணர்ச்சிகள் எனக்கும் வந்தது.////
    அதே அஃதே:) சேம் ஃபீலிங்கூஊஊஊஊ... நம்பமாட்டீங்க.. ரைப் பண்ண முடியாமல் கண்கள் குளமாக துடைச்சுத் துடைச்சு... சில சமயம் சே..சே.. என்ன இது கதைதானே எழுதுறேன் இதுக்கேன் இப்படி அழுகை வருது என கொம்பியூட்டரை விட்டு எழும்பிப் போய் ... நோர்மலாகிட்டு, திரும்ப எழுதி முடிச்சிட்டு.. படிக்க்கும் போது மீண்டும் குமுறல் அழுகை வரும்... இதேபோலதான் சில கொமெடியான விசயம் எழுதும்போதும்.. நானே எழுதி நானே உருண்டு பிரண்டு சிரிச்சு முடிப்பேன்ன்ன் ஹா ஹா ஹா நான் லூசோ எனக்கூட நினைச்சதுண்டு:))... ஸ்ஸ்ஸ் இப்போ உங்கள் எழுத்து பார்த்ததும் ஒரு திருப்தி.. மீ லூஸ் இல்லையாக்கும்:)..க்கும்..க்கும்ம்:)) ஹா ஹா ஹா.

    ///இப்படித்தானா Professional கதாசிரியர்களுக்கு இருக்கும்னு எனக்குத் தெரியலை.///
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் “கதாசிரியர் அதிராவை”:) இங்கின வச்சுக்கொண்டு இப்பூடி ஒரு கிளவி ஹையோ கேய்ல்வி:).. சே..சே.. எதுக்கு இப்பூடி தடுமாறுது கர்:) கேள்வி கேய்க்கலாமோ?:).. ஹையோ தொட்டதுக்கெல்லாம் கல்லெடுக்கப்பிடாது:) சரி சரி எங்கட கண்ணதாசன் அங்கிளைக் கேட்டுப் பார்க்கலாம்:)..

    பதிலளிநீக்கு
  23. ///‘ஆமாம் சாமீ. மகனோட நினைவுதினம் //

    இதில் எனக்கொரு டவுட்டூ.. உயிரோடு இருப்போர் காணாமல் போன நாளையும், நினைவுதினம் எனச் சொல்வது சரியோ???

    பதிலளிநீக்கு
  24. அ அ அ :)
    அட்டகாசம் அமர்க்களம் அமோகம்

    ரொம்ப அழகா வந்திருக்கு கதையின் இரு முடிவுகளுமே .முதல் முடிவு சினிமாத்தனம் என்று சொல்ல முடியாது இது போல் பல சம்பவங்களை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் நம்ப முடியாதவையும் அப்படியே நிகழ்ந்துள்ளன .
    இரண்டாவதையும் ஏற்றுக்கொள்கிறேன் .
    இரண்டு முடிவுகளுமே எனக்கு பிடிச்சிருக்கு

    // காலம் உன் மகனை கெட்டுப்போக விட்டிருக்கலாம். சேரக்கூடாத இடத்தில் சேர்த்திருக்கலாம். காலம் பூராவும் பிறருக்குத் தொல்லை தரும் வாழ்வைக் கொடுத்திருக்கலாம்.//
    எனது பிரார்த்தனை தவறி காணாமல் வீட்டை விட்டு ஓடி போயிருந்தாலும் எந்த பிள்ளையும் தவறான பாதையில் போயிடக்கூடாது .இது வாலிப வயது மகளின் அம்மாவாக கூறுகிறேன் .
    இன்னும் நிறைய எழுதணும் என்று தோணுது ஆனால் நாளைக்கு ஆஷ் வென்ஸ் டேக்கு மற்றும் lent கு சர்ச்சில் ஆயத்தம் செய்ய செல்கிறேன் மீண்டும் மாலை வந்து பின்னூட்டம் தரேன்

    பதிலளிநீக்கு
  25. இரண்டாவது பார்ட் ஓ.கே. ஆனால் முடிவை மட்டும் மாற்றலாம்.

    அந்த சிவனடியார் தன் தாய் நினைவு தூண்டப்பட்டு தன் வீட்டிற்குப் போவதாகவும்,

    அங்கு சங்கரருக்கு நேரிட்ட அதே அனுபவம் இவருக்கும் ஏற்படுவதாகவும் அமைக்கலாம்.

    கதை சிறப்பாக எழுதப்பட்டிருக்கு என்பதை சொல்லியே ஆகணும்.

    (ஆதி சங்கரரின் கதை தெரிந்தவர்களுக்கு மட்டும் 'ஓ, அது மாதிரியா இது?' என்று தெரிவது தான் கதையின் சிறப்பு. அதே டிட்டோவா என்ற கேள்வியே எழாது. ஏனினில் பல பிரபல எழுத்தாளர்கள் பழைய வரலாற்றுக் கதைகளையே திருப்பி தன் சொந்த படைப்பு போல எழுதியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  26. வெளியிட்டதற்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் - நன்றி. நாளை மறுமொழி கொடுக்கறேன்.

    பதிலளிநீக்கு
  27. நெல்லைத்தமிழன் சிராத்திரிக் காலத்தில் சிவசிவ என்று ஞாகமூட்டும் திருவாசக வரிகளுடன் கதை. பாராட்டுகள்.
    முதல் எழுதின கதையின் பின்னூட்டத்தில் பையன் வந்துவிடவேணும் என்று எழுதினேன். சிவனடியாராக வந்து விட்டான். லோல்பட்டு வருவார் என்றேன். பதப்பட்டு வந்து வந்தாகி விட்டது நல்ல முடிவு. இன்றைய முதல்கதை அம்மா போய்விட்டாள். ஸரியானதுதான். விடுதலை.
    இரண்டாவது முடிவு, வேஷம் மாறினதை,உண்மையாக இருந்தாலும் சட்டென்று சொல்ல முடியுமா?
    இப்போதைய பிள்ளைகளானால்,உடன் மனைவி, பிள்ளை ,அவன் தன்னைப்போல் ஆகக்கூடாதே என்ற உணர்வில் புத்தி வந்து தேடி வந்ததாகக் கதை போகலாம். எல்லாவிதங்களும் நினைக்க இடம் தரும் கதை. ஸீதை ராமனை மன்னித்துக்கொண்டுதான் இருக்கிறாள்.
    கதைக்கள நிகழ்வுகள் சம்பாஷணைகள் அசத்தல்.அன்புடன்

    பதிலளிநீக்கு
  28. அனைத்து கதைகள் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  29. கதைகள் படிக்கும்போதே... மனதில் ஒருவிதமான அழுத்தத்தை கொடுத்தது இதில் முதலில் வந்த சிவனடியார் மகனாக இருந்தது என்னை கூடுதல் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  30. முதல் முடிவை விட இரண்டாவது முடிவு கொஞ்சம் யதார்த்தமாக இருந்தாலும் இத்தனை நாட்களாக தயரங்களை அனுபவித்த தாய்க்கு நன்மை செய்த முதல் முடிவு எனக்கு பிடித்திருந்தது. சிறப்பாக எழுதப்பட்டிருந்த கதை சிவராத்திரிக்கு தோதான ஸ்லோகங்கள், பிரமாதம்👌👌

    பதிலளிநீக்கு
  31. வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். உங்கள் கருத்துக்கு நன்றி. 'இப்படித்தான் முடிக்கவேண்டும்' என்ற கண்டிஷன், கதையை அந்த நோக்கில் கொண்டு செல்கிறது. எழுத்து வசப்பட்டால், நாடகத் தன்மை குறைந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  32. வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். எதேச்சையாக இது (சிவராத்திரி அன்று கதை) நடந்தது என்று ஸ்ரீராம் சொன்னார். எழுத்து நடையைப் பாராட்டியதற்கு நன்றி. (கொஞ்சம் பழைய சினிமா வாசனை அடிக்குதோ?)

    பதிலளிநீக்கு
  33. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி.எம்.பி சார்..

    பதிலளிநீக்கு
  34. வருக துரை செல்வராஜு சார். உங்கள் நெடிய பின்னூட்டத்திற்கு நன்றி.

    எனக்கு சோக, சந்தோஷ முடிவுகள் இரண்டும் பிடிக்கும். அதுவும் சிறிய வயதில் சோக முடிவுகள் என்னை ரொம்பவே கவரும். ஆனால் இப்போது வயதின் தாக்கமோ அல்லது அனுபவத்தின் தாக்கமோ, 'சோக' முடிவுகள் அல்லது வருத்தம் தரும் சம்பவங்கள் பிடிப்பதில்லை.

    (திரைப்படமே ஆனாலும், இந்த மாதிரி சம்பவங்கள் பிடிப்பதில்லை. இதை எழுதும்போது, என் பையன் 7 வயதாக இருந்தபோது, லயன் கிங் என்ற படத்தை வீட்டில் திரையிட்டேன். நாங்க கிச்சனுக்குப் போயிட்டு வரும்போது, 'அப்பா லயன்' இறக்கும் சம்பவம் கண்டு, அவன் கன்ட்'ரோல் பண்ணமுடியாமல் அழுதான். எனக்கே ரொம்ப ஆச்சர்யமா போனது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு, 'பிச்சைக்காரன்' திரைப்படம், அவனுக்குப் பிடிக்கும் என்று நினைத்துப் போட்டேன்.. கொஞ்ச நேரத்திலேயே ரொம்ப சென்டிமென்டா இருக்குன்னு பார்க்கமாட்டேன் என்று சொல்லிட்டான்)

    கொஞ்சம் 50+ ஆகும்போது, யாருக்கும் சோக நிகழ்வுகளோ, வருத்தம் தரும் கதைகளோ பிடிப்பதில்லை என்று நினைக்கிறேன். இதை மனதில் கொள்கிறேன்.

    எனக்கு திருவாசகம் பாடல்களை இங்கு கொண்டுவந்தது மனதுக்கு மிகவும் உகப்பாக இருந்தது. I was immersed in the beautiful meanings of those songs.

    பதிலளிநீக்கு
  35. வாங்க.. கோமதி அரசு மேடம். உங்கள் நெடிய பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. உண்மையச் சொன்னா இந்தக் கதையை எழுதினபோது, என் மனதில் உங்கள் மாமனார் related படங்களும், துரை செல்வராஜு சாரும்தான் நினைவுக்கு வந்தனர். நீங்களும், அவரும் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன்.

    //எந்த தாய்க்குதான் மகன் சாமியாராக திரிவது பிடிக்கும்?// - பார்த்தீங்களா... துறவறம் என்பதை நாம உயர்த்திச் சொன்னாலும், நம்மைச் சேர்ந்தவர்கள் அப்படி ஆவதை நாம் விரும்புவதில்லை. 'அர்ச்சகர், பூஜை செய்பவர், முழுவதும் சமூகப் பணியில் அர்ப்பணித்துக்கொள்பவர்கள்' போன்றவர்களை நாம் விரும்புவோம், ஆனால் நம்மைச் சேர்ந்தவர் அப்படி ஆவதை நாம் விரும்பமாட்டோம். இது மனித இயல்பு.

    நான் ஒரு மடத்தின் தலைவரை என் குடும்பத்தோடு வணங்கச் சென்றிருந்தேன். அவர் தன் முதிய பிராயத்தில் சொன்னார், ஒரு குடும்பத்தில் மூன்று பசங்க இருந்தால், அதில் ஒருவரை, சம்ப்ரதாயத்துக்கு, மதத்துக்கு விட்டுத் தரணும், அந்தக் கல்வி, அதையொட்டிய வாழ்க்கைமுறைனு கொண்டுவரணும், அப்போதுதான் சம்ப்ரதாயம் தொடரும், அதேசமயம் அந்தப் பையனுக்கு மற்றவர்களைவிட அதிக பங்கு சொத்தில் தரணும், அவன் கஷ்டமில்லாமல் வாழ்வதற்கு என்று சொன்னார். அது முற்றிலும் உண்மை, ஆனால் அதைச் செய்ய எல்லோரும் தயங்குவர்.

    வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, சிவனடியார்களோ, அல்லது வைணவப் பெரியார்களோ அல்லது மடத்தின் தலைவர்களோ, பெரும், 'புகழும்', 'மக்கள் ஆதரவும்' தெரியுமே தவிர, அந்த வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பது தெரியாது.

    உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. கீதா சாம்பசிவம் மேடம்...மீள் வருகைக்கு நன்றி.

    காலம் கடந்தபின்புதானே எல்லோருக்கும் ஞானோதயம் வருகிறது. கதையில் வரும் மனிதர்கள் மட்டும் விதிவிலக்கானவர்களா என்ன? இதைப் பற்றி சொந்த அனுபவத்தையோ அல்லது சில வருடங்களாக நான் மேற்கொண்ட முடிவு என்ன விளைவு தரும் என்பதையோ இங்கு எழுதமுடியாத நிலை. எனக்குமே, நான் எடுத்த முடிவுகள் சரியா அல்லது பெரும் தவறா என்று 3-4 வருடங்கள் சென்ற பின்புதான் தெரியவரும்.

    பதிலளிநீக்கு
  37. அதிரா.. உங்கள் வருகைக்கும் நிறைந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி. மூன்றாவது முடிவு... என நீங்கள் சொன்னதும் நல்லாத்தான் இருக்கு. (அப்போ அப்போ உங்களிடமிருந்து தேர்ந்த கதாசிரியர் எட்டிப்பார்க்கிறார்).

    'கதை எழுதும்போது இருக்கும் எண்ணங்கள்' என்று நீங்கள் எழுதியது, உணர்ச்சியோடு கதை எழுதறவங்களுக்குப் பொருந்துகிறது. நீங்களும் அப்படிப்பட்டவர் என்பது மகிழ்ச்சி. கோபு சார் என்ன சொல்றாருன்னா, ஆரம்பத்தில் அப்படி இருக்கும், அப்புறம் போகப் போக வில நிற்கப் பழகிவிடுவோம்னு சொல்றார்.

    நிறைய நடிகர்கள், அந்தக் காட்சி எடுக்கப்படுகையில், அங்கிருக்கிறவர்கள் (எழுத்தாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்றோர்), நடிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்களாம். (அழுது, சிரித்து). நல்ல கலைஞன், கலையை ரசிப்பான் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  38. ஏஞ்சலின், மிகுந்த பணிகளுக்கிடையிலும் வந்து படித்து (வள வள கதையை) கருத்திட்டதற்கு நன்றி. நீங்க பிஸியா இருக்கறதுனால, சிலர் (அ.அ - அதிரடி அதிரா என்று நீங்கள் புரிந்துகொண்டால் அதற்கு நான் காரணமல்ல) கொஞ்சம் தைரியமாக உலா வருகிறார்கள்.

    உங்களின் கோவில் பணிகள், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  39. ஜீ.வி சார்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உற்சாகப்படுத்தவேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். ஆனால் என் மனதில் கதை உங்களை அவ்வளவாகக் கவரவில்லை என்று தோன்றுகிறது. அடுத்த கதை, நிச்சயம் நீங்கள், 'அருமை, பாராட்டுகிறேன்' என்று சொல்லும்படியாக இருக்கும். (எப்போது வரும் என்பது ஸ்ரீராமுக்குத்தான் தெரியும்)

    இந்தக் கதையின் வசனங்களாவது உங்களைக் கவர்ந்ததா என்று தெரிந்துகொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  40. காமாட்சி அம்மா... உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. நன்றி. 'சம்பாஷணைகளை' நீங்கள் பாராட்டியது எனக்கு மிகுந்த உத்ஸாகத்தை அளிக்கிறது. அவற்றை எழுதும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு எழுதினேன்.

    நான் உங்கள், 'சமையல் குறிப்புகளில் ஒன்றை' அபேஸ் பண்ணி, படங்களோடு செய்முறை, 'திங்கக் கிழமை' பதிவுக்கு அனுப்ப உத்தேசித்துள்ளேன். (அனேகமா தக்காளி சாதம். Tomato Sauce ம் ரெடியா இருக்கு, தக்காளிகளோடு). (சொல்லமுடியாது... உங்களுக்கு ஒரு கிரெடிட்டும் தராமல், 'நானே செய்துபார்த்த என் செய்முறை' என்று சொல்லவும் வாய்ப்பு இருக்கு. ஹா ஹா ஹா)

    பதிலளிநீக்கு
  41. வருகைக்கு நன்றி அசோகன் குப்புசாமி.

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கில்லர்ஜி.

    வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

    பதிலளிநீக்கு
  42. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். எனக்கு இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்திருந்தது, சரியாக அந்த இடத்தில் வந்து பொருந்தியது.

    பதிலளிநீக்கு
  43. கோபு சாரிடம் (VGK வை கோபாலகிருஷ்ணன் அவர்கள்), இந்தக் கதையைப் படிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்திருந்தேன். தன் வேலைகளுக்கிடையில் படித்து எனக்கு அவருடைய கருத்துக்களை அனுப்பியிருந்தார். அவர் சமீபகாலமாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை என்று வைத்திருக்கிறார். அது, 'பிரசவ, மசான வைராக்யம்' என்றுதான் நானும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் வாரங்கள் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன. அவருடைய கருத்துக்களை கீழே பகிர்ந்துகொள்கிறேன்.

    //‘தாயீ. ஆசையை அறுத்தோம்னுதான் பேரு. ...... நோக்கித்தான் நானும் போய்க்கிட்டிருக்கேன்.//

    எப்படியோ என்னையும் என் சுபாவங்களையும் இந்த வரிகளில் அப்படியே கொண்டு வந்து அசத்தி விட்டீர்கள் .... ஸ்வாமீ.

    அறுசுவைகளில் இந்த ‘இனிப்பு’ என்பதைச் சாப்பிட்டால், அத்தோடு நாம் காலி ..... நம்மைப் பொறுத்தவரை அது ஒரு விஷம் என்பதை அறிந்தும் புரிந்தும் கொள்ளவே எனக்கு 50-60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளன.

    மனதையும் நாக்கையும் கட்டுப்படுத்தி அடக்குவது மிகவும் கஷ்டமாகும். அதிலும்
    மனதை அடக்குவது மிகவும் கடினம். மனதை அடக்க நினைக்காமல், அதனைப் புரிந்துகொண்டு நடப்பது மேல்.

    // ‘நீங்க சாப்டீங்களாம்மா’.......
    நான் செஞ்ச புண்ணியம் சிவனடியாரே வந்திருக்கீங்க’.//

    இந்த இடம் கதையில் மிகவும் அருமையோ அருமை. டச்சிங் !

    சிவராத்திரியான இன்று ஒருநாள் கூட நம்மால் சாப்பிடாமல் விரதம் இருக்க முடியவில்லை. கதையில் வரும் கதாமாந்தரான அவளாவது விரதம் இருந்துள்ளது கேட்க, எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளது.




    // பொதுவா கதை எழுதறதுக்கு அதற்கென்று மூடு வரவேண்டும்....//
    ஆரம்பத்தில் ஒருசில கதைகள் எழுதும்போது இதுபோன்ற தடுமாற்றங்கள் எல்லோருக்குமே இருக்கத்தான் இருக்கும்.
    போகப்போகப் பழகப் பழக எல்லாம் நம் வசப்பட்டு, நம்மையும் அறியாமல் அடுத்தடுத்து வார்த்தைகளும், வரிகளும் அதுவாகவே கச்சிதமாக வந்து விழுந்துவிடும். நிம்மதியான MOOD இருக்கணும் என்பது மட்டும் உண்மைதான்.

    தொடர்ந்து கதைகளாக எழுதுங்கோ. தாங்களும் ஓர் மிகப்பெரிய ஜாம்பவான் ஆகி விடுவீர்கள். அதற்கு என் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  44. கோபு சாரின் பின்னூட்டம்.

    //“தாயீ” குரல் கேட்டு வெளியே வந்தாள் சீதா. சடாமுடியும், உருத்திராட்ச மாலையும் தாடியுமாக சிவனடியார் கப்பரையை ஏந்தி வாசலில் நிற்பதைப் பார்த்ததும் சீதாவின் சோர்வான முகம், களை வந்ததுபோல் ஆனது. சிவனடியார் நெற்றி முழுதும் இருந்த திருநீறும், கண்களின் ஒளியும் அவளை என்னவோ செய்தன.//

    இந்த வரிகளைப்படித்ததுமே முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என என்னால் யூகிக்க முடிந்து விட்டது. அதையே தான், தங்களின் முதல் முடிவும் சொல்லுகிறது.

    இரண்டாம் முடிவு ஓரளவு ஏற்றுக்கொள்ளும்படியாகவும், மிகவும் யதார்த்தமாகவும் உள்ளது. இருப்பினும் அது, உணர்ச்சிவசப்பட்டு கதைகளைப் படிக்கும் பல வாசகர்களைக் கவராமலும் போகலாம்.

    இந்த இரு முடிவுகள் மட்டுமல்ல ..... ஒரு கதைக்கு, அதன் கதாசிரியர், தான் நினைத்த விதத்தில் பல விதமான முடிவுகளைக் கொடுக்க முடியும்தான்.

    வெவ்வேறு புதுப்புதுத் திருப்பங்களைக் கொண்டு வந்து இந்த சிறுகதையையே ஓர் தொடர்கதையாக இழுத்துச் செல்லவும்கூட முடியும். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விஷயத்திற்கு வருவோம்.

    தங்களுக்கு ருசியான சமையல் செய்ய வருவது போலவே, பிறரின் பதிவுகளில்கூட, மிகச் சிறப்பாகப் பின்னூட்டம் இட வருவது போலவே, கவிதைகள், கட்டுரைகள், வரலாறுகள் என அனைத்திலும் ஒட்டு மொத்தமாக பாண்டித்யமும், ருசியும் உள்ளது போலவே, கதை விடவும் ..... (//பாத்தீங்களா கோபு சார்.. காலை வாரி விட்டுட்டீங்களே, ஆனாலும் நீங்கள் சொல்வது உண்மை//) அதாவது கதைகளை எழுதவும் வருகிறது. :) அதற்கு முதற்கண் என் பாராட்டுகள்.

    இன்று சிவராத்திரி நன்னாளில், சிவனடியார்களைக் கதையில் கொண்டு வந்து அவர்கள் பாடும் சில பாடல்களையும் கொண்டு வந்துள்ளது தனிச் சிறப்பாக உள்ளன

    பதிலளிநீக்கு
  45. வந்திருந்த, வாசித்த, கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  46. நெல்லைத் தமிழன்
    திங்கக்கிழமை பதிவில் பார்க்கிறேன் உங்களை. ஸகலகலா வல்லுனருக்கு எல்லாம் கைவந்த கலை. நான் அவ்வளவு உடல்நலம் தேறினவளாக இல்லை. அதனால் எழுதுவது மனதில் நினைப்பதுடன் ஸரி. விரிவாகவும் கமென்ட் எழுதுவதில்லை. உட்கார்ந்து,எழுந்து,குனிந்து என்று பிரஷர் மாறுகிறது. இதற்கெல்லாம் விசேஷமாக வைத்தியம் கிடையாது. வயது ஸம்பந்தப்பட்டது. காரணம் அதிகம் எழுதாதற்கு விரிவுரை. தி.பதிவை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  47. கோபு சார்... ஆசைப்பட்டு உங்களைப் படிக்கச் சொன்னதற்கு, நீங்கள் சின்சியரா படித்து நிறைய பின்னூட்டங்கள் கொடுத்திருக்கிறீங்க. அவைகளுக்கு மிக்க நன்றி. சில வரிகளை எழுதும்போது, சிலரை நினைத்துத்தான் வரிகள் வரும். (இவங்க எப்படிச் சொல்லுவாங்க அப்படீன்னு). அதனையும் நீங்கள் கவனித்திருப்பது பாராட்டுக்குரியது.

    எப்போதும்போல், எல்லோரையும்போல், நீங்களும் பின்னூட்டமிடும் ஜோதியில் ஐக்கியமாகணும்னு வேண்டுகோள் விடுக்கறேன்.

    பதிலளிநீக்கு
  48. இரண்டு முடிவுகளில் எனக்கு இரண்டாவது தான் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  49. //இந்தக் கதையின் வசனங்களாவது உங்களைக் கவர்ந்ததா என்று தெரிந்துகொள்ள ஆவல்.//

    'கதை சிறப்பாக எழுதப்பட்டிருக்கு என்பதை சொல்லியே ஆகணும்'..என்று சொல்லியிருக்கிறேனே! அதில் எல்லாமே அடக்கம், இல்லியா?..

    பதிலளிநீக்கு
  50. அன்பு நெல்லைத்தமிழன்.
    எனக்கும் இரண்டாவது முடிவே பிடித்தது நிம்மதி கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க வல்லிசிம்ஹன் அம்மா... முன்பே உங்கள் கருத்தைப் பார்த்தேன். இன்னைக்குத்தான் மறுமொழி எழுதறேன். உங்கள் கருத்துக்கு நன்றி. உடல் நலம் முன்னேறுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!